Jun 13, 2018

இயக்குநர் மகேந்திரனின் நண்டு (1981)

உத்திரப்பிரதேசத்தில் நம்மூர் ஜமீன் குடும்பம் போல‌ ஒரு பணக்கார குடும்பம். நான் சொன்ன பொண்ணத்தான் கட்டணும்னு அப்பா அதிகாரமாய் சொல்ல, சுதந்திர சிந்தனை உள்ள நாயகன் வீட்டை விட்டு வெளியேறி நாயகன் சென்னைக்கு இன்ஜினியர் வேலைக்கு வருகிறார்.

சென்னையில் லைன் வீட்டில் குடியேறுகிறார். அங்கிருக்கும் குடும்பங்களில் நாயகியும் குடும்பமும் ஒன்று. கூடுதலாக நாயகி, நாயகன் அலுவலகத்திலேயே வேலை செய்கிறார்.

சிறுவயதிலிருந்தே நாயகன் ஆஸ்துமாவில் மிகுவும் சிரமப்படுகிறார். நாயகியின் குடும்பம் அவரை அக்கறையுடன் பார்த்துகொள்கிறது.

அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் காதுபடவே தப்பாக பேசுகிறார்கள். இந்த களேபரத்தில் நாயகன் விருப்பம் தெரிவித்து நாயகியை திருமணம் செய்துகொள்கிறார்.

நாயகனின் குடும்பம் அவர்களது திருமணத்தை ஏற்றுக்கொண்டதா? அவர்களுடைய வாழ்வில் மிகப்பெரிய அதிர்ச்சியை எதிர்கொள்ள நேரிடுகிறது. அது என்ன என்பது மீதி முழு நீளக்கதை!

****

'அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா', 'மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே', 'Kaise kahoon' - இந்தி பாடல் - இந்த படத்தின் மூன்று பிடித்த‌ பாடல்களையும் அவ்வப்பொழுது கேட்பதுண்டு! அதற்காகவே இந்தப் படத்தை பார்க்கவேண்டும் என நினைத்தேன். இளையராஜாவின் இசை படத்திற்கு பெரும்பலம். சிவசங்கரி எழுதிய நாவலை மகேந்திரன் படமாக்கியிருக்கிறார்.

படத்தில் வரும் எல்லா சிறு கதாபாத்திரங்கள் கூட மனதில் நிற்பது சிறப்பு. லயன் வீடுகளில் வரும் பாத்ரூம், தண்ணீர் பிரச்சனை, புறணி, வீட்டு சொந்தக்காரர் செய்யும் தொந்தரவுகள், ஒருவருக்கொருவர் அனுசரணையாக நடந்துகொள்வது என நன்றாக பதிவு செய்திருக்கிறார்.

சாதி மறுத்து செய்யப்படும் திருமணங்களில் பெரிய இடைஞ்சலாய் பெரும்பாலும் நிற்பது சம்பந்தகாரர்கள் தான். அதையும் நன்றாக பதிவு செய்திருக்கிறார்.

படத்தின் இறுதியில் சொல்லப்படும் அந்த 'செய்திக்காக'வா இப்படி ஒரு அதிர்ச்சி முடிவு!

நாயகன் சுரேஷின் பெயர் ராம் பிரசாத்.  நாயகி அஸ்வினியின் பெயர் சீதா.   இதில் ஏதும் காரணம் உள்ளதா என தெரியவில்லை

May 3, 2018

"நாட்டில இவ்வளவு செய்ய வேண்டியிருக்காப்பா?"

மே தின பேரணிக்கு போய் திரும்பும் வழியில் ஆறாம் வகுப்பு படிக்கும் என் பெண்ணிடம் பேசிக்கொண்டே வந்தேன்.

நாம் போராடி நாம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து... நீ முக்கிய பொறுப்புக்கு வந்தால்.. முதலில் என்ன செய்வாய்?

"பிச்சைகாரர்களுக்கு எல்லாம் வேலை கொடுப்பேன்!"

இதை தொடரலாமே என கேட்க துவங்கினேன்.

#மாணவர்களுக்கு?"

"எல்லோருக்கும் இலவச கல்வி கொடுப்பேன்"

"படிக்காத பசங்கள பார்த்திருக்கிறாயா?"

"இங்க பார்த்ததில்லை. கிராமத்தில் படிக்காம இருப்பாங்கல்ல! எல்லோரும் படிக்கனும்ல!"

#பெண்களுக்கு?"

"எல்லா இடத்திலும் சுத்தமான கழிவறைகள் கட்டுவேன்"

#விவசாயிகளுக்கு?"

"எங்கு எங்கு எவ்வளவு விளைவிக்க வேண்டுமென திட்டத்தை கொடுப்பேன்"

#குழந்தைகளுக்கு?"

"எல்லா குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கொடுப்பேன்" 


(பா. ஜனதா ஆட்சியை நன்றாக புரிந்திருக்கிறாள்!)

#இளைஞர்களுக்கு?"

"எல்லோருக்கும் வேலை கொடுப்பேன்"

#மீனவர்களுக்கு?"

"மீனவர்களுக்கு உரிய நேரத்தில் வானிலை தகவல் தருவேன்"

(ஒக்கி புயல் பாதிப்பு!)

திடீரென கொஞ்சம் நிறுத்தி....

"நாட்டில இவ்வளவு செய்ய வேண்டியிருக்காப்பா?"

- என்றாள் ஆச்சர்யமாய்!

பிறகு நான் கேட்பதை நிறுத்திவிட்டேன்.

"எல்லோருக்கும் இலவசமா மருத்துவம் கொடுக்கனும்!"

"வீடு இல்லாதவங்களுக்கு வீடு கட்டித்தரனும்!"

இன்னும் சொல்லிக்கொண்டே வந்தாள்!

அது முடிகிற பட்டியலா அது?

#நீ சீக்கிரம் வளர்ந்து களத்துக்கு வா தாயி!