Apr 23, 2016

நீதிபதிகள்-வழக்கறிஞர்கள் சிந்தனைக்கு! சிறுவெளியீடு - பகுதி 2

தமிழக வழக்கறிஞர்கள் மீதான அடக்குமுறை -பின்னணி-சதி- என்ன?
பகுதி-2
-----------
வழக்கறிஞர்கள் மீதான குற்றச்சாட்டு என்ன?

ஹெல்மெட் பிரச்சனைக்காக மதுரை வழக்கறிஞர்கள் தொடர்ந்து போராடினார்கள்.ஊர்வலம் சென்றார்கள்.நீதிபதியை விமர்சித்தார்கள். தீர்மானம் நிறைவேற்றினார்கள்.தென் மாவட்ட வழக்கறிஞர்கள் நீதித்துறை ஊழலுக்கு எதிராக ஊர்வலம் சென்றார்கள்; ஊழல் நீதிபதிகள் பட்டியல் வெளியிட்டார்கள்.நீதிபதிகளின் ஊழலை நோட்டீசாக அடித்து மக்களிடம் விநியோகித்தார்கள்.தமிழுக்காக தலைமை நீதிபதி அறையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்கள்; நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது நீதிமன்ற அறைக்கு வெளியே முழக்கம் எழுப்பினார்கள்;கவர்னரிடம் ஊழல் நீதிபதிகள் தொடர்பாகப் புகார் அளித்தார்கள்.

வழக்கறிஞர்களின் இச்செயல்கள் நீதிபரிபாலனத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இவை வழக்கறிஞர்களின் தொழில் நெறிமுறைகளுக்கு எதிரானது. எனவே நடவடிக்கை எடுத்து வழக்கறிஞர்களிடம் ஒழுங்கை நிலைநாட்டுகிறோம் என்கிறது நீதித்துறையும்,பார்கவுன்சிலும்.

வழக்கறிஞர்களின் மேற்கண்ட நடவடிக்கைகள் அத்து மீறியதா? இல்லையா? கடும் நடவடிக்கைக்கு உரியதா? இல்லையா? இதன் மூலம் வழக்கறிஞர் தொழிலில் உள்ள கிரிமினல்கள்-புரோக்கர்கள் அகற்றப்பட்டு வழக்கறிஞர் தொழிலில் ஒழுங்கு நிலைநாட்டப்படுமா?
*****
ஹெல்மெட் பிரச்சனை என்றால் என்ன?

இரண்டு சக்கர வாகன ஓட்டிகள், பின்னால் அமர்ந்து இருப்போர், குழந்தைகள் , பெண்கள் ஆகியோர் கட்டாயம் ஜீலை1,2015 முதல் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.இத்தீர்ப்புக்கு எதிராக மதுரை வழக்கறிஞர்கள் போராடினார்கள் என்பதே பிரச்சனையின் தொடக்கம். 

மதுரை வழக்கறிஞர்களின் இப்போராட்டங்கள் தொடர்பாக மூன்று வழக்குகள் மதுரை அண்ணாநகர் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடுத்து நடந்து வருகிறது.

உண்மையில் மதுரை வழக்கறிஞர்கள் மக்கள் யாரும் ஹெல்மெட் அணியக் கூடாது என்று சொல்லவில்லை. மாறாக நீதிபதி கிருபாகரன், ஹெல்மெட் அணியாவிட்டால் வாகனத்தை, லைசென்சை பறிமுதல் செய்யுங்கள் என்று சட்டத்திற்கு விரோதமாக, அராஜகமாக உத்தரவிட்டதை எதிர்த்தும், தீர்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நகரெங்கும் போலீசு கல்லா கட்டுவது,மக்கள் தவிப்பது என்பதை பார்த்துக் கொதித்தெழுந்துதான் வழக்கறிஞர்கள் போராடினார்கள்.ஹெல்மெட்டை அரசு, விழிப்புணர்வு மூலம் அமல்படுத்த வேண்டும்,ஒரே நாளில் திணிக்கக் கூடாது என்றார்கள்.இது கடும் குற்றமா? ஆனால், நீதிமன்றம் என்ன தீர்ப்புக் கொடுத்தாலும், அத்தீர்ப்பு சட்டப்படியானதோ? இல்லையோ? மக்களைத் துன்புறுத்துமோ? இல்லையோ? அதை யாரும் விமர்சிக்க, எதிர்க்கக் கூடாது என்பதே நீதித்துறை- பார்கவுன்சில் நிலைப்பாடு.சட்டப்படியும்-நியாயப்படியும் இது சரியா? இதற்குமுன் நீதிமன்றத் தீர்ப்புகள் விமர்சிக்கப்பட்டதில்லையா?

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு எதிரான நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு அ.தி.மு.க. வினரால் படுகேவலமாக விமர்சிக்கப்பட்டு, ஏராளமான வன்முறைப் போராட்டங்களும் நடத்தப்பட்டன.தமிழ்நாடே முடக்கப்பட்டது.இதேபோல் நீதிபதி குமாரசாமியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பும் நாடு முழுவதும் கடும் விமர்சனத்துக்குள்ளானது.

இதற்கு முன்பாக காவிரி, முல்லைப்பெரியாறு தீர்ப்புகளை எதிர்த்து கர்நாடக, கேரள அரசியல்வாதிகள் போராடியபோதும் உச்சநீதிமன்றம் அமைதியாகத்தான் இருந்தது. சமீபத்தில் வந்த நீதிபதிகள் நியமன ஆணையத் தீர்ப்பை பா.ஜ.க வின் நிதி அமைச்சர் அருண்ஜேட்லி ” தேர்ந்தெடுக்கப்படாதவர்களின் கொடுங்கோன்மை” என மிகக் கடுமையாக விமர்சித்தார். ஆக, நீதிமன்ற தீர்ப்பை விமர்சிப்பது, எதிர்த்துப் போராடுவது புதிய ஒன்றோ, குற்றமோ அல்ல.அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமைக்கு உட்பட்டதுதான். கருத்துரிமையை அழிப்பது, அரசமைப்புச் சட்டத்தை அழிப்பதென்கிறார் டாக்டர் அம்பேத்கர்.தென்னாப்பிரிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து காந்தியே போராடியுள்ளார். வெள்ளையர்கள் காலத்தில் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து நீதிமன்றப் புறக்கணிப்பு நடந்துள்ளது.இதற்கும் மேலாக குற்ற வழக்கு, நீதிமன்ற அவமதிப்பு எனப் பல நடவடிக்கைகள் மதுரை வழக்கறிஞர்கள் மீது எடுக்கப்பட்டுவிட்டன எனும்போது சஸ்பெண்ட் நடவடிக்கை எதற்கு?

தொடரும்..

Apr 18, 2016

தனியாரும் அரசு பேருந்தும்!

தனியார் 4 பேருந்து வைத்திருந்தாலும் ஒரு தரமான தளத்தை (web site) பராமரிக்கிறார்கள். அரசு நாலாயிரம் பேருந்து வைத்திருந்தாலும் ஒரு மொக்கை தளத்தை இயக்கி வருகிறார்கள்.

தனியார் வலைத்தளத்தில் பெண் ஒருவர் இருக்கையை பதிவு செய்தால்,  அது பெண்ணிற்கான இருக்கை என காட்டும்.  பக்கத்து சீட்டில் பெண் ஒருவர் தான் முன்பதிவு செய்யமுடியும்.

அரசு வலைத்தளத்தில் அப்படி ஒரு வசதியும் இல்லை. நான் சென்ற பேருந்தில் பெண் ஒருவர் 17வது இருக்கையை முன்பதிவு செய்திருக்கிறார். அருகே உள்ள 18வது இருக்கையை ஆண் ஒருவர் பதிவு செய்திருக்கிறார். 

ஆண் அருகே பயணிப்பதில் பெண்ணுக்கு சங்கடம். ஆண் பயணிக்கு  நடத்துநர் வேறொரு சீட்டை மாற்றித்தர வேண்டிய நிர்ப்பந்தம். இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை.  ஆகையால், எல்லா இருக்கைகளும் நிரம்பி, கடைசி வரிசையில் மட்டுமே இடம் இருக்கிறது.  அந்த பயணி கடைசி வரிசையில் அமரமுடியாது என்கிறார்.

15 நிமிடம் பஞ்சாயத்து நடந்து, பிறகு  நடத்துநர் தனது செல்வாக்கில் வேறோரு பேருந்தில் இருக்கை ஏற்பாடு செய்ததும் சுபம். 

இது மாதிரி சொல்லிக்கொண்டே போகலாம். அரசு தளங்களில் வெளியிடப்பட்டிருக்கும் தொலைபேசி எண்கள் வேலை செய்யாது. அப்படியே வேலை செய்தாலும், தொலைபேசியை மதித்து எடுக்க ஆள் இருக்காது.

திட்டமிட்டே அரசு துறையை இப்படி சிதைக்கிறார்கள். பிறகு, மக்களையே தனியார் தான் சிறந்தது என பேச வைத்து அரசு துறையை ஊத்தி மூடுவதற்கான எல்லா வேலைகளையும் நகர்த்துவார்கள்!

போராட்டமின்றி எதையும் பாதுகாக்க முடியாது!

Apr 15, 2016

விலையில்லா பொருட்கள் - சாதனையா? வேதனையா?


எல்லா பகுதிகளிலும் விலையில்லா பொருட்கள் கொடுத்து கொண்டிருப்பதை கேள்விப்பட்டு, பொறுத்து பொறுத்துப் பார்த்து, பிறகு செம கடுப்பாகி எங்கள் பகுதியில் யாரோ சிலர் அரசை கண்டித்து சுவரொட்டி ஒட்டியதும். கடந்த மாதம் அதிமுககாரர்கள் தலைமையில் ஜெ.வே தன் சொத்தில் இருந்து கொடுக்கும் பில்டப்போடு கொடுத்தார்கள்.

பக்கத்துவீட்டு வயதான அம்மா பொருட்களை வாங்க சென்ற பொழுது கிரைண்டரை தூக்க சிரமமாக இருக்கிறது என்று ஒருவரிடம் உதவி கேட்டு இருக்கிறார். அவர் எடுத்துக்கொண்டு அப்படியே ஓடியேவிட்டார்.

வீட்டிற்கு வந்து மிச்சமிருந்த மிக்ஸியை பார்த்தால், உள்ளே பிளைடே இல்லை. மின்விசிறியை பிரித்துப் பார்த்தால் அதன் உதிரி பாகங்கள் நாலைந்து உள்ளேயே கலைந்துகிடந்தன. ஓடுகிறதா என சோதித்துப் பார்த்தால், ஓடவில்லை. மோசமானவைகளை கொடுத்து ஏமாத்திட்டங்கப்பா! என புலம்பினார். இதே தரத்தில் தான் பலருக்கும் கொடுத்து இருக்கிறார்கள் என அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் தெரிவித்ததை பார்த்து பாட்டி நம்மளை மட்டும் ஏமாத்தலை என ஆறுதல் அடைந்தார்.

இன்றைக்கு பழைய பொருட்கள் வாங்கும் கடைக்கு போன பொழுது, அங்கு ஒரு புத்தம்புது விலையில்லா மின்விசிறி ஜெ. படத்துடன் என்னைப் பார்த்து சிரித்தது.

விலையில்லா பொருட்கள் கொடுத்ததை எல்லாம் மக்களுக்கு சாதனை என நினைவுப்படுத்தினால், வெளுத்து வாங்கும் கொடை வெயிலில் மக்களுக்கு கூடுதலாக காதில் புகைவருவது சர்வநிச்சயம்!  :)