Jun 27, 2014

மேரியம்மா!



புதுக்கோட்டை அருகே ஒரு கிராமம். சென்னையில் 2 பஸ் வைத்து பங்குதாரருடன் இணைந்து தொழில் செய்தவரை திருமணம் முடித்து சென்னைக்கு வந்த பொழுது மேரியம்மாவிற்கு வயது 19.

பணப்புழக்கம் இருந்ததால், தினமும் குடி, வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது. வந்தால் திட்டு அடி.

10 வருடங்களில் இரண்டிரண்டு வயது வித்தியாசத்தில் இரண்டு பெண் பிள்ளைகள். ஒரு பையன். குடி உடம்பை உருக்கி 10வது ஆண்டின் முடிவில் நோய்வாய்ப்பட்டு இறந்தே போனான் கணவன்.

உலகம் தெரியாது. என்ன செய்வதென்றே தெரியாமல், மூன்று குழந்தைகளோடு தனியாளாய் நின்றார் மேரி.

தட்டுத்தடுமாறி நிற்கும் பொழுது ஒரு அம்மா ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்து விட்டார். 12 மணி நேரம் வேலை. ஒரு நாளைக்கு சமைத்தால் மூன்று நாளைக்கு வைத்துக் கொள்வார்கள் சில நாட்கள் பட்டினி என நகர்ந்தது வாழ்க்கை.

ஏற்றுமதி நிறுவனத்திலிருந்து விலகி,வீட்டு வேலைகள் செய்ய ஆரம்பித்தார். முதல் பெண் பத்தாவது படிப்பதை நிறுத்தி வேலைக்கு சென்ற பிறகு தான் மூன்று வேளை சாப்பாடே கிடைத்தது!

இரண்டு வருடங்கள் கழித்து சின்ன பெண்ணை படிப்பிலிருந்து நிறுத்தி ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் 12 மணி நேர வேலை சிறுக சிறுக சேர்த்து மூத்தப் பெண்ணை திருமணம் முடித்துக்கொடுத்தனர்.  மேரி அம்மாவும், சின்ன பொண்ணும் வேலைப் பார்த்து, கடைசி பையனை படிக்க வைத்து வருகின்றனர்.

ஊருக்கு சென்ற பொழுது, பெண்பிள்ளைகளை வேலைக்கு அனுப்பி பிழைச்சுட்டு இருக்கா! என யாரோ ஒரு உறவு காதுபட பேச, அழுது அழுது அந்தம்மாவிற்கு கண்ணீர் வற்றிப்போய்விட்டது!

ஆண் சம்பாதிக்கனும் பெண் வீட்டைலிருந்து வேண்டிய ’பணிவிடைகளை’ செய்யனும் என்று சமூகம் சொல்கிறது. ஒரு வேளை புருஷன் ஓடி போய்விட்டால், இல்லை செத்து போய்விட்டால், ஊதாரியாக இருந்தால் அங்கு தான் மேரி அம்மாக்கள் உருவாகிறார்கள். மேரியம்மா வைராக்கியமாக இருந்ததால் போராடி வந்திருக்காங்க, வாழ்க்கையில் ஒரு இடத்தில் மனம் சோர்ந்திருந்தாலும்   குடும்பத்தோடு தற்கொலை செய்திருப்பார்கள். ஆணாதிக்கமும், பெண்ணடிமைத்தனமும் இருக்கும் வரை மேரி அம்மாக்கள் உருவாவதை தடுக்க முடியாது. சமூக விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுத்து அதனோடு ஆணாதிக்கத்தையும் எதிர்த்து போராடுவது தான் இதற்கு தீர்வு.