Sep 25, 2018

The Post - பத்திரிக்கை சுதந்திரம்

1960-களில் அமெரிக்கா வியட்நாம் மீது ஆக்கிரமிப்பு போர் செய்து கொண்டிருந்தது. வியட்நாமிய போராளிகள் கொரில்லா போர் செய்து அமெரிக்க ராணுவத்தினரை சிதறடித்துக் கொண்டிருந்தார்கள்.

உச்சக்கட்ட போர் சமயத்தில் 60 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இறந்தும் காணாமலும் போயினர். அமெரிக்க அரசோ கெத்தாக போரில் முன்னேறி கொண்டிருப்பதாக கதை விட்டுக் கொண்டிருந்தது.

இராணுவ ஆய்வாளர் ஒருவர் உலகுக்கு உண்மையை சொல்ல நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு ஆதாரம் அளிக்கிறார். இதழில் வெளியானதும் நாடே கொந்தளிக்கிறது. அமெரிக்க அரசு ஆடிப்போய்விடுகிறது!

'நியூயார்க் டைம்ஸ்'க்கு போட்டி பத்திரிக்கையான 'வாஷிங்டன் போஸ்ட்' மேலும் வியட்நாமிய போர் தொடர்பான செய்திகளை தேடுகிறது. கண்டுபிடித்தும் விடுகிறது.

இதற்கிடையில் வாஷிங்டன் போஸ்ட் பொருளாதாரத்தில் தள்ளாடுகிறது. பொதுமக்களிடம் பங்குகளை வெளியிட்டு, தன்னைப் பலப்படுத்திக் கொள்ளலாம் என முடிவு செய்கிறது.

இதே சமயத்தில் நியூயார்க் டைம்ஸில் ஆதாரம் வெளியானதை ஒட்டி, அமெரிக்க அரசு சுதாரித்து மேற்கொண்டு ஆதாரங்களை வெளியிடக்கூடாது என நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கி விடுகிறது.

கிடைத்த ஆதாரங்களை, தடையை மீறி வெளியிட்டால், வாஷிங்டன் போஸ்ட் இதழை இழுத்து மூடவேண்டி இருக்கும். பத்திரிகை ஆசிரியரும், அதன் மேலாண் இயக்குநரும் நிச்சயமாய் கைது செய்யப்படுவார்கள்.

அதனால் பத்திரிக்கையில் வெளியிட மற்ற இயக்குனர்கள் மறுக்கிறார்கள்.

எல்லாவற்றையும் மீறி மக்களுக்கு வாஷிங்டன் போஸ்ட் உண்மையை சொன்னார்களா என்பது முழு நீளக்கதை!
****

இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கு இரண்டு முகங்கள். ஜாஸ், ஜுராசிக் பார்க் , இண்டியனா ஜோன்ஸ் என ஒரு முகம். இன்னொரு முகம் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட், அமிஸ்டாட், தி போஸ்ட்.

படத்தில் பத்திரிக்கை ஆசிரியராக வரும் டாம் ஹாங்க்ஸ், முதலாளியாக வரும் மெரில் ஸ்டிரிப் என எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

சிறந்த திரைப்படம், இயக்குனர், நடிகர், நடிகை, திரைக்கதை, இசை என ஆறு வகைகளில் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

அமெரிக்கா உலகம் முழுவதிலும் போர் என்ற பெயரில் பல உயிர்களை கொன்று குவித்துள்ளது. வியட்நாமில் தோற்றுப் போவோம் என தெரிந்தே பல ஆயிரம் தனது சொந்த நாட்டு இளைஞர்களையே பலிகொடுத்தது.

படத்தில் ஒரு இடத்தில் சொல்லப்படும் செய்தி.

ஊடகம் ஆளப்படுகிறவர்களுக்கு தான் சேவை செய்ய வேண்டும். ஆள்பவருக்கு அல்ல!

இந்திய நிலைமைகளில் இதை யோசித்துப் பார்த்தால்... நிலைமை மிக மோசமாக இருக்கிறது. ஊடகங்கள் பச்சையாக மிரட்டப்படுகின்றன. நேர்மையான பத்திரிகையாளர்கள் வேலையில் இருந்து தூக்கி எறியப்படுகிறார்கள். மிக நெருக்கடியான கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

அவசியமான படம்! பாருங்கள்!

- குருத்து

No comments: