Nov 22, 2014

திரையரங்கிற்கு வராதே! டிவிடியில் பார்!



நேற்று வழக்கம் போல டிவிடி கடைக்கு போயிருந்தேன்.  எப்பொழுதும் டிவிடிக்களை வெளியே வைத்திருப்பவர்கள், உள்ளே வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள். தெரிந்த பையன் என்பதால், ரைய்டா என்றேன். ஆமாம் என்றான்.

சமீபத்தில் விஷாலும், பார்த்திபனும் தங்கள் படங்கள் வெளியான பொழுது, அரசை நம்பாமல், அவர்களே தெருவில் இறங்கி டிவிடி விற்ற கடைகளில் ரைய்டு நடத்தி பிரச்சனை செய்தார்கள்.  இதனை தொடர்ந்து, திரையுலகமும் தங்கள் தொழில் நசிவதால், டிவிடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசை நிர்ப்பந்தித்து போராட இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருக்கிறார்கள்.

என்னைக் கேட்டால், திரையரங்கிற்கு வந்து படம் பார்ப்பதை தடுப்பதே திரையுலகம் சார்ந்தவர்கள் தான் என்பேன். கடந்த கருணாநிதி ஆட்சியின் பொழுது, படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தாலே வரிவிலக்கு என அறிவித்தார்.  ஏற்கனவே திரையுலகம் கருப்பு பணத்தால் மூழ்கி திளைக்கும் பொழுது, இந்த வரிவிலக்கு எல்லாம் ரெம்ப அதீதம். 

இதில் இந்த வரிவிலக்கு சலுகைகளையெல்லாம் பொதுமக்களுக்கு கண்ணிலேயே காட்டுவதில்லை. இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் புதுமைப் பெண் போன்ற சில படங்கள் வரும் பொழுது, மக்கள் நிறைய பேர் பார்க்கவேண்டும் என்று அரசு வரிவிலக்கு தருவார்கள். 5ரூ டிக்கெட் விலை என்றால், வரிவிலக்கு படங்களுக்கு 1ரூ தான் விலை. மக்களும் கூட்டம் கூட்டமாக போய் பார்த்தார்கள் என என் அண்ணன் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன்.

ஆனால், இப்பொழுது வரிவிலக்கு தந்தால், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்கு சார்ந்த ஆட்களே தின்று செரித்துவிடுகிறார்கள்.  இதைவிடக்கொடுமை என்னவென்றால், ரஜினி, கமல், விஜய் படங்கள் வெளியானால் விலையை கூடுதலாக வைத்தும் கொள்ளையடிக்கிறார்கள்.  திருட்டு டிவிடியினால் தாங்கள் பாதிக்கப்படுகிறோம் என பேசுபவர்கள் இதைப் பற்றியெல்லாம் வாயைத் திறப்பதில்லை.

மேலும் இப்பொழுதெல்லாம், பல திரையரங்குகளில் வெளியில் வாங்கும் தின்பண்டங்களை உள்ளே அனுமதிப்பதில்லை. ஆட்களை போட்டு, நன்றாக சோதனையிடுகிறார்கள். (இது குறித்து அரசின் வழிகாட்டுதல் இருக்கிறதா என தெரியவில்லை.  விவரம் அறிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்) ஆனால், உள்ளே அவர்கள் இரண்டு மடங்கு விலை வைத்து விற்கிறார்கள். ஒரு சின்ன பாட்டில் தண்ணீரின் விலை ரூ. 10 என்றால், சங்கம் திரையரங்கில் ரூ. 30 என விற்கிறார்கள். 200 % லாபம். இதை வியாபாரம் என சொல்லமுடியுமா? படம் பார்க்க வருகிறவர்களிடம் பணம் பறிப்பது என்று தான் சொல்லமுடியும்.

ஆக ஒரு குடும்பம் ஒரு படத்தை பார்க்க போனால், டிக்கெட் விலை, பார்க்கிங், ஸ்நாக்ஸ் என எல்லாவற்றையும் கணக்குப் பார்த்தால், ரூ1000 த்தை தொட்டுவிடுகிறது. அடுத்தப்படம் அடுத்த இரண்டு மாதத்திற்கு கிடையாது. விளைவு திருட்டு டிவிடியைத் தான் மக்கள் வாங்கிப் பார்க்கிறார்கள்.

நேற்று ஒரு நடுத்தர வயது அம்மா, மலையாளம், தமிழ் என ஒரே நேரத்தில் 6 டிவிடிக்கள் வாங்கினார்கள். எல்லாம் ரூ. 180 மட்டுமே.

ஆக, திரையுலகம் சார்ந்தவர்களால் தான் திரைத்தொழில் அழிக்கப்படுகிறது! அவர்கள் தங்கள் கொள்ளையை விடாதவரை, மக்கள் டிவிடியைத் தான் நாடுவார்கள் என்பது யதார்த்தம்.

No comments: