Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Sep 25, 2018

The Post - பத்திரிக்கை சுதந்திரம்

1960-களில் அமெரிக்கா வியட்நாம் மீது ஆக்கிரமிப்பு போர் செய்து கொண்டிருந்தது. வியட்நாமிய போராளிகள் கொரில்லா போர் செய்து அமெரிக்க ராணுவத்தினரை சிதறடித்துக் கொண்டிருந்தார்கள்.

உச்சக்கட்ட போர் சமயத்தில் 60 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இறந்தும் காணாமலும் போயினர். அமெரிக்க அரசோ கெத்தாக போரில் முன்னேறி கொண்டிருப்பதாக கதை விட்டுக் கொண்டிருந்தது.

இராணுவ ஆய்வாளர் ஒருவர் உலகுக்கு உண்மையை சொல்ல நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு ஆதாரம் அளிக்கிறார். இதழில் வெளியானதும் நாடே கொந்தளிக்கிறது. அமெரிக்க அரசு ஆடிப்போய்விடுகிறது!

'நியூயார்க் டைம்ஸ்'க்கு போட்டி பத்திரிக்கையான 'வாஷிங்டன் போஸ்ட்' மேலும் வியட்நாமிய போர் தொடர்பான செய்திகளை தேடுகிறது. கண்டுபிடித்தும் விடுகிறது.

இதற்கிடையில் வாஷிங்டன் போஸ்ட் பொருளாதாரத்தில் தள்ளாடுகிறது. பொதுமக்களிடம் பங்குகளை வெளியிட்டு, தன்னைப் பலப்படுத்திக் கொள்ளலாம் என முடிவு செய்கிறது.

இதே சமயத்தில் நியூயார்க் டைம்ஸில் ஆதாரம் வெளியானதை ஒட்டி, அமெரிக்க அரசு சுதாரித்து மேற்கொண்டு ஆதாரங்களை வெளியிடக்கூடாது என நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கி விடுகிறது.

கிடைத்த ஆதாரங்களை, தடையை மீறி வெளியிட்டால், வாஷிங்டன் போஸ்ட் இதழை இழுத்து மூடவேண்டி இருக்கும். பத்திரிகை ஆசிரியரும், அதன் மேலாண் இயக்குநரும் நிச்சயமாய் கைது செய்யப்படுவார்கள்.

அதனால் பத்திரிக்கையில் வெளியிட மற்ற இயக்குனர்கள் மறுக்கிறார்கள்.

எல்லாவற்றையும் மீறி மக்களுக்கு வாஷிங்டன் போஸ்ட் உண்மையை சொன்னார்களா என்பது முழு நீளக்கதை!
****

இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கு இரண்டு முகங்கள். ஜாஸ், ஜுராசிக் பார்க் , இண்டியனா ஜோன்ஸ் என ஒரு முகம். இன்னொரு முகம் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட், அமிஸ்டாட், தி போஸ்ட்.

படத்தில் பத்திரிக்கை ஆசிரியராக வரும் டாம் ஹாங்க்ஸ், முதலாளியாக வரும் மெரில் ஸ்டிரிப் என எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

சிறந்த திரைப்படம், இயக்குனர், நடிகர், நடிகை, திரைக்கதை, இசை என ஆறு வகைகளில் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

அமெரிக்கா உலகம் முழுவதிலும் போர் என்ற பெயரில் பல உயிர்களை கொன்று குவித்துள்ளது. வியட்நாமில் தோற்றுப் போவோம் என தெரிந்தே பல ஆயிரம் தனது சொந்த நாட்டு இளைஞர்களையே பலிகொடுத்தது.

படத்தில் ஒரு இடத்தில் சொல்லப்படும் செய்தி.

ஊடகம் ஆளப்படுகிறவர்களுக்கு தான் சேவை செய்ய வேண்டும். ஆள்பவருக்கு அல்ல!

இந்திய நிலைமைகளில் இதை யோசித்துப் பார்த்தால்... நிலைமை மிக மோசமாக இருக்கிறது. ஊடகங்கள் பச்சையாக மிரட்டப்படுகின்றன. நேர்மையான பத்திரிகையாளர்கள் வேலையில் இருந்து தூக்கி எறியப்படுகிறார்கள். மிக நெருக்கடியான கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

அவசியமான படம்! பாருங்கள்!

- குருத்து

Sep 14, 2018

உலகம் இரண்டு: சிறையும் இரண்டு!


நேற்று புழல் சிறையில் தண்டனை கைதிகளுக்கு நிறைய வண்ண தொலைக்காட்சிகள், வசதியான சொகுசு படுக்கை, வாய்க்கு ருசியான வகை வகையான சாப்பாடு என நிறைய படங்கள் வெளியாகியிருக்கின்றன. அதிர்ச்சி அடைந்தது போல ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

2009ல் லஞ்ச ஒழிப்புத்துறை மதியம் சிறையை சோதனை செய்ய அனுமதி கேட்ட பொழுது வேண்டுமென்றே அரை மணி நேரத்திற்கும் மேலாக இழுத்தடித்து தான் உள்ளே அனுமதித்தார்கள். அதற்கு பிறகும், துணை ஜெயிலர் அறையிலேயே 21 ஆபாச சிடிக்கள் கிடைத்தன. நான்கு கைதிகளின் அறையில் கேபிள் டிவி இணைப்புடன் தொலைக்காட்சிகள் இருந்திருக்கின்றன. இதையெல்லாம் அந்த அரை மணி நேரத்தில் அவர்களால் ஒளித்து வைக்கமுடியவில்லை.

இந்த சோதனைக்கு முதல்வாரம் தான் துறை வாரியான சோதனையின் பொழுதே... 30க்கும் மேற்பட்ட செல்போன்கள், 2 பென்டிரைவர்கள், 12 கிலோ கஞ்சா சிக்கியிருந்தன

வருடங்கள் உருண்டோட எல்லாமும் வளர்கின்றன.

1950களில் கம்யூனிஸ்டு கட்சி தடை செய்யப்பட்டு அரசால் கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப்பட்ட காலம். சி.. பாலன் தனது சிறைவாழ்க்கையை#தூக்குமர நிழலில்என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
சிறைக்குள் ஐந்நூறு பீடிகளைக் கடத்திக்கொண்டு வந்துவிட்டால், அவற்றின் சொந்தக்காரனால், பல காரியங்களைச் சாதிக்கமுடியும். ஏனென்றால், சிறைச்சாலைக்குள் பண்டம் பரிவர்த்தனைக்காகப் பயன்படுத்தப்படும் நாணயம் பீடிதான். அன்று கோயமுத்தூர் ஜெயிலில் நிலவிய விலைவாசிப் புள்ளி விவரங்கள் கீழே தரப்படுகின்றன.

8 அவுன்ஸ் பால்                          - 4 பீடி
4 அவுன்ஸ் மாமிசம்                  - 5 பீடி
6 அவுன்ஸ் சோற்றுப்பட்டை - 6 பீடி
10 அவுன்ஸ்
நல்லெண்ணெய்                          - 4 பீடி
ஒரு மேல் சட்டையும்
ஒரு கால்சட்டையும்                – 25 பீடி

சிறையில் எளியவனுக்கு எந்த வசதியும் இல்லை. அவர்களின் குடும்பம் வாங்கிச் செல்கிற ஒரு ப்ரெட் பாக்கெட்டையோ, ஒரு பிரிட்டானியா பிஸ்கெட் பாக்கெட்டையோ போலீசுகாரர்கள் பிதுக்கி பிதுக்கி பார்த்து நொந்து போக வைப்பார்கள்.

உலகம் ஏற்றத்தாழ்வுகளால் நிரம்பி வழிந்து, இரண்டு உலகமாக இயங்கும் பொழுது, சிறை மட்டும் ஒன்றாகவா இயங்கும்!

- குருத்து


Nov 17, 2017

தீரன் - ஒரு கேள்வி!

நெடுஞ்சாலையோரம் உள்ள தனியாக உள்ள வீடுகளில், கொடூரமாக கொலைகள் செய்து, கொள்ளையடிக்கிறது ஒரு கும்பல்.
ஒரு டிஎஸ்பி தனது குழுவினருடன் தொடர்ந்து உழைத்து கும்பலை பிடிப்பது தான் கதை.
நேர்த்தியான திரைக்கதை. எல்லோரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.
என் கேள்வி. அந்த கொடூர கும்பல் தற்செயலாக, விசாரணயில் ஈடுபட்டிருக்கும் போலீசு வீட்டிலும் கொலை, கொள்ளை செய்கிறது.
ஒருவர் தன் கடைமையை விடாப்பிடியாக செய்வதற்கு, தன் சொந்த இழப்பு இருந்தால் தான் செய்யமுடியுமா என்ன? படத்தில் செண்டிமெண்டுக்காக இப்படி தொடர்ந்து செய்கிறார்கள்.
பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபடுகிற கதாபாத்திரங்களை கூட தனிப்பட்ட இழப்புகளின் பாதிப்பால் தான் செயல்படுகிறார்கள் என்கிற கருத்தை தொடர்ந்து திரைப்படங்களில் செய்து வருகிறார்கள். உதாரணமாக பல படங்களை சொல்லலாம்.

இப்படி சித்தரிப்பது மிக அபத்தம்!  சமூக ஏற்றத்தாழ்வுகளையும், கோளாறுகளையும்  புரிந்துகொண்டு அதை சரி செய்யும் நோக்கத்தில் பலர் சமூக செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.  அவர்களை எல்லாம் தனிப்பட்ட இழப்புகளினால் தான் இப்படி ஈடுபடுகிறார்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கவைக்குமா? இல்லையா?  தொடர்ந்து திரைப்படங்களில் சித்தரிப்பு மூலம் சில விசயங்களை அபத்தமாக புரிந்துகொள்கிறோம் என்பதை படத்திலேயே ஒரு காட்சி வைத்திருப்பார்கள். 

Aug 1, 2017

யூ டர்ன் - ஒரு பார்வை!

பெங்களூரு பிரதான மேம்பாலத்தில் சுற்றிப் போவதற்கு சங்கடப்பட்டு, கற்களை நகர்த்தி யூ டர்ன் எடுத்து பறக்கிறார்கள் பைக்வாசிகள்.
விதிமீறும் இவர்கள் ஒவ்வொருவராக மர்மமாக மரணிக்கிறார்கள். ஏன் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லி இருக்கிறார்கள்.
'லூசியா' தந்து ஆச்சர்யப்படுத்திய கன்னட இயக்குநரின் இரண்டாவது படம்.
சுரங்கங்களை முழுங்குனவன், பல கோடிகளை லஞ்சம் வாங்குனவெல்லாம் வெள்ளையும் சொள்ளையுமா சுதந்திரமா சுத்தும் பொழுது, முதலாளி திட்டுவார் என அவசரமாய் செல்கிறவர்களை கொல்வது எல்லாம் ரெம்ப அக்கிரமம். நம்ம ஊர் சங்கர் சட்டியில் போட்டு வறுப்பார். இவர் டீஸண்ட். வலிக்காமல் கொன்றுவிடுகிறார்.
உண்மை சம்பவம் என படத்தின் இறுதியில் பாலத்தில் விதி மீறி செல்பவர்களை காட்டுகிறார்கள்.
பல உயிர்களை பலி வாங்கும் பாலத்தில் ஒரு அடி சுவர் எழுப்புவது அரசாங்கத்தின் வேலைதானே! அது என்ன தனிநபர் செய்கிற காரியமா? ஒரு இடத்திலும் இயக்குநர் வாயை திறக்கவேயில்லை

Mar 20, 2017

பூனைகள்

திடீரென தெருவில் தோன்றிய
பெரியபூனை, குட்டிப்பூனை இரண்டும்
பத்து நாட்களாக வீடு தேடி அலைகின்றன!

ஆபத்து காலத்தில்
எங்க முருங்கை மரத்தில்
ஏறிக்கொள்கிறது குட்டிப்பூனை!
எதனுடனோ சண்டை போட்டு
உடம்பெல்லாம் காயம்.
முனகலோடு சுற்றிவருகிறது
பெரியபூனை!

வாடகை, காற்றோட்டம், நீர்
வீட்டுக்காரர் என எல்லாம்
பொருந்தி வருவது
வரன் அமைவது போல
வீடு அமைவது மனிதர்களுக்கே
ஆக சிரமமான காரியம்!

வீட்டில் செல்லப்பிராணிகள்
வளர்த்ததில்லை
உங்களுக்கு சோறுபோடுவதே
பெரிய விசயம்டா என்பார் அம்மா.

அடைக்கலம் கொடுக்கலாம் என்றால்
வீட்டில் உள்ளவர்களுக்கோ
பூனை அலர்ஜி!
மீறி சேர்த்தால்
நானும் பூனைகளுடன்
தெருவில் சுற்றவேண்டியிருக்கும்

நிம்மதில்லாத பூனைகளுடன்
என் நினைவுகளும்
அலைந்துகொண்டேயிருக்கின்றன.

தொடர்ந்து பிரேக்கிங் நியூஸ் பார்ப்பதால்
சின்னம்மாவிடம் பூனைகளை தரலாம்
என தோன்றுகிறது!
பேச்சுத்துணைக்கு ஆகும்!

Mar 5, 2017

விலையில்லா மின்விசிறி!

தரும் பொழுது பெட்டியில்
கெத்தாக தான் தந்தார்கள்.
எல்லா பாகங்களும் உள்ளே
தனித்தனியாக கிடந்தன.
மூன்றுமாதம் கிடப்பில் போட்டு - பிறகு
எலக்ட்ரிசன் உயிர் தந்தார்.

தொட்டா சிணுங்கி போல
அடிக்கடி சொணங்கி படுத்துக்கொள்ளும்!
மருத்துவருக்கு பீஸ் அழுதால் மீண்டும் ஓடும்!

மூலையில் கிடந்ததை பார்க்கும் பொழுதெல்லாம்
ரத்த அழுத்தம் எகிறும்!
ஜெ. செத்த பிறகு ...
தூக்கி எறிந்துவிடலாம் என முடிவு செய்தேன்.
எலக்ட்ரிசன், காயிலான் கடைக்காரர் இருவருமே
ஒற்றுமையாய் ரூ. 50 என்றன‌ர்.
விலையில்லா விசிறிக்கு
பணம் தருவது எவ்வளவு பெருந்தன்மை!
வாங்கிகொண்டு திரும்பி பார்க்காமல் வந்துவிட்டேன்!

Jun 18, 2016

எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், ஜனநாயக சக்திகள் கருத்து சொல்லாமல் இருப்பது ஏன்?


நீதிபதிகளே 'தவறிழைக்கிற' வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்ற புதிய சட்டத்திருத்தத்தை திரும்ப பெறக்கோரி வழக்கறிஞர்கள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தமிழகம் தழுவிய அளவில் பேரணி, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், நீதிமன்ற புறக்கணிப்பு என‌ போராடி வருகின்றனர்.

வழக்கறிஞர்கள் இதுவரை ஈழப்பிரச்சனை, மாணவர்கள் பிரச்சனை, மீனவர் பிரச்சனை என பல பிரச்சனைகளிலும் தலையிட்டு, போராடி வந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் பொதுமக்களில் உள்ள பல்வேறு வகையினர் அவர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது தானே தார்மீக கடமை!

இதுசம்பந்தமாக கார்ட்டூனிஸ்ட் பாலா போராடும் வழக்கறிஞர்களுக்கு தனது ஆதரவினை தெரிவித்து கருத்து தெரிவித்திருந்தார். ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் ஆதரவு தெரிவித்து சென்னை முழுவதும் பரவலாக சுவரொட்டி ஒட்டியிருந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு சிபிஐ எம்.எல். கட்சியின் தொழிற்சங்க அமைப்பு போராட்டத்தை ஆதரித்து ஆர்ப்பாட்டம் செய்ததை பார்க்கமுடிந்தது!

வழக்கறிஞர்களின் இன்றைய போராட்டம். அவர்களின் தொழிற்சார்ந்தது மட்டுமல்ல! பெரும்பான்மையான வழக்காடிகளும், மக்களும் பாதிக்கப்படக்கூடிய விசயம். ஆகையால், வழக்கறிஞர்களின் போராட்டத்தை ஆதரியுங்கள்! அல்லது உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். அமைதியாக இருப்பது மிகவும் அநியாயம்!

- செல்வம்

May 30, 2016

அரசியல் சிந்தனையாளர், எழுத்தாளர் காஞ்சா அய்லய்யாவுக்கு பார்ப்பனர்கள் கொலை மிரட்டல்!


காஞ்சா அய்லய்யா இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர், தலித் அரசியல் சிந்தனையாளர், மனித உரிமை செயற்பாட்டாளர். நான் ஏன் இந்து அல்ல, பின் இந்து இந்தியா, அய்யங்காளி போன்ற நூல்களின் ஆசிரியர். அச்சமின்றி பார்ப்பனியத்தை எதிர்த்து பேசி வரும் அறிவு ஜீவிகளில் ஒருவர். தற்போது ஐதரபாத் மௌலானா அபுல்கலாம் ஆசாத் உருது பல்கலைகழகத்தில் சமூக நீதி ஆய்வு மையத்தின் இயக்குநராக பணியாற்றுகிறார்.

விஜயவாடாவில் சி.ஐ.டி.யு ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் ’இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் பரிணாம வளர்ச்சி’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அதில் பார்ப்பனர்கள் உற்பத்தியில் ஒருபோதும் பங்கெடுக்கவில்லை, அவர்களுடைய சமூகம் உடலுழைப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபடவில்லை என குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஊடகமோ பார்ப்பனர்கள் சோம்பேறி சமூகம் என திரித்து எழுதியது.

இதையறிந்த 15 பேர் கொண்ட பார்ப்பன கும்பல் அவருடைய அலுவலகத்தில் அவரை சூழ்ந்து கொண்டு மன்னிப்பு கேட்கும் படி மிரட்டியது. தான் தெரிவித்த கருத்துகளுக்கு அடிப்படை காரணங்களை விளக்கி கூறினாலும் அந்த கும்பல் காது கொடுக்க தயாராக இல்லை. மன்னிப்பு கேட்க அவர் மறுக்கவே, ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் தகாத வார்த்தையால் பேசியும், தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுத்தும் இருக்கிறது.

கடந்த சனிக்கிழமை நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் காஞ்சா அய்லய்யா ’நான் இந்துமதத்தை விமர்சித்து கொண்டு இருப்பதால் சீர்திருத்தம் அடையும் என எதிர்ப்பார்த்தேன் ஆனால் அதன் கலாச்சாரம் இதுவென்றால் ,நான் இந்துமதத்தை பற்றி இனிப் பேசப்போவதில்லை என உடைந்து போய் கூறியுள்ளார். எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நடந்தது காஞ்சா அய்லய்யாவுக்கும் தொடர்கிறது.

தெலுங்கு மொழி பேசும் எழுத்தாளர்கள், அறிவு ஜீவிகள், செயற்பாட்டாளர்கள் என 50 பேர் இந்த கொலை மிரட்டலை கண்டித்து காஞ்சா அய்லய்யாவுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர்.

பார்ப்பனியம் வரலாற்று உண்மைகளை திரித்து எழுதுமே ஒழிய அங்கீகரிக்காது. அப்படி அம்பலபடுத்துவர்களை ஒழித்துக்கட்டும். இதுதான் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, ,ரோஹித் வெமுலா உள்ளிட்ட எண்ணற்ற அறிவுஜீவிகளையும், நாத்திகவாதிகளை காவு வாங்கியதற்கான பின்புலம்.

நாத்திகவாத கண்ணோட்டத்தை அறிவியல் பூர்வமாக விளக்கினால் மத உணர்வை புண்படுத்தி விட்டதாக கூறி மதவெறியர்கள் ஆதாயம் தேட முயல்கின்றனர். இங்கு மட்டுமல்ல வங்கதேசத்திலும் இதுதான் நடக்கிறது. கடந்த 2013ல் இருந்து இதுவரை பத்துக்கும் மேற்ப்பட்ட மதசார்பற்றவர்களும், நாத்திகவாதிகளும் இஸ்லாமிய மதவெறிக்கு பலியாகி உள்ளனர்.
சிந்தனையாளர்கள், அறிவுஜீவிகள், கலைஞர்கள் இல்லாத சமூகம் என்பது ஊனமானது. விலைமதிப்பில்லாத அவர்கள் உயிர் போவதை பார்த்து நாம் மௌனமாக கடந்தோமானால், அது நம்தேசத்தை தற்குறிகள் நிறைந்த தேசமாக மாற்றிவிடும்.

நீதிமன்ற கருப்பு அங்கிகள் காவி உடையை தரிக்கும் தருணத்தில் , இந்துத்துவ கருத்துக்களை பொதுவெளியில் பேசுவதையே ஜனநாயகம் எனப் பொழிப்புரை தருகிறது பார்ப்பனப் பாசிசம்.

அதனால் இந்த அரசு கட்டமைப்பில் நின்று கொண்டு பார்ப்பனியத்தை கூண்டில் ஏற்றிவிட முடியாது. அரசின் அனைத்து உறுப்புகளையும் பயன்படுத்திதான் மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் தப்பிவிக்கப்பட்டனர் என்பது ஒரு வெள்ளிடை உதாரணம். ஆகையால் பார்ப்பன பயங்கரவாதத்துக்கு எதிரான தீர்ப்பு என்பது மக்கள் மன்றத்தில் மட்டுமே கிடைக்கும்.

-மில்ட்டன்,
 செயலர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.

May 12, 2016

தேர்தல் ஜனநாயகம் நிரம்பி வழியும் ஊரில் சுவரொட்டி ஒட்டினால் சிறை!

'நம் சமுதாய மாற்றம் நம் விரலில்’ என முழங்கும் தேசத்தில்...
போலீசின் கொலைவெறி தாக்குதலை கண்டித்து சுவரொட்டி ஒட்டினால் கைது, சிறை!
*****

மே 5- டாஸ்மாக் கடைகளை முற்றுகை நடத்திய பொதுமக்கள், மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது போலீசு கொலைவெறித் தாக்குதலை நடத்தியது. ஊடகங்கள் வழியே நாடே பார்த்தது. இதனை கண்டித்து போஸ்டர் ஒட்டிய பு.மா.இ.மு தோழர்கள் செல்வா மற்றும் மாரிமுத்து ஆகியோரை ஜெயாவின் காவல்துறை ரிமாண்ட்டில் கைது செய்து கருத்துரிமை ஜனநாயகத்தின் மீது கரி பூசியுள்ளது.

இந்த சட்டவிரோத கைதை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் வன்மையாக கண்டிக்கிறது.

தேர்தல் மூலம் ஜனநாயக உரிமையை நிலைநாட்டுகிறோம் எனக்கூறும் தேர்தல் ஆணையம் டாஸ்மாக் மூடும் போராட்டங்களை போலீசின் தடியடி வைத்து நசுக்குவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது வக்கிரமானது.
தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்காக நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூடும் என்கிறது தேர்தல் ஆணையம். ஆனால் டாஸ்மாக் கடை அருகில் வசிக்கும் பெண்கள் தினமும் அச்சத்துடன் கைகளில் மிளகாய் பொடி, கற்கள் எடுத்துகொண்டு பயணிப்பது ஜனநாயகத்துக்கு அசிங்கமில்லையா?
லாக் அப்பில் வைத்து நிராயுதபாணியான தோழர்களை கை,கால்களை உடைத்த மதுரவாயல் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் துணை ஆய்வாளார் செல்லத்துரை உள்ளிட்ட ரவுடி போலீசை சஸ்பெண்ட் செய்!

தேர்தல் ஆணையமே,

மதுரவாயல் ஆய்வாளர் மீதும்,
துணை ஆய்வாளர் செல்லத்துரை மீதும் நீதி விசாரணைக்கு ஆணையிடு!
கைது செய்தவர்களை விடுதலை செய்!

-மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை.

May 8, 2016

அன்புமணி பேட்டி : எங்க தாத்தா ’யானை’ வச்சிருந்தார்!


ஒரு வீட்டில் நுழையும் பொழுதே கண்ணில்படும் உயரத்தில் ஒரு குச்சியை மாட்டி வைத்திருப்பார்களாம். வீட்டிற்கு வருப‌வர்கள் அதைப் பற்றி கேட்கும் பொழுது, ”எங்க தாத்தா ஒரு காலத்தில‌ யானைகள் வைச்சிருந்தார்னு அதை கட்டுப்படுத்துவதற்கான குச்சித்தான் இது!” என விலாவாரியாக 'பழம்பெருமை' பீத்துவார்களாம்.


இன்றைக்கு (08/05/2016) தமிழ் இந்துவில் வெளிவந்துள்ள அன்புமணியிடம் சமஸ் நிகழ்த்திய நீண்ட பேட்டியில், சாதி குறித்தான கேள்விகளில் அன்புமணியின் பதில்கள் அப்படித்தான் இருந்தன!

May 4, 2016

ஏவுகணைகளும் - கவண் கற்களும் !




அடாவடியான வழக்குரைஞர்களை கட்டுப்படுத்தி ஒழுங்கினை நிலைநாட்டவே பார்கவுன்சிலின் வழக்குரைஞர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை - திரைக்கதையின் பொய்மை அம்பலமாகியுள்ளது.

ஆறு மாதங்களாக வழக்கறிஞர்களின் சஸ்பெண்ட் நடவடிக்கையின் பின் நிற்பவர்கள் யார் என்று கழுதையாக கத்தும்போது கேட்க மறந்த காதுகளுக்காக மாண்புமிகு நீதிப்பிரபு ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ”ஆமாம் நாங்கதான் செய்தோமென்று” வழக்கறிஞர்களின் மீதான சஸ்பெண்ட் உத்தரவு மண்டபத்தில் எழுதிக்கொடுத்த ‘தருமி’ யின் கவிதை என்பது எல்லோருக்கும் இலை மறை காயாக தெரிந்தாலும் அந்த “ஈசனே” எழுதியது யாம்தான் என்று சபையில் உரைப்பது தனிச்சிறப்பல்லவா?

" NO MAN SHALL BE JUDGE ON HIS OWN CASE" - இந்த ’மடத்தமான சட்ட மொழியை’ - குப்பையில் போடுங்கள். பதிவாளரை விட்டு புகார் கொடுத்து, பார்கவுன்சிலிடம் சொல்லி சஸ்பெண்ட் செய்து, சரியானதென்று தீர்ப்பும் சொல்லும் ‘சாணக்கிய நீதியை’ சட்டமாக்குங்கள். தசாவதாரம் கமலகாசனுக்கு மட்டும் சொந்தமா என்ன? யார் கேட்பது ‘ராமராஜ்ஜியத்தில்’ இதுபற்றி கம்பரே சொல்லியுள்ளாராம்.

தலைமை நீதிபதி வீட்டில் உச்சா போகும் ‘தொழிலுரிமையைப் பாதுகாப்பதுதான் பார்கவுன்சில் வேலையே தவிர, நீதித்துறை ஊழல் பற்றி பேசினால் எப்படி பொறுத்துக்கொள்வது? குவார்ட்டர் சரக்கும் கோழி பிரியாணியும் தந்து ஜெயித்தது இதற்காகவா?
ஒரு பிரச்சினையை தீர்க்க எளிமையான வழி அதைவிட பெரிய பிரச்சினையை ஏற்படுத்து. நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கேட்டு போராடுவார்களா? வாழ்வுரிமையைப் பறித்து தெருவில் விடுங்கள் சரியாகிவிடும். அற்புதமான உங்களின் கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசெல்லாம் தூசு....

பார்கவுன்சில் செயலாளரை தாக்கிய, பார்கவுன்சில் தலைவர் பதவியை குத்தகைக்கு ஒப்பந்தம் செய்து, அதற்காக வழக்கும் போட்டவர் பார்கவுன்சிலின் தலைவர். அதற்காக ’வாதாடிய லூமினரி’ மூத்த வழக்குரைஞர். இன்னும் இன்னும் உங்கள் தகுதிக்கேற்ப கவனிப்பு....ஆமாம் ‘தகுதி’ மிக முக்கியம்.

போராடும் வழக்குரைஞர்களை எதிர்கொள்ள புரோக்கர் சங்கங்கள், பதவி ஆசை, மிரட்டல், நிர்பந்தம், செண்டிமெண்ட் - ஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆ ’பன்முகத்தன்மை’ கொண்ட நீதிபதி வேலை செய்வது சும்மா இல்லை புரிந்து கொள்ளுங்கள்....

நம்மிடம் முழக்கமிட்டால பதில் முழக்கமிட ‘அணுகுண்டுகள்’ மட்டுமல்ல, அம்பலப்படுத்தினால் ‘போகாதே - போகாதே’ என்று ராகம் போட்டு பாட ’;உண்மையாகவே தொழில் செய்யும் வழக்கறிஞர்களும் (Real Practicing Lawyers) ’ இருக்கின்றனர். தெரிந்து கொள்ளுங்கள்...

வழக்கரிஞர்களின் மீதான குற்றச்சாட்டுகளை பார்கவுன்சில்தான் விசாரிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம் சொன்னாலும் கேட்க வேண்டுமா? என்ன? திருநாவுக்கரசுை சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுக்கலாம், வழக்கறிஞர்களை ‘வர்ணங்களாக’ வகைப்படுத்தலாம், விசாரணை தொடங்குவதற்கு முன்பே நீ குற்றவாளி என்று முத்திரை குத்தலாம். புரிந்து கொள்ளுங்கள் விவசாயி கோபாலையும் - யோக்கியன் மல்லையாவும் ஒன்றாக பார்க்க முடியுமா? தேசத்துரோகி கண்ணையா குமார் மட்டுமல்ல. சென்னையிலும் இருக்கின்றனர்.

பாட்டியாலாவில் மூத்த வழக்குரைஞர்களை தாக்கிய வழக்குரைஞர்களின் மேல் எவ்வித நடவடிக்கையும் இல்லையென பேசுகிறார் ஒருவர். முட்டாள்தனமாக இல்லை, சென்னை வழக்குரைஞர்கள் பி.ஜே.பி.கட்சியாக அல்லது அவர்கள் பாரத் மாதா கி ஜே சொன்னார்களா? நாளையே கட்சியில் சேருங்கள். அப்புறம் பார்க்கலாம்.

உயர்நீதிமன்றம் அதிகாரப் பூர்வ விடை கொடுக்கும் முன்பே லூமினரி சங்கத்தில் பிரியா விடை பெறுவோம். மரபா? கிலோ என்ன விலை என்று கேட்போம். சென்னை வழக்குரைஞர்களை சமாளிக்க லோக்கல் லூமினரிகள், அகில இந்திய அளவில் லாபி செய்ய ஆல் இண்டியா லூமினெரி. என்ன இருந்தாலும் வரலாறு முக்கியமல்லவா? இதற்கு முன்னர் இவர்களை ஒழுங்கீனவர்கள் என்று நீங்களே பேசினீர்களே என்று நீங்கள் நிினைப்பது கேட்கிறது..அது வேற வாய்...

ஆனால் நீதிப்பிரபுவே துரதிருஷ்டம்.என்ன தெரியுமா?....வரலாறு பலம் கொண்டவன் மட்டுமே வெல்வான் என்பதை பொய்யென்றே பதிவு செய்துள்ளது. அதனால்தான் ஹிட்லரும், முசோலினியும் அடையாளமின்றி போனார்கள்.சூரியன் மறையா சாம்ராஜ்யம் வரலாற்றின் குப்பைத்தொட்டியில் வீசியெறிப்பட்டுள்ளது.

வ.உ.சி-யை தேசத்திரோகியென இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்த இதே மாண்புமிகு உயர்நீதிமன்ற தீர்ப்பினை இப்போது கொடுத்துப் பாருங்கள். கழிப்பறையில் எறிவார்கள்..ஆனானப்பட்ட வெள்ளைக்கார துரைக்கே இதுதான் நிலை..செண்பகராமனின் வெத்துகுண்டு சத்தம் கேட்டதும் ஆங்கிலத்தை விட்டு ஜெர்மனுக்கு தாவியவர்கள் எந்த மூலைக்கு.
ஆயுதம் கொண்டவன் சொல்வது நியாயமென்றால் அமெரிக்காதான் உலகிலேயே யோக்கியன்..அதுவா உண்மை..வியட்நாமில் செருப்படி பட்ட அமெரிக்க இன்று கூட ஈராக்கில் தினந்தோரும் கல்லடி பட்டுக்கொண்டிருக்கிறது.

நீங்கள் ஏவுகணைகளை உற்பத்தி செய்வது ஒருபுறம் இருக்கட்டும். துணிவாக வழக்கறிஞர் சங்கத்திற்கு வரத்தயங்கியது ஏனோ? ஒருவேளை உங்கள் நண்பர்கள் பதுங்குங்குழி வெட்டி வைக்கவில்லையோ? இல்லை தரைப்படைகள் வாடகைக்கு அனுப்பப்பட்டிருந்ததோ? அய்யகோ உங்கள் இரட்டை உங்கள் பேச்சுக்கு நான் பொறுப்பில்லை என்று நழுவுகிறார், உங்களுக்கு காவடி எடுத்தவர்கள் கூட தேவையா இவருக்கு என்று மழுப்புக்கின்றனர். 

கவண்கற்களிடம் ஏவுகணைகள் வீழ்ந்தே தீரும் என்பதுதான் வரலாறு..ஏனெனில் கவன் கற்கள் மக்களின் கைகளில், நியாயத்தின் பக்கத்தில் இருப்பதனால்... அதிகார மண்ணுக்குள் தனது தலையை புதைத்துக்கொண்டு நியாய உலகமே இருண்டு விட்டது என்று சொல்லும் நெருப்புக்கோழிகளை என்னவென்று சொல்வது..பெயரில் நெருப்பு இருப்பதனால் நெருப்புக்கோழிகள் பீனிக்ஸ் ஆகிவிட முடியாது என்பது தெரியுமா?

பாதுகாப்பாக இருந்து கொண்டு ஏவுகணைகளைச் செலுத்துங்கள்...நாங்கள் கவண் கற்களோடு காத்திருக்கிறோம்.......

சென்னையிலிருந்து தேசத்துரோகிகளில் ஒருவன்...