Aug 30, 2018

1084ன் அம்மா (1997) - இந்தி

1084ன் அம்மா (1997) - வங்க நாவல், இந்திப்படம், தமிழ் நாடகம்

1970களில் நக்சல்பாரி (Naxalbadi) எழுச்சி நாடு முழுவதும் சமூக மாற்றத்தை விரும்பிய இளைஞர்களை ஈர்த்தது. போராட்டங்கள் நாடு முழுவதும் வெடித்தது. ஆளும் மத்திய, மாநில அரசுகள் நக்சல் இளைஞர்களை வேட்டையாட துவங்கியது. வங்கத்தின் தெருக்களில் துரத்தி, துரத்தி சுட்டுக் கொல்லப்பட்ட, அடித்தே கொல்லப்பட்ட பலநூறு இளைஞர்களில் ஒருவர் தான் பிரதி (Brati).

பிரதியின் குடும்பம் மேட்டுக்குடி குடும்பம். நக்சல் இயக்கத்தில் இணைந்து போராடியது அவர்களுடைய ’தகுதிக்கு’ இழுக்காக படுகிறது. ஆகையால் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி பிரதியினுடைய தடயங்களை அரசாங்க ஏடுகளில் இருந்து முற்றிலுமாய் அழித்துவிடுகின்றனர்.

தனது பிரியத்துக்குரிய மகனின் தடயங்களை தேடிச் செல்கிறார் அம்மா. அதன் வழியே தன் மகனின் கனவுகளை, லட்சியங்களை காணுகிறார். உலகம் இரண்டாக இருப்பது முகத்தில் அறைகிறது.
****

இந்த நாவலை எழுதியவர் மகாசுவேதா தேவி. வங்கத்தைச் சேர்ந்தவர். சமூக செயற்பட்டாளர். சமீபத்தில் தான் இறந்தார். இந்த நாவல் தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு என இந்தியாவின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாவலை என் நண்பர் ஒருவர் பரிசளித்தார்.

இந்தியில் முக்கியமான இயக்குநரான இயக்குநர் கோவிந்த் நிஹாலனி இயக்கி #Hazaar_Chaurasi_Ki_Maa என்ற பெயரில் 1997ல் வெளியே வந்தது. ஜெயா பச்சன் 18 வருட இடைவெளிக்கு பிறகு பிரதான கதாபாத்திரத்தில் நடித்தார். பிரதியின் காதலியாக நந்திதாதாஸ் நடித்தார். படம் தேசிய விருது வென்றது. இப்பொழுதும் யூடியூப் தளத்தில் கிடைக்கிறது.

கடந்த சனி, ஞாயிறு இரண்டு நாள்களில் சென்னையில் இந்த நாவலை நாடகமாக ஒரு குழு மேடையேற்றினார்கள். 1 மணி நேரம் 20 நிமிடம். ஒரு நாவல் படித்து பத்து ஆண்டுகள் ஆனபின்பும், சில காட்சிகள் மனதில் நிரந்தரமாக தங்கிவிடும் அல்லவா! அப்படிப்பட்ட சில காட்சிகளை அழுத்தம் திருத்தமாக நாடகத்தில் கொண்டு வந்திருந்தார்கள். பிரதான கதாபாத்திரமான அம்மா பாத்திரத்தில் நாடகத்துறை சார்ந்த மங்கை அருமையாக நடித்திருந்தார்.

போலீசாக நடித்தவரும், காதலியாக நடித்தவரும் பாத்திரத்தில் பொருந்தியிருந்தார்கள்.செப்டம்பர் மாதம் சென்னையில் மீண்டும் போடுவதாக அறிவித்தார்கள். வாய்ப்பிருந்தால் கண்டிப்பாக பாருங்கள்!
***

மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்தால், தேசிய பாதுகாப்பு சட்டம், தடுப்பு காவல் சட்டத்தை போட்டு, அரசு சிறையில் தள்ளுகிறது. மீண்டும் மீண்டும் போராடினால் போலி மோதல் கொலைகள் என இப்பொழுதும் இந்த நாவலில் எழுப்பப்படுகிற கேள்விகள் சமூக நிலைமைக்கு பொருந்தி போகிறது. சமூகத்தில் அநீதிகள் நீடிக்கும் வரை பிரதிகள் உருவாகிக்கொண்டே தான் இருப்பார்கள். இருக்கிறார்கள். அதனால், இன்றைக்கும் நக்சல்கள் என்றால்...ஆளும் வர்க்கங்கள் குலைநடுங்கி போகின்றன.

”மரம் அமைதியை விரும்பினாலும் காற்று விடுவதில்லை!” 

குருத்து

Aug 3, 2018

ஆண்பாவம் - சில குறிப்புகள்

கொஞ்சம் சோர்வாக இருக்கும் பொழுது, பார்க்ககூடிய படங்களில் ஆண் பாவமும் ஒன்று!

படம் வந்து 33 வருடங்களுக்கு பிறகு...சமீபத்தில் இந்த படம் குறித்து ஒரு கூட்டம் நடத்தியுள்ளார்கள். பாண்டியராஜன் தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார். (உபயம் : யூடியூப். படமும் கிடைக்கிறது!)

முதல்படம் கன்னிராசி. இது இரண்டாவது படம். ஒரு நபரை தேர்வு செய்து வைத்து, பிறகு தானே நடித்துவிடலாம் என முடிவெடுத்துள்ளார்.
கதாநாயகனுக்கான லட்சணத்தை, பாரதிராஜா, அவருடைய திரை வாரிசுகள் உடைத்துக்கொண்டே வந்திருக்கிறார்கள்.

அந்த சமயத்தில் ரேவதி ரெம்ப பிஸி. ஐந்து நாட்கள் தேதி கொடுத்து...எல்லா காட்சிகளையும் எடுத்திருக்கிறார்கள். மருத்துவமனை காட்சிகளிலெல்லாம் முகத்தை காட்டவேயில்லை. சில இடங்களில் வேறு பெண்ணை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

படத்தில் எல்லோரும் அவரவர் சொந்த பெயரிலேயே நடித்திருப்பார்கள்.
பாண்டியன் சீதாவை பெண் பார்க்கும் பொழுது, உயரம் அளவிடும் பொழுது, குதிகாலை உயர்த்தி தன் பிரியத்தை காட்டும் காட்சி மிக அழகு! சொன்னவர் - விஜய்சேதுபதி!

பாண்டியராஜன் சைதைக்காரர் என்பது ஒரு ஆச்சர்யம். மொத்தப் படத்தையும் அதிகபட்சமாக 40 நாட்களுக்குள் எடுத்துமுடித்திருக்கிறார். படம் வெளியாகும் வரை இயக்குநருக்கே நம்பிக்கை இல்லை. ஆனால்.. 230 நாட்கள் ஓடியிருக்கிறது!

தனது பிஸியால், படம் எடுத்தபிறகு, பாடல்கள் தந்திருக்கிறார் இளையராஜா.
இளையராஜாவின் அருமையான பிஜிஎம் படங்களில் இந்தபடமும் முதல் வரிசையில் வந்துவிடும்! இளையராஜா எளிய தயாரிப்பாளர்களும் அணுகும்படி இருந்திருக்கிறார். இந்த படமும் ஒரு சான்று!

படத்தில் ரேவதி நடத்தும் டியூசன் மிகப்பிரபலம். இன்றைக்கும் "ஆண்பாவம் டியூசன் இல்லையே" என பேசிக்கொள்கிறார்கள். - தீபா - ஆண்பாவம் சிறப்பு கூட்டத்தில்.. "படத்தில் மனிதர்கள் நடித்திருக்கிறார்கள். சரி. ஆனால், சிஜி இல்லாத காலத்தில், இறுதி காட்சியில் அந்த ஈயை எப்படி நடிக்கவைத்தீர்கள்?" என பேச்சாளர் கேட்டதற்கு, இயக்குநர் பாண்டியராஜன் பதில் சொல்லவில்லை அல்லது யூடியூப்பில் இல்லை.

எங்கள் வீட்டிலும் அண்ணன், தம்பி இருவர். படத்தில் வரும் நாயகர்களைப் போலவே அத்தனை பிரியங்களும், சிறுவயது சண்டைகளும்! அப்பாவும் வி.கே. இராமசாமி தோற்றம் கொண்டவர் தான்!




- குருத்து