Nov 17, 2015

எப்படி இருந்தாலும் நீதிபதி நல்லதுக்குத்தானே சொன்னார்? - பதில்

வழக்கறிஞர் போராட்டத்தை அவதூறு செய்பவர்களுக்குப் பதில்! – 2

எப்படி இருந்தாலும் நீதிபதி நல்லதுக்குத்தானே சொன்னார்?

தீர்ப்பின்(கட்டாய ஹெல்மட்) நோக்கத்தைப் பார்க்க வேண்டாமா?

தீர்வு சரியானதுதானா, நடைமுறை சாத்தியமானதா என்றெல்லாம் பார்க்க வேண்டாமா? “ யானை வாங்க காசிருக்கு அங்குசம் வாங்க காசில்லையா” என்று கிண்டலாகக் கேட்கிறார் நீதிபதி. இந்தியாவிலேயே இரு சக்கர வாகனங்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு. தொழிலாளிகள், சிறு வியாபாரிகளூக்கு ஒரு டி.வி.எஸ் எக்செல் என்பது பிழைப்புக்கான ஆதாரம். நகர்ப்புறத்தில் ஒரு வண்டியில் கணவன் மனைவியுடன் இரண்டு பிள்ளைகள் போகும் காட்சி சகஜமானது. இவர்கள் எல்லோரும் தலைக்கவசம் அணிவது சாத்தியமா?

“விபத்துகளில் தலையில் அடிப்பட்டு மரணம் ஏற்படுவது அதிகமாக இருப்பதால் தலைக்கவசம் அணிய வேண்டும்” என்கிறார் நீதிபதி. “விபத்தில் கை-கால் முறிவதால் அதற்கு கைக்கவசம், கால் கவசம், வாகனப் புகையால் நுரையீரல் நோய் வருவதால் மூக்குக் கவசம்” என்று அடுத்தடுத்து தீர்ப்புகள் வந்தால், நீதிபதிகளின் நல்ல நோக்கத்தை யாராவது பாராட்டுவார்களா?
விபத்துகளால் ஏற்படும் மரணம் குறித்து அக்கறைப்படும் நீதிபதி, விபத்துக்கான அடிப்படைக் காரணம் எது என்றல்லவா ஆராய வேண்டும்? சாலைகள் பராமரிப்பே இல்லை. 45% கமிசன் கேட்கும் அதிகாரிகள் படத்தை போட்டு காண்டிராக்டர்கள் தலைமைச் செயலகத்தின் வாசலிலேயே டிஜிட்டல் பாணர் வைக்கிறார்கள். இது நீதிபதியின் கண்ணுக்குத் தெரியவில்லை. நம் நாட்டு சாலைகளின் தரத்துக்குப் பொருத்தமற்ற, அதிவேக கார்களையும், ரேஸ் பைக்குகளையும் புதிது புதிதாக அறிமுகப்படுத்தி, இளைஞர்களுக்கு வெறியூட்டுகின்றன ஆட்டோமொபைல் கம்பெனிகள். இது அவருக்குப் பிரச்சினையாகத் தெரியவில்லை. சாலை விபத்துகளுக்கு முதன்மைக் காரணமாக இருப்பது டாஸ்மாக் தான் என்பதும் அவர் கண்ணுக்குத் தெரியவில்லை. விபத்தில் இறந்தவர்கள் ஹெல்மட் அணியாமலிருப்பது மட்டுமே சாவுக்கு காரணம் என்று கருதுகிறார் நீதிபதி.

இதை அப்படியே சாராய சாவுகளுக்குப் பொருத்திப் பாருங்கள். டாஸ்மாக் கடை அப்படியே இருக்க, சாராயச் சாவை தடுக்கும் பொருட்டு, குடிகாரர்கள் எல்லோரும் ஆண்டுக்கு ஒருமுறை கல்லீரலை ஸ்கேன் செய்து போலீசிடம் ரசீதைக் காட்ட வேண்டும் என்று கூட நீதியரசர்கள் தீர்ப்பளிப்பார்கள்.
ஹெல்மட் விசயத்தில் மட்டுமல்ல, பெண்களுக்கு எதிரான வன்முறை விசயத்திலும் நீதிபதி கிருபாகரனின் கண்ணோட்டம் இப்படித்தான் இருக்கிறது. 2013-இல் பெண்கள் நீதிமன்றத்தை துவக்கி வைத்துப் உரையாற்றிய இவர், டெல்லி நிர்பயா வல்லுறவு கொலை பற்றி கருத்து கூறியிருக்கிறார். “வல்லுறவுக்கு ஆண்கள் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. பிரச்சனை வரும் என் தெரிந்தும் ஏன் அந்த பெண் இரவு நேரத்தில் வெளியே போகிறாள்” என்று கேட்டிருக்கிறார். டெல்லி குற்றவாளியின் வழக்கறிஞர், இதே கண்ணோட்டத்தில்தான் பி.பி.சி ஆவணப்படத்தில் கருத்து கூறியிருந்தார்.

29.8.2013 இந்து நாளேட்டில் நீதிபதி கிருபாகரனின் உரையைப் படித்த உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், அவருடைய ஆணாதிக்க மனோபவத்தையும், அரசியல் சட்டம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழங்கும் சம உரிமையையே அங்கீகரிக்காத அவரது கண்ணோட்டத்தையும் கண்டித்து அவர் மீது உரிய நடவடிக்க எடுக்குமாறு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்; இத்தகைய ஆணாதிக்க கண்ணோட்டம் கொண்டவர்கள் நீதிபதிகளாக இருந்தால், அவர்களது கருத்துகள் தனிப்பட்ட கருத்துகளாக மட்டும் இருக்காது. அவை அவர்களது தீர்ப்புகளிலும் பிரதிபலிக்கும் அபாயம் உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

1972-இல் மதுரா என்ற பெண் போலீசு நிலையத்தில் வைத்து வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் அந்த பெண் உடலுறவுக்குப் பழகியவள் என்பதால், அது வல்லுறவாக இருக்க முடியாது எந்று தீர்ப்பளித்தது. அதற்கு எதிராக நாடு முழுவதும் எழுந்த கண்டனம்தான் வல்லுறவுக் குற்றம் தொடர்பான சட்டத் திருத்துக்கே வழி வகுத்தது.

“சாலையும் டாஸ்மாக்கும் அப்படியே தான் இருக்கும், நீதான் பாதுகப்பாக ஹெல்மட் அணிந்து செல்ல வேண்டும்” என்று கூறும் நீதிபதியின் கண்னோட்டத்துக்கும், ஆண்கள் அப்படி இப்படித்தான் இருப்பார்கள், பொம்பிளைதான் பாதுகாப்பாக பர்தா அணிந்து செல்ல வேண்டும் என்று கூறும் இசுலாமிய மதவாதிகளுக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா? நீதிபதி நல்லதுக்குத்தானே சொல்கிறார் என்று இதை விட்டுவிடவா முடியும்.

- ”அடிமைகள் அல்ல வழக்கறிஞர்கள்!” - மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு வெளியிட்ட‌ சிறு வெளியீட்டிலிருந்து....

No comments: