Showing posts with label குழந்தைகள் உலகம். Show all posts
Showing posts with label குழந்தைகள் உலகம். Show all posts

May 3, 2018

"நாட்டில இவ்வளவு செய்ய வேண்டியிருக்காப்பா?"

மே தின பேரணிக்கு போய் திரும்பும் வழியில் ஆறாம் வகுப்பு படிக்கும் என் பெண்ணிடம் பேசிக்கொண்டே வந்தேன்.

நாம் போராடி நாம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து... நீ முக்கிய பொறுப்புக்கு வந்தால்.. முதலில் என்ன செய்வாய்?

"பிச்சைகாரர்களுக்கு எல்லாம் வேலை கொடுப்பேன்!"

இதை தொடரலாமே என கேட்க துவங்கினேன்.

#மாணவர்களுக்கு?"

"எல்லோருக்கும் இலவச கல்வி கொடுப்பேன்"

"படிக்காத பசங்கள பார்த்திருக்கிறாயா?"

"இங்க பார்த்ததில்லை. கிராமத்தில் படிக்காம இருப்பாங்கல்ல! எல்லோரும் படிக்கனும்ல!"

#பெண்களுக்கு?"

"எல்லா இடத்திலும் சுத்தமான கழிவறைகள் கட்டுவேன்"

#விவசாயிகளுக்கு?"

"எங்கு எங்கு எவ்வளவு விளைவிக்க வேண்டுமென திட்டத்தை கொடுப்பேன்"

#குழந்தைகளுக்கு?"

"எல்லா குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கொடுப்பேன்" 


(பா. ஜனதா ஆட்சியை நன்றாக புரிந்திருக்கிறாள்!)

#இளைஞர்களுக்கு?"

"எல்லோருக்கும் வேலை கொடுப்பேன்"

#மீனவர்களுக்கு?"

"மீனவர்களுக்கு உரிய நேரத்தில் வானிலை தகவல் தருவேன்"

(ஒக்கி புயல் பாதிப்பு!)

திடீரென கொஞ்சம் நிறுத்தி....

"நாட்டில இவ்வளவு செய்ய வேண்டியிருக்காப்பா?"

- என்றாள் ஆச்சர்யமாய்!

பிறகு நான் கேட்பதை நிறுத்திவிட்டேன்.

"எல்லோருக்கும் இலவசமா மருத்துவம் கொடுக்கனும்!"

"வீடு இல்லாதவங்களுக்கு வீடு கட்டித்தரனும்!"

இன்னும் சொல்லிக்கொண்டே வந்தாள்!

அது முடிகிற பட்டியலா அது?

#நீ சீக்கிரம் வளர்ந்து களத்துக்கு வா தாயி!

Feb 9, 2018

சர்க்கஸ்

”சனங்களைக் குஷிப்படுத்தி கைதட்டலைப் பெறத்தான் நீங்க சாகசம் செய்றீங்க, காசுக்காக அல்ல! அதனால ஆட்கள் நூற்றுக்கணக்கில் வந்தாலும் சரி, கொஞ்ச பேர் வந்தாலும் சரி, எப்போதும் அருமையாக செய்யனும்”


* பெண் சர்க்கஸ் கலைஞர் தன் பிள்ளைகளிடம்!!

சிறுவயதில் சர்க்கஸ் பார்க்க அத்தனை ஆர்வமாக இருக்கும். சிங்கம், புலி, யானை, குதிரை என மிருகங்களைப் பார்க்கவே உற்சாகமாக சர்க்கஸ் போவோம்.

மிருகங்களை பயன்படுத்தக்கூடாது என்ற தடைக்கு பிறகு வண்ண வண்ண கிளிகளை, நாய்களை பயன்படுத்தினார்கள். இப்பொழுதும் அவைகளுக்கும் தடை போட்டுவிட்டார்கள். எதுவும் இல்லை.

சுதந்திரத்திற்காக சிந்திக்கிற, செயல்படுகிற நாம் விலங்களையும். பறவைகளையும் கூண்டுக்குள் அடைத்து வைத்து வித்தை காட்ட வைப்பது அபத்தம் தான்!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, என் பெண்ணுக்காக சர்க்கஸ் போயிருந்தேன். பார்த்த சர்க்கஸை என் பெண் மறந்துவிட்டபடியால், சமீபத்தில் ஜம்போ சர்க்கஸ் (சென்னை மூர் மார்க்கெட் அருகே ) போயிருந்தோம்.

முழுக்க மனிதர்களின் சாகசம் தான். 40 அடி உயரத்தில் பறந்த படி சாகசம், நீளத்துணியினால் ஒரு ஜோடி அந்தரத்தில் ஸ்டைலான சாகசம் என ஐந்தாறு வகைகள் மிக அருமையாக இருந்தன.


ஜோக்கர்கள் எப்பொழுதும் போரடிக்காமல் பார்த்துகொள்வார்கள். இப்பொழுதோ ஜோக்கர்களே ரெம்பவும் போரடிக்கிறார்கள்.

மற்றபடி, சர்க்கஸ் கலைஞர்கள் வண்ண வண்ண உடைகளில் பளபளப்பாக வந்தாலும், சர்க்கஸ் கலை வளரவில்லை என்பது அதன் வடிவத்திலேயே தெரிகிறது. செய்த சாகசங்களே செய்யப்படுகின்றன. அதே டெண்ட் கொட்டாய் தான். புழுதியில் தான் சேர்கள் போட்டிருக்கிறார்கள். முன்பெல்லாம் காலரி போடப்பட்டிருக்கும். கொஞ்சம் வசதியாக இருக்கும்.

கலைஞர்கள் முகத்தில் மலர்ச்சி இல்லாமல், ஒருவித இறுக்கத்துடன் தான் இருக்கிறார்கள். கனமான வெயிட்டை தூக்கி சாகசம் செய்த ஒரு கறுப்பின கலைஞன் கைதட்டை கேட்டு கேட்டு வெயிட்டை தூக்கி சாகசம் செய்தார். மார்கழி மாதத்திலும் அத்தனை வியர்வை!

சமீபத்தில் ஒரு சீனப் பெண்களின் ஐந்து நிமிட சர்க்கஸ் பார்த்தேன். அத்தனை துல்லியம். முகத்தில் மகிழ்ச்சி. பார்க்கவே அத்தனை சந்தோசமாக இருந்தது!
ஒருவேளை அரசு ஏதும் மானியம் கொடுத்தால் இந்த கலையை இன்னும் கொஞ்ச காலம் காப்பாற்றலாம். அரசு செய்யுமா? எல்லா பொறுப்புகளையும் கழட்டிவிட நினைக்கும் இந்த அரசு செய்ய வாய்ப்பேயில்லை.

மற்றபடி, புதிது, புதிதாய் இந்த மண்ணில் பிறக்கும், விழிகள் விரித்து ஆச்சர்யமாய் பார்க்கும் குழந்தைகள் தான் சர்க்கஸ் கலையை இன்னும் வாழவைக்கிறவர்கள் என சொல்லலாம்!
குருத்து

Dec 14, 2015

வானவில் – என் பொண்ணு சொன்ன குட்டிக் கதை!


நான்காவது படிக்கும் என் பொண்ணு, எப்பொழுதாவது கதை சொல்வாள். நான் சொல்லும் “மொக்கை’ கதைகளை விட உயிர்ப்பாக இருக்கும்.
****

ஒரு நாள் காலை. ஒரு குடிசை வீட்டிலிருந்து இருந்து ஒரு பொண்ணு தூங்கி எழுந்தாள். வெளியே வந்து பார்த்தால், ஒரு அழகான வானவில்.
அப்பொழுது பூமியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்கள் அங்குமிங்கும் பதட்டத்துடன் ஓடினாங்க. பலர் செத்துப்போனார்கள்.

வானவில் இதைப் பார்த்து மிகவும் கவலை கொண்டது! தன்னை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து, இறந்து போன அனைவருக்கும் உயிர்கொடுத்தது!

மக்கள் அனைவரும் தங்களுக்காக தன் உயிரை தந்த வானவில்லுக்கு நன்றி தெரிவித்தார்கள். இனிமேல் வானவில்லை பார்க்கமுடியாதேன்னு வருத்தப்பட்டாங்க!

திடீரென்று தூக்கம் கலைந்து எழுந்தாள். எல்லாம் கனவென்று அறிந்தாள். வெளியே வந்து பார்த்தாள். அழகான வானவில் ஒன்று அவளைப் பார்த்து சிரித்தது!

Nov 22, 2015

சிவப்பு பலூன் நண்பன்! – மிகச் சிறந்த படம்!


பாரிஸ். பள்ளி செல்லும் வழியில், ஒரு கம்பத்தில் சிக்கித் தவிக்கிறது ஒரு அழகான சிவப்பு பலூன். காப்பாற்றுகிறான்.

பலூனோடு பேருந்தில் ஏற அனுமதி மறுக்கிறார்கள்.  பலூனை கைவிட மனசே இல்லாமல், ஓடியே பள்ளியை அடைகிறான்.   மழையிலிருந்தும், பனியிலிருந்தும் பாதுகாத்து வீடு வந்துசேர்கிறான்.  அம்மாவும் வீட்டில் அனுமதிக்க மறுத்து, பலூனை வெளியே துரத்தி விடுகிறார்.

அந்த நிமிடத்திலிருந்து பலூனுக்கு ’உயிர்’ வந்துவிடுகிறது.  மறுநாள் பள்ளி கிளம்பும் பொழுது பலூனும் பள்ளித் தோழனை போல சேர்ந்து கிளம்புகிறது.  பேருந்தில் பையன் போகும் பொழுது, ஒரு பறவையை போல பின்தொடர்கிறது.  போகிற வழியில் ஒரு சிறுமி நீலவண்ண பலூனோடு செல்கிறாள்.  சிறிது நேரம் இரண்டு பலூன்களும் விளையாடுகிறது. பிறகு பையனோடு கிளம்புகிறது.

பையனோடு வகுப்பறைக்கும் வந்துவிடுகிறது. மாணவர்கள் குதூகலிக்கிறார்கள்.  நம் பள்ளி முதல்வர்கள் எல்லாம் மிகவும் கண்டிப்பானவர்கள் அல்லவா!  அந்த பையனை தனியாக ஒரு அறையில் பூட்டுகிறார்.  பலூன் கோபம் கொண்டு, முதல்வரை துரத்தி துரத்தி தொந்தரவு செய்கிறது. வேறு வழியில்லாமல் பையனை விடுவிக்கிறார்.

மகிழ்ச்சியுடன் இருவரும் வீடு வரும் வழியில், பகுதியில் வாழும் குறும்பு சிறுவர்கள் சிவப்பு பலூனை சிறைபிடிக்க விடாது துரத்துகிறார்கள்.  இறுதியில் பலூனை பிடித்து, உடைத்தும் விடுகிறார்கள்.  மெல்ல மெல்ல மடியும் பொழுது உற்ற நண்பன் இறப்பது போல மிகவும் வருந்துகிறோம்.

இதைக் கேள்விப்பட்டதும், அவனுக்கு ஆறுதல் சொல்ல பாரிஸில் உள்ள எல்லா பலூன்களும் கூட்டமாக பறந்து வந்து அந்த பையனிடம் சேர்கின்றன. குதூகலமடைகின்றான். அவனை அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வானத்தில் உற்சாகமாய் பறக்கின்றன. 
***
1956ம் ஆண்டு.  பிரெஞ்சு மொழி.  35 நிமிடம்.  ஆஸ்கார் வென்றிருக்கிறது. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பார்க்கவேண்டிய படம். யூ டியூப்பில் கிடைக்கிறது.
****

https://www.youtube.com/watch?v=e2Y1tRBOXfA

குருத்து