Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Feb 20, 2018

பிச்சைக்காரர்

சென்னை மாநகராட்சியின்
எல்லையில் உள்ளது
எங்கள் நகர்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு 
அது ஒரு எளிமையான 
கெங்கை அம்மன் கோவில்!

பக்தர்களிடம் வசூல் செய்து
உட்புறத்தில்
முருகன், பிள்ளையார்  அவதரித்தனர்!

பிரார்த்தனை செய்பவர்கள் அதிகரித்ததும்
அய்யர் தோன்றினார்.
இன்னும் அதிகமானதும்
இன்னொரு அய்யரும் ஐக்கியமானார்.

கடவுள் நம்பிக்கையுள்ள 
என் அத்தையிடம்
புதிதாய் விரதநாட்கள் முளைத்தன!

பிரதோஷம், கிருத்திகை என
சிறப்பு பூஜைகள்
தவறாமல் நடைபெற்றன!
மார்கழி முழுவதும்
காலையில் பக்தி பாடல்கள் ஒலித்தன!


கடவுளுக்கு 
அசையும் சொத்துக்கள்
அசையா சொத்துக்கள் அதிகமானதும்
பதினைந்து அடிக்கு சுற்றுப்புற சுவர் எழும்பியது!
நல்ல கனமான இரும்பு கேட் வந்தது!
பெரிதாய் பூட்டும் தோன்றியது

பூக்கடை வந்தது!
விபூதி, குங்குமம்,
பூஜை பொருட்கள் விற்க 
கடையும்  வந்து சேர்ந்தது!

அன்னதானம் போடும் பொழுது
பக்தர்கள் அலைமோதினார்கள்.


எல்லாம் இருந்தாலும்
ஏதோ ஒன்று குறைவது போல
மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது!


இன்று வெள்ளிக்கிழமை.
வாசலில் செருப்புகள் 
நிறைய இருந்தன.
தை மாத குளிரில்
கண்கள் உள்ளடங்கி
ஒரு வயதானவர்
பக்தர்களிடம் இரஞ்சி கொண்டிருந்தார்.

'முழுமை' பெற்றது போல இருந்தது
கோவில்!

படம் உபயம் : இணையம்

குருத்து

Oct 21, 2017

தீப ஒளி : பலகாரங்கள் இனிப்பதில்லை!

ஐந்து குழந்தைகளுடன்
எப்பொழுதும்
பற்றாக்குறைகளுடன்
போராடும் அம்மாவுக்கு
பண்டிகை வந்தாலே பதட்டமாகிவிடும்!


பொறுப்பை தட்டிகழிக்கும் அப்பாவோ
"எல்லாவற்றையும்
துணைவியார் பார்த்துக்கொள்வாள்!" என
நழுவிக்கொள்வார்.

வாராவாரம் சிறுக சிறுக சேமித்து
கட்டிய பண்டுதான்
பலகாரங்களுக்கு பொருட்கள் தரும்!

குறைந்தபட்ச வட்டி கடனில்
சொசைட்டி தான் அனைவருக்கும்
துணி வழங்கும்!

தைக்க, இதர செலவுகளுக்கு
வட்டிக்கு வாங்கும் கடன் தான் சமாளிக்கும்!

எங்கு சென்றாலும்
அம்மாவுக்கு கடைக்குட்டி
நான் தான் துணை!

அம்மா எதிர்கொள்ளும் - அத்தனை
சங்கடங்களுக்கும்
சிரமங்களுக்கும்
கண்ணீருக்கும்
நானே மெளன சாட்சி!

பண்டிகையில் செய்யப்படும்
இனிப்புகள்
எப்போதும் அம்மாவிற்கு
இனிப்பதேயில்லை!
அம்மாவிடம் பட்டாசு கேட்க
வாய் வருவதேயில்லை

- குருத்து

Jul 10, 2017

அத்தை

அத்தை!

ஒவ்வொரு அத்தைக்கும்
ஒவ்வொரு சிறப்புண்டு!

'என்ன மருமகனே!'
என அழைப்பதில்
அத்தனை அன்பு ததும்பும்!

"எனக்கு ஒரு பொண்ணு இருந்தா
உனக்குத்தாண்டா கட்டிக் குடுத்திருப்பேன்" 
எப்பொழுதும் வாஞ்சையுடன் சொல்வார்
ராக்கு அத்தை!

அத்தைகளின் அன்பை
இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே
எல்லா அத்தைகளின் பெண்களையும் 
கட்டிக்கொள்ளவேண்டும் என 
நினைத்த காலம் உண்டு! 😜

சொந்த ஊர் பாசத்தில்
அத்தைகளின் அளவில்லாத 
அன்பும் உண்டு!

எந்த அத்தை பெண்ணையும் கட்டாமல்
சாதி மறுப்பு திருமணம் செய்த பொழுதும்
வருத்தம் இருந்தாலும்
மாறாத அன்பு காட்டினார்கள்.

பிச்சை அத்தை கோரவிபத்தில் 
இறந்த பொழுது கலங்கிபோனேன்.
கால இடைவெளியில் 

அத்தைகள் மறையும் செய்திகள் 
வந்து கொண்டே இருக்கின்றன!
அத்தைகள் இல்லாத உலகத்தை
நினைத்துப் பார்ப்பது 
சிரமமாய் இருக்கிறது! 

Jan 27, 2015

பயணம் ‍- கவிதை




தொலைதூரப் பயணத்திற்கு
பேருந்திற்காய் காத்திருந்தேன்.
சிறிது நேரத்தில்
ஆடி அசைந்து வந்தது.

இடம்பிடிக்க ஆவலாய் மொய்த்தார்கள்.
கொஞ்சம் சிரமப்பட்டு
இடம் பிடித்தாயிற்று!
தேர்வில் வெற்றி பெற்ற
மாணவனின் குதூகலிப்புடன்
என்னை வசதி செய்துகொண்டேன்.

முகத்தில் அறையும் திமிர்காற்று.
கையசைத்து குதூகலிக்கும்
பச்சை வண்ணமரங்கள்.
நினைத்த உருவம் பொருந்திக்கொள்ளும்
வான் மேகங்கள்.
காற்றில் மிதந்து
காதலிக்க வலியுறுத்தும்
ராசாவின் பாட்டு.
பயணங்கள் இனிமையானது!
பாட்டிற்கேற்ப நடனம் ஆடிக்கொண்டே

பயணம் செய்தது பேருந்து.
பின்வந்த நிறுத்தத்தில்
பயணிகள் சிலர் ஏறினார்கள்
அதில் ஒரு வயதான அம்மா
ஏறியதும் கண்களை சுழற்றி
இடம் தேடினார்.
முகத்தில் சிறிது வருத்தம்.
கண்டும் காணாதது போல்
முகங்கள் வேறுபக்கங்கள் திருப்பிக்கொண்டன!

எண்ணம் மாற்ற
பார்வையை வெளியில் தெளித்தேன்.

வெண்மையாய் இருந்த மேகங்கள்
அடர்த்தியாய் பின்னிக்கொண்டன.
வருத்தமுகம் நினைவில் வந்தது.
பார்வையை கீழே தாழ்த்தினேன்.
மரங்கள் உற்சாகமிழந்தது போல்
ஒரு பிரமை.

அந்த அம்மாவிற்கு கால் வலித்திருக்கும்
நேரக் கணக்கிட்டு மனது சொல்லியது!
திரும்பி பார்த்தேன்
சிரமப்பட்டு நின்றுகொண்டிருந்தார்.
உள்ளத்தில் சிறுவலி.
பக்கத்து சீட்டுக்காரருக்கும்
உறுத்தியது போலும்.
அடுத்த பஸ்சில வந்தா என்ன!
செத்தா போயிரும்?’
உறுத்தலை நிறுத்திக்கொண்டார்.

என்ன அவசர வேலையோ?
முடிவெடுத்தேன்.
‘உட்காருங்கம்மா!’ எழுந்துகொண்டேன்.
கண்களில் நன்றியுடன் அமர்ந்தார்.

மீண்டும்
மேகங்களைப் பார்த்தேன்.
விளையாடிக்கொண்டிருந்தன.
அடர்த்தியாய் வரிசையாய்
நின்ற மரங்களை  கண்டேன்.
காற்றோடு கதை பேசிக்கொண்டிருந்தது!
* 1997ல் எழுதியது! பரணியில் வேறு எதையோ தேடிய பொழுது கண்ணில்பட்டவை!

May 21, 2007

நீ வருவாய் என - கவிதை

சத்தங்களை வடிகட்டி
நுட்பமாய்
உன் கொலுசு இசையை
பதிவு செய்திருக்கின்றன
என் காதுகள்.

சலனங்களைத் தவிர்த்து
கவனமாய்
உன் ஒவ்வொரு அசைவையும்
படம் பிடித்திருக்கின்றன
என் கண்கள்.

உன் மெளனத்தைக்கூட
மொழி பெயர்க்க
கற்றிருக்கிறது
என் மனசு.

நீயில்லாத நாள்களால்
வெற்றுத்தாள்களாய்
நகருகிறது
என் நாட்குறிப்பு.

கனவுகளில் மட்டும்
தாலாட்டிப் போகிறாய்.

முளரி மொட்டு
என் கவிதைகள்
பால் நிலா
நாட்குறிப்பு - எல்லாம்
என்னோடு
உன் வருகைக்காக
காத்திருக்கின்றன.

எப்பொழுது வருகிறாய்
இங்கு
நிஜத்தில் நீ

- சாக்ரடீஸ்.

May 8, 2007

சுதந்திரம் இன்னும் தொலைவில் இல்லை - கவிதை

பொய்களின் கைப்பிடித்து
நெடுந்தொலைவு
வந்துவிட்டோம்.

ஒவ்வொரு மைல்கல்லிலும்
சுமைகளென
நம் செல்வங்கள்
அனைத்தையும்
இறக்கி வைத்துவிட்டோம்.

இலவசமாய் கிடைத்ததென
ப்ல வண்ணப் பந்தல்களில்
நிறைய மூடநம்பிக்கைகளை வாங்கி
வயிறு முட்ட குடித்துவிட்டோம்.

பொய்கள்
கொழுத்துப்போய்விட்டன.
நாம் நிறைய
இளைத்து போய்விட்டோம்.

பொய்கள் அழைத்து செல்வது
மகிழ்ச்சியின் தேசத்திற்கு அல்ல!
மரணக்குழிக்குத்தான்!
உண்மை எச்சரித்துக்கொண்டே
உடன் வருகிறது.

பொய்கள் இதுவரை
உண்மையின் ஆடைகளை
உடுத்தியிருந்தன.

இப்பொழுது
தன் மூகமூடிகள்
உண்மையின் ஆடைகள்
எல்லாவற்றையும் களைந்தெறிந்து
தன்னை எவர் ஜெயிக்கமுடியும்
கோரப்பற்களைக் காட்டி
எக்காளச் சிரிப்புடன்
உண்மையைப் பார்த்து
கேலி செய்கிறது.

சாவின் விளிம்பிற்கு
வந்துவிட்டோம்.
இப்பொழுதாவது
உண்மையின் கைப்பிடிப்போம்.
கரங்களை ஒன்றிணைப்போம்.

உற்றுப்பாருங்கள்
சாவின் முகத்தில்
சவக்களை.

சுதந்திரம்... இன்னும்
தொலைவில் இல்லை

பெருநகர பயணம் - கவிதை


விரைவாய் அதிவிரைவாய்
எல்லா வாகனங்களும்
முகத்தில் புகையைத் துப்பி
முன்னேறி செல்கின்றன.

பச்சைசிக்னல் விழுவதற்கு முன்
விர்ரெனப் பறக்கின்றன.
சிவப்புசிக்னல் விழுந்தபின்பு - இன்னும்
விரைவாய் பறக்கின்றன.

ஓட்டுகிற முகங்களில்
இறுக்கம் நிலவுகின்றன.

எல்லா வாகனங்களிலும்
கோரமான கீறல்கள்
கண்ணை உறுத்துகின்றன.

பயணிக்கையில்தான்
எல்லா கவலைகளும்
மேலெழும்புகின்றன.

பயணச் சாவுகளை
தினமும்
செய்திகள் தெரிவிக்கின்றன.

உயில் எழுதவேண்டும்
விரைவில்.
யாருக்கு எவ்வளவு தரவேண்டும்?
பட்டியல் தயாரிக்க வேண்டும்
தர யாருமில்லை! - இருப்பினும்
நாணயஸ்தனாய் சாகவேண்டும்.


காலை 11.45 மணி - 29.03.2007.

Apr 18, 2007

எங்கள் தெரு - கவிதை

பத்தாண்டுகளுக்கு முன்பு

சூரியனுக்கு முந்தி
நாலு முப்பதுக்கே
சுறுசுறுப்பாய் எழும்.

தீப்பொறிகள் தெறிக்க
நெருப்பில் கருவிகள் செய்யும்
பூமாரியின் குடும்பம்.

கழணி தண்ணி
வீடு வீடாய் சேகரித்து
புண்ணாக்கு கரைத்து
அம்பாரமாய் வைக்கோல் கொணர்ந்து
கறவை மாடுகளோடு வாழும்
பால்வாடை கமழும்
பல குடும்பங்கள்.

சாணி சேகரித்து
வட்ட வட்டமாய் - அழகாய்
எரு தட்டி பிணம் எரிக்க
சுடுகாட்டுக்கு விற்கும்
பாலா குடும்பம்.

அம்பது பைசாவிற்கு
ஆவி பறக்க இட்லி விற்கும்
பார்வதியம்மாள்.

திறந்தவெளி தொழிற்சாலை
எங்கள் தெரு.

ஒரு காம்பவுண்டிற்குள் பத்து வீடுகள்.
கொழம்பிலிருந்து சீம்பால் வரை
பரிமாறி கொள்ளப்படும்.

பூட்டுக்களைப் பார்த்ததில்லை
வீட்டின் கதவுகள்.
களவு எப்பொழுதும் போனதில்லை.

உழைப்பில் ஈடுபடுகிற அழகான மனிதர்கள்.
நாகரிக மனிதர்கள் வர தயங்கும்
'அசுத்தமான' தெரு.

இப்பொழுது

சோம்பலாய் ஏழு மணிக்கு எழுகிறது.
எழுந்ததும் நிறுத்திய வண்டி நிற்கிறதா
சரிபார்க்கிறார்கள்.

காம்பவுண்டு வீடுகளை
கந்து வட்டி குடும்பங்கள் கையகப்படுத்தி
மாடி வீடுகளாய் மாறிப்போனது.
ஆளுயர கேட் முன்நிற்கிறது.
தாண்டினால் நாய் இரைகிறது.

அழைப்பு மணி அழுத்தினால்
திருடனா?
சரி பார்த்தபின்பு
கதவு திறக்கப்படுகிறது.

தீப்பொறிகள் பறப்பதில்லை.
மாடுகள் வழிமறிப்பதில்லை.
எரு நினைவில் மட்டும் நிற்கிறது.
ஆவி பறக்கும் இட்லி இல்லை.
செம்மண் சாலை போய்
தார் சாலையாகிப் போனது.

பூமாரி, பாலா - என
எல்லா குடும்பங்களும்
சிதறடிக்கப்பட்டுவிட்டன.
ஒப்புக்குக்கூட புன்னகைக்க மறுக்கிறார்கள்
புதிய மனிதர்கள்.
உழைக்க மறுக்கும் அவலமான மனிதர்கள்.
நாகரிக மனிதர்கள்
வர விரும்பும்
'அழகான தெரு'.

தெருவில் நுழையும்பொழுதெல்லாம்
எண்ணம் எழுகிறது.
'சுத்தமான தெரு'வுக்கு பதிலாக
'அசுத்தமான தெரு'வாகவே இருந்திருக்கலாம்.


பின்குறிப்பு - நகரத்தில் பிறந்து, நகரத்தில் வளர்ந்தேன். எங்கள் வீடு என சொல்வதனால்
எங்கள் தெருதான் எங்கள் வீடாய் இருந்தது

Apr 4, 2007

குழந்தைகள் - கவிதை


மகிழ்ச்சியெனில்
மத்தாப்பாய் சிரிக்கிற
துன்பமெனில்
அடைமழையாய்
கொட்டித்தீர்க்கிற
மழலை மனசு வேண்டும்.

அம்மாவின் அதட்டல்களை மீறி
புழுதிப் பறக்க
தெருவில் விளையாடி
தூக்கம் வெறுக்கிற
பிள்ளையின் சுறுசுறுப்பு வேண்டும்.

கோபமெனில் - உடனே
சண்டை பிடிக்கிற
மறுநிமிடம் மறந்து கூடுகிற
பிள்ளையின் மறதி வேண்டும்.

புதிய பொருளெனில்
விழிகள் விரிய
வியந்து பார்க்கும்
குடைந்து குடைந்து
ஆயிரம் கேள்விகள் கேட்கும்
பிள்ளையின் ஞானம் வேண்டும்.

இறந்த கால நினைவுகளில்
எதிர்கால திட்டங்களில்
நிகழ்காலத்தை தொலைக்காத
பிள்ளையின் வாழ்வு வேண்டும்.

குழந்தைகளை நேசிக்காத
சமூகம்
தற்கொலையின் விளிம்பில்.

குழந்தைகளிடமிருந்து - முதலில்
கற்றுக்கொள்வோம்.
சாதி, மதம்,
சடங்கு குப்பைகளை - பிறகு
கற்றுக்கொடுப்போம்.

- சாக்ரடீஸ்

Apr 2, 2007

பெருநகரமும் செல்பேசியும்!


பல உறவுகள்
செல்லில்
எண்களாக வாழ்கிறார்கள்.
சிலர்
குரல்களாக மட்டும்.

எங்கிருக்கிறாய்?
எப்பொழுது வருவாய்?
பொண்டாட்டிகள்
தொல்லை செய்கிறார்கள்.

பேசிக்கொண்டே
சாகசமாய்
வாகனம் ஓட்டுகிறார்கள்.
ரயில் கிராஸிங்கில்
செத்தும் போகிறார்கள்.

'அதிகம் பேசுங்கள்'
ஆஃபர் தரும்பொழுதெல்லாம்
அறுவைக்காரர்கள்
அழ வைக்கிறார்கள்.

முன்பெல்லாம்
தனியாய் பேசுபவர்களை
காணமுடியும்.
இப்பொழுது கண்டுபிடிக்க
முடிவதில்லை.

03.04.2007 - காலை 11.25

உனக்கும் எனக்கும் - கவிதை


அவசர அவசியமாய் தின்று
ஓடியாடி உழைத்து
உடல் களைத்துப் போகையில்
இரவு உனக்காய் படுக்கை விரித்துவிடும்.
பதினைந்து நாட்களிலேயே
பற்றாக்குறை கடன்களை பெற்றெடுக்கும்.

பொய்கள் சொல்லி பொருட்கள் விற்று
ஆசை ஆசையாய் வாங்கி ஏமாந்து
சக மனிதன் மீது நம்பிக்கை இழக்கையில்
உள்ளம் கனத்துப் போகும்.

காதலாய் பழகியவர்களிடம் நட்பை வலுப்படுத்தி
நட்பாய் பழகியவர்களிடம் காதலை வெளிப்படுத்தி
இறுதியில்
முகமறியா நபருடன் வாழ்க்கை பயணிக்கும்.

ஓடுகிற ஓட்டத்தில்
ஆபூர்வமாய் திரும்பி பார்க்கையில்
வெறுமை நிலவி கண்கள் பனிக்கும்.

உனக்கும் எனக்கும் வித்தியாசமில்லை.

நீ ஏழு வயதில்
கண்ணாடி அணிந்திருப்பாய்.
நான் இருபத்தேழு வயதில்.

உன் அப்பா ஆலையிலிருந்து
ஏழு நாட்களுக்கு முன்
வெளியேற்றப்பட்டிருப்பார்.
என் அப்பா
ஏழு ஆண்டுகளுக்குமுன்.

உனக்கும் எனக்கும் வித்தியாசம்
உருவத்தில் மட்டுமே!
உள்ளடக்கத்தில் ஒன்றாய்.

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
உன் கனவில் கவிபாரதி வந்திருப்பான்,
வேறு வார்த்தைகள் கொண்டு
என் கனவில் பாரதிதாசன்.

ஆளுக்கொரு சாதி சொல்லி
தனித்தனியாய் கனவுகள் கண்டு
இத்தனை காலம்
சிங்கங்களுக்கும் நரிகளுக்கும்
இரையாகிப்போனோம்.

கரங்களை ஒண்றிணைப்போம்.
கனவுகளுக்கு ஆக்கம் கொடுப்போம்.
பணிவதைவிட நிமிர்வது உயர்வானது.

- சாக்ரடீஸ்

Mar 28, 2007

நீ வருவாய் என!

சத்தங்களை வடிகட்டி
நுட்பமாய்
உன் கொலுசு இசையை
பதிவு செய்திருக்கின்றன
என் காதுகள்.

சலனங்களைத் தவிர்த்து
கவனமாய்
உன் ஒவ்வொரு அசைவையும்
படம் பிடித்திருக்கின்றன
என் கண்கள்.

உன் மெளனத்தைக்கூட
மொழி பெயர்க்க
கற்றிருக்கிறது
என் மனசு.

நீயில்லாத நாள்களால்
வெற்றுத்தாள்களாய்
நகருகிறது
என் நாட்குறிப்பு.

கனவுகளில் மட்டும்
தாலாட்டிப் போகிறாய்.

முளரி மொட்டு
என் கவிதைகள்
பால் நிலா
நாட்குறிப்பு - எல்லாம்
என்னோடு
உன் வருகைக்காக
காத்திருக்கின்றன.

எப்பொழுது வருகிறாய்
இங்கு
நிஜத்தில் நீ - சாக்ரடீசு.