May 30, 2016

அரசியல் சிந்தனையாளர், எழுத்தாளர் காஞ்சா அய்லய்யாவுக்கு பார்ப்பனர்கள் கொலை மிரட்டல்!


காஞ்சா அய்லய்யா இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர், தலித் அரசியல் சிந்தனையாளர், மனித உரிமை செயற்பாட்டாளர். நான் ஏன் இந்து அல்ல, பின் இந்து இந்தியா, அய்யங்காளி போன்ற நூல்களின் ஆசிரியர். அச்சமின்றி பார்ப்பனியத்தை எதிர்த்து பேசி வரும் அறிவு ஜீவிகளில் ஒருவர். தற்போது ஐதரபாத் மௌலானா அபுல்கலாம் ஆசாத் உருது பல்கலைகழகத்தில் சமூக நீதி ஆய்வு மையத்தின் இயக்குநராக பணியாற்றுகிறார்.

விஜயவாடாவில் சி.ஐ.டி.யு ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் ’இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் பரிணாம வளர்ச்சி’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அதில் பார்ப்பனர்கள் உற்பத்தியில் ஒருபோதும் பங்கெடுக்கவில்லை, அவர்களுடைய சமூகம் உடலுழைப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபடவில்லை என குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஊடகமோ பார்ப்பனர்கள் சோம்பேறி சமூகம் என திரித்து எழுதியது.

இதையறிந்த 15 பேர் கொண்ட பார்ப்பன கும்பல் அவருடைய அலுவலகத்தில் அவரை சூழ்ந்து கொண்டு மன்னிப்பு கேட்கும் படி மிரட்டியது. தான் தெரிவித்த கருத்துகளுக்கு அடிப்படை காரணங்களை விளக்கி கூறினாலும் அந்த கும்பல் காது கொடுக்க தயாராக இல்லை. மன்னிப்பு கேட்க அவர் மறுக்கவே, ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் தகாத வார்த்தையால் பேசியும், தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுத்தும் இருக்கிறது.

கடந்த சனிக்கிழமை நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் காஞ்சா அய்லய்யா ’நான் இந்துமதத்தை விமர்சித்து கொண்டு இருப்பதால் சீர்திருத்தம் அடையும் என எதிர்ப்பார்த்தேன் ஆனால் அதன் கலாச்சாரம் இதுவென்றால் ,நான் இந்துமதத்தை பற்றி இனிப் பேசப்போவதில்லை என உடைந்து போய் கூறியுள்ளார். எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நடந்தது காஞ்சா அய்லய்யாவுக்கும் தொடர்கிறது.

தெலுங்கு மொழி பேசும் எழுத்தாளர்கள், அறிவு ஜீவிகள், செயற்பாட்டாளர்கள் என 50 பேர் இந்த கொலை மிரட்டலை கண்டித்து காஞ்சா அய்லய்யாவுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர்.

பார்ப்பனியம் வரலாற்று உண்மைகளை திரித்து எழுதுமே ஒழிய அங்கீகரிக்காது. அப்படி அம்பலபடுத்துவர்களை ஒழித்துக்கட்டும். இதுதான் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, ,ரோஹித் வெமுலா உள்ளிட்ட எண்ணற்ற அறிவுஜீவிகளையும், நாத்திகவாதிகளை காவு வாங்கியதற்கான பின்புலம்.

நாத்திகவாத கண்ணோட்டத்தை அறிவியல் பூர்வமாக விளக்கினால் மத உணர்வை புண்படுத்தி விட்டதாக கூறி மதவெறியர்கள் ஆதாயம் தேட முயல்கின்றனர். இங்கு மட்டுமல்ல வங்கதேசத்திலும் இதுதான் நடக்கிறது. கடந்த 2013ல் இருந்து இதுவரை பத்துக்கும் மேற்ப்பட்ட மதசார்பற்றவர்களும், நாத்திகவாதிகளும் இஸ்லாமிய மதவெறிக்கு பலியாகி உள்ளனர்.
சிந்தனையாளர்கள், அறிவுஜீவிகள், கலைஞர்கள் இல்லாத சமூகம் என்பது ஊனமானது. விலைமதிப்பில்லாத அவர்கள் உயிர் போவதை பார்த்து நாம் மௌனமாக கடந்தோமானால், அது நம்தேசத்தை தற்குறிகள் நிறைந்த தேசமாக மாற்றிவிடும்.

நீதிமன்ற கருப்பு அங்கிகள் காவி உடையை தரிக்கும் தருணத்தில் , இந்துத்துவ கருத்துக்களை பொதுவெளியில் பேசுவதையே ஜனநாயகம் எனப் பொழிப்புரை தருகிறது பார்ப்பனப் பாசிசம்.

அதனால் இந்த அரசு கட்டமைப்பில் நின்று கொண்டு பார்ப்பனியத்தை கூண்டில் ஏற்றிவிட முடியாது. அரசின் அனைத்து உறுப்புகளையும் பயன்படுத்திதான் மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் தப்பிவிக்கப்பட்டனர் என்பது ஒரு வெள்ளிடை உதாரணம். ஆகையால் பார்ப்பன பயங்கரவாதத்துக்கு எதிரான தீர்ப்பு என்பது மக்கள் மன்றத்தில் மட்டுமே கிடைக்கும்.

-மில்ட்டன்,
 செயலர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.

May 12, 2016

தேர்தல் ஜனநாயகம் நிரம்பி வழியும் ஊரில் சுவரொட்டி ஒட்டினால் சிறை!

'நம் சமுதாய மாற்றம் நம் விரலில்’ என முழங்கும் தேசத்தில்...
போலீசின் கொலைவெறி தாக்குதலை கண்டித்து சுவரொட்டி ஒட்டினால் கைது, சிறை!
*****

மே 5- டாஸ்மாக் கடைகளை முற்றுகை நடத்திய பொதுமக்கள், மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது போலீசு கொலைவெறித் தாக்குதலை நடத்தியது. ஊடகங்கள் வழியே நாடே பார்த்தது. இதனை கண்டித்து போஸ்டர் ஒட்டிய பு.மா.இ.மு தோழர்கள் செல்வா மற்றும் மாரிமுத்து ஆகியோரை ஜெயாவின் காவல்துறை ரிமாண்ட்டில் கைது செய்து கருத்துரிமை ஜனநாயகத்தின் மீது கரி பூசியுள்ளது.

இந்த சட்டவிரோத கைதை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் வன்மையாக கண்டிக்கிறது.

தேர்தல் மூலம் ஜனநாயக உரிமையை நிலைநாட்டுகிறோம் எனக்கூறும் தேர்தல் ஆணையம் டாஸ்மாக் மூடும் போராட்டங்களை போலீசின் தடியடி வைத்து நசுக்குவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது வக்கிரமானது.
தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்காக நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூடும் என்கிறது தேர்தல் ஆணையம். ஆனால் டாஸ்மாக் கடை அருகில் வசிக்கும் பெண்கள் தினமும் அச்சத்துடன் கைகளில் மிளகாய் பொடி, கற்கள் எடுத்துகொண்டு பயணிப்பது ஜனநாயகத்துக்கு அசிங்கமில்லையா?
லாக் அப்பில் வைத்து நிராயுதபாணியான தோழர்களை கை,கால்களை உடைத்த மதுரவாயல் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் துணை ஆய்வாளார் செல்லத்துரை உள்ளிட்ட ரவுடி போலீசை சஸ்பெண்ட் செய்!

தேர்தல் ஆணையமே,

மதுரவாயல் ஆய்வாளர் மீதும்,
துணை ஆய்வாளர் செல்லத்துரை மீதும் நீதி விசாரணைக்கு ஆணையிடு!
கைது செய்தவர்களை விடுதலை செய்!

-மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை.

May 8, 2016

அன்புமணி பேட்டி : எங்க தாத்தா ’யானை’ வச்சிருந்தார்!


ஒரு வீட்டில் நுழையும் பொழுதே கண்ணில்படும் உயரத்தில் ஒரு குச்சியை மாட்டி வைத்திருப்பார்களாம். வீட்டிற்கு வருப‌வர்கள் அதைப் பற்றி கேட்கும் பொழுது, ”எங்க தாத்தா ஒரு காலத்தில‌ யானைகள் வைச்சிருந்தார்னு அதை கட்டுப்படுத்துவதற்கான குச்சித்தான் இது!” என விலாவாரியாக 'பழம்பெருமை' பீத்துவார்களாம்.


இன்றைக்கு (08/05/2016) தமிழ் இந்துவில் வெளிவந்துள்ள அன்புமணியிடம் சமஸ் நிகழ்த்திய நீண்ட பேட்டியில், சாதி குறித்தான கேள்விகளில் அன்புமணியின் பதில்கள் அப்படித்தான் இருந்தன!

May 6, 2016

கட்டுப்படியான விலையில் உணவகம் அபூர்வம்!

என் எதிரே அமர்ந்தவரிடம் ’என்ன வேண்டும்?’ என கேட்டான் 18 வயதுள்ள‌ சர்வர் பையன். ’இரண்டு இட்லி’ என்றார். ‘நாலு இட்லி வாங்கிங்க’ என்றான் உரிமையுடன். ’சரி’ என்றார். சில நொடிகளில் ஒரு அக்கா வந்து, மீண்டும் முதலிலிருந்து ‘என்ன வேண்டும்’ என்றார். ஏற்கனவே ஆர்டர் சொல்லிவிட்டேன் என சொல்லாமல், அவரும் முதலிலிருந்து ‘இரண்டு இட்லி’ என்றார். கொஞ்ச நேரத்தில் நாலு இட்லிகளை வந்து தந்தான். (அக்காகிட்ட சொன்னது என்ன ஆச்சு?) இரண்டு வகை சட்னி இருந்தாலும், சாம்பார் தருவது மிக குறைவு. சர்வர் பற்றாக்குறை வேறு. மீண்டும் சாம்பார் என கேட்டால், தருவதற்கு நிறைய நேரம் இழுத்தார்கள். அவர் காத்திருந்து காத்திருந்து 'சர்வீஸ் சரியில்லைங்க' என என்னிடம் நொந்துகொண்டார்.

எதிரே அமர்ந்தவருக்கு ஏற்பட்ட நிலையை கண்டு சுதாரித்து, இரண்டு இட்லி, ஒரு தோசை என்றேன். வழக்கமாக உணவகங்களில் இட்லிகளை தான் முதலில் கொண்டு வருவார்கள். அப்படியே எதிர்ப்பார்த்திருந்தால்,  முதலில் தோசையை தந்தான். நன்றாக இருந்தது. இட்லியை சாப்பிடுவதற்கு வடகறியை ஆர்டர் செய்து வாங்கினேன். வடகறியோடு இட்லியை முழுங்க ரெம்பவும் சிரமப்பட்டேன். வடகறியின் சுவை எனக்கு பிடிக்கலை.

ஒருவழியாக சாப்பிட்டுவிட்டு வந்தால், கேசியரை சீட்டில் காணோம். ஆள் பற்றாக்குறையால், கேசியர் அக்கா பார்சல் கட்டிக்கொண்டிருந்தார். அக்கா வந்து பணம் வாங்கிக்க! என குரல் கொடுத்தான்.

ஆர்டர் எடுக்கும் பொழுது பொறுப்பாக ஒரு பெரிய நோட்டில் குறித்துக்கொண்டான் பையன். ஆனால், சாப்பிட்டு விட்டு, பணம் கொடுக்கும் பொழுது ”நான் மறந்துட்டேன். என்ன சாப்பிட்டீங்க?” என்று திரும்பவும் என்னைக் கேட்டான். சிரித்துவிட்டேன்.

கடை துவங்கி சில காலம் ஆகியிருந்தாலும், இன்னும் இவ்வளவு குறைகள் இருப்பது ஆச்சர்யம் தான்! இன்னொருமுறை வெங்காய ரவா தோசை சாப்பிட்டேன். சுவையாக இருந்தது.

இப்படி சில குறைபாடுகள் இருந்தாலும், கோதுமை, ராகி, ரவா, நெய் தோசை என நிறைய வெரைட்டி வைத்திருக்கிறார்கள். சென்னையில் நமக்கு சுவையும், கட்டுப்படியான விலையும் அமைவது அபூர்வம் தான். இங்கு வடை ரூ.6. தோசை ரூ. 25 என விலையும் இருப்பது மகிழ்ச்சி! :)

May 5, 2016

களம் – ஒரு பார்வை!


சமீபத்திய கடுப்பேத்தும் ’பேய்’ படங்களின் வரிசையில் கடுப்பேற்றாத படம். ரியல் எஸ்டேட் தாதா ஒரு வீட்டை வளைத்துப் போட்டு, தன் மகனுக்கு பரிசாக தருகிறார். அந்த வீட்டில் சில அமானுஷ்ய செயல்கள் தொடர்ந்து பயமுறுத்துகின்றன. அதற்கான காரணத்தை சொல்லி படத்தை முடிக்கிறார்கள்.

நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, கலை என 'மாயா' படத்திற்குரிய அத்தனை நேர்த்திகளும் இந்த படத்தில் இருந்தாலும், திரைக்கதை நொண்டியடிக்கிறது. அமானுஷ்ய செயல்களுக்கு அடிப்படையான அந்த பிளாஷ்பேக் காட்சி அறிவுபூர்வமாக சொல்ல முயன்றதை இன்னும் அழுத்தமாய், உணர்வுபூர்வமாக சொல்லப்பட்டிருக்கவேண்டும். அதனாலேயே சப்பென்று படம் முடிந்துவிடுகிறது.

இயக்குநரே கதை, திரைக்கதை, வசனம் எழுதும் நெருக்கடியை பாக்யராஜ் துவங்கி வைத்தார். சமீபத்திய படங்கள் அதை கொஞ்சம் மாற்ற முயல்கின்றன. அதற்கு இந்த படமும் உதாரணம். நல்ல முன்னேற்றம் தான்!

May 4, 2016

ஏவுகணைகளும் - கவண் கற்களும் !




அடாவடியான வழக்குரைஞர்களை கட்டுப்படுத்தி ஒழுங்கினை நிலைநாட்டவே பார்கவுன்சிலின் வழக்குரைஞர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை - திரைக்கதையின் பொய்மை அம்பலமாகியுள்ளது.

ஆறு மாதங்களாக வழக்கறிஞர்களின் சஸ்பெண்ட் நடவடிக்கையின் பின் நிற்பவர்கள் யார் என்று கழுதையாக கத்தும்போது கேட்க மறந்த காதுகளுக்காக மாண்புமிகு நீதிப்பிரபு ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ”ஆமாம் நாங்கதான் செய்தோமென்று” வழக்கறிஞர்களின் மீதான சஸ்பெண்ட் உத்தரவு மண்டபத்தில் எழுதிக்கொடுத்த ‘தருமி’ யின் கவிதை என்பது எல்லோருக்கும் இலை மறை காயாக தெரிந்தாலும் அந்த “ஈசனே” எழுதியது யாம்தான் என்று சபையில் உரைப்பது தனிச்சிறப்பல்லவா?

" NO MAN SHALL BE JUDGE ON HIS OWN CASE" - இந்த ’மடத்தமான சட்ட மொழியை’ - குப்பையில் போடுங்கள். பதிவாளரை விட்டு புகார் கொடுத்து, பார்கவுன்சிலிடம் சொல்லி சஸ்பெண்ட் செய்து, சரியானதென்று தீர்ப்பும் சொல்லும் ‘சாணக்கிய நீதியை’ சட்டமாக்குங்கள். தசாவதாரம் கமலகாசனுக்கு மட்டும் சொந்தமா என்ன? யார் கேட்பது ‘ராமராஜ்ஜியத்தில்’ இதுபற்றி கம்பரே சொல்லியுள்ளாராம்.

தலைமை நீதிபதி வீட்டில் உச்சா போகும் ‘தொழிலுரிமையைப் பாதுகாப்பதுதான் பார்கவுன்சில் வேலையே தவிர, நீதித்துறை ஊழல் பற்றி பேசினால் எப்படி பொறுத்துக்கொள்வது? குவார்ட்டர் சரக்கும் கோழி பிரியாணியும் தந்து ஜெயித்தது இதற்காகவா?
ஒரு பிரச்சினையை தீர்க்க எளிமையான வழி அதைவிட பெரிய பிரச்சினையை ஏற்படுத்து. நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கேட்டு போராடுவார்களா? வாழ்வுரிமையைப் பறித்து தெருவில் விடுங்கள் சரியாகிவிடும். அற்புதமான உங்களின் கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசெல்லாம் தூசு....

பார்கவுன்சில் செயலாளரை தாக்கிய, பார்கவுன்சில் தலைவர் பதவியை குத்தகைக்கு ஒப்பந்தம் செய்து, அதற்காக வழக்கும் போட்டவர் பார்கவுன்சிலின் தலைவர். அதற்காக ’வாதாடிய லூமினரி’ மூத்த வழக்குரைஞர். இன்னும் இன்னும் உங்கள் தகுதிக்கேற்ப கவனிப்பு....ஆமாம் ‘தகுதி’ மிக முக்கியம்.

போராடும் வழக்குரைஞர்களை எதிர்கொள்ள புரோக்கர் சங்கங்கள், பதவி ஆசை, மிரட்டல், நிர்பந்தம், செண்டிமெண்ட் - ஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆ ’பன்முகத்தன்மை’ கொண்ட நீதிபதி வேலை செய்வது சும்மா இல்லை புரிந்து கொள்ளுங்கள்....

நம்மிடம் முழக்கமிட்டால பதில் முழக்கமிட ‘அணுகுண்டுகள்’ மட்டுமல்ல, அம்பலப்படுத்தினால் ‘போகாதே - போகாதே’ என்று ராகம் போட்டு பாட ’;உண்மையாகவே தொழில் செய்யும் வழக்கறிஞர்களும் (Real Practicing Lawyers) ’ இருக்கின்றனர். தெரிந்து கொள்ளுங்கள்...

வழக்கரிஞர்களின் மீதான குற்றச்சாட்டுகளை பார்கவுன்சில்தான் விசாரிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம் சொன்னாலும் கேட்க வேண்டுமா? என்ன? திருநாவுக்கரசுை சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுக்கலாம், வழக்கறிஞர்களை ‘வர்ணங்களாக’ வகைப்படுத்தலாம், விசாரணை தொடங்குவதற்கு முன்பே நீ குற்றவாளி என்று முத்திரை குத்தலாம். புரிந்து கொள்ளுங்கள் விவசாயி கோபாலையும் - யோக்கியன் மல்லையாவும் ஒன்றாக பார்க்க முடியுமா? தேசத்துரோகி கண்ணையா குமார் மட்டுமல்ல. சென்னையிலும் இருக்கின்றனர்.

பாட்டியாலாவில் மூத்த வழக்குரைஞர்களை தாக்கிய வழக்குரைஞர்களின் மேல் எவ்வித நடவடிக்கையும் இல்லையென பேசுகிறார் ஒருவர். முட்டாள்தனமாக இல்லை, சென்னை வழக்குரைஞர்கள் பி.ஜே.பி.கட்சியாக அல்லது அவர்கள் பாரத் மாதா கி ஜே சொன்னார்களா? நாளையே கட்சியில் சேருங்கள். அப்புறம் பார்க்கலாம்.

உயர்நீதிமன்றம் அதிகாரப் பூர்வ விடை கொடுக்கும் முன்பே லூமினரி சங்கத்தில் பிரியா விடை பெறுவோம். மரபா? கிலோ என்ன விலை என்று கேட்போம். சென்னை வழக்குரைஞர்களை சமாளிக்க லோக்கல் லூமினரிகள், அகில இந்திய அளவில் லாபி செய்ய ஆல் இண்டியா லூமினெரி. என்ன இருந்தாலும் வரலாறு முக்கியமல்லவா? இதற்கு முன்னர் இவர்களை ஒழுங்கீனவர்கள் என்று நீங்களே பேசினீர்களே என்று நீங்கள் நிினைப்பது கேட்கிறது..அது வேற வாய்...

ஆனால் நீதிப்பிரபுவே துரதிருஷ்டம்.என்ன தெரியுமா?....வரலாறு பலம் கொண்டவன் மட்டுமே வெல்வான் என்பதை பொய்யென்றே பதிவு செய்துள்ளது. அதனால்தான் ஹிட்லரும், முசோலினியும் அடையாளமின்றி போனார்கள்.சூரியன் மறையா சாம்ராஜ்யம் வரலாற்றின் குப்பைத்தொட்டியில் வீசியெறிப்பட்டுள்ளது.

வ.உ.சி-யை தேசத்திரோகியென இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்த இதே மாண்புமிகு உயர்நீதிமன்ற தீர்ப்பினை இப்போது கொடுத்துப் பாருங்கள். கழிப்பறையில் எறிவார்கள்..ஆனானப்பட்ட வெள்ளைக்கார துரைக்கே இதுதான் நிலை..செண்பகராமனின் வெத்துகுண்டு சத்தம் கேட்டதும் ஆங்கிலத்தை விட்டு ஜெர்மனுக்கு தாவியவர்கள் எந்த மூலைக்கு.
ஆயுதம் கொண்டவன் சொல்வது நியாயமென்றால் அமெரிக்காதான் உலகிலேயே யோக்கியன்..அதுவா உண்மை..வியட்நாமில் செருப்படி பட்ட அமெரிக்க இன்று கூட ஈராக்கில் தினந்தோரும் கல்லடி பட்டுக்கொண்டிருக்கிறது.

நீங்கள் ஏவுகணைகளை உற்பத்தி செய்வது ஒருபுறம் இருக்கட்டும். துணிவாக வழக்கறிஞர் சங்கத்திற்கு வரத்தயங்கியது ஏனோ? ஒருவேளை உங்கள் நண்பர்கள் பதுங்குங்குழி வெட்டி வைக்கவில்லையோ? இல்லை தரைப்படைகள் வாடகைக்கு அனுப்பப்பட்டிருந்ததோ? அய்யகோ உங்கள் இரட்டை உங்கள் பேச்சுக்கு நான் பொறுப்பில்லை என்று நழுவுகிறார், உங்களுக்கு காவடி எடுத்தவர்கள் கூட தேவையா இவருக்கு என்று மழுப்புக்கின்றனர். 

கவண்கற்களிடம் ஏவுகணைகள் வீழ்ந்தே தீரும் என்பதுதான் வரலாறு..ஏனெனில் கவன் கற்கள் மக்களின் கைகளில், நியாயத்தின் பக்கத்தில் இருப்பதனால்... அதிகார மண்ணுக்குள் தனது தலையை புதைத்துக்கொண்டு நியாய உலகமே இருண்டு விட்டது என்று சொல்லும் நெருப்புக்கோழிகளை என்னவென்று சொல்வது..பெயரில் நெருப்பு இருப்பதனால் நெருப்புக்கோழிகள் பீனிக்ஸ் ஆகிவிட முடியாது என்பது தெரியுமா?

பாதுகாப்பாக இருந்து கொண்டு ஏவுகணைகளைச் செலுத்துங்கள்...நாங்கள் கவண் கற்களோடு காத்திருக்கிறோம்.......

சென்னையிலிருந்து தேசத்துரோகிகளில் ஒருவன்...