Feb 21, 2009

தீட்சிதர் ஆதிக்கம் தகர்த்தோம்! தில்லை கோயிலை மீட்டோம்!

தீட்சிதர் ஆதிக்கம் தகர்த்தோம்!
தில்லை கோயிலை மீட்டோம்!


தமிழக அரசே!

* அரசாணைப் பிறப்பித்து தில்லைக் கோயிலை அறநிலையத் துறையின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வா!

* நகை களவு, நிதி கையாடல், கோயில் நில விற்பனை, கொலை முதலான குற்றங்கள் புரிந்த தீட்சிதர்களை கைது செய்!

* நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்திருக்கும் தீண்டாமைச் சுவரை தகர்த்தெறி!

***

பேரணி

நாள் : 21.02.2009 சனிக்கிழமை

மாலை 4 மணி

துவங்கும் இடம்

பெரியார் திடல், மேலவீதி, சிதம்பரம்

பேரணி தலைமை :

தோழர் அம்பேத்கார்,
மாவட்ட அமைப்பாளர்,
வி.வி.மு. விழுப்புரம் மாவட்டம்


பொதுக்கூட்டம்

மாலை 6 மணி

இடம்: பெரியார் திட‌ல், மேல‌ வீதி,
சித‌ம்ப‌ர‌ம்

தலைமை

வழக்கறிஞர் சி. ராஜூ,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
விருத்தாசலம்


முன்னிலை

சிவ‌ன‌டியார் ஆறுமுக‌ச்சாமி,
நால்வர் மடம், குமுடிமூலை, புவனகிரி

உரை நிகழ்த்துவோர்
சிற‌ப்புரை


தோழ‌ர் ம‌ருதைய‌ன்
பொதுச்செய‌லாளர்,
ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ம்.

பேராசிரிய‌ர் பெரியார்தாச‌ன்.

மற்றும்

திரு. வி.எம்.எஸ். சந்திரபாண்டியன்,
மாநில துணைத்தலைவர்,
பாட்டாளி மக்கள் கட்சி, சிதம்பரம்

தோழர் காளியப்பன்,
மாநில இணைப் பொது செயலாளர்,
மக்கள் கலை இலக்கிய கழகம்,
தஞ்சாவூர்.


திரு. காவியச்செல்வன்,
மாநில துணை செயலாளர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி

மற்றும் தோழமை அமைப்புகள்.

புரட்சிக‌ர‌ க‌லை நிக‌ழ்ச்சி



ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌த்தின் மையக்குழுவின்
புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெறும்..

ப‌ங்கேற்போர்:

ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ம்
விவ‌சாயிக‌ள் விடுத‌லை முன்ன‌ணி
புர‌ட்சிக‌ர‌ மாண‌வ‌ர் இளைஞ‌ர் முன்ன‌ணி
புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌த்தொழிலாள‌ர் முன்ன‌ணி
விடுதைச்சிறுத்தைக‌ள் க‌ட்சி
பாட்ட‌ளி ம‌க்க‌ள் க‌ட்சி
மற்றும் சில அமைப்புகள்

நிக‌ழ்ச்சி ஒருங்கிணைப்பு:

மனித உரிமை பாதுகாப்பு மைய‌ம்
க‌ட‌லூர் மாவ‌ட்ட‌ம்.

மூன்று கோரிக்கைகளோடு இந்த பேரணி, பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.

1. தற்பொழுது போடப்பட்டிருக்கும் அறநிலையத்துறை உத்தரவின் படி கோவிலின் நிர்வாக அதிகாரிக்கு தீட்சிதரின் எடுபிடி என்ற அளவுக்கு தான் அதிகாரம் உள்ளது. இந்நிலை மாற தனிச்சிறப்பான அரசாணை மூலம் இக்கோவிலை அறநிலையத்துறை மேற்கொள்ளவேண்டும். இதன் மூலம் தீட்சிதர்கள் அர்ச்சகர் என்ற நிலைக்கு கட்டுப்படுத்தப்படுவர்.

2. தீட்சிதர்கள் மேல் நகைக்களவு, மோசடியான நிதி நிர்வாகம் (ஆண்டுக்கு மொத்த வருமானமே ரூ. 37,199 தானாம்), இன்னபிற குற்றச்சாட்டுகளை இந்து அறநிலையத்துறை விசாரிக்காமல் வைத்திருக்கிறது.

இது தவிர கோவிலில் நடந்த கொலை மற்றும் பல கிரிமினல் குற்றங்களை காவல்துறை பதிய மறுத்து, ம.உ.பா.மையம் உயர்நீதி மன்றத்தில் முறையிட்டிருக்கிறது.

இது தவிர அரசு இப்பொழுது தான் கோவிலின் சொத்து விவரங்களை திரட்டி கொண்டிருக்கிறது. பக்தர்கள் தானமாக கொடுத்துள்ள நிலம் மற்றும் வீடுகளை விற்று தீட்சிதர்கள் ஏப்பம் விட்டிருக்கிறார்கள்.

இப்படி தீட்சிதர்கள் மீதுள்ள எல்லா குற்ற வழக்குகளுக்காக கைது செய்து, விசாரிக்கப்பட்டு, சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.

3. நந்தன் நுழைந்த தெற்கு வாயிலில் எழுப்பப்பட்டிருக்கும் தீண்டாமைச் சுவர் உடனே இடிக்கப்பட வேண்டும்.

ஆகையால், இந்த பேரணி, பொதுக்கூட்டத்தின் முக்கியத்துவம் கருதி, பலரும் கலந்து கொள்ளுங்கள். நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.

Feb 20, 2009

தில்லை போராட்டம் – வரலாற்று தடங்கள் 3


குறிப்பு : தில்லையில் தொடர் போராட்டத்தில் கிடைத்த முதல் வெற்றி: தீட்சிதர்களுக்கு கிடைத்த முதல் தோல்வி.

சிற்றம்பல மேடையில் தமிழ் பாட அனுமதி வழங்கி அரசு ஆணை பிறப்பித்தது. இப்படி சொல்வது சரியல்ல! நமது தொடர் போராட்டத்தின் மூலம் அரசை ஆணை பிறப்பிக்க வைத்தோம்!

அந்த காலக்கட்டத்தில் நடந்த பல்வேறு போராட்டங்களையும், அனுபவங்களையும் இந்த கட்டுரை விவரிக்கிறது!

தில்லை போராட்டத்தின் தொடர்ச்சியாக, மூன்று முக்கிய கோரிக்கைகளோடு (பார்க்க : குருத்து பதிவு) நாளை சிதம்பரத்தில் பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெற இருக்கிறது. அனைவரும் தவறாது கலந்து கொள்ளுங்கள்.

****

தில்லை சிற்றம்பலம் ஏறியது தமிழ்! ஆலயத் தீண்டாமை அகலும் வரை ஓயாது எமது சமர்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

தில்லை நடராசன் கோயிலின் திருச்சிற்றம்பல மேடையில் மார்ச் 2ஆம் நாள் காலையில் தமிழ் ஒலித்தது. "சிற்றம்பல மேடையில் நின்று தமிழ் பாடக்கூடாது, தமிழன் பாடக்கூடாது' என்று தீட்சிதப் பார்ப்பனர்கள் அந்தக் கோயிலில் நிலைநாட்டி வந்த மொழித் தீண்டாமை வீழ்ந்தது.

இது ஒரு வரலாற்றுச் சாதனை! நந்தனையும் பெற்றான் சாம்பானையும் பலி கொண்ட தீட்சிதர்கள், வள்ளலாரையும் முத்துத்தாண்டவரையும் "ஜோதி'யில் கலக்க வைத்த தீட்சிதர்கள், தேவாரத்தை முடக்கி வைத்து, மன்னன் இராசராசனுக்கே சவால் விட்ட தீட்சிதர்கள், பிரதமர்கள் முதல் நீதிபதிகள் வரை அனைவரையும் தமது குடுமியில் முடிந்து வைத்துக் கொண்டு, அக்கோயிலையே தமது பூர்வீகச் சொத்தென்று உரிமை கொண்டாடும் தீட்சிதர்கள், சிற்றம்பல மேடையை சீட்டுக்கட்டு மேடையாகவும், ஆயிரங்கால் மண்டபத்தை மதுபான விடுதியாகவும், கோயில் திருக்குளத்தைப் பிணம் மறைக்கும் கொலைக்களமாகவும், ராஜ கோபுரத்தை காமக்களியாட்ட மன்றமாகவும் மாற்றிவிட்டு, மயிரளவும் அச்சமின்றி மதர்ப்புடன் திரிந்து வந்த தீட்சிதர்கள்...

மார்ச் 2ஆம் நாளன்று முதன் முறையாக வீழ்த்தப்பட்டார்கள்.
தேவாரம் பாடிய "குற்றத்துக்காக' 8 ஆண்டுகளுக்கு முன் இதே சிற்றம்பல மேடையிலிருந்து சிவனடியார் ஆறுமுகசாமியின் கையை உடைத்துத் தூக்கி வீசினார்கள் தீட்சிதர்கள். இன்று தனது 79 வயதில் கண்கள் மங்கி கால்கள் தள்ளாடிய போதிலும், மனதில் சுயமரியாதை உணர்வு குன்றாத அந்தச் சிவனடியாரை, யானை மீதேற்றி அதே சிற்றம்பல மேடையில் கொண்டு வந்து இறக்கினார்கள், செஞ்சட்டையணிந்த எமது தோழர்கள்.

"சிற்றம்பல மேடையில் பக்தர்கள் அனைவரும் தேவாரம் பாடலாம்' என்று பிப்.29ஆம் தேதியன்று ஆணை பிறப்பித்து விட்டது அரசு. எனினும், தீண்டாமை வெறி பிடித்த தீட்சிதர்கள் அதனை மதிக்கவில்லை. ஆறுமுகசாமி பாடத் தொடங்கியவுடன் கருவறையை மூடினார்கள்; நடராசனுக்குக் குறுக்கே நந்தியாய் மறைத்து நின்றார்கள். சூத்திரன் வாயிலிருந்து வரும் நீச பாஷையான தமிழ், இறைவனின் காதில் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக ஊளையிட்டார்கள், ஆறுமுகசாமியை அடித்தார்கள்; அரசு ஆணையை அமல்படுத்த வந்த போலீசு அதிகாரிகளையும் தாக்கினார்கள். ஆயிரமாண்டுகளாய் இந்த மண்ணைப் பிடித்தாட்டி வரும் சாதிப்பேய் மலையேற மறுத்து "ஊழிக்கூத்து' ஆடியதை அன்று நாடே கண்டது; நடராசனும் கண்டான். இந்தப் பார்ப்பன வெறிக்கூத்தை வென்றடக்கிய பின்னர்தான் அம்பலத்தில் ஏறியது தமிழ்!

இது நெடியதொரு போராட்டம், சிற்றம்பல மேடையேறித் தேவாரம் பாடப் பலமுறை மு
யன்றிருக்கிறார் ஆறுமுகசாமி. ஒவ்வொரு முறையும் அவரைத் துரத்தியிருக்கிறார்கள் தீட்சிதர்கள். ""தேவாரம் மீட்கப்பட்ட ஆலயத்திலேயே தேவாரம் பாடத் தடையா, இந்த அநீதியைக் கேட்பாரில்லையா?'' என்று துண்டறிக்கைகளை அச்சிட்டுத் தனியொரு மனிதனாக நின்று சிதம்பரம் கோயிலுக்கு வருகின்ற பக்தர்களிடமெல்லாம் விநியோகித்திருக்கிறார். பயன் ஏதும் விளையவில்லை.

8.5.2000 அன்று தன்னந்தனியனாகச் சிற்றம்பல மேடை ஏறிப் பாடத் தொடங்கினார் ஆறுமுகசாமி. வாய் திறந்து அடியெடுத்த மறுகணமே அவரை அடித்து வீசினார்கள் தீட்சிதக் காலிகள். ஆடல்வல்லான் சாட்சியாக நடந்தது இந்த அட்டூழியம். ஆனால் கேட்பார் யாருமில்லை. முறிந்த கையுடன் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார் ஆறுமுகசாமி.
ஒப்புக்கு ஒரு வழக்கு பதிவு செய்தது போலீசு. "சாட்சியில்லை' என்று தீட்சிதர்களை விடுவித்தது நீதிமன்றம். வழக்காடக் காசில்லாமல், இலவசமாய் வாதாட ஒரு வக்கீலைத் தேடி மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர் ராஜுவிடம் வந்து சேர்ந்தார் ஆறுமுகசாமி. ""இது வெறும் மனித உரிமை வழக்கல்ல; மக்களை நசுக்கிக் கொண்டிருக்கும் பார்ப்பனியச் சழக்கு'' என்பதால், ஆறுமுகசாமியை ம.க.இ.க.வின் தமிழ் மக்கள் இசைவிழா மேடைக்கு அழைத்து வந்தார் வழக்குரைஞர் ராஜு. ""தீட்சிதர்களின் கொட்டத்தை ஒடுக்குவோம்! தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழை அரங்கேற்றுவோம்!'' என ஆயிரக்கணக்கான மக்கள்முன் அன்று அறிவித்தோம்.

கடந்த 4 ஆண்டுகளில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம், ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகளின் முன்முயற்சியில், சிதம்பரம் நகரின் விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., தி.க. போன்ற அமைப்புகளின் பங்களிப்புடன் சிதம்பரத்தில் எண்ணற்ற பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் வி.வி.சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் போன்றோர் இம்முயற்சிக்கு துணை நின்றிருக்கின்றனர். நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் வழியாக இப்பிரச்சினையை நாடே அறிந்திருக்கிறது. எமது தோழர்களும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் இளம் வழக்குரைஞர்களும் இரவு பகலாக இதற்குப் பாடுபட்டிருக்கிறார்கள். எல்லா முயற்சிகளையும் நீதிமன்றத்தின் துணை கொண்டும், அதிகாரத் தாழ்வாரங்களில் அவர்கள் பெற்றிருக்கும் செல்வாக்கைக் கொண்டும் முடக்கி வந்திருக்கிறார்கள் தீட்சிதர்கள்.

"சிற்றம்பலத்தில் தேவாரம் பாடலாம்' என்ற இந்த அரசாணை தானாக வந்துவிடவில்லை; பல்வேறு சதிகளையும் மீறி அரசாங்கத்தின் வாயிலிருந்து இந்த அரசாணையை நாங்கள் வரவழைத்திருக்கிறோம். அரசாணை வந்த பிறகும் தமிழை அம்பலத்தில் ஏற்றுவதற்காக அக்கோயில் வாசலிலே அன்று தடியடி பட்டு இரத்தம் சிந்தியிருக்கிறார்கள் எமது தோழர்கள். மார்ச் 2ஆம் நாள் மாலை ஆறுமுகசாமியும் எமது தோழர்களும் சிறைப்படுத்தப்பட்டனர். அடுத்தநாள் "சிற்றம்பல மேடையேறித் தமிழ் பாட யாரேனும் ஒரு சிவனடியார் வருவார்' என்று நாங்கள் காத்திருந்தோம். அடியார்கள் இல்லை, ஓதுவார்கள் இல்லை, தமிழ் ஆர்வலர்கள் இல்லை, ஒருவரும் வரவில்லை. இந்த அடிமைத்தனத்தையும் கோழைத்தனத்தையும் கண்டு மனம் நொந்து எமது தோழர்களே சிற்றம்பலம் ஏறிப் பாடினார்கள். அங்கே நாங்கள் நடத்தியது வழிபாடு அல்ல; இழி மொழி என்று தமிழையும், சூத்திரர்பஞ்சமர் என்று உழைக்கும் மக்களையும் இழிவுபடுத்தும் பார்ப்பனக் கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டம்!

""அப்பாவி சிவனடியாரைப் பயன்படுத்திக் கொண்டு, ஆத்திகர்களின் பிரச்சினையில் நாத்திகர்களான நக்சலைட்டுகள் புகுந்து ஆதாயம் தேடுகிறார்கள்'' என்று அலறுகிறது ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பல். மணல் திட்டை இடித்தால் இந்துக்களின் மனம் புண்படும் என்று கூறும் பா.ஜனதா, சு.சாமி, ஜெயலலிதா கும்பல் தேவாரத்துக்காகக் குரல் கொடுப்பதை நாங்களா தடுத்தோம்? சிற்றம்பல மேடையில் தமிழ் ஏறுவதையும், கருவறைக்குள் பார்ப்பனரல்லாதார் நுழைவதையும் சகிக்கவொண்ணாத இந்தச் சாதிவெறியர்கள், இதை ஆத்திகர் நாத்திகர் பிரச்சினையென்று திசைதிருப்புகிறார்கள்.

அன்று அப்பாவி சிவனடியாரை அடித்து வீழ்த்திய தீட்சிதர்கள் ஆத்திகர்கள்தான். தில்லையைச் சுற்றியிருக்கும் திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுரம் போன்ற ஆதீனங்கள் அனைவரும் ஆத்திகர்கள்தான். சைவமும் தமிழும் பிசைந்து வயிறு வளர்த்த இந்தத் துறவிகளோ, பட்டங்களும் விருதுகளும் சூடிய சைவ அறிஞர்களோ திருச்சிற்றம்பல மேடையேறுவதை நாங்களா தடுத்தோம்? ஆதீனங்களாலும் ஆன்மீகவாதிகளாலும் ஏளனம் செய்து புறக்கணிக்கப்பட்ட பிறகுதான், ஆண்டவனை மறுக்கும் கம்யூனிஸ்டுகளான எங்களைத் தேடி வந்தார் ஆறுமுகசாமி.

சைவ மெய்யன்பர்களெல்லாம் பதவியும் பவிசும் பெறுவதற்காக பார்ப்பனக் கும்பலுடன் கள்ள உறவு வைத்திருப்பதனால்தான் சிற்றம்பல மேடையில் தமிழன் ஏற முடியவில்லை. தமிழைத் தம் பிழைப்புக்கான கருவியாக மாற்றிக் கொண்ட கட்சிகளும் அமைப்புகளும் செய்துவரும் துரோகத்தினால்தான் ஏழைத் தமிழ் அம்பலமேற முடியவில்லை. இல்லையென்றால் தேவாரத்தை மீட்டெடுத்த தில்லைக் கோயிலிலேயே அதனைப் புதைப்பதற்கு தீட்சிதர்களால் இயன்றிருக்குமா?

சிற்றம்பலத்தில் தமிழை ஏற்ற, தாய்மொழியில் இறைவனைப் போற்ற பக்தனுக்கு அரசாணையின் துணை எதற்கு? போலீசின் துணை எதற்கு?

சட்டம் உரிமையை வழங்கத்தான் முடியும். அந்த உரிமையைப் பயன்படுத்தும் உணர்வை வழங்க முடியாது. அந்த உணர்வென்பது பக்தி உணர்வல்ல. பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிரான சுயமரியாதை உணர்வு. சாதி ஏற்றத்தாழ்வுக்கு எதிரான சமத்துவ உணர்வு. சமஸ்கிருத ஆதிக்கத்துக்கு எதிரான தமிழ் உணர்வு.

தில்லையில் நாம் பெற்றிருக்கும் இந்த வெற்றி ஒரு துவக்கப்புள்ளி. தீட்சிதர்கள் சரணடையவுமில்லை, சாதி ஆதிக்கத்தை விடவுமில்லை. நந்தன் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பியுள்ள தீண்டாமைச் சுவர் ஒரு அவமானச் சின்னமாக இன்னும் நின்று கொண்டிருக்கிறது. அது தகர்க்கப்பட வேண்டும். தீட்சிதர்கள் திருடிக் கொண்ட தில்லைக் கோயிலை அறநிலைய ஆட்சித்துறை கைப்பற்ற வேண்டும்.

சமஸ்கிருத வழிபாட்டை அகற்றுதல், தமிழ் வழிபாடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராதல்... என நீண்டதொரு போராட்டத்தை நாம் நடத்த வேண்டியிருக்கிறது. நடத்துவோம்!

வர்க்கம், சாதி, இனம், மொழி, பாலினம் போன்ற ஒவ்வொரு துறையிலும் நிலவும் ஆதிக்கத்தை எதிர்த்து கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் போராடுவோம்! அன்று, பார்ப்பன ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் எதிர்த்து திருவரங்கம் கருவறைக்குள் நுழைந்து அரங்கநாதனைத் தீண்டினோம்! இன்று, சிற்றம்பலத்தைத் தீண்டியிருக்கிறது தமிழ்! எல்லா வகைத் தீண்டாமைகளையும் ஆதிக்கங்களையும் எதிர்த்துப் போராடுவோம்!
உங்கள் துணையுடன் வெற்றியும் பெறுவோம்!

நன்றி – தமிழ்சர்க்கிள்

புதிய கலாச்சார இதழில் வெளிவந்தது.

Feb 18, 2009

தில்லை போராட்டம் - வரலாற்று தடங்கள் 2


குறிப்பு : தொடர்ச்சியான தில்லைப் போராட்டதில், ஆகஸ்ட் 2006-ல் அடுத்தக்கட்ட போராட்டம் தொடர்ந்தது.

தீட்சிதர்கள் தான், சாதித்திமிர்த்தனமாக தங்களைத் தவிர வேறு யாரும் சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடக்கூடாது என்று சொன்னால், நீதிமன்றமும் அதே கருத்தை தீர்ப்பாக சொன்னது.

இப்படி அநீதியான தீர்ப்பால், மக்கள் மன்றத்தில் நீதிமன்றம் தீட்சிதர்களோடு அம்பலப்பட்டுத்தான் போனது. கூட்டமைப்பு, மக்கள் மத்தியில் தீவிரமாக பிரச்சாரம் செய்த வேலைகளை இந்த கட்டுரை விரிவாக பேசுகிறது.

இப்பொழுது, தீட்சிதர்கள் தில்லை கோவிலை தங்களுக்குத்தான் சொந்தம் என உரிமை கொண்டாடுகிறார்கள். உண்மையில், இந்த கோவில் யாருக்கு சொந்தம் என்பதையும் இந்த கட்டுரை விவரிக்கிறது.
***

கட்டுரையிலிருந்து... சில பகுதிகள்

//ஆகஸ்டு 5 அன்று, சிதம்பரம் மேலவீதியில் உள்ள பெரியார் திடலில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.//

//இப்பிரச்சினையை விளக்கி சிதம்பரம் நகரின் முக்கிய இடங்களிலும் மற்றும் அண்ணாமலை நகர், குமுடிமூலை, கீரப்பாளையம், புத்தூர், காட்டுமன்னார் கோயில், சேத்தியாத்தோப்பு ஆகிய பகுதிகளிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன//

//பொதுமக்கள் மத்தியில் 25,000 துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன; 1,000க்கும் அதிகமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.//

//ஆறுமுகசாமி தேவாரம் பாட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும்; வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் எனக் கோரியும் 28.7.06 அன்று நீதிமன்றத்தின் முன் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது//

//பத்து நாட்களில் ஒரு இலட்சம் கையெழுத்துப் பெற்று, அந்த மனுவை தமிழக முதல்வரிடம் கொடுப்பது என்ற இலக்கோடு, இந்தக் கையெழுத்து இயக்கம் வீச்சாக நடைபெற்று வருகிறது.//

****

திருச்சிற்றம்பலத்தில் தேவாரம் திருவாசகம் பாடத்தடை - மனுநீதி தீர்ப்பு

சிதம்பரம் நடராஜர் கோவில் கருவறையின் எதிரே அமைந்துள்ள திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாடுவதை தில்லைவாழ் தீட்சிதர்கள், சாதிவெறி கொண்டு தடுத்து வருவதையும்; அப்பார்ப்பனக் கும்பலின் விருப்பத்துக்கு ஏற்ப சிதம்பரம் உரிமையியல் நீதிமன்றம், சிவனடியார் ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையேறித் தேவாரம் திருவாசகம் பாடுவதற்கு இடைக்கால தடை விதித்திருந்ததையும்; அத்தடையை மீறி ஆறுமுகசாமி பாடச் சென்ற பொழுது, அவரையும், அவருக்கு ஆதரவாகச் சென்றவர்களையும் கோவில் வாசலைக்கூட நெருங்க விடாமல் தடுத்து போலீசார் கைது செய்ததையும் கடந்த இதழில் விரிவாக எழுதியிருந்தோம். தமிழ் மொழியின் சுயமரியாதையைக் காக்க, சிறு பொறியாக எழுந்த அந்தப் போராட்டம், இப்பொழுது மக்கள் இயக்கமாக வளர்ந்து வருகிறது.


போலீசையும், நீதிமன்றத்தையும் கைத்தடியாக வைத்துக் கொண்டு பீதியூட்டினால், போராட்டம் பிசுபிசுத்துப் போய்விடும் என தீட்சிதர் கும்பல் கனவு கண்டது. ஆனால், தமிழுக்காகப் போராடுபவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும்; நீதிமன்றம் போலீசின் பார்ப்பனக் கைக்கூலித்தனத்தை அம்பலப்படுத்தியும் உடனடியாக எடுக்கப்பட்ட சுவரொட்டி இயக்கமும்; அதனைத் தொடர்ந்து நடந்த தெருமுனைப் பிரச்சாரம், கண்டனப் பொதுக்கூட்டம் ஆகியவையும் தீட்சிதர்களின் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டன.

சிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாடச் சென்ற சிவனடியார் ஆறுமுகசாமியைத் தாக்கியும் தடுத்தும் வெறியாட்டம் போடும் தீட்சிதர் பார்ப்பனர்களைக் கண்டித்து, ஆகஸ்டு 5 அன்று, சிதம்பரம் மேலவீதியில் உள்ள பெரியார் திடலில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்பாக, இப்பிரச்சினையை விளக்கி சிதம்பரம் நகரின் முக்கிய இடங்களிலும் மற்றும் அண்ணாமலை நகர், குமுடிமூலை, கீரப்பாளையம், புத்தூர், காட்டுமன்னார் கோயில், சேத்தியாத்தோப்பு ஆகிய பகுதிகளிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

மனித உரிமை பாதுகாப்பு மையம் ஒருங்கிணைத்து நடத்திய இத்தெருமுனைக் கூட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம், சி.பி.எம்., வி.வி.மு., பு.ஜ.தொ.மு., ஆகிய அமைப்புகளும்; வழக்குரைஞர்கள் திருமார்பன், கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இத்தெருமுனைக் கூட்டங்களில், தமிழையும், தமிழனையும் இழிவுபடுத்தும் தீட்சிதர்களின் சாதித் திமிரும்; அக்கும்பல் தங்களின் காமவெறி களியாட்டங்களுக்கு நடராஜர் கோவிலைக் கேடாகப் பயன்படுத்தி வருவதும் அம்பலப்படுத்தப்பட்டது.

கண்டனப் பொதுக்கூட்டத்தின் அவசியத்தை விளக்கி கடலூர் மாவட்டம் முழுவதும் பேருந்துப் பிரச்சாரம் செய்யப்பட்டதோடு, பொதுமக்கள் மத்தியில் 25,000 துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன; 1,000க்கும் அதிகமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

சிவனடியார் ஆறுமுகசாமி முன்னிலை வகிக்க, மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் இராசு தலைமையில் ஆகஸ்ட் 5 அன்று நடந்த கண்டனப் பொதுக்கூட்டத்தில், முன்னாள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. வீ.வீ.சுவாமிநாதன்; பா.ம.க.வின் மாநிலத் துணைத் தலைவர் திரு. வீ.எம்.எஸ்.சந்திரபாண்டியன்; பா.ம.கவின் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. வேல்முருகன்; தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் தோழர் பால்கி; சி.பி.எம்.இன் கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் செ.தனசேகரன்; சி.பி.ஐ.இன் கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் மணிவாசகம்; விடுதலைச் சிறுத்தைகள் இணைப் பொதுச் செயலாளர் தோழர் மா.செ.சிந்தனைச் செல்வன்; திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் தோழர் துரை சந்திரசேகரன்; விடுதலைச் சிறுத்தைகள் கடலூர் மாவட்டச் செயலர் தோழர் இரா. காவியச் செல்வன்; கடலூர் நகரத் தமிழ்ச் சங்கத் தலைவர் பேரா. இரா.ச.குழந்தைவேலனார் மற்றும் ம.க.இ.க. மாநில இணைப் பொதுச்செயலாளர் தோழர் காளியப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

""சிவனடியார் ஆறுமுகசாமி தனியொரு ஆளில்லை; அவருக்குப் பின்னே தமிழ் ஆர்வலர்கள் திரண்டுள்ளனர்'' எனச் சுட்டிக் காட்டப்பட்ட இப்பொதுக்கூட்டத்தில், ""சிதம்பரம் நடராஜர்
கோவிலை தீட்சிதர்களின் கைகளில் இருந்து பிடுங்கி மக்கள் சொத்தாக மாற்ற வேண்டும்; ஆலயத்தை முற்றுகையிடும் மக்கள் போராட்டத்தை நடத்த வேண்டும்'' என்ற கருத்துகளும் வலியுறுத்தப்பட்டன. 2,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தன்னார்வத்தோடு திரண்டு வந்து பங்கேற்ற இக்கண்டனப் பொதுக்கூட்டத்தில், ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.


""திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாட வேண்டும்'' என்ற ஆறுமுகசாமியின் கோரிக்கைக்கு நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகுவதைக் கண்டு ஆடிப் போன தீட்சிதர் கும்பல், தில்லை திருமறைக் கழகம், அர்த்தஜாம சிவபுராணக்குழு போன்ற ""லெட்டர் பேடு'' அமைப்புகளில் புகுந்து கொண்டு, ஒரு கலந்துரையாடல் கூட்டத்தை சிதம்பரத்தில் நடத்தியது. தீட்சிதர்களே பசை வாளியைத் தூக்கிக் கொண்டு போஸ்டர் ஒட்டி நடத்திய இக்கலந்துரையாடல் கூட்டத்தில், பார்ப்பன பாதந்தாங்கிகளைத் தவிர வேறு யாரும் கலந்து கொள்ளவில்லை. ""தேவாரம் பாட வேண்டும் என வீண் விவகாரம் செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்'' எனப் பேசி வன்முறையைத் தூண்டி விட இக்கலந்துரையாடலைப் பயன்படுத்திக் கொண்டது. தீட்சிதர் கும்பல்.

இதுவொருபுறமிருக்க, ஆறுமுகசாமிக்கு எதிராக தீட்சிதர்கள் தொடுத்த வழக்கை, ஊறப் போடும் விதத்தில் நீதிமன்றம் மெத்தனமாக நடந்து கொண்டது. இதனைக் கண்டித்தும், ஆறுமுகசாமி தேவாரம் பாட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும்; வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் எனக் கோரியும் 28.7.06 அன்று நீதிமன்றத்தின் முன் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இவ்வழக்கு விசாரணையின் பொழுது, ""ஆறுமுகசாமி கால பூஜை நேரத்தில் தேவாரம் திருவாசகம் பாடப் போவதாகக் கூறுகிறார். அதனால்தான், அவர் பாடத் தடை விதிக்கக் கோருகிறோமேயன்றி, எங்களுக்கு வேறு உள்நோக்கம் இல்லை'' என தீட்சிதர் கும்பல் நியாயவான்களைப் போல வாதாடினர். இதற்குப் பதில் அளித்த ஆறுமுகசாமி தரப்பு வழக்குரைஞர்கள், ""பூஜை நேரத்தில் தேவாரம் திருவாசகம் பாடக் கோரமாட்டோம் என இங்கேயே எழுதித் தந்து விடுகிறோம். மற்ற நேரங்களில் ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையேறிப் பாடுவதைத் தடுக்கக் கூடாது'' எனக் கூறி, தீட்சிதர்களின் பாசாங்கை அம்பலப்படுத்தினர்.

ஆனால், ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையேறித் தேவாரம் திருவாசகம் பாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை, நிரந்தரத் தடையாக மாற்றி வெளிவந்திருக்கும் உரிமையியல் நீதிமன்றத் தீர்ப்போ, எவ்விதப் பாசாங்கும் இன்றி அப்பட்டமாகத் தீண்டாமையைத் தூக்கிப் பிடிக்கிறது.

""தீட்சிதர்களைத் தவிர்த்து மற்றவர்களையும் பாட அனுமதித்தால் அந்தத் திருக்கோயிலின் புனிதத் தன்மை கெட்டு விடும்; கோயிலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பும், நட்டமும் ஏற்படும். எதிர்மனுதாரர் ஆறுமுகசாமியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டால் திருச்சிற்றம்பல மேடையில் கலவரம் ஏற்பட வாய்ப்புண்டு. கனகசபை மீது ஏறி நின்று பாடுவதற்கு தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஐதீக நடைமுறை, பழக்க வழக்கம் தடையாக உள்ளது. அப்படி பாட முற்பட்டால் அது கோயிலின் நிர்வாகம் மற்றும் ஒழுங்குமுறைகளை மீறிய செயலாகும்.''


""மீண்டும் மீண்டும் அவர் திருச்சபையில் பாடவேண்டும் என்று பலருடைய கெட்ட துர்போதனைகளின் மூலமாகச் செயல்பட்டு வருவது நன்கு தெரிகிறது. கடலூர் மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு மைய நிர்வாகிகள் தூண்டுதலின் பேரில் இந்த எதிர்மனுதாரர் செயல்பட்டு வருகிறார்'' எனப் பார்ப்பனக் கும்பலே அதிசயிக்கும்படி தீண்டாமை விஷம் தீர்ப்பில் கக்கப்பட்டுள்ளது.

தீட்சிதர்களைத் தவிர்த்து மற்றவர்களைப் பாட அனுமதித்தால், அந்தத் திருக்கோயிலின் புனிதத்தன்மை கெட்டு விடும் என்பதற்கு, தீண்டாமை சாதிப் பாகுபாட்டைத் தவிர வேறென்ன பொருள் கொள்ள முடியும்?

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, 8.5.2000 அன்று ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையேறிப் பாட முயன்றபொழுது, தீட்சிதர்கள் கோயிலுக்குள்ளேயே, பக்தர்களின் கண் முன்னாலேயே ஆறுமுகசாமியைக் கொடூரமாகத் தாக்கி, கையை முறித்து, கோவிலுக்கு வெளியே வீசியெறிந்தனர். அதனால்தான், ஆறுமுகசாமி, தான் திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப் பாடுவதற்கு போலீசு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்திருந்தார். இதன்படி பார்த்தால், தீட்சிதர்களைத்தான் வன்முறையாளர்களாகக் குற்றம் சாட்டியிருக்க வேண்டும். ஆனால், தீர்ப்போ, மற்றவர்களை (பார்ப்பனர் அல்லாதவர்களை) வன்முறையாளர்களாக, அபாண்டமாகப் பழி சுமத்துகிது.

ஆறுமுகசாமி பாடுவதற்குத் தடை கேட்டு தீட்சிதர்கள் கொடுத்திருந்த மனுவில், கோவிலில் விலையுயர்ந்த நகைகள் இருப்பதை ஒரு காரணமாகக் காட்டியிருந்தனர். தீட்சிதர்களின் இந்த வாதத்தைதான், ""மற்றவர்களைப் பாட அனுமதித்தால் கோயிலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பும், நட்டமும் ஏற்படும்'' எனத் தீர்ப்பு வாந்தியெடுத்துள்ளது.

கோயிலுக்கு வரும் வருமானம் பற்றி முறையாகக் கணக்குக் காட்ட மறுக்கும் தீட்சிதர்கள்; அந்த ஆலயத்தின் நிர்வாகத்தைக் கண்காணிக்க அரசு அதிகாரி நியமிக்கப்படுவதை எதிர்க்கும் தீட்சிதர்கள் கோயில் நகைகள் பற்றி ஒப்பாரி வைப்பது மோசடித்தனமானது. மேலும், ஏற்கெனவே கோயில் நகைகள் காணாமல் போனதற்கும், தீட்சிதர்களுக்கும் தொடர்புண்டு என்பது ஊரறிந்த உண்மையாக இருக்கிறது.

""இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக, 1000 ஏக்கர் நிலமுள்ளது; உண்டியல் வைக்காமல், பக்தர்களிடமிருந்து தீட்சிதர்களே நேரடியாகப் பணம் பெறுகிறார்கள். நகைகள் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் காரணங்களால் இக்கோவிலில் அரசு நிர்வாக அதிகாரியை நியமிப்பது சரி'' என சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி வெங்கடாசலய்யா 1997இல் தீர்ப்பளித்திருக்கிறார்.

மதுரையை ஆண்ட சுந்தரபாண்டியன், விஜய நகரப் பேரரசன் கிருஷ்ண தேவராயன், பல்லவ மன்னன் சிங்க தேவன் ஆகிய மன்னர்களால் கட்டப்பட்டது சிதம்பரம் நடராஜர் கோயில் என்பதுதான் வரலாறு. சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரத்தில் தற்பொழுது வசித்து வரும் வீரப்ப சோழனார் என்ற முன்னாள் ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்த முன்னோர்களிடம்தான் நடராஜர் கோவிலின் நிர்வாகம் இருந்து வந்தது. இரவில் கோவில் நடையை மூடிய பிறகு, கோவில் சாவியைப் பல்லக்கில் வைத்து பிச்சாவரம் சோழனார் ஜமீன்தார் வீட்டில் ஒப்படைக்க வேண்டும். காலையில் போய் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் மரபாக இருந்து வந்தது. அந்த ஜமீன்தார் குடும்பத்தை ஏமாற்றி, கோவில் நிர்வாகத்தை தீட்சிதர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள் என்பது உலகமே அறிந்த உண்மை. வடநாட்டில் இருந்து ஓட்டி வரப்பட்டு சிதம்பரத்தில் குடியமர்த்தப்பட்ட தீட்சிதர்கள், இப்பொழுது சிதம்பரம் கோயில் தொன்று தொட்டே தங்களுக்குச் சொந்தமாக இருந்து வருவதாக வரலாற்றையே திரித்து விட்டார்கள்.

இப்படிப்பட்ட நிலையில், முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்த கதையாக, தீட்சிதர்களை யோக்கியவான்களாகவும், மற்றவர்களைத் திருடர்கள் போலவும் தீர்ப்பு அபாண்டமாகப் பழி போடுகிறது.

ஐதீகம் மரபைக் காட்டி, திருச்சிற்றம்பல மேடையில் தீட்சிதர்கள்தான் தேவாரம்திருவாசகம் பாட உரிமை படைத்தவர்கள் என்கிறது தீர்ப்பு. ஆனால், 1987க்கு முன்பு வரை, தீட்சிதர்கள் கூட திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் திருவாசகம் பாடியது கிடையாது. திருச்சிற்றம்பல மேடைக்குக் கீழிருக்கும் மகாமண்டபத்தைத் தாண்டி தேவாரம் திருவாசகம் வருவதற்கு தீட்சிதர்கள் அனுமதித்ததேயில்லை. இத்தீண்டாமைக்கு எதிராக தமிழ் அறிஞர்கள் நடத்திய போராட்டத்தாலும்; 1987இல் இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த வீ.வீ. சுவாமிநாதன் கொடுத்த நெருக்குதலாலும், தீட்சிதர்கள் தாங்களே திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் திருவாசகம் பாடுவதாகச் சமரசம் செய்து கொண்டார்கள்.

1999இல் கடலூர் மாவட்ட நீதிமன்ற உத்தரவின்படி, சிவனடியார் ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடை ஏறி, தேவாரம் திருவாசகம் பாடி நடராஜனை வழிபட்டுள்ளார். இந்தச் செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தவுடன், மற்றவர்களும் திருச்சிற்றம்பல மேடை ஏறிப் பாடி விடுவார்களோ என அரண்டு போன தீட்சிதர் கும்பல், தங்களுக்கு மட்டுமே அந்த உரிமையுண்டு எனப் புளுகத் தொடங்கியது. தங்கள் சுய இலாபத்திற்காக ஐதீகம் மரபுகளை உடைப்பதும், உருவாக்குவதும் பார்ப்பனர்களுக்குக் கைவந்த கலையல்லவா!

எல்லாவற்றுக்கும் மேலாக, ஏழாம் நூற்றாண்டு முதல் 12ஆம் நூற்றாண்டு வரை தமிழகக் கோயில்களில் தேவார திருவாசகமும், நாலாயிர திவ்ய பிரபந்தங்களும் ஓதப்பட்டதற்கான கல்வெட்டுச் சான்றுகள் ஏராளமாக உள்ளன. பார்ப்பனர்களைப் போலவே, தீர்ப்பும் இந்த வரலாற்று உண்மைகளைக் குழி தோண்டி புதைத்து விட்டு, தமிழுக்கும், தமிழனுக்கும் தடை போடுகிறது, சிதம்பரம் கோயிலில் விற்கப்படும் ""ஸ்தல புராணம்'' என்ற புத்தகத்தில் (இதுதான் தீட்சிதர்கள் கொடுத்த வரலாற்று ஆதாரமும்கூட) கூறப்படும் ""வரலாற்று''ப் பிதற்றல்களை ஆதாரமாகக் காட்டும் இந்தத் தீர்ப்பை, அறிவும், மானமும் உள்ள எவரேனும் ஏற்றுக் கொள்ள முடியுமா?

ஆறுமுகசாமியை மனித உரிமை பாதுகாப்பு மையம் தூண்டி விடுவதாகப் புலனாய்வு செய்திருக்கிறது தீர்ப்பு. 1999இல், திருச்சிற்றம்பல மேடை ஏறிப் பாட முயன்ற ஆறுமுகசாமியை தீட்சிதர்கள் தடுத்தபொழுது, ஆறுமுகசாமி கடலூர் மாவட்ட நீதிபதியிடம் தனது வழிபாட்டு உரிமைக்காக மனு கொடுத்தார். அப்பொழுது அந்த உரிமைக்காக அவரைத் தூண்டிவிட்டது யார் என்றும் புலனாய்வு செய்திருந்தால், தீர்ப்பு இன்னும் தெளிவாக இருந்திருக்கும்.


""நந்தன் முக்தியடைந்த இடம் தான் சிதம்பரம் நடராஜர் கோவில்'' என்ற பார்ப்பனப் புளுகை, வரலாற்று மோசடியை மேற்கோள் காட்டும் தீர்ப்பில், உண்மையையும், நியாயத்தையும் முட்டாள்கூடத் தேட மாட்டான்.

நியாயமாகப் பார்த்தால் தமிழர்களைத் தீண்டத்தகாதவர்களாகவும், திருடர்களாகவும், வன்முறையாளர்களாகவும் சித்தரித்துத் தீர்ப்பை எழுதிய நீதிபதி அம்பேத்கரைப் பதவி நீக்கம் செய்து, அவரை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்க வேண்டும். ஆனால், சூத்திரர்களின் ஆட்சி எனச் சொல்லிக் கொள்ளப்படும் கருணாநிதி அரசின் கீழ் இருக்கும் போலீசோ, நீதிபதி அம்பேத்கரைக் கண்டித்து சுவரொட்டி இயக்கம் எடுத்த வி.வி.மு., பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு. ஆகிய பரட்சிகர அமைப்புகள் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

இத்தீர்ப்பை பல்வேறு சனநாயக அமைப்புகளும், தமிழின அமைப்புகளும் கண்டித்துள்ளன. மேலும், இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக ஆறுமுகசாமி தரப்பு வழக்குரைஞர்கள் கூறியுள்ளனர்.


இது ஒருபுறமிருக்க, வீட்டுத் தரகர் ராயர், மூர்த்தி தீட்சிதர், செல்வராஜ் ஆகியோர் சிதம்பரம் கோயிலில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு இறந்து கிடந்ததைப் பற்றி விசாரிக்க வேண்டும் என முன்னாள் ஆடூர் ஊராட்சி மன்றத் தலைவர் என்.இளங்கோவன் கொடுத்த புகாரை விசாரிக்காமல் போலீசார் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். இப்புகார் தொடர்பாக, முன்னாள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் வீ.வீ. சாமிநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாம்பசிவம் ஆகியோர் அனுப்பியுள்ள நினைவூட்டல் கடிதங்களையும் அதிகார வர்க்கம் கண்டு கொள்ளவேயில்லை.

இந்நிலையில் இப்புகார் மீது உடனடியாக போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடுத்த வழக்கை ஏற்றுக் கொண்டுள்ள உயர்நீதி மன்றம், இது தொடர்பாக பதில் அளிக்கக் கோரி தமிழக அரசுக்கு ""நோட்டீஸ்'' அனுப்பியிருக்கிறது.

சிதம்பரம் கோயிலுக்குள் நுழைய விடாமல் ஆறுமுகசாமி கைது செய்யப்பட்ட விவகாரம் சட்டசபையில் எழுப்பப்பட்ட பொழுது, ""இந்தச் சட்டப் பிரச்சினை குறித்து மூத்த வழக்கறிஞர்களுடன் ஆராய்ந்து பார்த்து, இதை எப்படி எதிர் கொள்ளலாம் என அரசு முடிவு செய்யும்'' என்று தமிழக முதல்வர் கருணாநிதி உறுதியளித்தார். இதனை நினைவூட்டியும்; ""மற்றவர்கள்'' திருச்சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம் திருவாசகம் பாடத் தடை செய்து தீர்ப்பு வந்துள்ள நிலையில், தமிழக அரசு இனியும் மெத்தனமாக இல்லாமல், இப்பிரச்சினையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும் கையெழுத்து இயக்கமொன்றை, சிதம்பரம் நகர் பகுதியில் மனித உரிமை பாதுகாப்பு மையம், தி.க., பா.ம.க., சி.பி.ஐ., சி.பி.எம்., வி.வி.மு., பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு. ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தி வருகின்றன.


பத்து நாட்களில் ஒரு இலட்சம் கையெழுத்துப் பெற்று, அந்த மனுவை தமிழக முதல்வரிடம் கொடுப்பது என்ற இலக்கோடு, இந்தக் கையெழுத்து இயக்கம் வீச்சாக நடைபெற்று வருகிறது. சிதம்பரம் நகரப் பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள இதற்கான சாவடியில் ஆறுமுகசாமி தங்கியிருந்து இப்பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் அளித்து வருகிறார். கையெழுத்து இயக்கம் தொடங்கிய முதல் மூன்று நாட்களுக்குள்ளாகவே, ஏறத்தாழ 10,000 பேர் தாமாகவே சாவடிக்கு வந்து, இப்போராட்டத்திற்கு ஆதரவாகக் கையெழுத்திட்டுள்ளதோடு, ""ஒருவருக்கு ஒரு ரூபாய்'' என்ற போராட்ட நிதியினையும் வழங்கி வருகின்றனர். பல இளைஞர்களும், மாணவர்களும் அடுத்த கட்ட போராட்டத்திற்குத் தங்களையும் அழைக்கக் கோரி, பெயரையும், முகவரியையும் கொடுத்துச் சென்றுள்ளனர்.

பார்ப்பனர்களும், நீதிமன்றமும் தமிழ் வழிபாட்டு உரிமைக்கு குறுக்கே நந்தியாக நின்றாலும், உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பக்தர்கள் இக்கோரிக்கைக்கு ஆதரவாக நிற்பதற்கு இதுவே சாட்சி. இவர்களை அமைப்பாக அணிதிரட்டிப் போராட்டத்தில் இறங்கச் செய்வதன் மூலம்தான், கோவில்களில் தமிழுக்கும், தமிழனுக்கும் எதிராகப் பார்ப்பனர்கள் கடைபிடிக்கும் தீண்டாமையை ஒழித்துக் கட்ட முடியும்.

மனித உரிமை பாதுகாப்பு மையம்,
கடலூர் மாவட்டம்.

திருட்டு தீட்சிதரே


பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்ற கதையாக, சிதம்பரம் நகரில் மிதிவண்டிகளைத் திருடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் ராமராஜ் தீட்சிதர் என்ற திருட்டுப் பார்ப்பானை, அவன் 10.8.2006 அன்று ஒரு மிதிவண்டியைத் திருடிச் செல்லும் பொழுது பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தீட்சிதர் கும்பலோ, ராமராஜ் தீட்சிதர் மனநிலை சரியில்லாதவர் என்ற பொய்யைக் கூறி அவனை விடுவிக்க முயன்றது.

எனினும், பத்திரிகையாளர்கள் இத்திருட்டைப் புகைப்படம் எடுத்துவிட்டதன் விளைவாகவும்; மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் இது பற்றி உயர் அதிகாரிகளுக்கு தந்தி கொடுத்ததோடு, அத்திருட்டுப் பார்ப்பானைக் கைது செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்ததன் விளைவாகவும், சிதம்பரம் நகர போலீசார் வேறு வழியின்றி, ராமராஜ் தீட்சிதரைக் கைது செய்ததோடு, அவன் ஏற்கெனவே திருடி மறைத்து வைத்திருந்த ஐந்து மிதிவண்டிகளையும் கைப்பற்றினர்.

ஊரான் வீட்டு மிதிவண்டிகளையே அமுக்கப் பார்க்கும் தீட்சிதர் கும்பல், நடராசர் கோவில் சொத்தைப் புறங்கையால் நக்காமல் விட்டு வைத்திருப்பார்களா? சிவன் சொத்து குலநாசம் என்பதெல்லாம் ""மற்றவர்களுக்கு''த் தான் போலும்!

நன்றி : தமிழ்சர்க்கிள்

இந்த கட்டுரை செப்டம்பர் 2006ல் புதிய ஜனநாயகத்தில் வெளிவந்தது.

Feb 16, 2009

தில்லை போராட்டம் - வரலாற்று தடங்கள் -1


குறிப்பு : தில்லை போராட்டம் - நீண்ட நெடிய போராட்டம். அந்த நீண்ட நெடிய போராட்டத்தில், சில வெற்றிகள் கிடைத்திருக்கிறது.

இதைச் சாதித்தவர்கள் - சிவனடியார் ஆறுமுகசாமி, மனித உரிமை பாதுகாப்பு மையம் தலைமையில், மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் அதன் சகோதர அமைப்புகள், விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி, சில தமிழ் அமைப்புகள், ஜனநாயக சக்திகள்.

தில்லையில் தமிழ் மேடை ஏற இருந்த தடையை முதலில் அகற்றினார்கள். அடுத்து, தீட்சிதர்களிடமிருந்து சாவிக்கொத்தை கடைசியாக புடுங்கி, அரசின் கையில் கொடுத்திருக்கிறார்கள்.

தமிழ் அரங்கேற்றம் ஆன சந்தோசத்தை விட, தீட்சிதர்களிடமிருந்து சாவியை பெற்றதில், தில்லை வாழ் மக்களுக்கு நிறைய சந்தோசம்.

தீட்சிதர்கள் அலறியடித்து, இப்பொழுது, சென்னையிலும், தில்லியிலும் டேரா போட்டு, மீண்டும் நடராசர் கோவிலை கைப்பற்ற எல்லாவித முயற்சிகளும் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

போராட்டம் இத்துடன் முடியவில்லை. இது ஒரு தொடர் போராட்டம்.

இதற்கிடையில், இந்த போராட்டத்தில் சிறு கல்லை கூட எடுத்து போடாத சிலர் இதில் பலன் அடைய துடிக்கிறார்கள். பிறகு, இதன் தொடர்ச்சியில் அவர்களைப் பற்றியும் பார்க்கலாம்.

இந்த போராட்டத்தின் கடந்து வந்த பாதையை ஒருமுறை திரும்பி பார்ப்பது தான் இந்த தொடர் பதிவின் நோக்கம்.

***

மனித உரிமை பாதுகாப்பு மையம் - 2006ல் தில்லை போராட்டத்தை விளக்கி ஒரு பிரசுரம் வெளியிட்டது. படியுங்கள்!

***

திருச்சிற்றம்பல மேடையேற தமிழும் தீக்குளிக்க வேண்டுமோ?

தில்லைவாழ் அந்தணர்களால் எரித்துக் கொல்லப்பட்ட சிவபக்தன் நந்தன் வாழ்ந்த தமிழகத்திற்கும், தற்போதைய தமிழகத்துக்கும் எத்தனையோ வேறுபாடுகள். மாற்றங்கள் இருந்தாலும், தில்லைவாழ் தீட்சிதர் பரம்பரை மட்டும் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் மாறியதாகத் தெரியவில்லை.

ஆறுமுகசாமி என்ற சிவனடியார், சிதம்பரம் நடராசர் கோவிலைத் தங்கள் பூணூலில் சுருட்டி வைத்திருக்கும் தீட்சிதர்களின் சாதிவெறியை எதிர்த்து,
வழிபாட்டு உரிமைக்காக நடத்தி வரும் போராட்டம் இந்த உண்மையைத் தமிழகமெங்கும் அம்பலப்படுத்தி விட்டது.

ஆறுமுகசாமி, கஷ்டம் வந்தவுடன் இறைவனைத் தேடி ஓடும் சாதாரண பக்தரைப் போன்றவர்

அல்லர். இல்லற வாழ்க்கையைத் துறந்து, துறவறம் பூண்டு, சைவத் திருமறையான தேவாரம் திருவாசகப் பாடல்களைப் பாடுவதைக் கற்றுத் தேர்ந்து, சிதம்பரம்அருகேயுள்ள குமுடிமூலை என்ற சிற்×ரில் அமைந்திருக்கும் பசுபதி ஈஸ்வரன் கோவிலில் ஓதுவாராக இறைப்பணி ஆற்றி வருகிறார். இதற்காகத் தமிழக அரசின் நிதி உதவியையும் பெற்று வருகிறார்.

சிதம்பரம் நடராசர் கோவில் கருவறை முன் உள்ள திருச்சிற்றம்பல மேடையில் ஏறி நின்று, தேவாரம் திருவாசகம் பாடி நடராசரை வழிபட வேண்டும் என்பதனைத் தனது ஆன்மீக வாழ்க்கையின் இலட்சியமாக, குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார், ஆறுமுகசாமி. 73 வயதான, அந்திமக் காலத்தை நெருங்கிவிட்ட, அந்த முதிய சிவனடியாரின் விருப்பம் நிறைவேறத் தடைக்கல்லாக நிற்கிறார்கள், தீட்சிதர்கள்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, 8.5.2000 அன்று ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப் பாட முயன்ற பொழுது, தீட்சிதர் கும்பல் கோவிலுக்குள்ளேயே, பக்தர்களின் கண் முன்னாலேயே ஆறுமுகசாமியைக் கொடூரமாகத் தாக்கி, கையை முறித்து, கோவிலுக்கு வெளியே வீசியெறிந்தது.

ஆறுமுகசாமி தம்மைத் தாக்கிய ரவுடி தீட்சிதர்களை உடனடியாக அடையாளம் காட்டிப் புகார் கொடுத்த பின்னும் கூட, சிதம்பரம் நகர போலீசார் 55 நாட்கள் கழித்துதான் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர். அரசு தரப்பில் வேண்டுமென்றே இவ்வழக்கு விசாரணையை ஒழுங்காக நடத்தாததால், ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்றிருக்க வேண்டிய தீட்சிதர்கள், நீதிமன்றத்தால் நிரபராதிகளாக விடுதலை செய்யப்பட்டனர்.

கடலூர் மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு மையம், ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப் பாட முடியாமல் தடுக்கப்பட்டதை, மனித உரிமை மீறல் வழக்காக சென்னை உயர்நீதி மன்றத்திற்கு எடுத்துச் சென்றது. ஆறுமுகசாமியும், விடுதலை செய்யப்பட்ட தீட்சிதர்களைத் தண்டிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். பார்ப்பன உயர் அதிகாரிகள் மத்தியில் தீட்சிதர்களுக்கு இருக்கும் செல்வாக்கு மற்றும் பணபலம் காரணமாக இவ்விரு வழக்குகளும் உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. தற்பொழுது இவ்விரு வழக்குகளில் மனித உரிமை மீறல் வழக்கு மட்டும் உச்சநீதி மன்றத்தின் விசாரணையில் உள்ளது.

சிவனடியார் ஆறுமுகசாமி, மிகவும் பிற்பட்ட சாதியைச் சேர்ந்தவர்; தமிழில் பாடி நடராசனை வழிபட விரும்புகிறார் என்ற காரணத்துக்காகவேதான், தீட்சிதர் கும்பல் அவரை திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப்பாட விடாமல் தடுத்து வருகிறது.

திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப் பாட தீட்சிதர்களுக்கு மட்டுமே உரிமையுண்டு; சமஸ்கிருத
மொழியில் அமைந்த வேதங்களையும், மந்திரங்களையும் தான் அம்மேடையில் பாட முடியுமேயன்றி, பிற மொழி துதிப்பாடல்களைப் பாடி இறைவனை வழிபட அனுமதிக்க முடியாது எனப் பச்சையாக பார்ப்பன சாதிக் கொழுப்பைக் கக்கி வருகிறது, தீட்சிதர் கும்பல்.

இதனை மரபு, சம்பிரதாயம் என்ற பெயரில் நியாயப்படுத்தி, மயிலாடுதுறையில் உள்ள இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் மூலம், ஆறுமுகசாமியின் வழிபாட்டு உரிமைக்கு எதிரானத் தடையாணையையும் தீட்சிதர்கள் பெற்றுள்ளனர்.

ஆகம விதிகள், மரபு, சம்பிரதாயங்கள் என்ற பெயரில் புனிதப்படுத்தப்ப டும் இத்தீண்டாமையை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற அடிப்படையில்தான் மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆறுமுகசாமிக்கு ஆதரவு கொடுத்து வருகிறது. இந்தப் பிரச்சினை நீதிமன்றத்தோடு முடங்கிப் போய்விடக் கூடாது என்பதற்காகவே, செப். 2004இல் பல்வேறு ஜனநாயக அமைப்புகளின் ஆதரவோடு ஆறுமுகசாமிக்கு நீதி கேட்டு, மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பாகப் போராட்டம் நடத்தப்பட்டது.

மேலும், நடராசர் கோவிலில் நடைபெறும் ஒவ்வொரு திருவிழாவின் போதும், பொதுமக்கள் ம

த்தியில் இப்பிரச்சினையின் பின் மறைந்துள்ள தீண்டாமையை விளக்கும் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன. தீட்சிதர்களின் அச்சுறுத்தலையும் மீறி, ஆறுமுகசாமியே பிரசுரங்களைப் பொதுமக்களிடம் கொடுத்து, ஆதரவு தேடி வருகிறார்.

இந்நிலையில், தி.மு.க. அரசு பதவியேற்று, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் அறிவிக்கப்பட்ட பின், ஆறுமுகசாமி, ""15.7.06 முதல் 20.7.06 முடிய திருச்சிற்றம்பல மேடையில் ஏறி சிவபுராணம் பாடப் போவதாக'' அறிவித்தார். இதற்கு ஆதரவு தெரிவித்த கடலூர் மாவட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையம், இந்த அறிவிப்பின் பின்னுள்ள நியாயம் உரிமைகளை விளக்கி, 12, 13, 14.7.06 ஆகிய மூன்று நாட்களும் விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம், சி.பி.ஐ., சி.பி.எம்., வி.வி.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகளின் ஆதரவோடு, தெருமுனை பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி, பொதுமக்களின் ஆதரவைத் திரட்ட முனைந்தது.

ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப் பாடப் போவதாக அறிவித்தவுடனேயே, சிதம்பரம் உரிமையியல் நீதிமன்றத்தின் மூலம், ஆறுமுகசாமி பாடுவதை 25.7.06 வரைத் தடை செய்யும் ஆணையைத் தீட்சிதர்கள் பெற்றுக் கொண்டனர். எனினும், இத்தடையுத்தரவை மீறுவது என்ற முடிவோடு, 15.7.06 அன்று சிவனடியார் ஆறுமுகசாமியை வாழ்த்தி வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சியை சிதம்பரம் மேல வீதியில் மனித உரிமை பாதுகாப்பு மையம் ஒருங்கிணைத்து நடத்தியது.

இப்போராட்டத்திற்குத் தலைமையேற்ற மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு, வரவேற்புரை நிகழ்த்திய சிதம்பரம் வழக்குரைஞர் கோபாலகிருஷ்ணன், மற்றும் வாழ்த்துரை வழங்கிய முன்னாள் (தமிழக) இந்து அறநிலையத் துறை அமைச்சர் திரு. வி.வி.சாமிநாதன்; பா.ம.க.வின் மாநிலத் துணைத் தலைவர் திரு. வி.எம். சவுந்திரபாண்டியன்; திராவிடர் கழகத்தின் மாநிலத் துணை பொதுச்செயலர் திரு. துரை சந்திரசேகர்; சி.பி.எம்.இன் மாவட்ட விவசாய அணித்தலைவர் தோழர் டி.ஆர். விசுவநாதன்; சி.பி.ஐ.யின் சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் நடராஜன் உள்ளிட்ட பலரும் தீட்சிதர்களின் சாதித் திமிரையும், அவர்களின் ஒழுக்கக் கேடுகளையும் அம்பலப்படுத்தி உரையாற்றினர்.

சிதம்பரம் உரிமையியல் நீதிமன்றம் ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப் பாடுவதற்குத்தான் தடை விதித்திருந்தது. ஆனால், சிதம்பரம் நகர போலீசோ, சட்டம் ஒழுங்கைக் காட்டி, ஆறுமுகசாமியைக் கோவிலை நெருங்கக் கூட விடாமல் தடுத்து, அவரையும், அவருக்குத் துணையாகச் சென்றவர்களையும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டு 80 பேரை நடுத்தெருவிலேயே கைது செய்து, தீட்சிதர்களுக்கு விசுவாசமாக நடந்து கொண்டது.

""உரிய தகுதி இருந்தால் பார்ப்பனர் அல்லாதவர் கூட அர்ச்சகர் ஆகலாம்; கருவறைக்குள் நுழைந்து, இறைவனுக்கு வழிபாடு நடத்தலாம்'' எனக் கூறுகிறது தமிழக அரசின் சட்டம். இதற்கு ஆதரவாக உச்சநீதி மன்றத்தின் இரண்டு தீர்ப்புகளும் சுட்டிக் காட்டப்படுகின்றன. ஆனால், தீட்சிதர் கும்பலோ, துறவறம் பூண்டு வாழும் ஓதுவார் ஆறுமுகசாமியை, கருவறைக்கு எதிரே இருக்கும் மேடையில் ஏறுவதற்குக் கூடத் தடை போடுகிறது.

""உச்சநீதி மன்ற நீதிபதிகள் மோகன் மற்றும் சி.என்.ரே ஆகிய இருவர் அடங்கிய பெஞ்ச், கர்ப்பகிரகங்களில் தமிழ் மந்திரத்தில் அர்ச்சனை செய்யலாம் என்று 2.4.1992இல் தீர்ப்பளித்திருப்பதாகவும்; சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஏ.ஆர். லெட்சுமணன் தமிழ்நாட்டில் ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்று 17.6.1992இல் தீர்ப்பளித்திருப்பதாகவும்'' முன்னாள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் குறிப்பிடுகிறார். ஆனால், கருவறைக்கு எதிரேயுள்ள திருச்சிற்றம்பலத்தில் சமஸ்கிருதம் அல்லாத பிற மொழிகளில் பாடி இறைவனை வழிபடக் கூடாது எனத் தமிழை தீண்டத்தகாத மொழியாக ஒதுக்கித் தள்ளுகிறார்கள் தீட்சிதர்கள்.

சட்டத்தின்படியும், நீதிமன்றத் தீர்ப்புகளின்படியும் பார்த்தால், ஆறுமுகசாமியைத் தடை செய்த தீட்சிதர்கள்; அவர்களுக்குத் துணை நின்ற நீதிபதி, போலீசு அதிகாரிகளைத் தான் கைது செய்திருக்க வேண்டும். ஆனால், நடந்திருப்பதோ நேர் எதிராக இருக்கிறது.

1987ஆம் ஆண்டே, சிதம்பரம் நடராசர் கோவிலை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர புதிதாக விதிகள் உருவாக்கப்பட்ட போதிலும், கடந்த 19 ஆண்டுகளாக இந்தக் கோயிலில் ஒரு நிர்வாக அதிகாரியைப் போட முடியாமல், தமிழக அரசு கையைக் கட்டிக் கொண்டு நிற்கிறது.

இந்தக் கோயிலின் நிர்வாகத்தைத் தமிழக அரசு எடுத்துக் கொள்வதை எதிர்த்து தீட்சிதர்களால் தொடுக்கப்பட்ட வழக்கில், ""இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக 1000 ஏக்கர் நிலமுள்ளது; உண்டியல் வைக்காமல், பக்தர்களிடமிருந்து தீட்சிதர்களே நேரடியாகப் பணம் பெறுகிறார்கள்; 50 கிலோ மதிப்புமிக்க நகைகள் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் காரணங்களால், இக்கோவிலில் அரசு நிர்வாக அதிகாரியை நியமிப்பது சரி'' என சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி வெங்கடாசலய்யா 1997இல் தீர்ப்பளித்தார். ஆனால், தீட்சிதர்கள் வழக்கிற்கு மேல் வழக்கு போட்டு இத்தீர்ப்பை நீதிமன்றத்திற்குள்ளேயே பந்தாடி வருகிறார்கள்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பே தீட்சிதர்கள் தொடுத்த ஒரு வழக்கில், ""இந்தக் கோயில் தீட்சிதர்களுக்குச் சொந்தமில்லை என்றும், ஒட்டு மொத்த சைவர்களுக்குச் சொந்தம் என்றும் உயர்நீதி மன்ற நீதிபதி முத்துச்சாமி ஐயரும், இன்னொரு வெள்ளைக்கார நீதிபதியும் தீர்ப்பளித்திருப்பதாக'' முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன் குறிப்பிடுகிறார். ஆனால், தீட்சிதர்களோ,""இந்தக் கோயில் எங்களுக்குப் பாத்யப்பட்ட பரம்பரைச் சொத்து'' எனச் சுவரொட்டி அடித்து ஒட்டும் அளவிற்கு, சட்டம் நீதிமன்றம் எதனையும் மதிக்காமல் திமிரோடு நடந்து வருகின்றனர்.

சிதம்பரம் கோயிலின் வருமானம் ஏறத்தாழ 1 கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், தீட்சிதர்களோ, ஊர் பெரிய மனிதர்களிடம் 100, 200 நன்கொடை வாங்கித்தான், பூசையே நடத்துவதாக மோசடிக் கணக்கைத் தயார் செய்து, பக்தர்களை ஏமாற்றி வருகிறார்கள். கோயில் நிலத்தில் இருந்து கிடைக்கும் குத்தகை, கடை ஏலம், அபிஷேகம், ஆராதனைக்காக ரசீது கொடுக்காமல் பக்தர்களிடம் பிடுங்கும் பணம், கோவிலுக்குச் சொந்தமான தங்க நகைகள் இவை எல்லாவற்றையும் தாங்களே ஆண்டு அனுபவிக்கும் வண்ணம் ""அருள்மிகு சபாநாயகர் திருக்கோயில் பொது தீட்சிதர்கள், சிதம்பரம்'' என்ற அமைப்பைக் கட்டி வைத்துக் கொண்டு, அலிபாபா கதையில் வரும் கொள்ளைக் கூட்டம் போலக் கொழுத்துத் திரிகிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, இரவு நேரமானபின், சிதம்பரம் கோயிலையே தண்ணி அடிக்கும் பாராகவும்; பெண்களோடு சல்லாபம் செய்யும் விடுதியாகவும் தீட்சிதர்கள் மாற்றிவிட்டதாக ஆதாரத்தோடு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இந்த அசிங்கமான உண்மையை மூடி மறைக்கத்தான் கே.ஆடுரைச் சேர்ந்த செல்வராஜையும்; வீட்டுத் தரகர் ராயரையும் தீட்சிதர்கள் கோயிலுக்குள் வைத்துக் கொன்றுவிட்டதாகவும்; கோவில் வருமானத்தைப் பங்கு போட்டுக் கொள்வதில் ஏற்பட்ட தகராறில் மூர்த்தி தீட்சிதரை கோயில் கல்தூணில் மோதிக் கொன்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டுள்ள தீட்சிதர்கள், ""திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப்பாட தமக்கு மட்டுமே உரிமையுண்டு; ஆறுமுகசாமியைப் பாட வைத்தால் சட்டம்ஒழுங்கு கெட்டுவிடும்; பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும்; கோவிலில் உள்ள விலையுயர்ந்த நகைகளின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும்'' எனப் புளுகித்தான் நீதிமன்றத்தில் இடைக்காலத்தடை கேட்டுள்ளனர். இதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று கூடப் பார்க்காமல், நீதிமன்றம் தீட்சிதர்களின் கோரிக்கைக்குத் தலையாட்டியுள்ளது. மேலும், ""ஆறுமுகசாமியை நாத்திகர்கள் தூண்டிவிடுவதாகவும்; இதற்குப் பின்னால் பெரிய சதி நடப்பதாகவும்'' தீட்சிதர்கள் பீதியூட்டுகிறார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆறுமுகசாமி திருச்சிற்றம்பலத்தில் ஏறிப் பாடுவதை மறுக்கும் தீண்டாமையை, நாத்திக ஆத்திகப் பிரச்சினையாகத் திசை திருப்ப முயலுகிறார்கள்.

தேவாரம், திருவாசகம் ஆகிய சைவத் திருமறைகளோடு பின்னிப் பிணைந்த சிதம்பரம் நடராசர் கோவிலை; சைவத் திருத்தலங்களிலேயே ஆகாயத் தலமாகக் கருதப்படும் சிதம்பரம் நடராசர் கோவிலை, கிரிமினல் பின்னணி கொண்ட தீட்சிதர்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதைக் கண்டு, நாத்திகர்களைவிட, ஆத்திகர்களுக்குத் தான் இரத்தம் கொதிக்க வேண்டும். ஆனால் ஆறுமுகசாமியைத் தவிர, வேறெந்த சைவ மடாதிபதிக்கும் தமிழுணர்வும், ரோசமும் இருப்பதாகத் தெரியவில்லை.

அதனால்தான், இப்பிரச்சினையில் ஆறுமுகசாமியை ஆதரிக்கும் மனித உரிமை பாதுகாப்பு மையம், சிதம்பரம் நடராசர் ஆலயத்தை இந்து அற நிலையத்துறையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடு என்ற கோரிக்கையையும் சேர்த்து முன் வைக்கிறது. இதற்கு ஆதரவாகப் பொதுமக்களைத் திரட்டும் நோக்கத்தோடு, சிதம்பரம் மற்றும் அந்நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் மனித உரிமை பாதுகாப்பு மையம், பிற ஜனநாயக அமைப்புகளோடு இணைந்து தெருமுனைப் பிரச்சாரம் நடத்தி வருகிறது. மேலும், சிதம்பரம் உரிமையியல் நீதிமன்றம் கொடுத்துள்ள இடைக்காலத் தடையை நீட்டிக்கக் கூடாது; இவ்வழக்கில் உடனடியாகத் தீர்ப்பளிக்க வேண்டம் எனக் கோரி நீதிமன்றத்தில் மனு செய்து, வழக்கும் நடத்தி வருகிறது.

இப்பிரச்சினையில் இன்னொரு உண்மையையும் சுட்டிக் காட்டத்தான் வேண்டும். கோவில்களில் பார்ப்பனர்கள் சூத்திரர்கள் மீதும், தாழ்த்தப்பட்டோர் மீதும் திணிக்கும் தீண்டாமையையும்; கிராமப்புறங்களில் ஆதிக்க சாதிகளால் காலனிகளின் மீது திணிக்கப்படும் தீண்டாமையையும் பிரித்துப் பார்க்க முடியாது. பார்ப்பனர் அல்லாதவர் அர்ச்சகர் ஆவது, தமிழ் உள்ளிட்டு அவரவர் தாய்மொழிகளில் வழிபட உரிமை கோருவது ஆகிய கோரிக்கைகள், சாதிதீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களோடு இணைக்கப்படாவிடில், அதில் முழுமையான வெற்றியைக் காண முடியாது. இப்படிப்பட்ட ஒருங்கிணைந்த போராட்டம், மக்கள் மத்தியில் எழவில்லையென்றால், வழிபாட்டு உரிமை தொடர்பாகக் கொண்டு வரப்படும் சட்டங்களும், நீதிமன்றத் தீர்ப்புகளும் அரைகுறையானதாக, ஒன்றுக்கொன்று முரணானதாக, நடைமுறைக்கு வராத காகிதக் குப்பைகளாகவே இருக்கும்.

மனித உரிமை பாதுகாப்பு மையம், கடலூர் மாவட்டம்.

நன்றி : தமிழ்சர்க்கிள்
புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2006 இதழில் வெளிவந்தது.