Dec 11, 2017

பருத்திப்பாலும் போலீசுகாரரும்!


பருத்திப்பால்.  மதுரை சிறப்புகளில் ஒன்று. பிரியா திரையரங்கு வாசலிலும், நடனா திரையங்கு (இப்பொழுது இல்லை) போகிற வழியிலும் இருவரும் விற்றுக்கொண்டிருப்பார்கள்.  அந்த பக்கம் போகும் பொழுதெல்லாம் தவறாமல் குடிப்பதுண்டு.
பருத்திவிதை, அரிசிமாவு, (மண்டை) வெல்லம், தேங்காய், ஏலக்காய், - கலவையில் அருமையாக இருக்கும்.  உடம்பு சூட்டை குறைக்கவல்லது. வயிற்றுப்புண்ணுக்கு நல்லது.
சென்னையில் அம்பத்தூரில் ஒரு பெரியவரும், பாடி பிரிட்டானியா அருகே ஒரு பெரியவரும் பருத்திப்பால் விற்றுவருகிறார்கள். எப்பொழுதும் இரண்டு, மூன்று பேர் குடித்துக்கொண்டிருப்பார்கள். தேநீர் குடித்து சோர்வானவர்கள் பருத்திப்பால் அருந்தி பாருங்கள். தொடர்ந்து அருந்துவீர்கள்.  

அது சரி! பருத்திப்பாலுக்கும் போலீசுகாரருக்கும் என்ன சம்பந்தம்?

பருத்திப்பால்காரரிடம் இன்னொருவர் பேசிக்கொண்டிருந்தார். 
”பைக்கில் வரும் போலீசு பெட்ரோலுக்கு அரசாங்கம் கொடுக்கிற காசு பத்தலையாம்.  அதனால், மாசம் 200 ரூபாய் மாமூல் கேட்டாங்க!”
“எங்க பகுதியில் மாசம் 300ரூபாய். நீங்க 200 ரூபாய் தான் தர்றீங்க! பரவாயில்லையே” என்று குறுக்கிட்டு சொன்னேன்..  
”அட போங்க தம்பி!  போகும் பொழுதும், வரும் பொழுதும், ஒரு நாளைக்கு மூணு, நாலு கப் (ஒருகப் 10ரூ) ஓசியில்ல குடிச்சுட்டு போயிராங்க.  கணக்குப்பார்த்தா அதுவே மாதம் ரூ. 1000’ வந்துரும்” என்றார்.
பெருகிவரும் குற்றங்களை குறைப்பதற்காகவும், மக்களுக்கும் காவல் துறைக்குமான ’இடைவெளியை’ குறைக்கிறதுக்கு தான் இவர்கள் என்று பீட் ஆபிசர்களை அறிமுகப்படுத்தும் பொழுது ரெம்ப கெத்தா சொன்னாங்க!
பார்த்தா பெட்ரோலுக்கு காசில்லைன்னு வியாபாரிகள் கிட்ட போலீசு பிச்சை எடுக்குதுக!  நமக்கு என்ன கவலைன்னா, நம்ம முதல்வர் எடப்பாடியும், துணைமுதல்வர் ஓபிஎஸ்யும் ரெம்ப மானஸ்தவர்கள் ஆச்சே!  மக்களுக்கு சேவை செய்ய, பெட்ரோலுக்கு காசில்லாம நம்ம போலீசு இப்படி மக்கள்கிட்டேயே பிச்சை எடுக்கிறது தெரிஞ்சா, நாண்டுகிட்டு செத்துறவாங்களேன்னு தான்!

Nov 17, 2017

தீரன் - ஒரு கேள்வி!

நெடுஞ்சாலையோரம் உள்ள தனியாக உள்ள வீடுகளில், கொடூரமாக கொலைகள் செய்து, கொள்ளையடிக்கிறது ஒரு கும்பல்.
ஒரு டிஎஸ்பி தனது குழுவினருடன் தொடர்ந்து உழைத்து கும்பலை பிடிப்பது தான் கதை.
நேர்த்தியான திரைக்கதை. எல்லோரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.
என் கேள்வி. அந்த கொடூர கும்பல் தற்செயலாக, விசாரணயில் ஈடுபட்டிருக்கும் போலீசு வீட்டிலும் கொலை, கொள்ளை செய்கிறது.
ஒருவர் தன் கடைமையை விடாப்பிடியாக செய்வதற்கு, தன் சொந்த இழப்பு இருந்தால் தான் செய்யமுடியுமா என்ன? படத்தில் செண்டிமெண்டுக்காக இப்படி தொடர்ந்து செய்கிறார்கள்.
பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபடுகிற கதாபாத்திரங்களை கூட தனிப்பட்ட இழப்புகளின் பாதிப்பால் தான் செயல்படுகிறார்கள் என்கிற கருத்தை தொடர்ந்து திரைப்படங்களில் செய்து வருகிறார்கள். உதாரணமாக பல படங்களை சொல்லலாம்.

இப்படி சித்தரிப்பது மிக அபத்தம்!  சமூக ஏற்றத்தாழ்வுகளையும், கோளாறுகளையும்  புரிந்துகொண்டு அதை சரி செய்யும் நோக்கத்தில் பலர் சமூக செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.  அவர்களை எல்லாம் தனிப்பட்ட இழப்புகளினால் தான் இப்படி ஈடுபடுகிறார்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கவைக்குமா? இல்லையா?  தொடர்ந்து திரைப்படங்களில் சித்தரிப்பு மூலம் சில விசயங்களை அபத்தமாக புரிந்துகொள்கிறோம் என்பதை படத்திலேயே ஒரு காட்சி வைத்திருப்பார்கள். 

Nov 1, 2017

சகாயம் சந்தித்த சவால்கள்! – ஒரு பார்வை!

ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் லஞ்சம் தவிர்த்து நேர்மையுடன் பணியாற்றியதால்  23 வருடங்களில், 23 முறை வேலை மாற்றல்கள்!

தரமற்ற பெப்சியை ஆய்வு செய்து, பெப்சி நிறுவனத்தை பூட்டு போட்டது; தலைமை செயலர் வரை பதறிப்போய் சகாயத்துக்கு தொலைபேசியில் பேசியது; அரசு எந்த பத்திரிக்கைகளிலும் அந்த செய்தி வெளிவராமல் பார்த்துக்கொண்டது; உடனே வேறு ஊருக்கு தூக்கியடித்தது – இது ஒரு சம்பவம்!

கள்ளச்சாராயம் காய்ச்சிய கும்பலை கைது செய்ய போய், மாவட்ட ஆட்சியரான சகாயத்தின் மீதே தனக்கு கீழ் உள்ள அலுவலரையே அடித்துவிட்டார் என பொய் வழக்கு போட்டது; சகாயம் சுதாரித்து அதை சாமர்த்தியமாய் எதிர்கொண்டது!- இது ஒரு சம்பவம்!

ஒரு கட்சிக்காரர் வீட்டுவசதிவாரியத்தின் கோடிக்கணக்கான மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமித்துக்கொள்கிறார்.  சகாயம் நடவடிக்கை எடுக்கிறார். உடனே கட்சிக்காரர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அவரை வேறு ஊருக்கு மாற்றுகிறார்.

இப்படி பல சம்பவங்களை சொல்லிக்கொண்டே போகிறார். கூடுதலாக, முன்பெல்லாம் அரசு அலுவலர்கள் அடிப்படை தேவைகளுக்கு லஞ்சம் வாங்கியவர்கள் இப்பொழுது கூடுதலான நுகர்வு தேவைகளுக்கு லஞ்சம் வாங்குவதாக சொல்கிறார்.   இப்பொழுது பெரும்பாலும் லஞ்சம் வாங்குவதாக அவரே சொல்கிறார்.   இதிலிருந்து நமக்கு புரிவதெல்லாம், அரசும், அரசாங்கமும் லஞ்சத்தில்  ஊறித்திளைக்கிறது.  சகாயம் மாதிரி ஆட்கள் எல்லாம் லட்சத்தில் ஒருவர் என சொல்லிவிடலாம்.

என் 10 ஆண்டு கால அனுபவத்தில் 30 வருங்கால வைப்புநிதி (PF Enforcement officers) அதிகாரிகளை பார்த்திருப்பேன். ஒரு ஆள் கூட கை சுத்தமான ஆள் இல்லை. அதே போல இஎஸ்ஐ 30 அதிகாரிகளில் கை சுத்தமான அதிகாரி ஒருவரை மட்டுமே சந்தித்தேன். அவர் பெயர் துரைராஜ்.  அதே போல விற்பனை வரி துறையில் ஒரு நேர்மையான அதிகாரி கூட பார்த்ததில்லை. இதே போலவே கலால் வரி துறையிலும்!

இந்த அரசை ஆளும் வர்க்கம் .இயக்கிக்கொண்டிருக்கிறது என சொன்னால், அதன் நடைமுறை என்பது, தரகு முதலாளிகளும், நிலச்சுவாந்தாரர்களும் தங்களுக்கான வேலைகளை முடிக்க அரசையும், அரசாங்கத்தையும் லஞ்சத்தின் மூலமாக தான் காரியம் சாதித்துக்கொள்கிறார்கள்.  ஆக உடைமை சமுதாயம் நீடிக்கும் வரைக்கும் லஞ்சம் நீடிக்கும் என்பது தான் யதார்த்தம்.  அதாவது மூக்கு உள்ளவரை சளி இருக்கும் என்பது தான்!

ஆக, சகாயம் பக்கத்துக்கு பக்கம் சொல்கிறபடியே இந்த அரசும், அரசாங்கமும் மாற்றவே முடியாத அளவிற்கு புரையோடி போய்விட்டதையும், பெரும்பாலான மக்களுக்கு எதிராக நிற்பதையும்தான் நிரூபிக்கிறது.   ஆனால், சகாயமோ இளைஞர்களை அணிதிரட்டி ’மக்கள் பாதை’ என்ற அமைப்பை உருவாக்கி, கடந்த சில ஆண்டுகளாக இந்த இத்துப்போன அரசமைப்பை மாற்றலாம் என நம்பிக்கை தந்து வழிநடத்திக்கொண்டிருக்கிறார். இதுதான் பெரிய நகைமுரண்.

மேலும், சகாயத்தின் பெற்றோர்களை அறிமுகப்படுத்தும் பொழுது, உபகாரம் பிள்ளை என குறிப்பிடப்பட்டுள்ளது. சகாயம் சொன்ன மாதிரி “ என்னோட ரோல் மாடல் எங்க சித்தப்பா அருளாந்து பிள்ளை” என எந்தவித தயக்கமில்லாமல் சொல்லியிருக்கிறார். சாதியக்கண்ணோட்டம் கோளாறு தான்!

- வெளியீடு : ஆனந்தவிகடன்

விலை ரூ. 95

பக்கங்கள் : 96

நூல் ஆசிரியர் : கே. ராஜா திருவேங்கடம்

- குருத்து

Oct 21, 2017

தீப ஒளி : பலகாரங்கள் இனிப்பதில்லை!

ஐந்து குழந்தைகளுடன்
எப்பொழுதும்
பற்றாக்குறைகளுடன்
போராடும் அம்மாவுக்கு
பண்டிகை வந்தாலே பதட்டமாகிவிடும்!


பொறுப்பை தட்டிகழிக்கும் அப்பாவோ
"எல்லாவற்றையும்
துணைவியார் பார்த்துக்கொள்வாள்!" என
நழுவிக்கொள்வார்.

வாராவாரம் சிறுக சிறுக சேமித்து
கட்டிய பண்டுதான்
பலகாரங்களுக்கு பொருட்கள் தரும்!

குறைந்தபட்ச வட்டி கடனில்
சொசைட்டி தான் அனைவருக்கும்
துணி வழங்கும்!

தைக்க, இதர செலவுகளுக்கு
வட்டிக்கு வாங்கும் கடன் தான் சமாளிக்கும்!

எங்கு சென்றாலும்
அம்மாவுக்கு கடைக்குட்டி
நான் தான் துணை!

அம்மா எதிர்கொள்ளும் - அத்தனை
சங்கடங்களுக்கும்
சிரமங்களுக்கும்
கண்ணீருக்கும்
நானே மெளன சாட்சி!

பண்டிகையில் செய்யப்படும்
இனிப்புகள்
எப்போதும் அம்மாவிற்கு
இனிப்பதேயில்லை!
அம்மாவிடம் பட்டாசு கேட்க
வாய் வருவதேயில்லை

- குருத்து

Aug 1, 2017

யூ டர்ன் - ஒரு பார்வை!

பெங்களூரு பிரதான மேம்பாலத்தில் சுற்றிப் போவதற்கு சங்கடப்பட்டு, கற்களை நகர்த்தி யூ டர்ன் எடுத்து பறக்கிறார்கள் பைக்வாசிகள்.
விதிமீறும் இவர்கள் ஒவ்வொருவராக மர்மமாக மரணிக்கிறார்கள். ஏன் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லி இருக்கிறார்கள்.
'லூசியா' தந்து ஆச்சர்யப்படுத்திய கன்னட இயக்குநரின் இரண்டாவது படம்.
சுரங்கங்களை முழுங்குனவன், பல கோடிகளை லஞ்சம் வாங்குனவெல்லாம் வெள்ளையும் சொள்ளையுமா சுதந்திரமா சுத்தும் பொழுது, முதலாளி திட்டுவார் என அவசரமாய் செல்கிறவர்களை கொல்வது எல்லாம் ரெம்ப அக்கிரமம். நம்ம ஊர் சங்கர் சட்டியில் போட்டு வறுப்பார். இவர் டீஸண்ட். வலிக்காமல் கொன்றுவிடுகிறார்.
உண்மை சம்பவம் என படத்தின் இறுதியில் பாலத்தில் விதி மீறி செல்பவர்களை காட்டுகிறார்கள்.
பல உயிர்களை பலி வாங்கும் பாலத்தில் ஒரு அடி சுவர் எழுப்புவது அரசாங்கத்தின் வேலைதானே! அது என்ன தனிநபர் செய்கிற காரியமா? ஒரு இடத்திலும் இயக்குநர் வாயை திறக்கவேயில்லை

Jul 10, 2017

அத்தை

அத்தை!

ஒவ்வொரு அத்தைக்கும்
ஒவ்வொரு சிறப்புண்டு!

'என்ன மருமகனே!'
என அழைப்பதில்
அத்தனை அன்பு ததும்பும்!

"எனக்கு ஒரு பொண்ணு இருந்தா
உனக்குத்தாண்டா கட்டிக் குடுத்திருப்பேன்" 
எப்பொழுதும் வாஞ்சையுடன் சொல்வார்
ராக்கு அத்தை!

அத்தைகளின் அன்பை
இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே
எல்லா அத்தைகளின் பெண்களையும் 
கட்டிக்கொள்ளவேண்டும் என 
நினைத்த காலம் உண்டு! 😜

சொந்த ஊர் பாசத்தில்
அத்தைகளின் அளவில்லாத 
அன்பும் உண்டு!

எந்த அத்தை பெண்ணையும் கட்டாமல்
சாதி மறுப்பு திருமணம் செய்த பொழுதும்
வருத்தம் இருந்தாலும்
மாறாத அன்பு காட்டினார்கள்.

பிச்சை அத்தை கோரவிபத்தில் 
இறந்த பொழுது கலங்கிபோனேன்.
கால இடைவெளியில் 

அத்தைகள் மறையும் செய்திகள் 
வந்து கொண்டே இருக்கின்றன!
அத்தைகள் இல்லாத உலகத்தை
நினைத்துப் பார்ப்பது 
சிரமமாய் இருக்கிறது! 

Mar 20, 2017

பூனைகள்

திடீரென தெருவில் தோன்றிய
பெரியபூனை, குட்டிப்பூனை இரண்டும்
பத்து நாட்களாக வீடு தேடி அலைகின்றன!

ஆபத்து காலத்தில்
எங்க முருங்கை மரத்தில்
ஏறிக்கொள்கிறது குட்டிப்பூனை!
எதனுடனோ சண்டை போட்டு
உடம்பெல்லாம் காயம்.
முனகலோடு சுற்றிவருகிறது
பெரியபூனை!

வாடகை, காற்றோட்டம், நீர்
வீட்டுக்காரர் என எல்லாம்
பொருந்தி வருவது
வரன் அமைவது போல
வீடு அமைவது மனிதர்களுக்கே
ஆக சிரமமான காரியம்!

வீட்டில் செல்லப்பிராணிகள்
வளர்த்ததில்லை
உங்களுக்கு சோறுபோடுவதே
பெரிய விசயம்டா என்பார் அம்மா.

அடைக்கலம் கொடுக்கலாம் என்றால்
வீட்டில் உள்ளவர்களுக்கோ
பூனை அலர்ஜி!
மீறி சேர்த்தால்
நானும் பூனைகளுடன்
தெருவில் சுற்றவேண்டியிருக்கும்

நிம்மதில்லாத பூனைகளுடன்
என் நினைவுகளும்
அலைந்துகொண்டேயிருக்கின்றன.

தொடர்ந்து பிரேக்கிங் நியூஸ் பார்ப்பதால்
சின்னம்மாவிடம் பூனைகளை தரலாம்
என தோன்றுகிறது!
பேச்சுத்துணைக்கு ஆகும்!

Mar 5, 2017

விலையில்லா மின்விசிறி!

தரும் பொழுது பெட்டியில்
கெத்தாக தான் தந்தார்கள்.
எல்லா பாகங்களும் உள்ளே
தனித்தனியாக கிடந்தன.
மூன்றுமாதம் கிடப்பில் போட்டு - பிறகு
எலக்ட்ரிசன் உயிர் தந்தார்.

தொட்டா சிணுங்கி போல
அடிக்கடி சொணங்கி படுத்துக்கொள்ளும்!
மருத்துவருக்கு பீஸ் அழுதால் மீண்டும் ஓடும்!

மூலையில் கிடந்ததை பார்க்கும் பொழுதெல்லாம்
ரத்த அழுத்தம் எகிறும்!
ஜெ. செத்த பிறகு ...
தூக்கி எறிந்துவிடலாம் என முடிவு செய்தேன்.
எலக்ட்ரிசன், காயிலான் கடைக்காரர் இருவருமே
ஒற்றுமையாய் ரூ. 50 என்றன‌ர்.
விலையில்லா விசிறிக்கு
பணம் தருவது எவ்வளவு பெருந்தன்மை!
வாங்கிகொண்டு திரும்பி பார்க்காமல் வந்துவிட்டேன்!