Oct 13, 2008

"பாட்டாளி மக்கள்" கட்சியின் இதழா? - தமிழ் ஓசை?



பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து மார்ச் 2006 லிருந்து தமிழ் ஓசை என்ற நாளிதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது. பலரும் அறிந்த செய்தி தான் இது. புதிய செய்தி என்னவென்றால்....

சமீபத்தில் அதன் குழுமத்தில் வேலை செய்யும் ஒரு ஊழியரை சந்தித்து வேறு வேறு விசயங்கள் பேசும் பொழுது, ஒரு செய்தி சொன்னார். தமிழ் ஓசையை "பாட்டாளி மக்கள் கட்சி" நடத்துகிறது. ஆனால், தொழிலாளர்களுக்கு தர வேண்டிய இ.எஸ்.ஐ, பி.எப். உரிமையை
தருவதில்லை.

"மக்கள் தங்களுக்கு ஏதாவது பிரச்சனையென்றால், பத்திரிக்கைகளிடம் சொல்வார்கள். பத்திரிக்கை அலுவலத்திலேயே இப்படி அநியாயம் இழைக்கப்படுகிறது என்றால் நாங்கள் யாரிடம் போய் முறையிடுவது?" என புலம்பினார்.

சென்னையில் மட்டுமல்ல, பத்திரிக்கை எனறால், தமிழகம் முழுவதும் நிருபர்கள் இருப்பார்கள். அலுவலக பிரதிநிதிகள் இருப்பார்கள். இவ்வளவு ஊழியர்களுக்கு பிடிக்கவில்லை
என்றால், ஆச்சர்யமாய் இருந்தது.

சில நிறுவனங்களில் புதிதாய் சேர்ந்த ஊழியரை உடனடியாக இ.எஸ்.ஐ, பி.எப்-பில் சேர்க்காமல், 6 மாதம் அல்லது 1 வருடம் பொறுத்திருந்து, பிறகு இ.எஸ்.ஐ. பி.எப் பிடிப்பார்கள். அப்படி இருக்குமோ என சந்தேகம் இருந்து, பரவலாய் விசாரிக்கும் பொழுது, யாருக்குமே இல்லை என்கிறார்கள்.

தமிழகத்தில் பல பிரச்சனைகளைப் பற்றி பத்திரிக்கைகளில் தினம் ஏதாவது அறிக்கை விட்டு கொண்டேயிருக்கிறார் மருத்துவர் ராமதாஸ். அவருடைய கட்சி பத்திரிக்கையிலேயே இப்படி ஒரு
அநியாயம்?

பாட்டாளி மக்கள் கட்சியின் தொழிற்சங்கம் வேறு நிறுவனம் என்றால், தொழிலாளர்களுக்கு இந்த உரிமையை போராடி வாங்கித்தந்திருக்கும். கட்சி பத்திரிக்கை என்றால், கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்கவேண்டும் என அமைதியாக இருக்கிறதோ?

மக்களுக்காக தான் கட்சி. தன் அலுவலகம் என்றால், கட்சி ஒரு முதலாளி தானே? எல்லா முதலாளிகளையும் போலத்தான் அராஜகமாக, லாபத்தை மனதில் வைத்து நடந்து கொள்ள முடியும்.

பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவாளர்களே! நீங்கள் தான் தொழிலாளர்களுக்காக ராமதாஸ் அவர்களிடம் "இது நியாயாமா?" எனக் கேட்டு சொல்ல வேண்டும்.

Oct 1, 2008

நீதி மறுக்கப்பட்டோர் தொடுத்தப் போர்!



தோழி ஒருத்திக்காக மடிப்பாக்கம் பகுதியில் வீடு தேட வேண்டிய சூழல் வந்தது. தெரிந்த ஒருவர் மூலமாக வீடு ஒன்று இருப்பது அறிந்து விசாரித்தோம்.

வீடு விடுவதற்கு முன் கேட்ட கேள்விகள் திருமணத்திற்காக வரன் தேடும் பொழுது கூட, அவ்வளவு கேள்விகள் கேட்டிருக்க மாட்டார்கள். அவர்கள் திரும்ப திரும்ப கேட்ட கேள்வி "அவர்கள் முஸ்லீம் இல்லையே?".

வெடிக்கிற ஒவ்வொரு குண்டும், இசுலாமிய மக்களை தனிமைப்படுத்துகிறது. இந்து மதவெறியர்கள் இதை சாகுபடி செய்கிறார்கள்.

இனி வருங்காலத்தில், விழாக் காலங்களில் பொது இடங்களுக்கு போகவே பயமாய் இருக்கும் சூழல் உருவாகி கொண்டேயிருக்கிறது.

இந்த கட்டுரை வெடிக்கிற குண்டுகளுக்குப் பின்பாக இருக்கிற அரசியலை தெளிவுப்படுத்துகிறது.

கொஞ்சம் நீளமான கட்டுரை. சிரமம் பார்க்காமல் படித்துவிடுங்கள். சமகால அவசிய கட்டுரை.


- மகா

கட்டுரையின் இறுதி பகுதி இப்படி முடிகிறது.

//இந்து மதவெறியர்களின் கலவரங்களினாலும், இசுலாமியத் தீவிரவாதத்தின் குண்டு வெடிப்பினாலும் இறுதியில் பாதிக்கப்படுவது அப்பாவி இசுலாமிய மக்கள்தான். அவர்கள் வீட்டுக்கதவை ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் அல்லது போலீசுக்காரர்கள் தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இதற்கிடையில் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் அந்த மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். வெடிக்கும் ஒவ்வொரு குண்டும் அம்மக்களைத் தனிமைப்படுத்துவதையும், இந்துமதவெறியர்களின் கைகளை ஒங்கச்செய்வதையும்தான் சாதிக்கிறது. இசுலாமியத் தீவிரவாதம் இசுலாமிய மக்களைக் காப்பாற்றாது. பார்ப்பனியத்தால் இந்து எனும் பெயரில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை உழைக்கும் மக்களை ஒன்று சேர்த்து போராடும்போதுதான், இந்து மதவெறியை நாட்டிலிருந்து அகற்ற முடியும். இசுலாமிய தீவிரவாதம் இந்த முயற்சிக்கு தடை செய்கிறது. ஆயினும் இந்த தீவிரவாதம் நமது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பாட்டு தோற்றுவிக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டால், நிச்சயம் வழி பிறக்கும்//

*******

கட்டுரை தொடங்குகிறது.
****

ஜூலை 25, 2008 அன்று பெங்களூருவின் எட்டு ஒதுக்குப்புறமான இடங்களில் குறைந்த வீரியம் கொண்ட குண்டுகள் வெடித்தன. அதில் ஏழுபேர் காயமடைய, ஒருவர் கொல்லப்பட்டார். அதற்கு அடுத்த நாள் குஜராத்தின் சவுராஷ்ட்ரா பகுதியில் பொதுக்கூட்டமொன்றில் பேசிய நரேந்திர மோடி "ஜெய்ப்பூரிலும், பெங்களூருவிலும் குண்டுகள் வெடிக்கலாம், ஆனால், குஜராத்தின் மண்ணில் பயங்கரவாதிகள் அடியெடுத்து வைக்க முடியாது'' என்று முழங்கினார். அன்று மாலையே அகமதாபாத்தின் பல்வேறு இடங்களில் 21 தொடர் குண்டுகள் வெடித்தன. அதில் நான்கு இடங்கள் மோடியின் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தவை.


2002 குஜராத் கலவரத்தின் எதிர்வினை எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று மற்ற எவரையும் விட மோடிக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனாலும் பாசிஸ்ட்டுகள் தமது அதிகார பலத்தை மட்டுமே அபரிதமாக நம்புவார்களே ஒழிய, மற்றெதனையும் சட்டை செய்யமாட்டார்கள். மோடியின் மண்ணில் நடந்த குண்டு வெடிப்பில் 56 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும், 200க்கும் மேற்பட்டோர் காயமும் அடைந்தார்கள். அதற்கும் அடுத்த நாளே சூரத்தில் 17 இடங்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டன.


சூரத்தில் குண்டுகளை வைத்து பயங்காட்டியது மோடியின் கைவரிசை என்று பூரி சங்கரசாச்சாரியார் குற்றம் சாட்டியிருக்கிறார். தனது ஆசிரமத்தில் இரண்டு சிறுவர்களை நரபலி கொடுத்த ஆஸ்ரம் பாபு எனும் சாமியாருக்கு மோடி ஆதரவளிப்பதால், பூரி சாமியார் இப்படிச் சொல்லியிருப்பதாகக் கருதலாமென்றாலும் அகமதாபாத் குண்டுவெடிப்பிலிருந்து கவனத்தை திசைதிருப்பவே போலீசு டம்மி குண்டுகளை வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஒரு வேளை இசுலாமியத் தீவிரவாதிகளே வைத்திருப்பார்கள் எனக் கருதினாலும், மொத்தத்தில் ஒரு பயபீதியை ஏற்படுத்தும் அவர்கள் நோக்கம் வெற்றியடைந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.


கோத்ரா இரயில் எரிப்புக்குப் பிந்தைய கலவரத்தில் ஈடுபட்டும், ஈடுபடாமல் தார்மீக ஆதரவளித்தும் வந்த நடுத்தர வர்க்கம் இப்போது அமைதிகாக்கிறது. உலக அளவில் வைரப்பட்டை தீட்டுவதற்குப் புகழ்பெற்ற சூரத் நகரின் முதலாளிகள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். இந்து ராஷ்டிரத்தின் பரிசோதனைச் சாலையாக குஜராத்தை மாற்றியிருக்கும் மோடிக்கும் தற்போது உறைந்து போயிருக்கும் மக்கள் கோரும் மனநிம்மதியைத் தருவதுதான் பிரச்சினை! கோத்ராவின் போது வெறியூட்டிப் பேசிய மோடி தற்போது அடக்கி வாசிக்கிறார். ஆனாலும் குண்டுவெடிப்புகளிலிருந்து உத்திரவாதமான பாதுகாப்பை அவர் தர முடியாது என்பதை குஜராத் மக்களும் புரிந்திருக்கின்றனர். 2002இல் நடந்த முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை இப்போது நடைபெறாததன் சூட்சுமம் இதுதான்.


குண்டு வெடிப்புக்கள் 1993ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்தன என்றால் 2003ஆம் ஆண்டிற்கு பின்னர் மட்டும் வாரணாசி, மும்பைத் தொடர் வண்டி குண்டு வெடிப்பு, மாலேகான், பானிபட்டில் சம்ஜூதா விரைவு வண்டி, ஹைதராபாத் மக்கா மசூதிலும்பனி உணவகம், லக்னோவாரணாசி பைசாபாத் நீதிமன்றங்கள், ஜெய்ப்பூர், கடைசியாக பெங்களூரு, அகமதாபாத் வரை பல இடங்களில் நடந்திருக்கின்றன. ஒவ்வொரு குண்டு வெடிப்பும் திட்டமிட்ட முறையில், நவீனத் தொழில் நுட்ப வசதியுடன் இலக்குத் தவறாமல் வெடித்திருக்கின்றன. அகமதாபாத் குண்டு வெடிப்பில் கடைசி குண்டு பொது மருத்துவமனையில் வெடித்தது. முந்தைய குண்டு வெடிப்புக்களில் காயமடைந்தோர் மருத்துவமனைக்கு வரும் நேரம் பார்த்து வெடிக்குமாறு நேரம் குறிக்கப்பட்டிருந்தது.


இதில் குண்டுவெடிப்பில் காயமடைந்தோரை மருத்துவமனைக்கு தூக்கி வந்து உதவி செய்தவர்களில் சிலரும் இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இத்தகைய சோகங்களை பட்டியலிட்ட பத்திரிக்கைகள் எதுவும் குண்டுகள் ஏன் வெடித்தன என்பதைப் பற்றிய விரிவான ஆய்வுக்குள் செல்லவில்லை. மாறாக இசுலாமியத் தீவிரவாதம், சிமி, லஷ்கர் இ தொய்பா, ஐ.எஸ்.ஐ. சதி என்ற வழக்கமான பெயர்களைப் பட்டியலிட்டதோடு, இவற்றை இரும்புக் கரம் கொண்டு மத்திய அரசு அடக்கவேண்டும் என்பதோடு முடித்துக்கொண்டன. "இந்தியா டுடே'' பத்திரிக்கையோ இசுலாமிய பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இந்தியா சுரணையின்றி இருக்கிறது என்று வன்மத்துடன் எழுதியது.


இந்த குண்டு வெடிப்புக்களை வைத்து மதவெறி அரசியலைக் கிளப்பிப் பயன்படுத்திக் கொள்வதில் பா.ஜ.க தயாராக இருந்தாலும், மக்கள் தயாரில்லை. குண்டு வெடிப்புகள் தந்த பீதியும், சோர்வும், விரக்தியும் மக்களைக் கவ்வியிருப்பதால், அத்வானி சற்றே திகைத்துப் போயிருக்கிறார். ஆனாலும், பொடா சட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும், இது போன்ற சட்டங்களைச் சட்டப்பேரவையில் இயற்றி மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியிருக்கும் குஜராத், ராஜஸ்தான் அரசுகளின் கோரிக்கைகள் ஏற்கப்படவேண்டும், அப்சல் குருவைத் தூக்கில் போடவேண்டும், இசுலாமியத் தீவிரவாதிகளை விசாரணையின்றித் தண்டிக்கவேண்டும் என்றெல்லாம் அத்வானி வழக்கமாக பேசும் விசயங்களை ஒப்புவித்திருக்கிறார். மன்மோகன் சிங்கும் தீவிரவாதிகளை மத்திய அரசு தண்டிக்கும் என்றும், இந்த பயங்கரவாதப் போரில் வெல்வோம் என்றெல்லாம் பேசியிருக்கிறார். தனியார் மயக் கொள்கைகளை வீச்சுடன் அமல்படுத்தும் நேரத்தில் வெடிக்கும் ஒவ்வொரு குண்டும் நாட்டின் நிகழ்ச்சிநிரலை திசை திருப்புவதால் மத்திய அரசைப் பொறுத்தவரை ஒரு வகையில் ஆதாயம்தான்.


பா.ஜ.கவின் இளைய பங்காளியான பாசிச ஜெயாவும் பொடா சட்டத்தை மீண்டும் கொண்டு வந்து தீவிரவாதிகளைக் கடுமையாக தண்டிக்க வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கிறார். இத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம் என்பதுதான் சமீப காலமாக அதிகரித்து வரும் குண்டு வெடிப்புகள் நமக்கு உணர்த்தும் சேதி.


···


1993இல் நடந்த மும்பய் குண்டுவெடிப்பு, இசுலாமியத் தீவிரவாதத்தின் வருகையை நாட்டிற்கு அறிவித்துவிட்டது. அத்வானியின் இரத்த யாத்திரையும், பாபர் மசூதி இடிப்பையொட்டி மும்பயில் நூற்றுக்கணக்கான இசுலாமிய மக்கள் சிவசேனா ஆர்.எஸ்.எஸ் வெறியர்களால் வேட்டையாடப்பட்டதும் ஒரு சில இசுலாமிய இளைஞர்களை ஆத்திரம் கொள்ள வைத்தது. அந்த ஆத்திரத்தை அழித்திருக்க வேண்டுமென்றால், மும்பய்க் கலவரத்தின் சூத்திரதாரிகளான பால் தாக்கரேயும், போலீஸ் அதிகாரிகளும் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். இவர்களை குற்றவாளிகள் என்று ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிவித்த பிறகும், இன்றைக்கு பதினாறு ஆண்டுகளாகியும் தண்டிக்க முடியாத போது, தன் உற்றாரை இழந்த ஒரு இசுலாமிய இளைஞனின் மனது எப்படியெல்லாம் வதைபட்டிருக்கும்? மும்பய்க் குண்டுவெடிப்பின் குற்றவாளிகள் அதில் பலர் அப்பாவிகள் தண்டிக்கப்பட்டு, மும்பய்க் கலவரத்திற்கான குற்றவாளிகள் நிரபராதிகளாக உலாவரும் போது கோபம் கொள்ளும் ஒரு இளைஞனது மனம் எந்த நீதியைத் தேடும்?



இந்த சமூக அமைப்பில் நீதி சிறைபட்டிருக்கும் போது, ஆத்திரம் காரிய சாத்தியமான வழிகளைக் குறித்தே ஆலோசிக்கும். பம்பாய் குண்டுவெடிப்பில் மட்டுமல்ல, கோவை குண்டுவெடிப்பிலோ, தற்போதைய அகமதாபாத் குண்டுவெடிப்பிலோ வரலாறு இதைத்தான் மறுக்கமுடியாமல் நிரூபிக்கிறது. '98இல் நடந்த கோவை குண்டுவெடிப்பின் குற்றவாளிகள், விசாரணை நடந்து முடிந்து இன்று தண்டிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் பலர் அப்பாவிகள், பலர் வழங்கப்பட்ட தண்டனைக்காலத்தைவிடப் பல ஆண்டுகள் சிறையிலிருந்தவர்கள், மதானி போன்றவர்கள் நிரபராதி என்று நீதிமன்றம் விடுவித்தாலும், 9 ஆண்டுகள் சிறையிலிருந்தவர்கள். இந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களின் குடும்பங்கள் சிறைக்காலத்தில் வாழவழியின்றி தத்தளித்தன. பொடா சட்டம் வருவதற்கு முன்பு சாதாரண சட்டப்பிரிவுகளின் கீழ்தான் இந்த அடக்குமுறை நடந்திருக்கிறது. இவர்கள் யாருக்கும் தீர்ப்பு அளிக்கப்படும் வரை பிணை கிடைக்கவில்லை. ஆக, பொடா, தடா போன்ற காட்டுமிராண்டிச் சட்டங்கள் இல்லாமலேயே அப்பாவி இசுலாமியர்களை, அவர்கள் முசுலீமாகப் பிறந்த ஒரே காரணத்தால் இந்த நாட்டின் போலீசு நீதித்துறை தண்டிக்க முடியுமென்றால், அதை இந்தச் சமூக அமைப்பு அமைதியாக வேடிக்கை பார்ப்பதன் மூலம் ஆதரிக்க முடியுமென்றால், தீவிரவாதம் ஏன் துளிர்விடாது?


இத்தனைக்கும் மேல், '98 கோவை குண்டு வெடிப்புக்கு முன்பு நடந்த காவலர் செல்வராசு கொலையை ஒட்டி நடந்த கலவரத்தில் பல அப்பாவி முசுலீம் மக்கள் கொல்லப்பட்டது குறித்த வழக்கு இன்றும் முடியவில்லை, யாரும் தண்டிக்கப்படவுமில்லை, சிறையில் வாடவுமில்லை. இந்த அநீதி, இந்திய அரசியல் உலகில் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும்போது, இதன் எதிர் விளைவாகத் தோன்றும் தீவிரவாதம் யாருடைய அங்கீகாரத்தையும் பெற வேண்டிய அவசியமில்லையே? நீதி குறித்து இந்த சமூகம் எந்த அளவு பாராமுகமாக இருக்கிறதோ, அந்த அளவு தீவிரவாதமும் தனது செயல் குறித்து கவலைப்படாமல் ஈடுபடுகிறது.


கோத்ரா ரயில் பெட்டி எரிப்புக்குப் பிந்தைய 2002 குஜராத் கலவரங்கள் நாட்டிற்கு புதிய செய்திகள் பலவற்றை தெளிவுபடுத்தின. 2000த்திற்கும் மேற்பட்ட இசுலாமிய மக்கள் ஆடுமாடுகளைப் போல, சொல்லப்போனால் அவற்றைவிடக் கேவலமாக, இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டனர். இந்த இனப்படுகொலையை விட முக்கியமானது, இந்தக் கலவரத்தை ஒரு முதலமைச்சரின் தலைமையில் அரசாங்கமும், இந்து மதவெறியர்களும் இணைந்து பெரும்பான்மை இந்துக்களின் பெயரில் நடத்தினர் என்பதே. தெகல்காவின் வீடியோ உள்ளிட்ட பல தரப்பினராலும் இவர்களது கோரமான இனப்படுகொலை நிரூபிக்கப்பட்டபோதும், மோடியும் அவரது தளபதிகளும் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்றதோடு, தத்தமது அரசு, கட்சிப் பதவிகளில் எவ்வித நெருக்கடியுமின்றி வேலை செய்கின்றனர். கோத்ரா எரிப்புச் சம்பவம் முசுலிம்களால் நடத்தப்படவில்லை என்ற போதிலும், அதற்காகக் குற்றம் சாட்டப்பட்ட பல இசுலாமிய அப்பாவிகள் சிறையில் பிணை மறுக்கப்பட்டு வாடுகின்றனர். இனப்படுகொலை செய்த சங்கப்பரிவார குண்டர்களோ சிலர் மட்டும் வழக்கில் சேர்க்கப்பட்டு, பிணை கிடைத்து வெளியில் இருக்கின்றனர்.


இத்தனைக்கும் பிறகும் கண்ணெதிரே தம் உறவினர்களை கொத்துக்கொத்தாகப் பலிகொடுத்த முசுலீம் இளைஞர்களில் சிலராவது தீவிரவாதத்திற்காகப் பலியாகாமால் போனால் தானே ஆச்சரியப்பட முடியும்? மோடி தலைமையிலான கும்பல் தூக்கிலேற்றப்பட்டிருந்தால், அகமதாபாத்தில் குண்டுகள் நிச்சயம் வெடித்திருக்காது. இனப்படுகொலையின்போது பெரும்பான்மை இந்துக்கள் இந்துமதவெறியர்களை எதிர்த்துப் போராடியிருந்தால், குண்டுகள் செயலிழந்து போயிருக்கும். நடுநிலை பிறழாதது என்று பதற்றப்படும் நீதித் துறையின் வழியாகக் கொஞ்சமாவது நீதி கிடைத்திருந்தால் கூட, அந்த இளைஞர்கள் தீவிரவாதம் எனும் தற்கொலைப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்கள். ஆயினும் வரலாறு தனது விளைவை உருவாக்கிக் கொண்டுதான் ஆக வேண்டும் என்பதனால், குண்டுகள் இப்போது அடிக்கடி வெடித்துக் கொண்டு இருப்பது மலிவாக மாறிவருகிறது.


···


அத்வானி வகையறாக்கள் கோருவது போல பொடா சட்டமோ, கடுமையான அடக்குமுறைகளோ இந்தத் தீவிரவாதத்தை வேரறுக்காது. ஆத்திரத்திலும், அவலத்திலும், கையறு நிலையிலும் மையம் கொண்டுள்ள இந்த வேர் ஆழமாகப் பரவியிருக்கிறது. அகமதாபாத் குண்டு வெடிப்பிற்கு பொறுப்பேற்றுக்கொண்ட "இந்தியன் முஜாகிதீன்கள்'' என்ற இயக்கம் ஊடகங்களுக்கு அனுப்பியிருக்கும் பதினைந்து பக்க மின்னஞ்சலில் அந்த வெறுப்பும், பழிவாங்கும் உணர்வும் கொப்பளிக்கிறது. இந்துக்களை அவர்களது எந்தக் கடவுளும் காப்பாற்றப் போவதில்லை எனவும், அவர்கள் மீது புனிதப்போர் தொடுக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் அந்தக் கடிதம் வெறுப்பை வெளிப்படுத்துகிறது. பெரும்பான்மை இசுலாமிய மக்களும், மதத் தலைவர்களும் இந்தப் புனிதப் போரை எதிர்த்த போதிலும், ஏற்றுக்கொள்ளாத போதிலும், இந்துக்களைப் பகைவர்களாகக் கருதாவிடினும், என்ன செய்வது என்ற பதிலில்லா கேள்வியை கேட்டுத் தீவிரவாதம் தன்போக்கில் சில இளைஞர்களை வென்றெடுக்கவே செய்கிறது.


அத்வானி உள்துறை அமைச்சராக இருந்த காலத்திலேயே குண்டுகள் வெடித்த வண்ணம்தான் இருந்தன. இப்போது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில், மோடி போன்ற சர்வாதிகார ஆட்சி நிலவும் மண்ணில் கூட வெடிகுண்டுகள் பெரும் உயிரிழப்புக்களோடு வெடித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இனி, குண்டுவெடிப்புக்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடவேண்டிய நேரத்தில், இந்து மதவெறியர்களே குண்டு வைப்பதைச் செய்யமுடியும். தானே, தென்காசி குண்டு வெடிப்புக்கள் அதற்கோர் எடுத்துக் காட்டு. மேலும் இசுலாமியத் தீவிரவாதிகள் போல சர்வ இரகசியமாக குண்டு தயாரிக்கும் வேலையை சங்கப் பரிவாரங்கள் செய்யவேண்டியதில்லை. குஜராத் கலவரத்தின் போது ஆயுதங்களும், துப்பாக்கிகளும், எரிபொருளும் அண்டை மாநிலங்களிலிருந்து வண்டி வண்டியாய் இறங்கின. இந்து மதவெறியர்கள் கலவரம் செய்தாலும், இசுலாமியத் தீவிரவாதத்தின் பெயரால் குண்டு வைத்தாலும் அவர்களுக்கு ஆதாயம்தான். இசுலாமிய மக்களைத் தேசவிரோதிகள் என்று சித்தரித்துக்கொண்டே, தனது இந்து ராட்டிரக் கனவை நிஜமாக்கும் முயற்சிக்கு அது அவசியம்.


சர்வதேச இசுலாமியத் தீவிரவாதம் இந்தியாவிற்கும் வந்துவிட்டதாக பா.ஜ.க, ஊடகங்கள் உள்ளிட்ட பலரும் தெரிவிக்கின்றனர். அல் காய்தாவும், ஐ.எஸ்.ஐ.யும் ஏதோ ஒரு செல்பேசி மூலம் இங்கே குண்டுகளை வெடிக்கச் செய்வது சாத்தியமா என்ன? குண்டுவைப்பதற்கு தேவைப்படும் பல ஏற்பாடுகளைச் செய்வதற்கு உள்ளூர்க்காரர்களின் ஒத்துழைப்பு அவசியம். அதுவும் தனது உயிரைப் பணயம் வைக்கும் சாகச உணர்வுடன் கருத்து ரீதியாக வென்றெடுக்கப்பட்டவர்கள் வேண்டும். அதற்கான சமூக நிலைமைகளை இந்து மதவெறியர்கள் உருவாக்கியிருக்கும் போது அதை அல்கய்தாவோ, ஐ.எஸ்.ஐ.யோ பயன்படுத்திக்கொள்ள முடியுமே? மேலும், அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் முதல் இன்ன பிற மறுகாலனிய நடவடிக்கைகள் மூலமாக இந்திய அரசு அமெரிக்காவின் கையாளாக மாறி வரும் நிலையில், அமெரிக்காவை எதிர்த்துப் போராடும் அல் காய்தா இந்தியாவையும் குறி வைக்கத்தானே செய்யும்?


இதற்கெல்லாம் மேலாக சமீபத்திய குண்டுவெடிப்புக்களின் குற்றவாளிகள் என போலீசு கைது செய்திருப்பது அப்பாவிகளைத்தான். இந்தியா முழுவதும் விரிவான விசாரணை செய்து இந்த மோசடியை "தெகல்கா'' வார ஏடு அம்பலப்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு குண்டு வெடிப்பின்போதும் குற்றவாளியின் படத்தைக் கணினி மூலம் வரைந்து வெளியிடுவதும், பாகிஸ்தான் காரணமென்று தெரிவிப்பதும், உள்ளூர் இளைஞர்கள் அங்கு சென்று பயிற்சி எடுத்திருப்பதாக அறிவிப்பதுமான இந்த போலீசு செய்திகளைத்தான் தரமான "ஃப்ரண்ட்லைன்'' முதல் தரம் தாழ்ந்த "தினமலர்'' வரை வெளியிடுகின்றன. தற்போது தமிழகத்தில் சென்னை அண்ணா மேம்பாலத்தை இசுலாமிய தீவிரவாதிகள் தகர்க்கப்போவதைத் தடுத்து நிறுத்தியதாக மார் தட்டும் போலீசின் நடவடிக்கை, தமிழ் சினிமாவைவிட கேவலமான கற்பனையாகும். "தெகல்கா''வின் புலனாய்வு இந்தப் பொய்யுரைகளைத் தகர்த்திருக்கிறது.


அத்வானி உள்துறை அமைச்சராக இருந்தபோது "சிமி'' (குஐMஐ) எனப்படும் இந்திய இசுலாமிய மாணவர் இயக்கம் 1967 சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் மூலம் தடைசெய்யப்பட்டது. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை இந்தத் தடை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடைகளுக்காக நியமிக்கப்பட்ட நடுவர் மன்றத்தில் ஒவ்வொரு முறையும் காரணங்களைத் தாக்கல் செய்த அரசு, எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை. இதை தற்போதைய நீதிபதி கீதா மித்தல் அம்பலப்படுத்தி "சிமி'' மீதான தடையை இரத்து செய்தார். உடனே மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் "சிமி'' மீதான தடையை தொடருமாறு விலக்கு பெற்றது. இதற்கு முன் "சிமி'' இயக்கம் செய்த மேல்முறையீடுகளைப் பரிசீலிக்காத உச்சநீதி மன்றம், இப்போது நடுவர் மன்றத்தின் நியாயமான தீர்ப்பைத் தடுப்பதற்கு மட்டும் துடிக்கிறது.


"சிமி'' என்ற இயக்கம் இசுலாமிய வாழ்க்கைமுறைகளைத் தீவிரமாக பின்பற்றுதலை, அம்மத மாணவர்களிடையே பிரச்சாரம் செய்கின்ற இயக்கம். மேலும், உலகம் முழுவதும் இசுலாம் பரவவேண்டும் என்பதையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தாலும், அதை ஜனநாயக வழிகளில் மட்டும் செயல் படுத்திய இயக்கம். பாபர் மசூதி இடிப்பை அடுத்து சங்கப்பரிவாரங்களை எதிர்த்தும், ஆப்கான் மீதான தாக்குதலை அடுத்து அமெரிக்காவை எதிர்த்தும் அரசியல் இயக்கத்தை சிமி தொடர்ந்து நடத்தியது. இதை வைத்தே சிமி தேச விரோத இயக்கம் என்று முத்திரை குத்தி, பா.ஜ.க., காங்கிரசு அரசுகள் தடை செய்து வருகின்றன. இந்த ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான இசுலாமிய இளைஞர்கள் பல ஆண்டுகள் எந்தக் குற்றமும் செய்யாமல் இந்தியச் சிறைகளில் கழித்திருக்கின்றனர். சிமி தடை செய்யப்பட்டபோது அதன் தலைவராக இருந்த ஃபலாகி பொய்க் குற்றச்சாட்டுக்களின் பெயரில் முப்பது மாதங்கள் சிறையில் கழித்தார்.


சிமி இளைஞர்கள் அரபு நாடுகளில் பணம் பெற்றுக் கொண்டு பாக்ஆப்கான் சென்று பயிற்சி எடுத்து இந்தியாவில் குண்டு வைப்பதாக ஆளும் வர்க்கம் தொடர்ந்து பொய்யுரைக்கிறது. இதை எதிர்த்துச் சட்டப்பூர்வமாக போராடும் சிமியின் முயற்சிகள் பாசிசத்தின் கைகளால் தடுக்கப்படுவது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஆக, ஜனநாயகப் பூர்வமான வழிகளில் கூட இசுலாமிய இளைஞர்கள் போராடக்கூடாது என்று இந்த அரசியல் அமைப்பு தடை விதிக்கும் போது, அந்த இளைஞர்களின் மனதில் என்ன தோன்றும்? இந்தியாவில் தீவிரவாதம் தோன்றிவிட்டது என்பதைவிட இந்தியாதான் இசுலாமியத் தீவிரவாதத்தைத் தோற்றுவிக்கிறது என்பதே சரி.


இந்து மதவெறியர்களின் கலவரங்களினாலும், இசுலாமியத் தீவிரவாதத்தின் குண்டு வெடிப்பினாலும் இறுதியில் பாதிக்கப்படுவது அப்பாவி இசுலாமிய மக்கள்தான். அவர்கள் வீட்டுக்கதவை ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் அல்லது போலீசுக்காரர்கள் தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இதற்கிடையில் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் அந்த மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். வெடிக்கும் ஒவ்வொரு குண்டும் அம்மக்களைத் தனிமைப்படுத்துவதையும், இந்துமதவெறியர்களின் கைகளை ஒங்கச்செய்வதையும்தான் சாதிக்கிறது. இசுலாமியத் தீவிரவாதம் இசுலாமிய மக்களைக் காப்பாற்றாது. பார்ப்பனியத்தால் இந்து எனும் பெயரில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை உழைக்கும் மக்களை ஒன்று சேர்த்து போராடும்போதுதான், இந்து மதவெறியை நாட்டிலிருந்து அகற்ற முடியும். இசுலாமிய தீவிரவாதம் இந்த முயற்சிக்கு தடை செய்கிறது. ஆயினும் இந்த தீவிரவாதம் நமது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பாட்டு தோற்றுவிக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டால், நிச்சயம் வழி பிறக்கும்.

· அரசு

Sep 4, 2008

விநாயகர் ஊர்வலம் - உஷார்! உஷார்!


விநாயகர் சதுர்த்தி முடிந்துவிட்டது. சென்னையில் மட்டுமே 5000 விநாயகர்கள்.

வ‌ழ‌க்கம் போல‌ இந்து முன்ண‌ணி இராம‌கோபால‌ன் ராய‌ப்பேட்டை ம‌சூதி வ‌ழியாக‌ போனால் தான், விநாய‌க‌ருக்கு(!) ம‌ன‌ம் குளிரும் என‌ பிர‌ச்ச‌னையை துவ‌க்கியிருக்கிறார். இந்துத்துவ‌ சக்திக‌ள் சுறுசுறுப்பாய் இருக்கின்ற‌ன‌.

பாதுகாப்பு ஏற்பாடுகள் துவங்கிவிட்டன. பெரிய‌ பெரிய‌ விநாய‌க‌ர்க‌ள் ஊர்வ‌ல‌ம் போகும் பொழுது, சிறிய‌ விநாய‌க‌ரை யாரேனும் கொண்டு வ‌ந்தால், அனும‌திக்க‌ வேண்டாம் என‌ காவ‌ல்துறை எச்ச‌ரித்திருக்கிற‌து. (குண்டு வைத்துவிடுவார்க‌ளாம்).

இந்து மத விரோதிகளிடமிருந்து தமிழகத்தை காக்க, க‌வ‌ன‌மாய் இருப்போம்.


*****

சமீபத்தில், "கண்ணை மறைக்கும் காவிபுழுதி" என்றொரு புத்தகத்தை, மக்கள் கலை இலக்கிய கழகம் வெளியிட்ட புத்தகத்தை மீண்டும் வாசித்தேன். அதில், விநாயகர் ஊர்வலம் தொடர்பாக ஒரு கட்டுரை சிறப்பாக இருந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

*****

மசூதிமுன் ஊர்வலம் நடப்பதேயில்லையா?

"நாடு முழுவதிலும் எங்கெல்லாம் ஒரு மசூதி அல்லது ஒரு முசுலீம் பேட்டை இருக்கின்றதோ, அந்தப் பகுதியை உண்மையில் தமக்கே சொந்தமான சுதந்திரமான பிரதேசமாக முசுலீம்கள் கருதுகின்றனர். ஹிந்துக்களின் ஊர்வலம் இசைக்கருவிகளுடனும், பாட்டுகளுடனும் அவ்வழியே சென்றால், அவர்கள் தமது மத உணர்ச்சிகள் புண்படுத்தப்பட்டதாகக் கடுங்கோபம் கொள்கின்றனர்.

இனிய இசையைக் கேட்டுப் புண்படும் அளவிற்கு, அவர்களுடைய சமய உணர்ச்சி தொட்டால் சிணுங்கியாக இருக்குமானால் தமது மசூதிகளைக் காடுகளுக்கு மாற்றி அமைத்துக்கொண்டு அங்கு மெளனமாகத் தொழுகை நடத்தக் கூடாதா? சாலை ஓரத்தில் ஒரு கல்லை நட்டு அதற்கு வெள்ளையடித்து, அதனைத் தொழுகைத் தலம் என்று அறிவித்துவிட்டு, அங்கு இசை பாடப்படுவது தமது தொழுகையைக் கலைப்பதாகும் எனக் கூப்பாடு போடுவானேன்?"

- ஆர்.எஸ்.எஸ் - இன் இரண்டாவது தலைவர் கோல்வால்கர்,
('ஞானகங்கை'- இரண்டாம் பாகம் - பக். 170)

மசூதிக்கு முன்னால் நடக்கவோ, பாடவோ, மேளம் அடிக்கவோ, ஊர்வலம் நடத்தவோ இந்துக்களுக்கு உரிமை கிடையாதென்றால் இந்நாடு இந்துஸ்தானா, இல்லை, பாகிஸ்தானா என்று இந்துமத வெறியர்கள் அடிக்கடி உரிமைக்குரல் எழுப்புவது வழக்கம். மசூதிகளின் தொழுகைக் காலத்தோடு பிரச்சனை இல்லாமல், நல்லிணக்கத்தோடு இயங்கி வந்த மக்களிடையே - இல்லாத ஒரு பிரச்சனையை ஏற்படுத்தி, முசுலீம் எதிர்ப்புக் கலவரம் நடத்துவதே அவர்கள் நோக்கம். அதைப் பல இடங்களில் ஆண்டுதோறும் செய்தும் வருகிறார்கள்.

முதலில் மசூதிகள் பிரபலமான, பரபரப்பான தெருக்களிலும், சந்தைகளிலும், வணிக முக்கியத்துவம் மிகுந்த இடங்களில் இருப்பது உண்மைதான். காரணம், அவ்வட்டாரத்தில் கணிசமான முசுலீம்கள் வாழ்வதும், அதிலும் வணிகர்களாக இருப்பதும், தமது வேலை நேரத்தில் குறிப்பாக வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வந்துபோக வசதியாக இருக்கவும்தான் அப்படி கட்டப்படுகின்றன. வேறு எந்த நோக்கமும் இல்லை.

அதே சமயம் மசூதிகள் முன்பு மாணவர்கள், தொழிலாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் ஊர்வலமாய்ப் போகிறார்கள். ஏன், கோவில் திருவிழாக்கள் கூட இடையூரின்றிச் செல்லுகின்றன. மசூதி அருகே பொதுக்கூட்டங்கள் நடப்பதும், பாங்கு ஓதும் நேரம் ஓரிரு நிமிடம் அமைதி காப்பதும் தமிழகத்தில் இயல்பான காட்சிகள்தான். இதனாலெல்லாம் எங்கும் கலவரம் ஏற்பட்டதில்லை.

1980-களில் தோன்றிய இந்து முன்னணி, மசூதி முன்பு விநாயகர் ஊர்வலத்தை வம்படியாக நடத்திய போதுதான், இக்கலவரங்கள் ஆரம்பித்தன. சரியானத் தொழுகை நேரத்தில் ஊர்வலம் நடத்துவது, "துலுக்கனை வெட்டு, துலுக்கச்சியைக் கட்டு, அல்லாவுக்குக் குல்லா போட்டு அரேபியாவுக்கு அடிச்சுத் துரத்து, இந்த நாடு இந்து நாடு இல்லேங்கிற துலுக்கன் யாரு" போன்ற 'இனிய இசை மொழிகளை'க் கூவுவது இவற்றினால்தான் தகராறுகல் ஆரம்பித்துக் கலவரங்களாய் முடிகின்றன.

பம்பாய், ஹைதாரபாத், சென்னை மூன்று நகரங்களிலும் ஆர்.எஸ்.எஸ். வானரங்கள் நடத்த்டும் விநாயகர் ஊர்வலங்கள் மசூதி வழியாகச் சென்று முசுலீம் மக்களைத் தாக்குவதற்கான அவலங்களாய் மாறிவிட்டன. தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் இந்த நோய் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. எனவே, மசூதி முன்பு ஊர்வலம் நடத்தும் இந்து மதவெறி அமைப்புக்களை முழுமையாகத் தடை செய்யும் போதுதான் இந்த அராஜகங்களுக்கு முடிவு கட்ட முடியும்.

பெரும்பான்மை இந்துக்களின் ஏகபோகப் பிரதிநிதிகள் என உரிமை கொண்டாடும் சிறு கும்பலான பார்ப்பன-இந்து மதவெறி அமைப்புக்களைத் தனிமைப்படுத்தி முறியடிப்பது உழைக்கும் மக்களின் கடமையாகும்.

மசூதியை வைத்து உரிமைக்குரல் எழுப்பும் இவர்கள்தான் அக்கிரகாரம், ஊர், தேரோட்டம் போன்றவற்றில் இன்றுவரை தாழ்த்தப்பட்ட மக்கள் பங்கேற்க அனுமதி மறுக்கிறார்கள். கேவலம், தாழ்த்தப்பட்ட மக்களுடன் இணைந்து தேரை இழுக்க முடியாது என கண்ட தேவியில் சில ஆண்டுகளாய் நிறுத்தப்பட்டிருக்கும் மரத்தேர் இந்த மரமண்டைகளின் யோக்கியதைக்குச் நல்ல சான்று.

******

Aug 14, 2008

உத்தம்சிங் என்றொரு மாவீரன்!

உத்தம் சிங் பகத்சிங்கை போலவே, 1919ம் ஆண்டு நடத்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலையால் கோபம் கொண்டவன்.

படுகொலைக்கு காரணமானவர்களை பழிவாங்க புறப்பட்டு, பல சிரமங்களை எதிர்கொண்டு, பல நாடுகள் கடந்து, சமயம் பார்த்து காத்திருந்து 21 ஆண்டுகள் கழித்து அவர்களுடைய சொந்த மண்ணான இங்கிலாந்திலேயே பழிவாங்கியவன் இந்த உத்தம்சிங்.

இந்த அரசு, ஆட்சியாள‌ர்க‌ள் செய்த‌ ப‌ல‌ ப‌டுகொலைக‌ளை மற‌ந்து, 61ம் ஆண்டு சுத‌ந்திர‌ தின‌த்தை ம‌க்க‌ளும் கொண்டாடி கொண்டு இருக்கிறார்க‌ள்.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் ‍ கொள்கைகளால் இந்தியா மீண்டும் அடிமையாகி கொண்டு வ‌ருகிற‌து.
அத‌ன் பாதிப்புக‌ளை ம‌க்க‌ள் தின‌ந்தோறும் ப‌ல‌ அவ‌ல‌ங்க‌ளை ச‌ந்தித்து வ‌ருகிறார்க‌ள்.

மீண்டும் ஒரு சுத‌ந்திர‌ போரைத் துவ‌ங்க வேண்டிய‌ த‌ருண‌ம் இது. 21 ஆண்டுக‌ள் க‌ழிந்த‌ பின்பும் அந்த‌ கொடூர‌காரர்க‌ளை கொன்றானே உத்த‌ம்சிங். அவ‌னை நாம் ந‌ம்முடைய‌ நினைவில் ஏந்துவோம் இந்நாளில்.

கட்டுரை தொடர்கிறது.

*******
உத்தம்சிங் நூற்றாண்டு விழா:

இறுதியாக மரண தண்டனைத் தீர்ப்பை வாசித்து, பேனா முனையை உடைத்தான் வெள்ளைக்கார நீதிபதி.

“என் தாய் நாட்டுக்காகச் சாவதை விட வேறென்ன பெருமை எனக்குக் கிட்ட முடியும்” என்று அந்த வழக்கு மன்றமே அதிரும் வண்ணம் முழங்கினான் ராம் முகம்மது சிங் ஆசாத்.

ராம் முகம்மது சிங் ஆசாத் என்கிற அந்தப் பெயரே விசித்திரமாக இல்லையா!

உத்தம்சிங் என்பது அவனது பெற்றோர் வைத பெயர்! அவன் தனக்குத் தானே, தனது அடையாளமாக, தனது இலட்சியப் பயணத்திற்காகச் சூட்டிய பெயர்தான் ராம் முகம்மது சிங் ஆசாத்!

இந்த இரண்டாயிரமாவது ஆண்டு அவனது நூற்றாண்டு. ஒருபுறம் புரட்சிகரக் கொலையாளியாகவும் தியாகியாகவும் மறுபுறம் சித்தபிரமை பிடித்தவன் - பயங்கரவாதியாகவும் வரலாறு அவனைப் பதிவு செய்திருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் முழுவதும் அவன் நாட்டுப்புற வீரதீர நாயகனாகவும், தேசபக்த விடுதலைப் போராளியாகவும் போற்றப்படுகிறான்.

இந்து மதவெறிப் பாசிஸ்டுகள் உட்பட இந்திய தேசிய வாதிகளும் சீக்கியத் தீவிரவாதிகளும், போலிக் கம்யூனிஸ்டுகளும், போலி சோசலிஸ்டுகளும் கூட அவனுடைய பாரம்பரியத்துக்கு உரிமைக் கொண்டாடுகிறார்கள்.

ஆனால் உத்தம்சிங் தனக்குத் தானே சூட்டிக் கொண்ட ராம் முகம்மது சிங் ஆசாத் என்கிற பெயரும் தேசிய விடுதலைக்கு அவன் தெரிந்தெடுத்துக் கொண்ட புரட்சிப்பாதையும் புரட்சிகர நடவடிக்கையும் அவர்களது உரிமைக் கோரல்களை உதறி எறிகின்றன. அவன் உண்மையான, நாட்டுப் பற்றுமிக்க பொதுவுடைமைப் புரட்சிப் போராளி என்பதையே நிறுவுகின்றன.

அவன் நினைவை, இலட்சியத்தைப் போற்றும் முகமாக “ராம்முகம்மது சிங் ஆசத் என்கிற உத்தம்சிங்” என்கிற திரைப்படம் இப்போது வெளிவந்துள்ளது.

இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் ரௌலட் சட்டத்தை எதிர்த்து, 1919 பைசாகி பண்டிகை நாளன்று, பஞ்சாபின் அமர்தசரசு நகரின், நாற்புறமும் மதில்கள் சூழ்ந்த ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினர். அதன் ஒரே நுழைவாயிலை அடைத்துக் கொண்டு நின்ற 90 போலீசுகாரன்களையும் குண்டுகள் தீரும்வரை சுடும்படி உத்தரவிட்டான் வெள்ளைக்காரத் தளபதி ஜெனரல் டயர்.

“துப்பாக்கி ரவைதீரும்வரை சுடும்படி உத்தரவிட்டேன். இன்னும் குண்டுகள் இருந்திருந்தால் மேலும் சுட்டிருப்போம். பிரிட்டிஷ் அரசை எதிர்ப்பவர்களுக்கு இதுதான் கதி என்று பாடம் புகட்டவே அப்படிச் செய்தேன்” என்று திமிரோடு விசாரணை மன்றத்தில் சொன்னான் ஜெனரல் டயர்.

“அரசின் உத்தரவுக்குக் கட்டுப்பட்ட அதிகாரியாக ஜெனரல் டயர் தன் கடமையை நிறைவேற்றினார். எனவே அவர்மீது பழிபோட்டுத் தண்டிப்பதை நான் விரும்பவில்லை” என்று ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு வக்காலத்து வாங்கியவர்தான் இன்று தேச பிதாவாகப் போற்றப்படுகிறார்.

அன்று ஜாலியன்வாலாபாக் படுகொலையைத் தன் கண்முன்னால் கண்டு துடித்தவன் தான் உத்தம்சிங் என்ற 19 வயது இளைஞன். அன்று 300 பேர் கொல்லப்பட்டதாகப் பத்திரிகைகள் எழுதின. 2000 பேராவது இருக்கும் என்பது தான் மக்களின் நினைவில் நிற்கிறது.

இந்தப் படுகொலைக்கு நேரடிக் காரணமானவர்கள் இருவர். ஒருவன், கொலைப்படைக்குத் தலைமையேற்ற தளபதி டயர். மற்றவன் அதற்கு உத்தரவிட்ட பஞ்சாப் மாநில ஆளுநராக இருந்த மைக்கேல் ஓ. டயர். இவ்விருவரையும் கொன்று பழிதீர்ப்பது என்று சபதம் மேற்கொண்டான் உத்தம்சிங். நீதி, சமத்துவம் பல்வேறு மதத்தவர்களிடையே சகோதரத்துவம் ஆகியவற்றை இலட்சியமாகக் கொண்ட உத்தம்சிங் அமெரிக்காவிலும் கனடாவிலும் வாழ்ந்த இந்தியர்களால் துவங்கப்பட்ட இந்திய கேதார் கட்சி (இந்திய புரட்சிக் கட்சி)யில் இணைந்தான்.

இந்து- இசுலாமிய - சீக்கிய ஒற்றுமை விடுதலையைக் குறிக்கும் வகையில் ராம்முகம்மது சிங் ஆசாத் என்று பெயர் சூட்டிக்கொண்டான். “மதத்தின் பெயரால் என்மக்களிடம் என்னைப் பிரிப்பது என்னையே துண்டுத் துண்டாக வெட்டுவதாகும்” என்று சொன்னான். தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா வழியாகப் பயணமான அவன் 1933 -ல் பிரிட்டனுக்கு போய்ச் சேர்ந்தான்.

உத்தம்சிங்கின் இலக்குகளில் ஒருவனான ஜெனரல் டயர் காந்தியின் வக்காலத்து, காலனிய அரசின் பாராட்டு- பரிசு பெற்று பதவி உயர்வு பெற்று லண்டன் திரும்பி, பின்னர் வாத நோயால் இறந்தான். இன்னொரு இலக்கான பஞ்சாப் ஆளுநராக இருந்த மைக்கேல் ஓ.டயர் பதவி ஓய்வு பெற்றிருந்தான். உத்தம்சிங் அவனது மாளிகையில் பணியாளாகா சேர்ந்தான். இரகசியமாகப் பலிவாங்கினால் எஜமான் -பணியாள் தகராறாகக் கருதப்படும். அரசியல் காரணம் மறைக்கப்படும் என்பதால் தகுந்த தருணத்திற்குக் காத்திருந்தான்.

அந்நாட்களில் இலண்டன் நகரம் நாஜி விமானப் படையினால் எப்போதும் தாக்கப்படும் என்ற அச்சத்தால் இராணுவக் கெடுபிடியில் நிறைந்திருந்தது. அத்தனையையும் மீறி பக்கிங்காம் அரண்மனைக்கு மிக அருகே இருந்த அரங்கத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த உத்தம்சிங் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் ஓ.டயரைச் சுட்டு வீழ்த்தினான்.

“நீண்ட 21 ஆண்டுகளாக இப்படிப் பழிதீர்க்க முயன்று வருகிறேன். என்பணி நிறைவேறியதற்காக நான் ஆனந்தமடைகிறேன். இது என் கடமை” என்று முழங்கினான். கதிகலங்கிப்போனது ஆங்கிலேயக் காலனி அரசு.

சுபாஷ் சந்திரபோஸ், உத்தம்சிங்கைப் பாராட்டினார். பின்னாளில் இந்தியாவில் தனது பரம்பரை ஆட்சியை நிறுவிய நேரு வருத்தம் தெரிவித்தார். இன்று தேசபிதா மகாத்மா என்றெல்லாம் போற்றப்படும் காந்தி தீர்மானமாகக் கண்டித்தார்.

பீகார், சௌரிசௌரவில் போலீசு நிலையத்தைத் தாக்கி, 22 போலீசுக்காரர்களைக் கொன்ற விவசாயிகளின் வீர எழுச்சி உட்பட பல ஆங்கில எதிர்ப்புப் போராட்டங்களைக் காட்டிக் கொடுத்த தேசத்துரோகி காந்தியிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

மாவீரன் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவர்களின் தியாகப் பாரம்பரியத்தில் ஊறிப் போனவன் உத்த்ம்சிங். காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் போது பகத்சிங், ராஜகுரு, சுகதேவைத் தூக்கிலிட சம்மதம் தெரிவித்தவர் காந்தி. “அந்தப் பையன்களைத் தூக்கிலிடுவதாக இருந்தால் கராச்சி காங்கிரசு மாநாட்டுக்கு முன்னரே தூக்கிலிடுவதுதான் நல்லது” என்று இர்வின் பிரபுவுக்கு கடிதம் எழுதினார் காந்தி. ஆங்கிலேய அரசு அதை ஏற்று நிறைவேற்றிய பிறகு, கராச்சி மாநாட்டுக்கு வந்த காந்தி, பட்டேலை எதிர்த்து, “பகத்சிங்கைக் கொன்றவரே திரும்பிப்போ” என்று ஆத்திரத்துடன் பொங்கி எழுந்தனர், மக்கள்.

அப்படிப்பட்ட காங்கிரசு வீரதீரச் செயலை எப்படி வரவேற்கும்? நேருவின் நெருங்கிய அந்தரங்கத் தரகன் கிருஷ்ணமேனன், தன்னை ஒரு கம்யூனிச அனுதாபியாகக் காட்டிக்கொண்டு கம்யூனிசத்தையே கொச்சைப்படுத்தியவன். “அறியாமல் - மனபேதலிப்பால் செய்துவிட்டேன்” என்று முறையிடும் படி உத்தம்சிங்க்கு யோசனை கூறினார் இந்த கிருஷ்ணமேனன். மன்னிப்புக் கேட்டு தூக்குத் தண்டனையில் இருந்து தப்பிக்கும் யோசனையைக் கோபாவேகத்துடன் நிராகரித்தான், உத்தம்சிங்.

இவ்வாறுதான் பகத்சிங் பாரம்பரியத்தில் பஞ்சாப் முழுவதும் ஒரு வீரதீர நாயகனாகவும் தியாகியாகவும் உருவானான். அவன் இங்கிலாந்தில் தூக்கிலிடப்பட்டு பெண்டான்வில்லா சிறையில் புதைக்கப்பட்டான்.

முப்பது ஆண்டுகளுக்குப்பின் அவனது உடல் தோண்டி எடுக்கப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டது. பஞ்சாப் முழுவதும் மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட அவனது சவப்பெட்டி, உத்தம்சிங் பிறந்த சுனாம் கிராமத்தில் புதைக்கப்பட்டு அவனது தியாகத்தைப் போற்றும் நினைவுச் சின்னமும் எழுப்பப்பட்டுள்ளது.

“இது ஒரு பழிவாங்கும் சித்திரம் அலல. எந்த வகை ஒடுக்குமுறையானாலும் அதை எதிர்த்துப் போராடுவது பற்றிய ஒரு திரைப்படம்” என்கிறார் அதன் இயக்குநர் சித்தார்த்.

உத்தம்சிங் ஒரு பயங்கரவாதி அல்ல. சம்பந்தமில்லாத, அப்பாவி மக்களின் உயிருக்கு அவமரியாதை செய்வதுதான் பயங்கரவாதம். உத்தம்சிங்கும், பகத்சிங்கும் இலக்கை நோக்கிய, வரம்புக்குட்பட்ட வன்முறையை நம்பிய அதேசமயம் பரந்துப்பட்ட மக்களைத் திரட்டுவதை முக்கியமாகக் கொண்டிருந்தனர்.

தியாகி பகத்சிங்கின் பெயரை சீக்கிய - காலிஸ்தானி பயங்கரவாதிகள் கேடாகப் பயன்படுத்துவதற்கு எதிராகச் செய்திப் படமொன்றை ஏற்கனவே ஆனந்தபட்வர்த்தன் எடுத்திருந்தார். தியாகி உத்தம்சிங்கின் புகழையும் அவர்கள் கேடாகப் பயன்படுத்துவதை எதிர்த்திட இத்திரைப்படம் உதவும் என்கிறார் இதன் திரைக்கதை- உரையாடல் ஆசிரியர்.

இந்தியத் திரைப்படங்கள், குறிப்பாக இந்தி சினிமாக்கள், தனிநபர் காரணங்களுக்காக வெறுமனே வெறியும் ஆத்திரமும் பொங்கும் இளைஞனைக் கதாநாயகனாகச் சித்தரிக்கின்றன. குரூரமான காட்சிகள், வன்முறைக்காக வன்முறை என்பதே சினிமா வியாபாரிகளின் கரு.

ஆனால் உத்தம்சிங்கின் கதையோ, நாட்டின் மாறுபட்ட பண்பாடுகளை மத நம்பிக்கைகளையும் மதிக்கும் அதே சமயம் நாட்டு விடுதலை சமத்துவம் என்கிற தியாக உணர்வு மிக்க விடுதலைப் போராளியின் உண்மை வரலாறு. ஆக்கப்பூர்வமான சமுதாய மாற்றத்திற்கும், நீதி நிலைநாட்டுவதற்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வன்முறை நியாயமானது, அவசியமானது என்று வாழ்ந்து காட்டினார் உத்தம்சிங்.

பகத்சிங், உத்தம்சிங் போன்ற போராளிகளின் புரட்சிப் போராட்டங்களால் நிறைந்ததுதான் இந்தியப் விடுதலைப் போராட்ட வரலாறு. சிப்பாய்க் கலகம் எனப்படும் முதல் இந்திய சுதந்திரப் போர், சௌரிசௌரா உழவர்களின் பேரெழுச்சி, சிட்டகாங் ஆயுதக் கிடங்குச் சூறையாடல், பகத்சிங், குதிராம் போஸ், உத்தம்சிங் போன்றவர்களின் புரட்சிகர சாகசங்கள் முதல், தபால்- தந்தி ஊழியர்கள் மற்றும் மாபெரும் கடற்படை எழுச்சி என்று இலட்சக்கணக்கான மக்களின் இரத்தத்தால் சிவந்ததுதான் இந்திய விடுதலைப் போராட்டப் பாதை.

ஆனால் “கத்தியின்றி இரத்தமின்றி” காந்தியின் சத்தியாகிரகமும் அகிம்சையும் நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கித் தந்ததாக ஏறக்குறைய எண்பது ஆண்டுகளாகப் பொய்ப்பிரச்சாரம் நடக்கிறது. பகத்சிங், உத்தம்சிங் போன்றவர்கள் புரட்சிப் போராளிகளாக வாழ்ந்தபோது அவர்களை இழித்தும் பழித்தும் பேசி, காட்டிக் கொடுத்தும், அவர்களைத் தூக்கிலிட ஆதரவு தெரிவித்தும் துரோகம் செய்தவர்கள்தாம் காந்திய தேசியவாதிகள். ஆனால் இன்றோ அவர்களை பூசை அறைத் தெய்வங்களாக்கி “தேச பக்தி”ப்பாயிரம் பாடுகிறார்கள்.

பகத்சிங்- உத்தம்சிங் போன்றவர்கள் மதச்சார்பற்ற, பொதுவுடமைப் புரட்சியாளர்களாக வாழ்ந்தார்கள் என்கிற உண்மையை மூடிமறைத்து அவர்களுக்குக் குடுமியும் நாமமும் சாத்தி இந்துத்துவ தேசியவாதிகளைப் போல அவர்களைச் சித்தரிக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ் பாசிச மத வெறியர்கள்.

வெள்ளையரின் நேரடி ஆட்சியின் போது இருந்ததைப் போலத்தான் இன்றும் ஆயுதமேந்தாமலும், புரட்சிகர வன்முறையில் இறங்காமலும் உழைக்கும் மக்கள் தமக்குரிய நியாயத்தையும் வாழ்வுரிமையையும் நிலைநாட்டவே முடியாது. வேலை வாய்ப்பு கேட்டுப் போராடிய பார்வையற்ற பட்டதாரி இளைஞர்கள் மீது சுட போலீசை ஏவி தடியடி நடத்துகிறது அரசு. ஒன்பது, பத்து வயது சிறுவர்கள் மீதும் 65 வயதுக்கும் மேலான மூதாட்டி மீதும் கூட “தடா” எனப்படும் ஆள்தூக்கிச் சட்டத்தை ஏவி சிறையிலடைக்கிறது, அரசு.

“இன்னொரு ஜாலியன்வாலாபாக்” என்று எத்தனை மக்கள் திரள் படுகொலைகளைத்தான் சொல்வது? பீகாரில் ஆர்வால் நகர மைதானத்தில் கூடிய கூலி ஏழை விவசாயிகளைச் சூழ்ந்துக் கொண்டு தோட்டா தீரும் வரை சுட்டுப் பொசுக்கினர். நாகபுரியில் மந்திரியிடம் மனுக்கொடுக்கப்போன ஆதிவாசிகளை முற்றுகையிட்டு தடியடி நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டவரைக் கொன்றனர். பம்பாயில் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போட்டு அவமரியாதை செய்ததை எதிர்த்து மறியலில் ஈடுபட்ட தாழ்த்தப்பட்டவர்களைக் கண்மண் தெரியாமல் சுட்டுக் கொன்றனர். உத்திரப்பிரதேசத்தில் சிமெண்ட் ஆலைகளைத் தனியார்மயமாக்குவதை எதிர்த்துப் போராடிய தொழிலாளர்கள் பெருந்திரளாகக் கொல்லப்பட்டனர். இதோ, நெல்லையில் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுக்கப்போன மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை அடித்து நொறுக்கி தப்பி ஒட வழியின்றி தாமிரவருணி ஆற்றில் தள்ளி பெண்கள், குழந்தை உட்பட 17 பேரைக் கொன்றனர்.

இந்த “ஜாலியன்வாலாபாக்” படுகொலைகளுக்கு நியாயம் பெறவேண்டாமா? இதற்கெல்லாம் பகத்சிங், உத்தம்சிங் பாதையில் பயணப்படுவதா? இல்லை, விசாரணைக்கமிசன் கண்துடைப்புகளை ஏற்பதா? சத்தியாகிரகம், அகிம்சை வழி என்று ஏமாந்து நிற்பதா?

சத்தியாகிரகம், அகிம்சை என்பதெல்லாம் உண்மையில் பத்தாம்பசலித்தனமான பம்மாத்து. இந்தச் சமுதாயத்தின் சட்டப்பூர்வமான, அதிகாரப்பூர்வமான ஒழுங்குமுறையே ஆயுதந்தாங்கிய, பயிற்சி பெற்ற, வன்முறை - பயங்கரவாத நிறுவனங்களால்தான் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. சாதி, மத, இன, மொழி, வர்க்க ஒடுக்குமுறைச் சுரண்டலுக்கு எதிராகக் கேள்விகேட்டு தனிநபராகவோ, குழுவாகவோ பெருந்திரளாகவோ மக்கள் எழுந்தபோதெல்லாம் அந்த அரசு வ்ன்முறை ஏவிவிடப்பட்டு பயபீதி விதைக்கப்பட்டிருக்கிறது.

அதிகாரி, போலீசுக்காரன், நீதிபதி, இராணுவச் சிப்பாய் எல்லாருமே நடை, உடை, பாவனை, தோற்றம், பேச்சு, செயல் எல்லாவற்றிலும் சாதாரணமக்களிடமிருந்து அந்நியப்பட்டு, அச்சுறுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப் பட்டிருக்கின்றனர். இப்படி ஒட்டுமொத்த அரசு அமைப்பே வன்முறையாக வடிவம் எடுத்துள்ள அதேசமயம், அதற்கெதிராக உணர்ச்சிவசப்பட்டுஒரு குடிமகன் நியாயங்கேட்டு சுட்டு விரலை உயர்த்தினால் கூட பயங்கரவாத, தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு, கேள்விமுறையின்றி கொல்லப்படுகிறான்.

“பகத்சிங், உத்தம்சிங் வாழ்ந்த காலம் அந்நியர் ஆட்சி இருந்தது. ரௌலட் சட்டம் போன்ற கொடிய ஆள்தூக்கிச் சட்டங்கள் இருந்தன. அவர்கள் ஆயுதம் ஏந்தினர்; எதிரிகளைப் பழிதீர்த்துத் தியாகிகளாயினர். இன்று ஆயுதந்தூக்கவோ, வன்முறையில் ஈடுபடவோ அவசியமில்லை. மக்கள் ஜனநாயக பூர்வமாகவே தமது கோரிக்கைகளை அடையலாம். ஆகவே, அகிம்சைவழியும் சத்தியாகிரகமுமே சரியானது” என்று பத்தாம்பசலிகள் போதிக்கின்றனர்.

பகத்சிங், உத்தம்சிங் வழியிலேபோய் நாடு உண்மையான சுதந்திரத்தை அடைந்துவிடக்கூடாது என்றுதான் காந்தி- நேரு - ஜின்னாக்கள் ஆங்கிலேயக் காலனிய ஆட்சியாளர்களுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அதிகாரத்தைக் கைமாற்றிக் கொண்டு போலி சுதந்திரத்தைப் பெற்றார்கள். அதனால்தான் இருநாடுகளின் மீதும் ஏகாதிபத்தியச் சுரண்டலும் ஒடுக்குமுறையும் தொடர்கிறது. அவர்களின் வாரிசுகள் நாட்டை மறுகாலனியாக்கும் துரோகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அன்று ஒரு ரௌலட் சட்டம்தான் இருந்தது. இன்று “தடா”, “பொடா”, “மிசா”, “மினிமிசா”, தேசியப் பாதுகாப்புச் சட்டம், அரசு துரோகச் சட்டம் என்று பல கருப்புச் சட்டங்களும் “ஜாலியன் வாலாபாக் படுகொலை”யைப் போன்ற பல மக்கள் திரள் படுகொலைகளும் நீடிக்கின்றன. அன்று பகத்சிங்குகளும், உத்தம்சிங்குகளும் சட்டப்படியாவது விசாரித்துத் தூக்கிலிடப்பட்டனர். இன்றோ, போலீசுடன் மோதல் என்கிற பெயரில் கேள்விமுறையின்றி நேரடியாகவே போராளிகள் படுகொலை செய்யப்படுகின்றனர்.

ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் மூலம், பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவரைத் தூக்கிலிட்டதன் மூலம் விடுதலைத் தீயை அனைத்துவிடலாம் என்று ஆங்கிலேயர்கள் கனவு கண்டனர். ஆனால் உத்தம்சிங்குகள் உதித்தனர். அதுபோலவே புதிய ஜனநாயகப் புரட்சிக்காகவும், தேசிய இனவிடுதலைக்காகவும் ஆயுதம் ஏந்தியுள்ள போராளிகளைப் படுகொலை செய்வதன் மூலம் விடுதலை- புரட்சித் தீயை அணைத்துவிட ஆளுவோர் எத்தனிக்கின்றனர். ஆனால் போராளிகள் மடிந்து கொண்டும் புதிதுபுதிதாக பிறந்து கொண்டும் இருக்கிறார்கள். இறுதி இலட்சியம் ஈடேறும்வரை இந்த வரலாறு நீடிக்கும்.

நன்றி : புதிய கலாச்சாரம்

Jul 17, 2008

மகரஜோதி பொய்! - மருதையன்


""சபரி மலையின் மகரஜோதி என்பது தானே எரிவது அல்ல, அது கோயில் ஊழியர்களால் கொளுத்தப்படுவதுதான்'' என்று ஐயப்பன் கோயில் தலைமைப் பூசாரியின் குடும்பத்தைச் சேர்ந்த ராமன் நாயர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதனை ஒட்டி பதில் சொல்லியாக வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார் கோயிலின் தலைமைத் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு. அவர் சார்பில் அறிக்கை வெளியிட்ட அவரது பேரனும் கோயில் தந்திரியுமான ராகுல் ஈஸ்வர், ""வனத்துறை அதிகாரிகளும், தேவசுவம் போர்டு (அறநிலையத்துறை) அதிகாரிகளும், போலீசும் கூட்டாகச் சேர்ந்து கொளுத்தும் தீப்பந்தம்தான் மகரவிளக்கு'' என்ற உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.


"இந்த அளவுக்கு குட்டு உடைந்த பிறகும் மார்க்சிஸ்டு அரசு மகரஜோதியைக் கொளுத்துமா?' என்ற கேள்விக்கு ""சபரிமலையில் மகரவிளக்கு வெளிச்சம் எப்படி உருவாகிறது என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும். ஆனால் பக்தர்களின் நம்பிக்கைக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது'' என்று பதிலளித்திருக்கிறார் மார்க்சிஸ்டு முதல்வர் அச்சுதானந்தன். யாரை யார் விசாரிப்பது? பந்தம் பிடிப்பவனை பற்ற வைப்பவன் விசாரிப்பதா? ""தீவட்டியைத் தொடர்ந்து கொளுத்துவோம். தீவட்டிக் கொள்ளையைத் தொடர்ந்து நடத்துவோம்'' என்பதுதான் அச்சுதானந்தனுடைய கூற்றின் பொருள்.


மகரஜோதி அம்பலமாவது இது முதல் முறையல்ல. பந்தம் கொளுத்திய மின்வாரிய ஊழியர்களைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள் கேரள மாநில பகுத்தறிவாளர் சங்கத்தினர். ""அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா, அரசாங்க வருமானத்துக்கு ஆப்பு வைக்காதீங்கப்பா'' என்று அன்பு வேண்டுகோள் விடுத்து அன்று பகுத்தறிவாளர்களை அமுக்கினார் அந்நாள் மார்க்சிஸ்டு முதல்வர் ஈ.கே. நாயனார்.


கோயில் தந்திரி கண்டரரு மோகனரு, தனது லீலாவிநோதங்கள் மூலம் ஐயப்பன் மகிமையைக் கந்தலாக்கியது தனிக்கதை. அவருக்கு வேதம், மந்திரம் போன்ற வெங்காயம் எதுவும் தெரியாதென்பதும் விலைமாதர் வீட்டு முகவரிகள் மட்டுமே தெரியும் என்பதும் அவரிடம் நடந்த விசாரணையில் அம்பலமானது. இப்போது தலைமைத் தந்திரியின் ஒப்புதல் வாக்குமூலம் வந்திருக்கிறது.


தெற்கே தீவட்டி பிசினஸ்; வடக்கே பனிக்கட்டி பிசினஸ். காஷ்மீரில் அமர்நாத் எனுமிடத்தில் குளிர்காலத்தில் ஒரு குகைக்குள்ளே பெரிய "குச்சி ஐஸ்' வடிவத்தில் உருவாகும் பனிக்கட்டியைத் தரிசிப்பதற்கு ஆண்டுதோறும் 4 லட்சம் பக்தர்கள் அங்கே சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த பக்தர்களை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாக்க 40,000 சிப்பாய்களை மாதக்கணக்கில் காவல் வைக்கிறது அரசு.


மேற்படி சிவலிங்கத்திற்கும் வந்தது சோதனை! ""முன்னர் சுமார் 12 அடி உயரம் இருந்த பகவான் தற்போது 6 அடிக்கும் கீழே போய்விட்டார். காரணம் புரியவில்லை'' என்று சென்ற ஆண்டு அபாயச்சங்கு ஊதினார் அந்தக் கோயிலின் நிர்வாக அதிகாரி. பகவானைக் கண்டு பக்தர்கள் உருகலாம், பக்தர்களைக் கண்டு பகவான் எப்படி உருகமுடியும்? ""பக்தர்கள் விடும் மூச்சுக்காற்றின் வெப்பத்தைப் பனீசுவர பகவானால் தாங்கமுடியவில்லை'' என்றன சில பத்திரிகைகள். பக்தர்களின் மூச்சை நிறுத்த முடியாதே! ""குகைக்கு அருகில் அடுப்பு பற்றவைத்து பக்தர்கள் சப்பாத்தி போடுகிறார்கள். சூடு தாங்கமுடியாமல்தான் பகவான் கசிந்துருகுகிறார்'' என்றன வேறு சில பத்திரிகைகள். புவி சூடேறுதல்தான் காரணம் என்றனர் வேறு சிலர்.


காரண காரியங்கள் குறித்த அறிவுப்பூர்வமான ஆய்வுகள் தொடர்வது ஆன்மீகத்துக்கு ஆபத்து என்பதால் குப்தா கமிசன் என்றொரு கமிசனைப் போட்டு ஆராயச் சொன்னது அரசு. பகவான் கரையாமலும், பக்தர்கள் கூட்டம் கலையாமலும் பாதுகாக்கும் பொருட்டு குகைக்கு குளிர் சாதன வசதி செய்து சிவபெருமானை ஸீரோ டிகிரியில் பாதுகாப்பது; பக்தர்கள் சப்பாத்தி போட 100 ஏக்கர் வனப்பகுதியைக் கோயிலுக்கு தானம் கொடுத்து அடுப்புச் சூட்டிலிருந்து ஆண்டவனைப் பாதுகாப்பது என்று முடிவு செய்தது அரசு. இந்த 100 ஏக்கர் தானத்துக்கு எதிராகக் காஷ்மீரே பற்றி எரியத் தொடங்கி, அதன் விளைவாக அம்மாநில காங்கிரசு அரசு இப்போது உருகிக் கொண்டிருக்கிறது.


எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக, "அமர்நாத் பனிலிங்கம் செயற்கையானதல்ல' என்று கொட்டை எழுத்தில் செய்தி போடுகிறது தினமணி (24.6.08).


இயற்கையாக உருவான எல்லாம் வல்ல இறைவனை செயற்கையாகப் பாதுகாப்பது ஏன் என்ற கேள்விக்கு மட்டும் அவர்கள் பதில் சொல்லவில்லை.


"இராமன் பாலம் என்பது இயற்கையாக அமைந்த மணல்திட்டு' என்று சொன்னால், "இல்லையில்லை, அது இராமனால் கட்டப்பட்டது, செயற்கையானது எனவே தெய்வீகமானது' என்று கத்துகிறார் இராம. கோபாலன். "அமர் நாத் பனிலிங்கம் செயற்கையானது' என்று சொன்னால் "இல்லையில்லை, அது இயற்கையானது எனவே தெய்வீகமானது' என்கிறார்கள். வடக்கே இயற்கை தெய்வீகம்! தெற்கே செயற்கை தெய்வீகம்!


மக்களை மயக்கத்தில் ஆழ்த்துவதற்காக ஆளும் வர்க்கம் உருவாக்கிய மடமைகள் உடைபடும்போது மதவாதிகள் பதறுகிறார்கள்; அதற்குக் காரணம் இருக்கிறது. ஆனால் அற்புதம் என்றும் தெய்வீகம் என்றும் தாங்கள் இதுகாறும் நம்பிக் கொண்டிருந்தவை அயோக்கியத்தனமான மோசடிகள் என்று ஆதாரப்பூர்வமாகத் தெரியும்போது பக்தர்கள் பதறியிருக்க வேண்டாமா?


""கடன் பட்டதும், காவியணிந்ததும், மதுமாமிசம்மனைவியைத் துறந்ததும், காடு மலைகளில் நடையாய் நடந்ததும் கேவலம் ஒரு தீவட்டியைத் தரிசிக்கத்தானா?'' என்று குமுறியிருக்க வேண்டாமா? "அது தீவட்டியில்லை, தெய்வீகத் தீபம்தான். நாங்கள் நம்பமாட்டோம்' என்று நக்கீரனுக்குப் பேட்டி கொடுக்கிறார்கள் ஐயப்பசாமிகள். ""பகவானை எண்ணி பனியைச் சகித்ததும், பயங்கரவாதிகளை எண்ணிப் பயந்து செத்ததும், 12,000 அடி உயரம் மூச்சு வாங்க மலையேறியதும் ஒரு குச்சி ஐஸைத் தரிசிக்கத் தானா?'' என்று கொதித்திருக்க வேண்டாமா? அந்தக் குச்சி ஐஸைப் பாதுகாக்க பாரத் பந்த் நடத்துகிறது பாரதிய ஜனதா. அதற்கும் கூட்டம் சேருகிறது.


பகுத்தறிவின் ஒளி பட்டவுடனே மூடநம்பிக்கை இருள் அகலவில்லையே ஏன்? "மகரஜோதி பொய்' என்பதை அந்தக் கோயிலின் தந்திரியே பிரகடனம் செய்த பின்னரும் அய்யப்பன்மார்கள் திருந்தவில்லையே ஏன்? இந்த பக்தர்களை "மூட நம்பிக்கைக்குப் பலியானவர்கள்' என்று மட்டும் நாம் கருதமுடியுமா? என்ன வகை பக்தி இது?


மூடநம்பிக்கைபகுத்தறிவு, ஏமாற்றுபவன்ஏமாற்றப்படுபவன் என்ற வகைப்பாடுகளின் வரம்பைத்தாண்டி ஒரு விநோதக் கலவையாக உருப்பெற்று வருகிறது இந்த "பக்தி'. காமவெறி பிடித்த பித்தலாட்டக்காரனாக அர்ச்சகன், இந்தப் பித்தலாட்டத்துக்குப் பந்தம் பிடிக்கும் அரசு, அதற்குக் காவல் நிற்கும் போலீசு, ஐயப்ப சீசனில் திருடுவதற்காகவே மாலை போட்டுக் கொள்ளும் பிக்பாக்கெட்டுகள், டாஸ்மாக் கடைகளில் அய்யப்பன்மார்களுக்கென்றே ஒதுக்கப்பட்டிருக்கும் தனிக் கோப்பைகள், சுத்தம் கருதி சாக்கனாக் கடைகளில் அவர்களுக்கு மட்டும் இலை போட்டுப் பரிமாறப்படும் புரோட்டாக்கள்..! மோசடியும் சுயமோசடியும் சரிவிகிதத்தில் கலந்து உருவாகியிருக்கும் இந்தக் கூட்டுக் களவாணித்தனத்தில் ஏமாற்றுபவன் யார், ஏமாற்றப்படுபவன் யார் என்று பிரித்தறிய முடியவில்லை.


புதுப்பட ரிலீஸ் அன்று கட் அவுட்டுக்குப் பால் அபிசேகம் செய்யும் ரசிகனின் பரவசம், நூறு ரூபாய்ஒரு குவாட்டர் என்று கறாராக ரேட் பேசிக் கொண்டு லாரியில் ஏறி வந்து "தலைவா' என்று உணர்ச்சி வசப்படும் தொண்டனின் மனக்கிளர்ச்சி, இலஞ்சத்தை அழுதுவிட்டு அப்புறமும் அதிகாரியிடம் "ங'ப் போல் வளையும்' நெளிவு சுளிவு, மொய் எழுதும் வயிற்றெரிச்சலை மறைத்தபடி திருமண வீட்டில் மலர்ந்து மணம் பரப்பும் புன்னகைகள்..! அன்றாட வாழ்வில் நாம் காணும் இந்த "உணர்ச்சிகள்' எல்லாம் அமர்நாத் யாத்ரீகர்களின் பரவசத்தையும் அய்யப்பன்மார்களின் மனக் கிளர்ச்சியையும் பிரதிபலிக்கவில்லையா?


இந்த மத உணர்ச்சி ஒரு மயக்கமென்றால், அது ஆட்படுத்தப்பட்ட மயக்கம் மட்டுமல்ல, விரும்பி ஆட்படும் மயக்கம். இது தெய்வீக அபினி மட்டுமல்ல, லவுதீக அபினியும் கூட. இது புனித யாத்திரை என்ற முகமூடி அணிந்த இன்பச் சுற்றுலா. இந்தப் போலி பக்தியை ஆன்மீக அனுபவமாக "உணர்ந்து' மயங்கும் பொருட்டு ஒரு "தெய்வீக கிளைமாக்ஸ்' பக்தனுக்கே தேவைப்படுகிறது.


எனவேதான் பக்தன் பதறுவதில்லை. சாம்சங் ரெப்ரிஜிரேட்டரையே கருவறையாக்கி, அதற்குள் பனி லிங்கம் ஒன்றை உறையவைத்து, ஆண்டுக்கு ஒரு முறை திறந்து காட்டினாலும் "ஹர ஹர மகாதேவா' என்று கன்னத்தில் போட்டுக்கொள்ள இந்த பக்தர்கள் தயார்! மகரஜோதிக்குப் பதில் சிலிண்டரை வைத்து "ஸ்பிக் ஜோதி'யைக் கொளுத்திக் காட்டினாலும் அதனைத் "தரிசிக்கும்' பொருட்டு விரதமிருக்கவும், இருமுடி சுமக்கவும் அய்யப்பன்மார்கள் தயார்!


"டென் கமாண்ட்மென்ட்ஸ்' என்ற திரைப்படத்தில் பார்த்த ஒரு காட்சி இங்கே நினைவுக்கு வருகிறது. பல வகையான விக்கிரக வழிபாடுகளில் மூழ்கியிருக்கும் யூத மக்களிடம் ""இவையெல்லாம் கடவுளல்ல, உண்மையான கடவுளின் செய்தியை நான் உங்களுக்குக் கொண்டுவருகிறேன்'' என்று கடவுளைத் தேடி மலைக்குச் செல்வார் மோசஸ். போனவர் திரும்புவதற்குத் தாமதமாகவே, ""ஒரு கடவுளில்லாமல் இன்னும் எத்தனை நாள்தான் நாம் காத்திருக்க முடியும்?'' என்று விசனப்பட்ட மக்கள் ஒரு எருமைக்கிடா பொம்மையைக் கடவுளாக்கி அதைத் தலையில் வைத்துக் கூத்தாடத் தொடங்குவார்கள்.


அந்தக் கூத்தும் இந்தக் கூத்தும் ஒன்று போலத் தோன்றினாலும் ஒன்றல்ல. அது அச்சத்திலும் மவுடீகத்திலும் மனிதகுலம் ஆழ்ந்திருந்த, அறிவியல் வளராத காலம். அது பல் முளைக்காத குழந்தையின் மழலை. இன்று நாம் காண்பதோ கிழவனின் மழலை. ""ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான்தான் என்று, அந்தப் பொய்யில் உயிர்வாழ்வேன்'' என்று மன்றாடும் காதலனைப் போல, "எங்களுக்கு ஒரு மாயையை வழங்கு' என்று இறைஞ்சுகிறார்கள் இந்த பக்தர்கள்.


சென்னை தீவுத்திடலில் அமர்நாத்தைப் போலவே பனிக்கட்டி லிங்கத்தை உருவாக்கி "சென்னையில் அமர்நாத்' என்று விளம்பரம் செய்யப்படுகிறது. ராட்டினம் ஏறப்போன பொருட்காட்சிக் கூட்டம் உடனே பக்தர்களாக உருமாறி அந்த செயற்கை லிங்கத்தைப் பரவசத்துடன் வழிபடுகிறது. திருப்பதி வரை சென்று தரிசிக்க முடியாத பக்தர்களுக்காக "சீனிவாச திருக்கல்யாணத்தை' சென் னையிலேயே நடத்தி, "சென்னையில் ஒரு திருப்பதி' என்று விளம்பரம் செய்கிறது திருப்பதி தேவஸ்தானம். "கோயிந்தா கோயிந்தா' என்று அங்கேயும் கூட்டம் அலைமோதுகிறது.


ஷாம்பு பாட்டில் வாங்கும் வசதியில்லாதவர்களுக்காக இப்போது சாஷேக்களில் தொங்குகிறார் கடவுள். நுகர்வு தரும் சிற்றின்பத்துக்கும் ஆன்மீகப் பேரின்பத்துக்கும் இடையில் நிலவுவதாகச் சொல்லப்படும் சீனப்பெருஞ்சுவர் மாயமாக மறைந்து விட்டது. இந்தப் பேரின்பமென்பது சிற்றின்பத்தின் வாலில் தடவப்பட்டிருக்கும் ஆன்மீக வாசனைத் தைலம். தமது இஷ்ட தெய்வங்கள் மீது இந்த பக்தர்கள் கொண்டிருக்கும் ஈடுபாடு, தமது இஷ்ட பிராண்டுகள் மீது நுகர்வோர் கொண்டிருக்கும் ஈடுபாட்டையே பெரிதும் ஒத்திருக்கிறது.


இது உத்திரவாதமில்லாத பரலோக இன்பவாழ்வை இலட்சியமாகக் கொண்டு இகலோகத் துன்பங்களைச் சகித்துக் கொள்ளும் இலக்கண வகைப்பட்ட ஆன்மீகமல்ல; உத்திரவாதமான இன்பத்துக்கான தேட்டம். "பக்தி' என்று புனைபெயர் சூட்டிக் கொண்ட பிழைப்புவாதம். ஜோதியோ, லிங்கமோ, பக்திப் பரவசமோ அனைத்தும் இங்கே பிஸ்கெட் பாக்கெட்டுகளின் பளபளப்பான மேலுறைகள் மட்டுமே.


கஞ்சாச் செடியின் போதையைத் தெய்வீகமென்றும் பேரின்பமென்றும் தவமென்றும் எண்ணிக் கொண்டிருந்த கருத்து மயக்கமல்ல இது. "கஞ்சாவே பேரின்பம்' என்று அறிவுப்பூர்வமாகத் தேர்ந்து தெளிந்த விழிப்பு நிலை. சொல்லப்போனால் இது வேறு ஒரு வகைப் பகுத்தறிவு. சுயநலத்துக்காகத் தெரிந்தே தன்னை மடமையில் ஆழ்த்திக் கொள்ளும் பகுத்தறிவு. கல்லையும் மரத்தையும் கண்டு அஞ்சி வணங்கிய மூடநம்பிக்கையைக் காட்டிலும் அபாயகரமான பகுத்தறிவு.


"மாலை போடுவது மடமை' என்று நீங்கள் சாடினால், "ஒரு மண்டலம் விரதமிருப்பதும், புலால் மறுப்பதும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்' என்று அறிவியல் பூர்வமாக விளக்கி உங்களைத் திகைப்படையச் செய்வார்கள் இந்த பக்தர்கள். "பனிலிங்கம் பொய்' என்று நீங்கள் கூறினால், ""இந்த விசயம் உங்களுக்கு இப்போதுதான் தெரியுமா, எனக்கு ஏற்கெனவே தெரியும்'' என்று சொல்லி உங்களை அதிர்ச்சியில் உறைய வைப்பார்கள். நீங்கள் அறிந்திராத மேலும் இரண்டு ஆன்மீக மோசடிகளை உங்களுக்கு விளக்கி, தங்களது உலக ஞானத்தின் மேன்மையை உங்களுக்குக் குறிப்பாலுணர்த்துவார்கள்.


அல்லது ""மகரஜோதியும் பனிலிங்கமும் மட்டுமா, உலகமே மோசடிகளால்தான் நிறைந்து இருக்கிறது'' என்று தத்துவஞானத்தின் தளத்துக்கு விவாதத்தை தள்ளிச் செல்லுவார்கள். லஞ்சம், வரதட்சிணை, சாதி, வாஸ்து, சாமியார்கள், ராசிக்கல் என நியாயப்படுத்த முடியாத எல்லா அயோக்கியத்தனங்களையும் கொள்கையளவில் மறுப்பதற்கும், நடைமுறையில் அவற்றுடன் அனுசரித்துச் செல்வதற்கும் என்ன விதமான நியாயப்படுத்தல்களை சமூக வாழ்வில் நாம் எதிர்கொள்கிறோமோ, அவற்றைத்தான் பக்தர்களும் பயன்படுத்துகிறார்கள். பிழைப்புவாதமும் காரியசாத்தியவாதமும் பழகிவிட்டதால், அந்த வாதங்கள் அனைத்தையும், "பழகிய சைக்கிளை பழகிய ரோட்டில் ஓட்டும் இலாவகத்துடன்' பயன்படுத்தி பகுத்தறிவை முறியடிக்கிறார்கள் இந்த பக்தர்கள்.


"டபுள்யூ.டபுள்யூ.எஃப்' என் றொரு அமெரிக்க மல்யுத்தத்தைத் தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். அதில் இரண்டு மாமிசமலைகள் மோதிக்கொள்வார்கள். நாக்கூசும் வார்த்தைகளால் ஏசிக் கொள்வார்கள். கொலைவெறியுடன் கட்டிப் புரளுவார்கள். எனினும் அது உண்மையான சண்டையல்ல. யார் வெல்ல வேண்டும் யார் தோற்க வேண்டும் என்பதை முன்னரே தீர்மானித்து நிகழ்ச்சியை நடத்தும் முதலாளிகள் காட்சிப்படுத்தும் நாடகம் அது. இரசிகர்களுக்கும் இது தெரியும். இருந்தாலும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி சண்டையை ரசிக்கிறார்கள். "குத்து.. கொல்லு' என்று வெறிகொண்டு கூச்சலிடுகிறார்கள்.


இந்த நிகழ்ச்சியில் ஏமாற்றுபவன் யார், ஏமாற்றப்படுபவன் யார்? நடிகன் யார், ரசிகன் யார்? தீவட்டி கொளுத்துபவன் யார், கன்னத்தில் போட்டுக் கொள்பவன் யார்? கண்டரரு யார், காணதவரு யார்? குருசாமி யார், கன்னிச்சாமி யார்?


இது ஒரு வகைப் "பகுத்தறிவு'. இதுதான் நம் முன் பக்திவேடம் பூண்டு ஆடுகிறது. வெறும் கருத்துப் போராட்டத்தால் இதனை வீழ்த்த முடியாது. இதன் இதயம் ஆன்மீகத்தில் இல்லை ; லௌகீகத்தில் இருக்கிறது சமூக வாழ்க்கையின் எல்லாப் பரப்புகளிலும் வேர் பரப்பியிருக்கும் இந்தப் "பகுத்தறிவை' எதிர்த்துப் போராடுவதென்பது "ஒரிஜினல் மூடநம்பிக்கையை' எதிர்த்துப் போராடுவதைக் காட்டிலும் கடினமானது.

மருதையன்

- புதிய கலாச்சாரம் ‍ ஜூலை 2008 இதழில் வெளிவந்தது
http://www.tamilcircle.net/index.php?view=article&id=2143%3A2008-07-15-20-09-19&option=com_content&Itemid=83

May 22, 2008

உயரும் விலைவாசியும், அதற்கான காரணகர்த்தாக்களும்!

கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக நீறுபூத்த நெருப்பாக இருந்துவந்த விலைவாசி உயர்வு, இப்பொழுது எரிமலையைப் போல வெடித்திருக்கிறது. அரிசி, கோதுமை, சோளம், சமையல் எண்ணெய், பால் போன்ற உணவுப் பொருட்கள் தொடங்கி, இரும்பு, நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற மூலப்பொருட்கள் வரை அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி தாறுமாறாக உயர்ந்து வருகின்றன.

இந்தியா மட்டுமின்றி, ஆசியா, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கக் கண்டங்களைச் சேர்ந்த அனைத்து ஏழை நாடுகளும் இவ்விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளன.


சென்னையைச் சேர்ந்த சுமதி, மூன்றுநான்கு வீடுகளில் வேலை பார்ப்பதன் மூலம் மாதம் ரூ. 3,000 வரை கூலி பெறுகிறார். ""தனது மாதாந்திர வருமானம் உயராதபொழுது, விலைவாசி மட்டும் உயர்ந்து கொண்டே செல்வதாக''க் கவலைப்படும் சுமதி, ""இவ்விலை உயர்வைச் சமாளிக்கத் தனது குடும்பத்தின் உணவுத் தேவைகளைச் சுருங்கிக் கொண்டதாக''க் கூறுகிறார்.


வங்காள தேசத்தில், ஒரு கூலித் தொழிலாளி உணவுக்காக இரண்டு கிலோ அரிசி வாங்க வேண்டும் என்றால், தனது தினக்கூலியில் சரிபாதியை அரிசிக்கு மட்டுமே ஒதுக்க வேண்டிய அளவிற்கு விலைவாசி உயர்ந்துள்ளது.

ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள ஏழைநாடான ஏமனில், ஒரு ""லோஃப்'' ரொட்டியின் விலை, தொழிலாளர்களின் தினக்கூலியில் கால் பாகத்தை முழுங்கி விடுகிறது.

இந்த விலை உயர்வினால், பல்வேறு ஏழை நாடுகளைச் சேர்ந்த 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளப்படுவார்கள் என உலக வங்கியே எச்சரித்திருக்கிறது.

எனினும் மன்மோகன் சிங்ப.சிதம்பரம் கும்பலைப் பொருத்தவரை விலைவாசி உயர்வு என்பது ஒரு பிரச்சினையே அல்ல. ""பொருளாதார வளர்ச்சி இருக்கும்பொழுது, விலைவாசி உயரத்தான் செய்யும்'' என்ற பொருளாதார சூத்திரத்தைக் கூறி அவர்கள் இக்கொள்ளைநோயை நியாயப்படுத்தியும் வருகிறார்கள். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என அவர்களும், தரகு முதலாளிகளும் பீதியூட்டுகிறார்கள்.

மேலும், ""மக்களிடம் பணப்புழக்கம் அதிகமாகி, அவர்கள் பொருட்களை வாங்கிக் குவிப்பதால்தான், (அதிக கிராக்கி, குறைந்த வரத்து என்ற அடிப்படையில்) அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்வதாக''க் கூறி, பழியை மக்களின் தலையில் சுமத்துகிறார்கள். விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார், ""தென்னிந்திய மக்கள் அதிகமாக சப்பாத்தி சாப்பிடத் தொடங்கியதையடுத்துதான், கோதுமைக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக''க் கூறியிருக்கிறார்.


அமைப்பு சாராத் தொழிலாளர்களின் வேலை மற்றும் வாழ்க்கை நிலைகளைப் பற்றி ஆராய்வதற்காக அரசால் நியமிக்கப்பட்ட அர்ஜுன் சென்குப்தா கமிட்டி, ""77 சதவீத இந்தியக் குடும்பங்கள், நாளொன்றுக்கு இருபது ரூபாய்க்கும் குறைவான கூலியைக் கொண்டே பிழைப்பதாக''த் தெரிவித்திருக்கிறது. இந்த இருபது ரூபாய், ஒரு குடும்பத்தின் ஒருநாள் உணவுத் தேவையைக் கூட ஈடுகட்டப் போதாது என்பதை நிரூபிக்க பெரிய ஆராய்ச்சி எதுவும் நடத்த வேண்டிய அவசியமில்லை.

இந்தியாவில் இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் சரிபாதி குழந்தைகள் சத்தான உணவு கிடைக்காமல் சவலைக் குழந்தைகளாக இருப்பதாக இன்னொரு புள்ளி விவரம் கூறுகிறது.

இந்த உண்மைகளை இருட்டடிப்பு செய்துவிட்டு, இந்திய மக்கள் அனைவரும் புளித்த ஏப்பக்காரனைப் போல வாழ்வதாகவும், தாராளமான பணப்புழக்கத்தால் நுகர்பொருள் மோகம் கொண்டு அலைவதாகவும் சித்தரிப்பது, மன்மோகன் சிங் கும்பலின் அயோக்கியத்தனத்தையும், மேட்டுக்குடி வக்கிரத்தையும் தான் வெளிப்படுத்துகிறது.

""சாதாரண மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்தால், விலைவாசி உயர்வு சுமையாக இருக்காது'' என்றொரு அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கிறார், தமிழக முதல்வர் மு.க. ஆனால், முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்களோ, ""வாங்கும் சக்தி அதிகரித்தால், அதற்கேற்ப விலைவாசியும் உயர்ந்துவிடும்'' எனப் பீதியூட்டுகிறார்கள். "கொழுத்த சம்பளம்' தரும் ""பி.பி.ஓ.'' நிறுவனங்கள் பெருத்தபிறகுதான், சென்னையில் நடுத்தர வர்க்கத்தினரைக்கூடப் பதம் பார்க்கும் அளவிற்கு வீட்டு வாடகை எகிறிப் பாய்ந்தது என்பதை இங்கு நினைவுபடுத்திக் கொள்வது நல்லது.

பொருட்கள் விலை மலிவாகக் கிடைக்க வேண்டும் என்றால், தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்க வேண்டும் என்பதுதான் தனியார்மயத்தின் விதி. குறைந்தபட்ச கூலி என அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அடிப்படை சம்பளத்தை ஒழித்துவிட வேண்டும் என்பதுதான் தரகு முதலாளிகளின் விருப்பம்.

இதுவொருபுறமிருக்க, சாதாரண மக்களை விட வாங்கும்திறன் அதிகம் கொண்ட மாதச் சம்பளக்காரர்களால்கூட இவ்விலைவாசி உயர்வைத் தாங்க முடியவில்லை என்பதல்லவா உண்மை! எனவே மு.க.வின் ""வாங்கும் சக்தி உயர்ந்தால்...'' என்ற ஆலோசனையை, சோகப்படத்தில் சேர்க்கப்படும் மலினமான நகைச்சுவை காட்சியோடுதான் ஒப்பிடமுடியும்.

உணவுப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற ஆலோசனையை முதலாளித்துவப் பத்திரிகைகள் அனைத்தும் வாரி வழங்கியுள்ளன. இந்தியாவில் விவசாய உற்பத்தி வளர்ச்சி அடையாமல், தேங்கிப் போய்விட்டது என்பது உண்மைதான். ஆனாலும், தற்போதைய விலையேற்றத்துக்கு உற்பத்தித் தேக்கத்தை முக்கியக் காரணமாகக் கூறிவிட முடியாது. விவசாய உற்பத்தியைத் தீர்மானிப்பதிலும், விவசாய உற்பத்திப் பொருட்களைக் கொள்முதல் செய்வதிலும், விநியோகிப்பதிலும் அரசு படிப்படியாகக் கழன்று கொண்டு, அப்பொறுப்பை மெல்ல மெல்லத் தனியார்மயப்படுத்தி வருவதுதான் இந்த விலையேற்றத்துக்குப் பின்னுள்ள அடிப்படையான காரணம்.

உணவுப் பொருள் விலையேற்றத்துக்கு காரணங்களாகச் சொல்லப்படும் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள வறட்சியும்; கச்சா எண்ணெய் விலை உயர்வும்; உயிரிஎரிபொருள் தயாரிக்க உணவுப் பொருட்கள் ஒதுக்கப்படுவதும் இரண்டாம்பட்சமானவைதான். விலைவாசி உயர்வுக்கும் தனியார்மயத்துக்கும் இடையேயுள்ள உறவை மூடி மறைப்பதற்காகவே, இந்த இரண்டாம்பட்ச காரணங்களை ஓட்டுக்கட்சிகளும், முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களும் ஊதிப் பெருக்குகின்றனர்.

தனியார்மயம் தாராளமயத்திற்கு முன்பு, உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும் என்பதை இந்திய அரசு கொள்கை அளவிலாவது ஏற்றுக் கொண்டு இருந்தது. உலகமயத்திற்குப் பிறகோ, விவசாய உற்பத்திக்கு முன்னுரிமை தரப்படும் கொள்கை கைவிடப்பட்டு, தேவையென்றால், உணவுப் பொருட்களை அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம்; அந்நியச் செலாவணிக் கையிருப்பை அதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது அரசின் நிலைப்பாடாகிவிட்டது.

இப்படிப்பட்ட கொள்கையைக் கொண்ட அரசாங்கம், விவசாய உற்பத்தியைப் பெருக்கி, உணவுப் பொருள் தட்டுப்பாட்டையும், விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்தி விடும் எனப் பகற்கனவு காண்பவர்களால்தான் நம்ப முடியும்.


தேவைக்கேற்ப உற்பத்தி இருந்தால், விலைவாசி கட்டுக்குள் இருக்கும் என்பது உண்மையானால், சர்க்கரை, சிமெண்ட், இரும்புக் கம்பிகளின் விலைகள் உயர்ந்திருக்கக் கூடாது. ஆனால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வெளிச்சந்தையில் ரூ. 13க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சர்க்கரை இன்று ரூ. 17/ ஆக அதிகரித்து விட்டது. கடந்த ஆண்டு பட்ஜெட்டின் பொழுது ரூ. 190200/ ஆக இருந்த சிமெண்ட் மூட்டை ஒன்றின் விலை, தற்பொழுது, ரூ. 250/ஐத் தாண்டிவிட்டது. கடந்த மூன்றே மாதங்களுக்குள் கட்டுமானக் கம்பிகளின் விலை 20 முதல் 24 சதவீதம் வரை அதிகரித்திருக்கிறது.

எனவே, உற்பத்திப் பெருகுவதற்கும் சில்லறை விற்பனை விலைக்கும் நேரடித் தொடர்பில்லை என்பது தெளிவாகிறது. மாறாக, உற்பத்தியிலும், விநியோகத்திலும் எந்தளவிற்குத் தனியார் முதலாளிகளின் ஆதிக்கம் ஒழிக்கப்படுகிறதோ, அந்தளவிற்குத்தான் விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதே உண்மை.

···

சிதறுண்டும், நலிவடைந்தும் இருக்கும் இந்திய விவசாயத்தை, விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்ட கூட்டுப் பண்ணைகளாக அமைத்து, நவீன வேளாண் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாய உற்பத்தியைப் பெருக்குவதுதான் மக்கள் நலன்சார்ந்த வழிமுறை. ஆனால், அரசோ, நெல், கோதுமை உள்ளிட்ட அனைத்து விவசாயப் பொருட்களுக்கும் கட்டுப்படியாகக் கூடிய விலையை நிர்ணயிக்க மறுப்பதன் மூலம் விவசாயிகளைப் போண்டியாக்கி, அவர்கள் நிலத்தில் இருந்து வெளியேறுவதைத் துரிப்படுத்துகிறது.

போண்டியாகி நிற்கும் விவசாயிகளை ""ஒப்பந்த விவசாயம்'' என்ற திட்டத்தின் மூலம் தரகு முதலாளித்துவ / பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைகளாக மாற்ற முயலுகிறது. தரிசு நில மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரில் விவசாயத்தில் முதலாளித்துவ நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த வழி ஏற்படுத்தித் தருகிறது;

பாரம்பரிய விதைகளைப் பாதுகாக்காமல் அழிய விடுவதன் மூலமும், காப்புரிமை என்ற பெயரிலும் விவசாயிகளை விதைகளுக்குப் பன்னாட்டு நிறுவனங்களை அண்டிப் பிழைக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி வருகிறது.

விவசாய உற்பத்தியில் திணிக்கப்படும் இத்தனியார்மயத்திற்கு இணையாக உணவுப் பொருள் விநியோகமும் முதலாளித்துவ நிறுவனங்களிடம் தாரை வார்க்கப்படுகிறது. பொது விநியோக முறையைப் பலப்படுத்துவதன் மூலம்தான் உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தி, மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை வழங்க முடியும்.

ஆனால், அரசோ, உணவு மானியத்தைக் குறைப்பதன் மூலம் உணவுப் பொருட்கள் கொள்முதல் செய்வதைப் படிப்படியாகக் கைவிடுவது; அதில் தனியாரை அனுமதிப்பது; உணவுப் பொருள் வணிகத்தில் இணைய தள வர்த்தகத்தை அனுமதிப்பது ஆகிய ""சீர்திருத்தங்களின்'' மூலம், உணவுப் பொருள் விநியோகத்தைச் சூதாட்டமாக மாற்றி வருகிறது.

உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த, அரசு நடத்தும் நெல், கோதுமை கொள்முதலை 1.5 கோடி டன்னில் இருந்து 4 கோடி டன்னாக அதிகரிக்க வேண்டும்'' என்கிறார், அனைத்திந்திய விவசாயிகள் சங்கத்தின் தமிழகத் தலைவர் கே.பாலகிருஷ்ணன்.

ஆனால், தி.மு.க. அரசோ, கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கைவிடப்பட்ட நெல் கொள்முதலை மீண்டும் தொடங்க மறுக்கிறது. அரசியலில் எலியும் பூனையுமாக இருக்கும் மு.க.வும், ஜெயாவும் உலக வங்கியின் கட்டளையை நிறைவேற்றுவதில் பங்காளிகளாக இருப்பதற்கு இதுவொரு சான்று.


மைய அரசோ, 1.5 கோடி டன்னுக்கு மேல் ஒரு மணிகூட கூடுதலாகக் கொள்முதல் செய்ய முடியாது என அடம் பிடிக்கிறது. ரேசன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்வதை அனைத்து மக்களுக்கும் விரிவாக்க முடியாது; வறுமைக் கோட்டுக்குக் கீழே / மேலே எனப் பொது விநியோகம் பிரிக்கப்பட்டுள்ளதைக் கைவிட முடியாது என உணவு அமைச்சர் சரத்பவார் அறிவிக்கிறார். 200404இல் 1.68 கோடி டன், 200506இல் 1.48 கோடி டன், 200607இல் 92 இலட்சம் டன் என கோதுமை கொள்முதல் படிப்படியாகக் குறைந்து வருவதை இந்த அறிவிப்போடு இணைத்துப் பார்க்க வேண்டும்.

அதேசமயம், இந்தப் பற்றாக்குறை கொள்முதலைக் காரணமாகக் காட்டி, 2006 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில், 75 இலட்சம் டன் கோதுமை அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஒரு குவிண்டால் கோதுமையை ரூ. 1,000/ கொடுத்து உள்நாட்டு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய (அப்பொழுது) மறுத்த மைய அரசு, அதைவிட ஒன்றரை மடங்கு அதிகவிலையில் புளுத்த கோதுமையைப் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்தது.

காங்கிரசிற்கு முன்பு ஆண்ட பா.ஜ.க.வின் ஆட்சியில் 2.2 கோடி டன் கோதுமை ரேசன் விலையைவிட மலிவாக, ஐரோப்பிய பன்றிகளுக்குத் தீவனமாக ஏற்றுமதி செய்யப்பட்டது.

பா.ஜ.க. காங். அரசுகளின் இந்த இரண்டு நடவடிக்கைகளும், பன்னாட்டு உணவுக் கழகங்களின் நலனுக்கு ஏற்ப, இந்தியாவின் பொது விநியோகமுறை மாற்றியமைக்கப்பட்டு வருவதற்கான ஆதாரங்கள். இதற்கு இணையாகவே, தரகு முதலாளித்துவ நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் நெல்கோதுமை போன்ற உணவுப் பொருட்களை நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யவும்; பல சரக்கு சில்லறை வியாபாரத்தில் இறங்கவும் அனுமதிக்கப்பட்டன.

இத்தனியார்மய நடவடிக்கைகளுக்கெல்லாம் மகுடம் வைத்தாற் போல, கடந்த ஐம்பது ஆண்டு காலமாக முன்பேர வர்த்தகத்துக்கு இருந்துவந்த தடை, பா.ஜ.க. கூட்டணி ஆட்சியின் இறுதியில் (2003ஆம் ஆண்டில்) முற்றிலுமாக நீக்கப்பட்டது. அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் உள்ளிட்டு 103 பொருட்கள், முன்பேர இணைய தள வர்த்தகம் மூலம் வியாபாரம் செய்வதற்கு அனுமதியும் கொடுத்தது.

பா.ஜ.க. அடுத்து வந்த காங். கூட்டணி ஆட்சி, உலகமயக் காலக் கட்டத்தில் முன்பேர வர்த்தகத்தைத் தவிர்க்க முடியாது எனக் கூறி, அச்சூதாட்டத்தைத் தொடர்ந்து நடத்த அனுமதித்தது. கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகே 2006ஆம் ஆண்டில் அரிசி, கோதுமை, பருப்பு வகைகளுக்கு மட்டும் இணைய தள வர்த்தகத்தில் தடை விதிக்கப்பட்டது.

முன்பேர வர்த்தகம், உணவுப் பொருள் கொள்முதலில் தனியாருக்கு அனுமதி, சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களும் தரகு முதலாளிகளும் கூட்டுச் சேர்ந்து நுழைய அனுமதி ஆகிய இந்தத் தனித்தனியான இழைகளை இணைத்துப் பார்த்தால்தான், உணவுப் பொருள் விநியோகம் முன்பு போலன்றி, முதலாளித்துவ நிறுவனங்களின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ள அபாயத்தின் பரிணாமம் விளங்கும்.
மக்காச் சோளம் முன்பேர வர்த்தகத்தில் நுழைக்கப்பட்ட பிறகு, ஒரு கிலோ மக்காச்சோளத்தின் விலை

ரூ. 5/ லிருந்து ரூ. 9/ ஆக அதிகரித்துவிட்டதாகக் குறிப்பிடும் தேசிய முட்டை உற்பத்தியாளர் சங்கம், ""முன்பேர வர்த்தகத்தில் இருந்து மக்கா சோளத்தை நீக்க வேண்டும்; இல்லையென்றால் அதில் இருந்து தயாரிக்கப்படும் கோழித் தீவணத்தின் விலை உயர்ந்து அடுத்த ஓரிரு மாதங்களில் ஒரு முட்டையின் விலை ரூ. 3 ஆக உயர்ந்துவிடும்'' என எச்சரித்துள்ளது. முன்பேர வர்த்தகத்தின் பாதிப்புகள் பற்றி ஆராய மைய அரசால் நியமிக்கப்பட்டுள்ள அபிஜித் சென் கமிட்டி, ""விலை உயர்வுக்கும் முன்பேர வர்த்தகத்துக்கும் இடையே தொடர்பு இருப்பதனைக் கண்டறிந்துள்ளதாக'' முதலாளித்துவப் பத்திரிகைகளே ஒப்புக் கொள்கின்றன.

அமெரிக்கப் பொருளாதார மந்தம், அமெரிக்க டாலர் சரிவு, பங்குச் சந்தை வீழ்ச்சி இவற்றால் வர்த்தகச் சூதாடிகளுக்கு இப்பொழுது உணவுப் பொருள் முன்பேர வர்த்தகம்தான் கொழுத்த இலாபம் தரும் சூதாட்டமாக மாறிவிட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முன்பேர வர்த்தகம்தான் காரணம் என வெனிசுலா நாட்டின் பெட்ரோலியத்துறை அமைச்சர் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டியுள்ளார். பங்குச் சந்தைக்குள் பாய்ந்து வந்த வங்கிகளின் கடன் மூலதனம், இப்பொழுது முன்பேர வர்த்தகத்தில் பாய்கிறது.

பாண்டிச்சேரியில் சமீபத்தில் கடத்தல் அரிசி பிடிபட்டபொழுது, அக்கடத்தல் வியாபாரத்துக்கு இந்தியாவின் தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கடன் வழங்கியிருந்தது அம்பலமானது. இத்தனியார்மய நடவடிக்கைகள், பழைய பதுக்கல் வியாபாரிகளின் இடத்தில், ஐ.டி.சி., கார்கில், ஏ.டபிள்யூ.பி.இந்தியா, பிரிட்டானியா, ரிலையன்ஸ் போன்ற பன்னாட்டு / தரகு முதலாளித்துவ நிறுவனங்களைக் கொண்டு வந்து அமர்த்தியிருக்கிறது.

அதனால்தான் நாடாளுமன்ற நிலைக்குழு 25 விவசாய விளைபொருட்களை முன்பேர வர்த்தகப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் எனக் கூறிய பிறகும், மன்மோகன் சிங் கும்பல் அந்த ஆலோசனையைக் காதில் போட்டுக் கொள்ளவே மறுக்கிறது.

இரும்பு உருக்காலை அதிபர்களுக்கும், கட்டுமானக் கம்பிகளின் விலை உயர்வுக்கும் தொடர்பில்லை என அத்துறையின் அமைச்சரே சான்றிதழ் அளிக்கிறார்; வர்த்தக அமைச்சர் கமல்நாத், விலை உயர்வைக் காட்டி ஏற்றுமதிக்குத் தடை போடக்கூடாது என முட்டுக்கட்டை போடுகிறார்; நிதியமைச்சர் ப.சிதம்பரமோ விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது என்ற போர்வையில் உணவுப் பொருட்களின் தாராள இறக்குமதிக்கு அனுமதி கொடுக்கும் சதித்தனத்தில் இறங்கிவிட்டார்.

இவையாவும் விலை உயர்வுக்குக் காரணமான தனியார்மயத்தைக் கைவிடவோ, அல்லது குறைந்தபட்சம் தனியார்மயத்தைக் கட்டுப்படுத்தவோ கூட காங்.கூட்டணி ஆட்சி தயாராக இல்லை என்பதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.

கடந்த பதினெட்டு வருடங்களில் உணவு தானியத்திற்கான நிலம் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 0.26 சதவீதம் குறைந்து கொண்டே வருவதற்குக் காரணம் தனியார்மயம்தான். 197374இல் சராசரியாக ஆண்டொன்றுக்கு ஒரு இந்தியக் குடிமகனுக்குச் சாப்பிடக் கிடைத்த தானியத்தின் அளவு 154.24 கிலோ.

அது, 200405இல் 132.58 கிலோவாக வீழ்ச்சியடைந்திருப்பதற்குக் காரணம் தனியார்மயம்தான். உணவுப் பொருளைப் பதுக்கும் பேர்வழிகளைத் தண்டிக்கும் சட்டம், ரிலையன்ஸ் ஃபிரஷ் மீதோ, பிக் பஜார் மீதோ, ஹெரிடேஜ் பிரஷ் மீதோ பாய மறுப்பதற்குக் காரணம் தனியார்மயம்தான். மூலப்பொருட்களின் விலை உயர்வினால் சிறுதொழில்கள் முடங்கி கோவையில் மட்டும் 15 ஆயிரம் சிறு தொழில்கூடங்களில் 40 சதவீத ஆலைகள் உற்பத்தியை நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது தொழிலாளர்கள் வேலையிழந்து வருவதற்குக் காரணம் தனியார்மயம் தான்.

இத்தனியார்மயத் தாக்குதலைத் தேர்தல்கள் மூலம் வீழ்த்துவிட முடியாது. அப்படிச் சொல்லி ஓட்டுப் பொறுக்கிவரும் போலி கம்யூனிஸ்டுகளை விட, உலகமகா மோசடிப் பேர்வழிகள் வேறு யாரும் இருக்கவும் முடியாது!


· செல்வம் - புதியஜனநாயகம் இதழ்

நன்றி : தமிழரங்கம்

Mar 24, 2008

ஆணாதிக்கத்தின் அமிலக் காதல்!



ஆணாதிக்கத்தின் அமிலக் காதல்!

மார்ச் 8 பெண்கள் தினம். சமூக அமைப்பினாலும், குடும்ப நிறுவனத்தாலும் அடிமைப்படுத்தப்பட்ட பெண்கள், தமது விடுதலைக்கான புரிதலையும், புத்தார்வத்தையும் புதுப்பிக்க வேண்டிய நாள்.

உழைக்கும் வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த பெண்கள், வீட்டுச் சிறையிலிருந்து விடுபட்டு, பெருந்திரளாக வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் கூட, அவர்களது சமூக நிலையில் பெருமளவு மாற்றம் ஒன்றும் ஏற்பட்டு விடவில்லை. உலகமயத்தின் நுகர்வுக் கலாச்சாரத்தால் அழகுப் பதுமைகளாக ஆக்கப்பட்டுள்ள பெண்கள், வீட்டிலோ சாதிய, மத, ஆணாதிக்க, நிலவுடைமை போன்ற பிற்போக்குகளின் கீழ் அடைபட்டுள்ளனர்.

இருப்பினும் சற்றே சுய பொருளாதாரத்துடனும், வெளியில் சிறிது சுதந்திரத்துடனும் நடமாடும் பெண்களுக்கு, ஆசுவாசப்படுத்தும் விசயமாக இருக்கிறது காதல். இக்காதல் பொதுவாக மேலோட்டமாகவே இருந்தாலும், அதற்கு ஆட்படும் பெண்களுக்கு குறுகிய காலத்திற்காகவாவது சுய மதிப்பையும், மகிழ்ச்சியையும் தரத்தான் செய்கிறது. வெற்றி பெறுகின்ற காதல், திருமணத்திற்குப் பிறகு தனது முற்போக்கு முகமூடியை இழந்து விடுவதால், தனது பழைய நிலையை பெரும்பாலும் அடைந்து விடுகிறாள், பெண்.

மின்னலைப் போலத் தோன்றி மறையும் இக்காதல் வாழ்விலாவது, ஒரு பெண்ணுக்கு தனது துணையைத் தெரிவு செய்யும் சுதந்திரம் இருக்கிறதா? குறைந்த பட்சம் காதலைத் தெரிவிக்கும் ஒரு ஆணிடம், அவனைப் பிடிக்கவில்லை என்று சொல்லும் உரிமையாவது உள்ளதா? கீழ்க்கண்ட உண்மைக் கதையைப் படியுங்கள்.

நாமக்கல் மாவட்டம், தாண்டாகவுண்டம் பாளையத்தைச் சார்ந்தவர் மாரிமுத்து. கூலித்தொழிலாளியானாலும், தனது மகள்கள் சீமா, மீனா இருவரையும் அருகாமை நகரக் கல்லூரிகளில் சிரமத்துடன் படிக்க வைக்கிறார்.

ஒரு ஏழைக் குடும்பத்திலிருந்து முதல் தலைமுறையாக கல்லூரிக்கு கல்வி கற்கச் சென்றவர்கள் என்ற முறையில், இருவரும் ஆர்வத்துடன் படிக்கிறார்கள். இளங்கலை மூன்றாமாண்டு படிக்கும் சீமாவை, அவளது உறவுக்காரப் பையனான ஆறுமுகம் தினசரி பின்தொடர்கிறான். கொசுவலை தயாரிப்புத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஆறுமுகம் ஏழாம் வகுப்போடு படிப்பைக் கைவிட்டவன். சீமாவை எப்படியாவது காதலித்தே ஆக வேண்டும் என்பதில் குறியாயிருக்கிறான்.

ஆனால் சீமா அவனது காதலை ஏற்கவில்லை. இருப்பினும் ஆறுமுகத்தின் நச்சரிப்பு தாளாமல், திருமணம் செய்யவேண்டுமென்றால் தனது தந்தையிடம் பேசுமாறு கூறி, சீமா தவிர்க்கப் பார்க்கிறாள். ஆறுமுகம் விட்டபாடில்லை. தனது சுற்றத்தாருடன் மாரிமுத்துவிடம் பெண் கேட்கச் செல்கிறான். ஆறுமுகம் தூரத்து உறவென்றாலும் சீமாவுக்கு சகோதர உறவுமுறை என்பதால், பெண்தர இயலாது என்று மாரிமுத்து மறுத்துவிட்டார்.

திருமணப் பேச்சு முறிந்தாலும், அந்த இளைஞனின் காதல் உணர்ச்சி அடங்கவில்லை. விடாமல் சீமாவை தொல்லை செய்கிறான். வீட்டுக்குத் தெரியாமல் ஓடிப்போய்த் திருமணம் செய்து கொள்ளலாமென வற்புறுத்துகிறான். இதிலெல்லாம் தனக்கு விருப்பமில்லை என்று, சீமா பலமுறை அவனிடம் பொறுமையாக விளக்கியிருக்கிறாள்.

இதற்கு மேல் இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்று அந்த அபலைப் பெண்ணுக்குத் தெரியவில்லை. எப்படியும் சீமா தனக்குக் கிடைக்க மாட்டாள் என்பதால் ஆறுமுகம் ஆத்திரம் கொள்கிறான்.

இடையில் சீமாவைப் பெண்கேட்டு பக்கத்து ஊரிலிருந்து மாப்பிள்ளை வர இருப்பதாகக் கேள்விப்பட்ட ஆறுமுகம் சினமடைகிறான். தனக்கு கிடைக்காத சீமா யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று முடிவெடுத்து, கந்தக அமிலத்தை வாங்கிக் கொள்கிறான்.

ஜனவரி 21ஆம் தேதி அதிகாலையில், வீட்டை ஒட்டியுள்ள ஓலைத்தடுப்பினாலான குளியலறையில் சீமா குளித்துக் கொண்டிருக்கிறாள். தடுப்பைத் தள்ளிவிட்டு உள்ளே நுழைந்த ஆறுமுகம், குப்பியிலிருந்த அமிலத்தை அவளது முகத்தில் வீசுகிறான்.

முகம் சிதைந்த நிலையில் கதறியழும் சீமாவை, அருகிலிருக்கும் ராசிபுரம் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார், மாரிமுத்து. அங்கு வசதியில்லை என்பதால், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள் அந்த ஏழை மகள். இந்த முகத்தை வைத்துக் கொண்டு அக்காவால் வாழமுடியாதே என்று தங்கை மீனா கதறியழுகிறாள்.

31.01.08 குமுதம் ரிப்போர்ட்டரில், இச்சம்பவத்தை நேரடியாக விசாரித்து எழுதியிருக்கும் நிருபர் கதிரவன், போலீசால் கைது செய்யப்பட்டுள்ள ஆறுமுகத்திடம் பேசிப் பார்க்கிறார். அவன் என்ன சொல்கிறான்? "நான் ஒன்றும் அவளுடன் ஒட்டிப் பிறந்த சகோதரன் இல்லை. என்னைத் தவிர்க்கவேண்டும் என்பதற்காகவே இப்படிச் சொல்லி என்னை அசிங்கப்படுத்தி திருப்பி அனுப்பி விட்டார்கள். அதை நம்பி சீமாவும் என்னைத் தவிர்த்தாள். எனவேதான், எனக்குக் கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்கவே கூடாது என்பதற்காகவே இப்படி ஒரு காரியத்தைச் செய்தேன்', முகத்தில் சலனமில்லாமல், ஆறுமுகம் கூறிய வார்த்தைகள் இவை.

நேசித்த பெண்ணின் முகத்தைச் சிதைத்து வாழ்வை இருளாக்கியிருக்கும் ஆறுமுகத்தினுடைய அந்தப் பெண் மீதான உறவைக் காதல் என்று அழைக்க முடியுமா? இந்த வக்கிரத்தைக் கண்ட பிறகு எவரும் இதைக் காதல் என்று அழைக்க மாட்டார்கள்தான். எனினும் அறிவுக்குத் தெரிந்திருக்கும் இந்த உண்மை, உணர்ச்சிக்குப் புரிவதில்லை.

காதல் குறித்த பிரச்சினைகளை யதார்த்தமாகத் தீர்மானிப்பது உணர்ச்சிதான் என்பதால், பல இளைஞர்கள் அமிலம் வாங்குவதில்லையே தவிர அதற்கு முந்தைய எல்லை வரை வன்முறையை மேற்கொள்கிறார்கள். உடன்பிறந்த ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுகளான இந்த வன்முறைகளை அவ்வளவு சுலபத்தில் அவர்களுக்கு புரிய வைக்க முடியுமா என்று தெரியவில்லை. ஏனெனில், ஊடகங்களும் சினிமாவும் காதலை ஒரு ஜனநாயகப் பண்பாகக் கற்றுக்கொடுக்கவில்லை.

புத்தாண்டுக்குப் பிறகு பிப்ரவரி 14 காதலர் தினம் இளைஞர்களின் திருவிழாவாக மாறிவிட்டது; இல்லை, மாற்றப்பட்டு விட்டது. என்ன பரிசு கொடுக்கலாம், என்ன வண்ணத்தில் ஆடை அணியலாம், தமிழகத்தில் காதலர்கள் சந்திக்கும் இடங்கள் எவை, பிரபலங்களின் காதல் அனுபவங்கள் என மொத்தத்தில், ஊடகங்களால் காதல் காய்ச்சல் அதிவேகத்தில் சூடேற்றப்படுகிறது. காதல் இல்லாத வாழ்வு ஒரு வாழ்வா என்று, இந்த சூடேற்றலில் இளைஞர்கள் சங்கமிக்கிறார்கள்.

ஆனால் இந்த நெருப்பில் சமூகத்தின் பிற்போக்குத்தனங்கள் எவையும் எரிக்கப் படுவதில்லை. காதலையும் ஒரு நுகர்பொருளாகப் பாவிக்கக் கற்றுக் கொடுக்கும் இந்தக் கண்ணோட்டம், உண்மையில் இந்தியாவில் காதலின் தேவை குறித்தும், அதன் பிரச்சினைகளைக் குறித்தும் கடுகளவு கூட சொல்லிக் கொடுப்பதில்லை. சாதியும் மதமும் மாறி காதலித்த "குற்றத்திற்காக' உயிரோடு எரிக்கப்பட்ட காதலர்களின் கதையை எந்த ஊடகமும் கவலையோடு கூட வெளியிடுவதில்லை.

அதனால்தான் சாதியும், மதமும், வர்க்கமுமே இன்றும் இந்தியாவில் திருமணத்தைத் தீர்மானிக்கும் விதிகளாக இருக்கின்றன. காதலிப்பது ஜாலிக்காக, கல்யாணமாவது செட்டிலாவதற்கு என்ற காரியவாதக் கண்ணோட்டமே இளைஞர்களிடம் மேலோங்கி இருக்கிறது. அவ்வகையில் இவர்கள், காதலின் இலக்கணத்தையும் தொழில் நுட்பங்களையும் தமிழ் சினிமாவிலிருந்துதான் கற்றுக்கொள்கிறார்கள்.

முக்கியமாக இளைஞர்களின் காதல் பார்வையை அநேகமாக சினிமாதான் தீர்மானிக்கிறது. காதல் வயப்படுவதன் அடிப்படை இனக்கவர்ச்சி என்ற உயிரியல் உறவில் இருக்கிறது என்றால், யாரை, ஏன், எப்படிக் காதலிப்பது என்ற பரிசீலனையை பண்பாட்டின் தரம் முடிவு செய்கிறது. குறிப்பாக ஆண்கள் இந்தத் தரத்தை தமிழ் சினிமாவிலிருந்துதான் பெறுகிறார்கள்.

சமூக நிலையில் இன்னமும் சமத்துவத்தை அடைய முடியாத பெண்களுக்கு, பொதுவாக, காதலுக்கான முன்முயற்சிகளைச் செய்வதற்கு வாய்ப்பில்லை. அந்த வாய்ப்பை உரிமையாகப் பெற்றிருக்கும் ஆண்கள், அதை எப்படிக் கையாளுகிறார்கள்?


கடைசியாக வந்த ரஜினியின் சிவாஜி படம் வரை, எல்லா திரைப்படங்களிலும் நாயகனாக வரும் ஆண்கள், பெண்களை விரட்டி, விரட்டி காதலிக்கிறார்கள், காதலித்தே ஆகவேண்டுமென்று நிர்ப்பந்தப் படுத்துகிறார்கள். சில சமயங்களில் மிரட்டுகிறார்கள்; சில இடங்களில் எப்படியும் காதலிப்பேன் என்று சவால் விடுகிறார்கள். புதிய பாதை போன்ற படங்களில், கற்பழித்து விட்டு கல்யாணம் தன்னோடுதான் என்று வேறு வழியில்லாமல் செய்து விடுகிறார்கள். நீ ஒருவனைக் காதலிப்பதை விட உன்னைக் காதலிப்பவனை காதலிப்பதே சிறந்தது என்று உபதேசிக்கிறார்கள். இப்படி காதலுக்கு மசியாத நாயகியை வீழ்த்துவதற்கு எல்லா வித்தைகளையும் செய்கிறார்கள்.


காரல் மார்க்ஸ் தனது மருமகனுக்கு எழுதிய கடிதமொன்றில், மென்மையாக வெளிப்படுத்தப்படும் காதலில்தான் அழகிருக்கிறது என்று தான் கருதுவதாகக் குறிப்பிடுகிறார். ஒரு பெண்ணுடன் உள்ள உறவு அல்லது நட்பின் அடிப்படையில் அவள் மீது காதல் தோன்றும்போது, அதனை அவளிடம் தெரிவிப்பதில், ஆணுக்கு மிகுந்த எச்சரிக்கையும் நிதானமும் வேண்டும். இது பழமை வாதமல்ல. இந்த அணுகுமுறையில்தான், ஒரு பெண்ணுடைய ஆளுமையின் மீது அந்த ஆண் கொண்டிருக்கும் மதிப்பு வெளிப்படுகிறது.


ஆனால் தமிழ்த் திரைப்படங்கள், ஒரு பெண்ணை வென்று அடக்கவேண்டிய விலங்காகவே கருதுகின்றன. ஒரு வரியில் சொல்வதானால், இதுதான் பச்சையான ஆணாதிக்கம்! இப்படித்தான் நமது இளைஞர்கள் பெண்களின் பின்னால் சுற்றுவதும், கவருவதும், தொல்லைப்படுத்துவதுமாக இருக்கிறார்கள். ஆணையும், பெண்ணையும் இருவேறு உலகமாகப் பிரித்து வைத்திருக்கும் இந்தியச் சமூக அமைப்பு, இந்தத் தொல்லைக் காதலை வளர்ப்பதற்கு ஏதுவாக இருக்கிறது.

இத்தகைய "காதல்' உணர்வே, பெண்ணை தன்னால் காதலிக்கப்படவேண்டிய அடிமையாக நினைக்கிறது. தான் நினைத்து விரும்பியதாலேயே ஒரு பெண் தன்னைக் காதலிக்க வேண்டும் என்றுதான் ஆண்கள் நினைக்கிறார்கள். தன்னைப் போலவே ஒரு பெண்ணுக்கும் சுயமதிப்பும், தெரிவு செய்யும் விருப்பமும், நிராகரிக்கும் உரிமையும் இருப்பதாக ஒரு ஆண் கனவிலும் நினைப்பதில்லை.

பெண்களைப் பொறுத்த வரை தங்களை அடிமை போல பாவிக்கும் இந்த அணுகுமுறை குறித்து கவலைப்படுவதை விட, தமது எதிர்கால வாழ்க்கையின் பாதுகாப்பு குறித்தே கவலைப்படுகிறார்கள். ஆக ஒரு பெண்ணை உடைமையாகக் கருதும் ஆண்களின் நினைப்பை கேட்பதற்கு ஆளில்லை என்பதால், ஆண்களின் காதல் முதல் முயற்சியே வன்முறையாக இருக்கிறது.

வாழ்க்கை உருவாக்கியிருக்கும் எல்லா உறவுகளிலும் மகிழ்ச்சி, துன்பம், பிரிவு, உறவு, ஏமாற்றம் எல்லாம் கலந்திருக்கிறது. அதில் ஒரு தலைக் காதல் வயப்பட்டு பின்னர் அந்தக் காதல் நிராகரிக்கப்படும் சூழ்நிலையில், ஒரு ஆணின் கவலை மட்டும் பாரதூரமாக மாறுகிறது. தனக்கு அடங்கிக் கிடக்க வேண்டிய ஒரு பெண், தன்னை மறுப்பதால் ஆண்கள் தமது சுயகௌரவம் பாதிக்கப்படுவதாகத் துயரப் படுகிறார்கள்.

இதே மறுப்பு ஒரு பெண்ணுக்கு நடந்திருந்தால், ஆண் அளவுக்கு அவள் கவலை கொள்ள வாய்ப்பில்லை. ஏனெனில் வரலாறு அவளை நடத்தியிருக்கும் விதமும், பயிற்றுவித்திருக்கும் முறையும் வேறு. அடிமைகள் ஆண்டான்களின் மீது உரிமை பாராட்ட முடியாதல்லவா!

அதிலும் தான் மட்டும் உரிமையுடன் உறவு கொள்ளவேண்டிய அந்த பெண்ணுடம்பை வேறு ஒரு ஆண் உடைமையாக்கப் போகிறான் என்பது தெரிந்தால், காதல் மறுக்கப்பட்ட அந்த ஆண் வெறி கொள்கிறான். இந்த விசயம் எந்த அளவுக்கு அவனைச் சித்திரவதை செய்கிறதோ, அந்த அளவுக்கு அவனது இரவுப் படுக்கை தூக்கமில்லாமல் கழிகிறது.

சமயத்தில் அமிலத்தை எறியவும் துணிகிறது. அந்த அளவுக்கு விகாரமாகப் போகாத மனம் தற்கொலைக்குத் துணிகிறது. தனது அதிகாரம் செல்லுபடியாகாத எல்லா வகை ஆதிக்கங்களும், இப்படித்தான் இறுதியில் ஒரு "அவலத்தில்' முடிகின்றன.

வாழ்வின் இளமைக் காலத்தில் காதல் தோல்வியால் வரும் இந்தத் துன்பியல் பருவத்தை எல்லா ஆண்களும் கடந்துதான் வருகிறார்கள் என்றாலும், அதன் மூலமான ஆணாதிக்க மனோபாவத்தை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. மறுக்கப்பட்ட காதலில்தான், ஆணாதிக்கம் தனது சுயரூபத்தை அப்பட்டமாக வெளிப்படுத்திக் கொள்கிறது.

இதனால் காதலில் வெற்றிபெறும் ஆண்களெல்லாம் புனிதர்கள் என்று பொருளல்ல. காதலின் காலத்தில் பெண்ணுக்கு சமத்துவத்தை "வழங்கும்' இவர்கள், திருமணத்திற்குப் பின்னர் அதைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறார்கள். காதலின் போது மறைந்து கொள்ளும் ஆணாதிக்கம், இப்போது வெடித்துக் கொண்டு கிளம்பும். காதல் ஒரு மனிதனைத் திருத்தி நல்வழிப்படுத்தும் வல்லமை உள்ளதாக திரைப்படங்கள்தான் சித்தரிக்கின்றன.

வெற்றிபெறும் ஒரு ஆணுக்குப் பின்னால் ஒரு பெண் சாக வேண்டும் என்ற புத்திமதியை வழங்கும் இச்சித்தரிப்புக்கு அப்பால், உண்மையில் காதல் ஒரு ஆணை நல்லவனாக மாற்றிவிடுமா? குறைந்த பட்சம் ஒரு பெண்ணுக்கு எல்லா விசயங்களிலும் இருக்கும் ஜனநாயக உரிமையையாவது அங்கீகரிக்கச் செய்யுமா?

பார்ப்பனியத்தின் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை விட காதல் மேலானதுதான். காதலின் போது சில நல்லவிசயங்கள் குறுகிய காலத்திற்காவது நடக்கலாம். இதைத் தாண்டி ஒரு ஆணுக்கு முதிர்ச்சியான ஜனநாயகப் பண்பினை வழங்கும் வல்லமை ஏதும் காதலுக்கு இல்லை. பெரும்பாலும் ஒரு சமூகத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டுத் தரத்தின் அளவிற்கேற்பத்தான் அச்சமூகத்தில் நிலவும் காதலின் தரமும் தீர்மானிக்கப்படுகிறது.

காதல் ஒரு ஆணையோ பெண்ணையோ, தானே முற்போக்காளனாக மாற்றி விடுவதில்லை. தெளிவாகச் சொல்வதாக இருந்தால், ஒரு ஆண் தனது சமூக வாழ்வில் எந்த அளவு ஜனநாயக நடைமுறையைக் கொண்டிருக்கிறானோ, அந்த அளவு தான் அவனுடைய காதலிலும் பிரதிபலிக்கிறது. மற்ற மக்களின் ஜனநாயக உரிமையையும் சுயமரியாதையையும் மதிக்கப் பழகாத ஆண், எத்தனை படித்திருந்தாலும், அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியேறியிருந்தாலும், அவன் மீது ஜனநாயகத்தின் வாசனை கூட ஒட்டுவதில்லை.

சொல்லப்போனால், தமது சமூக வாழ்க்கையில், ஜனநாயகத்துக்கான போராட்டங்களில் ஈடுபடும் ஆண்களிடம் கூட ஆணாதிக்கத்தின் எச்ச சொச்சங்கள் நீடிக்கத்தான் செய்கின்றன. முற்போக்கான இளைஞர்கள் தமது காதல் நிராகரிக்கப்படும் போது, மற்ற ஆண்களைப் போல எல்லை மீறுவதில்லை.

ஆனால் பெண்ணை உடைமையாகக் கருதும் மனோபாவத்தில் ஊறியிருப்பதால், "தான் உரிமை கோரமுடியாத தனது உடைமை குறித்து' சிந்தித்து சிந்தித்து மன உளைச்சலில் வீழ்கிறார்கள். தங்களை வருத்திக் கொள்கிறார்கள். இது தவறு என்பதை அறிவு ரீதியாக மேலோட்டமாக ஏற்றுக் கொண்டாலும், உணர்ச்சித் தளத்தில் சராசரி ஆணாகவே இருக்கிறார்கள்.


பெண் என்பவள் வெறும் உடல் அல்ல என்பதைக் கருத்து ரீதியாக ஏற்றுக் கொண்டிருந்தாலும், சமூகத்தில் நிலவும் பண்பாடும், ஊடகங்களின் தாக்குதலும் பெண்களைப் பாலியல் நோக்கில் பார்ப்பதற்கு மட்டுமே அவர்களையும் பழக்கப் படுத்துகின்றன. எனவே, அவர்களுக்கே தெரியாமல் அவர்களுக்குள் ஆணாதிக்கம் துளிர் விட்ட வண்ணம் இருக்கிறது.

இதைக் களையெடுக்க வேண்டுமானால், அதற்குப் பெண்களின் உதவியும் தேவைப்படுகிறது. ஏராளமான பெண்கள் சமூக வாழ்க்கையில் ஈடுபடும்போதுதான், பாலினக் கவர்ச்சிக்கு அப்பாற்பட்ட ஆண்பெண் உறவு சாத்தியமாகிறது. பெண்கள் சமூக மாற்றத்துக்கான நடைமுறையில் ஈடுபடும்போதுதான், ஆணாதிக்கம் என்ற ஒன்றையே அவர்களால் அடையாளம் காண முடிகிறது. அதற்கெதிராகப் போராடவும் முடிகிறது.

அந்த வாய்ப்பை வழங்குவதற்கு பெண்கள் வேண்டும். அதுவும் சமூகப் போராட்ட நடைமுறைகளில் உற்சாகமாக ஈடுபடும் பெண் தோழர்கள், ஆயிரக்கணக்கில் வேண்டும். ஆண் மட்டுமல்ல பெண்ணும் தனது குடும்ப வாழ்க்கைக்கு வெளியே சமூக நலனுக்காகப் போராடும் போது மட்டுமே, ஆணாதிக்கத்தின் சுவடுகளை உருத்தெரியாமல் அழிப்பதற்கான களம் உருவாகும். அப்போதுதான் ஆணாதிக்த்தையும், "நல்லெண்ணம் கொண்ட ஆணாதிக்கத்தையும்' கூட முறியடிக்க முடியும்.

நிலப்பிரபுத்துவ, சாதியக் கொடுங்கோன்மை புரியும் நிலப்பிரபுக்களையும், முதலாளித்துவச் சுரண்டல் செய்யும் முதலாளிகளையும் இறுதியில் வீழ்த்துவதற்கு, அவர்களால் ஒடுக்கப்படும் மக்கள் விழிப்புணர்வு பெற்றுப் போராடினால்தான் முடியும். இந்த உண்மை ஆணாதிக்கத்துக்கும் பொருந்தும். அத்தகைய விழிப்புணர்வைப் பெறாதாவரை, பெண்களுக்கும் விடுதலை கிடைக்கப் போவதில்லை.

மாணவி சீமாவுக்கு நடந்த கொடுமையை எதிர்த்து, அவள் படிக்கும் கல்லூரியில் கூட எந்தப் போராட்டத்தையும் மாணவிகள் நடத்தவில்லை. ஏனென்றால், பாலியல் கொடுமைகளால் தினம் தினம் புழுங்கித் தவிக்கும் பெண்கள், சீமாவின் பிரச்சினையை அவளுடைய தனிப்பட்ட பிரச்சினையாக மட்டுமே பார்த்திருக்கிறார்கள்.

இதனை உருவாக்கி உலவவிடும் ஆளும் வர்க்க பண்பாட்டு நிறுவனங்களை, மாபெரும் இயக்கமாகி எதிர்க்காத வரையில், தனிப்பட்ட பெண்ணுக்கு நடக்கும் கொடுமைகள் நிற்கப் போவதில்லை. ஆணாதிக்கத்தின் "அன்பு', பெண்களை அமிலமாகச் சுடுவதும் நிற்கப் போவதில்லை.

- இளநம்பி. புதிய கலாச்சார இதழிலிருந்து....

நன்றி : தமிழரங்கம்

Mar 22, 2008

""இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை - பகத்சிங்



மார்ச் 23 - பகத்சிங்கும் அவருடைய தோழர்களும் தூக்கிலிடப்பட்ட நாள்.

'பகத்சிங்' - 'விடுதலைப் போரின் கலங்கரை விளக்கம்' என இந்த கட்டுரையில் சொல்லப்படுவது, வெறும் அலங்கார வார்த்தைகளல்ல! சத்தியமான வார்த்தைகள்.

பகத்சிங்கை வாசியுங்கள். பிறகு, நம் வீடு, நம் குடும்பம் என்று சிறு வட்டத்துக்குள் வாழ்க்கையை ஓட்ட உங்களால் முடியாது. உங்களிடத்தில் கொஞ்சமாய் ஒட்டிகொண்ட பகத்சிங்கும், சமூக அநீதிகள் கண்டு, உங்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க விடமாட்டான் - மகா

18,19ஆம் நூற்றாண்டுகளின் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில், துரோகியையும் தியாகியையும் இனம் பிரித்து அடையாளம் காண்பது எளிதாக இருந்தது. திப்புநிசாம், மருதுதொண்டைமான் என தியாகத்தையும், துரோகத்தையும் எளிதாக வரையறுக்க முடிந்தது. ஆனால் இந்த எல்லைக்கோடு இருபதாம் நூற்றாண்டில் மங்கத் தொடங்கியது.

எதிர்ப்புகளை நசுக்குவதற்குப் பதிலாக அவற்றை நிறுவனமயமாக்கு வதன் மூலமாகவே நமத்துப்போகச் செய்துவிடமுடியும் என்ற உத்தியை 1857 எழுச்சிக்குப் பின் அமலாக்கினார்கள் வெள்ளையர்கள். அதாவது துரோகிகளையே தியாகிகளாக சித்தரித்துக் காட்டுவதன் மூலம் அடிமைத்தனத்துக்குள்ளேயே "விடுதலையைக்' காணும்படி மக்களைப் பயிற்றுவிக்க முடியும் என்பதைப் புரிந்து கொண்டார்கள்.

உண்மையான ஆட்சியதிகாரத்தைத் தம் கையில் வைத்துக் கொண்டு மன்னராட்சிக்குரிய அடையாளங்களை மட்டும் நீடிக்க அனுமதித்ததன் மூலம் துரோகிகளைத் திருப்திப்படுத்திய பிரிட்டிஷார், அதே உத்தியை மக்களுக்கும் விரிவுபடுத்தினார்கள். இதன் விளைவாக 18,19ஆம் நூற்றாண்டுகளில் துரோகிகள் எனக் கருதப்பட்டோரின் வழித்தோன்றல்கள், 20ஆம் நூற்றாண்டில் சமரசவாதிகளாக அவதரித்தார்கள்.

இந்தியர்களுடைய மனக்குறைகளை மேன்மை தங்கிய பிரிட்டிஷ் அரியணைக்கு மனுச் செய்து தெரிவிக்கும் நோக்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் 1885இல் வெள்ளையர்களாலேயே உருவாக்கப்பட்டது. பாரம்பரியமிக்க பிரிட்டிஷ் அடிவருடிகளான நிலப்பிரபுக்களின் நலனை மட்டுமின்றி, பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து ஆதாயமடைய விரும்பிய அனைத்திந்திய வர்க்கமான தரகு முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இத்தகையதொரு அரசியல் அமைப்பு தேவைப்பட்டது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மற்றும் இந்தத் தரகுக் கும்பலின் முதலாளித்துவ வர்க்கப் பின்புலத்தையும், இவர்களுக்கிடையிலான உறவையும் புரிந்து கொள்ளாத எவரும் இந்திய விடுதலையின் மீது காங்கிரசும் காந்தியும் நிலைநாட்டி இருந்த ஏகபோகத்தை உடைக்க முடியாது என்ற நிலையும் தோன்றியது.

இந்திய விடுதலை இயக்கத்தினுள் காந்தி நுழைந்த பிறகு, அவருடைய அகிம்சை வழியிலான போராட்ட முறை மூலம்தான், இந்திய விடுதலை இயக்கம் உண்மையான மக்கள் திரள் இயக்கமாக மாறியது என்ற மிகப்பெரிய வரலாற்றுப் புரட்டு திட்டமிட்டே பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கிறது. இது, இரண்டு நூற்றாண்டுகளாக ஆயுதம் தாங்கிப் போராடிய லட்சோப லட்சம் மக்களின் போராட்டங்களை இருட்டடிப்பு செய்யும் அயோக்கியத்தனம்.

""வன்முறைப்பாதையா, அகிம்சைப் பாதையா'' எனப் போராட்ட வழி முறைகளில்தான் விடுதலை இயக்கத்தில் வேறுபாடு நிலவியதைப் போலவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற பொது நோக்கில் அனைவருக்கிடையிலும் ஒற்றுமை நிலவியதைப் போலவும் ஒரு பொய்ச்சித்திரத்தைப் பதிய வைத்திருக்கிறது நமது அதிகாரபூர்வ வரலாறு. உண்மையில், ஆங்கில ஏகாதிபத்தியத்தோடு சமரசம் செய்து கொண்ட காங்கிரசு, முசுலீம் லீக் ஆகிய தரகு முதலாளித்துவ அரசியல் சக்திகள் எவ்விதச் சமரசத்துக்கும் இடமின்றி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை சமருக்கிழுத்த தேசியவாத சக்திகள் என இரு போக்குகள்தான் 20ஆம் நூற்றாண்டின் விடுதலை இயக்க வரலாற்றில் களத்திலிருந்தன.

1921, 1930, 1942 என ஏறத்தாழ பத்தாண்டு இடைவெளிகளில் ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், "வெள்ளையனே வெளியேறு' இயக்கம் என மூன்று போராட்ட இயக்கங்கள் காந்தியின் சத்தியாக்கிரக முறையில் துவக்கி நடத்தப்பட்டன. போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் மக்கள் இயல்பாக போலீசின் தாக்குதல்களுக்கு எதிர்த் தாக்குதல் கொடுக்கத் துவங்கினால், அந்நிய ஆட்சியை தம் சொந்த நடவடிக்கையின் மூலம் தூக்கியெறிய முயன்றால், மறுகணமே காந்தி போராட்டத்தை நிறுத்துவார்.

காந்திக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுவதற்கு முன், அரசு அவரைக் கைது செய்து விடும். பிறகு, "சென்டிமென்ட் அலை' அடிக்கத் துவங்கி, இறுதியில் இந்திய விடுதலையை மறந்து காந்தி விடுதலையாவதே தேசத்தின் லட்சியமாகி விடும். இதுதான் தியாக வேடமணிந்த துரோகத்தின் சுருக்கமான வரலாறு.




இந்தத் துரோகத்துக்கு எதிராக, சமரசமற்ற ஏகாதிபத்திய எதிர்ப்பையும், உண்மையான நாட்டு விடுதலையையும் முன்வைத்துப் போராடிய தியாகம், பகத்சிங் என்ற இளைஞனின் வடிவில் விடுதலைப் போராட்ட அரங்கினுள் நுழைகிறது.



""...நாம் புகாமல் இருந்திருந்தால் புரட்சி நடவடிக்கை எதுவுமே ஆரம்பத்திராது என்று நீ கூறுகிறாயா? அப்படியென்றால், நீ நினைப்பது தவறு; சுற்றுச் சூழ்நிலையை மாற்றுவதில் பெருமளவிற்கு நாம் துணை புரிந்துள்ளோம் என்பது உண்மையானாலும் கூட நாம் நமது காலத்தினுடைய தேவையின் விளைவுதான்.'' — சிறையில் தூக்கு தண்டனைகள் விதிக்கப்பட்ட நிலையில், சுகதேவ் எழுதிய ஒரு கடிதத்திற்கு, பகத்சிங் அளித்த பதில் இது. இத்தகையதொரு பதிலை 18,19ஆம் நூற்றாண்டுகளின் வீரர்கள் கூறியிருக்க முடியாது. முந்தைய நூற்றாண்டுகளில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடிய திப்பு முதல் மருது வரையிலான வீரர்களோ, பல்லாயிரக் கணக்கில் போராடி உயிர் நீத்த விவசாயிகளோ, சிப்பாய்களோ, தமது வரலாற்றுப் பாத்திரத்தை உணர்ந்திருக்கவில்லை. அது சாத்தியமும் இல்லை.

தனது வரலாற்றுக் கடமையை அடக்கத்துடன் புரிந்து வைத்திருந்த ஒரு அரசியல் போராளியாக, ஆனால் தன்னை சமூகத்திற்கு மேல் நிறுத்திப் பார்த்துக் கொள்ளாத ஒரு வீரனாக, தனது தியாகத்தின் அரசியல் பயனைக்கூட ஆராய்ந்து புரிந்துகொள்ள முடிந்த அற்புதமாக பகத்சிங் இந்திய விடுதலைப் போராட்ட அரங்கினுள் நுழைகிறான்.

பகத்சிங்கை வெறுமனே நாட்டுக்காக தூக்குமேடையேறிய வீரராக மட்டும் சித்தரிப்பது அவரது வரலாற்றுப் பாத்திரத்தை மறுப்பதாகும். இளம் வயதில் மரணத்திற்கு அஞ்சாத உறுதியே வரலாற்று நோக்கில் ஒருவருக்கு சிறப்பிடத்தை தந்து விடாது. ஏனெனில் காந்தியைச் சுட்டுக் கொன்று தூக்குமேடையேறிய கோட்சேயும் கூட மரணத்திற்கு அஞ்சாத இளைஞன்தான். உயிரை துறப்பதாலல்ல, உயிரைத் துறப்பதற்கான நோக்கத்திலேதான் வீரமும், தியாகமும் அடங்கியிருக்கிறது. பகத்சிங்கின் நோக்கமும், லட்சியமும்தான் அவரது மரணத்தை வரலாறாக்கியது. இளைஞர்களை புரட்சிகர அரசியலுக்கு கவர்ந்திழுத்தது; இன்றளவும் கவர்ந்திழுக்கிறது.

பகத்சிங்கினுடைய காலத்தின் தேவைதான் என்ன?

1919ல் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்திய மக்களிடத்தில், குறிப்பாக பஞ்சாப் மக்களிடத்தில் ஆறாத வடுவாகவும், சுதந்திரக் கனலை மூட்டி விடுவதாகவும் அமைந்தது. அப்போது சிறுவனாயிருந்த பகத்சிங்கின் உள்ளத்திலும் இப்படுகொலை ஆழமான காயத்தை உருவாக்கியிருந்தது. இதற்குப் பழி வாங்கும் விதத்தில் உத்தம் சிங் எனும் இளைஞர் 20 ஆண்டுகள் காத்திருந்து படுகொலைக்குப் பின்னணியிலிருந்த அப்போதைய பஞ்சாப் கவர்னர் ஜெனரல் ஓ டயரைச் சுட்டுக் கொன்றார்.

1921ல் காந்தி "ஓராண்டிற்குள் சுயாட்சி' என்ற முழக்கத்தோடு ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். அவ்வழைப்பை ஏற்று மாணவர்கள் தொழிலாளர்கள் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான மக்கள் அணிதிரண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

1922 பிப்.5ஆம் தேதி உ.பியில் உள்ள சௌரி சௌரா எனும் இடத்தில் அமைதியாகப் போராடிய மக்கள் மீது போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் மடிந்தனர். வெகுண்டெழுந்த மக்கள் சௌரி சௌரா போலீசு நிலையத்தை தீயிட்டுக் கொளுத்தியதில் 22 போலீசுக்காரர்கள் கொல்லப்பட்டனர். உடனே ஒத்துழையாமை இயக்கம் காந்தியால் நிறுத்தப்பட்டது. காந்தியின் இந்த எதேச்சதிகாரமான முடிவுக்கு எதிராக காங்கிரசுக்குள்ளேயே கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது. சமூகத்தின் அனைத்துத் தரப்பினர் மீதும் அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. காங்கிரசு கை கட்டி வேடிக்கை பார்த்தது. ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு நம்பிக்கையின் மையும், சோர்வும் இந்திய அரசியல் வானை மூடின.

தேசப்பற்றுமிக்க இளைஞர்கள் புதிய நம்பிக்கைகளைத் தேடலாயினர். காந்தியத்தின் மீது துவக்கத்திலேயே விமரிசனம் கொண்டிருந்த பகத்சிங், சுகதேவ் போன்ற இளைஞர்கள் புரட்சிகர அமைப்புகளின் தொடர்பு கிடைக்கப் பெற்றனர். 1924ன் இறுதியில் சச்சீந்திரநாத் சன்யால் என்பவரால் துவக்கப்பட்ட இந்துஸ்தான் குடியரசுக் கழகம் எனும் அமைப்பில் இணைந்தனர்.

இவ்வமைப்பின் அப்போதைய முன்னணியாளர்களான ராம்பிரசாத் பிஸ்மில், ராஜேந்திரநாத் லஹிரி, அஷ்பகுல்லா கான், மன்மத்நாத் குப்தா, சந்திரசேகர் ஆசாத் போன்றோர், 1925 ஆகஸ்டு 9ந் தேதியன்று காக்கோரி எனும் இரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி, அரசு கஜானாவிற்கான பணத்தைக் கொள்ளையடித்தனர். இதனை அரசுக்கு நேர்ந்த சவாலாக உணர்ந்த ஆங்கிலேய அரசு, கடுமையான அடக்குமுறையை ஏவியது. 1926 இறுதியில் தலைமறைவான ஆசாத் தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர். இயக்கம் செயலற்று நின்றது.

இந்தத் தேக்க நிலையில், 1926இல் லாகூரில் பகத்சிங், பகவதிசரண் வோரா, சுகதேவ், யஷ்பால் முதலானோர் "நவஜவான் பாரத் சபா' எனும் இளைஞர் அமைப்பைத் தோற்றுவித்தனர். வெளிப்படையாக மக்கள் மத்தியில் சுதந்திர வேட்கையைத் தூண்டும் கூட்டங்கள் இவ்வமைப்பினரால் நிகழ்த்தப்பட்டன.

1927 இறுதியில் ராம்பிரசாத் பிஸ்மில், ராஜேந்திரநாத் லஹிரி, அஷ்பகுல்லா கான் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். பலர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இச்சூழ்நிலையில், தலைமறைவாயிருந்த ஆசாத்தோடு பகத்சிங் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பு இந்த இளம் தோழர்களின் தோளில் விழுந்தது.

1925லிருந்து 1927க்கும் இடைப்பட்ட இக்காலத்தில் இயக்கப் பணிகளினூடாக, 1917ன் ரசியப் புரட்சியின் விளைவாக, இந்தியாவில் பரவத் தொடங்கிய சோசலிசக் கருத்துக்களையும், இதர ஐரோப்பியக் கருத்துக்களையும் பகத்சிங்கும், அவரது தோழர்களும் கற்கத் துவங்கினர். பகத்சிங் சோசலிசக் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்வதில் முன்ணணியில் இருந்தார். இந்தக் காலகட்டத்தில் உருப்பெற்ற அரசியல் கண்ணோட்டம்தான் அவருடைய வளர்ச்சி நிலைகளுக்கு அடிகோலியது. இச்சூழ்நிலையை "நான் நாத்திகன் ஏன்?' எனும் கட்டுரையில் அவர் விவரிக்கிறார்.

""அக்காலகட்டம் வரை நான் வெறுமனே ஒரு கற்பனாவாதப் புரட்சியாளனாகவே இருந்தேன். அது வரை நாங்கள் வெறுமனே பின்பற்றுபவர்களாக மட்டுமே இருந்தோம். இப்பொழுதோ முழுப்பொறுப்பையும் தோளில் சுமக்க வேண்டிய காலம் வந்தது. சில காலமாக ஏற்பட்ட தடுக்க முடியாத எதிர்ப்பால், கட்சி உயிரோடிருப்பதுகூட அசாத்திய மென்று தோன்றியது.... எங்களுடைய வேலைத்திட்டம் பிரயோசனமற்றதென பிற்காலத்தில் உணரக் கூடிய ஒருநாள் வரக் கூடுமோ என சில சமயங்களில் நான் பயந்ததுண்டு. எனது புரட்சிகர வாழ்க்கை யில் அது ஒரு திருப்புமுனையாகும். ""கற்றுணர்'' எனும் முழக்கமே என் மனத்தாழ்வாரங்களில் கணந்தோறும் எதிரொலித்தது...

""நான் கற்றுணரத் துவங்கினேன். என்னுடைய பழைய நம்பிக்கைகள் மாறுதலுக்குள்ளாகத் துவங்கின. எமது முந்தைய புரட்சியாளர்களிடம் பிரதானமாக விளங்கிய நம்பிக்கையின் அடிப்படையிலான வழிமுறைகள், இப்பொழுது தெளிவான, உறுதியான கருத்துக்களால் நிரப்பப்பட்டன. மாயாவாதமோ, குருட்டு நம்பிக்கையோ அல்ல, மாறாக யதார்த்தவாதமே எங்கள் வழியாயிற்று. அத்தியாவசியத் தேவையையொட்டிய பலாத்காரப் பிரயோகமே நியாயமானதாகும். அனைத்து மக்கள் இயக்கங்களுக்கும் சாத்வீகம் ஒரு விதி என்ற அடிப்படையில் இன்றியமையாததாகும். மிக முக்கியமாக, எந்த லட்சியத்திற்காக நாம் போராடுகிறோம் என்பதைக் குறித்த தெளிவான புரிதலோடிருக்க வேண்டும்.

""களத்தில் முக்கியமான நடவடிக்கைகள் எதுவும் அப்போது இல்லாத காரணத்தால், உலகப் புரட்சி குறித்த பல்வேறு கருத்துக்களைப் படிப்பதற்கு நிறைய அவகாசம் கிடைத்தது. அராஜகவாதத் தலைவர் பக்குனினது எழுத்துக்களையும், கம்யூனிசத் தந்தை மார்க்சினது சில படைப்புக்களையும், அதிகமாகத் தமது நாட்டில் வெற்றிகரமாகப் புரட்சியை நிகழ்த்திக் காட்டிய லெனின், டிராட்ஸ்கி மற்றும் பிறரது கருத்துக்களையும் படித்தேன்.''

பகத்சிங்கிற்கு முந்தைய புரட்சிகர பயங்கரவாதிகள் ஆங்கிலேயர்களுக்கெதிராக வீரஞ்செறிந்த முறையில் போராடிய பொழுதிலும், அரசியல் ரீதியாகப் பின் தங்கியிருந்தனர். சுதந்திரத்திற்குப் பிறகான அரசமைப்பு குறித்தும் தெளிவற்றிருந்தனர். அதன் விளைவாக காந்தி, காங்கிரசின் செயல்பாடுகளை அரசியல்ரீதியில் முறியடிக்கவும், அம்பலப்படுத்த வேண்டிய அவசியத்தையும் உணராமலிருந்தனர். அவ்வகையில், ஒருபுறம் காந்தி, காங்கிரசின் அடிவருடித்தனத்திற்கும், மறுபுறம் புரட்சிகர பயங்கரவாதிகளின் ஆயுதவழிபாட்டு சாகசவாதத்திற்கு எதிராகவுமான ஒரு மாற்றை உருவாக்க பகத்சிங், பகவதிசரண் வோரா முதலான தோழர்கள் முயன்றனர்.

இதனடிப்படையில், 1928 செப்டம்பர் 9,10 தேதிகளில் டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த கூட்டத்தில் அதுவரை இந்துஸ்தான் குடியரசுக் கழகமாக இருந்த அமைப்பின் பெயர், இந்துஸ்தான் சோசலிசக் குடியரசுக் கழகமாக (இ.சோ.கு.க) மாற்றப்பட்டது.

காந்தி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தன்னை புரட்சியாளர்களிடமிருந்து கவனமாகத் தூரப்படுத்திக் கொண்ட போதிலும், புரட்சியாளர்கள், காங்கிரசு நடத்திய மக்கள் போராட்டங்களிலிருந்து அவ்வாறு தம்மைத் தூரப்படுத்திக் கொள்ளவில்லை. நாட்டு விடுதலைக்கான அனைத்து முயற்சிகளிலும் அவை பலாத்கார முறைகளிலானாலும் சரி, சாத்வீக முறைகளிலானாலும் சரி புரட்சியாளர்கள் உத்வேகத்தோடு ஈடுபட்டனர். இவ்வகையிலேயே, 1928இல் சைமன் கமிஷன் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் புரட்சியாளர்கள் ஈடுபட்டனர்.

லாகூரில், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பிரதானமாக நவஜவான் பாரத் சபாவினால் ஏற்பாடு செய்யப்பட்டது. போலீசு விதித்த தடையை மீறி, அக்டோபர் 30ஆம் தேதியன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போலீசு தடியடி நடத்தியது. "பஞ்சாப் சிங்கம்' என்றழைக்கப்பட்ட லாலா லஜபதிராய் எனும் முதிய தலைவர் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இரண்டு வாரங்களில் அவர் உயிர் நீத்த பொழுது, வடஇந்தியாவே கொந்தளித்தது. லஜபதிராயின் இறுதி ஊர்வலத்தில் ஒன்றரை லட்சம் மக்கள் கலந்து கொண்டனர்.

மக்களிடம் எழுந்த ஆவேசத்திற்குச் செயல்வடிவம் கொடுக்க இ.சோ.கு.க தீர்மானித்தது. லஜபதிராய் இறந்து சரியாக ஒரு மாதம் கழித்து டிச17 அன்று, அவர் மீது தடியடிப் பிரயோகம் நடத்திய சாண்டர்ஸ் எனும் போலீசு அதிகாரியை, போலீசு நிலைய வாசலிலேயே வைத்து ராஜகுருவும், பகத்சிங்கும் சுட்டுக் கொன்றனர். மறுநாள் லாகூர் முழுதும் சாண்டர்ஸை கொலை செய்ய நேர்ந்ததற்கான அவசியம் குறித்து இ.சோ.கு.க சுவரொட்டி ஒட்டியது. பகத்சிங்கும், இதர தோழர்களும் லாகூரை விட்டுத் தப்பிச் சென்றனர். இதற்கு முன்பு எத்தனையோ முறை ஆங்கிலேய அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டிருந்த போதிலும், சாண்டர்ஸ் படுகொலையின் அரசியல் முக்கியத்துவம் காரணமாக, புரட்சியா ளர்கள் நாடு முழுதும் போற்றப்பட்டனர்.

தலைமறைவான சூழலில் நாட்டின் அரசியல் சூழலை புரட்சியாளர்கள் கூர்ந்து கவனித்து வந்தனர். பகத்சிங்குடன் நவஜவான் பாரத் சபாவில் இணைந்து செயல்பட்ட தொழிலாளர்விவசாயிகள் கட்சியின் தலைவர் சோகன் சிங் ஜோஷ், 1928 சாண்டர்ஸ் கொலைக்குப் பிறகு கல்கத்தாவில் பகத்சிங்கைச் சந்தித்த பொழுது ""நீங்கள் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் ஒருங்கிணையுங் கள். நாங்கள் ஆங்கில அரசின் ஒருங்கிணைவை உடைத்தெறிகிறோம். நாம் இப்படி ஒரு வேலைப் பிரிவினையை ஏற்படுத்திக் கொள்வோம்'' என்று பகத்சிங் கூறியதாகப் பதிவு செய்துள்ளார். கம்யூனிசம் அவர்களை ஈர்த்த போதிலும், "மாபெரும் மக்கள் இயக்கத்தின் இராணுவமாக உருக் கொள்வதே' இந்துஸ்தான் சோசலிசக் குடியரசுக் கழகத்தின் இலக்காக இருந்தது. எனினும், மாபெரும் மக்கள் இயக்கம் குறித்த அவர்களது கருத்து கற்பனையிலிருந்து உதித்த ஒன்றல்ல.

அன்றைய சூழலில், தொழிற்சங்க இயக்கம் நாட்டில் முன்னேறிக் கொண்டிருந்தது. 1928இல் வட மாநிலங்களில் பரவலாக தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் போர்க் குணத்தோடு நடைபெறலாயின. வளர்ந்து வரும் தொழிலாளர் இயக்கத்தைக் கடுமையாக ஒடுக்கும் முகமாக "தொழிற் தகராறு மசோதா'வை டெல்லி மத்திய சபையில், ஆங்கில அரசு கொண்டு வந்தது.

"தொழிற் தகராறு மசோதா' நிறைவேற்றப்படும் நாளன்று டெல்லி மத்திய சபையில் உயிர்ச்சேதமின்றி வெடிகுண்டு வீசுவதென்றும், தானாகவே கைதை ஏற்றுக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்காடுவதன் மூலம் ஆங்கில அரசின் அடக்குமுறைகளை அம்பலப்படுத்துவ தெனவுமான திட்டத்தை பகத்சிங் மத்தியக் கமிட்டியில் முன்வைத்தார். இவற்றை செய்து முடித்த பின்னால் ஒரு வேளை தப்ப முடியவில்லையென்றால், தூக்கு மேடை செல்லவும் தயாராக இருக்க வேண்டுமென்றார் பகத்சிங். அவர் முன் வைத்த திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

திட்டமிட்டபடி, 1929 ஏப்ரல் 8ஆம் தேதியன்று கேள்வி நேரத்தில் எதிர்பார்த்தபடியே வைஸ்ராயின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி "தொழிற் தகராறு மசோதா' நிறைவேறியதை அறிவிக்க ஜெனரல் சூஸ்டர் எழுந்தார். உடனடியாக பார்வையாளர் அரங்கிலிருந்த பகத்சிங்கும், பி.கே.தத்தும் வெடிகுண்டு களை காலி இருக்கைகளின் மீது வீசினார்கள். "செவிடர்களை கேட்கச் செய்வதற்கு வெடிகுண்டு முழக்கங்கள் அவசியமானவை' எனும் தலைப்பிலான சிவப்புத் துண்டறிக்கைகளை வீசியவாறு, "புரட்சி நீடுழி வாழ்க, ஏகாதிபத்தியம் ஒழிக, உலகப் பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்' ஆகிய முழக்கங்களை உத்வேகத்தோடு எழுப்பினார்கள். நெடு நேரம் அவர்களை நெருங்கவும் தயங்கியவாறு போலீசார் நின்றனர். பின்னர் பகத்சிங் அவர்களை நோக்கி தாங்கள் கைதுக்குத் தயாராக இருப்பதாகவும், தங்களிடம் ஆயுதங்கள் இல்லையெனவும் உறுதியளித்த பின்னரே அந்த சூரப்புலிகள் அவர்களை நெருங்கி கைது செய்தனர்.

1929 ஜீன் 6ஆம் தேதியன்று பகத்சிங்கும், பி.கே.தத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை வரலாற்றுப் புகழ் பெற்றதாகும். வெடிகுண்டு வீசியதை ஏற்றுக்கொண்ட தோழர்கள், அதன் நோக்கம் உயிர்ப் பலியல்லவென்றும், அதன் அரசியல் நோக்கம் குறித்தும் வாதாடினர்.

""எங்களது ஒரே நோக்கம் "செவிடர்களைக் கேட்கச் செய்வதும்', செவிமடுக்காதவர்களுக்குத் தக்க எச்சரிக்கை வழங்குவதுமேயாகும். மிகப்பலரும் எங்களைப் போன்றே செய்ய விரும்பினர். வெளித் தோற்றத்தில் அமைதியாகக் காட்சியளிக்கும் இந்திய மக்கட் கடலிலிருந்து, ஒரு மாபெரும் சூறாவளி எழும்பவிருக்கிறது... கற்பனாவாத சாத்வீகத்தின் காலம் முடிந்து விட்டதைத் துளியும் சந்தேகத்திற்கிடமின்றி இளைய தலைமுறை ஏற்றுக் கொண்டு விட்டதை நாங்கள் அடையாளப்படுத்த மட்டுமே செய்துள்ளோம்.''

அன்று சர்வதேசப் பத்திரிக்கை களிலும், தேசபக்த உணர்வுமிக்க இந்தியப் பத்திரிக்கைகளிலும் விரிவாக வெளியிடப்பட்ட பகத்சிங்கின் அறிக்கைகள் மக்களால் பேரார்வத்தோடு வரவேற்கப்பட்டன. வழக்கை விரைந்து நடத்திய அரசு, 1929 ஜீன்12 அன்று பகத்சிங் மற்றும் பி.கே.தத் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.

சிறையிலடைக்கப்பட்ட தோழர்கள் அங்கேயும் தமது போராட்டத்தைத் தொடர்ந்தனர். அன்றைய சூழலில் அரசியல் கைதிகள் கிரிமினல் கைதிகளைப் போல நடத்தப்படுவதைக் கண்டித்தும், வெள்ளை அரசியல் கைதிகளுக்கு காட்டப்பட்ட பாரபட்சத்தைக் கண்டித்தும், பகத்சிங் லாகூர் சிறையிலிருந்தும், பி.கே.தத் மியான்வாலி சிறையிலிருந்தும் ஜூலை13ம் தேதியன்று உண்ணா விரதத்தை துவங்கினார்கள். கைது செய்யப்பட்ட பிற புரட்சியாளர்களும், பகத்சிங், தத்துடன் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். அவர்களுக்கு வலுக்கட்டாயமாக உணவு புகட்ட முயன்ற முயற்சிகளைக் கடுமையாக எதிர்த்தனர். 63 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு ஜதின்தாஸ் செப்டம்பர் 13ஆம் தேதியன்று உயிர் நீத்தார். அவரது உடல் லாகூர் சிறையிலிருந்து கல்கத்தா எடுத்துச் செல்லப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் 6 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர்.

சாண்டர்ஸ் கொலை வழக்கு இரண்டாம் லாகூர் சதி வழக்காக ஜீலை 10 முதல் துவங்கியது. பகத்சிங் இவ்வழக்கிலும் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். பகத்சிங்கும் தோழர்களும் வழக்கு மேடையின் நியாய வேடத்தைக் கேள்விக்குள்ளாக் கினர். லெனின் தினம் மற்றும் காக்கோரி தினம் நீதிமன்றத்திலேயே தோழர்களால் கொண்டாடப்பட்டது. பகத்சிங், மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு தங்களது வாழ்த்துத் தந்தியை அனுப்ப நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஒரு கட்டத்தில் இவ்வழக்கு விசாரணை, மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்குவதற்குப் பதிலாக புரட்சியாளர்களுக்குச் செல்வாக்கு உண்டாக்குவதை உணர்ந்த ஆங்கிலேய அரசு, 1930 மே 1 ஆம் தேதியன்று லாகூர் சதி வழக்கு சட்டவரைவின் மூலமாக வழக்கை விசேட நீதிமன்றத்திற்கு மாற்றியது. அதனடிப்படையில், அனைத்து நீதித்துறை விதிமுறைகளும் காற்றில் பறக்க விடப்பட்டு, ""குற்றம் சாட்டப்பட்டோர் இல்லாமலேயே விசாரணை நடைபெறலாம்'' என அறிவித்தது. பிறகு "தடங்கலின்றி' நடைபெற்ற விசாரணை நாடகம் அக்டோபர் 7ஆம் தேதியன்று பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்குத் தூக்கு தண்டனை விதித்தது.

1929 வரை பெயரளவு டொமினியன் அந்தஸ்தையே கோரி வந்த காங்கிரசுக் கட்சி, 1930ல் "பூரண சுதந்திர' கோரிக்கைக்கு மாறியதும், சட்ட மறுப்பு இயக்கத்தைத் துவக்கியதும், பகத்சிங் ஏற்படுத்திய புரட்சி அலை காங்கிரசைப் புரட்டி எடுத்ததன் விளைவேயாகும். இதனை 29.1.1931ல் "குடி அரசு' இதழில் பெரியார் குறிப்பிடுகின்றார்.

""..காந்தியவர்களே, இக்கிளர்ச்சி (சட்ட மறுப்பு இயக்கம்) ஆரம்பிப்பதற்கு முக்கியக் காரணம் பகத்சிங் போன்றவர்கள் செய்யும் காரியங்களைத் தடுப்பதற்கும், ஒழிப்பதற்குமே என்ற கருத்துப்பட நன்றாய் வெளிப்படையாகவே எடுத்துச் சொல்லியிருக்கின்றார்.''

சட்ட மறுப்பு இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கில், வழக்கம் போல் சமரசப் பேச்சுவார்த்தைக்காக காந்தி மன்றாடினார். அதன் விளைவாக காந்தி இர்வின் பேச்சுவார்த்தை ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில், பகத்சிங்கையும், இதர தோழர்களையும் விடுதலை செய்யக் கோரும், குறைந்தபட்சம் அவர்கள் தண்டனையையேனும் குறைப்பதற்கான ஷரத்தைச் சேர்க்க வலியுறுத்தி நாடு முழுவதும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு உடன்பட மறுத்த காந்தி தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் அவர் என்ன செய்தார் என்பது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்து அரசுக்கு அன்றாடம் பேச்சுவார்த்தை விவரங்களை தெரிவிக்க கடமைப்பட்டிருந்த இர்வின், பேச்சுவார்த்தைக் குறிப்புகளை ஆவணப்படுத்தியுள்ளார்: ""முடிவில், அவர் (காந்தி) ....பகத்சிங் வழக்கு குறித்து குறிப்பிட்டார். அவர் (மரண) தண்டனையை நீக்கக் கோரவில்லை. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் தண்டனையைத் தள்ளி வைக்கக் கேட்டுக் கொண்டார்.''

(கோப்பு எண்: 545/19312, உள்துறை அமைச்சகம், தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ள அரசியல் பிரிவு)

""அவர் (காந்தி) வெளியேறும் பொழுது, மார்ச்24ல் பகத்சிங் தூக்கிலிடப்பட இருப்பதாக பத்திரிக்கை களில் செய்தி படித்ததாகவும், துரதிர்ஷ்டவசமாக காங்கிரசின் புதிய தலைவர் கராச்சியில் வந்திறங்கும் நாளும் அதுவே எனக் குறிப்பிட்டு, அதனால், கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகும் எனவும் கூறினார். நான் இவ்வழக்கை மிகக் கவனத்தோடு பரிசீலித்திருப்பதாகவும், தண்டனையை குறைப்பதற்கான எனது மனசாட்சியை திருப்திப்படுத்தும் எந்த முகாந்திரத்தையும் காணவில்லையென்பதையும் தெரிவித்தேன்... அவர் இந்த வாதத்தின் வலிமையை அங்கீகத்தது போல் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.''

(மேற்குறிப்பிட்ட கோப்பு, பிப்ரவரி 19 தேதியிட்டது 1970 ஆகஸ்டு 15 மெயின்ஸ்ட்ரீம் இதழில் டி.பி.தாஸ் எழுதிய கட்டுரையிலிருந்து)

இதனிடையே, 1930 மே 28ஆம் தேதியன்று பகத்சிங்கைத் தப்புவிப்பதற் கான திட்டத்தின் அடிப்படையில், வெடிகுண்டைச் சோதித்த பொழுது ஏற்பட்ட விபத்தில் பகவதி சரண் வோரா வீரமரணம் அடைந்தார். பகத்சிங் சிறையிலிருந்த போது, காந்தியை அம்பலப்படுத்தியும், இளைஞர்களை உற்சாகமாக அணிதிரட்டியும் வந்த வோரா ஒரு விபத்தில் பலியானது துயரார்ந்ததே. மேலும், இ.சோ.கு.கவின் படைத்தலைவராக விளங்கிய ஆசாத் இறுதி வரை தமது பெயருக்கேற்றாற் போல் போலீசின் பிடிக்குள் அகப்படாமலிருந்து, 1931 பிப்ரவரி 27ல் போலீசாருடன் தன்னந்தனியாக நின்று வீரத்தோடு சண்டையிட்டு அலகாபாத் நகரிலிருந்த அன்றைய ஆல்ஃபிரெட் பூங்காவில் வீரமரணமடைந்தார்.

இந்தியச் சிறை வரலாற்றிலேயே முதல் முறையாக மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சி காலை நேரத்திற்குப் பதிலாக, மார்ச்23,1931 அன்று இரவோடிரவாக மாலை 7.33 மணியளவில் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு முதலானோர் தூக்கிலிடப்பட்டனர். சிறையிலிருந்த நேரடி சாட்சியங்களின்படி, பகத்சிங்கை தூக்குமேடைக்கு அழைத்துச் செல்ல போலீசார் வந்த பொழுது அவர் லெனின் எழுதிய ஒரு நூலைப் படித்துக் கொண்டிருந்தார். "சிறிது நேரம் காத்திருங்கள், ஒரு புரட்சியாளன் இன்öàரு புரட்சியாளனிடம் பேசிக் கொண்டிருக்கிறான்' என்றார். அவர் குரலில் இருந்த ஏதோ ஒன்றினால் தடுக்கப்பட்ட அதிகாரிகளும் காத்திருந்தனர். சில நிமிடங்கள் கழித்து புத்தகத்தை உயர வீசிய அவர், "வாருங்கள், போகலாம்' எனக் கிளம்பினார். பின்னர், அவர், சுகதேவ், ராஜகுரு மூவரும், புரட்சிகரப் பாடல் வரிகளைப் பாடியவாறு தூக்குமேடைக்குச் சென்றனர். அங்கிருந்த மாஜிஸ்திரேட்டை நோக்கி, "இந்தியப் புரட்சியாளர்கள் எவ்வாறு மரணத்தை நோக்கி வீரநடை போட்டார்களென்பதைக் காணும் வாய்ப்பு பெற்ற நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள்' எனக் கூறினார். அவர்களது பிணங்களை மக்களிடம் அளிப்பது கூட பேரபாயமாக உணர்ந்த அரசு, அவசர அவசரமாக அவர்களது உடல்களை சட்லெஜ் நதிக்கரையோரம் எரித்துப் போட்டது.

ஆங்கிலேயர்களும், காந்தியும் ஓரணியில் நின்று பகத்சிங்கைப் பல வகைகளில் இருட்டடிப்பு செய்ய முயன்ற போதும், உண்மையான தேசபக்தர்களும், மக்களும் அதனை ஏற்க மறுத்து, பகத்சிங்கை ஆதரித்தார்கள். பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய மூவரும் 1931 கராச்சி காங்கிரஸ் மாநாடு துவங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக தூக்கிலிடப்பட்டவுடன் நாடே கொந்தளித்தது.

கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு வந்த காந்திக்கு இளைஞர்கள் வழியெங்கும் கறுப்புக் கொடி காட்டினர். காங்கிரசின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டிற்கு மாறாக, வங்காள காங்கிரஸ் கமிட்டி புரட்சியாளர்களை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியது. ""அந்த நேரத்தில் பகத்சிங்கின் பெயர் இந்தியா முழுவதும் பரவலாக தெரிந்திருந்ததுடன், காந்தியின் அளவிற்குச் செல்வாக்குடனும் இருந்தது என்று கூறுவது மிகையாகாது.'' எனக் குறிப்பிடுகிறார் காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை எழுதிய பட்டாபி சீத்தாராமையா.

"புரட்சி என்றாலே பகத்சிங் என்று தான் பொருள்' என்றார் சுபாஷ் சந்திர போஸ். உண்மைதான், நமது நாட்டின் அரசியல், வரலாற்றுப் பொருளில், பகத்சிங்தான் புரட்சியின் அடையாளம். இரண்டு நூற்றாண்டுக்காலமாக விடுதலை வீரர்கள் வென்றெடுக்க முயன்ற விடுதலையை, எதிரிகளிடம் யாசித்துப் பெற வேண்டிய பிச்சையாக மாற்றினார் காந்தி. அந்த விடுதலை வீரர்களின் மரபில் வந்த பகத்சிங்கோ, கம்யூனிசக் கருத்துக்கள் அளித்த ஒளியில் காந்தியக் காரிருளைக் கிழித்து புரட்சியை மீண்டும் நிகழ்ச்சிநிரலுக்குக் கொண்டுவந்தார்.

மைசூர், நெல்லை, வேலூர், மீரட், வங்காளம் என்று ஒவ்வொரு முறையும் எதிரிகள் புதைத்து நிமிர்ந்த மறுகணமே, இன்öàரு பகுதியில் வெடித்துக் கிளம்பிய விடுதலை வேட்கையைப் போல, சட்லெஜ் நதிக்கரையில் புதைக்கப்பட்ட அந்தப் புரட்சி, 1946ல் தெலிங்கானா விவசாயிகள் எழுச்சியாய் ஆந்திரத்தில் எழுந்து, மூன்றாவது சிப்பாய் எழுச்சியாய், மும்பையில் வெடித்தது. ""இதனை உடனே நசுக்கவில்லை என்றால் மேடையில் புதிய பாத்திரங்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்'' என்று 1857இல் பெஞ்சமின் டிஸ்ரேலி விடுத்த எச்சரிக்கை ஆங்கிலேயப் பேரரசின் காதில் ஒலித்திருக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறு நசுக்கினால் எழக்கூடிய கம்யூனிசப் பேரலை ஏகாதிபத்தியவாதிகளின் கண்ணில் தெரிந்தது. காந்தி எனும் கைப்பாவையின் அவதாரம் கலைந்து கொண்டிருப்பதும் அவர்களுக்குத் தெளிவாகப் புரிந்தது. துரோகிகளின் கைக்கு அதிகாரத்தை மாற்றிக் கொடுப்பதுதான் பேரரசைக் காப்பாற்றிக் கொள்வதற்கு எஞ்சி இருக்கும் ஒரே வழி என்பது எதிரிகளுக்குப் புரிந்ததால் அதிகார மாற்றம் நிகழ்ந்தது.

தியாகத்தின் மரபுகள் அனைத்தையும் பூசையறைப் படங்கள் ஆக்கிவிட்டு துரோகம் அதிகாரத்தில் அமர்ந்துவிட்ட போதிலும் விடுதலைப் போராட்டத்தின் வீரமரபு, 1967 நக்சல்பாரி எழுச்சியாய் வங்கத்தில் பிறப்பெடுத்தது. திப்பு முதல் பகத்சிங் வரையிலான விடுதலை மரபனைத்தையும் உட்செரித்துக் கொண்டு மறுகாலனியாதிக்கத்துக்கு எதிரான போரில் களத்தில் நிற்கிறது.

இதோ, துணைப்படைத் திட்டத்தை அறிவிக்கிறார் ஜார்ஜ் வெல்லெஸ்லி புஷ். வாரிசிலிக் கொள்கையின் அடிப்படையில் பொதுத்துறைகளைக் கொடுத்துவிடச் சொல்கிறார் டல்ஹவுஸி சிதம்பரம். ""மகனே குறைந்தபட்சத் திட்டத்துக்கு மேல் எதையும் ஒத்துக் கொள்ளாதே'' என்று மரணப் படுக்கையில் முனகுகிறார் எச்சூரி நவாப். ""மகா பிரபுவே, ஆங்கிலேயக் கம்பெனியை நம்பியவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். எதிர்த்தவர்கள் யாரும் வாழ்ந்ததில்லை'' என்று ஆக்ஸ்ஃபோர்டில் உரையாற்றுகிறார் தொண்டைமான் சிங்.

கனவில் எழும்பும் தொடர்பற்ற காட்சிப் படிமங்கள் போல், முந்நூறு ஆண்டு வரலாற்றின் துரோகிகளும், எதிரிகளும் ஒரே நேரத்தில் பேசுகிறார்கள். கனவுப் பிம்பங்களின் அடையாளக் குழப்பம் ஏதுமின்றி, தெளிவாகத் தெரிகிறது அந்த முகம். மீசை அரும்பாத அந்த இளைஞனின் முகம். இந்தப் பேரிரைச்சலைக் கிழித்துக் கொண்டு தீர்மானமானமாக ஒலிக்கிறது அந்தக் குரல்: ""இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை..

.பால்ராஜ்

புதியகலாச்சார இதழிலிருந்து...