Aug 5, 2016

மிதிவண்டியின் நினைவலைகளில்…



மிதிவண்டியில் முன்னாடி அமர்ந்து பயணிப்பது மிகுந்த நெருக்கத்தை உணரமுடியும்! அது நண்பனாலும், காதலியானாலும்!
***

ஒரு ஞாயிறு காலை. டீனேஜ் வயது. எங்கள் தெருவில் இருந்த ஈஸ்வரியை சைட் அடித்துக் கொண்டிருந்த காலம். பக்கத்து தெருவில் வண்டி பழகி கொண்டிருந்தாள்.

வண்டி பழகும் அழகை நானும் நண்பனும் கட்டிமுடிக்கப்படாத ஒரு கட்டிடத்தில் நின்று வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தோம். திடீரென எங்கள் இருவர் பக்கம் திரும்பி இங்கே வாருங்கள்! என அழைத்தாள். வேறு யாரையும் அழைக்கிறதா! என இருவரும் வேகமாய் திரும்பி பார்த்தோம். யாரும் இல்லை. நண்பன் வீட்டிற்கு பயந்து கொண்டு போகவில்லை. நான் தைரியமாய் போனேன்.

தம்பியாலும், தங்கையாலும் வண்டி ஓட்டும்பொழுது, வண்டியை பிடிக்கமுடியவில்லை. அதற்குத்தான் அழைத்திருக்கிறாள். ஈஸ்வரி வண்டியை ஓட்ட, நான் பிடித்துக்கொண்டேன். ஒரு மணி நேரம். கூச்சமாகவும், பதட்டமாகவும் இருந்தது.

அடுத்த நாள், என் அக்காவிடம் ஈஸ்வரிக்கு வண்டி ஓட்டக்கற்றுக்கொடுத்ததைப் பார்த்து வயித்தெரிச்சல் பட்டு, யாரோ போட்டுக்கொடுத்துவிட்டார்கள். "அந்த பொண்ணு யாருடா! நம்ம அத்தைப் பொண்ணா! மாமன் பொண்ணா! நீ சைக்கிள் சொல்லித்தர!" என ஒருமணி நேரம் திட்டு வாங்கியது தனிக்கதை!
***

16 வயதிலிருந்து ஆடல், பாடல் நிகழ்ச்சி, பட்டிமன்றம், சொற்பொழிவு, நாடகம், திரைப்படம், கலைவிழா, பொதுக்கூட்டம், விடிய விடிய நண்பர்களுடன் விவாதம் என பல இரவுகள் மதுரை தெருக்களில் சுற்றித் திரிந்த பயணம் எதுவும் மிதிவண்டி இல்லாமல் சாத்தியமாயிருக்காது!
***

சமீபத்தில் ஒரு உறவினர் வீட்டுக்கு போயிருந்தேன். அவரின் 6ம் வகுப்பு படிக்கும் பையன் வரைந்த ஓவியங்களை காண்பித்தார்கள்.

அதில் ஒரு ஓவியம். ஒரு பரபரப்பான மாநகர சாலை. சுற்றிலும் நிறைய கான்கிரீட் கட்டிடங்கள். சாலையில் நிறைய கார்கள் பயணிக்கின்றன. அவ்வளவு தான். பகீரென்று இருந்தது.

"தம்பி! இன்றைக்கும் நிறைய மனிதர்கள் நடந்துபோகிறார்கள். மிதிவண்டியில் பயணிக்கிறார்கள். கூட்டம் கூட்டமாய் பறவைகள் பறக்கின்றன. சாலையின் ஓரங்களில் மரங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் சேர்த்தால் ஓவியம் இன்னும் அழகாக மாறிவிடும்" என்றேன்.

புன்னகைத்து சரி என்றான்.

***

20 வயதில்... கோடைகாலத்தில், நானும், நண்பனும் தேநீர் கடையில் உலகத்தைப் பற்றி கவலை கொண்டு பேசிக்கொண்டிருந்தோம். :)
அப்பொழுது எங்களை மிதிவண்டியில் இளம்பெண் தென்றலாய் கடந்து சென்றாள். சாலையின் வளைவில் மண்ணின் சதியால் தொபுக்கடீர் என தவறி விழுந்தாள். பதறிப்போன நாங்கள் ஓடிப்போய் உதவி செய்தோம். பிறகு அந்த பெண்ணிடம் பேசிக்கொண்டே வீடு வரைக்கும் போய் பாதுகாப்பாக விட்டு வந்தோம்.
***

1990-களில் சிடி, டிவிடி வருவதற்கு முன்பு, வீடியோ கேசட்தான் பிரபலம். பொருளாதாரத்தில் வசதியானவர்களின் வீட்டில் தொலைக்காட்சியே இருக்கும். இன்னும் சொற்பமான நபர்களிடம் தான் பிளேயர் இருக்கும். திரையரங்கை விட்டால், படம் பார்ப்பது என்பது மிகவும் சிரமம். வருடம் ஒருமுறை கோயில் திருவிழாக்களில் ஒரு சாமிபடம், இரண்டு சமூகபடங்கள் என திரையிடுவார்கள். பாய்விரித்து படுத்துக்கொண்டெல்லாம் ஜாலியாய் பார்ப்பார்கள்.

நண்பர்களிடையே வசூலைப் போட்டு, பிளேயரை வாடகைக்கு எடுத்து பிடித்த படங்கள் போட்டு பார்க்கலாம் என முடிவுசெய்தோம். வாடகைக்கு எடுத்துவருகிற பிளேயரும், வீடியோ கேசட்டும் இல்லாத அழிச்சாட்டியெல்லாம் செய்யும். ஒருவழியாக போராடி மூன்று படங்கள் பார்த்து நண்பர்கள் எல்லாம் தூங்கி போக, காலை 5 மணிக்கு வெளியே வந்து பார்த்தால், என் குதிரையை காணோம். அதுதாங்க என் மிதிவண்டி! தொலைந்து போனதில் எனக்கு கூட பெரிய வருத்தம் இல்லை.எங்கம்மா தான் 1000 ரூ. வண்டி போச்சே!ன்னு மூன்று நாள் சோகமா இருந்தார்.
***

1990களில்மதுரை சோலைமலை திரையரங்கில், மிதிவண்டிக்கு தரும் டோக்கனுடன் ஒரு டிக்கெட்டையும் தந்துவிடுவார்கள். வரிசையில் மல்லுக்கட்டும் சிரமத்தை தரமாட்டார்கள். ஆகையால், புதுப்படங்களுக்கும், சனி, ஞாயிறுகளிலும் மிதிவண்டி இருந்தால் சோலைமலையை நம்பி படத்திற்கு போகலாம்! மிதிவண்டிக்கு மரியாதை! :)
***


சென்னையில் வாடகைக்கு மிதிவண்டி தருவதை பார்க்கமுடியவில்லை. 1980 வாக்கில் எங்கள் ஊரில் மிதிவண்டியை வாடகைக்கு தருவார்கள். 1 மணி நேரத்திற்கு 2 ரூ. 15 வயதில் காசு தட்டுப்பாடு அதிகம்.

அதனால் ஒரு மிதிவண்டியை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, எல்லோரும் ஒல்லி என்பதால் ஒரே வண்டியில் 5 பேர் ஜாலியாய் 4 கிமீ தள்ளி இருக்கிற ஒரு பச்சைக் கிணற்றில் குளிக்க போவோம். 

20 அடி உயரத்தில் இருந்து தொபக்கடீர் என குளிர்ந்த நீருக்குள் குதித்து, 15 அடி ஆழம் வரை போய், வெளியே வருவது ஆனந்தமோ ஆனந்தம். இப்படி 3 மணி நேரமாவது நீரில் ஊறிக்கிடப்போம்! இப்படி அந்த ஆண்டு தண்ணீர் வற்றிய காலம்வரை, கிணற்றை பாடாய்படுத்தினோம்.


***

அறிந்தவர்கள் அபூர்வமாய் மிதிவண்டி கொண்டு வந்தால், வாங்கி கொண்டு ஒரு ஜாலி ரவுண்டு போய்விட்டு தந்துவிடுகிறேன்.

கடைசியாய் கொடைக்கானலில் வாடகைக்கு மிதிவண்டி வாங்கி, மெல்லிய மழைச் சாரலில் என் பெண்ணுடன் பயணம் போனது இன்னும் நினைவில் நிற்கிறது!

Selvam Ramki

Jul 30, 2016

அலைஸ் & ஜேம்ஸ் (2016) - அன்பை வெளிப்படுத்து!


ஜேம்ஸ் ஒரு ஓவியன். விளம்பர படங்கள் எடுத்துவருகிறார். அலைஸை (Alice) காதலிக்கிறார். நிரந்தர வருமானம் இல்லை என பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க காதலர்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

எட்டு ஆண்டுகள். ஐந்து வயது பெண் குழந்தை ஒன்று. இப்பொழுது அலைஸ் வங்கியில் பணிபுரிகிறார். ஜேம்ஸ் சின்ன சின்ன விளம்பர படங்கள் எடுத்து எப்பொழுதும் நிதி பற்றாக்குறையுடன், நிம்மதியில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறார். தன்னையும், குழந்தையும் கண்டுகொள்ளாமல் வாழ்கிறார் என கணவர் மீது நிறைய வருத்தம். இருவருடைய பரபர வாழ்க்கையும் மனக்கசப்பை தருகிறது.

இடையில் இரண்டு மாரடைப்புக்கு பிறகு அலைஸின் அப்பா சமாதான தூதனுப்புகிறார். அலைஸையும், குழந்தையையும் போய் பொறுப்பாக விட்டுவிட்டு, வீட்டிற்குள் வர மறுத்து வேலை விசயமாக வெளிமாநிலம் செல்கிறார். இரண்டு நாள்கள் கழித்து திரும்பி வந்து பார்க்கும் பொழுது, அலைஸின் அப்பா இறந்துபோகிறார். அலைஸின் வருத்தம் இப்பொழுது கோபமாகிவிடுகிறது.

ஜேம்ஸோடு வாழ பிடிக்காமல் விவாகரத்து வழக்கு தொடர்கிறார். ஒரு கார்விபத்தில் ஜேம்ஸ் சிக்கில் கோமாவில் படுத்துவிடுகிறார். அவருடைய உயிரை எடுத்துசெல்ல வரும் தூதன், போகிற வழியில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாய் இல்லாமல், எப்பொழுதும் தொழில், தொழில் என பதற்றத்துடன் சுற்றுவது, அலைஸின் அப்பாவுடன் பேசி அவரை சந்தோசப்படுத்தியிருக்கலாம் ஜேம்ஸ் தவறுகளை சுட்டிக்காட்டுகிறார்.

இதற்கிடையில் ஜேம்ஸின் தோழி அலைஸிடம் அவன் பெற்றோர் இல்லாமல் தனியாக வாழ்ந்தவன். அவனுடைய உலகம் ரெம்ப சின்னது. அதில் நீயும், உன் மகளும் தான் இருக்கிறீர்கள். அவன் எழுந்து வரும் பொழுது அவனை மன்னித்துவிடு! என்கிறார். அவனுடைய ஓவியக்கூடத்தில் அலைஸின் அப்பாவை வரைந்து வைத்திருக்கிறான். அலைஸ் மெல்ல மெல்ல ஜேம்ஸை புரிந்துகொள்கிறார்.

மீண்டும் வாழ விரும்புகிறேன் என ஜேம்ஸ் தூதனிடம் வேண்டி நிற்க, இது உனக்கு இரண்டாவது இன்னிங்ஸ். இனியாவது வாழ்க்கையை வாழ்! என வாழ்த்திவிட்டு போய்விடுகிறார்.

அலைஸ், ஜேம்ஸ் மீண்டும் தங்களை பரஸ்பரம் புரிந்துகொண்டு வாழ்க்கையை தொடர்கின்றனர். சுபம். :)

*****

5 ஸ்டார் என்ற தமிழ்ப்படத்தில் அப்பாவாக வரும் விஜயன் பிள்ளையை மிகுந்த கண்டிப்புடன் வளர்ப்பார். தனது தங்கை பெண்ணை திருமணமும் செய்து, ஊருக்கு பேருந்து ஏற்றிவிடும் பொழுது, “காலேஜை முடிச்சுட்டு வா! நீ ஒரு புது அப்பனை பார்ப்ப!” என்பார். ஆனால் அந்த பையன் திரும்ப வரவேமாட்டான். சென்னையிலிருந்து தலைமறைவாகி, ஜெர்மனிக்கு போய் அங்கு ஒரு பெண்ணை திருமணம் முடித்துவிட்டு செட்டிலாயிடுவான். தங்கை பெண்ணின் வாழ்க்கையை சீரழித்துவிட்டோமே என எண்ணி அந்த அப்பா தற்கொலை செய்துகொள்வார்.

இரண்டு படத்திலும் சொல்லப்படும் நீதி “அன்பை வெளிப்படுத்து” என்பது தான்! ஜேம்ஸ்க்கும் தன் குடும்பத்தின் மீது அத்தனை அன்பு உண்டு. ஆனால், எப்பொழுதும் வெளிக்காட்டுவதேயில்லை. அதை படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், பர பர வாழ்க்கைக்கு என்ன காரணம்? என்பதை படம் எங்கும் அலசவேயில்லை. அதிலும் உள்ளே போய் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். நிறைய நுகர்வு, சொந்த வீடு, அடுத்தடுத்து சொத்து என்ற ஓடுகிற ஓட்டத்தில் கணவன், மனைவி இருவரும் தனியாக இருக்கும் பொழுது கூட இதைப்பற்றித்தான் பேசுகிறார்கள். பாதுகாப்பின்மை குறித்து கவலைப்படுகிறார்கள். பரஸ்பரம் கோபம் கொள்கிறார்கள்.

சமூகத்தில் சுற்றியிருப்பவர்களின் நலனைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், தன் குடும்பத்தின் நலனை மட்டும் பார்ப்பது என்பது சுருங்கிப்போய் நிற்கிறது. சில குடும்பங்களை கவனிக்கும் பொழுது குடும்பத்தில் கூட தனிநபர் நலன் என்று போய் தான் நிற்கிறது. அன்பை வெளிப்படுத்து என்பதை விட, இதை பேசுவது தான் மிகவும் அவசியம்.

***

பிருத்விராஜ், வேதிகா இருவரும் படத்தை தாங்கியிருக்கிறார்கள். படத்தின் நீளம் அதிகம் என படத்தை எடுத்த விதம் நமக்கு உணர்த்துகிறது. ஒளிப்பதிவாளரே இயக்கிமிருக்கிறார். நல்ல ஒளிப்பதிவு. அந்த தேவதூதனாக வருபவருடைய பங்களிப்பு சிறப்பு

****

நன்றி : Selvam Ramki