Showing posts with label போராட்டம். Show all posts
Showing posts with label போராட்டம். Show all posts

Aug 30, 2018

1084ன் அம்மா (1997) - இந்தி

1084ன் அம்மா (1997) - வங்க நாவல், இந்திப்படம், தமிழ் நாடகம்

1970களில் நக்சல்பாரி (Naxalbadi) எழுச்சி நாடு முழுவதும் சமூக மாற்றத்தை விரும்பிய இளைஞர்களை ஈர்த்தது. போராட்டங்கள் நாடு முழுவதும் வெடித்தது. ஆளும் மத்திய, மாநில அரசுகள் நக்சல் இளைஞர்களை வேட்டையாட துவங்கியது. வங்கத்தின் தெருக்களில் துரத்தி, துரத்தி சுட்டுக் கொல்லப்பட்ட, அடித்தே கொல்லப்பட்ட பலநூறு இளைஞர்களில் ஒருவர் தான் பிரதி (Brati).

பிரதியின் குடும்பம் மேட்டுக்குடி குடும்பம். நக்சல் இயக்கத்தில் இணைந்து போராடியது அவர்களுடைய ’தகுதிக்கு’ இழுக்காக படுகிறது. ஆகையால் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி பிரதியினுடைய தடயங்களை அரசாங்க ஏடுகளில் இருந்து முற்றிலுமாய் அழித்துவிடுகின்றனர்.

தனது பிரியத்துக்குரிய மகனின் தடயங்களை தேடிச் செல்கிறார் அம்மா. அதன் வழியே தன் மகனின் கனவுகளை, லட்சியங்களை காணுகிறார். உலகம் இரண்டாக இருப்பது முகத்தில் அறைகிறது.
****

இந்த நாவலை எழுதியவர் மகாசுவேதா தேவி. வங்கத்தைச் சேர்ந்தவர். சமூக செயற்பட்டாளர். சமீபத்தில் தான் இறந்தார். இந்த நாவல் தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு என இந்தியாவின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாவலை என் நண்பர் ஒருவர் பரிசளித்தார்.

இந்தியில் முக்கியமான இயக்குநரான இயக்குநர் கோவிந்த் நிஹாலனி இயக்கி #Hazaar_Chaurasi_Ki_Maa என்ற பெயரில் 1997ல் வெளியே வந்தது. ஜெயா பச்சன் 18 வருட இடைவெளிக்கு பிறகு பிரதான கதாபாத்திரத்தில் நடித்தார். பிரதியின் காதலியாக நந்திதாதாஸ் நடித்தார். படம் தேசிய விருது வென்றது. இப்பொழுதும் யூடியூப் தளத்தில் கிடைக்கிறது.

கடந்த சனி, ஞாயிறு இரண்டு நாள்களில் சென்னையில் இந்த நாவலை நாடகமாக ஒரு குழு மேடையேற்றினார்கள். 1 மணி நேரம் 20 நிமிடம். ஒரு நாவல் படித்து பத்து ஆண்டுகள் ஆனபின்பும், சில காட்சிகள் மனதில் நிரந்தரமாக தங்கிவிடும் அல்லவா! அப்படிப்பட்ட சில காட்சிகளை அழுத்தம் திருத்தமாக நாடகத்தில் கொண்டு வந்திருந்தார்கள். பிரதான கதாபாத்திரமான அம்மா பாத்திரத்தில் நாடகத்துறை சார்ந்த மங்கை அருமையாக நடித்திருந்தார்.

போலீசாக நடித்தவரும், காதலியாக நடித்தவரும் பாத்திரத்தில் பொருந்தியிருந்தார்கள்.செப்டம்பர் மாதம் சென்னையில் மீண்டும் போடுவதாக அறிவித்தார்கள். வாய்ப்பிருந்தால் கண்டிப்பாக பாருங்கள்!
***

மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்தால், தேசிய பாதுகாப்பு சட்டம், தடுப்பு காவல் சட்டத்தை போட்டு, அரசு சிறையில் தள்ளுகிறது. மீண்டும் மீண்டும் போராடினால் போலி மோதல் கொலைகள் என இப்பொழுதும் இந்த நாவலில் எழுப்பப்படுகிற கேள்விகள் சமூக நிலைமைக்கு பொருந்தி போகிறது. சமூகத்தில் அநீதிகள் நீடிக்கும் வரை பிரதிகள் உருவாகிக்கொண்டே தான் இருப்பார்கள். இருக்கிறார்கள். அதனால், இன்றைக்கும் நக்சல்கள் என்றால்...ஆளும் வர்க்கங்கள் குலைநடுங்கி போகின்றன.

”மரம் அமைதியை விரும்பினாலும் காற்று விடுவதில்லை!” 

குருத்து

May 3, 2018

"நாட்டில இவ்வளவு செய்ய வேண்டியிருக்காப்பா?"

மே தின பேரணிக்கு போய் திரும்பும் வழியில் ஆறாம் வகுப்பு படிக்கும் என் பெண்ணிடம் பேசிக்கொண்டே வந்தேன்.

நாம் போராடி நாம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து... நீ முக்கிய பொறுப்புக்கு வந்தால்.. முதலில் என்ன செய்வாய்?

"பிச்சைகாரர்களுக்கு எல்லாம் வேலை கொடுப்பேன்!"

இதை தொடரலாமே என கேட்க துவங்கினேன்.

#மாணவர்களுக்கு?"

"எல்லோருக்கும் இலவச கல்வி கொடுப்பேன்"

"படிக்காத பசங்கள பார்த்திருக்கிறாயா?"

"இங்க பார்த்ததில்லை. கிராமத்தில் படிக்காம இருப்பாங்கல்ல! எல்லோரும் படிக்கனும்ல!"

#பெண்களுக்கு?"

"எல்லா இடத்திலும் சுத்தமான கழிவறைகள் கட்டுவேன்"

#விவசாயிகளுக்கு?"

"எங்கு எங்கு எவ்வளவு விளைவிக்க வேண்டுமென திட்டத்தை கொடுப்பேன்"

#குழந்தைகளுக்கு?"

"எல்லா குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கொடுப்பேன்" 


(பா. ஜனதா ஆட்சியை நன்றாக புரிந்திருக்கிறாள்!)

#இளைஞர்களுக்கு?"

"எல்லோருக்கும் வேலை கொடுப்பேன்"

#மீனவர்களுக்கு?"

"மீனவர்களுக்கு உரிய நேரத்தில் வானிலை தகவல் தருவேன்"

(ஒக்கி புயல் பாதிப்பு!)

திடீரென கொஞ்சம் நிறுத்தி....

"நாட்டில இவ்வளவு செய்ய வேண்டியிருக்காப்பா?"

- என்றாள் ஆச்சர்யமாய்!

பிறகு நான் கேட்பதை நிறுத்திவிட்டேன்.

"எல்லோருக்கும் இலவசமா மருத்துவம் கொடுக்கனும்!"

"வீடு இல்லாதவங்களுக்கு வீடு கட்டித்தரனும்!"

இன்னும் சொல்லிக்கொண்டே வந்தாள்!

அது முடிகிற பட்டியலா அது?

#நீ சீக்கிரம் வளர்ந்து களத்துக்கு வா தாயி!

Nov 1, 2017

சகாயம் சந்தித்த சவால்கள்! – ஒரு பார்வை!

ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் லஞ்சம் தவிர்த்து நேர்மையுடன் பணியாற்றியதால்  23 வருடங்களில், 23 முறை வேலை மாற்றல்கள்!

தரமற்ற பெப்சியை ஆய்வு செய்து, பெப்சி நிறுவனத்தை பூட்டு போட்டது; தலைமை செயலர் வரை பதறிப்போய் சகாயத்துக்கு தொலைபேசியில் பேசியது; அரசு எந்த பத்திரிக்கைகளிலும் அந்த செய்தி வெளிவராமல் பார்த்துக்கொண்டது; உடனே வேறு ஊருக்கு தூக்கியடித்தது – இது ஒரு சம்பவம்!

கள்ளச்சாராயம் காய்ச்சிய கும்பலை கைது செய்ய போய், மாவட்ட ஆட்சியரான சகாயத்தின் மீதே தனக்கு கீழ் உள்ள அலுவலரையே அடித்துவிட்டார் என பொய் வழக்கு போட்டது; சகாயம் சுதாரித்து அதை சாமர்த்தியமாய் எதிர்கொண்டது!- இது ஒரு சம்பவம்!

ஒரு கட்சிக்காரர் வீட்டுவசதிவாரியத்தின் கோடிக்கணக்கான மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமித்துக்கொள்கிறார்.  சகாயம் நடவடிக்கை எடுக்கிறார். உடனே கட்சிக்காரர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அவரை வேறு ஊருக்கு மாற்றுகிறார்.

இப்படி பல சம்பவங்களை சொல்லிக்கொண்டே போகிறார். கூடுதலாக, முன்பெல்லாம் அரசு அலுவலர்கள் அடிப்படை தேவைகளுக்கு லஞ்சம் வாங்கியவர்கள் இப்பொழுது கூடுதலான நுகர்வு தேவைகளுக்கு லஞ்சம் வாங்குவதாக சொல்கிறார்.   இப்பொழுது பெரும்பாலும் லஞ்சம் வாங்குவதாக அவரே சொல்கிறார்.   இதிலிருந்து நமக்கு புரிவதெல்லாம், அரசும், அரசாங்கமும் லஞ்சத்தில்  ஊறித்திளைக்கிறது.  சகாயம் மாதிரி ஆட்கள் எல்லாம் லட்சத்தில் ஒருவர் என சொல்லிவிடலாம்.

என் 10 ஆண்டு கால அனுபவத்தில் 30 வருங்கால வைப்புநிதி (PF Enforcement officers) அதிகாரிகளை பார்த்திருப்பேன். ஒரு ஆள் கூட கை சுத்தமான ஆள் இல்லை. அதே போல இஎஸ்ஐ 30 அதிகாரிகளில் கை சுத்தமான அதிகாரி ஒருவரை மட்டுமே சந்தித்தேன். அவர் பெயர் துரைராஜ்.  அதே போல விற்பனை வரி துறையில் ஒரு நேர்மையான அதிகாரி கூட பார்த்ததில்லை. இதே போலவே கலால் வரி துறையிலும்!

இந்த அரசை ஆளும் வர்க்கம் .இயக்கிக்கொண்டிருக்கிறது என சொன்னால், அதன் நடைமுறை என்பது, தரகு முதலாளிகளும், நிலச்சுவாந்தாரர்களும் தங்களுக்கான வேலைகளை முடிக்க அரசையும், அரசாங்கத்தையும் லஞ்சத்தின் மூலமாக தான் காரியம் சாதித்துக்கொள்கிறார்கள்.  ஆக உடைமை சமுதாயம் நீடிக்கும் வரைக்கும் லஞ்சம் நீடிக்கும் என்பது தான் யதார்த்தம்.  அதாவது மூக்கு உள்ளவரை சளி இருக்கும் என்பது தான்!

ஆக, சகாயம் பக்கத்துக்கு பக்கம் சொல்கிறபடியே இந்த அரசும், அரசாங்கமும் மாற்றவே முடியாத அளவிற்கு புரையோடி போய்விட்டதையும், பெரும்பாலான மக்களுக்கு எதிராக நிற்பதையும்தான் நிரூபிக்கிறது.   ஆனால், சகாயமோ இளைஞர்களை அணிதிரட்டி ’மக்கள் பாதை’ என்ற அமைப்பை உருவாக்கி, கடந்த சில ஆண்டுகளாக இந்த இத்துப்போன அரசமைப்பை மாற்றலாம் என நம்பிக்கை தந்து வழிநடத்திக்கொண்டிருக்கிறார். இதுதான் பெரிய நகைமுரண்.

மேலும், சகாயத்தின் பெற்றோர்களை அறிமுகப்படுத்தும் பொழுது, உபகாரம் பிள்ளை என குறிப்பிடப்பட்டுள்ளது. சகாயம் சொன்ன மாதிரி “ என்னோட ரோல் மாடல் எங்க சித்தப்பா அருளாந்து பிள்ளை” என எந்தவித தயக்கமில்லாமல் சொல்லியிருக்கிறார். சாதியக்கண்ணோட்டம் கோளாறு தான்!

- வெளியீடு : ஆனந்தவிகடன்

விலை ரூ. 95

பக்கங்கள் : 96

நூல் ஆசிரியர் : கே. ராஜா திருவேங்கடம்

- குருத்து

Mar 5, 2017

விலையில்லா மின்விசிறி!

தரும் பொழுது பெட்டியில்
கெத்தாக தான் தந்தார்கள்.
எல்லா பாகங்களும் உள்ளே
தனித்தனியாக கிடந்தன.
மூன்றுமாதம் கிடப்பில் போட்டு - பிறகு
எலக்ட்ரிசன் உயிர் தந்தார்.

தொட்டா சிணுங்கி போல
அடிக்கடி சொணங்கி படுத்துக்கொள்ளும்!
மருத்துவருக்கு பீஸ் அழுதால் மீண்டும் ஓடும்!

மூலையில் கிடந்ததை பார்க்கும் பொழுதெல்லாம்
ரத்த அழுத்தம் எகிறும்!
ஜெ. செத்த பிறகு ...
தூக்கி எறிந்துவிடலாம் என முடிவு செய்தேன்.
எலக்ட்ரிசன், காயிலான் கடைக்காரர் இருவருமே
ஒற்றுமையாய் ரூ. 50 என்றன‌ர்.
விலையில்லா விசிறிக்கு
பணம் தருவது எவ்வளவு பெருந்தன்மை!
வாங்கிகொண்டு திரும்பி பார்க்காமல் வந்துவிட்டேன்!

Dec 20, 2016

கையெழுத்திட்டால் நேர்மையாக நடந்துகொள்ளவேண்டும்! - ஒரு கடிதம்


சென்னை மாநகராட்சிக்கு ஒரு பெற்றோரின் கடிதம்!


அனுப்புநர்

இலக்கியா,
5ம் வகுப்பு,
xxxx பள்ளி,
சென்னை

பெறுநர்

தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அவர்கள்,
xxxx பள்ளி,
சென்னை
       
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம். சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களிடம் சுய உறுதிமொழி படிவம் ஒன்றை தந்து, மாணவர்களும், பெற்றோர்களும் வீட்டிலும், பொது இடங்களிலும் உள்ள சமுதாய கழிவறையை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என கையெழுத்திட சொல்லி உறுதிமொழி கேட்டிருக்கிறது.

சென்னை மாநகராட்சி நடத்திவரும் மாநகராட்சி பள்ளிகளில் சென்னையில் 10 மண்டலத்தில் 57 பள்ளிகள் இயங்கிவருகின்றன. தமிழக அரசாணை எண் : 270ன் படி , 20 மாணவர்களுக்கு ஒரு சிறுநீர் கழிப்பறை, 50 மாணவர்களுக்கு ஒரு மலக்கழிப்பறை, கழிப்பறைகள் தண்ணீர் வசதியுடன் இருக்கவேண்டும்

ஆனால், 57 பள்ளிகளில் பல பள்ளிகளில் சிறுநீர் கழிப்பறைகள் இல்லை. மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப மல கழிப்பறைகள் இல்லாமல், மிக மிக குறைந்த அளவே உள்ளன. அதே போல தண்ணீர் வசதியும் போதுமானதாக இல்லை. ஒரு பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருந்தாலும்  ஒரே ஒரு துப்புரவு பணியாளர் மட்டுமே உள்ளார்.

உதாரணமாக சைதாப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மேல்நிலை பள்ளியில், 1500 மாணவர்கள் படிக்கின்றனர். சிறுநீர் கழிப்பறை ஒன்று கூட இல்லை.  மலக்கழிப்பறை 8 மட்டுமே உள்ளன.  துப்புரவு பணியாளர் ஒருவர் மட்டுமே.

இது தொடர்பாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாணவர்களை திரட்டி போராடியதன் விளைவாக, மாநகரட்சி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்து, பள்ளி வாரியாக அறிக்கையை தயார் செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசாணையின்படி பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என  மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு (எண் : W.P.11666/2014) தொடுத்தது.  நீதிமன்றமும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு அடிப்படை வசதிகளை செய்து தர உத்தரவு போட்டது. மாநகரட்சியோ கடந்த இரண்டு ஆண்டுகளாக உயர்நீதிமன்றத்தில் பல தவணைகளை கேட்டு, பள்ளிகளில் ஆமை வேகத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொண்டிருக்கிறது.

சென்னை மாநகராட்சியின் நேரடி கண்காணிப்பில் உள்ள  மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கே இந்த கதி என்றால், பொது இடங்களில் பெரும்பாலான இடங்களில் கழிப்பறை வசதி பற்றி சொல்லவே தேவையில்லை. ஒன்றரை கோடி பேர் வாழும் சென்னையில் பல பொது இடங்களில் கழிப்பறை வசதியே இல்லை. அப்படியே ஒன்றிரண்டு இருந்தாலும் முறையான பராமரிப்பு இல்லாமல் தான் இருக்கிறது.  இதனால் பொதுமக்கள் பலவித சிரமங்களுக்கு ஆளாகிறார்கள்.

ஆகையால், சென்னை மாநகரட்சி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் கழிப்பறை வசதிகளை ஏற்பாடு செய்து தந்துவிட்டு இப்படி கையெழுத்து கேட்பது தான் நேர்மையானது என கருதுகிறோம். இந்த படிவத்தில் கையெழுத்து போட்டால் அதற்கு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் ஆனால் அதை கடைப்பிடிக்க முடியாத அளவுக்கு சமூக சூழ்நிலை நிலவுவதால் கையெழுத்து இட முடியாத நிலையில் இருக்கிறோம். இந்த கடிதத்தை மாநகராட்சிக்கும் அனுப்பிவைக்கும்படி பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி.

இப்படிக்கு,

பெற்றோர்.

Jun 18, 2016

எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், ஜனநாயக சக்திகள் கருத்து சொல்லாமல் இருப்பது ஏன்?


நீதிபதிகளே 'தவறிழைக்கிற' வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்ற புதிய சட்டத்திருத்தத்தை திரும்ப பெறக்கோரி வழக்கறிஞர்கள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தமிழகம் தழுவிய அளவில் பேரணி, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், நீதிமன்ற புறக்கணிப்பு என‌ போராடி வருகின்றனர்.

வழக்கறிஞர்கள் இதுவரை ஈழப்பிரச்சனை, மாணவர்கள் பிரச்சனை, மீனவர் பிரச்சனை என பல பிரச்சனைகளிலும் தலையிட்டு, போராடி வந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் பொதுமக்களில் உள்ள பல்வேறு வகையினர் அவர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது தானே தார்மீக கடமை!

இதுசம்பந்தமாக கார்ட்டூனிஸ்ட் பாலா போராடும் வழக்கறிஞர்களுக்கு தனது ஆதரவினை தெரிவித்து கருத்து தெரிவித்திருந்தார். ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் ஆதரவு தெரிவித்து சென்னை முழுவதும் பரவலாக சுவரொட்டி ஒட்டியிருந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு சிபிஐ எம்.எல். கட்சியின் தொழிற்சங்க அமைப்பு போராட்டத்தை ஆதரித்து ஆர்ப்பாட்டம் செய்ததை பார்க்கமுடிந்தது!

வழக்கறிஞர்களின் இன்றைய போராட்டம். அவர்களின் தொழிற்சார்ந்தது மட்டுமல்ல! பெரும்பான்மையான வழக்காடிகளும், மக்களும் பாதிக்கப்படக்கூடிய விசயம். ஆகையால், வழக்கறிஞர்களின் போராட்டத்தை ஆதரியுங்கள்! அல்லது உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். அமைதியாக இருப்பது மிகவும் அநியாயம்!

- செல்வம்

May 30, 2016

அரசியல் சிந்தனையாளர், எழுத்தாளர் காஞ்சா அய்லய்யாவுக்கு பார்ப்பனர்கள் கொலை மிரட்டல்!


காஞ்சா அய்லய்யா இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர், தலித் அரசியல் சிந்தனையாளர், மனித உரிமை செயற்பாட்டாளர். நான் ஏன் இந்து அல்ல, பின் இந்து இந்தியா, அய்யங்காளி போன்ற நூல்களின் ஆசிரியர். அச்சமின்றி பார்ப்பனியத்தை எதிர்த்து பேசி வரும் அறிவு ஜீவிகளில் ஒருவர். தற்போது ஐதரபாத் மௌலானா அபுல்கலாம் ஆசாத் உருது பல்கலைகழகத்தில் சமூக நீதி ஆய்வு மையத்தின் இயக்குநராக பணியாற்றுகிறார்.

விஜயவாடாவில் சி.ஐ.டி.யு ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் ’இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் பரிணாம வளர்ச்சி’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அதில் பார்ப்பனர்கள் உற்பத்தியில் ஒருபோதும் பங்கெடுக்கவில்லை, அவர்களுடைய சமூகம் உடலுழைப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபடவில்லை என குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஊடகமோ பார்ப்பனர்கள் சோம்பேறி சமூகம் என திரித்து எழுதியது.

இதையறிந்த 15 பேர் கொண்ட பார்ப்பன கும்பல் அவருடைய அலுவலகத்தில் அவரை சூழ்ந்து கொண்டு மன்னிப்பு கேட்கும் படி மிரட்டியது. தான் தெரிவித்த கருத்துகளுக்கு அடிப்படை காரணங்களை விளக்கி கூறினாலும் அந்த கும்பல் காது கொடுக்க தயாராக இல்லை. மன்னிப்பு கேட்க அவர் மறுக்கவே, ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் தகாத வார்த்தையால் பேசியும், தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுத்தும் இருக்கிறது.

கடந்த சனிக்கிழமை நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் காஞ்சா அய்லய்யா ’நான் இந்துமதத்தை விமர்சித்து கொண்டு இருப்பதால் சீர்திருத்தம் அடையும் என எதிர்ப்பார்த்தேன் ஆனால் அதன் கலாச்சாரம் இதுவென்றால் ,நான் இந்துமதத்தை பற்றி இனிப் பேசப்போவதில்லை என உடைந்து போய் கூறியுள்ளார். எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நடந்தது காஞ்சா அய்லய்யாவுக்கும் தொடர்கிறது.

தெலுங்கு மொழி பேசும் எழுத்தாளர்கள், அறிவு ஜீவிகள், செயற்பாட்டாளர்கள் என 50 பேர் இந்த கொலை மிரட்டலை கண்டித்து காஞ்சா அய்லய்யாவுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர்.

பார்ப்பனியம் வரலாற்று உண்மைகளை திரித்து எழுதுமே ஒழிய அங்கீகரிக்காது. அப்படி அம்பலபடுத்துவர்களை ஒழித்துக்கட்டும். இதுதான் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, ,ரோஹித் வெமுலா உள்ளிட்ட எண்ணற்ற அறிவுஜீவிகளையும், நாத்திகவாதிகளை காவு வாங்கியதற்கான பின்புலம்.

நாத்திகவாத கண்ணோட்டத்தை அறிவியல் பூர்வமாக விளக்கினால் மத உணர்வை புண்படுத்தி விட்டதாக கூறி மதவெறியர்கள் ஆதாயம் தேட முயல்கின்றனர். இங்கு மட்டுமல்ல வங்கதேசத்திலும் இதுதான் நடக்கிறது. கடந்த 2013ல் இருந்து இதுவரை பத்துக்கும் மேற்ப்பட்ட மதசார்பற்றவர்களும், நாத்திகவாதிகளும் இஸ்லாமிய மதவெறிக்கு பலியாகி உள்ளனர்.
சிந்தனையாளர்கள், அறிவுஜீவிகள், கலைஞர்கள் இல்லாத சமூகம் என்பது ஊனமானது. விலைமதிப்பில்லாத அவர்கள் உயிர் போவதை பார்த்து நாம் மௌனமாக கடந்தோமானால், அது நம்தேசத்தை தற்குறிகள் நிறைந்த தேசமாக மாற்றிவிடும்.

நீதிமன்ற கருப்பு அங்கிகள் காவி உடையை தரிக்கும் தருணத்தில் , இந்துத்துவ கருத்துக்களை பொதுவெளியில் பேசுவதையே ஜனநாயகம் எனப் பொழிப்புரை தருகிறது பார்ப்பனப் பாசிசம்.

அதனால் இந்த அரசு கட்டமைப்பில் நின்று கொண்டு பார்ப்பனியத்தை கூண்டில் ஏற்றிவிட முடியாது. அரசின் அனைத்து உறுப்புகளையும் பயன்படுத்திதான் மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் தப்பிவிக்கப்பட்டனர் என்பது ஒரு வெள்ளிடை உதாரணம். ஆகையால் பார்ப்பன பயங்கரவாதத்துக்கு எதிரான தீர்ப்பு என்பது மக்கள் மன்றத்தில் மட்டுமே கிடைக்கும்.

-மில்ட்டன்,
 செயலர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.

May 12, 2016

தேர்தல் ஜனநாயகம் நிரம்பி வழியும் ஊரில் சுவரொட்டி ஒட்டினால் சிறை!

'நம் சமுதாய மாற்றம் நம் விரலில்’ என முழங்கும் தேசத்தில்...
போலீசின் கொலைவெறி தாக்குதலை கண்டித்து சுவரொட்டி ஒட்டினால் கைது, சிறை!
*****

மே 5- டாஸ்மாக் கடைகளை முற்றுகை நடத்திய பொதுமக்கள், மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது போலீசு கொலைவெறித் தாக்குதலை நடத்தியது. ஊடகங்கள் வழியே நாடே பார்த்தது. இதனை கண்டித்து போஸ்டர் ஒட்டிய பு.மா.இ.மு தோழர்கள் செல்வா மற்றும் மாரிமுத்து ஆகியோரை ஜெயாவின் காவல்துறை ரிமாண்ட்டில் கைது செய்து கருத்துரிமை ஜனநாயகத்தின் மீது கரி பூசியுள்ளது.

இந்த சட்டவிரோத கைதை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் வன்மையாக கண்டிக்கிறது.

தேர்தல் மூலம் ஜனநாயக உரிமையை நிலைநாட்டுகிறோம் எனக்கூறும் தேர்தல் ஆணையம் டாஸ்மாக் மூடும் போராட்டங்களை போலீசின் தடியடி வைத்து நசுக்குவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது வக்கிரமானது.
தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்காக நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூடும் என்கிறது தேர்தல் ஆணையம். ஆனால் டாஸ்மாக் கடை அருகில் வசிக்கும் பெண்கள் தினமும் அச்சத்துடன் கைகளில் மிளகாய் பொடி, கற்கள் எடுத்துகொண்டு பயணிப்பது ஜனநாயகத்துக்கு அசிங்கமில்லையா?
லாக் அப்பில் வைத்து நிராயுதபாணியான தோழர்களை கை,கால்களை உடைத்த மதுரவாயல் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் துணை ஆய்வாளார் செல்லத்துரை உள்ளிட்ட ரவுடி போலீசை சஸ்பெண்ட் செய்!

தேர்தல் ஆணையமே,

மதுரவாயல் ஆய்வாளர் மீதும்,
துணை ஆய்வாளர் செல்லத்துரை மீதும் நீதி விசாரணைக்கு ஆணையிடு!
கைது செய்தவர்களை விடுதலை செய்!

-மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை.

May 4, 2016

ஏவுகணைகளும் - கவண் கற்களும் !




அடாவடியான வழக்குரைஞர்களை கட்டுப்படுத்தி ஒழுங்கினை நிலைநாட்டவே பார்கவுன்சிலின் வழக்குரைஞர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை - திரைக்கதையின் பொய்மை அம்பலமாகியுள்ளது.

ஆறு மாதங்களாக வழக்கறிஞர்களின் சஸ்பெண்ட் நடவடிக்கையின் பின் நிற்பவர்கள் யார் என்று கழுதையாக கத்தும்போது கேட்க மறந்த காதுகளுக்காக மாண்புமிகு நீதிப்பிரபு ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ”ஆமாம் நாங்கதான் செய்தோமென்று” வழக்கறிஞர்களின் மீதான சஸ்பெண்ட் உத்தரவு மண்டபத்தில் எழுதிக்கொடுத்த ‘தருமி’ யின் கவிதை என்பது எல்லோருக்கும் இலை மறை காயாக தெரிந்தாலும் அந்த “ஈசனே” எழுதியது யாம்தான் என்று சபையில் உரைப்பது தனிச்சிறப்பல்லவா?

" NO MAN SHALL BE JUDGE ON HIS OWN CASE" - இந்த ’மடத்தமான சட்ட மொழியை’ - குப்பையில் போடுங்கள். பதிவாளரை விட்டு புகார் கொடுத்து, பார்கவுன்சிலிடம் சொல்லி சஸ்பெண்ட் செய்து, சரியானதென்று தீர்ப்பும் சொல்லும் ‘சாணக்கிய நீதியை’ சட்டமாக்குங்கள். தசாவதாரம் கமலகாசனுக்கு மட்டும் சொந்தமா என்ன? யார் கேட்பது ‘ராமராஜ்ஜியத்தில்’ இதுபற்றி கம்பரே சொல்லியுள்ளாராம்.

தலைமை நீதிபதி வீட்டில் உச்சா போகும் ‘தொழிலுரிமையைப் பாதுகாப்பதுதான் பார்கவுன்சில் வேலையே தவிர, நீதித்துறை ஊழல் பற்றி பேசினால் எப்படி பொறுத்துக்கொள்வது? குவார்ட்டர் சரக்கும் கோழி பிரியாணியும் தந்து ஜெயித்தது இதற்காகவா?
ஒரு பிரச்சினையை தீர்க்க எளிமையான வழி அதைவிட பெரிய பிரச்சினையை ஏற்படுத்து. நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கேட்டு போராடுவார்களா? வாழ்வுரிமையைப் பறித்து தெருவில் விடுங்கள் சரியாகிவிடும். அற்புதமான உங்களின் கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசெல்லாம் தூசு....

பார்கவுன்சில் செயலாளரை தாக்கிய, பார்கவுன்சில் தலைவர் பதவியை குத்தகைக்கு ஒப்பந்தம் செய்து, அதற்காக வழக்கும் போட்டவர் பார்கவுன்சிலின் தலைவர். அதற்காக ’வாதாடிய லூமினரி’ மூத்த வழக்குரைஞர். இன்னும் இன்னும் உங்கள் தகுதிக்கேற்ப கவனிப்பு....ஆமாம் ‘தகுதி’ மிக முக்கியம்.

போராடும் வழக்குரைஞர்களை எதிர்கொள்ள புரோக்கர் சங்கங்கள், பதவி ஆசை, மிரட்டல், நிர்பந்தம், செண்டிமெண்ட் - ஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆ ’பன்முகத்தன்மை’ கொண்ட நீதிபதி வேலை செய்வது சும்மா இல்லை புரிந்து கொள்ளுங்கள்....

நம்மிடம் முழக்கமிட்டால பதில் முழக்கமிட ‘அணுகுண்டுகள்’ மட்டுமல்ல, அம்பலப்படுத்தினால் ‘போகாதே - போகாதே’ என்று ராகம் போட்டு பாட ’;உண்மையாகவே தொழில் செய்யும் வழக்கறிஞர்களும் (Real Practicing Lawyers) ’ இருக்கின்றனர். தெரிந்து கொள்ளுங்கள்...

வழக்கரிஞர்களின் மீதான குற்றச்சாட்டுகளை பார்கவுன்சில்தான் விசாரிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம் சொன்னாலும் கேட்க வேண்டுமா? என்ன? திருநாவுக்கரசுை சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுக்கலாம், வழக்கறிஞர்களை ‘வர்ணங்களாக’ வகைப்படுத்தலாம், விசாரணை தொடங்குவதற்கு முன்பே நீ குற்றவாளி என்று முத்திரை குத்தலாம். புரிந்து கொள்ளுங்கள் விவசாயி கோபாலையும் - யோக்கியன் மல்லையாவும் ஒன்றாக பார்க்க முடியுமா? தேசத்துரோகி கண்ணையா குமார் மட்டுமல்ல. சென்னையிலும் இருக்கின்றனர்.

பாட்டியாலாவில் மூத்த வழக்குரைஞர்களை தாக்கிய வழக்குரைஞர்களின் மேல் எவ்வித நடவடிக்கையும் இல்லையென பேசுகிறார் ஒருவர். முட்டாள்தனமாக இல்லை, சென்னை வழக்குரைஞர்கள் பி.ஜே.பி.கட்சியாக அல்லது அவர்கள் பாரத் மாதா கி ஜே சொன்னார்களா? நாளையே கட்சியில் சேருங்கள். அப்புறம் பார்க்கலாம்.

உயர்நீதிமன்றம் அதிகாரப் பூர்வ விடை கொடுக்கும் முன்பே லூமினரி சங்கத்தில் பிரியா விடை பெறுவோம். மரபா? கிலோ என்ன விலை என்று கேட்போம். சென்னை வழக்குரைஞர்களை சமாளிக்க லோக்கல் லூமினரிகள், அகில இந்திய அளவில் லாபி செய்ய ஆல் இண்டியா லூமினெரி. என்ன இருந்தாலும் வரலாறு முக்கியமல்லவா? இதற்கு முன்னர் இவர்களை ஒழுங்கீனவர்கள் என்று நீங்களே பேசினீர்களே என்று நீங்கள் நிினைப்பது கேட்கிறது..அது வேற வாய்...

ஆனால் நீதிப்பிரபுவே துரதிருஷ்டம்.என்ன தெரியுமா?....வரலாறு பலம் கொண்டவன் மட்டுமே வெல்வான் என்பதை பொய்யென்றே பதிவு செய்துள்ளது. அதனால்தான் ஹிட்லரும், முசோலினியும் அடையாளமின்றி போனார்கள்.சூரியன் மறையா சாம்ராஜ்யம் வரலாற்றின் குப்பைத்தொட்டியில் வீசியெறிப்பட்டுள்ளது.

வ.உ.சி-யை தேசத்திரோகியென இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்த இதே மாண்புமிகு உயர்நீதிமன்ற தீர்ப்பினை இப்போது கொடுத்துப் பாருங்கள். கழிப்பறையில் எறிவார்கள்..ஆனானப்பட்ட வெள்ளைக்கார துரைக்கே இதுதான் நிலை..செண்பகராமனின் வெத்துகுண்டு சத்தம் கேட்டதும் ஆங்கிலத்தை விட்டு ஜெர்மனுக்கு தாவியவர்கள் எந்த மூலைக்கு.
ஆயுதம் கொண்டவன் சொல்வது நியாயமென்றால் அமெரிக்காதான் உலகிலேயே யோக்கியன்..அதுவா உண்மை..வியட்நாமில் செருப்படி பட்ட அமெரிக்க இன்று கூட ஈராக்கில் தினந்தோரும் கல்லடி பட்டுக்கொண்டிருக்கிறது.

நீங்கள் ஏவுகணைகளை உற்பத்தி செய்வது ஒருபுறம் இருக்கட்டும். துணிவாக வழக்கறிஞர் சங்கத்திற்கு வரத்தயங்கியது ஏனோ? ஒருவேளை உங்கள் நண்பர்கள் பதுங்குங்குழி வெட்டி வைக்கவில்லையோ? இல்லை தரைப்படைகள் வாடகைக்கு அனுப்பப்பட்டிருந்ததோ? அய்யகோ உங்கள் இரட்டை உங்கள் பேச்சுக்கு நான் பொறுப்பில்லை என்று நழுவுகிறார், உங்களுக்கு காவடி எடுத்தவர்கள் கூட தேவையா இவருக்கு என்று மழுப்புக்கின்றனர். 

கவண்கற்களிடம் ஏவுகணைகள் வீழ்ந்தே தீரும் என்பதுதான் வரலாறு..ஏனெனில் கவன் கற்கள் மக்களின் கைகளில், நியாயத்தின் பக்கத்தில் இருப்பதனால்... அதிகார மண்ணுக்குள் தனது தலையை புதைத்துக்கொண்டு நியாய உலகமே இருண்டு விட்டது என்று சொல்லும் நெருப்புக்கோழிகளை என்னவென்று சொல்வது..பெயரில் நெருப்பு இருப்பதனால் நெருப்புக்கோழிகள் பீனிக்ஸ் ஆகிவிட முடியாது என்பது தெரியுமா?

பாதுகாப்பாக இருந்து கொண்டு ஏவுகணைகளைச் செலுத்துங்கள்...நாங்கள் கவண் கற்களோடு காத்திருக்கிறோம்.......

சென்னையிலிருந்து தேசத்துரோகிகளில் ஒருவன்...

Apr 23, 2016

நீதிபதிகள்-வழக்கறிஞர்கள் சிந்தனைக்கு! சிறுவெளியீடு - பகுதி 2

தமிழக வழக்கறிஞர்கள் மீதான அடக்குமுறை -பின்னணி-சதி- என்ன?
பகுதி-2
-----------
வழக்கறிஞர்கள் மீதான குற்றச்சாட்டு என்ன?

ஹெல்மெட் பிரச்சனைக்காக மதுரை வழக்கறிஞர்கள் தொடர்ந்து போராடினார்கள்.ஊர்வலம் சென்றார்கள்.நீதிபதியை விமர்சித்தார்கள். தீர்மானம் நிறைவேற்றினார்கள்.தென் மாவட்ட வழக்கறிஞர்கள் நீதித்துறை ஊழலுக்கு எதிராக ஊர்வலம் சென்றார்கள்; ஊழல் நீதிபதிகள் பட்டியல் வெளியிட்டார்கள்.நீதிபதிகளின் ஊழலை நோட்டீசாக அடித்து மக்களிடம் விநியோகித்தார்கள்.தமிழுக்காக தலைமை நீதிபதி அறையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்கள்; நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது நீதிமன்ற அறைக்கு வெளியே முழக்கம் எழுப்பினார்கள்;கவர்னரிடம் ஊழல் நீதிபதிகள் தொடர்பாகப் புகார் அளித்தார்கள்.

வழக்கறிஞர்களின் இச்செயல்கள் நீதிபரிபாலனத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இவை வழக்கறிஞர்களின் தொழில் நெறிமுறைகளுக்கு எதிரானது. எனவே நடவடிக்கை எடுத்து வழக்கறிஞர்களிடம் ஒழுங்கை நிலைநாட்டுகிறோம் என்கிறது நீதித்துறையும்,பார்கவுன்சிலும்.

வழக்கறிஞர்களின் மேற்கண்ட நடவடிக்கைகள் அத்து மீறியதா? இல்லையா? கடும் நடவடிக்கைக்கு உரியதா? இல்லையா? இதன் மூலம் வழக்கறிஞர் தொழிலில் உள்ள கிரிமினல்கள்-புரோக்கர்கள் அகற்றப்பட்டு வழக்கறிஞர் தொழிலில் ஒழுங்கு நிலைநாட்டப்படுமா?
*****
ஹெல்மெட் பிரச்சனை என்றால் என்ன?

இரண்டு சக்கர வாகன ஓட்டிகள், பின்னால் அமர்ந்து இருப்போர், குழந்தைகள் , பெண்கள் ஆகியோர் கட்டாயம் ஜீலை1,2015 முதல் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.இத்தீர்ப்புக்கு எதிராக மதுரை வழக்கறிஞர்கள் போராடினார்கள் என்பதே பிரச்சனையின் தொடக்கம். 

மதுரை வழக்கறிஞர்களின் இப்போராட்டங்கள் தொடர்பாக மூன்று வழக்குகள் மதுரை அண்ணாநகர் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடுத்து நடந்து வருகிறது.

உண்மையில் மதுரை வழக்கறிஞர்கள் மக்கள் யாரும் ஹெல்மெட் அணியக் கூடாது என்று சொல்லவில்லை. மாறாக நீதிபதி கிருபாகரன், ஹெல்மெட் அணியாவிட்டால் வாகனத்தை, லைசென்சை பறிமுதல் செய்யுங்கள் என்று சட்டத்திற்கு விரோதமாக, அராஜகமாக உத்தரவிட்டதை எதிர்த்தும், தீர்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நகரெங்கும் போலீசு கல்லா கட்டுவது,மக்கள் தவிப்பது என்பதை பார்த்துக் கொதித்தெழுந்துதான் வழக்கறிஞர்கள் போராடினார்கள்.ஹெல்மெட்டை அரசு, விழிப்புணர்வு மூலம் அமல்படுத்த வேண்டும்,ஒரே நாளில் திணிக்கக் கூடாது என்றார்கள்.இது கடும் குற்றமா? ஆனால், நீதிமன்றம் என்ன தீர்ப்புக் கொடுத்தாலும், அத்தீர்ப்பு சட்டப்படியானதோ? இல்லையோ? மக்களைத் துன்புறுத்துமோ? இல்லையோ? அதை யாரும் விமர்சிக்க, எதிர்க்கக் கூடாது என்பதே நீதித்துறை- பார்கவுன்சில் நிலைப்பாடு.சட்டப்படியும்-நியாயப்படியும் இது சரியா? இதற்குமுன் நீதிமன்றத் தீர்ப்புகள் விமர்சிக்கப்பட்டதில்லையா?

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு எதிரான நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு அ.தி.மு.க. வினரால் படுகேவலமாக விமர்சிக்கப்பட்டு, ஏராளமான வன்முறைப் போராட்டங்களும் நடத்தப்பட்டன.தமிழ்நாடே முடக்கப்பட்டது.இதேபோல் நீதிபதி குமாரசாமியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பும் நாடு முழுவதும் கடும் விமர்சனத்துக்குள்ளானது.

இதற்கு முன்பாக காவிரி, முல்லைப்பெரியாறு தீர்ப்புகளை எதிர்த்து கர்நாடக, கேரள அரசியல்வாதிகள் போராடியபோதும் உச்சநீதிமன்றம் அமைதியாகத்தான் இருந்தது. சமீபத்தில் வந்த நீதிபதிகள் நியமன ஆணையத் தீர்ப்பை பா.ஜ.க வின் நிதி அமைச்சர் அருண்ஜேட்லி ” தேர்ந்தெடுக்கப்படாதவர்களின் கொடுங்கோன்மை” என மிகக் கடுமையாக விமர்சித்தார். ஆக, நீதிமன்ற தீர்ப்பை விமர்சிப்பது, எதிர்த்துப் போராடுவது புதிய ஒன்றோ, குற்றமோ அல்ல.அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமைக்கு உட்பட்டதுதான். கருத்துரிமையை அழிப்பது, அரசமைப்புச் சட்டத்தை அழிப்பதென்கிறார் டாக்டர் அம்பேத்கர்.தென்னாப்பிரிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து காந்தியே போராடியுள்ளார். வெள்ளையர்கள் காலத்தில் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து நீதிமன்றப் புறக்கணிப்பு நடந்துள்ளது.இதற்கும் மேலாக குற்ற வழக்கு, நீதிமன்ற அவமதிப்பு எனப் பல நடவடிக்கைகள் மதுரை வழக்கறிஞர்கள் மீது எடுக்கப்பட்டுவிட்டன எனும்போது சஸ்பெண்ட் நடவடிக்கை எதற்கு?

தொடரும்..

Apr 18, 2016

தனியாரும் அரசு பேருந்தும்!

தனியார் 4 பேருந்து வைத்திருந்தாலும் ஒரு தரமான தளத்தை (web site) பராமரிக்கிறார்கள். அரசு நாலாயிரம் பேருந்து வைத்திருந்தாலும் ஒரு மொக்கை தளத்தை இயக்கி வருகிறார்கள்.

தனியார் வலைத்தளத்தில் பெண் ஒருவர் இருக்கையை பதிவு செய்தால்,  அது பெண்ணிற்கான இருக்கை என காட்டும்.  பக்கத்து சீட்டில் பெண் ஒருவர் தான் முன்பதிவு செய்யமுடியும்.

அரசு வலைத்தளத்தில் அப்படி ஒரு வசதியும் இல்லை. நான் சென்ற பேருந்தில் பெண் ஒருவர் 17வது இருக்கையை முன்பதிவு செய்திருக்கிறார். அருகே உள்ள 18வது இருக்கையை ஆண் ஒருவர் பதிவு செய்திருக்கிறார். 

ஆண் அருகே பயணிப்பதில் பெண்ணுக்கு சங்கடம். ஆண் பயணிக்கு  நடத்துநர் வேறொரு சீட்டை மாற்றித்தர வேண்டிய நிர்ப்பந்தம். இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை.  ஆகையால், எல்லா இருக்கைகளும் நிரம்பி, கடைசி வரிசையில் மட்டுமே இடம் இருக்கிறது.  அந்த பயணி கடைசி வரிசையில் அமரமுடியாது என்கிறார்.

15 நிமிடம் பஞ்சாயத்து நடந்து, பிறகு  நடத்துநர் தனது செல்வாக்கில் வேறோரு பேருந்தில் இருக்கை ஏற்பாடு செய்ததும் சுபம். 

இது மாதிரி சொல்லிக்கொண்டே போகலாம். அரசு தளங்களில் வெளியிடப்பட்டிருக்கும் தொலைபேசி எண்கள் வேலை செய்யாது. அப்படியே வேலை செய்தாலும், தொலைபேசியை மதித்து எடுக்க ஆள் இருக்காது.

திட்டமிட்டே அரசு துறையை இப்படி சிதைக்கிறார்கள். பிறகு, மக்களையே தனியார் தான் சிறந்தது என பேச வைத்து அரசு துறையை ஊத்தி மூடுவதற்கான எல்லா வேலைகளையும் நகர்த்துவார்கள்!

போராட்டமின்றி எதையும் பாதுகாக்க முடியாது!

Mar 2, 2016

தமிழக வழக்கறிஞர்கள் மீதான அடக்குமுறை -பின்னணி-சதி- என்ன? - பகுதி-1

அன்பார்ந்த வழக்கறிஞர்களே மற்றும் நண்பர்களே!

தமிழகத்தில் இதுவரை 44 வழக்குரைஞர்களை தற்காலிகமாக தொழிற்செய்யமுடியாத அளவிற்கு நிறுத்திவையுள்ளனர். நாம் கொண்டுவந்திருக்கும் சிறுவெளியீடு நடந்த விசயங்களை தொகுத்து, யார் யார் இதன் பின்னணியில் உள்ளனர்? ஏன் வழக்குரைஞர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்? என்பதை சுருக்கமாக ஒரு வெளியீடாக கொண்டு வந்திருக்கிறோம்! அதை இன்று முதல் சிறுசிறு பகுதிகளாக பிரித்து தொடராக வெளியிடுகிறோம்.
.....

இந்துத்துவ மோடி அரசு வரலாற்றுத் துறை, தணிக்கைத் துறை, பள்ளி மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள், அறிவியல் கழகங்கள், நீதிமன்றங்கள் என அனைத்தையும் காவிமயமாக்கி வருகின்றனர். அதன் வெளிப்பாடாக கருத்துரிமைக்கு எதிராக பாசிச நடவடிக்கை தொடர்கிறது. உயர்கல்வி நிறுவனங்களில் சென்னை ஐ.ஐ.டி, ஹதராபாத் பல்கலைக்கழகம் அடுத்து இப்போது டெல்லி JNU வில் நடக்கும் நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகிறது.
தமிழகத்தில்தான், இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு வழக்கறிஞர்கள் போராடியிருக்கிறார்கள். ஈழத்து இனப்படுகொலைக்கு எதிராக, மூவர் தூக்குக்கு எதிராக, இந்தி-சமஸ்கிருத திணிப்புக்கு எதிராக, நீதிமன்றத்தில் தமிழ், காவிரி-முல்லைப் பெரியாறு பிரச்சனைகளுக்காக என்று பல பிரச்சனைகளுக்காகவும் தமிழக வழக்கறிஞர்கள் போராடியிருக்கிறார்கள்.

நீதிபதிகளின் நியமனத்தில் பார்ப்பன ஆதிகத்தையும் மற்றும் நீதித்துறை ஊழலையும் எதிர்த்திருக்கிறார்கள்.

தற்போது எப்படி கருத்துரிமைக்காக போராடிய JNU மாணவர்களை தேசதுரோகியாக சித்தரித்து குற்றவாளிகளாக மாற்றினார்களோ அதே போல்தான் சென்ற ஆண்டு போராடிய தமிழக வழக்கறிஞர்களை குற்றவாளிகளாக சித்தரித்தனர். தேசதுரோக வழக்கு பதிலாக 44 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு தொழில் செய்ய முடியாத படி
பொருளாதார ரீதியாக முடக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

உயர்நீதிமன்றத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையை(CISF) நிறுத்தி வழக்கறிஞர்கள் தங்கள் ஜனநாயகமாக கருத்தினை வெளிப்படத்தாதவாறும் அச்சுறுத்தி வருகின்றனர்.

வழக்கறிஞர்களை ஒடுக்குவது தனிப்பட்ட ஓர் நிகழ்வல்ல.பெயரளவுள்ள ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பது.நீதித் துறையை-நாட்டை பாசிசமயமாக்குவது. மக்களை ஒடுக்குவது என்பதே பொருள்.
பாசிசம் வந்தபின் விழிப்பதை விட வரும்முன் விழிப்பதே சரி. இதனை அனைவரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தமிழக வழக்கறிஞர்கள் மீதான அடக்குமுறை -பின்னணி-சதி காரணங்களை விளக்கி நீதிபதிகள்-வழக்கறிஞர்கள் சிந்தனைக்கு! என்ற சிறுவெளியீட்டினை மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்-தமிழ்நாடு வெளியிட்டு் உள்ளது. தமிழகம் முழுவதும் இலவசமாக வழங்கிகொண்டிருக்கிறோம் . மேலும் எங்கள் முகநூல் பக்கத்தில் இன்று முதல் தொடராக பதிவிடுகிறோம்.

 இந்த சிறுவெளியீட்டை அனைவரிடம் பகிருங்கள் .சென்னையில் தேவைப்படுவோர் 90946 66320 எண்ணில் தொடர்பு கொள்ளவும்

தோழமையுடன்,
மில்ட்டன், வழக்குரைஞர்,
செயலர்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்-சென்னை.
9094666320
*******

நீதிபதிகள்-வழக்கறிஞர்கள் சிந்தனைக்கு! சிறுவெளியீடு-பகுதி-1
தமிழக வழக்கறிஞர்கள் மீதான அடக்குமுறை -பின்னணி-சதி- என்ன?
-----------

மதிப்பிற்குரிய வழக்கறிஞர் பெருமக்களே!

தமிழக வழக்கறிஞர்கள் 44 பேர் தொழில் செய்யத் தடை விதிக்கப்பட்டு 140 நாட்களுக்கும் மேலாகிறது.மதுரை வழக்கறிஞர்கள் 13 பேர் மீதான வழக்கு கர்நாடகத்துக்கு மாற்றப்பட்டு மூன்று மாதகாலமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.சென்னை உயர்நீதிமன்றம் சி.அய்.எஸ்.எப் போலீசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு மக்கள் தொடர்பிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டுள்ளது.பெண் வழக்கறிஞரைப் படம் எடுத்த சி.அய்.எஸ்.எப் போலீசைக் கண்டித்த 8 சென்னை வழக்கறிஞர்கள் மீதான வழக்கும் கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது. தொழில்தடை விதிக்கப்பட்ட மதுரை வழக்கறிஞர்களின் கிளர்க்குகள் இருவரின் உரிமங்களை ரத்து செய்து உயர்நீதிமன்றப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் எனது வழக்கை விரைந்து எடுங்கள் என்று கோரிய வழக்கறிஞர் நீதிமன்றத்தை தொந்தரவு செய்ததாகச் சொல்லி 200 ரூபாய் அபராதம் (அல்லது) ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்ற வளாகங்களில் பேசக்கூடாது, துண்டறிக்கை விநியோகிக்கக் கூடாது, கூட்டம் நடத்தக்கூடாது, பார் கவுன்சில் மட்டுமல்ல காவல்துறையைக் கூட விமரிசிக்கக் கூடாது போன்ற தடைகள் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. உயர்நீதிமன்றம் உட்பட தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களை நீதிபதிகள் மிரட்டி அச்சுறுத்தி வருகிறார்கள்.வாதங்களில் இயல்பாகக் குரல் உயர்ந்தால் கூட, பார் கவுன்சிலிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கவா? எனப் பல மூத்த வழக்கறிஞர்கள்கூட மிரட்டப்படுகின்றனர். தமிழக நீதிமன்றங்களில் விரும்பத்தகாத மயான அமைதி நிலவி வருகிறது. பிரச்சனையைப் பேசி முடிக்கலாம் என்ற மூத்த வழக்கறிஞர்களின் குரலுக்கு நீதித்துறை செவிசாய்க்க மறுக்கிறது.எத்தனை முறை தலைமை நீதிபதியைச் சந்தித்து பிரச்சனையை பேசித்தீர்க்கக் கோரினாலும், வழக்கறிஞர்களின் கோரிக்கை அலட்சியப்படுத்தப்படுகிறது. ஒரு சில வழக்கறிஞர்களை வைத்து பொங்கல் விழா-இலக்கிய விழா-சட்டக் கருத்தரங்கம்-நூல் வெளியீட்டு விழா என நடத்தி நிலைமை சுமூகமாக உள்ளதாகக் காட்டும் முயற்சி நடக்கிறது.

மூத்த வழக்கறிஞர்கள் உட்பட பெரும்பான்மை வழக்கறிஞர்கள் நடந்து வரும் சம்பவங்கள் எல்லை மீறியது,வழக்கறிஞர்களின் சுயமரியாதைக்கு எதிரானது எனக்கருதினாலும் அமைதியாக உள்ளனர். மொத்தத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக வழக்கறிஞர்கள் மீது தொடுத்த நேரடியான தாக்குதலும்,உளவியல் ரீதியான யுத்தமும் வழக்கறிஞர்களின் எதிர்வினை இல்லாததால்,பயந்துவிட்டார்கள் எனக்கருதி முன்னிலும் மிகவும் தீவிரமடைந்துள்ளது. கடைசி எல்லைவரை வழக்கறிஞர்களை துரத்தித்-துரத்தி அடிக்கிறார்கள்.நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் மன்னிப்பு கேட்கிறோம் என்று மனுத்தாக்கல் செய்தாலும் வழக்கை நடத்துங்கள் என்கின்றனர்.

குறிப்பிட்ட சிலர்தான் பிரச்சனை என்று சொல்லி ஒட்டு மொத்த வழக்கறிஞர் சமூகத்தையும் அடிமையாக்கும் முயற்சி தீவிரமாக நடக்கிறது.
நீதித்துறையில் ஒழுங்கை நிலைநாட்டுகிறோம் என்ற சொல்லி ஒட்டுமொத்த நீதிபதிகளின் பேரால் குறிப்பிட்ட சில நீதிபதிகள் வழக்கறிஞர்களுக்கு எதிராக இந்தத் தாக்குதலைத் தொடுத்திருக்கிறார்கள். இதன் பின்னணி என்ன? இதன் சூத்திரதாரிகள் யார்? யாருடைய நலனுக்காக இது நடத்தப்படுகிறது? அவர்கள் நோக்கம் என்ன? என்பது பற்றியான புரிதல் வழக்கறிஞர்களுக்கு மட்டுமல்ல,நீதிபதிகளுக்கும் அவசியமாக உள்ளது.ஏனெனில் தமிழக நீதித்துறை வரலாற்றில் இன்று நடந்துவரும் பிரச்சனைகள் புதிது.

 தொடரும்...

Feb 27, 2016

அண்ணன் சதாசிவம் காட்டிய வழியில் தம்பி தத்து!




நேற்று கேரள கவர்னராக சதாசிவம்!
இன்று மனித உரிமை ஆணையத்தின் தலைவராக தத்து தேர்வு!

------
 

 பா.ஜ.க.வின் அருண் ஜெட்லி 2012-ல் எதிர்கட்சித் தலைவராக இருந்த பொழுது நீதிபதிகளும் தலைமை நீதிபதிகளும் அதிக சம்பளம், குறைந்த பொறுப்பு என கவுரவமிக்க பதவிகளை அரசிடமிருந்து பெற்றுவிடவேண்டும் என அரசுக்கு ஆதரவாகப் பல தீர்ப்புகளை அளிக்கத் தொடங்கிவிடுவார்கள்; நீதிபதிகளில் இரண்டு வகை. சட்டங்களை நன்றாக தெரிந்துவைத்திருப்பவர்கள். இன்னொரு வகை சட்ட அமைச்சரை நன்கு தெரிந்து வைத்திருப்பவர்கள்என கிண்டலடித்தார். ஜெட்லி சொன்னது இன்று நடைமுறை உண்மையாகி கொண்டிருப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சதாசிவம், துளசிராம் பிரஜாபதி கொல்லப்பட்ட வழக்கில் பா.ஜ.கவின் தேசிய செயலராக இப்பொழுது இருக்கும் அமித்ஷாவை விடுவித்தார். அதற்கு பலனாக தான் அவருக்கு கேரள கவர்னர் பதவி கிடைத்தது என சர்ச்சையானது . மற்றொரு சர்ச்சை தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு தன்னை தலைவராக்க வேண்டும் என சதாசிவம் லாபி செய்தார் என பரவலாக பேசப்பட்டது!

இந்திய வரலாற்றில் உச்ச நீதிமன்றத்திலிருந்து தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து ஓய்வுபெற்ற பிறகு மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பிரமுகர் சதாசிவம்தான். கடந்த செப்டம்பரில்(2014ல்) அவருடைய நியமனம் நடைபெற்றபோது 2 முன்னாள் தலைமை நீதிபதிகள் அதை விமர்சித்தனர். அரசியல் நெருக்கடிக்கு ஆளாகாமல் நீதித் துறை செயல்பட வேண்டும் என்பதால், இது ஆரோக்கியமான முன்னுதாரணம் அல்ல என்றே கருதப்பட்டது.என வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹாவும் குறிப்பிடுகிறார்.

கேரள கவர்னராக நியமனம் குறித்து தனது அதிருப்தியை முன்னாள் கூடுதல் சொலிசிட் ஜெனரல் கே.வி. விஸ்வநாதன் திறந்த கடிதம் மூலம் சதாசிவத்திற்கு வெளிபடுத்தியுள்ளார். அந்த கடிதத்தில், அரசு நிர்வாகத்தில் மற்றும் நீதித்துறையில் இருப்பவர்களின் கரங்களுக்கிடையே இடைவெளி என்பது ஓய்வுபெற்ற பின்னும் தொடர்ந்து இருக்க வேண்டும். மாறாக கரங்கள் இடைவெளியை குறைத்து ஆரத்தழுவினால், அது பயங்கர ஆபத்துக்கான எச்சரிக்கை அறிகுறி என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் நீதிபதிகளான வி.என். கரே மற்றும் கே.டி. தாமஸ், சட்ட ஆனையத்தின் தலைவர் ஏ.பி. ஷா, மூத்த வழக்குரைஞர்கள் ராஜீவ் தவான் மற்றும் பாலி.எஸ்.நாரிமன் போன்றோர் சதாசிவத்தின் நியமனத்தை விமர்சித்து இருந்தனர். அனைத்திந்திய பார் அசோசியஷேனும் மற்றும் கேரள உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கமும் நியமனத்தை கண்டித்திருந்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து மீதோ ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள்!
 
குஜராத் படுகொலைகள் வழக்கில் அமித்ஷா தொடர்பு குறித்து விசாரிக்க கோரிய சஞ்சீவ்பட் மனுவை தள்ளுபடி செய்தார்

மாயா கோத்னானிக்கு குஜராத் உயர்நீதிமன்றம் வழங்கிய தண்டனை குறைப்பு மற்றும் ஜாமீனை எதிர்த்து உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் நீதிபதி தத்து, மாயா கோத்னானிக்கு ஜாமீன் கிடைத்தே தீர வேண்டும் என்பது போல செயல்பட்டார் என மனித உரிமை செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த வருடம் ஜனவரியில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் மோடியை சிறந்த தலைவர், நல்ல மனிதர் மற்றும் தொலைநோக்கு பார்வை உடையவர் என்று மோடியை புகழ்ந்தார்

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை ஜாமினில் விடுதலை செய்து மற்றும் சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்ககால்குலேட்டர்புகழ் குமாரசாமியை பயன்படுத்தியவர்

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியதில் பெரிய ஊழல் நடந்திருப்பதாக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் தத்துவிடம் புகார் அளித்தார்கள். அதற்கு, ’யாராவது ஒருவர் நான் 1000 கோடி ரூபாய் வாங்கி கொண்டு ஜாமீன் வழங்கினேன் என்று கூறுவார்கள். கவலைபடாதீர்கள், இந்த மாதிரி குற்றச்சாட்டுகளை எல்லாம் எதிர்கொள்ளும் அளவுக்கு எனக்கு தடித்த தோல் இருக்கிறதுஎன தேர்ந்த பிழைப்புவாதி போல் பதில் அளித்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியதில் தத்து எந்த விதிமுறையும் பின்பற்றவில்லை. அவர் அளித்த உத்தரவு முறைகேடனாது மற்றும் சந்தேகத்திற்கு உரியது அதனால் இந்த வழக்கை மேலும் அவரே விசாரிக்கக் கூடாது என்று தமிழகம் முழுவதும் 1000 வழக்குரைஞர்கள் கையெழுத்திட்ட மனுவை மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் ஜனாதிபதியிடம் அளித்தனர்.

எச்.எல் தத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாவதற்கு முன் அவர் சட்ட விரோதமாக சொத்து குவித்தது தொடர்பான ஆவண ஆதாரங்களின் தொகுப்பு ஒன்று அப்போது ஊடக கவுன்சில் தலைவராக இருந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ ஊடகங்களுக்கு அனுப்பி இருந்தார். அதை ஊடகங்கள் வெளியிடாததை குறித்தும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்

மதுரையில் வழக்குரைஞர்கள் ரமணா படம் போல டாப் 5 ஊழல் நீதிபதிகளின் பட்டியலை வெளியிட்டபொழுது மிகவும் துடித்துப்போனவர் தத்து. நீதிபதி கர்ணன் குறித்த ஒரு வழக்கில், சம்பந்தமேயில்லாமல் வழக்குரைஞர்களால் நீதிபதிகள் பய உணர்வுடன் வழக்குகளை விசாரித்து வருகின்றனர் என்று அலறினார்

இப்படி பல குற்றச்சாட்டுகள் இருக்கும் பொழுது தான், தேசிய மனித உரிமை ஆணையர் பதவி கிடைத்திருக்கிறது.

நீதிபதிகள் இவ்வாறு பதவிகளை தேடி ஓடுவது என்பது நீதித்துறையின் சுதந்திரதன்மைக்கு ஆபத்தாகவே முடியும். அதற்கான மோசமான அடையாளங்கள் சதாசிவம் நியமனமும் அதன் பின் தொடரும் தத்துவின் நியமனமும்.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் நேர்மையாக தீர்ப்பளித்த மைக்கேல் டி குன்ஹா தனது தீர்ப்பில் "ஊழல் என்பது தண்டனைக்குரிய குற்றம் மட்டுமல்ல. அது மனித உரிமைகளை மலினப்படுத்தி அவற்றை மீறுகிறது. கவனமாக செய்யப்படும் ஊழல் என்பது, மனித உரிமைகள் மீறல் மட்டுமல்ல, அது, தொடர்ந்த பொருளாதாரக் குற்றங்களுக்கு வழிவகுக்கிறது.என குறிப்பிட்டார்.

குன்ஹாவின் வரையறைப்படி, பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் தத்து மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டு கொண்டவர். இன்றைக்கு அவரே மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றால் எவ்வளவு பெரிய முரண் இது!

நிலவுகிற மோடி அரசு அறிவிக்கப்படாத நெருக்கடியை நிலையை நாடெங்கும் அமுல்படுத்திவருகிறது. தனது வானர கொலைகாரப் படைகளை காக்க காவி சிந்தனையுள்ள நீதிபதிகளை நீதித்துறைக்குள் நியமிக்க எல்லாவகையிலும் முயன்றுவருகிறது. அவர்கள் எதற்கு? நாங்களே நீங்கள் நினைப்பதை நிறைவேற்றி தருகிறோம் என்பதை தான் கவர்னர் பதவியும், மனித உரிமை ஆணையர் தலைவர் பதவியும் நிரூபிக்கின்றன.

இறுதிச்சுற்று படத்தில் ஒரு வசனம் வரும். ஊழல்வாதிகள் உங்களை நான் விசாரிக்கனும், ஆனால், நீங்க விசாரிக்கிற இடத்துல உட்கார்ந்து இருக்கீங்க! 

நேர்மையான வழக்குரைஞர்கள் நாம் இப்பொழுது கூண்டில் நிற்கிறோம். அவர்கள் நம்மை விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
நாம் ஒன்றிணைந்து நீதித்துறையில் ஊழல்வாதிகளை மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலப்படுத்தும் பொழுது மட்டும் தான் அவர்கள் பலம் இழப்பார்கள். இல்லையெனில், நம் அமைதியே அவர்களுக்கு கொண்டாட்டமாகிவிடுகிறது!

-
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.