Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Sep 25, 2018

The Post - பத்திரிக்கை சுதந்திரம்

1960-களில் அமெரிக்கா வியட்நாம் மீது ஆக்கிரமிப்பு போர் செய்து கொண்டிருந்தது. வியட்நாமிய போராளிகள் கொரில்லா போர் செய்து அமெரிக்க ராணுவத்தினரை சிதறடித்துக் கொண்டிருந்தார்கள்.

உச்சக்கட்ட போர் சமயத்தில் 60 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இறந்தும் காணாமலும் போயினர். அமெரிக்க அரசோ கெத்தாக போரில் முன்னேறி கொண்டிருப்பதாக கதை விட்டுக் கொண்டிருந்தது.

இராணுவ ஆய்வாளர் ஒருவர் உலகுக்கு உண்மையை சொல்ல நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு ஆதாரம் அளிக்கிறார். இதழில் வெளியானதும் நாடே கொந்தளிக்கிறது. அமெரிக்க அரசு ஆடிப்போய்விடுகிறது!

'நியூயார்க் டைம்ஸ்'க்கு போட்டி பத்திரிக்கையான 'வாஷிங்டன் போஸ்ட்' மேலும் வியட்நாமிய போர் தொடர்பான செய்திகளை தேடுகிறது. கண்டுபிடித்தும் விடுகிறது.

இதற்கிடையில் வாஷிங்டன் போஸ்ட் பொருளாதாரத்தில் தள்ளாடுகிறது. பொதுமக்களிடம் பங்குகளை வெளியிட்டு, தன்னைப் பலப்படுத்திக் கொள்ளலாம் என முடிவு செய்கிறது.

இதே சமயத்தில் நியூயார்க் டைம்ஸில் ஆதாரம் வெளியானதை ஒட்டி, அமெரிக்க அரசு சுதாரித்து மேற்கொண்டு ஆதாரங்களை வெளியிடக்கூடாது என நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கி விடுகிறது.

கிடைத்த ஆதாரங்களை, தடையை மீறி வெளியிட்டால், வாஷிங்டன் போஸ்ட் இதழை இழுத்து மூடவேண்டி இருக்கும். பத்திரிகை ஆசிரியரும், அதன் மேலாண் இயக்குநரும் நிச்சயமாய் கைது செய்யப்படுவார்கள்.

அதனால் பத்திரிக்கையில் வெளியிட மற்ற இயக்குனர்கள் மறுக்கிறார்கள்.

எல்லாவற்றையும் மீறி மக்களுக்கு வாஷிங்டன் போஸ்ட் உண்மையை சொன்னார்களா என்பது முழு நீளக்கதை!
****

இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கு இரண்டு முகங்கள். ஜாஸ், ஜுராசிக் பார்க் , இண்டியனா ஜோன்ஸ் என ஒரு முகம். இன்னொரு முகம் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட், அமிஸ்டாட், தி போஸ்ட்.

படத்தில் பத்திரிக்கை ஆசிரியராக வரும் டாம் ஹாங்க்ஸ், முதலாளியாக வரும் மெரில் ஸ்டிரிப் என எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

சிறந்த திரைப்படம், இயக்குனர், நடிகர், நடிகை, திரைக்கதை, இசை என ஆறு வகைகளில் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

அமெரிக்கா உலகம் முழுவதிலும் போர் என்ற பெயரில் பல உயிர்களை கொன்று குவித்துள்ளது. வியட்நாமில் தோற்றுப் போவோம் என தெரிந்தே பல ஆயிரம் தனது சொந்த நாட்டு இளைஞர்களையே பலிகொடுத்தது.

படத்தில் ஒரு இடத்தில் சொல்லப்படும் செய்தி.

ஊடகம் ஆளப்படுகிறவர்களுக்கு தான் சேவை செய்ய வேண்டும். ஆள்பவருக்கு அல்ல!

இந்திய நிலைமைகளில் இதை யோசித்துப் பார்த்தால்... நிலைமை மிக மோசமாக இருக்கிறது. ஊடகங்கள் பச்சையாக மிரட்டப்படுகின்றன. நேர்மையான பத்திரிகையாளர்கள் வேலையில் இருந்து தூக்கி எறியப்படுகிறார்கள். மிக நெருக்கடியான கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

அவசியமான படம்! பாருங்கள்!

- குருத்து

Sep 14, 2018

உலகம் இரண்டு: சிறையும் இரண்டு!


நேற்று புழல் சிறையில் தண்டனை கைதிகளுக்கு நிறைய வண்ண தொலைக்காட்சிகள், வசதியான சொகுசு படுக்கை, வாய்க்கு ருசியான வகை வகையான சாப்பாடு என நிறைய படங்கள் வெளியாகியிருக்கின்றன. அதிர்ச்சி அடைந்தது போல ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

2009ல் லஞ்ச ஒழிப்புத்துறை மதியம் சிறையை சோதனை செய்ய அனுமதி கேட்ட பொழுது வேண்டுமென்றே அரை மணி நேரத்திற்கும் மேலாக இழுத்தடித்து தான் உள்ளே அனுமதித்தார்கள். அதற்கு பிறகும், துணை ஜெயிலர் அறையிலேயே 21 ஆபாச சிடிக்கள் கிடைத்தன. நான்கு கைதிகளின் அறையில் கேபிள் டிவி இணைப்புடன் தொலைக்காட்சிகள் இருந்திருக்கின்றன. இதையெல்லாம் அந்த அரை மணி நேரத்தில் அவர்களால் ஒளித்து வைக்கமுடியவில்லை.

இந்த சோதனைக்கு முதல்வாரம் தான் துறை வாரியான சோதனையின் பொழுதே... 30க்கும் மேற்பட்ட செல்போன்கள், 2 பென்டிரைவர்கள், 12 கிலோ கஞ்சா சிக்கியிருந்தன

வருடங்கள் உருண்டோட எல்லாமும் வளர்கின்றன.

1950களில் கம்யூனிஸ்டு கட்சி தடை செய்யப்பட்டு அரசால் கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப்பட்ட காலம். சி.. பாலன் தனது சிறைவாழ்க்கையை#தூக்குமர நிழலில்என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
சிறைக்குள் ஐந்நூறு பீடிகளைக் கடத்திக்கொண்டு வந்துவிட்டால், அவற்றின் சொந்தக்காரனால், பல காரியங்களைச் சாதிக்கமுடியும். ஏனென்றால், சிறைச்சாலைக்குள் பண்டம் பரிவர்த்தனைக்காகப் பயன்படுத்தப்படும் நாணயம் பீடிதான். அன்று கோயமுத்தூர் ஜெயிலில் நிலவிய விலைவாசிப் புள்ளி விவரங்கள் கீழே தரப்படுகின்றன.

8 அவுன்ஸ் பால்                          - 4 பீடி
4 அவுன்ஸ் மாமிசம்                  - 5 பீடி
6 அவுன்ஸ் சோற்றுப்பட்டை - 6 பீடி
10 அவுன்ஸ்
நல்லெண்ணெய்                          - 4 பீடி
ஒரு மேல் சட்டையும்
ஒரு கால்சட்டையும்                – 25 பீடி

சிறையில் எளியவனுக்கு எந்த வசதியும் இல்லை. அவர்களின் குடும்பம் வாங்கிச் செல்கிற ஒரு ப்ரெட் பாக்கெட்டையோ, ஒரு பிரிட்டானியா பிஸ்கெட் பாக்கெட்டையோ போலீசுகாரர்கள் பிதுக்கி பிதுக்கி பார்த்து நொந்து போக வைப்பார்கள்.

உலகம் ஏற்றத்தாழ்வுகளால் நிரம்பி வழிந்து, இரண்டு உலகமாக இயங்கும் பொழுது, சிறை மட்டும் ஒன்றாகவா இயங்கும்!

- குருத்து


Sep 6, 2018

தூறல் நின்னுப் போச்சு (1982) - சில குறிப்புகள்

கடந்த வாரத்தில் கே தொலைக்காட்சியில் பார்த்தேன். எப்பொழுதும் எந்த காட்சி பார்த்தாலும், படத்தின் இறுதிவரை நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும் வசீகரம் கொண்டது! பாக்யராஜின் முதன்மையான படங்களில் இது முக்கியமான படம்.

2563 இருக்கைககள் கொண்ட ஆசியாவின் பிரமாண்டமான முதல் திரையரங்கான மதுரை தங்கம் திரையரங்கில் உலகம் சுற்றும் வாலிபனுக்கு பிறகு அரங்கு நிறைந்த காட்சிகளாக நூறு நாட்கள் ஓடிய படம்!

படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, தெலுங்கிலும், இந்தியிலும் கூட எடுத்தார்கள். அந்தந்த மொழி, கலாச்சாரத்திற்கு ஏற்ப சின்ன சின்ன மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். என்னென்ன என்று கவனித்தால் சுவாரசியமாக இருக்கிறது. தெலுங்கில் விஜயசாந்தி நடித்திருக்கிறார். இந்தியில் அனில் கபூர் நடித்திருக்கிறார். தமிழில் நாயகியின் அப்பா சாகிறார் அல்லவா! தெலுங்கில் நாயகியை அரளி விதையை சாப்பிட வைத்து, பிழைக்க வைத்திருக்கிறார்கள். இந்தியில் நம்பியார் பாத்திரத்தில் 'சோலே' அம்ஜத்கான், கத்திக் குத்தை வாங்கிகொள்கிறார். 
இந்த படத்தின் பாதிப்பில் இன்றைக்கு வரைக்கும் படம் எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அப்பாஸ் – சிம்ரன் நடித்த “பூச்சூடவா” படத்தை உற்றுப் பாருங்கள். தூ. நி. போச்சு படம் தான் என பளிச்சென தெரியும். செந்தாமரை கதாபாத்திரத்தை கிரிஷ் கார்னட் செய்திருப்பார். இப்பொழுது சசிக்குமார் மீண்டும் எடுக்கப்போவதாக சொல்கிறார்கள்.

செந்தாமரையும், நம்பியாரும் அருமையாக செய்திருப்பார்கள். செந்திலுக்கு இந்தப்படம் தான் திருப்புமுனை என்கிறார்கள்.

ஏற்பாடு திருமணத்தில் வரதட்சணை பேசுவது ஒரு வியாபாரம் பேசுவது போல மிக கறாராக பேசுவார்கள். இந்த படத்தில் அதை சரியாக காட்டியிருப்பார்கள். படத்தில் இறுதியில் ஆணாதிக்கத்தை நன்றாகவே சாடியிருப்பார்கள். அதையெல்லாம் கேட்டு திருந்துவார்களா என்பது தான் எனக்கு ஆச்சர்யம்.

ஆறெல்லாம் வறண்டு, ஆற்று மணலை எல்லாம் அரசே முன்நின்று சூறையாடிய வேளையில், ஆற்றுக்கு தண்ணீர் எடுக்க போவது போல இப்பொழுது காட்சி வைக்க முடியுமா?

படத்தின் பலத்தில் இளையராஜாவும் ஒருவர். எல்லா பாடல்களும் இனிமையானவை. பின்ணனி இசையும் அசத்தியிருப்பார்.

படத்தலைப்புகளை ரெம்பவும் பாந்தமாக, மங்களகரமாக பெயரிடுவார்கள். ”தூறல் நின்னுப் போச்சு” என நெகட்டிவாக தைரியமாகவே வைத்திருக்கிறார் பாக்யராஜ்!

Jun 13, 2018

இயக்குநர் மகேந்திரனின் நண்டு (1981)

உத்திரப்பிரதேசத்தில் நம்மூர் ஜமீன் குடும்பம் போல‌ ஒரு பணக்கார குடும்பம். நான் சொன்ன பொண்ணத்தான் கட்டணும்னு அப்பா அதிகாரமாய் சொல்ல, சுதந்திர சிந்தனை உள்ள நாயகன் வீட்டை விட்டு வெளியேறி நாயகன் சென்னைக்கு இன்ஜினியர் வேலைக்கு வருகிறார்.

சென்னையில் லைன் வீட்டில் குடியேறுகிறார். அங்கிருக்கும் குடும்பங்களில் நாயகியும் குடும்பமும் ஒன்று. கூடுதலாக நாயகி, நாயகன் அலுவலகத்திலேயே வேலை செய்கிறார்.

சிறுவயதிலிருந்தே நாயகன் ஆஸ்துமாவில் மிகுவும் சிரமப்படுகிறார். நாயகியின் குடும்பம் அவரை அக்கறையுடன் பார்த்துகொள்கிறது.

அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் காதுபடவே தப்பாக பேசுகிறார்கள். இந்த களேபரத்தில் நாயகன் விருப்பம் தெரிவித்து நாயகியை திருமணம் செய்துகொள்கிறார்.

நாயகனின் குடும்பம் அவர்களது திருமணத்தை ஏற்றுக்கொண்டதா? அவர்களுடைய வாழ்வில் மிகப்பெரிய அதிர்ச்சியை எதிர்கொள்ள நேரிடுகிறது. அது என்ன என்பது மீதி முழு நீளக்கதை!

****

'அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா', 'மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே', 'Kaise kahoon' - இந்தி பாடல் - இந்த படத்தின் மூன்று பிடித்த‌ பாடல்களையும் அவ்வப்பொழுது கேட்பதுண்டு! அதற்காகவே இந்தப் படத்தை பார்க்கவேண்டும் என நினைத்தேன். இளையராஜாவின் இசை படத்திற்கு பெரும்பலம். சிவசங்கரி எழுதிய நாவலை மகேந்திரன் படமாக்கியிருக்கிறார்.

படத்தில் வரும் எல்லா சிறு கதாபாத்திரங்கள் கூட மனதில் நிற்பது சிறப்பு. லயன் வீடுகளில் வரும் பாத்ரூம், தண்ணீர் பிரச்சனை, புறணி, வீட்டு சொந்தக்காரர் செய்யும் தொந்தரவுகள், ஒருவருக்கொருவர் அனுசரணையாக நடந்துகொள்வது என நன்றாக பதிவு செய்திருக்கிறார்.

சாதி மறுத்து செய்யப்படும் திருமணங்களில் பெரிய இடைஞ்சலாய் பெரும்பாலும் நிற்பது சம்பந்தகாரர்கள் தான். அதையும் நன்றாக பதிவு செய்திருக்கிறார்.

படத்தின் இறுதியில் சொல்லப்படும் அந்த 'செய்திக்காக'வா இப்படி ஒரு அதிர்ச்சி முடிவு!

நாயகன் சுரேஷின் பெயர் ராம் பிரசாத்.  நாயகி அஸ்வினியின் பெயர் சீதா.   இதில் ஏதும் காரணம் உள்ளதா என தெரியவில்லை

May 3, 2018

"நாட்டில இவ்வளவு செய்ய வேண்டியிருக்காப்பா?"

மே தின பேரணிக்கு போய் திரும்பும் வழியில் ஆறாம் வகுப்பு படிக்கும் என் பெண்ணிடம் பேசிக்கொண்டே வந்தேன்.

நாம் போராடி நாம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து... நீ முக்கிய பொறுப்புக்கு வந்தால்.. முதலில் என்ன செய்வாய்?

"பிச்சைகாரர்களுக்கு எல்லாம் வேலை கொடுப்பேன்!"

இதை தொடரலாமே என கேட்க துவங்கினேன்.

#மாணவர்களுக்கு?"

"எல்லோருக்கும் இலவச கல்வி கொடுப்பேன்"

"படிக்காத பசங்கள பார்த்திருக்கிறாயா?"

"இங்க பார்த்ததில்லை. கிராமத்தில் படிக்காம இருப்பாங்கல்ல! எல்லோரும் படிக்கனும்ல!"

#பெண்களுக்கு?"

"எல்லா இடத்திலும் சுத்தமான கழிவறைகள் கட்டுவேன்"

#விவசாயிகளுக்கு?"

"எங்கு எங்கு எவ்வளவு விளைவிக்க வேண்டுமென திட்டத்தை கொடுப்பேன்"

#குழந்தைகளுக்கு?"

"எல்லா குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கொடுப்பேன்" 


(பா. ஜனதா ஆட்சியை நன்றாக புரிந்திருக்கிறாள்!)

#இளைஞர்களுக்கு?"

"எல்லோருக்கும் வேலை கொடுப்பேன்"

#மீனவர்களுக்கு?"

"மீனவர்களுக்கு உரிய நேரத்தில் வானிலை தகவல் தருவேன்"

(ஒக்கி புயல் பாதிப்பு!)

திடீரென கொஞ்சம் நிறுத்தி....

"நாட்டில இவ்வளவு செய்ய வேண்டியிருக்காப்பா?"

- என்றாள் ஆச்சர்யமாய்!

பிறகு நான் கேட்பதை நிறுத்திவிட்டேன்.

"எல்லோருக்கும் இலவசமா மருத்துவம் கொடுக்கனும்!"

"வீடு இல்லாதவங்களுக்கு வீடு கட்டித்தரனும்!"

இன்னும் சொல்லிக்கொண்டே வந்தாள்!

அது முடிகிற பட்டியலா அது?

#நீ சீக்கிரம் வளர்ந்து களத்துக்கு வா தாயி!

Feb 20, 2018

பிச்சைக்காரர்

சென்னை மாநகராட்சியின்
எல்லையில் உள்ளது
எங்கள் நகர்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு 
அது ஒரு எளிமையான 
கெங்கை அம்மன் கோவில்!

பக்தர்களிடம் வசூல் செய்து
உட்புறத்தில்
முருகன், பிள்ளையார்  அவதரித்தனர்!

பிரார்த்தனை செய்பவர்கள் அதிகரித்ததும்
அய்யர் தோன்றினார்.
இன்னும் அதிகமானதும்
இன்னொரு அய்யரும் ஐக்கியமானார்.

கடவுள் நம்பிக்கையுள்ள 
என் அத்தையிடம்
புதிதாய் விரதநாட்கள் முளைத்தன!

பிரதோஷம், கிருத்திகை என
சிறப்பு பூஜைகள்
தவறாமல் நடைபெற்றன!
மார்கழி முழுவதும்
காலையில் பக்தி பாடல்கள் ஒலித்தன!


கடவுளுக்கு 
அசையும் சொத்துக்கள்
அசையா சொத்துக்கள் அதிகமானதும்
பதினைந்து அடிக்கு சுற்றுப்புற சுவர் எழும்பியது!
நல்ல கனமான இரும்பு கேட் வந்தது!
பெரிதாய் பூட்டும் தோன்றியது

பூக்கடை வந்தது!
விபூதி, குங்குமம்,
பூஜை பொருட்கள் விற்க 
கடையும்  வந்து சேர்ந்தது!

அன்னதானம் போடும் பொழுது
பக்தர்கள் அலைமோதினார்கள்.


எல்லாம் இருந்தாலும்
ஏதோ ஒன்று குறைவது போல
மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது!


இன்று வெள்ளிக்கிழமை.
வாசலில் செருப்புகள் 
நிறைய இருந்தன.
தை மாத குளிரில்
கண்கள் உள்ளடங்கி
ஒரு வயதானவர்
பக்தர்களிடம் இரஞ்சி கொண்டிருந்தார்.

'முழுமை' பெற்றது போல இருந்தது
கோவில்!

படம் உபயம் : இணையம்

குருத்து