Sep 25, 2018

The Post - பத்திரிக்கை சுதந்திரம்

1960-களில் அமெரிக்கா வியட்நாம் மீது ஆக்கிரமிப்பு போர் செய்து கொண்டிருந்தது. வியட்நாமிய போராளிகள் கொரில்லா போர் செய்து அமெரிக்க ராணுவத்தினரை சிதறடித்துக் கொண்டிருந்தார்கள்.

உச்சக்கட்ட போர் சமயத்தில் 60 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இறந்தும் காணாமலும் போயினர். அமெரிக்க அரசோ கெத்தாக போரில் முன்னேறி கொண்டிருப்பதாக கதை விட்டுக் கொண்டிருந்தது.

இராணுவ ஆய்வாளர் ஒருவர் உலகுக்கு உண்மையை சொல்ல நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு ஆதாரம் அளிக்கிறார். இதழில் வெளியானதும் நாடே கொந்தளிக்கிறது. அமெரிக்க அரசு ஆடிப்போய்விடுகிறது!

'நியூயார்க் டைம்ஸ்'க்கு போட்டி பத்திரிக்கையான 'வாஷிங்டன் போஸ்ட்' மேலும் வியட்நாமிய போர் தொடர்பான செய்திகளை தேடுகிறது. கண்டுபிடித்தும் விடுகிறது.

இதற்கிடையில் வாஷிங்டன் போஸ்ட் பொருளாதாரத்தில் தள்ளாடுகிறது. பொதுமக்களிடம் பங்குகளை வெளியிட்டு, தன்னைப் பலப்படுத்திக் கொள்ளலாம் என முடிவு செய்கிறது.

இதே சமயத்தில் நியூயார்க் டைம்ஸில் ஆதாரம் வெளியானதை ஒட்டி, அமெரிக்க அரசு சுதாரித்து மேற்கொண்டு ஆதாரங்களை வெளியிடக்கூடாது என நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கி விடுகிறது.

கிடைத்த ஆதாரங்களை, தடையை மீறி வெளியிட்டால், வாஷிங்டன் போஸ்ட் இதழை இழுத்து மூடவேண்டி இருக்கும். பத்திரிகை ஆசிரியரும், அதன் மேலாண் இயக்குநரும் நிச்சயமாய் கைது செய்யப்படுவார்கள்.

அதனால் பத்திரிக்கையில் வெளியிட மற்ற இயக்குனர்கள் மறுக்கிறார்கள்.

எல்லாவற்றையும் மீறி மக்களுக்கு வாஷிங்டன் போஸ்ட் உண்மையை சொன்னார்களா என்பது முழு நீளக்கதை!
****

இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கு இரண்டு முகங்கள். ஜாஸ், ஜுராசிக் பார்க் , இண்டியனா ஜோன்ஸ் என ஒரு முகம். இன்னொரு முகம் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட், அமிஸ்டாட், தி போஸ்ட்.

படத்தில் பத்திரிக்கை ஆசிரியராக வரும் டாம் ஹாங்க்ஸ், முதலாளியாக வரும் மெரில் ஸ்டிரிப் என எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

சிறந்த திரைப்படம், இயக்குனர், நடிகர், நடிகை, திரைக்கதை, இசை என ஆறு வகைகளில் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

அமெரிக்கா உலகம் முழுவதிலும் போர் என்ற பெயரில் பல உயிர்களை கொன்று குவித்துள்ளது. வியட்நாமில் தோற்றுப் போவோம் என தெரிந்தே பல ஆயிரம் தனது சொந்த நாட்டு இளைஞர்களையே பலிகொடுத்தது.

படத்தில் ஒரு இடத்தில் சொல்லப்படும் செய்தி.

ஊடகம் ஆளப்படுகிறவர்களுக்கு தான் சேவை செய்ய வேண்டும். ஆள்பவருக்கு அல்ல!

இந்திய நிலைமைகளில் இதை யோசித்துப் பார்த்தால்... நிலைமை மிக மோசமாக இருக்கிறது. ஊடகங்கள் பச்சையாக மிரட்டப்படுகின்றன. நேர்மையான பத்திரிகையாளர்கள் வேலையில் இருந்து தூக்கி எறியப்படுகிறார்கள். மிக நெருக்கடியான கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

அவசியமான படம்! பாருங்கள்!

- குருத்து

Sep 14, 2018

உலகம் இரண்டு: சிறையும் இரண்டு!


நேற்று புழல் சிறையில் தண்டனை கைதிகளுக்கு நிறைய வண்ண தொலைக்காட்சிகள், வசதியான சொகுசு படுக்கை, வாய்க்கு ருசியான வகை வகையான சாப்பாடு என நிறைய படங்கள் வெளியாகியிருக்கின்றன. அதிர்ச்சி அடைந்தது போல ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

2009ல் லஞ்ச ஒழிப்புத்துறை மதியம் சிறையை சோதனை செய்ய அனுமதி கேட்ட பொழுது வேண்டுமென்றே அரை மணி நேரத்திற்கும் மேலாக இழுத்தடித்து தான் உள்ளே அனுமதித்தார்கள். அதற்கு பிறகும், துணை ஜெயிலர் அறையிலேயே 21 ஆபாச சிடிக்கள் கிடைத்தன. நான்கு கைதிகளின் அறையில் கேபிள் டிவி இணைப்புடன் தொலைக்காட்சிகள் இருந்திருக்கின்றன. இதையெல்லாம் அந்த அரை மணி நேரத்தில் அவர்களால் ஒளித்து வைக்கமுடியவில்லை.

இந்த சோதனைக்கு முதல்வாரம் தான் துறை வாரியான சோதனையின் பொழுதே... 30க்கும் மேற்பட்ட செல்போன்கள், 2 பென்டிரைவர்கள், 12 கிலோ கஞ்சா சிக்கியிருந்தன

வருடங்கள் உருண்டோட எல்லாமும் வளர்கின்றன.

1950களில் கம்யூனிஸ்டு கட்சி தடை செய்யப்பட்டு அரசால் கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப்பட்ட காலம். சி.. பாலன் தனது சிறைவாழ்க்கையை#தூக்குமர நிழலில்என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
சிறைக்குள் ஐந்நூறு பீடிகளைக் கடத்திக்கொண்டு வந்துவிட்டால், அவற்றின் சொந்தக்காரனால், பல காரியங்களைச் சாதிக்கமுடியும். ஏனென்றால், சிறைச்சாலைக்குள் பண்டம் பரிவர்த்தனைக்காகப் பயன்படுத்தப்படும் நாணயம் பீடிதான். அன்று கோயமுத்தூர் ஜெயிலில் நிலவிய விலைவாசிப் புள்ளி விவரங்கள் கீழே தரப்படுகின்றன.

8 அவுன்ஸ் பால்                          - 4 பீடி
4 அவுன்ஸ் மாமிசம்                  - 5 பீடி
6 அவுன்ஸ் சோற்றுப்பட்டை - 6 பீடி
10 அவுன்ஸ்
நல்லெண்ணெய்                          - 4 பீடி
ஒரு மேல் சட்டையும்
ஒரு கால்சட்டையும்                – 25 பீடி

சிறையில் எளியவனுக்கு எந்த வசதியும் இல்லை. அவர்களின் குடும்பம் வாங்கிச் செல்கிற ஒரு ப்ரெட் பாக்கெட்டையோ, ஒரு பிரிட்டானியா பிஸ்கெட் பாக்கெட்டையோ போலீசுகாரர்கள் பிதுக்கி பிதுக்கி பார்த்து நொந்து போக வைப்பார்கள்.

உலகம் ஏற்றத்தாழ்வுகளால் நிரம்பி வழிந்து, இரண்டு உலகமாக இயங்கும் பொழுது, சிறை மட்டும் ஒன்றாகவா இயங்கும்!

- குருத்து