Dec 20, 2016

கையெழுத்திட்டால் நேர்மையாக நடந்துகொள்ளவேண்டும்! - ஒரு கடிதம்


சென்னை மாநகராட்சிக்கு ஒரு பெற்றோரின் கடிதம்!


அனுப்புநர்

இலக்கியா,
5ம் வகுப்பு,
xxxx பள்ளி,
சென்னை

பெறுநர்

தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அவர்கள்,
xxxx பள்ளி,
சென்னை
       
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம். சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களிடம் சுய உறுதிமொழி படிவம் ஒன்றை தந்து, மாணவர்களும், பெற்றோர்களும் வீட்டிலும், பொது இடங்களிலும் உள்ள சமுதாய கழிவறையை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என கையெழுத்திட சொல்லி உறுதிமொழி கேட்டிருக்கிறது.

சென்னை மாநகராட்சி நடத்திவரும் மாநகராட்சி பள்ளிகளில் சென்னையில் 10 மண்டலத்தில் 57 பள்ளிகள் இயங்கிவருகின்றன. தமிழக அரசாணை எண் : 270ன் படி , 20 மாணவர்களுக்கு ஒரு சிறுநீர் கழிப்பறை, 50 மாணவர்களுக்கு ஒரு மலக்கழிப்பறை, கழிப்பறைகள் தண்ணீர் வசதியுடன் இருக்கவேண்டும்

ஆனால், 57 பள்ளிகளில் பல பள்ளிகளில் சிறுநீர் கழிப்பறைகள் இல்லை. மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப மல கழிப்பறைகள் இல்லாமல், மிக மிக குறைந்த அளவே உள்ளன. அதே போல தண்ணீர் வசதியும் போதுமானதாக இல்லை. ஒரு பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருந்தாலும்  ஒரே ஒரு துப்புரவு பணியாளர் மட்டுமே உள்ளார்.

உதாரணமாக சைதாப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மேல்நிலை பள்ளியில், 1500 மாணவர்கள் படிக்கின்றனர். சிறுநீர் கழிப்பறை ஒன்று கூட இல்லை.  மலக்கழிப்பறை 8 மட்டுமே உள்ளன.  துப்புரவு பணியாளர் ஒருவர் மட்டுமே.

இது தொடர்பாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாணவர்களை திரட்டி போராடியதன் விளைவாக, மாநகரட்சி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்து, பள்ளி வாரியாக அறிக்கையை தயார் செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசாணையின்படி பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என  மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு (எண் : W.P.11666/2014) தொடுத்தது.  நீதிமன்றமும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு அடிப்படை வசதிகளை செய்து தர உத்தரவு போட்டது. மாநகரட்சியோ கடந்த இரண்டு ஆண்டுகளாக உயர்நீதிமன்றத்தில் பல தவணைகளை கேட்டு, பள்ளிகளில் ஆமை வேகத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொண்டிருக்கிறது.

சென்னை மாநகராட்சியின் நேரடி கண்காணிப்பில் உள்ள  மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கே இந்த கதி என்றால், பொது இடங்களில் பெரும்பாலான இடங்களில் கழிப்பறை வசதி பற்றி சொல்லவே தேவையில்லை. ஒன்றரை கோடி பேர் வாழும் சென்னையில் பல பொது இடங்களில் கழிப்பறை வசதியே இல்லை. அப்படியே ஒன்றிரண்டு இருந்தாலும் முறையான பராமரிப்பு இல்லாமல் தான் இருக்கிறது.  இதனால் பொதுமக்கள் பலவித சிரமங்களுக்கு ஆளாகிறார்கள்.

ஆகையால், சென்னை மாநகரட்சி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் கழிப்பறை வசதிகளை ஏற்பாடு செய்து தந்துவிட்டு இப்படி கையெழுத்து கேட்பது தான் நேர்மையானது என கருதுகிறோம். இந்த படிவத்தில் கையெழுத்து போட்டால் அதற்கு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் ஆனால் அதை கடைப்பிடிக்க முடியாத அளவுக்கு சமூக சூழ்நிலை நிலவுவதால் கையெழுத்து இட முடியாத நிலையில் இருக்கிறோம். இந்த கடிதத்தை மாநகராட்சிக்கும் அனுப்பிவைக்கும்படி பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி.

இப்படிக்கு,

பெற்றோர்.

Sep 6, 2016

நிதானமில்லாத குடிமகனும் நிதானமான அரசும்!



இரவு 8.30 மணி. வில்லிவாக்கத்தில் உள்ள பிரதான சாலையில் ஒரு பேருந்து பின்புறம் வந்துகொண்டிருந்தேன். திடீரென பேருந்தில் இருந்து பார்சல் போல ஏதோ ஒன்று விழுந்தது. இருட்டில் தெளிவாக தெரியவில்லை. சில விநாடிகளில் அருகில் போய் பார்த்தால் ஒரு மனிதர் குப்புற விழுந்து கிடக்கிறார். பேருந்தில் இருந்து விழுந்தது கூடவா பேருந்தில் உள்ள யாருக்கும் தெரியாது!

விழுந்த சில விநாடிகளில் என்னைப் போலவே இன்னும் இருவர் அருகில் வர அவரை சோதித்தால் டாஸ்மாக் வாடை குப்பென்று அடித்தது. கொஞ்சம் வயிறு ஏறி இறங்குவது தெரிந்தது. இன்னும் உயிர் இருக்கிறது. ஒருவர் 108க்கு போன் அடித்து விவரத்தை சொன்னார். ஒருவர் தண்ணீர் பாட்டில் வாங்கி வந்து முகத்தில் இரண்டு மூன்றுமுறை அடிக்க, மலங்க மலங்க விழித்தார். அவர் எப்படி விழுந்தார் என யாரும் பார்த்திருக்கவில்லை. அவரிடம் கேட்டால், போதையும், விபத்தும் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் பதில் சொல்லமுடியவில்லை. பேருந்தில் இருந்து விழுந்ததை அங்கிருப்பவர்களுக்கு சொன்னேன்.

சில நிமிடங்களில் அங்கு கடந்து போன போலீஸ் ஜீப்பிலிருந்து ஒரு போலீசு இறங்கி வந்து, விவரத்தை கேட்டு, யாருக்கோ தகவல் சொன்னார். இன்னும் சில நிமிடங்கள் கழித்து ஆம்புலன்ஸ் வந்தது!

விழுந்த சில நிமிடங்களில் எங்களுடன் நின்றிந்த ஒருவர் “எதிரில் கடை அருகே நாலைந்து பேர் நின்றிருந்தாலும், வந்து உதவவில்லையே என மிகவும் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். சில நிமிடங்கள் கழித்து அந்த ஆட்கள் அருகில் வந்து ஒரு சலம்பிக்கொண்டிருந்தனர். எல்லோரும் போதை.

ஒருவர் போதையிலிருந்தால் அவர் இயல்பு மீறி செய்கிற எல்லா செய்கைகளும் நமக்கு எரிச்சலை தருகின்றன. அன்றைக்கு ஒரு நாள் இரவு 10.30 மணியிருக்கும். உடுமலைப் பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பி 15 நிமிடம் ஆகிவிட்டது. நடத்துநர் அந்த நல்ல போதையிலிருந்த 45 வயது குடிமகனிடம் பயணச்சீட்டுக்கான பணம் கேட்கும் பொழுது அவரிடம் பணம் மிக குறைவாக இருந்தது. எந்தவித யோசனையும் செய்யாமல் இதுதான் நீங்க இறங்க வேண்டிய இடம் என அந்தகார இருட்டில் இறக்கிவிட்டு போய்க்கொண்டேயிருந்தார்கள்.

இப்படி ‘குடி’மகன்களிடம் கோபப்படும், புறக்கணிக்கும் நாம், வீடுகளுக்கு, வழிப்பாட்டு தலங்களுக்கு அருகே, மக்கள் கூடுமிடங்களுக்கு அருகே கடைகளை வைத்து தொல்லை தரும் அரசிடம் கோபப்படுகிறமோ என்றால் இல்லை. நிதானமாக இருந்துகொண்டு குடிமகன்களையும், அவர்களுடைய குடும்பங்களை சீரழிப்பவர்களான அரசும் மீதும், ஆளும்கட்சிகாரர்கள் மீதும் மீது கோபம் வருவதை தடுப்பது எது?

10 பேர் நண்பர்கள். அத்தனை பேரும் குடித்தால் கூட நீ ஒழுங்காக இருக்கவேண்டும் என நினைத்தால் குடிக்காமல் இருக்கலாம் என என் அம்மா வாதாடுவார். காற்றே நச்சாக இருக்கும் பொழுது, எப்படி நல்ல காத்து சுவாசிப்பது என்பேன். எங்க அம்மாவை போலவே பலரும் சிந்திப்பார்கள் போல!

 (படங்கள் இணையத்திலிருந்து எடுத்தது)