Feb 29, 2016

சீனாவில் காற்றை விற்று கல்லா கட்டும் கனடா முதலாளிகள்!



சாய்ஜிங் என்ற சீனப் பெண் இயக்குநர் இயக்கி வெளியிட்ட “மாடத்திற்குக் கீழே” (Under the Dome) என்ற ஆவணப்படம் அண்மையில் வெளியானபோது, அதனை ஐந்தே நாளில் ஐம்பது இலட்சம் பேர் பார்த்தார்கள்.

இந்த ஆவணப்படம் ஒரு தாய் தனது பள்ளி செல்லும் மகளை வீட்டை விட்டு வெளியில் விளையாட அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதன் காரணத்தை விளக்கும் போக்கில் விரிகிறது.

சீன நகரங்களில் எங்கும் பரவியிருக்கும் அடங்காத புழுதிப்படலங்கள் உள் இழுக்க தகுதியற்றவை, பல நோய்களை உருவாக்கும் ஆபத்து உண்டு என்பதால் தனது மகளை அத்தாய் வீட்டிற்குள்ளேயே பூட்டி வைக்கிறாள். இச்சிக்கல் பற்றி, அந்த ஆவணப்படம் விவாதிக்கிறது. (சீனாவின் புழுதிப்படலம் குறித்து இவ்விதழில் வேறொரு கட்டுரை விரிவாக விவாதிக்கிறது).

மக்கள் ஏதாவதொரு இன்றியமையாப் பொருள் கிடைக்காமல் திண்டாடினால், அந்தப் பற்றாக்குறைச் சூழலை தனது சந்தை வாய்ப்பாகக் கருதுவதுதான் முதலாளியம். மக்களுக்குத் தண்ணீர் தட்டுப்பாடு என்றால் அது தண்ணீர் முதலாளிகளுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. முதலாளியத்தின் சந்தை விதி அது!

இருபது - இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் குடி தண்ணீர் ஓர் விற்பனைப் பொருளாகும் என்று நாம் கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டோம். ஆனால், இன்று மாநகரங்கள், சிறு நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களில்கூட தண்ணீர் வணிகம் விரிவடைந்துவிட்டது. நடுத்தர, கீழ் நடுத்தர வர்க்க மக்களுக்கு மளிகைப் பொருள் பட்டியலில் குப்பித் தண்ணீரும் சேர்ந்துவிட்டது. வரும் 2018-க்குள் இந்தியாவில் நடைபெறும் குடி தண்ணீர் வணிகம் 9 இலட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயைத் தொடும் என அரசின் ஆய்வறிக்கைகளே கூறுகின்றன.

தண்ணீரைத் தொடர்ந்து இப்போது, சுவாசிக்கும் காற்றும் விற்பனைப் பண்டமாக மாறத் தொடங்கி விட்டது. இது மனித குலத்தைச் சூழ்ந்துள்ள மிகப்பெரிய ஆபத்தைக் குறிக்கிறது.

சீனாவின் தலைநகர் பெய்ஜிங் தொடங்கி அந்நாட்டின் பல்வேறு நகரங்கள் வாரக் கணக்கில் -- மாதக் கணக்கில், புழுதிப்படலத்தால் சூழப்பட்டு பகலிலேயே வாகனங்கள் விளக்கு வெளிச்சம் பாய்ச்சி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. அங்குள்ள காற்று மூச்சுவிடத் தகுதியற்றதாக மாறிவிட்டது. மூக்கில் பாதுகாப்புக் கவசம் அணிந்து செல்வது என்பதையெல்லாம் தாண்டி, மிகப்பெரும் அளவிற்கு தூசுப்படலத்தின் அடர்த்தி அதிகரித்ததால்தான் கடந்த 24.12.2015 அன்று சீன அரசு அபாய அறிவிப்பை (Red Alert) வெளியிட்டது.

இந்த அபாய அறிவிப்பு கனடா நாட்டின் ஓர் நிறுவனத்தை மகிழ்ச்சிக் கூத்தாட வைத்தது. ‘வைட்டாலிட்டி ஏர்’ (Vitality Air) என்ற கனடா நாட்டின் தனியார் நிறுவனம் இதுவரை யாரும் நினைத்துப் பார்த்திராத ஒரு வணிகத்தில் இறங்கியது. அதுதான் காற்று வணிகம்!

அந்த நிறுவனத்தின் 2 முதலாளிகளில் ஒருவரான மோசஸ் லாம் சீன அரசின் அபாய அறிவிப்பு வந்த நாளில் இலண்டன் மாநகரத்தில் தி டெலிகிராப் என்ற இதழுக்கு அளித்த செவ்வியில், “சீன மாநகரங்களில் நீங்காமல் நின்று நிலைத்துவிட்ட புழுதிப்படலங்கள் எங்களுக்கு ஓர் புதிய சந்தை வாய்ப்பாக அமைந்தன. இந்தச் சூழலைப் பயன்படுத்தி எங்கள் நிறுவனம் ஏற்கெனவே ஓர் கப்பல் நிறைய காற்று புட்டிகளை (பாட்டில்களை) சீனாவிற்கு அனுப்பிவிட்டோம். அது விரைவாக விற்றுக் கொண்டிருக்கிறது. காற்று வணிகத்திற்கு சீனா மட்டுமின்றி இந்தியா, துபாய் ஆகிய நாடுகளும் விரிந்த சந்தை வாய்ப்பை எங்களுக்கு வழங்குகின்றன. விரைவில் அந்த நாடுகளுக்கும் நாங்கள் எங்கள் காற்று வணிகத்தை விரிவாக்குவோம்” என்றார்.

இந்த காற்று புட்டிகள் இயல்பிலேயே எடைக் குறைவானவை என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஒரு காற்று பாட்டில் எடை 15 கிராம்தான். எனவே, இந்த பாட்டில்களை இடுப்புப் பட்டையிலும் முதுகில் தொங்கவிட்டும் எளிதில் எடுத்துச் சென்றுவிடலாம். ஒரு காற்று பாட்டில் விலை இந்திய மதிப்பின்படி 1920 ரூபாய். “ஒரு பாட்டிலில் உள்ள தூயக் காற்றைக் கொண்டு 200 தடவை மூச்சு இழுக்கலாம்” என்று இந்த வைட்டாலிட்டி ஏர் நிறுவனத்தின் குப்பிகளில் அச்சடிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு தடவை மூச்சு இழுக்க ரூ. 9. 60.
இது எவ்வளவு பெரிய உயிர் வணிகம்!

“இப்போதைக்கு, தண்ணீரைவிட 50 மடங்கு உயர் விலையில் எங்களது தூயக் காற்று விற்பனையாகிறது. தேவை உயரும்போது எங்கள் வாடிக்கையாளர்கள் விலை உயர்வைப் பொருட்படுத்தாமல் இதை வாங்குவார்கள் என்று நம்புகிறோம்” என்கிறார் மோசஸ்லாம்.

உண்மைதானே! மூச்சுவிடாமல் உயிர் வாழ முடியாதது தானே! அதற்கு உயிர் வாழ விரும்பும் யாரும் காசு கொடுத்துதான் ஆக வேண்டும் என்றால் கொடுத்துத்தானே தீர வேண்டும்.

அதன் மறுபக்கம் என்ன? காசு கொடுத்து காற்று வாங்க வழியில்லாதவர்கள் சாக வேண்டும் என்பதுதானே!

முதலாளியத் தொழில் வளர்ச்சியும், அது வளர்த்துவிட்டுள்ள “வளர்ச்சி வாதமும்” (Growthism) எவ்வளவுக் கொடூரமானவை, மனிதகுலத்திற்கு எதிரானவை என்பதை இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும்.
இது ஏதோ சீன நாட்டின் சிக்கல் மட்டுமல்ல. அது இந்தியாவையும் தமிழ்நாட்டையும் விரைவாக நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஐ.நா.வின் உலக நலவாழ்வு நிறுவனம் (WHO) 2015 தொடக்கத்தில் வெளியிட்ட அறிக்கை, உலகின் தூய்மைக் கேடான 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில் இருக்கின்றன என்றும், இந்நகரங்களின் தூசுப் படலம் அபாய அளவைத் தாண்டிக் கொண்டிருக்கிறது என்றும் எச்சரித்தது.

காற்று மண்டலத்தின் தூய்மை அளவை கணக்கிடுவதில் தூசு அளவு ஓர் முக்கியக் காரணியாகக் கொள்ளப்படுகிறது. இந்த தூசுப்படலங்கள் அவற்றின் சுற்றளவை வைத்து இரண்டு வகையாகப் பிரிக்கப் படுகின்றன. மிதக்கும் தூசியின் சுற்றளவை வைத்து அவை PM 2.5, PM 10 என வகைப்படுத்தப் படுகின்றன. இதில், 2.5 என்பது 2.5 மைக்ரோ மில்லி மீட்டர் சுற்றளவுள்ள தூசுத் துகள்களைக் (Particulate Matter) குறிக்கும், 10 என்பது 10 மைக்ரோ மில்லிமீட்டர் சுற்றளவுள்ள தூசுத் துகள்களைக் குறிக்கும். (1 மைக்ரோ மில்லி மீட்டர் என்பது மில்லி மீட்டரில் நூறில் ஒரு பங்கைக் குறிக்கும்).

இந்த இரண்டுவகை தூசுத் துகள்களும் ஆபத்தானவைதான் என்ற போதிலும், PM 2.5 தூசுகள் மிக எளிதாக மூச்சுக் காற்றுடன் கலந்து உள்ளிழுக்கப் பட்டுவிடும். இந்த தூசுக் காற்றை சில மாதங்கள் சுவாசித்தால் ஆஸ்துமா நோயும், தொடர்ந்து சுவாசித்தால் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களும் ஏற்படும்.

நாம் சுவாசிக்கும் காற்றில் இந்த PM 2.5 தூசு ஒரு கன மீட்டர் காற்றில் 25 மைக்ரோ கிராம் அளவுக்குள் இருந்தால், மனித உடலின் எதிர்ப்பு சக்தியே அவற்றை சரி செய்து கொள்ளும். அதற்குமேல் போனால், ஆபத்துதான்!
ஆனால், சென்னையின் காற்றின் மாசுபாட்டை அளந்து கூறிய தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை, சென்னையின் கத்திவாக்கம், அண்ணா நகர், வள்ளுவர் கோட்டம், தியாகராயர் நகர் ஆகிய அனைத்து மையங்களிலும் 2015 ஏப்ரல் தொடங்கி நவம்பர் முடிய இருந்த மொத்தமுள்ள 243 நாட்களில் 233 நாட்கள் அபாய அளவைத் தாண்டிய தூசு மாசோடுதான் சென்னையின் காற்று இருந்ததை அறிவிக்கிறது. அதாவது, அபாய அளவைத் தாண்டிய தூசுக் காற்றைத்தான் மிகப்பெரும்பாலான நாட்கள் சென்னை மக்கள் சுவாசித்திருக்கிறார்கள்.

இப்போது பெரு வெள்ளப் பேரிடர் தாக்கியப் பிறகு, திசம்பரில் தூசு அளவு பல மடங்கு உயர்ந்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. அன்றாடம் சாலையில் பயணிப்போர் அனைவரும் உணரக்கூடிய பேரிடர் இது!
உலகின் தூசு மாசு நிறைந்த நகரங்களில் முன்னணி வரிசையில் உள்ள நகரம் தில்லி. இப்போது, அங்கு அடுக்குமாடி வீடு கட்டும் முதலாளிகள், “எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் மையப்படுத்தப்பட்ட காற்றுத் தூய்மையாக்கிகள் (Air Pàrifier) இணைக்கப்பட்டுள்ளன” என்று விளம்பரம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். தூயக் காற்றுள்ள வீடு வேண்டுமானால் அதற்கு அதிக விலை கொடுத்தாக வேண்டும்.

உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் போன்றவற்றில் காற்றுத் தூய்மையாக்கிகள் பொருத்தப்பட்டு அதற்கு தனியாகக் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தில்லியில் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இது விரைவில் சென்னைக்கும் - தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் வந்துவிடும்.
இது கற்பனையல்ல! தமிழகத்தை நெருங்கி வரும் ஆபத்து இது!
கடந்த 21.12.2015 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் நலவாழ்வுத்துறை சார்பில் முன்வைக்கப்பட்ட ஓர் அறிக்கையில், சென்னையில் கடந்த சில ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 863 பேர் மாசுபட்ட காற்றை சுவாசித்து, அதனால் ஏற்பட்ட நோயால் இறந்து வருகிறார்கள் எனக் கூறப்பட்டது. கடந்த ஆண்டில் மட்டும் மாசடைந்த காற்றை சுவாசித்ததனால் ஏற்பட்ட நோய்களுக்காக, சென்னையில் சிகிச்சைப் பெற்ற நோயாளிகளில் 4 இலட்சத்து 62 ஆயிரம் பேர் அபாய நோயாளிகள் என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

ஏற்கெனவே முதுகில் தூக்கிச் செல்லக் கூடிய காற்றுத் தூய்மையாக்கிகள் சந்தைக்கு வந்துவிட்டன. இனி, வெளியில் செல்பவர்கள் கையில் ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்வது போல், முதுகில் காற்றுத் தூய்மையாக்கிகளையும் சுமந்து செல்ல வேண்டும். எல்லாவற்றுக்கும் விலை உண்டு! அதுவும் காற்றின் விலை தண்ணீரைவிட பல மடங்கு அதிகமானது.
பணமுள்ளவர்கள் உயிர் வாழட்டும் என்ற கொடிய சந்தை வாழ்க்கையை வரவேற்கப் போகிறோமா அல்லது அதை மறுத்து வாழத் தகுந்ததாக நமது மண்ணைப் பாதுகாக்கப் போகிறோமா என்பதே நமது கழுத்தை நெருக்கிக் கொண்டிருக்கும் கேள்வி.

- Sivakumar Dasarathan (from Facebook)
FilmDirector

Feb 27, 2016

அண்ணன் சதாசிவம் காட்டிய வழியில் தம்பி தத்து!




நேற்று கேரள கவர்னராக சதாசிவம்!
இன்று மனித உரிமை ஆணையத்தின் தலைவராக தத்து தேர்வு!

------
 

 பா.ஜ.க.வின் அருண் ஜெட்லி 2012-ல் எதிர்கட்சித் தலைவராக இருந்த பொழுது நீதிபதிகளும் தலைமை நீதிபதிகளும் அதிக சம்பளம், குறைந்த பொறுப்பு என கவுரவமிக்க பதவிகளை அரசிடமிருந்து பெற்றுவிடவேண்டும் என அரசுக்கு ஆதரவாகப் பல தீர்ப்புகளை அளிக்கத் தொடங்கிவிடுவார்கள்; நீதிபதிகளில் இரண்டு வகை. சட்டங்களை நன்றாக தெரிந்துவைத்திருப்பவர்கள். இன்னொரு வகை சட்ட அமைச்சரை நன்கு தெரிந்து வைத்திருப்பவர்கள்என கிண்டலடித்தார். ஜெட்லி சொன்னது இன்று நடைமுறை உண்மையாகி கொண்டிருப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சதாசிவம், துளசிராம் பிரஜாபதி கொல்லப்பட்ட வழக்கில் பா.ஜ.கவின் தேசிய செயலராக இப்பொழுது இருக்கும் அமித்ஷாவை விடுவித்தார். அதற்கு பலனாக தான் அவருக்கு கேரள கவர்னர் பதவி கிடைத்தது என சர்ச்சையானது . மற்றொரு சர்ச்சை தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு தன்னை தலைவராக்க வேண்டும் என சதாசிவம் லாபி செய்தார் என பரவலாக பேசப்பட்டது!

இந்திய வரலாற்றில் உச்ச நீதிமன்றத்திலிருந்து தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து ஓய்வுபெற்ற பிறகு மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பிரமுகர் சதாசிவம்தான். கடந்த செப்டம்பரில்(2014ல்) அவருடைய நியமனம் நடைபெற்றபோது 2 முன்னாள் தலைமை நீதிபதிகள் அதை விமர்சித்தனர். அரசியல் நெருக்கடிக்கு ஆளாகாமல் நீதித் துறை செயல்பட வேண்டும் என்பதால், இது ஆரோக்கியமான முன்னுதாரணம் அல்ல என்றே கருதப்பட்டது.என வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹாவும் குறிப்பிடுகிறார்.

கேரள கவர்னராக நியமனம் குறித்து தனது அதிருப்தியை முன்னாள் கூடுதல் சொலிசிட் ஜெனரல் கே.வி. விஸ்வநாதன் திறந்த கடிதம் மூலம் சதாசிவத்திற்கு வெளிபடுத்தியுள்ளார். அந்த கடிதத்தில், அரசு நிர்வாகத்தில் மற்றும் நீதித்துறையில் இருப்பவர்களின் கரங்களுக்கிடையே இடைவெளி என்பது ஓய்வுபெற்ற பின்னும் தொடர்ந்து இருக்க வேண்டும். மாறாக கரங்கள் இடைவெளியை குறைத்து ஆரத்தழுவினால், அது பயங்கர ஆபத்துக்கான எச்சரிக்கை அறிகுறி என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் நீதிபதிகளான வி.என். கரே மற்றும் கே.டி. தாமஸ், சட்ட ஆனையத்தின் தலைவர் ஏ.பி. ஷா, மூத்த வழக்குரைஞர்கள் ராஜீவ் தவான் மற்றும் பாலி.எஸ்.நாரிமன் போன்றோர் சதாசிவத்தின் நியமனத்தை விமர்சித்து இருந்தனர். அனைத்திந்திய பார் அசோசியஷேனும் மற்றும் கேரள உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கமும் நியமனத்தை கண்டித்திருந்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து மீதோ ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள்!
 
குஜராத் படுகொலைகள் வழக்கில் அமித்ஷா தொடர்பு குறித்து விசாரிக்க கோரிய சஞ்சீவ்பட் மனுவை தள்ளுபடி செய்தார்

மாயா கோத்னானிக்கு குஜராத் உயர்நீதிமன்றம் வழங்கிய தண்டனை குறைப்பு மற்றும் ஜாமீனை எதிர்த்து உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் நீதிபதி தத்து, மாயா கோத்னானிக்கு ஜாமீன் கிடைத்தே தீர வேண்டும் என்பது போல செயல்பட்டார் என மனித உரிமை செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த வருடம் ஜனவரியில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் மோடியை சிறந்த தலைவர், நல்ல மனிதர் மற்றும் தொலைநோக்கு பார்வை உடையவர் என்று மோடியை புகழ்ந்தார்

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை ஜாமினில் விடுதலை செய்து மற்றும் சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்ககால்குலேட்டர்புகழ் குமாரசாமியை பயன்படுத்தியவர்

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியதில் பெரிய ஊழல் நடந்திருப்பதாக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் தத்துவிடம் புகார் அளித்தார்கள். அதற்கு, ’யாராவது ஒருவர் நான் 1000 கோடி ரூபாய் வாங்கி கொண்டு ஜாமீன் வழங்கினேன் என்று கூறுவார்கள். கவலைபடாதீர்கள், இந்த மாதிரி குற்றச்சாட்டுகளை எல்லாம் எதிர்கொள்ளும் அளவுக்கு எனக்கு தடித்த தோல் இருக்கிறதுஎன தேர்ந்த பிழைப்புவாதி போல் பதில் அளித்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியதில் தத்து எந்த விதிமுறையும் பின்பற்றவில்லை. அவர் அளித்த உத்தரவு முறைகேடனாது மற்றும் சந்தேகத்திற்கு உரியது அதனால் இந்த வழக்கை மேலும் அவரே விசாரிக்கக் கூடாது என்று தமிழகம் முழுவதும் 1000 வழக்குரைஞர்கள் கையெழுத்திட்ட மனுவை மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் ஜனாதிபதியிடம் அளித்தனர்.

எச்.எல் தத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாவதற்கு முன் அவர் சட்ட விரோதமாக சொத்து குவித்தது தொடர்பான ஆவண ஆதாரங்களின் தொகுப்பு ஒன்று அப்போது ஊடக கவுன்சில் தலைவராக இருந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ ஊடகங்களுக்கு அனுப்பி இருந்தார். அதை ஊடகங்கள் வெளியிடாததை குறித்தும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்

மதுரையில் வழக்குரைஞர்கள் ரமணா படம் போல டாப் 5 ஊழல் நீதிபதிகளின் பட்டியலை வெளியிட்டபொழுது மிகவும் துடித்துப்போனவர் தத்து. நீதிபதி கர்ணன் குறித்த ஒரு வழக்கில், சம்பந்தமேயில்லாமல் வழக்குரைஞர்களால் நீதிபதிகள் பய உணர்வுடன் வழக்குகளை விசாரித்து வருகின்றனர் என்று அலறினார்

இப்படி பல குற்றச்சாட்டுகள் இருக்கும் பொழுது தான், தேசிய மனித உரிமை ஆணையர் பதவி கிடைத்திருக்கிறது.

நீதிபதிகள் இவ்வாறு பதவிகளை தேடி ஓடுவது என்பது நீதித்துறையின் சுதந்திரதன்மைக்கு ஆபத்தாகவே முடியும். அதற்கான மோசமான அடையாளங்கள் சதாசிவம் நியமனமும் அதன் பின் தொடரும் தத்துவின் நியமனமும்.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் நேர்மையாக தீர்ப்பளித்த மைக்கேல் டி குன்ஹா தனது தீர்ப்பில் "ஊழல் என்பது தண்டனைக்குரிய குற்றம் மட்டுமல்ல. அது மனித உரிமைகளை மலினப்படுத்தி அவற்றை மீறுகிறது. கவனமாக செய்யப்படும் ஊழல் என்பது, மனித உரிமைகள் மீறல் மட்டுமல்ல, அது, தொடர்ந்த பொருளாதாரக் குற்றங்களுக்கு வழிவகுக்கிறது.என குறிப்பிட்டார்.

குன்ஹாவின் வரையறைப்படி, பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் தத்து மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டு கொண்டவர். இன்றைக்கு அவரே மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றால் எவ்வளவு பெரிய முரண் இது!

நிலவுகிற மோடி அரசு அறிவிக்கப்படாத நெருக்கடியை நிலையை நாடெங்கும் அமுல்படுத்திவருகிறது. தனது வானர கொலைகாரப் படைகளை காக்க காவி சிந்தனையுள்ள நீதிபதிகளை நீதித்துறைக்குள் நியமிக்க எல்லாவகையிலும் முயன்றுவருகிறது. அவர்கள் எதற்கு? நாங்களே நீங்கள் நினைப்பதை நிறைவேற்றி தருகிறோம் என்பதை தான் கவர்னர் பதவியும், மனித உரிமை ஆணையர் தலைவர் பதவியும் நிரூபிக்கின்றன.

இறுதிச்சுற்று படத்தில் ஒரு வசனம் வரும். ஊழல்வாதிகள் உங்களை நான் விசாரிக்கனும், ஆனால், நீங்க விசாரிக்கிற இடத்துல உட்கார்ந்து இருக்கீங்க! 

நேர்மையான வழக்குரைஞர்கள் நாம் இப்பொழுது கூண்டில் நிற்கிறோம். அவர்கள் நம்மை விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
நாம் ஒன்றிணைந்து நீதித்துறையில் ஊழல்வாதிகளை மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலப்படுத்தும் பொழுது மட்டும் தான் அவர்கள் பலம் இழப்பார்கள். இல்லையெனில், நம் அமைதியே அவர்களுக்கு கொண்டாட்டமாகிவிடுகிறது!

-
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.

Feb 19, 2016

போஸ்டர்களை தின்னும் போலீசு!



பிப். 19 2009 சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள், நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் மீது காவல்துறை காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தொடுத்தது. இன்றைக்கு வரைக்கும் நீதி கிடைக்கவில்லை.

இன்று விடிகாலை 4 மணியளவில், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்கள் உயர்நீதி மன்ற பகுதியை சுற்றி கண்டன சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருந்தார்கள். எப்படியோ மோப்பம் பிடித்து வந்த பூக்கடை காவல்நிலையத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர் மோகன்ராஜ் சுவரொட்டியை ஒவ்வொன்றாக கிழித்துக்கொண்டிருந்தார். தூரத்திலிருந்து கவனித்த தோழர்கள், அருகில் சென்று "ஏன் கிழிக்கிறீர்கள்?" என்றதற்கு, 'சினிமா போஸ்டரை கிழிக்கிறோம்" என பம்மி பதில் சொன்னது. "கண்ணு தெரியலையா? படிக்க தெரியாதா?" என எகிறியதும் போலீசு பின்வாங்கியது.


வழக்குரைஞர்கள் ஒன்றிணைந்து போராடும் பொழுது தான் 2009 தாக்குதலுக்கு நீதி கிடைக்கும். சுவரொட்டியின் மீது கைவைக்க‌ பயமும் வரும்!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

 

Feb 10, 2016

எஸ்.வி.எஸ். கல்லூரி என்ற பெயரில் ஒரு கல்குவாரி!

எஸ்.வி.எஸ். கல்லூரி மூன்று மாணவிகளின் பிரேத பரிசோதனை அறிக்கையை சிபிசிஐடி காவல்துறையினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில், மாணவிகளின் மரணம் நீரில் மூழ்கியதால் ஏற்படவில்லை என்றும், நுரையீரலில் தண்ணீர் தேங்காததால் கிணற்றில் மூழ்கி உயிரிழந்ததற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று அரசு கல்லூரியில் சேர, எஸ்.வி.எஸ். கல்லூரி சித்தா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பு மாணவர்களுக்கு சென்னை அரும்பாக்கத்தில் கலந்தாய்வு நடந்துள்ளது. அந்த கல்லூரியில் 2008 முதல் 2016 வரை படித்து வரும் மாணவர்கள். தேர்ச்சி பெறாத மாணவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. 136 மாணவ–மாணவிகள் அரசு கல்லூரியில் சேர தகுதி உடையவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் தங்களுடயை கல்லூரி காலத்தில் அநியாய கல்வி கட்டணத்தையும் செலுத்திவிட்டு படிப்பை முடிக்க முடியாமல் சித்தரவதை, மனஉளைச்சல் உள்ளாகி, மற்றும் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட விதத்தை மீண்டும் விளக்குகிறது இக்கட்டுரை.
*******

எஸ்.வி.எஸ். கல்லூரி என்ற பெயரில் ஒரு கல்குவாரி

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ’பங்கரம்’ எனும் கிராமத்தில் அமைந்துள்ள SVS இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை என்ற பெயரில் ’வாசுகி’ என்பவரால் கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. கழிவறை வசதிகள், சுகதாரம், மின்விசிறி, மின் விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் கூட சரிவர செய்யப்படாமல் இயங்கிவந்த இக்கல்லூரியில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் நிலை நிலப்பண்ணையாளர்கள் காலத்திலும் நடந்திராத பெருங்கொடுமை என விவரிக்கிறார்கள் அங்கு படித்த மாணவர்கள்.

’வசூல்ராஜா MBBS' தாளாளர்:

எஸ்.வி.எஸ். கல்லூரியில் படிக்கும் கண்ணதாசன், அய்யப்பனும் மாணவர்கள் கல்லூரிப் பற்றி சொல்லும் பொழுது “எஸ்.வி.எஸ். கல்லூரி சிறந்தக் கல்லூரி. எந்தவிதப் பிரச்சனைகளும் இருக்காது. விடுதி வசதி, உணவு என அடிப்படை வசதிகள் எல்லாமும் சிறப்பாக இருக்கும். நல்ல தரமான மருத்துவக் கல்வி உங்களுக்கும் கிடைக்கும் என்று அரசாங்கம் தான் இனிக்க இனிக்க தேன் தடவி பேசி, எங்களை இக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இங்கு வந்து பார்த்த போதுதான் கல்லூரியில் வெறும் பெயர்ப்பலகை மட்டும்தான் இருந்தது. மேலும் அப்போதுதான் தளம் போட்டுக் கட்டிக் கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட ஒரு மோசமான கல்லூரிக்கு கவுன்சிலிங் மூலம் எங்களை அனுப்பி வைத்து ஏமாற்றி விட்டார்கள்” என கதறுகிறார்கள் அம்மாணவர்கள்.
ஒவ்வொரு மாணவரிடமும் ஐந்தாறு இலட்சம் வரை வசூல் செய்த கல்லூரி நிர்வாகம் 7 ஆயிரம் ரூபாய்க்கு மட்டும்தான் ரசீது தருகிறார்கள். இது குறித்து கேட்ட பொழுது, ‘ரசீது வேண்டுமா? நீ படிப்பை முழுவதுமாக முடித்துவிட்டுப் போகமாட்டாய் உன் மார்க்கில் கை வைத்துவிடுவோம்’ என பச்சையாக மிரட்டுகிறார்கள் என்கிறார் இரண்டாமாண்டு படிக்கும் அருள்முருகன்.

”ஆய்வு மேற்கொள்ள வரும் அதிகாரிகளுக்கு முன்னால் என்னை டாக்டராக நடிக்கவைத்தார்கள். அப்படி நடிக்கவில்லை என்றால் அதே கதிதான். மாணவிகளாகிய நாங்கள் தான் சமையல் வேலை செய்தோம், துணிதுவைப்பது, பாத்திரங்கள் கழுவது போன்ற வேலைகள் செய்வோம். இதைவிட கொடுமை மேடம் வாசுகிக்கு கடலைமாவு அரைத்து உடல் முழுவதும் பூசவேண்டும். மாணவர்கள் கட்டம் கட்டும் வேலைகளையும், அவுஸ்கீப்பிங் போன்ற எல்லா வேலைகளையும் செய்வார்கள். இதைவிடப் பெரிய கொடுமை என்னவென்றால் எங்கள் மேடத்தின்(வாசுகி) கை, கால்களைப் பிடித்துவிடாத மாணவிகளே இல்லை. அதே போல் வாசுகியின் கணவர் சுப்பிரமணியனின் கை, கால்களையும் பிடித்துவிடாமல் எந்த ஒரு மானவரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை” என கூறுகிறார் இறுதியாண்டு மாணவி வாணிஸ்ரீ.

மேலும் அவர் கூறும் பொழுது, “ஒரு நாள் இரவு 12 மணி இருக்கும் போது, தொலைபேசியில் தொடர்பு கொண்ட சுப்ரமணியன்(வாசுகியின் கணவர்) தான் ஏ.டி.எம் கார்டை மறந்து கல்லூரியிலேயே வந்துவைத்துவிட்டதாகவும் தற்போது சென்னை பல்லாவரத்தில் ஒரு ஓட்டலில் தங்கியிருக்கிறேன் அங்கு வந்து ஏ.டி.எம் கார்டைத் தந்துவிட்டுப் போ!” என்னிடம் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இதுவரை எந்த இடத்திற்கும் தனியாகப் போனதேயில்லை. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு நடுராத்திரியில் 3 பேருந்துகள் மாறி, மாறிப்போய் ஏடிஎம் கார்டை போய்கொடுத்துவந்தேன். ”கல்லூரியின் தரம் குறித்து ஆய்வு செய்த அதிகாரிகளுக்கு ”அனைத்தும்” சரியாக உள்ளது என அறிக்கைத் தர (லஞ்சம்) பணம் கொடுக்க வேண்டியிருந்தனால் தான் ஏ.டி.எம் கார்டை அவசரமாக எடுத்து வரச்சொன்னேன்” என்றார் மாணவி வாணிஸ்ரீ.

மருத்துவ வகுப்புகள் நடக்கவே நடக்காது, ஆசிரியர்கள் கிடையாது இப்படிப்பட்ட அவலங்களை மாணவர்கள் எத்தனை நாள்தான் பொறுத்துக் கொண்டு போக முடியும் இந்தக் கல்லூரியின் அக்கிரமங்களைப் பட்டியலிட்டு தொடர்புடைய துறைகளுக்கு புகார்களாக அனுப்பி வைத்தார்கள் மாணவர்கள். சென்னை MGR பல்கலைக்கழக துணைவேந்தர், மருத்துவக் கவுன்சில், மாவட்ட ஆட்சியர், தேசிய மனித உரிமை ஆணையம் உட்பட பதினான்கு அதிகார மையங்களுக்கு புகார்களை அனுப்பிய மாணவர்களுக்கு எந்தத்துறைகளிலிருந்தும் நடவடிக்கை எடுக்காதது மிகுந்த ஏமாற்றத்தையும் அரசின் மீது வெறுப்பையும் ஏற்படுத்தியது.

ஆயிரம்நாள் அடிமையாக வாழ்வதைவிட வீரனாக போராடலாம் என்று முடிவெடுத்த மாணவர்கள் கடந்த 24.08.2015 அன்று தங்களது முதல் கட்டப் போராட்டத்தை துவங்கினார்கள். இரண்டாவதாக 07.08.2015 அன்றும் போராட்டம் நடத்தினார்கள். எவரும் கண்டுகொள்ளவில்லை. பிறகு தீக்குளிப்பு போராட்டம் என்று அறிவித்து கடந்த ஆண்டு செப் 15 ஆம் நாள் நடத்தியதில் போலீசார் வந்து அவர்களை கலைத்து அப்புறப்படுத்தினர். மாணவர்கள் தங்கள் நியாயங்களை யாரிடம் சொல்லித் தீர்த்துக் கொள்வது என்று தெரியாத கையறு நிலைக்குத்தள்ளப்பட்டனர்.

வேதனையின் வலியின் உச்சத்தில் நின்று கொண்டிருந்த அவர்கள் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 21.09.2015 அன்று விஷம் அருந்தித் தற்கொலை செதுகொள்ளும் போராட்டத்தை அறிவித்து செயல்படுத்த முனைந்த போது போலீசார் அவர்களைப் பிடித்து கலக்டர் முன் நிறுத்தினர். கடுந்தவத்தை மெச்சிய சாமி வருவது போல் கலக்டர் வந்தார். கலெக்டர் லட்சுமி நமது கோரிக்கையை ஏற்பார் என்று நினைத்த மாணவர்களை நோக்கிய அவர், ‘என்ன சீரியல் பாத்துட்டு நடீக்கிறீங்களா? சாக வேண்டியதுன்னா உங்க வீட்டுக்குப்போய் தற்கொலை பன்ணிக்கீங்க ஏன் கலெக்டர் ஆபீஸ் முன்னால அதச் செய்றீங்க?’ என்று தான் ஒரு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குபவர் என்ற சிந்தனையை முழுவதுமாக மறந்துவிட்டு அதிகார வெறியில் நடந்துகொண்டார்.

இது இப்படிப் போய்க்கொண்டிருக்க இதை இப்படியேவிட்டால் நமக்கு ஆபத்து என்று நினைத்த கல்லூரி நிர்வாகிகள் தங்கள் பங்குக்கு ரவுடிக் கும்பல்களை இறக்கிவிட்டு போராடும் மாணவர்களை மிரட்டி இருக்கிறார்கள். ஒரு மார்வாடி எப்படி நமது ஊரில் உள்ள பேட்டை வஸ்தாதுகளைப் பயன்படுத்தி கந்துவட்டி கலக்சன், டூ வீலர் சீஸிங் போன்றவற்றை நமது மக்களுக்கு எதிராக செய்ய வைக்கிறானோ அதே போல் அக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும்(90 சதவிதத்திற்கும் மேல்) தலித் மாணவர்கள். அவர்களை ‘ரகு’ என்ற அதே வகுப்பைச் சேர்ந்த மாணவனை கைகூலியாக்கி மிரட்டி இருக்கிறார்கள்.

இந்நிலையில் தான் இவற்றையெல்லாம் தொடர்ந்து தட்டிக்கேட்ட மாணவிகளில் மூவரான பிரியங்கா, சரன்யா, மோனிஷா ஆகியோர் கல்லூரி வளாகத்தில் இருந்து கிணற்றுக்குள்ளிருந்து சடலமாக மீட்கப்பட்டு அவர்கள் இறந்து விட்டார்கள் என்று அவர்களின் பெற்றோருக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். அது கொலையா, தற்கொலையா என்பது மருத்துவப் பிரேத பரிசோதனையின் முடிவுக்குப் பின்னர் தான் தெரியவரும். அதை தொடர்ந்துதான் ஊடகங்கள் தமது பார்வையை SVS இயற்கை மருத்துவக்கல்லூரியின் மேல் திருப்பின. குறிப்பாக பாலிமர் தொலைக்காட்சி ‘அங்கீகாரம் இல்லாத கல்லூரியில் படித்து ஏமாந்தவர்களா நீங்கள் ‘என்ற இயக்கம் எடுத்து இச்செய்தியை கூர்ந்து ஆய்ந்து வெளியிட்டது. தற்போது நடவடிக்கை என்ற பெயரில் கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

 மூன்று பேர் இறந்து போனாதால்தான் இக்கல்லூரியின் கோரக்காட்சி உலகுக்குத் தெரிந்து இருக்கிறது என்றால் இன்னும் எத்தனை கல்லூரிகள் இந்த நாட்டில் இது போல் செயல்பட்டு வருகின்றன. அக்கல்லூரியிலும் இதுபோல் சாவு விழுந்தால்தான் நடவடிக்கை எடுப்போம் அதுவரை எதுவும் செய்யமாட்டோம் என்பதுதான் மக்கள் மீதான் அரசின் ‘அக்கறை’யாக உள்ளது. ’பாலிமர்’ செய்தியாளர்கள் மாணவிகளின் இறப்பு பற்றி பேசுவதற்காக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் லட்சுமியிடம் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் மீட்டிங்கில் இருக்கிறார் என்ற ஒரு ஒற்றை பதிலுடன் தொலைபேசி துண்டிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் தொடர்புகொண்டு பேச முயன்றபோது கலெக்டர் போன் ரீச் ஆகவில்லை. இதனை அத்தொலைக்காட்சி கடந்த 27.01.2016 அன்று ஒளிப்பரப்பியது மக்களிடையே அரசின் பாராமுகத்தைப் பட்டவர்த்தனமாகக் காட்டியது.

மூன்று மாணவிகளின் மர்ம மரணத்திற்கு கல்லூரி தாளாளர், முதல்வர், வாசுகியின் மகன் போன்ற SVS கல்லூரியின் ரவுடிகள் நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கலாம். ஆனால் கல்லூரியை முறையாக ஆய்வு செய்யாமல் போன அதிகாரிகள், MGR பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மயில்வாகணம், நடராஜன் இந்நாள் துணைவேந்தர் கீதாலட்சுமி, பல்கலைக்கழக பதிவாளர், மாவட்ட ஆச்சித்தலைவர் லட்சுமி போன்றவர்கள் அவரவர் தரப்புக்கு அறிக்கை விட்டுக் கொண்டு சகஜமாக உலா வருகிறார்கள். தாம் புகார் அனுப்பிய 14 அதிகாரமையங்கள் நினைத்திருந்தால் இந்த மூன்று மாணவிகளை இழந்திருக்கமாட்டோம். அவர்கள் மருத்துவர்களாகி இருப்பார்கள் என்ற சிந்தனை போராடும் அந்த மாணவர்கள் எந்த நாளும் அழியப்போவதில்லை; அரசு அதற்கு பதில் சொல்லும் நாளும் தூரத்திலில்லை.
தனியார்மய கல்வியை ஒழிக்கவேண்டும்!

அடிப்படை வசதிகள் இல்லாமல், ஆசிரியர்கள் இல்லாமல், மாணவர்களை கொத்தடிமைகளை போல நடத்துவது, கேள்விக்கேட்கும் மாணவர்களை, பெற்றோர்களை ரவுடிகள் வைத்து மிரட்டுவது, மாணவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பிடுங்கி, கல்லாகட்டுவதிலேயே குறியாகவும், இதற்கு பல்கலை கழகம், கல்வித்துறை, போலீசு, நீதித்துறை என அரசின் சகலதுறைகளும் எஸ்.வி.எஸ். கல்லூரியிடம் காசு வாங்கிக்கொண்டோ அல்லது வேறு வகையிலோ பாதுகாப்பு தூண்களாய் பாதுகாத்து நின்றிருக்கின்றன. எல்லா பக்கமும் முட்டிமோதி தோற்று துவன்று நின்ற பொழுது தான் மூன்று மாணவிகளின் படுகொலைகள் நடைபெற்றிருக்கிறன்றன. எஸ்.வி.எஸ். கல்லூரி ஒரு சாம்பிள். இப்படிப்பட்ட கல்லூரிகள் தான் நாடு முழுவதும் பரவிக்கிடக்கின்றன. நமது மாணவ, மாணவியர்கள் வெளியே சொல்லமுடியாமல் புழுங்கி சாகிறார்கள். ஒருசமயத்தில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதை தடுக்கவேண்டுமென்றால், இந்த அரசிடம் கெஞ்சியோ, மனுபோட்டோ ஆகப்போவது ஒன்றுமில்லை என்பதும் தொடர்நிகழ்வில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதை நிரந்தரமாக தடுக்கவேண்டுமென்றால், கல்வியில் தனியார்மயத்தை ஒழிப்பது தான் ஒரே தீர்வு. அதற்கு வேறு ஏதுவும் குறுக்குவழியில்லை. நாம் ஓரணியில் திரண்டு போராட்டங்களை முன்னெடுப்பது தான் ஒரே வழி!

நூர்தீன்,
செயற்குழு உறுப்பினர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

Feb 2, 2016

நினைவோடை (inside out) ஒரு பார்வை!



அம்மா, அப்பா, பொண்ணு என அமெரிக்க நியூக்கிளியர் குடும்பம். அந்த பொண்ணுக்கு 11 வயது ஆகும் பொழுது பொருளாதார பிரச்சனையில் ஊரைவிட்டு, புதிய மாநிலத்திற்கு நகர்கிறார்கள்.  புதிய இடம், புதிய சூழல், நண்பர்களை இழந்த சோகம் என மிகவும் கவலைக்குள்ளாகிறாள். ஒரு சமயத்தில் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து கிளம்புகிறாள். மீண்டும் எப்படி பெற்றோரை வந்தடைகிறாள் என்பது கதை!

இந்த சாதாரண கதையை எப்படி சுவாரசியப்படுத்துகிறார்கள் என்றால் அந்த பெண்ணின் மூளைக்குள் சந்தோசம், துக்கம், கோபம், வெறுப்பு, பயம் என உணர்வுகளில் முக்கியமான ஐந்துக்கு உருவம் கொடுத்திருக்கிறார்கள்.  இந்த ஐவரும் மூளைக்குள் அடித்து பிடித்து அந்த பெண்ணின் உணர்வுகளை எப்படி உருவாக்குகிறார்கள் என்பதை ஒரு வண்ணமயமான உலகத்தை உருவாக்கி அருமையான கற்பனையுடனும், நகைச்சுவையுடனும் சொல்லியிருக்கிறார்கள்.
குழந்தைகளோடு பெரியவர்களும் பார்க்கவேண்டிய படம்.  2015ல் ஜூனில் வெளிவந்து, இப்பொழுது சில பிரிவுகளில் ஆஸ்காருக்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

சந்தோசமான உணர்வுகள் கூட நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவதில்லை.  ஆனால், காயம்பட்ட, சோக உணர்வுகள் சட்டென்று மேலெழும்பி வந்து, துக்கத்தில் ஆழ்த்திவிடுகின்றன.  சிலரை பார்க்கும் பொழுது, மீண்டும் மீண்டும் வாழ்வில் நடந்த, நடக்கிற அழுகாச்சி டேப்பை மனதில் சுழலவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

படம் தந்த பாடம் இது தான்.  சந்தோசமான தருணங்களை எல்லாம், கவனமாக சேகரிக்க வேண்டும். நாட்குறிப்பில் பதியுங்கள். புகைப்படங்களை எடுத்து, ஆல்பமாய் தயாரித்து வையுங்கள். பிளாக் ஒன்றை உருவாக்கிக்கொள்ளுங்கள். யாருக்கு எது சாத்தியமோ அதை செய்து கொள்ளலாம்.  நானோ, எனது பொண்ணோ கொஞ்சம் டல்லாக இருந்தால், நாங்கள் சுற்றுலா போய்வந்த ஆல்பங்களை ஒரு புரட்டு புரட்டினால் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்!