Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts

Mar 23, 2015

பாலியல் பலாத்காரத்தை நிரூபிக்க நான்கு ஆண்கள் சாட்சியம் சொல்லவேண்டும்!




Rehana_jabbari
சமீபத்தில் உலக அளவிலும், இந்திய அளவிலும் நிகழ்ந்த பெண் சம்பந்தமான மூன்று நிகழ்வுகள் கவனிக்கத்தக்கவை

ஈரானைச் சார்ந்த ரெஹனா ஜாப்பரி என்ற 19 வயது இளம்பெண். தன்னை பாலியல் பலாத்காரம் செய்யவந்த பெண் பித்தனான முன்னாள் உளவுத்துறை உயரதிகாரியிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள போராடியபொழுது, அவன் செத்துபோனான்.  அரசோ “சதிகாரி, கொலைகாரி” என வழக்கை ஜோடித்து, 26வயதில் தூக்கிலேற்றி கொன்றுவிட்டார்கள்.  இறப்பதற்கு முன்பு தன் அம்மாவுக்கு பேசிய “நல்லதொரு நெறிக்காக ஒருவர் தன்னுடைய உயிரைக் கொடுத்தாவது பாடுபட வேண்டும் என்று சொல்லியிருந்தாயே அம்மா! அதைத்தானே செய்தேன்” என்று பேசுகிற ஒலிநாடா உரை உலகமெங்கும் பலரையும் உலுக்கிகொண்டிருக்கிறது 

சவுதி அரேபியாவில் ஒரு பெண் சந்தர்ப்ப சூழ்நிலையில் காரில் ஒருவனிடம் லிப்ட் கேட்க, அவன் தனது பொறுக்கி நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டான்.  அதனால் கர்ப்பமான அந்த பெண், கலைக்க முயன்று முடியாது போனதால், அரசுக்கு தெரியவந்தது. அவர்களின் சட்ட நடைமுறைப்படி தனக்கு நேர்ந்த துயரத்தை அந்த பெண் நிரூபிக்க வேண்டுமென்றால் நான்கு ஆண்கள் சாட்சி சொல்லவேண்டுமாம். அப்படி ’சாட்சிகளை’ வைத்து நிரூபிக்க தவறினால் அதற்கும் தண்டனை உண்டாம்.  இப்பொழுது அந்த பெண்ணுக்கு தகாத உறவால் வந்த கர்ப்பம் என ’கண்டுபிடித்து’ ஒரு ஆண்டு சிறைதண்டனையும், 100 கசையடிகள் என தீர்ப்பளித்தனர்.  தண்டனையை குழந்தை பிறப்பிற்கு பிறகு நிறைவேற்றலாம் என ‘கருணை’ காட்டியுள்ளனர் இஸ்லாமிய மதவெறி நீதியரசர்கள்.

சர்வதேச சூழ்நிலையில் பெண்களின் நிலை  இப்படி இருக்கிறது என்றால், இந்திய நிலையோ அதை விட மோசமாக இருக்கிறது.

தில்லி  மருத்துவகல்லூரி மாணவியை கொடூரமாக ஒரு பொறுக்கி கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி, நடுத்தெருவில் அலட்சியமாக தூக்கி எறிந்துபோனதும், பிறகு நினைவு திரும்பாமலேயே இறந்துபோனதும் என்றென்றைக்கும் நம் மனதைவிட்டு அகலாதவை.  இப்பொழுது, அந்த பெண்ணை பற்றி, “இந்தியாவின் மகள்” என பிபிசி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.  அதில் மரணதண்டனை பெற்ற குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ்சிங் "ஒரு கை ஓசை எழுப்ப முடியாது. இரண்டு கைகளும் சேர்ந்து தட்டினால்தான் ஓசை வரும். நாகரிகமான இளம்பெண் இரவு 9மணிக்கு வெளியில் சுற்றிக் கொண்டிருக்கமாட்டாள். எனவேதான் பலாத்கார விஷயத்தில் ஆணை விட பெண்ணுக்கே அதிக பொறுப்புள்ளது என்கிறேன். ஆணும் பெண்ணும் சமம் அல்லர். வீட்டுவேலைகள், வீட்டைப் பராமரிப்பதுதான் பெண்களின் வேலை. அரைகுறை ஆடை அணிந்துகொண்டு டிஸ்கோக்களுக்கும் பார்களுக்கும் இரவு நேரங்களில் சென்று தவறான செயல்களில் ஈடுபடுவது பெண்களின் வேலை இல்லை. வெறும் 20 சதவீத பெண்கள்தான் நல்லவர்களாக இருக்கின்றனர்.  

அந்த பெண்ணும், அவரது நண்பரும் எங்களை திருப்பி தாக்காமல் இருந்திருந்தால் நாங்கள் தாக்கியிருக்கமாட்டோம்.  நாங்கள் பாலியல் பலாத்காரம் செய்தபொழுது அமைதியாக அனுமதித்திருக்கவேண்டும். அனுமதித்திருந்தால் அவர்கள் தாக்கப்பட்டு இருக்கமாட்டார்கள். மேலும் எங்களை இந்த வழக்கில் தூக்கில் போட்டால், எதிர்காலத்தில் பலாத்காரத்தால் பாதிக்கப்படும் பெண்களுக்குதான் அதிக ஆபத்து ஏற்படும். மரண தண்டனைப் பெண்களுக்கு பிரச்சினையை மேலும் பயங்கரமாக்கி விடும். இதற்கு முன்பெல்லாம் பலாத்காரம் நடந்த போது அதில் ஈடுபட்டவர்கள், ‘அவளை விட்டுவிடு.. வெளியில் யாரிடமும் சொல்ல மாட்டாள்என்பார்கள். இனிமேல் பலாத்காரம் செய்தால், சம்பந்தப்பட்ட பெண்ணைக் கொன்று விடுவார்கள் என வக்கிரமாக பேட்டியளித்திருக்கிறான்.

முகேஷ்சிங் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடிய வழக்குரைஞர் ஏ.பி. சிங்கோ "என் மகளோ சகோதரியோ திருமணத்துக்கு முன்பு இதுபோல் வேறு ஒரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்தால், பண்ணை வீட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்திருப்பேன்" என திமிராக பேட்டியளித்திருக்கிறார்.

ஏற்கனவே நிலவுடைமை ஆணாதிக்க பண்பாடு  மேலோங்கி நிற்கும் நமது சமூகத்தில், ஏகாதிபத்திய பண்பாட்டு சீரழிவு இணையும் பொழுது, கள்குடித்த குரங்காகிவிடுகிறது. குற்றவாளி முகேஷ்சிங்கும், வழக்குரைஞரும் இருவரும் இந்த சமூகத்தின் வகைமாதிரிகள்.  இந்த பின்னணியில் தான்,  இந்தியாவில் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை குறிப்பாக ஒடுக்கப்பட்ட, தலித் பெண்கள் மீது பாலியல் வல்லுறவு செய்யப்படுகிறார்கள். மாற்றுச் சாதியைச் சேர்ந்த இளைஞனை காதலித்த ”குற்றத்திற்கான” தண்டனையாக கிராம பஞ்சாயத்து மூலம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யும் ”தண்டனையை” நிகழ்த்துகிறார்கள்.

காவல்நிலையங்களில் பாலியல் குற்றங்களை பதிவு செய்யாமலே இழுத்தடிக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளுடன் இணைந்துகொண்டு, மிரட்டுகிறார்கள்.  பெண்கள் விடுதலை முன்னணி நடத்திவரும் சென்னை வால்டாக்ஸ் ஜெயஸ்ரீ வழக்கே அதற்கு ஆதாரம்.
குடிமக்களை காக்கவேண்டிய நிலவுகிற அரசோ, மேலும் மேலும் சமூக விரோதமாகிவருகிறது. ஆளும் வர்க்கம் ஆளுகிற தகுதியை இழந்துவிட்டது. இந்த அரசமைப்பை  தூக்கியெறிந்து, அதிகாரத்தை பெரும்பான்மை உழைக்கும் மக்களே கையில் எடுக்கும் காலம் வந்துவிட்டது!  சமூகத்தில் சரிபாதி பெண்களான நாம் அமைப்பாகாமல் சாத்தியமில்லை! நம் உரிமைகளை மீட்பதும் சாத்தியமில்லை! அதனால் அமைப்பாவோம்! போராட்டங்களை கட்டியமைப்போம்! நமது உரிமைகளை மீட்டெடுப்போம்!

Dec 20, 2014

இனியொரு ஜெயஸ்ரீ உருவாகிவிடக்கூடாது அக்கா!



ஜெயஸ்ரீ

அன்று சகதோழர் ஒருவர் மூலமாக செய்தி அறிந்து, மருத்துவமனைக்கு சென்ற பொழுது, ஜெயஸ்ரீயின் உடல் மார்ச்சுவரியில் இருந்தது.  காதுகளில் காயம், இரு கைகளிலும் இறுக்கமாய் கட்டப்பட்டிருந்த கயிறால் தடமாய் பதிந்திருந்தன.  உடல் முழுவதுமே அங்காங்கே காயங்கள். பாலியல் வெறிபிடித்த மிருகங்கள் அந்த பெண்ணை மோசமாக குதறியிருந்தார்கள்.  அந்த பெண்ணின் அக்கா “பிறப்புறுப்பையே சிதைந்திருந்தார்கள்” என  அழுதுகொண்டே சொன்ன பொழுது, என்னையறியாமல் கண்ணீர் வந்துகொண்டேயிருந்தது. அதற்கு பிறகு ஒரு நிமிடம் கூட அங்கு நிற்கமுடியவில்லை.
****

ஜெயஸ்ரீ. 21 வயது. கலகலப்பான பெண். எல்லோரிடமும் சகஜமாக பேசக்கூடிய பெண். சென்னை பாரிஸ், யானை கவுனி அருகே ஒரு சிறு பட்டறையில் வேலை செய்திருக்கிறாள்.  ஆணுக்கு நிகராய் அத்தனை வேலைகளையும் செய்யக்கூடியவள்.

காதல் என்ற வலையில் வீழ்த்தி அந்த பெண்ணை சென்னையை விட்டு வெளியூருக்கு அழைத்துபோயிருக்கிறான் ஒருவன்.  ஆனால், அங்கே பல வெறிபிடித்த மிருகங்கள் பல நாட்கள் அந்த இளம்பெண்ணை சிதைத்திருக்கிறார்கள்.

சாலை மறியலின் பொழுது
காணாமல் போன நாளிலிருந்து காவல்துறையிடம் தொடர்ந்து முறையிட்டிருக்கிறார்கள். காவல்துறையோ மிக அலட்சியமாகவும், மெத்தனமாகவும், அதிகாரத்திமிருடனும் நடந்திருக்கிறார்கள்.  கள்ளக்குறிச்சியில் தனியாக ஜெயஸ்ரீ நின்று கொண்டிருப்பதாகவும், அழைத்து செல்ல ஒருவர்  தகவல் சொல்லும் பொழுதும், அங்கு போய் இரு காவல்துறையினர் அழைத்து வந்த பொழுதும் எந்த விசாரணையும் விரிவாக மேற்கொள்ளவில்லை. அரை மயக்கநிலையில் ஜெயஸ்ரீயை அழைத்து வந்த பிறகும், அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்த்தால், ஊடகங்களில் செய்தி வந்து மானம் போய்விடும் என தனியார் மருத்துவனைக்கு அழைத்து செல்ல தவறாக வழிகாட்டியிருக்கிறார்கள். இரண்டாம் நாள் மிகவும் சீரியசாகி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்துவிட்டது. உறவினர்களும், பொதுமக்களும் சாலை மறியல் உட்பட பலவழிகளில் போராடியதால் தான், பல்வேறு இழுத்தடிப்புக்கு பிறகு வழக்கையே பதிவு செய்திருக்கிறார்கள். காவல்துறையின் அத்தனை நடவடிக்கைகளிலும் குற்றவாளிகள் யாரென்று தெரிந்து தப்பவிடுவதற்காக செயல்பட்டது பச்சையாக தெரிந்தது.

ஒரு பெண். ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்தவள். ஏழைப் பெண் என்றால் இத்தனை இளக்காராமா? எந்த ஓட்டுக் கட்சியும், தலித்களுக்காக போராடக்கூடிய தலித் அமைப்புகளும் எட்டிக்கூட பார்க்கவில்லை.

பெண்கள் விடுதலை முன்னணி தோழர்களும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சார்ந்த தோழர்களும் பாதிக்கப்பட்டவர்களோடு நின்று உறுதியாக போராடவில்லையென்றால், ஜெயஸ்ரீ காதல் தோல்வியில் தற்கொலை செய்துகொண்டாள் என்று சத்தமேயில்லாமல் முடித்திருப்பார்கள்.

பாலியல் வன்கொடுமை பற்றி பேசும்பொழுதெல்லாம் சட்டங்களை கடுமையாக்கவேண்டும் என்ற குரல்கள் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன. சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே குற்றவாளிகளை பாதுகாக்குகிற வேலைகளை செய்யும் பொழுது சட்டங்களை கடுமையாக்கி என்ன செய்ய?
****
புகைப்படத்தில் இருக்கும் ஜெயஸ்ரீயின் மலர்ந்த புன்னகையும், மார்ச்சுவரியில் ரணமாக இருந்த சலனமற்ற உடலும் “மீண்டும் ஒரு ஜெயஸ்ரீயை உருவாக்க விட்டு விடாதீர்கள் அக்கா” என மீண்டும் மீண்டும் அவளின் குரல் நினைவலைகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது!
****

Aug 5, 2014

பெண் நீதிபதிக்கே இந்த கதி!



தில்லி பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு பிறகு, நாடு முழுவதும் போராட்டங்களும் அதை தொடர்ந்து விவாதங்களும் நடைபெற்றன! கடுமையான சட்டங்கள் கூட இயற்றப்பட்டன.  ஆனால், சம்பவங்கள் குறைந்தபாடில்லை.  இதோ, குவாலியரில் பெண்கள் பாலியல் பிரச்சனையை விசாரிக்கும் விசாகா கமிட்டிக்கு பொறுப்பான பெண் நீதிபதியே பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டு, பணியை ராஜினாமாவும் செய்துள்ளார். 
****

மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக மாவட்டக் கூடுதல் நீதிமன்ற பெண் நீதிபதி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்ற நீதிபதி அளித்த பாலியல் துன்புறுத்தல் காரணமாக தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அவர் பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதாவுக்கு, அவர் அனுப்பியுள்ள புகார் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

குவாலியர் நீதித்துறை நிர்வாகத்தை கவனிக்கும் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி, எனது பணியின் மீது அதிக ஆர்வம் காட்டினார். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நீதித்துறை அதிகாரி ஒருவரின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன்.

அப்போது எனது மகள் முன்னிலையில் என்னைப் பற்றி அநாகரீகமான முறையில் பேசினார்மேலும், நீதித்துறை அதிகாரி ஒருவரின் மனைவி தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு, திரைப்படப் பாடல் இசைக்கு நான் நடனமாட வேண்டும் என்றும், அதைக் காண உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்வத்துடன் இருக்கிறார் என்றும் தெரிவித்தார். என்னை தனிமையில் தனது பங்களாவுக்கு வந்து சந்திக்கும்படி நீதிபதி தெரிவித்தார்.

ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதியின் விருப்பத்துக்கு நான் அடிபணியவில்லை. இதனால் குவாலியரில் இருந்து சித்திக்கு என்னை அந்த நீதிபதி இடமாற்றம் செய்ய வைத்தார்.

இதுதொடர்பாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்திக்க முயன்றும், என்னால் முடியவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதியை நான் தொடர்பு கொண்டபோது, எனக்கு அவர் மிரட்டல் விடுத்தார்.

எனவே வேறு வழியின்றி கடந்த மாதம் 7ஆம் தேதி பதவியை ராஜிநாமா செய்து விட்டேன். இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி உண்மை நிலையை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பெண் நீதிபதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

லோதா கருத்து: இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லோதா, பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், "இது மிகவும் முக்கியமான விவகாரம் ஆகும். இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பு கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படும்' என்றார்.

பொதுநல வழக்கு: இந்நிலையில், பெண் நீதிபதியால் குற்றம்சாட்டப்பட்ட மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எஃப்..ஆர்.) பதிவு செய்யவும், இதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும், உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் மனோகர் லால் சர்மா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதேபோல், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் தலைமையில் பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதியை உயர் நீதிமன்றம் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

குற்றச்சாட்டு நிரூபணமானால் தண்டனைக்குத் தயார்: உயர்நீதிமன்ற நீதிபதி
 
பெண் நீதிபதி தெரிவித்துள்ள குற்றச்சாட்டு நிரூபணமானால் தூக்கு தண்டனையை ஏற்கவும் தயார் என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அந்த மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. இது குறித்து சிபிஐ அல்லது எந்த அமைப்பின் விசாரணையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதம், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியால், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமணி, 05/08/2014