Dec 20, 2010

ஆத்தங்கரையோரம்! - நாவல் அறிமுகம்!


"அருமையான நாவல் படியுங்கள்" என நண்பர் தந்தார். படிக்க துவங்கி, இரண்டு நாள்களில் முடித்துவிட்டேன். நான் வெகுவிரைவாக படித்த நாவல்களில் இதுவும் ஒன்று.

ஒரு ஆறு. அதன் குறுக்கே அணைக்கட்ட அரசு தீர்மானிக்கிறது. எழும் அணையால் பல கிராமங்கள் நீரில் காணாமல் போகும் நிலை. அரசு அங்கு வாழும் பழங்குடி கிராம மக்களை அப்புறப்படுத்த முயல்கிறது. பாதிக்கப்படும் மக்கள் அரசை எதிர்த்துப் போராடுகிறார்கள் என நகர்கிறது நாவல்.

பழங்குடி மக்களின் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை, அரசின் பிரதிநிதிகள் மக்களுக்கு மாற்று வாழ்வாதாரம் உருவாக்கி தருகிறோம் என ஏமாற்றி அப்புறப்படுத்துவது, ஏற்கனவே அங்கிருந்து நகர்த்தப்பட்ட மக்கள் நகரங்களில் அகதிகளாய் அலைவது, நகர மறுக்கும் மக்களின் எதிர்ப்பை அரசு எப்படி கடுமையாக ஒடுக்குகிறது என நாவல் பல விசயங்களை அழுத்தமாக, உணர்வுபூர்வமாக பதிவு செய்திருக்கிறது.

என்.ஜி.ஓக்களுடன் இணைந்து மக்கள் போராடுகிறார்கள். ஓர் இடத்தில் ஒரு அரசு அதிகாரி சொல்வார் "இந்த போராட்டம் மட்டும் நக்சல்கள் கையில் போயிருந்தால்...போராட்டத்தின் திசை வேறு மாதிரி போயிருக்கும்". உண்மை தான். போலீசு, இராணுவம் என கொண்டிருக்கும் சர்வ அதிகாரம் கொண்ட மக்கள் விரோத அரசை எதிர்த்து போராடி, ஜெயிக்க வேண்டுமென்றால், சமரசம் செய்து கொள்ளாத, உழைக்கும் மக்களின் நலன் மீது அக்கறை கொண்ட, சமூக மாற்றத்தை நோக்கமாக கொண்டுள்ள ஒரு புரட்சிகர கட்சி இருந்தால் மட்டுமே சாத்தியம். நாவலை படித்து முடிக்கும் பொழுது, அந்த முடிவுக்கு நீங்கள் நிச்சயம் வந்தடைவீர்கள்.

படிக்கும் பொழுது, நர்மதா நதியின் குறுக்கே கட்டப்படும் அணைக்கு எதிராக பல ஆண்டுகளாக மக்கள் நடத்தும் போராட்டம் தான் நினைவுக்கு வந்தது.

சின்ன சின்ன வெளிச்சங்கள், கட்டுரை தொகுப்புகள் என இறையன்பு ஐ.ஏ.எஸ். எழுதிய புத்தகங்களை வாசித்திருக்கிறேன். இந்த நாவலை தயங்காமல் அவருடைய 'மாஸ்டர் பீஸ்' என்பேன். நாவல் வெளிவந்து ஆண்டுகள் பலவாகிவிட்டன. நியூ செஞ்சுரி புக ஹவுஸ் வெளியிட்டு இருக்கிறார்கள்.

பின்குறிப்பு : அணையோ, வளர்ச்சியோ வேண்டுமென்றால், சில ஆயிரம் மக்கள் பாதிக்கப்படத்தான் செய்வார்கள் என ஒற்றை வரியில் கடந்து போனீர்கள் என்றால்...சிரமம். நீங்கள் எழுப்புகிற பல கேள்விகளுக்கு நாவல் விடை தரும். நாவலை படித்துவிட்டு வாருங்கள். நாம் விவாதிக்கலாம்.

Dec 4, 2010

பாபா சாகேப் அம்பேத்கர் - திரைப்படம்!


பல போராட்டங்களுக்கு பிறகு படம் வெளிவந்திருக்கிறது. படம் பார்த்த உணர்வில், உடனடியாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் உங்களோடு சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

படம் அம்பேத்கர் வெளிநாட்டில் கல்வி கற்கும் காலத்திலிருந்து துவங்குகிறது. படிப்பில் மிகுந்த கவனம் செலுத்துகிறார்.

எல்லா மக்கள் தலைவர்களையும் போலவே தன் சொந்த குடும்பத்தை கவனிக்காமல் இருக்கிறார். தன்னுடைய நான்கு குழந்தைகளையும் இழந்தது மிகப்பெரிய சோகம்.

தாழ்த்தப்பட்டவர்களை திரட்டி, பொதுக்குளத்தில் தண்ணீர் அருந்துவது, கோவில் நுழைவு போராட்டம், தேர் இழுக்கும் போராட்டம், புத்த மதத்தை தழுவுவது என நமக்கு அம்பேத்கரைப் பற்ற அறிந்த விஷயங்களின் தொகுப்பாக இருந்தாலும் படமாக்கிய விதம் நன்றாகவே இருந்தது.

காந்திக்கும், அம்பேத்கருக்கும் இருந்த முரணை நன்றாக படம் பிடித்து காட்டியிருக்கிறது படம்.

அம்பேத்கார் 'மகர்' (தாழ்த்தப்பட்ட) சாதியா? எனக்கு தெரியாதே! என காந்தி கூறுகிற பொழுது.. திரையரங்கில் கைத்தட்டு.

சில முக்கிய விஷயங்களை, மேலோட்டமாக சொல்லியிருப்பது போல் தோன்றுகிறது.

மொழிமாற்றுப் படம் என்றாலும், நிறைய அந்நியமாக தெரியவில்லை. ( பிடித்த அரசியல் ஆளுமை என்பதாலும் இருக்கலாம்.) டாகுமென்டரி போல இருந்துவிடுமோ என பயந்தேன். ஒரு படத்திற்குரிய அனைத்து தகுதிகளுடன் எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழில் எடுத்திருந்த 'பெரியார்' படத்தை விட மொழிமாற்றுப் படமான 'அம்பேத்கர்" சிறப்பாகவே இருந்தது.

மத்திய அரசின் சமூக நீதித்துறையும், தேசிய திரைப்பட வளர்ச்சி கழகமும், மகாராஷ்டிர அரசும் சேர்ந்து எடுத்திருந்த படம் என்பதால், சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த கலை இயக்கம் என மூன்று தேசிய விருதுகளை தந்துவிட்டார்களோ என எண்ணினேன். படம் அந்த எண்ணத்தை மாற்றியது.மம்முட்டியின் நடிப்பு அருமை. கட்டபொம்மன் என்றால் சிவாஜி நினைவுக்கு வருவது போல, இனி அம்பேத்கர் என்றால் மம்முட்டி நினைவிற்கு வருவார்.

அம்பேத்கர் தன் கொண்டிருந்த கொள்கைக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடி இருக்கிறார் என்பதை படம் உணர்த்தியது. மொத்தத்தில் படம் எனக்கு பிடித்திருந்தது. கூடுதலாக அம்பேத்கர் பற்றி தேடிப்படிக்க வேண்டும் என்ற ஆவலையும் படம் தூண்டியது.

Nov 16, 2010

அயோத்தி தொடர்பான பதிவுகள்!

முன்குறிப்பு : அயோத்தி தொடர்பான செய்திகளை படிப்பதற்காக தேடும் பொழுது.. இந்த பதிவுகள் கண்ணில்பட்டன. ஒரு தொகுப்புக்காக இங்கே இணைப்புகள் தருகிறேன். தேவையுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

*****

Oct 27, 2010

அருந்ததிராயை ஆதரிப்போம்!


அருந்ததி ராயின் அறிக்கை :

நான் இதை காஷ்மீரில் இருக்கும் ஸ்ரீநகரிலிருந்து எழுதுகிறேன். காஷ்மீரைப் பற்றி அண்மையில் நடத்தப்பட்ட கூட்டங்களில் நான் பேசியவற்றுக்காக நான் கைதுசெய்யப்படலாம் என இன்றைய செய்தித் தாள்கள் கூறுகின்றன. இங்கிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் சொல்வதைத்தான் நான் சொன்னேன். பல்வேறு அரசியல் நோக்கர்களும் பல ஆண்டுகளாகச் சொல்லியும் எழுதியும் வருவதைத்தான் கூறினேன். நான் பேசியவற்றின் எழுத்து வடிவத்தைப் படிப்பவர்கள் அவை அடிப்படையில் நீதிக்கான அழைப்புகள் என்பதை உணர்வார்கள். உலகிலேயே மிகவும் மோசமான ராணுவ ஆக்கிரமிப்பின்கீழ் வாழும் காஷ்மீர் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்;

தங்களது தாய்மண்ணிலிருந்து விரட்டப்பட்ட துயரத்தோடு காஷ்மீருக்கு வெளியே வாழ்ந்துகொண்டிருக்கும் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு நீதி கிடைக்கவேண்டும் ; தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் குப்பைகளுக்குக் கீழே மறைந்துகிடக்கும் புதைகுழிகளைப் பார்த்தேனே காஷ்மீரில் கொல்லப்பட்ட தலித் ராணுவ வீரர்கள், அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்; இந்த ஆக்கிரமிப்புக்கான விலையைக் கொடுத்துக்கொண்டிருக்கும் , இப்போது போலீஸ் ராச்சியமாக மாறிவிட்ட நாட்டில் பயங்கரங்களுக்கிடையே வாழப் பழகிக்கொண்டிருக்கும் இந்திய நாட்டின் ஏழை மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றுதான் நான் பேசினேன்.

நேற்று தெற்கு காஷ்மீரில் இருக்கும் ஆப்பிள் நகரமான ஷோபியானுக்கு நான் போயிருந்தேன். அங்குதான் ஆசியா , நிலோஃபர் என்ற இரண்டு இளம்பெண்களின் சடலங்கள் அவர்களின் வீடுகளுக்கு அருகில் ஒரு ஓடையில் கண்டெடுக்கப்பட்டன . குரூரமாக அவர்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டில் நாற்பத்தேழு நாட்கள் அந்த நகரம் மூடப்பட்டுக் கிடந்தது. அவர்களைக் கொன்றவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. நிலோஃபரின் கணவரும் ஆசியாவின் சகோதரருமான ஷகீலை நான் சந்தித்தேன்.இந்தியாவிடமிருந்து நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துபோன, சுதந்திரம் ஒன்றுதான் ஒரே நம்பிக்கை என்று கருதுகிற மக்கள் துக்கத்தோடும் கோபத்தோடும் நாங்கள் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றிச் சூழ்ந்திருந்தார்கள்.

கல்வீசியதற்காக துப்பாக்கியால் சுடப்பட்டு கண்களுக்கிடையே தோட்டாவால் துளைக்கப்பட்ட இளைஞர்களை சந்தித்தேன். என்னோடு பயணம் செய்த இளைஞர் ஒருவர் அனந்த்நாக் மாவட்டத்தில் இருக்கும் தனது நண்பர்களான ‘ டீன் ஏஜ்’ இளைஞர்கள் மூன்றுபேரை எப்படி விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள் கல் வீசியதற்காக அவர்களது விரல் நகங்கள் எப்படி பிடுங்கப்பட்டன என்பதை விவரித்தார்.

‘ வெறுப்பைக் கக்கும் பேச்சை நான் பேசியதாக நாளேடுகளில் சிலர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இந்தியா சிதைவதை நான் விருபுவதாகச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதற்கு மாறாக எனது பேச்சு அன்பிலிருந்தும் பெருமிதத்திலிருந்தும் வருகிறது. நாங்கள் எல்லோரும் இந்தியர்கள்தான் என அவர்களைப் பலவந்தப்படுத்திச் சொல்லவைக்கவேண்டும் என்பதற்காக அவர்களது விரல் நகங்களைப் பிடுங்கவேண்டாம்; கற்பழிக்கவேண்டாம் , படுகொலை செய்யவேண்டாம் என்ற உணர்விலிருந்து வருகிறது. நீதி விளங்கும் ஒரு சமூகத்தில் வாழவேண்டும் என்ற விருப்பத்திலிருந்து வருகிறது. தமது எண்ணங்களைப் பேசுகிற காரணத்தால் எழுத்தாளர்களை மௌனிகளாக்கி வைக்க இந்த தேசம் விரும்புகிறது என்பது பரிதாபகரமானது. நீதி கோருபவர்களை சிறையில் அடைக்க இந்த நாடு முயற்சிக்கிறது, ஆனால் மதவெறிக் கொலைகாரர்கள் ; இனப்படுகொலைகளைச் செய்தவர்கள் ; கொள்ளைக்காரர்கள்; கற்பழிப்பவர்கள் , ஊழல் செய்பவர்கள், ஏழைகளிலும் ஏழையான மக்களைச் சுரண்டுபவர்கள் போன்றவர்களெல்லாம் இங்கே சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

அக்டோபர் 26, 2010

அருந்ததி ராய்

Jan 21, 2010

'கிரீன் ஹண்ட்' - எதிர்ப்பியக்க கருத்தரங்கம்!


பழங்குடிகள்-மீனவர்கள் விவசாயிகள் மீதான போர்தான்
அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!


கருத்தரங்கம்

நாள்: 23.01.2010
நேரம்: மாலை 4 மணி

இடம்:சைதை வர்த்தகசபை,
(சைதை காவல் நிலையம் பின் புறம்)
சைதாப்பேட்டை, சென்னை.

தலைமை:தோழர் வெங்கடேசன்
செயலர். ம.க.இ.க, சென்னை

உரையாற்றுவோர்:

திரு.எஸ்.எஸ். ராஜகோபாலன்
கல்வியியலாளர், சென்னை.

திரு.அரங்க.சம்பத்குமார்
வழக்குரைஞர், சென்னை உயர்நீதி மன்றம்.

திரு.த.வெள்ளையன்
தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை

தோழர் வெ.பழனிநாதன்
மாநில இணைச்செயலர்,
பு.ஜ.தொ.மு

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிகர கலை நிகழ்ச்சி
நடைபெறும்.

அனைவரும் வருக‌
-
மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னணி
-
தொடர்பு கொள்ள:

ம.க.இ.க : 94446 48879
பு.மா.இ.மு : 94451 12675
பு.ஜ.தொ.மு : 94448 34519
பெ.வி.மு : 98849 50952.