
மகளிர் தினம் - மார்ச் 8, 2009 - அரங்க கூட்டம்
உழைக்கும் பெண்களாய் ஒன்றிணைவோம்!
சிதைந்து வரும் நம் வாழ்வைச் சீரமைப்போம்!
சர்வதேச மகளிர் தினத்தில் உறுதியேற்போம்!
நாள் :
மார்ச் 8 - மாலை 3 மணி,
இடம் :
துர்கா நகர்,
செல்லியம்மன் (கோவில் அருகே),
குரோம்பேட்டை, சென்னை
தலைமை :
தோழர் உஷா,
பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை
சிறப்புரை :
தோழர் துரை சண்முகம்,
மக்கள் கலை இலக்கிய கழகம், சென்னை.
அன்பார்ந்த உழைக்கும் பெண்களே!
மார்ச் 8 என்றாலே மகளிர் தினம், வருடத்திற்கு ஒருமுறை வந்து போகும் இந்த தினத்தைப் பற்றி மெத்த படித்த மேதாவிகள், மேட்டுக்குடி சீமாட்டிகள், அரசு மற்றும் முதலாளித்துவ நிறுவனங்களில் பணிபுரியும் நடுத்தர வர்க்கப் பெண்கள் மட்டுமே தெரிந்து வைத்திருப்பார்கள்.
அதையும், அதன் (சர்வதேச மகளிர் தினத்தின்) உண்மையான அர்த்தத்தில் தெரிந்து வைத்திருப்பார்களாயென்று தெரியாது. அதிலும் அன்றாடம் உழைத்து, உழைத்து வாழ்வை சிதைத்துக் கொண்டுவரும் எழுத படிக்கத் தெரியாத மற்றும் ஓரளவு படிக்கத் தெரிந்த உழைக்கும் பென்களுக்கோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கடுமையான போராட்டங்களை விடாப்பிடியாக, தொடர்ச்சியாக நடத்தி பெண்களுக்கான வாக்குரிமை, சொத்துரிமை, விவாகரத்து உரிமை போன்ற ஜனநாயக உரிமைகளைச் சாதித்துக் கொடுத்த தினம் தான் சர்வதேச மகளிர் தினம்.
இப்படிப்பட்ட தினத்தை இன்று தொண்டு நிறுவனங்களும், விளம்பர நிறுவனங்களும், பிழைப்புவாதச் சங்கங்களும், அரசு நிறுவனங்களும் அவரவர் தகுதிக்கேற்ப ஆபாசக் கூத்துக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தி அரட்டை அடிக்கும் தினமாக மாற்றி வருகின்றன. இதன் மூலம், அதன் போர்க்குணத்தையும் தியாகத்தையும் இழிவுப்படுத்தி வருகின்றன.
சுய உதவிக் குழுக்கள், என்.ஜி.ஓ.க்கள், சமூக நல மன்றங்கள் அனனத்தும் அரசு அறிவிக்கும் சீர்திருத்தச் சட்டங்கள் மூலம் உரிமைகளைப் பெற்றுவிடமுடியும் என்ற மாயையை உழைக்கும் பெண்களிடம் உருவாக்கி, அவர்களின் போராட்ட உணர்வையும் முடக்கி வருகின்றன. மேலும், உழைக்கும் பெண்களின் வறுமையை பயன்படுத்தி அரசு வங்கிகளில் கடன் வாங்கிக் கொடுத்து நிரந்தர கடனாளியாக்கி உரிமைக்காகப் போராடும் வர்க்க உணர்வுகளையும் அடக்கிவிடுகின்றன.
இவைகள் உருவாக்கி வரும் இழிவுகளை, சதிகளை முறியடிக்க, 8 மணி நேரம் உழைப்புக்கான உரிமைப் போரில் பெண்களின் முன்னோடியாகத் திகழ்ந்த தோழர் கிளாரா ஜெட்கின் தியாகத்தை நெஞ்சில் ஏந்தி பயணத்தை தொடருவோம்.
இந்தப் பயணம் வாக்களிப்பதற்கோ, விரலில் மை வைத்துக் கொள்வதற்கோ, வெட்டியாகப் பொழுதைக் கழிப்பதற்கோ அல்ல. பெண்களின் மீதான பாலியல் வன்முறை, வரதட்சணைக் கொடுமை, உழைப்புச் சுரண்டல் போன்ற எண்ணற்றக் கொடுமைகளுக்கு சவக்குழி அமைக்கும் போராட்டப் பயணமாக மாற்றியமைப்போம்.
மேலும், சர்வதேச மகளிர் தினத்தை, உலக உழைக்கும் பெண்கள் தினமாக வளர்த்தெடுக்கவும், உழைக்கும் மக்களின் விடுதலையே பெண்களின் உண்மையான விடுதலை என்பதை வார்த்தெடுக்கவும் உறுதியேற்போம்.
இதற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது என்னவெனில், நம்மை முடக்கி வரும் பல்வேறு மூட நம்பிக்கைகளில் இருந்து விடுபடுவதே.
பிறந்ததில் இருந்தே வாழ்வின் பெரும் பகுதியை குடும்பத்திற்காக உழைத்த நாம், சற்று, நம்மை போன்ற உழைக்கும் பெண்களுக்காக உழைக்க முன்வருவோம். சிதைந்து வரும் நம் வாழ்வைச் சீரமைப்போம். படிப்படியாக சமூக மாற்றத்தை நிகழ்த்தவும் இதர உழைக்கும் வர்க்கத்தோடு அணிவகுப்போம்.
• அழகுப் பதுமைகளாக வலம் வருவதை வக்கிரமென ஒதுக்குவோம்!
• போராளிகளாகக் களம் இறங்குவதை கெளவரமாக கருதுவோம்!
• சாதி – மத வேற்றுமைகளை களைந்து வர்க்கமாக ஒன்றிணைவோம்!
• பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம்!
• பணி இடங்களில் இழிவாக நடத்தப்படுவதை முறியடிப்போம்!
• இரவு நேரப் பணிகளே பெண்களுக்கு இல்லாமல் செய்வோம்!-
- பெண்கள் விடுதலை முன்னணி,
தொடர்புக்கு :
தோழர் உஷா,
எண் : 29, இந்திரா நகர் 16 வது குறுக்குத் தெரு,
குரோம்பேட்டை, சென்னை - 44
பேச : 98849 50952


