 |
| ஜெயஸ்ரீ |
அன்று
சகதோழர் ஒருவர் மூலமாக செய்தி அறிந்து, மருத்துவமனைக்கு சென்ற பொழுது, ஜெயஸ்ரீயின்
உடல் மார்ச்சுவரியில் இருந்தது. காதுகளில்
காயம், இரு கைகளிலும் இறுக்கமாய் கட்டப்பட்டிருந்த கயிறால் தடமாய் பதிந்திருந்தன. உடல் முழுவதுமே அங்காங்கே காயங்கள். பாலியல் வெறிபிடித்த
மிருகங்கள் அந்த பெண்ணை மோசமாக குதறியிருந்தார்கள். அந்த பெண்ணின் அக்கா “பிறப்புறுப்பையே சிதைந்திருந்தார்கள்”
என அழுதுகொண்டே சொன்ன பொழுது, என்னையறியாமல்
கண்ணீர் வந்துகொண்டேயிருந்தது. அதற்கு பிறகு ஒரு நிமிடம் கூட அங்கு நிற்கமுடியவில்லை.
****
ஜெயஸ்ரீ.
21 வயது. கலகலப்பான பெண். எல்லோரிடமும் சகஜமாக பேசக்கூடிய பெண். சென்னை பாரிஸ், யானை
கவுனி அருகே ஒரு சிறு பட்டறையில் வேலை செய்திருக்கிறாள். ஆணுக்கு நிகராய் அத்தனை வேலைகளையும் செய்யக்கூடியவள்.
காதல்
என்ற வலையில் வீழ்த்தி அந்த பெண்ணை சென்னையை விட்டு வெளியூருக்கு அழைத்துபோயிருக்கிறான்
ஒருவன். ஆனால், அங்கே பல வெறிபிடித்த மிருகங்கள்
பல நாட்கள் அந்த இளம்பெண்ணை சிதைத்திருக்கிறார்கள்.
 |
| சாலை மறியலின் பொழுது |
காணாமல்
போன நாளிலிருந்து காவல்துறையிடம் தொடர்ந்து முறையிட்டிருக்கிறார்கள். காவல்துறையோ மிக
அலட்சியமாகவும், மெத்தனமாகவும், அதிகாரத்திமிருடனும் நடந்திருக்கிறார்கள். கள்ளக்குறிச்சியில் தனியாக ஜெயஸ்ரீ நின்று கொண்டிருப்பதாகவும்,
அழைத்து செல்ல ஒருவர் தகவல் சொல்லும் பொழுதும்,
அங்கு போய் இரு காவல்துறையினர் அழைத்து வந்த பொழுதும் எந்த விசாரணையும் விரிவாக மேற்கொள்ளவில்லை.
அரை மயக்கநிலையில் ஜெயஸ்ரீயை அழைத்து வந்த பிறகும், அரசு மருத்துவமனையில் மருத்துவம்
பார்த்தால், ஊடகங்களில் செய்தி வந்து மானம் போய்விடும் என தனியார் மருத்துவனைக்கு அழைத்து
செல்ல தவறாக வழிகாட்டியிருக்கிறார்கள். இரண்டாம் நாள் மிகவும் சீரியசாகி அரசு மருத்துவமனைக்கு
அழைத்து செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்துவிட்டது. உறவினர்களும், பொதுமக்களும் சாலை
மறியல் உட்பட பலவழிகளில் போராடியதால் தான், பல்வேறு இழுத்தடிப்புக்கு பிறகு வழக்கையே
பதிவு செய்திருக்கிறார்கள். காவல்துறையின் அத்தனை நடவடிக்கைகளிலும் குற்றவாளிகள் யாரென்று
தெரிந்து தப்பவிடுவதற்காக செயல்பட்டது பச்சையாக தெரிந்தது.
ஒரு
பெண். ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்தவள். ஏழைப் பெண் என்றால் இத்தனை இளக்காராமா? எந்த
ஓட்டுக் கட்சியும், தலித்களுக்காக போராடக்கூடிய தலித் அமைப்புகளும் எட்டிக்கூட பார்க்கவில்லை.
பெண்கள்
விடுதலை முன்னணி தோழர்களும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சார்ந்த தோழர்களும்
பாதிக்கப்பட்டவர்களோடு நின்று உறுதியாக போராடவில்லையென்றால், ஜெயஸ்ரீ காதல் தோல்வியில்
தற்கொலை செய்துகொண்டாள் என்று சத்தமேயில்லாமல் முடித்திருப்பார்கள்.
பாலியல்
வன்கொடுமை பற்றி பேசும்பொழுதெல்லாம் சட்டங்களை கடுமையாக்கவேண்டும் என்ற குரல்கள் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.
சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே குற்றவாளிகளை பாதுகாக்குகிற வேலைகளை
செய்யும் பொழுது சட்டங்களை கடுமையாக்கி என்ன செய்ய?
****
புகைப்படத்தில்
இருக்கும் ஜெயஸ்ரீயின் மலர்ந்த புன்னகையும், மார்ச்சுவரியில் ரணமாக இருந்த சலனமற்ற
உடலும் “மீண்டும் ஒரு ஜெயஸ்ரீயை உருவாக்க விட்டு விடாதீர்கள் அக்கா” என மீண்டும் மீண்டும்
அவளின் குரல் நினைவலைகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது!
****