Sep 6, 2016

நிதானமில்லாத குடிமகனும் நிதானமான அரசும்!



இரவு 8.30 மணி. வில்லிவாக்கத்தில் உள்ள பிரதான சாலையில் ஒரு பேருந்து பின்புறம் வந்துகொண்டிருந்தேன். திடீரென பேருந்தில் இருந்து பார்சல் போல ஏதோ ஒன்று விழுந்தது. இருட்டில் தெளிவாக தெரியவில்லை. சில விநாடிகளில் அருகில் போய் பார்த்தால் ஒரு மனிதர் குப்புற விழுந்து கிடக்கிறார். பேருந்தில் இருந்து விழுந்தது கூடவா பேருந்தில் உள்ள யாருக்கும் தெரியாது!

விழுந்த சில விநாடிகளில் என்னைப் போலவே இன்னும் இருவர் அருகில் வர அவரை சோதித்தால் டாஸ்மாக் வாடை குப்பென்று அடித்தது. கொஞ்சம் வயிறு ஏறி இறங்குவது தெரிந்தது. இன்னும் உயிர் இருக்கிறது. ஒருவர் 108க்கு போன் அடித்து விவரத்தை சொன்னார். ஒருவர் தண்ணீர் பாட்டில் வாங்கி வந்து முகத்தில் இரண்டு மூன்றுமுறை அடிக்க, மலங்க மலங்க விழித்தார். அவர் எப்படி விழுந்தார் என யாரும் பார்த்திருக்கவில்லை. அவரிடம் கேட்டால், போதையும், விபத்தும் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் பதில் சொல்லமுடியவில்லை. பேருந்தில் இருந்து விழுந்ததை அங்கிருப்பவர்களுக்கு சொன்னேன்.

சில நிமிடங்களில் அங்கு கடந்து போன போலீஸ் ஜீப்பிலிருந்து ஒரு போலீசு இறங்கி வந்து, விவரத்தை கேட்டு, யாருக்கோ தகவல் சொன்னார். இன்னும் சில நிமிடங்கள் கழித்து ஆம்புலன்ஸ் வந்தது!

விழுந்த சில நிமிடங்களில் எங்களுடன் நின்றிந்த ஒருவர் “எதிரில் கடை அருகே நாலைந்து பேர் நின்றிருந்தாலும், வந்து உதவவில்லையே என மிகவும் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். சில நிமிடங்கள் கழித்து அந்த ஆட்கள் அருகில் வந்து ஒரு சலம்பிக்கொண்டிருந்தனர். எல்லோரும் போதை.

ஒருவர் போதையிலிருந்தால் அவர் இயல்பு மீறி செய்கிற எல்லா செய்கைகளும் நமக்கு எரிச்சலை தருகின்றன. அன்றைக்கு ஒரு நாள் இரவு 10.30 மணியிருக்கும். உடுமலைப் பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பி 15 நிமிடம் ஆகிவிட்டது. நடத்துநர் அந்த நல்ல போதையிலிருந்த 45 வயது குடிமகனிடம் பயணச்சீட்டுக்கான பணம் கேட்கும் பொழுது அவரிடம் பணம் மிக குறைவாக இருந்தது. எந்தவித யோசனையும் செய்யாமல் இதுதான் நீங்க இறங்க வேண்டிய இடம் என அந்தகார இருட்டில் இறக்கிவிட்டு போய்க்கொண்டேயிருந்தார்கள்.

இப்படி ‘குடி’மகன்களிடம் கோபப்படும், புறக்கணிக்கும் நாம், வீடுகளுக்கு, வழிப்பாட்டு தலங்களுக்கு அருகே, மக்கள் கூடுமிடங்களுக்கு அருகே கடைகளை வைத்து தொல்லை தரும் அரசிடம் கோபப்படுகிறமோ என்றால் இல்லை. நிதானமாக இருந்துகொண்டு குடிமகன்களையும், அவர்களுடைய குடும்பங்களை சீரழிப்பவர்களான அரசும் மீதும், ஆளும்கட்சிகாரர்கள் மீதும் மீது கோபம் வருவதை தடுப்பது எது?

10 பேர் நண்பர்கள். அத்தனை பேரும் குடித்தால் கூட நீ ஒழுங்காக இருக்கவேண்டும் என நினைத்தால் குடிக்காமல் இருக்கலாம் என என் அம்மா வாதாடுவார். காற்றே நச்சாக இருக்கும் பொழுது, எப்படி நல்ல காத்து சுவாசிப்பது என்பேன். எங்க அம்மாவை போலவே பலரும் சிந்திப்பார்கள் போல!

 (படங்கள் இணையத்திலிருந்து எடுத்தது)