Showing posts with label புத்தக அறிமுகம். Show all posts
Showing posts with label புத்தக அறிமுகம். Show all posts

Nov 1, 2017

சகாயம் சந்தித்த சவால்கள்! – ஒரு பார்வை!

ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் லஞ்சம் தவிர்த்து நேர்மையுடன் பணியாற்றியதால்  23 வருடங்களில், 23 முறை வேலை மாற்றல்கள்!

தரமற்ற பெப்சியை ஆய்வு செய்து, பெப்சி நிறுவனத்தை பூட்டு போட்டது; தலைமை செயலர் வரை பதறிப்போய் சகாயத்துக்கு தொலைபேசியில் பேசியது; அரசு எந்த பத்திரிக்கைகளிலும் அந்த செய்தி வெளிவராமல் பார்த்துக்கொண்டது; உடனே வேறு ஊருக்கு தூக்கியடித்தது – இது ஒரு சம்பவம்!

கள்ளச்சாராயம் காய்ச்சிய கும்பலை கைது செய்ய போய், மாவட்ட ஆட்சியரான சகாயத்தின் மீதே தனக்கு கீழ் உள்ள அலுவலரையே அடித்துவிட்டார் என பொய் வழக்கு போட்டது; சகாயம் சுதாரித்து அதை சாமர்த்தியமாய் எதிர்கொண்டது!- இது ஒரு சம்பவம்!

ஒரு கட்சிக்காரர் வீட்டுவசதிவாரியத்தின் கோடிக்கணக்கான மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமித்துக்கொள்கிறார்.  சகாயம் நடவடிக்கை எடுக்கிறார். உடனே கட்சிக்காரர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அவரை வேறு ஊருக்கு மாற்றுகிறார்.

இப்படி பல சம்பவங்களை சொல்லிக்கொண்டே போகிறார். கூடுதலாக, முன்பெல்லாம் அரசு அலுவலர்கள் அடிப்படை தேவைகளுக்கு லஞ்சம் வாங்கியவர்கள் இப்பொழுது கூடுதலான நுகர்வு தேவைகளுக்கு லஞ்சம் வாங்குவதாக சொல்கிறார்.   இப்பொழுது பெரும்பாலும் லஞ்சம் வாங்குவதாக அவரே சொல்கிறார்.   இதிலிருந்து நமக்கு புரிவதெல்லாம், அரசும், அரசாங்கமும் லஞ்சத்தில்  ஊறித்திளைக்கிறது.  சகாயம் மாதிரி ஆட்கள் எல்லாம் லட்சத்தில் ஒருவர் என சொல்லிவிடலாம்.

என் 10 ஆண்டு கால அனுபவத்தில் 30 வருங்கால வைப்புநிதி (PF Enforcement officers) அதிகாரிகளை பார்த்திருப்பேன். ஒரு ஆள் கூட கை சுத்தமான ஆள் இல்லை. அதே போல இஎஸ்ஐ 30 அதிகாரிகளில் கை சுத்தமான அதிகாரி ஒருவரை மட்டுமே சந்தித்தேன். அவர் பெயர் துரைராஜ்.  அதே போல விற்பனை வரி துறையில் ஒரு நேர்மையான அதிகாரி கூட பார்த்ததில்லை. இதே போலவே கலால் வரி துறையிலும்!

இந்த அரசை ஆளும் வர்க்கம் .இயக்கிக்கொண்டிருக்கிறது என சொன்னால், அதன் நடைமுறை என்பது, தரகு முதலாளிகளும், நிலச்சுவாந்தாரர்களும் தங்களுக்கான வேலைகளை முடிக்க அரசையும், அரசாங்கத்தையும் லஞ்சத்தின் மூலமாக தான் காரியம் சாதித்துக்கொள்கிறார்கள்.  ஆக உடைமை சமுதாயம் நீடிக்கும் வரைக்கும் லஞ்சம் நீடிக்கும் என்பது தான் யதார்த்தம்.  அதாவது மூக்கு உள்ளவரை சளி இருக்கும் என்பது தான்!

ஆக, சகாயம் பக்கத்துக்கு பக்கம் சொல்கிறபடியே இந்த அரசும், அரசாங்கமும் மாற்றவே முடியாத அளவிற்கு புரையோடி போய்விட்டதையும், பெரும்பாலான மக்களுக்கு எதிராக நிற்பதையும்தான் நிரூபிக்கிறது.   ஆனால், சகாயமோ இளைஞர்களை அணிதிரட்டி ’மக்கள் பாதை’ என்ற அமைப்பை உருவாக்கி, கடந்த சில ஆண்டுகளாக இந்த இத்துப்போன அரசமைப்பை மாற்றலாம் என நம்பிக்கை தந்து வழிநடத்திக்கொண்டிருக்கிறார். இதுதான் பெரிய நகைமுரண்.

மேலும், சகாயத்தின் பெற்றோர்களை அறிமுகப்படுத்தும் பொழுது, உபகாரம் பிள்ளை என குறிப்பிடப்பட்டுள்ளது. சகாயம் சொன்ன மாதிரி “ என்னோட ரோல் மாடல் எங்க சித்தப்பா அருளாந்து பிள்ளை” என எந்தவித தயக்கமில்லாமல் சொல்லியிருக்கிறார். சாதியக்கண்ணோட்டம் கோளாறு தான்!

- வெளியீடு : ஆனந்தவிகடன்

விலை ரூ. 95

பக்கங்கள் : 96

நூல் ஆசிரியர் : கே. ராஜா திருவேங்கடம்

- குருத்து

Sep 7, 2015

வாழ்வை நேசிப்பவர்கள் இந்த வானவில்லை வாசியுங்கள்!



தியாகம்...
தன்னலம் கருதாது பிறர் நலம் பேணும் தகைமை..

தமது மண்ணுக்காக, மக்களுக்காக உயிரையும் துச்சமென மதித்துப் போராடும் வீரம்..

இலட்சியப் போராட்டத்தில் எதிர்ப்படும் இன்னல்களை துணிவுடன் எதிர்கொண்டு, துன்ப, துயரங்களால் வாடிவிடாத மனப்பாங்கு..

வார்த்தைகளில் வடித்தெடுக்கப்படவியலாத உணர்வு..
பேரன்பும், பெருங்கோபமும் உந்தித்தள்ளும் செயல்பாடு.
பாசத்தில், நேசத்தில் பெருக்கெடுக்கும் அன்பின் ஊற்று..
ஒன்று மற்றொன்றாய் மாறும் இரசவாதவித்தை..

அனைத்திற்கும் மேலாக.. அது துரோக இருள் கிழிக்கும் மின்னல் கீற்று;
வசந்தத்திற்குக் கட்டியம் கூறும் வானவில்....

நமது அனுபவத்தின் வீச்சு, அறிதலின் ஆழத்தைப் பொறுத்து விரிந்துகொண்டே செல்கின்றன தியாகத்தின் பரிமாணங்களும், பரிணாமங்களும்.

காற்றிலாடிய முல்லைக்குத் தேர்கொடுத்ததும், குளிரில் வாடிய மயிலுக்குப் போர்வை தந்ததும், மூப்புப் பிணியறுக்கும் அருநெல்லியை அருந்தமிழை வாழவைக்கும் ஒளவைக்கு அதியமான் ஈந்ததும்... சங்கப்பாடல்கள் தீட்டும் ஈகையின் சித்திரங்கள்.

வீரமங்கை வேலு நாச்சியார், தன்னுடலையே ஆயுதமாக்கி வெள்ளையனின் வெடிமருந்துக்கிடங்கைத் தகர்த்த போராளி குயிலி, ஜான்சிராணி இலட்சுமிபாய், வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை சகோதரர்கள், தீரன் சின்னமலை, மருது சகோதரர்கள், மாவீரன் திப்புசுல்தான் .. ... வரலாறாய் நீள்கிறது வெள்ளையனின் ஆக்கிரமிப்புகளுக்கெதிராக, நம் மண்ணைக் காக்கப் போராடியவர்களின் படைவரிசை.

பிர்லா மாளிகையில் குடித்த ஆட்டுப்பாலும், கொறித்த வேர்க்கடலையும் செரிக்க உண்ணாவிரதமிருந்து நடைப்பயணம் செய்த, சுதந்திர வேட்கையில் பொங்கியெழுந்த மக்களை தனது தள்ளாத வயதுவரை கைத்தடியாலடித்து வதைத்த மகாத்மாக்களின் துரோகத் திரை கிழித்து நம் நாட்டின் விடுதலைப் போராட்ட வானில் சுடர் வீசும் நட்சத்திரங்களாகத் திகழும் பகத்சிங் மற்றும் தோழர்களின் தியாகம்.

அடிமைத் தளையுடைக்கும் சுதந்திரப் போரில் சிறைபட்டு, சித்திரவதைக்கு ஆளாகி, இன்னுயிர் நீத்த பல்லாயிரம் தியாகிகள்.

இப்படிப்பட்ட நம் முன்னோர்களின் மூச்சுக்காற்றில் பிறந்ததுதான் இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திரக் காற்று.

இங்கு மட்டுமல்ல.. உலகெங்கிலும் தனது மண்ணையும், மக்களையும் நேசித்த தியாகச்சுடர்களின் ஈகங்கள்தான் மக்களின் அடிமை விலங்கொடித்து, மனித சமூகம் புதுவாழ்வு காண வித்திட்டது.
******

பண்ணைகளின் கொடுங்கோன்மையையும், முதலாளித்துவச் சுரண்டலையும் போரிட்டு வீழ்த்தி, புதியதோர் உலகம் படைக்க, பொதுவுடைச் சமுதாயம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சோசலிச இரசியாவின் மீது வன்மத்துடன் போர்தொடுத்தான் பாசிச ஹிட்லர். அவனது ஆக்கிரமிப்புப் படையினரிடம் அகப்பட்டு மூச்சுத்திணறிக்கொண்டிருந்தது அந்தச் சிறு கிராமம்.

நாடெங்கிலும் ஹிட்லரின் பாசிச இராணுவத்தை முறியடித்து முன்னேறிக்கொண்டிருந்தது செம்படை. தனது ஊரை ஆக்கிரமித்திருந்த ஜெர்மானியப் படையினரை விரட்டியடிக்க அந்த செம்படை வீரர்களின் வருகையை எதிர்நோக்கி விடியலுக்காகக் காத்துக்கொண்டிருந்தனர் அந்தக் கிராம மக்கள்.

அவ்வூரை ஆக்கிரமித்திருந்த கொடூர மனம் படைத்த ஜெர்மானியப் படையதிகாரி நிகழ்த்திய அட்டூழியங்களால் சொல்லொணாத் துயருக்கு ஆளாயினர் மலைக்குன்றின் மேலிருந்த அந்தச் சிற்றூரின் மக்கள். பெண்களும், சிறுவர்களும், முதியோர்களும் மட்டுமே அவ்வூரில் இருந்தனர். ஆண்கள் எல்லோரும் செம்படையில் இணைந்து ஜெர்மானியர்களை விரட்டும் போர்முனைக்குச் சென்றிருந்தனர்.

அந்தப் போர்ச்சூழலில், அந்தச் சிற்றூரின் எளிய கிராம மக்கள் மேற்கொண்ட போராட்டத்தையும், பட்ட துன்பங்களையும், செய்த தியாகங்களையும், அவர்களது நாட்டுப்பற்று, மனிதநேயம், தாய்மையுணர்வு உள்ளிட்ட நற்பண்புகளையும் விவரமாக எடுத்துரைக்கிறது இந்த நாவல்.
தாய்மையை, அனைத்தையும் நேசிக்கும் அதன் பேருருவை, அதன் அளப்பரிய தியாக உணர்வை வெளிப்படுத்திய அற்புத முத்துக்களை, சோவியத்தின் பொதுவுடைமைப் பூமியில் பிரகாசித்த இரத்தினங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது "வானவில்" எனும் இந்த இரசிய நாவல்.
போரிலே மகன் மாண்டான் எனும் செய்தி கேட்டு போர்க்களத்திற்கு விரைந்துசென்றவள் குப்புறக்கிடக்கும் தனது மகனின் உடலைப் புரட்டிப்போடுகிறாள். மார்பில் விழுப்புண் பட்டு மல்லாந்துகிடக்கும் அவ்வுடலின்மீது வீழ்கின்றன அவளது கண்ணீர்த்துளிகள்; இழப்பின், மரணத்துயரின் வெளிப்பாடாக மட்டுமல்ல. தன் உயிரைக் கருவாக்கி, உதிரத்தை அமுதாக்கித் தான் வளர்த்த அருமை மகன் போரில் புறம் காட்டிய கோழையல்ல; மாறாக, மார்பில் வேல் தாங்கிய மறவன் என்கிற பெருமிதத்திலும் ஊற்றெடுத்த பன்னீர்த்துளிகள் அவை. இது புறநானூறு காட்டும் ஒரு வீரத்தாயின் சித்திரம்.

ஊருக்கு வெளியே, அருவிக்கரைப் புதரருகே உறைபனியில் விரைத்துக்கிடக்கிறது விடுதலைப் போரில் வீரமரணமடைந்த அன்பு மகனின் சடலம். ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடிக்க அவ்வூரைக் கடந்து செல்கையில் ஜெர்மானியர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட செம்படை வீரர்களில் அவனும் ஒருவன். நாள்தோறும் அருவிக்கரைக்குத் தண்ணீர் எடுத்துவரச்செல்லும் தாயால் மகனின் முகத்தை வாஞ்சையுடன் பார்த்துவிட்டு வரமட்டுமே இயலுகிறது. வாரியெடுத்து, மார்போடணைத்து, வாய்விட்டுக்கதறியழ, நல்லடக்கம்செய்ய வாய்க்கவில்லை அந்தத் தாய்க்கு. இறந்து கிடப்பவன் அவ்வூரைச் சேர்ந்தவன் எனத் தெரிந்துவிட்டால் ஜெர்மானிய ஏவல் நாய்கள் எக்காளமிடும்; சடலத்தை ஊர்நடுவே மரத்தில் தொங்கவிட்டுச் சிதைக்கும்; குதூகலித்துக் கும்மாளமிடும். இந்தக் கோரக்காட்சியைக் காண விரும்பவில்லை அவள். எனவேதான் தாங்கமுடியாத அந்த வேதனையை மனதில் இருத்திக்கொண்டு விடுதலையை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கிறாள் அத்தாய்.

வயிற்றில் கருவைச் சுமந்துகொண்டே விடுதலைக்காகப் போரிட்ட வீரமங்கை, அவள் ஒரு கொரில்லாப்போராளி. பிரசவ நாள் நெருங்கியதால் வீடுதிரும்பியவளை மோப்பம் பிடித்துவிட்டது ஜெர்மானிய மிருகம். கொரில்லா வீரர்களின் நடமாட்டம் குறித்துத் தகவல்களைப் பெறுவதற்காக நிறைமாதக் கர்ப்பிணியென்றும் பாராமல் கொடூரமாகச் சித்திரவதை செய்கிறான். நல்வாழ்வு தருவதாக நயவஞ்சக நாடகமாடினான். அச்சுறுத்திப் பார்த்தான். அசையவில்லை அவள். கல்மனதையும் கரையச் செய்யும் கொடூரங்களைக் கட்டவிழ்த்து விட்டது அந்த ஜெர்மானிய மிருகம். நடுக்கும் குளிரை விரட்டியடிக்கவியலாத கந்தல் ஆடைகளுடன் வயிற்றுப் பாரம் தாளாமல் தள்ளாடியவளை நாள்முழுதும் சொட்டுத்தண்ணீர் கூடத் தராமல் நிற்கவைத்து வதைத்தது; மசியவில்லை அவள். உடைகிழித்து நிர்வாணமாக்கி ஊர்வலமாய் இழுத்துச்செல்லப்பட்டாள்; கத்தியாகக் குத்தும் பனிச்சிதிலங்களின் மீது தடுமாறி விழுந்தவளை துப்பாக்கிக் கட்டையாலும், கத்தியாலும் குத்துகின்றன அம்மிருகங்கள். எலும்பையே உறையவைக்கும் பனிக்காலம் அது. வெற்றுடம்பாய் வீசியெறியப்பட்டாள் கட்டாந்தரைமீது சிறைக்குள். நாவறண்டு, குளிரில் விறைத்து, நாடியொடுங்கிக் கிடந்தவள் உதவிக்கு யாருமற்ற நிலையில் ஆண் மகவைப் பெற்றெடுத்தாள்.

இரத்தவாடை பிடித்துவிட்ட ஓநாய் விழித்துக்கொண்டது. தாய்ப்பாசத்தைப் பகடையாக்கிப் பேரம் பேசினான். குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டாவது உண்மையைக் கூறும்படி கெஞ்சிப்பார்த்தான். ஆனால் தனது நாட்டு மக்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக விடுதலைப்போரில் தன்னையே கரைத்துக்கொண்டவள் அவள். ஈன்றெடுத்த மகவின் மீது மாளாத பாசம் கொண்ட அன்னைதான் அவள். அத்துடன் இளம்பருவத்திலேயே தாய்நாட்டு விடுதலைக்காகப் போரிடும் கொரில்லாப் படையின் வீரப் புதல்வர்களையும் தான் பெற்றெடுக்காத மக்களாகவே நேசித்தவள் அவள். எனவே, காட்டிக்கொடுக்க மறுத்துவிட்டாள். அடுத்த கணமே பிஞ்சுக்குழந்தையின் நெஞ்சிலே பாய்ந்தது வஞ்சகனின் துப்பாக்கிக் குண்டு. அழவில்லை அவள். சிலையாக நின்றவளை குழந்தையுடன் இழுத்துச் சென்று அருவியில் தள்ளிக் கொன்றனர் பாசிஸ்டுகள். அன்று பிறந்த மழலையைக் கொன்று வீசியது கண்டும் சித்தம் கலங்காமல் எஃகுறுதியுடன் எதிர்த்து நின்று தன் தாய்நாட்டு வீரர்களின் உயிர் காத்தாள் அந்தத் தாய்.

கடுமையான அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தது அவ்வூரில். இரவில் யாரும் வெளியில் நடமாடக்கூடாது. மீறுபவர்கள்
சுட்டுத்தள்ளப்படுவார்கள். துணிந்து மீறினாள் ஒரு தாய். சிறைப்பட்டிருந்த கர்ப்பிணியின் கதறல் அவளை உந்தித்தள்ளியது. உணவும், தண்ணீரும் தரப்படாமல் நாள்முழுதும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டவளின் பசி தணிக்க ஒரு சிறிய ரொட்டித் துண்டினை தனது மகனிடம் கொடுத்தனுப்புகிறாள் சிறைக்கூடத்துக்கு, நள்ளிரவில். விதி மீறிய அச்சிறுவனை சுட்டுக்கொன்று சாக்கடையில் எறிந்தன பாசிச மிருகங்கள். யாருமறியாவண்ணம் ஊர்ந்து சென்று சாக்கடையில் கிடக்கும் தனது குழந்தையின் உடலை எடுத்து வந்து வீட்டுக்குள்ளேயே அடக்கம் செய்கிறாள் அத்தாய், தனது மற்ற குழந்தைகளின் கண்முன்பாகவே. இறந்தவன், விதி மீறத் துணிந்தவன் தனது மகன் என்பது விடியலில் அடையாளம் காணப்பட்டுவிட்டால் ஒட்டுமொத்தக் குடும்பமும் சுட்டுப்பொசுக்கப்படும். மகனை மண்ணிலும், துக்கத்தை நெஞ்சிலும் புதைத்துக்கொண்டாள் அந்தத் தாய்.

அந்தச்சிற்றூரிலிருந்த ஆடு,மாடு,கோழி அனைத்தையும் தின்றுதீர்த்துவிட்ட ஜெர்மானியர்களின் முன்னே வந்துநின்றது உணவுப் பஞ்சம். கிராம மக்களின் மீது வரி விதித்தனர். வரியாக ஒவ்வொரு குடும்பமும் தானியங்கள் தரவேண்டுமென நிர்ப்பந்திக்கப்பட்டது. தம்பிடி தானியமும் தங்களிடமில்லையெனக் கைவிரித்துவிட்டனர் மக்கள் எல்லோரும். ஊர் மக்களில் ஐந்துபேரைப் பணயக்கைதிகளாகப் பிடித்துக்கொண்டு மூன்று தினங்களுக்குள் தானியங்களைக் கொண்டுவராவிடில் அவர்களைக் கொன்றுவிடப்போவதாக மிரட்டினான் அதிகாரி. அடிபணிய மறுத்து உறுதியுடன் எதிர்த்து நின்றனர் மக்களனைவரும் ஒற்றுமையுடன். ஆனால், அவர்களிடம் நிறையவே தானியங்கள் இருந்தன. அவை, மண்ணைக்காக்கும் போரில் ஈடுபட்டுள்ள தனது மைந்தர்களுக்காக, செம்படை வீரர்களுக்கென அம்மக்களால் சேகரித்து வைக்கப்பட்டுள்ளவை; தனது மண்ணை ஆக்கிரத்துள்ள பாசிசப் பேய்களின் பசிபோக்க அல்ல.
இப்படிப் பலவாறாக, தியாகத்தின் சுவடுகள் இந்நாவல் முழுவதும் தடம் பதித்துச் செல்கின்றன.
************************************

கடும் இன்னல்களையும், கொடுந்துன்பங்களையும் எதிர்கொண்டபோதிலும் கொண்ட இலட்சியத்தில் பற்றுறுதியுடன் இருப்பதற்கு அதீத மனவலிமையும், அளப்பரிய தியாக உணர்வும் தேவைப்படுகிறது. இந்த உயரிய நற்பண்புகள் ஒருங்கே அமையப்பெற்ற கோடிக்கணக்கான மைந்தர்களைக் கொண்டிருந்தது அன்றைய சோவியத் இரசிய சமூகம். ஆண்களும், பெண்களும், சிறியோர் முதல் வயதானவர்கள் வரை, விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைவரும் திரண்டெழுந்து போராடினர். ஹிட்லரின் நாஜிப் படைகளை விரட்டியடித்துத் தாய் மண்ணை மீட்டனர். சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட இம்மாவீரர்களின் தியாகம்தான் உலக மக்களைப் பாசிசத்தின் கோரப் பிடியிலிருந்து விடுவித்துக் காத்தது.

மனிதன் இயற்கையின் அங்கம். மனித உணர்வுகள் சமூகக் கூறுகளின் பிரதிபலிப்புகள். வளமான மண்ணில்தான் நலம்காக்கும் பயிர், பச்சைகள் செழித்தோங்கி வளர்கின்றன. அன்றைய சோவியத் சமூகம் பண்பட்டிருந்தது. பொதுவுடைமைப் பண்பாடுகொண்ட அப்பூமிதான் உயரிய, நற்பண்புகளைக்கொண்ட மக்களை வளர்த்தெடுத்தது; உலகின் தலைசிறந்த இலக்கியங்களைப் பிறப்பித்தது. உழைக்கும் மக்களின் உயர்வுக்கு வழிகாட்டியது. அந்த வரிசையில் உதித்ததுதான் வானவில் எனும் இந்நாவல்.
நல்வாழ்வுக்கான தேடல்கள் நடப்பு நிலையை உற்று நோக்கவைக்கின்றன.

நீரின்றி வறள்கிறது நமது பூமி; நிலத்தைப் பறிக்கிறது அரசு; பயிர்வளர்த்தும் உயிர்வளர்க்க முடியாமல் மடிகிறான் விவசாயி. நவீன அடிமைப் பண்ணைகளாக வளர்கின்றன சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். தொழிலாளிகளின் உயிர் குடிக்கும் கொலைக்கூடங்களாகத் தொழிற்சாலைகள். வாழ்விடங்களிலிருந்து விரட்டப்படுகின்றனர் பூர்வகுடிகள். பட்டப்பகலில், பகிரங்கமாக, துப்பாக்கிமுனையில் கொள்ளையடிக்கப்படுகின்றன இயற்கை வளங்கள் யாவும். உலகமயத்தால் ஒட்டச்சுரண்டப்படுகிறது தேசம். வளர்ச்சியின் பலிபீடத்திற்கு இட்டுச்செல்லப்படுகிறது கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்க்கை. ஜனநாயகப் பூங்காவில் கோலோச்சுகின்றனர் நவீன ஜார் மன்னர்கள். ஆட்சி பீடத்திலிருந்து பொங்கி வழிகின்றன அருளுபதேசங்கள் நாராசமாய். வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட மக்கள் தள்ளப்படுகின்றனர் போராட்டக் களங்களை நோக்கி.

நாடு காக்க, நல்வாழ்வு காண, அநீதிகளை, அவலங்களை ஒழித்துப் புதுயுகம் படைக்க, புதிய விடியலைக் காண விழைபவர்களுக்கு உணர்வூட்டும் ஆற்றலாக, போராட்டப்பாதையின் கைவிளக்காக இந்நூல்.

உண்மை.. உணர்வூட்டும்;
போராட்டம்... துரோக இருள் கிழிக்கும்;
தியாகம்... புதியதோர் உலகு செய்யும்;
வானவில்... வசந்த காலத்திற்குக் கட்டியம் கூறும்.
மண்ணை, மக்களை, வாழ்வை நேசிப்பவர்கள் இந்த வானவில்லை வாசியுங்கள். தொடுவானம் தொட்டுவிடும் தூரம்தான்.

- மருதமுத்து,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

ஆசிரியர் - வாண்டா வாஸிலெவ்ஸ்கா
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை ரூ. 125/-

Jul 24, 2015

ஒரு மாவீரனின் வாழ்க்கைப் பயணம்!




வீரம் விளைந்தது - நாவல் அறிமுகம்!

மனித வாழ்வின் வசந்தகாலம் என்று இளமைப்பருவத்தை வருணிப்பதுண்டு. எதிர்காலம் குறித்த கனவுகளும், நம்பிக்கையும், புதுமையின்மீது ஆர்வமும், செயல்துடிப்பும் பொங்கித் ததும்பும் காலம் அது. வாழ்க்கையின் சுக, துக்கங்களையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, மனித வாழ்வின் இந்தப் பொன்னான தருணத்தை தனது தாய்நாட்டு விடுதலைக்காக அர்ப்பணித்து இளமைக்குப் புதுப் பொலிவு சேர்த்த ஒரு மாவீரனின் வாழ்க்கைப் பயணமே இந்த நாவல்.

அன்றைய ரஷ்யாவில் ஒடுக்கப்பட்டு, சுரண்டப்பட்டுக்கிடந்த ஏழை, எளிய மக்களும், விவசாயிகளும், தொழிலாளர்களும் கம்யூனிஸ்டுக் கட்சியின் கீழ் அணிதிரண்டு கொடுங்கோலன் ஜார் மன்னனின் ஆட்சியைத் தூக்கியெறிந்தனர். 1917-ல், பூமிப்பந்தின் ஆறில் ஒரு பகுதியில் பொதுவுடைமை ஆட்சி மலர்ந்தது. ஆயினும், நாட்டின் உட்பகுதிகளிலும், கிராமப் புறங்களிலும் நிலப்பிரபுக்களும், பண்ணையார்களும்  அடங்கிய பிற்போக்கு சக்திகள் கொட்டமடித்து வந்தனர். புதிதாக ஆட்சியிலமர்ந்த பாட்டாளிவர்க்கத்தின் செஞ்சேனை வீரர்கள் அவர்களை அடக்கி, ஒடுக்குவதற்கான ஒரு கடுமையான உள்நாட்டுப் போரை நடத்திக்கொண்டிருந்தனர்.

வறிய, ஏழைக்குடும்பத்தில் பிறந்தவன் பாவெல் கர்ச்சாகின். துடுக்குத்தனமும், பிடிவாதமும் அவனை ஆரம்பப் பள்ளியைத் தாண்டவிடவில்லை. ஆனால் கடின உழைப்பாளி. நேர்மையும், நெஞ்சுரமும் கொண்டவன்; அநீதிகளைக் கண்டு பொங்கி எழும் குணம் படைத்தவன். எனவே, ஏழைகளைக் கசக்கிப் பிழிந்து உல்லாசமாக வாழும் ஊதாரிகளான பணக்கார வர்க்கத்தை இயல்பாகவே வெறுத்தான். பணக்கார வர்க்கத்தின் கொள்ளைக்கூட்டப் படைகள் அவனது ஊரையும் சீரழித்துச் சின்னாபின்னமாக்கியிருந்தன. கொதித்துக் கொண்டிருந்த அவ்விளைஞனை செஞ்சேனை அரவணைத்துக்கொண்டது. தாய்நாட்டைக் கொள்ளையர்களிடமிருந்து விடுவிக்கும் பணியே முதன்மையானது என்பதை உணர்ந்துகொண்டு தனது முழு ஆற்றலையும் மக்களின் எதிரிகளை வீழ்த்தும் போரில் ஈடுபடுத்தினான். துப்பாக்கிக் குண்டுகள் அவனது உடலைத் துளைத்தன; பீரங்கிக் குண்டுத் தாக்குதல் அவனை மரணத்தின் வாயிலில் கொண்டு நிறுத்தியது. ஆனால், இலட்சியத்தில் உறுதியும், போராட்டக் குணமும் கொண்ட அவ்விளைஞனை சாவின் கைகள் தொட மறுத்தன. புத்துயிர் பெற்ற போர்வீரனாக மீண்டும் போர்க்களத்திற்குத் திரும்பினான்.

ஆயினும், போரில் ஏற்பட்ட காயங்களால் பாதிக்கப்பட்ட உடல் அவனது மனோ வேகத்திற்கு ஈடுகொடுக்க மறுத்தது. கடுமையான உடல்வலியிலும், வேதனையிலும்கூட ஓய்வை நாடுவதை அவன் மனது வெறுத்தது. புதிய சமூகத்தை நிர்மாணிக்கும் வேலையில் கடுமையாக ஈடுபட்டான். ஆனாலும் படிப்படியாக அவனது உடல் செயலிழந்து கொண்டு வந்தது. இறுதியில்  கண்பார்வையையும் இழக்க நேரிட்டது. எத்தகைய அசாதாரண மன உறுதி படைத்த மனிதனையும் வீழ்த்திவிடும் அந்த இக்கட்டான நிலையையும் பாவெல் துணிச்சலுடன் எதிர்கொண்டான். உடல் உறுப்புக்கள் செயலிழந்து கண்பார்வையும் பறிபோன அந்த நிலையில் அவனது இலக்கிய மனம் விழித்துக்கொண்டது. இந்த நாவல் பிறந்தது. ஆம்! இது கதையல்ல; தனது இளமையை, தனது வாழ்வை  தாய்நாட்டின் சேவைக்கு அர்ப்பணித்த ஒரு மாவீரனின் வாழ்க்கை.

மண்ணின் ஈரமும், மக்களை நேசிப்பவர்களின் வீரமும்தான் இன்னும் இவ்வுலகில் உயிர்களைக் காத்துக்கொண்டிருக்கின்றன. இந்த வீர உணர்வுதான் பகத்சிங்கையும், அவரது தோழர்களையும் வெள்ளையனுக்கெதிராகப் போராடத் தூண்டியது. இரண்டாம் உலகப் போரில் கொடுங்கோலன் ஹிட்லரை வீழ்த்தி பாசிசத்தின் கோரப்பிடியிலிருந்து உலகைக் காத்தது பொதுவுடைமைப் போர்வீர்ர்கள் கொண்டிருந்த  மண்ணின், மக்களின் மீதான நேசம். .இன்றைய சூழலில் பன்னாட்டு நிறுவனங்களாலும், உள்நாட்டுத் தரகு முதலாளிகளாலும் சூறையாடப்பட்டு தமது வாழ்க்கையை இழந்து நிற்கும் மக்களும், தனது வளங்களை இழந்துகொண்டிருக்கும் நம் தேசமும் நம்மிடம் கோரி நிற்பது இந்த உணர்வுகளையன்றி, வேறென்ன?

ஆசிரியர் - நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி

கிடைக்குமிடம்
 
கீழைக்காற்று
10, அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
 044-28412367

Jul 5, 2015

நம்பிக்கையற்று இருக்கும் பொழுது!

உண்மை மனிதனின் கதை - நூல் அறிமுகம்
- பரீஸ் பொலெவோய்

இரண்டாம் உலகப்போர் உலக நாடுகளின் மீது பாசிசப் பேரிருள் சூழ்ந்துகொண்டிருந்த காலம்...உலகையே தனது காலடியின்கீழ் கொண்டுவர பேராசைப்பட்ட ஹிட்லரின் ஆணைக்கினங்க நாஜிப் படைகள் கோரதாண்டவத்தை நடத்திக்கொண்டிருந்தன.

போர்க்களத்தில் ஒவ்வொரு நாடாக ஜெர்மனியிடம் வீழ்ந்து கொண்டிருந்தன. அன்றைய சோவியத் யூனியன் பொதுவுடைமையின் கீழ் தளிர்நடை போட்டுக்கொண்டிருந்த காலமது. புதிய சமூகத்தைக் கட்டியெழுப்பும் பணியில் முழுவீச்சுடன் ஈடுபட்டிருந்த சோவியத்தின் அதிபர் தோழர் ஸ்டாலின் போரைத் தவிர்க்கும் விதமாக ஹிட்லருடன் சமாதான ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியிருந்தார்.

போர்வெறி கண்ணை மறைக்க,. அப்போதுதான் வளர்ந்து கொண்டிருந்த இளம் சோவியத்தை எளிதில் கைப்பற்றி விடலாம் என்று கணக்கிட்ட ஹிட்லர் ஒப்பந்தத்தை தூக்கியெறிந்துவிட்டு சோவியத்தின்மீது போர்தொடுத்தான். ஆனால் மகத்தான சோவியத்தின் செஞ்சேனை வீரர்கள் நாஜிப் படைகளுக்கு மரண அடிகொடுத்து வீழ்த்தினர்; உலக நாடுகளை பாசிசத்தின் பிடியிலிருந்து விடுவித்த அந்த மாபெரும் போரில் பல்லாயிரக்கணக்கான சோவியத் வீரர்கள் தீரத்துடன் ஈடுபட்டனர். தனது இரண்டு கால்களையும் சண்டையில் இழந்துவிட்டபோதிலும் தாய்நாட்டைக்காக்கும் காக்கும் இலட்சியத்துடன் கட்டைக்கால்களைப் பொருத்திக்கொண்டு மீண்டும் விமானப்படையில் சேர்ந்து நாஜி விமானப்படையினைத் துவம்சம் செய்த ஒரு இளம் விமானியின் - உண்மை மனிதனின் - கதைதான் இந்நாவல்.

சோவியத் விமானி அலெக்ஸேய் மாரேஸ்யெவ்-ன் விமானம் எதிரியின் விமானப்படையால் தாக்கப்பட்டு, நிலைகுலைந்து ஆளரவமற்ற காட்டில் விழுந்து நொறுங்குகிறது. விபத்தில் அலெக்ஸேய்-ன் இரண்டு கால்களும் நடக்கமுடியாதவண்ணம் சேதமடைகின்றன. காடு பல கிலோமீட்டர் தூரம் பரந்து விரிந்தது. அது உறைபனிக்காலம். ஆனாலும் தனது அபாரமான மன வலிமையினால், 18 நாட்களாக, காட்டில் கிடைக்கும் பழங்களையும், இலை, தழைகளையும் உணவாகக் கொண்டு, காட்டுக் குச்சிகளின் துணையுடன் நடந்து, கைகளால் தவழ்ந்து நைந்துகிடக்கும் தனது பாதங்களை இழுத்துக்கொண்டு போராடி இறுதியில் ஒரு கிராமத்தை வந்தடைகிறான்.

பின்னர் இராணுவ மருத்துவமனையில் அவனது இரண்டு கால்களிலும் முழங்காலுக்கும் கீழுள்ள பகுதி வெட்டியெடுக்கப்படுகிறது. மனம் சோர்வுற்ற போதிலும் தனது இலட்சியத்தை விட்டுக்கொடுக்காமல் போராடுகிறான், அலெக்ஸேய். கட்டைக்கால்களின் உதவியுடன், தாங்கமுடியாத வலியையும், வேதனையையும் பொருட்படுத்தாமல் நடக்கவும், ஓடவும் நாள்தோறும் கடும் பயிற்சியில் ஈடுபடுகிறான். உடல்நலம் தேறியவுடன், மீண்டும் விமானப் படைத்தளத்திற்குச் செல்கிறான்.

அங்குள்ள படையதிகாரிகளிடம் போராடி மீண்டும் சண்டை விமானத்தை இயக்குவதற்கு அனுமதி பெறுகிறான். பிறகு நடைபெற்ற இறுதிச் சண்டையில் தேர்ச்சிபெற்ற விமானிகளைக்காட்டிலும் சிறப்பாக விமானத்தை இயக்கி நாஜிப் படைகளின் அதிநவீனப் போர்விமானங்கள் பலவற்றைச் சுட்டு வீழ்த்தி தனது தாய்நாட்டுக்கான கடமையைச் செம்மையாகச் செய்துமுடிக்கிறான்.

தனது தாய்நாட்டைக் காக்கும் போரில் தனது மக்கள் உயிரைக்கொடுத்துப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில் தான் வீணே மாண்டுவிடக் கூடாது; எப்பாடு பட்டேனும் உயிர்பிழைத்து, மீண்டுவந்து அந்தப் போரில் தானும் பங்கேற்கவேண்டும் என்கிற இலட்சிய வெறிதான், நாட்டுப்பற்றுதான், வைராக்கியம்தான் சாவின் நுழைவாயிலில் கிடந்தவனை மீண்டும் போர்க்களத்தில் கொண்டுவந்து சேர்த்தது. உன்னதமான நோக்கங்கள் மரணத்தையும் வென்று நிற்பவை என்பதைத் தன் வாழ்க்கை மூலமாக நிரூபிக்கிறான் "உண்மை மனிதன்" அலெக்ஸேய்.

தாங்கள் உண்ணுவதற்கே போதிய உணவு இல்லாத நிலையிலும், காட்டில் குற்றுயிராகக் கிடந்த விமானிக்கு தங்களிடம் சிறிதளவே மீதமிருந்த உணவையும் கொடுத்து, சிகிச்சையளித்த எளிய கிராம மக்களின் மனித நேயம்; தாங்க முடியாத கொடும் வேதனையைத் தான் அனுபவித்துக் கொண்டிருந்த போதிலும் தனது சக இராணுவ வீரர்களின் வேதனையைத் தணிக்கும் விதத்தில் நகைச்சுவையாகப் பேசி, அவர்களுக்கு நம்பிக்கையும், உற்சாகமும் ஊட்டிய இராணுவ அதிகாரி; உடலையல்ல; உள்ளத்தின் உயர்வை நாடுவதே உண்மைக் காதல் என்பதை உணரவைத்த இளம் நங்கையர் . என அன்றைய சோவியத் மக்கள் கொண்டிருந்த உன்னதமான, உயர்ந்த மனித மாண்புகளை பல்வேறு சம்பவங்களினூடாக எடுத்துக் கூறுகிறார் நூலாசிரியர்.

நாம் வாழும் சமூகம்தான் நமது சிந்தனையை, வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. ஆளும் வர்க்கங்கள் தமது கருத்துக்களை மக்கள்மீது பலவந்தமாகத் திணிக்கின்றன. இலாப வெறிகொண்ட இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் பணம் சம்பாதிப்பதே வாழ்க்கையின் நோக்கம் என்பதாக நமக்குக் கற்றுத்தரப்படுகிறது. பேராசை, சுயநலம், நுகர்வுவெறி என்பதாக மனித விழுமியங்கள் இன்று மாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதுவல்ல வாழ்க்கை. நாட்டுப்பற்று, சக மனிதர்களின் மீதான நேசம், இயற்கையின், சமூகத்தின் மீது அக்கறை உள்ளிட்ட நற்பண்புகளே வாழ்க்கையை முழுமையாக்குகின்றன. அப்படிப்பட்டதொரு வாழ்க்கை முறையை கொண்டிருந்த சோவியத் மக்களின், உண்மை மனிதனின் வரலாறுதான் இந்நாவல். ஒருமுறை வாசியுங்கள்.. .. நாம் இழந்து நிற்கும் வாழ்வின் உன்னதங்கள் புரியும்; அவற்றை மீட்பதற்கான வழிகளும் தெரியும்.

 - மருதமுத்து

Jun 17, 2015

நினைவுகள் அழிவதில்லை!



"போராளியை கொல்லலாம்.
போராளியின் லட்சியத்தை?”

******
 
ஆசிரியர் : நிரஞ்சனா

இந்தப் பூமிப்பந்தில் பல கோடி மாந்தர்கள் வாழ்ந்து மறைந்துள்ளனர். ஆனால் சிலரது வாழ்க்கை மட்டுமே வரலாற்றில் இடம் பெறுகிறது. அவர்கள் தமக்கென மட்டுமே சுயநலத்துடன் வாழாமல், சக மனிதர்களுக்காகவும், சமூகத்திற்காகவும் வாழ்ந்து சென்றதே அதற்கான காரணம் ஆகும். அவர்களது வாழ்க்கையானது வரலாற்று வானில் சுடர்வீசும் நட்சத்திரமாகத் திகழ்ந்து வாழும் மக்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிறது. அப்படிப்பட்டதொரு தியாக வாழ்க்கையில் ஒளிவீசிய நான்கு இளைஞர்களின் வாழ்க்கையை நமக்கு அறியத்தருகிறது இந்த நூல்.

அன்றைய பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் காலடியில் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவின் கிராமப் புறங்களில் நிலப்பிரபுக்கள் என்றழைக்கப்படும் பண்ணையார்கள் மற்றும் ஜமீன்தார்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. அவர்கள் வைத்ததே சட்டம் என்று குறுநில மன்னர்களைப் போல வாழ்ந்துவந்தனர். அவர்களது நிலங்களில் வேலைசெய்யும் ஏழைக் கூலித்தொழிலாளர்களுக்கு முறையான கூலி தரப்படுவதில்லை. பண்ணைகள் அவர்களைக் கொத்தடிமைகளாக நடத்தினர். வட்டிக்குப் பணம் கொடுத்து, ஏமாற்றி ஏழை விவசாயிகள் உழைத்துப் பிழைத்த சிறிய அளவு நிலங்களையும் பிடுங்கிக் கொண்டனர். இக்கொடியவர்கள் ஏழைவிவசாயிகளின் வீட்டுப் பெண்களையும் விட்டுவைப்பதில்லை. இப்படிப்பட்டதொரு நிலைதான் அன்றைய கேரளத்தின் மலபார் பகுதியிலிருந்த கையூர் கிராமத்திலும் இருந்தது.

ஏழை விவசாயக்குடும்பத்தில் பிறந்த அப்பு, சிறுகண்டன் ஆகிய இளைஞர்களுக்கு கையூர் நிலப்பிரபுவின் அக்கிரமங்கள் ஆத்திரமூட்டின. அவ்வூரிலிருந்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர் அவர்களுக்கு வழிகாட்டினார். மக்களை ஒன்றுதிரட்டிப் போராடமல் நிலப்பிரபுவின் கொடுமைகளை ஒழிக்க முடியாது என்கிற பொதுவுடைமைத் தத்துவத்தை அவர்களுக்கு விளக்கிக் கூறினார். தெளிவுபெற்ற இளைஞர்கள் ஏழை விவசாயிகளை அணிதிரட்டி அந்த ஊரில் விவசாய சங்கத்தை உருவாக்கினர். அதன்மூலமாக நிலப்பிரபுவின் கொடுமைகளை துணிச்சலாக எதிர்கொண்டு முறியடித்தனர். அவ்வூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வட்டார அளவிலான விவசாயிகளின் மாநாட்டிற்கான ஏற்பாடுகளின்போது நிகழ்ந்த சிறிய அசம்பாவிதத்தை முன்னிட்டு ஆளும் வர்க்கத்தின் ஏவல்நாயான அன்றைய மலபார் போலீசு கையூர் கிராம மக்களின் மீது கொடூரமான வன்முறைகளை அரங்கேற்றியது. நிலப்பிரபுவின் கொடுங்கோன்மைக்கெதிராக மக்களை அணிதிரட்டிப் போராடிய அப்பு, சிறுகண்டன், அபுபக்கர், குஞ்ஞம்பு ஆகிய நான்கு இளைஞர்களும் பொய்வழக்கில் கைதுசெய்யப்பட்டுத் தூக்கிலிடப்படுகின்றனர். மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் தியாகிகளான இந்த வீரப்புதல்வர்களின் வாழ்க்கையை எளிய நடையில், படிப்பவர்களின் இதயத்தில் ஆழமாகப் பதியவைத்துள்ளார் இந்நூலாசிரியர்.

பள்ளி,கல்லூரிகளில் நமக்குச் சொல்லப்படும் வரலாறானது திரிக்கப்பட்ட,பொய்யான,ஆளும் வர்க்கங்களின் நோக்கத்திற்கேற்ப புனையப்பட்டதாகும். ஆனால், உண்மையான வரலாறு என்பது உழைக்கும் மக்களால் படைக்கப்படுவது. அம்மக்களே வரலாற்றின் நாயகர்கள் ஆவர். மனிதகுல மேம்பாட்டிற்காகப் போராடியவர்களே உண்மையான வரலாற்று நாயகர்கள். இந்நூலை நீங்களும் படித்துப் பாருங்கள். ஏழை விவசாயிகளின் பிள்ளைகளாகப் பிறந்து, சமூக மாற்றத்திற்காகப் போராடி வரலாறாக வாழும் இந்த இளைஞர்களின் வீர உணர்வு நம்மையும் பற்றிக்கொள்ளும்.

- மருதமுத்து