Showing posts with label பண்பாடு. Show all posts
Showing posts with label பண்பாடு. Show all posts

Jun 19, 2018

Eight below (2006) மரண போராட்டம்!



எங்கு பார்த்தாலும் உறைபனி சூழ்ந்திருக்கும் அண்டார்டிகா மலைப் பிரதேசம். அங்கு ஆராய்ச்சிக்கு வருபவர்களுக்கு, ஜெரி உதவுகிற வேலை. அங்கு போய்வர வண்டி எதுவும் பயன்படுத்த முடியாத நிலை. ஆகையால், ஜெரியால் பயிற்சி கொடுக்கப்பட்ட, சுறுசுறுப்பான எட்டு நாட்கள் போய்வர உதவுகின்றன.

மெர்க்குரியிலிருந்து விழுந்த கல்லைத்தேடி, ஆய்வுக்கு வருகிறார் ஒரு விஞ்ஞானி. காலநிலை சரியில்லை என ஜெரி தயங்குகிறான்.. நிர்வாகம் அழுத்தத்தால், வேறு வழியில்லாமல் அரைகுறை மனதோடு அழைத்து செல்கிறான். அந்த பயணத்தின் பொழுதே, புயல் வந்து கொண்டிருப்பதாகவும் உடனே திரும்பும்படியும் உத்தரவிடுகிறார்கள்.. ரிஸ்க் எடுக்காமல் எதுவுமில்லை என ஜெரியிடம் பேசி, அரைநாளில் கல்லைத் தேடி எடுத்துவிடுகிறார். இந்த பயணத்தில் இரண்டுமுறை விஞ்ஞானியின் உயிரை, ஜெரியும், நாய்களும் காப்பாற்றுகிறார்கள். தட்டுத்தடுமாறி வந்து சேருகிறார்கள். புயல் நெருங்கிவிட, அங்கிருந்த அத்தனை பேரையும் அழைத்துக்கொண்டு செல்ல விமானம் தயாராய் நிற்கிறது. நாய்களுக்கு விமானத்தில் இப்பொழுது இடமில்லை. பிறகு வந்து கூப்பிட்டுக்கொள்ளலாம் என ஆறுதல் சொல்கிறார்கள். நாய்களோடு தானும் அங்கிருப்பதாக சொல்கிறான். அது உயிருக்கு ஆபத்து என அவனை அழைத்து செல்கிறார்கள்.

இதுவரை வராத புயல் இப்பொழுது தாக்க, காலநிலை மிக மோசமடைகிறது. நாய்களை அழைத்துவர விமானம் கேட்கிறான். போய்வருவதற்கு சாத்தியமேயில்லை என சொல்லிவிடுகிறார்கள். நாய்களை காப்பாற்ற முடியாத குற்ற உணர்ச்சியில் நிம்மதியில்லாமல் அலைகிறான். மீட்டு வர பல்வேறு வகைகளில் முயன்றும். எதுவும் பலனனிக்க வில்லை. நாட்கள் மெல்ல மெல்ல நகருகின்றன. அந்த உறைபனி குளிரில், புயலில் நாய்கள் வாழ்வதற்காக போராடுகின்றன. 

அந்த நாய்கள் உயிர் பிழைத்தனவா? ஜெரி நாய்களை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி பெற்றானா என்பது மீதி முழுநீள கதை!

***
பாதிப்படத்திற்கு மேலாக பனிப்பிரதேசத்தில் தான். நம்மால் அந்த கடுங்குளிரை உணரமுடிகிறது. அந்த குளிரில் நாய்களின் உழைப்பு, போராட்டம் என மொத்த படத்தையும் அந்த எட்டு நாய்கள் தாங்கி நிற்கின்றன. ஜெரிக்கு அந்த நாய்களுடான பிணைப்பையும் அருமையாக நம்மால் உணரமுடிகிறது. 

அவர்கள் விட்டு சென்ற பிறகு, வீசும் காற்றில் அவர்களின் கொடி அறுந்து கீழே விழும். ஒரு நாய் ஓடி சென்று, அதை கடித்து குதறும். "உங்களுக்காக நாயா உழைச்சமே, அந்த நன்றி உணர்வு கொஞ்சம் கூட உங்களுக்கு இல்லையேன்னு!" சொல்வது போல தோன்றும்.

சிறு வயதில் பக்கத்துவீட்டில் ராணி என்றொரு அருமையான நாய் ஒன்று இருந்தது. என் மொத்த வாழ்விலும் அதோடு மட்டும் தான் எனக்கு நெருக்கம் இருந்ததாக உணர்கிறேன். மற்றபடி, நாய்கள் என்றால் எப்பொழுது எனக்கு பயம் உண்டு. காரணம். கடித்தால், வயிற்றைச்சுட்டி 16 ஊசி போடவேண்டும் என சுற்றி உள்ளவர்கள் எப்பொழுதும் பயமுறுத்திக்கொண்டே இருந்திருக்கிறார்கள். நமக்கு ஊசின்னா ரெம்ப பயம். 

எங்கள் வீட்டில் எப்பொழுதும் நாய் வளர்த்ததில்லை. அம்மாவிடம் ஆவலாய் எப்போதாவது சொன்னால், உங்களை வளர்க்கிறதே பெரும்பாடா இருக்கு! இதில் நாய் வேற! என்பார்.

இந்தப்படத்தைப் பற்றி நாய் வளர்ப்பவர்கள் எழுதியிருந்தால் இன்னும் உணர்வுபூர்வமாக எழுதியிருப்பார்கள் என நம்புகிறேன்.

இது உண்மையில் நடந்த கதை என்கிறார்கள். 1983-ல் அண்டார்டிகா என்ற பெயரில் ஜப்பானிய படம் ஒன்று வந்திருக்கிறது. அதுவும் இணையத்தில் கிடைக்கிறது. மற்றபடி அந்த படத்தில் இறுதியில் உயிரோடிருந்த நாய்களின் எண்ணிக்கையும், இந்த படத்தில் உயிரோடிருந்த நாய்களின் எண்ணிக்கையும் வித்தியாசப்படுகிறது.

நான் தமிழில் பார்த்தேன். குழந்தைகளோடு பார்க்ககூடிய படம். பாருங்கள்.

குருத்து

Feb 20, 2018

பிச்சைக்காரர்

சென்னை மாநகராட்சியின்
எல்லையில் உள்ளது
எங்கள் நகர்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு 
அது ஒரு எளிமையான 
கெங்கை அம்மன் கோவில்!

பக்தர்களிடம் வசூல் செய்து
உட்புறத்தில்
முருகன், பிள்ளையார்  அவதரித்தனர்!

பிரார்த்தனை செய்பவர்கள் அதிகரித்ததும்
அய்யர் தோன்றினார்.
இன்னும் அதிகமானதும்
இன்னொரு அய்யரும் ஐக்கியமானார்.

கடவுள் நம்பிக்கையுள்ள 
என் அத்தையிடம்
புதிதாய் விரதநாட்கள் முளைத்தன!

பிரதோஷம், கிருத்திகை என
சிறப்பு பூஜைகள்
தவறாமல் நடைபெற்றன!
மார்கழி முழுவதும்
காலையில் பக்தி பாடல்கள் ஒலித்தன!


கடவுளுக்கு 
அசையும் சொத்துக்கள்
அசையா சொத்துக்கள் அதிகமானதும்
பதினைந்து அடிக்கு சுற்றுப்புற சுவர் எழும்பியது!
நல்ல கனமான இரும்பு கேட் வந்தது!
பெரிதாய் பூட்டும் தோன்றியது

பூக்கடை வந்தது!
விபூதி, குங்குமம்,
பூஜை பொருட்கள் விற்க 
கடையும்  வந்து சேர்ந்தது!

அன்னதானம் போடும் பொழுது
பக்தர்கள் அலைமோதினார்கள்.


எல்லாம் இருந்தாலும்
ஏதோ ஒன்று குறைவது போல
மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது!


இன்று வெள்ளிக்கிழமை.
வாசலில் செருப்புகள் 
நிறைய இருந்தன.
தை மாத குளிரில்
கண்கள் உள்ளடங்கி
ஒரு வயதானவர்
பக்தர்களிடம் இரஞ்சி கொண்டிருந்தார்.

'முழுமை' பெற்றது போல இருந்தது
கோவில்!

படம் உபயம் : இணையம்

குருத்து

Feb 9, 2018

சர்க்கஸ்

”சனங்களைக் குஷிப்படுத்தி கைதட்டலைப் பெறத்தான் நீங்க சாகசம் செய்றீங்க, காசுக்காக அல்ல! அதனால ஆட்கள் நூற்றுக்கணக்கில் வந்தாலும் சரி, கொஞ்ச பேர் வந்தாலும் சரி, எப்போதும் அருமையாக செய்யனும்”


* பெண் சர்க்கஸ் கலைஞர் தன் பிள்ளைகளிடம்!!

சிறுவயதில் சர்க்கஸ் பார்க்க அத்தனை ஆர்வமாக இருக்கும். சிங்கம், புலி, யானை, குதிரை என மிருகங்களைப் பார்க்கவே உற்சாகமாக சர்க்கஸ் போவோம்.

மிருகங்களை பயன்படுத்தக்கூடாது என்ற தடைக்கு பிறகு வண்ண வண்ண கிளிகளை, நாய்களை பயன்படுத்தினார்கள். இப்பொழுதும் அவைகளுக்கும் தடை போட்டுவிட்டார்கள். எதுவும் இல்லை.

சுதந்திரத்திற்காக சிந்திக்கிற, செயல்படுகிற நாம் விலங்களையும். பறவைகளையும் கூண்டுக்குள் அடைத்து வைத்து வித்தை காட்ட வைப்பது அபத்தம் தான்!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, என் பெண்ணுக்காக சர்க்கஸ் போயிருந்தேன். பார்த்த சர்க்கஸை என் பெண் மறந்துவிட்டபடியால், சமீபத்தில் ஜம்போ சர்க்கஸ் (சென்னை மூர் மார்க்கெட் அருகே ) போயிருந்தோம்.

முழுக்க மனிதர்களின் சாகசம் தான். 40 அடி உயரத்தில் பறந்த படி சாகசம், நீளத்துணியினால் ஒரு ஜோடி அந்தரத்தில் ஸ்டைலான சாகசம் என ஐந்தாறு வகைகள் மிக அருமையாக இருந்தன.


ஜோக்கர்கள் எப்பொழுதும் போரடிக்காமல் பார்த்துகொள்வார்கள். இப்பொழுதோ ஜோக்கர்களே ரெம்பவும் போரடிக்கிறார்கள்.

மற்றபடி, சர்க்கஸ் கலைஞர்கள் வண்ண வண்ண உடைகளில் பளபளப்பாக வந்தாலும், சர்க்கஸ் கலை வளரவில்லை என்பது அதன் வடிவத்திலேயே தெரிகிறது. செய்த சாகசங்களே செய்யப்படுகின்றன. அதே டெண்ட் கொட்டாய் தான். புழுதியில் தான் சேர்கள் போட்டிருக்கிறார்கள். முன்பெல்லாம் காலரி போடப்பட்டிருக்கும். கொஞ்சம் வசதியாக இருக்கும்.

கலைஞர்கள் முகத்தில் மலர்ச்சி இல்லாமல், ஒருவித இறுக்கத்துடன் தான் இருக்கிறார்கள். கனமான வெயிட்டை தூக்கி சாகசம் செய்த ஒரு கறுப்பின கலைஞன் கைதட்டை கேட்டு கேட்டு வெயிட்டை தூக்கி சாகசம் செய்தார். மார்கழி மாதத்திலும் அத்தனை வியர்வை!

சமீபத்தில் ஒரு சீனப் பெண்களின் ஐந்து நிமிட சர்க்கஸ் பார்த்தேன். அத்தனை துல்லியம். முகத்தில் மகிழ்ச்சி. பார்க்கவே அத்தனை சந்தோசமாக இருந்தது!
ஒருவேளை அரசு ஏதும் மானியம் கொடுத்தால் இந்த கலையை இன்னும் கொஞ்ச காலம் காப்பாற்றலாம். அரசு செய்யுமா? எல்லா பொறுப்புகளையும் கழட்டிவிட நினைக்கும் இந்த அரசு செய்ய வாய்ப்பேயில்லை.

மற்றபடி, புதிது, புதிதாய் இந்த மண்ணில் பிறக்கும், விழிகள் விரித்து ஆச்சர்யமாய் பார்க்கும் குழந்தைகள் தான் சர்க்கஸ் கலையை இன்னும் வாழவைக்கிறவர்கள் என சொல்லலாம்!
குருத்து

Dec 11, 2017

பருத்திப்பாலும் போலீசுகாரரும்!


பருத்திப்பால்.  மதுரை சிறப்புகளில் ஒன்று. பிரியா திரையரங்கு வாசலிலும், நடனா திரையங்கு (இப்பொழுது இல்லை) போகிற வழியிலும் இருவரும் விற்றுக்கொண்டிருப்பார்கள்.  அந்த பக்கம் போகும் பொழுதெல்லாம் தவறாமல் குடிப்பதுண்டு.
பருத்திவிதை, அரிசிமாவு, (மண்டை) வெல்லம், தேங்காய், ஏலக்காய், - கலவையில் அருமையாக இருக்கும்.  உடம்பு சூட்டை குறைக்கவல்லது. வயிற்றுப்புண்ணுக்கு நல்லது.
சென்னையில் அம்பத்தூரில் ஒரு பெரியவரும், பாடி பிரிட்டானியா அருகே ஒரு பெரியவரும் பருத்திப்பால் விற்றுவருகிறார்கள். எப்பொழுதும் இரண்டு, மூன்று பேர் குடித்துக்கொண்டிருப்பார்கள். தேநீர் குடித்து சோர்வானவர்கள் பருத்திப்பால் அருந்தி பாருங்கள். தொடர்ந்து அருந்துவீர்கள்.  

அது சரி! பருத்திப்பாலுக்கும் போலீசுகாரருக்கும் என்ன சம்பந்தம்?

பருத்திப்பால்காரரிடம் இன்னொருவர் பேசிக்கொண்டிருந்தார். 
”பைக்கில் வரும் போலீசு பெட்ரோலுக்கு அரசாங்கம் கொடுக்கிற காசு பத்தலையாம்.  அதனால், மாசம் 200 ரூபாய் மாமூல் கேட்டாங்க!”
“எங்க பகுதியில் மாசம் 300ரூபாய். நீங்க 200 ரூபாய் தான் தர்றீங்க! பரவாயில்லையே” என்று குறுக்கிட்டு சொன்னேன்..  
”அட போங்க தம்பி!  போகும் பொழுதும், வரும் பொழுதும், ஒரு நாளைக்கு மூணு, நாலு கப் (ஒருகப் 10ரூ) ஓசியில்ல குடிச்சுட்டு போயிராங்க.  கணக்குப்பார்த்தா அதுவே மாதம் ரூ. 1000’ வந்துரும்” என்றார்.
பெருகிவரும் குற்றங்களை குறைப்பதற்காகவும், மக்களுக்கும் காவல் துறைக்குமான ’இடைவெளியை’ குறைக்கிறதுக்கு தான் இவர்கள் என்று பீட் ஆபிசர்களை அறிமுகப்படுத்தும் பொழுது ரெம்ப கெத்தா சொன்னாங்க!
பார்த்தா பெட்ரோலுக்கு காசில்லைன்னு வியாபாரிகள் கிட்ட போலீசு பிச்சை எடுக்குதுக!  நமக்கு என்ன கவலைன்னா, நம்ம முதல்வர் எடப்பாடியும், துணைமுதல்வர் ஓபிஎஸ்யும் ரெம்ப மானஸ்தவர்கள் ஆச்சே!  மக்களுக்கு சேவை செய்ய, பெட்ரோலுக்கு காசில்லாம நம்ம போலீசு இப்படி மக்கள்கிட்டேயே பிச்சை எடுக்கிறது தெரிஞ்சா, நாண்டுகிட்டு செத்துறவாங்களேன்னு தான்!

Oct 21, 2017

தீப ஒளி : பலகாரங்கள் இனிப்பதில்லை!

ஐந்து குழந்தைகளுடன்
எப்பொழுதும்
பற்றாக்குறைகளுடன்
போராடும் அம்மாவுக்கு
பண்டிகை வந்தாலே பதட்டமாகிவிடும்!


பொறுப்பை தட்டிகழிக்கும் அப்பாவோ
"எல்லாவற்றையும்
துணைவியார் பார்த்துக்கொள்வாள்!" என
நழுவிக்கொள்வார்.

வாராவாரம் சிறுக சிறுக சேமித்து
கட்டிய பண்டுதான்
பலகாரங்களுக்கு பொருட்கள் தரும்!

குறைந்தபட்ச வட்டி கடனில்
சொசைட்டி தான் அனைவருக்கும்
துணி வழங்கும்!

தைக்க, இதர செலவுகளுக்கு
வட்டிக்கு வாங்கும் கடன் தான் சமாளிக்கும்!

எங்கு சென்றாலும்
அம்மாவுக்கு கடைக்குட்டி
நான் தான் துணை!

அம்மா எதிர்கொள்ளும் - அத்தனை
சங்கடங்களுக்கும்
சிரமங்களுக்கும்
கண்ணீருக்கும்
நானே மெளன சாட்சி!

பண்டிகையில் செய்யப்படும்
இனிப்புகள்
எப்போதும் அம்மாவிற்கு
இனிப்பதேயில்லை!
அம்மாவிடம் பட்டாசு கேட்க
வாய் வருவதேயில்லை

- குருத்து

Mar 20, 2017

பூனைகள்

திடீரென தெருவில் தோன்றிய
பெரியபூனை, குட்டிப்பூனை இரண்டும்
பத்து நாட்களாக வீடு தேடி அலைகின்றன!

ஆபத்து காலத்தில்
எங்க முருங்கை மரத்தில்
ஏறிக்கொள்கிறது குட்டிப்பூனை!
எதனுடனோ சண்டை போட்டு
உடம்பெல்லாம் காயம்.
முனகலோடு சுற்றிவருகிறது
பெரியபூனை!

வாடகை, காற்றோட்டம், நீர்
வீட்டுக்காரர் என எல்லாம்
பொருந்தி வருவது
வரன் அமைவது போல
வீடு அமைவது மனிதர்களுக்கே
ஆக சிரமமான காரியம்!

வீட்டில் செல்லப்பிராணிகள்
வளர்த்ததில்லை
உங்களுக்கு சோறுபோடுவதே
பெரிய விசயம்டா என்பார் அம்மா.

அடைக்கலம் கொடுக்கலாம் என்றால்
வீட்டில் உள்ளவர்களுக்கோ
பூனை அலர்ஜி!
மீறி சேர்த்தால்
நானும் பூனைகளுடன்
தெருவில் சுற்றவேண்டியிருக்கும்

நிம்மதில்லாத பூனைகளுடன்
என் நினைவுகளும்
அலைந்துகொண்டேயிருக்கின்றன.

தொடர்ந்து பிரேக்கிங் நியூஸ் பார்ப்பதால்
சின்னம்மாவிடம் பூனைகளை தரலாம்
என தோன்றுகிறது!
பேச்சுத்துணைக்கு ஆகும்!

Mar 5, 2017

விலையில்லா மின்விசிறி!

தரும் பொழுது பெட்டியில்
கெத்தாக தான் தந்தார்கள்.
எல்லா பாகங்களும் உள்ளே
தனித்தனியாக கிடந்தன.
மூன்றுமாதம் கிடப்பில் போட்டு - பிறகு
எலக்ட்ரிசன் உயிர் தந்தார்.

தொட்டா சிணுங்கி போல
அடிக்கடி சொணங்கி படுத்துக்கொள்ளும்!
மருத்துவருக்கு பீஸ் அழுதால் மீண்டும் ஓடும்!

மூலையில் கிடந்ததை பார்க்கும் பொழுதெல்லாம்
ரத்த அழுத்தம் எகிறும்!
ஜெ. செத்த பிறகு ...
தூக்கி எறிந்துவிடலாம் என முடிவு செய்தேன்.
எலக்ட்ரிசன், காயிலான் கடைக்காரர் இருவருமே
ஒற்றுமையாய் ரூ. 50 என்றன‌ர்.
விலையில்லா விசிறிக்கு
பணம் தருவது எவ்வளவு பெருந்தன்மை!
வாங்கிகொண்டு திரும்பி பார்க்காமல் வந்துவிட்டேன்!

Dec 20, 2016

கையெழுத்திட்டால் நேர்மையாக நடந்துகொள்ளவேண்டும்! - ஒரு கடிதம்


சென்னை மாநகராட்சிக்கு ஒரு பெற்றோரின் கடிதம்!


அனுப்புநர்

இலக்கியா,
5ம் வகுப்பு,
xxxx பள்ளி,
சென்னை

பெறுநர்

தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அவர்கள்,
xxxx பள்ளி,
சென்னை
       
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம். சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களிடம் சுய உறுதிமொழி படிவம் ஒன்றை தந்து, மாணவர்களும், பெற்றோர்களும் வீட்டிலும், பொது இடங்களிலும் உள்ள சமுதாய கழிவறையை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என கையெழுத்திட சொல்லி உறுதிமொழி கேட்டிருக்கிறது.

சென்னை மாநகராட்சி நடத்திவரும் மாநகராட்சி பள்ளிகளில் சென்னையில் 10 மண்டலத்தில் 57 பள்ளிகள் இயங்கிவருகின்றன. தமிழக அரசாணை எண் : 270ன் படி , 20 மாணவர்களுக்கு ஒரு சிறுநீர் கழிப்பறை, 50 மாணவர்களுக்கு ஒரு மலக்கழிப்பறை, கழிப்பறைகள் தண்ணீர் வசதியுடன் இருக்கவேண்டும்

ஆனால், 57 பள்ளிகளில் பல பள்ளிகளில் சிறுநீர் கழிப்பறைகள் இல்லை. மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப மல கழிப்பறைகள் இல்லாமல், மிக மிக குறைந்த அளவே உள்ளன. அதே போல தண்ணீர் வசதியும் போதுமானதாக இல்லை. ஒரு பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருந்தாலும்  ஒரே ஒரு துப்புரவு பணியாளர் மட்டுமே உள்ளார்.

உதாரணமாக சைதாப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மேல்நிலை பள்ளியில், 1500 மாணவர்கள் படிக்கின்றனர். சிறுநீர் கழிப்பறை ஒன்று கூட இல்லை.  மலக்கழிப்பறை 8 மட்டுமே உள்ளன.  துப்புரவு பணியாளர் ஒருவர் மட்டுமே.

இது தொடர்பாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாணவர்களை திரட்டி போராடியதன் விளைவாக, மாநகரட்சி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்து, பள்ளி வாரியாக அறிக்கையை தயார் செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசாணையின்படி பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என  மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு (எண் : W.P.11666/2014) தொடுத்தது.  நீதிமன்றமும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு அடிப்படை வசதிகளை செய்து தர உத்தரவு போட்டது. மாநகரட்சியோ கடந்த இரண்டு ஆண்டுகளாக உயர்நீதிமன்றத்தில் பல தவணைகளை கேட்டு, பள்ளிகளில் ஆமை வேகத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொண்டிருக்கிறது.

சென்னை மாநகராட்சியின் நேரடி கண்காணிப்பில் உள்ள  மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கே இந்த கதி என்றால், பொது இடங்களில் பெரும்பாலான இடங்களில் கழிப்பறை வசதி பற்றி சொல்லவே தேவையில்லை. ஒன்றரை கோடி பேர் வாழும் சென்னையில் பல பொது இடங்களில் கழிப்பறை வசதியே இல்லை. அப்படியே ஒன்றிரண்டு இருந்தாலும் முறையான பராமரிப்பு இல்லாமல் தான் இருக்கிறது.  இதனால் பொதுமக்கள் பலவித சிரமங்களுக்கு ஆளாகிறார்கள்.

ஆகையால், சென்னை மாநகரட்சி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் கழிப்பறை வசதிகளை ஏற்பாடு செய்து தந்துவிட்டு இப்படி கையெழுத்து கேட்பது தான் நேர்மையானது என கருதுகிறோம். இந்த படிவத்தில் கையெழுத்து போட்டால் அதற்கு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் ஆனால் அதை கடைப்பிடிக்க முடியாத அளவுக்கு சமூக சூழ்நிலை நிலவுவதால் கையெழுத்து இட முடியாத நிலையில் இருக்கிறோம். இந்த கடிதத்தை மாநகராட்சிக்கும் அனுப்பிவைக்கும்படி பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி.

இப்படிக்கு,

பெற்றோர்.

Sep 6, 2016

நிதானமில்லாத குடிமகனும் நிதானமான அரசும்!



இரவு 8.30 மணி. வில்லிவாக்கத்தில் உள்ள பிரதான சாலையில் ஒரு பேருந்து பின்புறம் வந்துகொண்டிருந்தேன். திடீரென பேருந்தில் இருந்து பார்சல் போல ஏதோ ஒன்று விழுந்தது. இருட்டில் தெளிவாக தெரியவில்லை. சில விநாடிகளில் அருகில் போய் பார்த்தால் ஒரு மனிதர் குப்புற விழுந்து கிடக்கிறார். பேருந்தில் இருந்து விழுந்தது கூடவா பேருந்தில் உள்ள யாருக்கும் தெரியாது!

விழுந்த சில விநாடிகளில் என்னைப் போலவே இன்னும் இருவர் அருகில் வர அவரை சோதித்தால் டாஸ்மாக் வாடை குப்பென்று அடித்தது. கொஞ்சம் வயிறு ஏறி இறங்குவது தெரிந்தது. இன்னும் உயிர் இருக்கிறது. ஒருவர் 108க்கு போன் அடித்து விவரத்தை சொன்னார். ஒருவர் தண்ணீர் பாட்டில் வாங்கி வந்து முகத்தில் இரண்டு மூன்றுமுறை அடிக்க, மலங்க மலங்க விழித்தார். அவர் எப்படி விழுந்தார் என யாரும் பார்த்திருக்கவில்லை. அவரிடம் கேட்டால், போதையும், விபத்தும் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் பதில் சொல்லமுடியவில்லை. பேருந்தில் இருந்து விழுந்ததை அங்கிருப்பவர்களுக்கு சொன்னேன்.

சில நிமிடங்களில் அங்கு கடந்து போன போலீஸ் ஜீப்பிலிருந்து ஒரு போலீசு இறங்கி வந்து, விவரத்தை கேட்டு, யாருக்கோ தகவல் சொன்னார். இன்னும் சில நிமிடங்கள் கழித்து ஆம்புலன்ஸ் வந்தது!

விழுந்த சில நிமிடங்களில் எங்களுடன் நின்றிந்த ஒருவர் “எதிரில் கடை அருகே நாலைந்து பேர் நின்றிருந்தாலும், வந்து உதவவில்லையே என மிகவும் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். சில நிமிடங்கள் கழித்து அந்த ஆட்கள் அருகில் வந்து ஒரு சலம்பிக்கொண்டிருந்தனர். எல்லோரும் போதை.

ஒருவர் போதையிலிருந்தால் அவர் இயல்பு மீறி செய்கிற எல்லா செய்கைகளும் நமக்கு எரிச்சலை தருகின்றன. அன்றைக்கு ஒரு நாள் இரவு 10.30 மணியிருக்கும். உடுமலைப் பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பி 15 நிமிடம் ஆகிவிட்டது. நடத்துநர் அந்த நல்ல போதையிலிருந்த 45 வயது குடிமகனிடம் பயணச்சீட்டுக்கான பணம் கேட்கும் பொழுது அவரிடம் பணம் மிக குறைவாக இருந்தது. எந்தவித யோசனையும் செய்யாமல் இதுதான் நீங்க இறங்க வேண்டிய இடம் என அந்தகார இருட்டில் இறக்கிவிட்டு போய்க்கொண்டேயிருந்தார்கள்.

இப்படி ‘குடி’மகன்களிடம் கோபப்படும், புறக்கணிக்கும் நாம், வீடுகளுக்கு, வழிப்பாட்டு தலங்களுக்கு அருகே, மக்கள் கூடுமிடங்களுக்கு அருகே கடைகளை வைத்து தொல்லை தரும் அரசிடம் கோபப்படுகிறமோ என்றால் இல்லை. நிதானமாக இருந்துகொண்டு குடிமகன்களையும், அவர்களுடைய குடும்பங்களை சீரழிப்பவர்களான அரசும் மீதும், ஆளும்கட்சிகாரர்கள் மீதும் மீது கோபம் வருவதை தடுப்பது எது?

10 பேர் நண்பர்கள். அத்தனை பேரும் குடித்தால் கூட நீ ஒழுங்காக இருக்கவேண்டும் என நினைத்தால் குடிக்காமல் இருக்கலாம் என என் அம்மா வாதாடுவார். காற்றே நச்சாக இருக்கும் பொழுது, எப்படி நல்ல காத்து சுவாசிப்பது என்பேன். எங்க அம்மாவை போலவே பலரும் சிந்திப்பார்கள் போல!

 (படங்கள் இணையத்திலிருந்து எடுத்தது)

Jul 30, 2016

அலைஸ் & ஜேம்ஸ் (2016) - அன்பை வெளிப்படுத்து!


ஜேம்ஸ் ஒரு ஓவியன். விளம்பர படங்கள் எடுத்துவருகிறார். அலைஸை (Alice) காதலிக்கிறார். நிரந்தர வருமானம் இல்லை என பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க காதலர்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

எட்டு ஆண்டுகள். ஐந்து வயது பெண் குழந்தை ஒன்று. இப்பொழுது அலைஸ் வங்கியில் பணிபுரிகிறார். ஜேம்ஸ் சின்ன சின்ன விளம்பர படங்கள் எடுத்து எப்பொழுதும் நிதி பற்றாக்குறையுடன், நிம்மதியில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறார். தன்னையும், குழந்தையும் கண்டுகொள்ளாமல் வாழ்கிறார் என கணவர் மீது நிறைய வருத்தம். இருவருடைய பரபர வாழ்க்கையும் மனக்கசப்பை தருகிறது.

இடையில் இரண்டு மாரடைப்புக்கு பிறகு அலைஸின் அப்பா சமாதான தூதனுப்புகிறார். அலைஸையும், குழந்தையையும் போய் பொறுப்பாக விட்டுவிட்டு, வீட்டிற்குள் வர மறுத்து வேலை விசயமாக வெளிமாநிலம் செல்கிறார். இரண்டு நாள்கள் கழித்து திரும்பி வந்து பார்க்கும் பொழுது, அலைஸின் அப்பா இறந்துபோகிறார். அலைஸின் வருத்தம் இப்பொழுது கோபமாகிவிடுகிறது.

ஜேம்ஸோடு வாழ பிடிக்காமல் விவாகரத்து வழக்கு தொடர்கிறார். ஒரு கார்விபத்தில் ஜேம்ஸ் சிக்கில் கோமாவில் படுத்துவிடுகிறார். அவருடைய உயிரை எடுத்துசெல்ல வரும் தூதன், போகிற வழியில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாய் இல்லாமல், எப்பொழுதும் தொழில், தொழில் என பதற்றத்துடன் சுற்றுவது, அலைஸின் அப்பாவுடன் பேசி அவரை சந்தோசப்படுத்தியிருக்கலாம் ஜேம்ஸ் தவறுகளை சுட்டிக்காட்டுகிறார்.

இதற்கிடையில் ஜேம்ஸின் தோழி அலைஸிடம் அவன் பெற்றோர் இல்லாமல் தனியாக வாழ்ந்தவன். அவனுடைய உலகம் ரெம்ப சின்னது. அதில் நீயும், உன் மகளும் தான் இருக்கிறீர்கள். அவன் எழுந்து வரும் பொழுது அவனை மன்னித்துவிடு! என்கிறார். அவனுடைய ஓவியக்கூடத்தில் அலைஸின் அப்பாவை வரைந்து வைத்திருக்கிறான். அலைஸ் மெல்ல மெல்ல ஜேம்ஸை புரிந்துகொள்கிறார்.

மீண்டும் வாழ விரும்புகிறேன் என ஜேம்ஸ் தூதனிடம் வேண்டி நிற்க, இது உனக்கு இரண்டாவது இன்னிங்ஸ். இனியாவது வாழ்க்கையை வாழ்! என வாழ்த்திவிட்டு போய்விடுகிறார்.

அலைஸ், ஜேம்ஸ் மீண்டும் தங்களை பரஸ்பரம் புரிந்துகொண்டு வாழ்க்கையை தொடர்கின்றனர். சுபம். :)

*****

5 ஸ்டார் என்ற தமிழ்ப்படத்தில் அப்பாவாக வரும் விஜயன் பிள்ளையை மிகுந்த கண்டிப்புடன் வளர்ப்பார். தனது தங்கை பெண்ணை திருமணமும் செய்து, ஊருக்கு பேருந்து ஏற்றிவிடும் பொழுது, “காலேஜை முடிச்சுட்டு வா! நீ ஒரு புது அப்பனை பார்ப்ப!” என்பார். ஆனால் அந்த பையன் திரும்ப வரவேமாட்டான். சென்னையிலிருந்து தலைமறைவாகி, ஜெர்மனிக்கு போய் அங்கு ஒரு பெண்ணை திருமணம் முடித்துவிட்டு செட்டிலாயிடுவான். தங்கை பெண்ணின் வாழ்க்கையை சீரழித்துவிட்டோமே என எண்ணி அந்த அப்பா தற்கொலை செய்துகொள்வார்.

இரண்டு படத்திலும் சொல்லப்படும் நீதி “அன்பை வெளிப்படுத்து” என்பது தான்! ஜேம்ஸ்க்கும் தன் குடும்பத்தின் மீது அத்தனை அன்பு உண்டு. ஆனால், எப்பொழுதும் வெளிக்காட்டுவதேயில்லை. அதை படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், பர பர வாழ்க்கைக்கு என்ன காரணம்? என்பதை படம் எங்கும் அலசவேயில்லை. அதிலும் உள்ளே போய் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். நிறைய நுகர்வு, சொந்த வீடு, அடுத்தடுத்து சொத்து என்ற ஓடுகிற ஓட்டத்தில் கணவன், மனைவி இருவரும் தனியாக இருக்கும் பொழுது கூட இதைப்பற்றித்தான் பேசுகிறார்கள். பாதுகாப்பின்மை குறித்து கவலைப்படுகிறார்கள். பரஸ்பரம் கோபம் கொள்கிறார்கள்.

சமூகத்தில் சுற்றியிருப்பவர்களின் நலனைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், தன் குடும்பத்தின் நலனை மட்டும் பார்ப்பது என்பது சுருங்கிப்போய் நிற்கிறது. சில குடும்பங்களை கவனிக்கும் பொழுது குடும்பத்தில் கூட தனிநபர் நலன் என்று போய் தான் நிற்கிறது. அன்பை வெளிப்படுத்து என்பதை விட, இதை பேசுவது தான் மிகவும் அவசியம்.

***

பிருத்விராஜ், வேதிகா இருவரும் படத்தை தாங்கியிருக்கிறார்கள். படத்தின் நீளம் அதிகம் என படத்தை எடுத்த விதம் நமக்கு உணர்த்துகிறது. ஒளிப்பதிவாளரே இயக்கிமிருக்கிறார். நல்ல ஒளிப்பதிவு. அந்த தேவதூதனாக வருபவருடைய பங்களிப்பு சிறப்பு

****

நன்றி : Selvam Ramki

Jun 14, 2016

வீடு திரும்புதல்!


பள்ளி முடிந்ததும்
கார், வேன், பைக் என
வசதிக்குதக்கவாறு பிள்ளைகளை
கவர்ந்து சென்றன!
அபூர்வமாய் சில குழந்தைகள் மட்டும்
கைகோர்த்து ஜாலியாய் நடந்து சென்றனர்.


பள்ளி முடிந்ததும்
வீடு திரும்புகிற ஒரு நாளில்
எட்டு வயதில்
ஒரு தேநீர் கடையில் தான்
கன்னித்தீவு சிந்துபாத்தும்,
’அழகி’ லைலாவும்,
மந்திரவாதி மூசாவும் அறிமுகமானார்கள்.

இன்னொரு நாளில்
பதினொன்று வயதில்
ஒரு பெட்டிக்கடையில்
அம்புலிமாமாவும், பாலமித்ராவும்,
காமிக்ஸ் கதாநாயகர்களும்
நண்பர்களானார்கள்.
மற்றுமொரு நாளில்
பகுதி நூலகத்தில் உறுப்பினரானேன்!

பல ஆண்டுகள் உருண்டோடி,
இதோ இந்த இரவில்
'வீரம் விளைந்தது' நாவலை
மீண்டும் ஒருமுறை வாசித்துக்கொண்டிருக்கிறேன்!

- குருத்து

May 30, 2016

அரசியல் சிந்தனையாளர், எழுத்தாளர் காஞ்சா அய்லய்யாவுக்கு பார்ப்பனர்கள் கொலை மிரட்டல்!


காஞ்சா அய்லய்யா இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர், தலித் அரசியல் சிந்தனையாளர், மனித உரிமை செயற்பாட்டாளர். நான் ஏன் இந்து அல்ல, பின் இந்து இந்தியா, அய்யங்காளி போன்ற நூல்களின் ஆசிரியர். அச்சமின்றி பார்ப்பனியத்தை எதிர்த்து பேசி வரும் அறிவு ஜீவிகளில் ஒருவர். தற்போது ஐதரபாத் மௌலானா அபுல்கலாம் ஆசாத் உருது பல்கலைகழகத்தில் சமூக நீதி ஆய்வு மையத்தின் இயக்குநராக பணியாற்றுகிறார்.

விஜயவாடாவில் சி.ஐ.டி.யு ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் ’இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் பரிணாம வளர்ச்சி’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அதில் பார்ப்பனர்கள் உற்பத்தியில் ஒருபோதும் பங்கெடுக்கவில்லை, அவர்களுடைய சமூகம் உடலுழைப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபடவில்லை என குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஊடகமோ பார்ப்பனர்கள் சோம்பேறி சமூகம் என திரித்து எழுதியது.

இதையறிந்த 15 பேர் கொண்ட பார்ப்பன கும்பல் அவருடைய அலுவலகத்தில் அவரை சூழ்ந்து கொண்டு மன்னிப்பு கேட்கும் படி மிரட்டியது. தான் தெரிவித்த கருத்துகளுக்கு அடிப்படை காரணங்களை விளக்கி கூறினாலும் அந்த கும்பல் காது கொடுக்க தயாராக இல்லை. மன்னிப்பு கேட்க அவர் மறுக்கவே, ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் தகாத வார்த்தையால் பேசியும், தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுத்தும் இருக்கிறது.

கடந்த சனிக்கிழமை நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் காஞ்சா அய்லய்யா ’நான் இந்துமதத்தை விமர்சித்து கொண்டு இருப்பதால் சீர்திருத்தம் அடையும் என எதிர்ப்பார்த்தேன் ஆனால் அதன் கலாச்சாரம் இதுவென்றால் ,நான் இந்துமதத்தை பற்றி இனிப் பேசப்போவதில்லை என உடைந்து போய் கூறியுள்ளார். எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நடந்தது காஞ்சா அய்லய்யாவுக்கும் தொடர்கிறது.

தெலுங்கு மொழி பேசும் எழுத்தாளர்கள், அறிவு ஜீவிகள், செயற்பாட்டாளர்கள் என 50 பேர் இந்த கொலை மிரட்டலை கண்டித்து காஞ்சா அய்லய்யாவுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர்.

பார்ப்பனியம் வரலாற்று உண்மைகளை திரித்து எழுதுமே ஒழிய அங்கீகரிக்காது. அப்படி அம்பலபடுத்துவர்களை ஒழித்துக்கட்டும். இதுதான் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, ,ரோஹித் வெமுலா உள்ளிட்ட எண்ணற்ற அறிவுஜீவிகளையும், நாத்திகவாதிகளை காவு வாங்கியதற்கான பின்புலம்.

நாத்திகவாத கண்ணோட்டத்தை அறிவியல் பூர்வமாக விளக்கினால் மத உணர்வை புண்படுத்தி விட்டதாக கூறி மதவெறியர்கள் ஆதாயம் தேட முயல்கின்றனர். இங்கு மட்டுமல்ல வங்கதேசத்திலும் இதுதான் நடக்கிறது. கடந்த 2013ல் இருந்து இதுவரை பத்துக்கும் மேற்ப்பட்ட மதசார்பற்றவர்களும், நாத்திகவாதிகளும் இஸ்லாமிய மதவெறிக்கு பலியாகி உள்ளனர்.
சிந்தனையாளர்கள், அறிவுஜீவிகள், கலைஞர்கள் இல்லாத சமூகம் என்பது ஊனமானது. விலைமதிப்பில்லாத அவர்கள் உயிர் போவதை பார்த்து நாம் மௌனமாக கடந்தோமானால், அது நம்தேசத்தை தற்குறிகள் நிறைந்த தேசமாக மாற்றிவிடும்.

நீதிமன்ற கருப்பு அங்கிகள் காவி உடையை தரிக்கும் தருணத்தில் , இந்துத்துவ கருத்துக்களை பொதுவெளியில் பேசுவதையே ஜனநாயகம் எனப் பொழிப்புரை தருகிறது பார்ப்பனப் பாசிசம்.

அதனால் இந்த அரசு கட்டமைப்பில் நின்று கொண்டு பார்ப்பனியத்தை கூண்டில் ஏற்றிவிட முடியாது. அரசின் அனைத்து உறுப்புகளையும் பயன்படுத்திதான் மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் தப்பிவிக்கப்பட்டனர் என்பது ஒரு வெள்ளிடை உதாரணம். ஆகையால் பார்ப்பன பயங்கரவாதத்துக்கு எதிரான தீர்ப்பு என்பது மக்கள் மன்றத்தில் மட்டுமே கிடைக்கும்.

-மில்ட்டன்,
 செயலர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.