Aug 5, 2014

பெண் நீதிபதிக்கே இந்த கதி!



தில்லி பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு பிறகு, நாடு முழுவதும் போராட்டங்களும் அதை தொடர்ந்து விவாதங்களும் நடைபெற்றன! கடுமையான சட்டங்கள் கூட இயற்றப்பட்டன.  ஆனால், சம்பவங்கள் குறைந்தபாடில்லை.  இதோ, குவாலியரில் பெண்கள் பாலியல் பிரச்சனையை விசாரிக்கும் விசாகா கமிட்டிக்கு பொறுப்பான பெண் நீதிபதியே பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டு, பணியை ராஜினாமாவும் செய்துள்ளார். 
****

மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக மாவட்டக் கூடுதல் நீதிமன்ற பெண் நீதிபதி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்ற நீதிபதி அளித்த பாலியல் துன்புறுத்தல் காரணமாக தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அவர் பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதாவுக்கு, அவர் அனுப்பியுள்ள புகார் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

குவாலியர் நீதித்துறை நிர்வாகத்தை கவனிக்கும் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி, எனது பணியின் மீது அதிக ஆர்வம் காட்டினார். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நீதித்துறை அதிகாரி ஒருவரின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன்.

அப்போது எனது மகள் முன்னிலையில் என்னைப் பற்றி அநாகரீகமான முறையில் பேசினார்மேலும், நீதித்துறை அதிகாரி ஒருவரின் மனைவி தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு, திரைப்படப் பாடல் இசைக்கு நான் நடனமாட வேண்டும் என்றும், அதைக் காண உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்வத்துடன் இருக்கிறார் என்றும் தெரிவித்தார். என்னை தனிமையில் தனது பங்களாவுக்கு வந்து சந்திக்கும்படி நீதிபதி தெரிவித்தார்.

ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதியின் விருப்பத்துக்கு நான் அடிபணியவில்லை. இதனால் குவாலியரில் இருந்து சித்திக்கு என்னை அந்த நீதிபதி இடமாற்றம் செய்ய வைத்தார்.

இதுதொடர்பாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்திக்க முயன்றும், என்னால் முடியவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதியை நான் தொடர்பு கொண்டபோது, எனக்கு அவர் மிரட்டல் விடுத்தார்.

எனவே வேறு வழியின்றி கடந்த மாதம் 7ஆம் தேதி பதவியை ராஜிநாமா செய்து விட்டேன். இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி உண்மை நிலையை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பெண் நீதிபதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

லோதா கருத்து: இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லோதா, பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், "இது மிகவும் முக்கியமான விவகாரம் ஆகும். இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பு கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படும்' என்றார்.

பொதுநல வழக்கு: இந்நிலையில், பெண் நீதிபதியால் குற்றம்சாட்டப்பட்ட மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எஃப்..ஆர்.) பதிவு செய்யவும், இதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும், உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் மனோகர் லால் சர்மா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதேபோல், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் தலைமையில் பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதியை உயர் நீதிமன்றம் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

குற்றச்சாட்டு நிரூபணமானால் தண்டனைக்குத் தயார்: உயர்நீதிமன்ற நீதிபதி
 
பெண் நீதிபதி தெரிவித்துள்ள குற்றச்சாட்டு நிரூபணமானால் தூக்கு தண்டனையை ஏற்கவும் தயார் என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அந்த மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. இது குறித்து சிபிஐ அல்லது எந்த அமைப்பின் விசாரணையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதம், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியால், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமணி, 05/08/2014

Jul 1, 2014

'தோல்' - நாவல் - ஒரு பார்வை!



பஞ்சாலை தொழிலாளர்களின் வாழ்க்கையை பேசிய தொ.மு.சி. ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் துயர வாழ்க்கையைப் பேசிய டேனியலின் ’எரியும் பனிக்காடு’, உப்பளக வாழ்க்கைத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பகிர்ந்த ஸ்ரீதர கணேசனின் ‘உப்பு வயல்’,  திரையரங்கில் வேலை செய்யும் உதிரி பாட்டாளிகளான இளைஞர்களின் வாழ்க்கையைப் பகிர்ந்த பெருமாள் முருகனின் ‘நிழல் முற்றம்’ என தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பேசிய தமிழ் நாவல்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். இதன் தொடர்ச்சியில் தோல் தொழிலாளர்களின் வாழ்க்கையை, இலக்கிய வரலாற்றில் ,முதன்முதலாகவும், அழுத்தமாகவும் பேசும் நாவல் செல்வராஜின் ’தோல் நாவல்’!

பர்ஸ், செருப்பு என தோலால் செய்த பொருட்கள் நம் எல்லோருக்கும் பிடித்தமானவை. காரணம் அவைகள் மிருதுவானவை. ஆனால், தோல் தொழிற்சாலையும், அதில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கையும் மிக மிக கடினமானவை! துயரமானவை!

நாவல் சுதந்திர போராட்ட காலக்கட்டத்தில் (1940 -1950) திண்டுக்கல்லை களமாக கொண்டு பயணிக்கிறது! தோல் தொழிற்சாலையில் தோல்களின் குடலைப் புரட்டும் நாற்றம்; சுண்ணாம்பு குழிக்குள் தோல்களை முக்கி நனைத்தெடுக்கும் பலமணி நேர வேலை; குறைவான கூலி! தொழிலாளர்கள் குறிப்பாக அருந்ததியர்களும், பறையர்களும் என தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பதால், ஆண் தொழிலாளர்களுக்கு அடியும் உதையும், பெண் தொழிலாளர்களுக்கு  கூடுதலாக பாலியல் தொல்லைகளும், வன்முறைகளும் என நோய்களும், சாவுகளும், ஒடுக்குமுறைகளும் மிக மலிந்த வேலை! தொழிலாளர்களைப் பாதுகாக்க தொழிற்சங்கம் உருவாகிறது! முதலாளிகள் இன்னும் மோசமான ஒடுக்குமுறையை தொழிலாளர்கள் மீது ஏவுகிறார்கள்.

நடக்கும் வர்க்கப் போராட்டத்தில் தொழிலாளர்களுடன் இணைந்து போராடுகிற ஒவ்வொருவரும் வேறொரு வார்ப்பிற்கு ஆச்சர்யத்தக்க கையில் உருமாறுகிறார்கள். கந்துவட்டிக்காரனால் நடுத்தெருவில் அம்மணமாக்கப்படுகிற வீராயி, பின்னாளில் தொழிலாளிகளின் அணிக்கு தலைமை தாங்குகிறவராக மாறுகிறார். தொழிற்சங்க தலைவரை கொலை செய்ய அனுப்பப்படுகிற முதலாளியின் அடியாள் சந்தனத்தேவன் தொழிலாளர்களைப் பாதுகாக்கிற காவலராகிவிடுகிறார். பார்த்த பெண்களையெல்லாம் சூறையாடுகிற மேற்பார்வையாளன் முஸ்தபாவை அடித்து துவைக்கும் தொழிலாளி மாடத்தி!. தவறாக நடக்க முயன்ற முஸ்தாபாவை கொலை செய்துவிடுகிற தொழிலாளி சிட்டம்மா யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து நகர்ந்துவிடுகிறார். இந்த கொலையை தொழிற்சங்கவாதிகளை பழிவாங்க காவல்துறை முயலும் பொழுது, அவர்களை காப்பாற்றுவதற்காக தான் செய்த கொலையை ஒப்புக்கொள்கிற சிட்டம்மா!

மறுகாலனியாதிக்க சூழலில், மூலதனம் முன்பை விட மூர்க்கத்தனமாக தனது சுரண்டலை செய்துவருகிறது. தொழிலாளர்கள் சமரசமற்று போராடுகிற புரட்சிகர தொழிற்சங்கங்களில் இணைந்து போராடவேண்டிய நேரமிது! இந்த நாவல் வர்க்கப்போராட்டத்தின் பலன்களை நேர்மறையில் கற்றுத்தருகிறது! நம்பிக்கையை தருகிறது. நாவலில் நீதிமன்றம், நீதிபதிகள் குறித்து ஒரு நம்பிக்கையை ஆசிரியர் தருகிறார். கடந்த இருபது வருடங்களில் தொழிலாளர் விரோத, சமூக விரோத தீர்ப்புகளைத் தந்து நீதிமன்றங்கள் அந்த நம்பிக்கையை களைந்திருக்கிறார்கள்!

நாவலின் வடிவத்தை பொருத்தவரையில், பொதுவுடைமை இலக்கியவாதிகளின் பிரச்சார நெடிப்பற்றிய பிற இஸத்துக்காரர்கள் ‘கவலையை’ ஆசிரியர் தனது எழுத்தாற்றலால் போக்கியிருக்கிறார். நாவல் தொடங்கும் பொழுதே எத்தனை கதாபாத்திரங்கள், என்ன பாத்திரம் என வகைப்படுத்தி தந்திருக்கிறார். இவ்வளவு பெரிய நாவலில் ஓரிடத்தில் கூட புரிந்துகொள்வதில் எந்த சிக்கலும் இல்லை! நாவல் 2012ல் சாகித்திய அகாடமி விருதை வென்றிருக்கிறது! 

ஆசிரியருக்கு நமது வாழ்த்துக்கள்!

695 பக்கங்கள் 

விலை ரூ. 400 

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,