Jul 30, 2016

அலைஸ் & ஜேம்ஸ் (2016) - அன்பை வெளிப்படுத்து!


ஜேம்ஸ் ஒரு ஓவியன். விளம்பர படங்கள் எடுத்துவருகிறார். அலைஸை (Alice) காதலிக்கிறார். நிரந்தர வருமானம் இல்லை என பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க காதலர்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

எட்டு ஆண்டுகள். ஐந்து வயது பெண் குழந்தை ஒன்று. இப்பொழுது அலைஸ் வங்கியில் பணிபுரிகிறார். ஜேம்ஸ் சின்ன சின்ன விளம்பர படங்கள் எடுத்து எப்பொழுதும் நிதி பற்றாக்குறையுடன், நிம்மதியில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறார். தன்னையும், குழந்தையும் கண்டுகொள்ளாமல் வாழ்கிறார் என கணவர் மீது நிறைய வருத்தம். இருவருடைய பரபர வாழ்க்கையும் மனக்கசப்பை தருகிறது.

இடையில் இரண்டு மாரடைப்புக்கு பிறகு அலைஸின் அப்பா சமாதான தூதனுப்புகிறார். அலைஸையும், குழந்தையையும் போய் பொறுப்பாக விட்டுவிட்டு, வீட்டிற்குள் வர மறுத்து வேலை விசயமாக வெளிமாநிலம் செல்கிறார். இரண்டு நாள்கள் கழித்து திரும்பி வந்து பார்க்கும் பொழுது, அலைஸின் அப்பா இறந்துபோகிறார். அலைஸின் வருத்தம் இப்பொழுது கோபமாகிவிடுகிறது.

ஜேம்ஸோடு வாழ பிடிக்காமல் விவாகரத்து வழக்கு தொடர்கிறார். ஒரு கார்விபத்தில் ஜேம்ஸ் சிக்கில் கோமாவில் படுத்துவிடுகிறார். அவருடைய உயிரை எடுத்துசெல்ல வரும் தூதன், போகிற வழியில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாய் இல்லாமல், எப்பொழுதும் தொழில், தொழில் என பதற்றத்துடன் சுற்றுவது, அலைஸின் அப்பாவுடன் பேசி அவரை சந்தோசப்படுத்தியிருக்கலாம் ஜேம்ஸ் தவறுகளை சுட்டிக்காட்டுகிறார்.

இதற்கிடையில் ஜேம்ஸின் தோழி அலைஸிடம் அவன் பெற்றோர் இல்லாமல் தனியாக வாழ்ந்தவன். அவனுடைய உலகம் ரெம்ப சின்னது. அதில் நீயும், உன் மகளும் தான் இருக்கிறீர்கள். அவன் எழுந்து வரும் பொழுது அவனை மன்னித்துவிடு! என்கிறார். அவனுடைய ஓவியக்கூடத்தில் அலைஸின் அப்பாவை வரைந்து வைத்திருக்கிறான். அலைஸ் மெல்ல மெல்ல ஜேம்ஸை புரிந்துகொள்கிறார்.

மீண்டும் வாழ விரும்புகிறேன் என ஜேம்ஸ் தூதனிடம் வேண்டி நிற்க, இது உனக்கு இரண்டாவது இன்னிங்ஸ். இனியாவது வாழ்க்கையை வாழ்! என வாழ்த்திவிட்டு போய்விடுகிறார்.

அலைஸ், ஜேம்ஸ் மீண்டும் தங்களை பரஸ்பரம் புரிந்துகொண்டு வாழ்க்கையை தொடர்கின்றனர். சுபம். :)

*****

5 ஸ்டார் என்ற தமிழ்ப்படத்தில் அப்பாவாக வரும் விஜயன் பிள்ளையை மிகுந்த கண்டிப்புடன் வளர்ப்பார். தனது தங்கை பெண்ணை திருமணமும் செய்து, ஊருக்கு பேருந்து ஏற்றிவிடும் பொழுது, “காலேஜை முடிச்சுட்டு வா! நீ ஒரு புது அப்பனை பார்ப்ப!” என்பார். ஆனால் அந்த பையன் திரும்ப வரவேமாட்டான். சென்னையிலிருந்து தலைமறைவாகி, ஜெர்மனிக்கு போய் அங்கு ஒரு பெண்ணை திருமணம் முடித்துவிட்டு செட்டிலாயிடுவான். தங்கை பெண்ணின் வாழ்க்கையை சீரழித்துவிட்டோமே என எண்ணி அந்த அப்பா தற்கொலை செய்துகொள்வார்.

இரண்டு படத்திலும் சொல்லப்படும் நீதி “அன்பை வெளிப்படுத்து” என்பது தான்! ஜேம்ஸ்க்கும் தன் குடும்பத்தின் மீது அத்தனை அன்பு உண்டு. ஆனால், எப்பொழுதும் வெளிக்காட்டுவதேயில்லை. அதை படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், பர பர வாழ்க்கைக்கு என்ன காரணம்? என்பதை படம் எங்கும் அலசவேயில்லை. அதிலும் உள்ளே போய் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். நிறைய நுகர்வு, சொந்த வீடு, அடுத்தடுத்து சொத்து என்ற ஓடுகிற ஓட்டத்தில் கணவன், மனைவி இருவரும் தனியாக இருக்கும் பொழுது கூட இதைப்பற்றித்தான் பேசுகிறார்கள். பாதுகாப்பின்மை குறித்து கவலைப்படுகிறார்கள். பரஸ்பரம் கோபம் கொள்கிறார்கள்.

சமூகத்தில் சுற்றியிருப்பவர்களின் நலனைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், தன் குடும்பத்தின் நலனை மட்டும் பார்ப்பது என்பது சுருங்கிப்போய் நிற்கிறது. சில குடும்பங்களை கவனிக்கும் பொழுது குடும்பத்தில் கூட தனிநபர் நலன் என்று போய் தான் நிற்கிறது. அன்பை வெளிப்படுத்து என்பதை விட, இதை பேசுவது தான் மிகவும் அவசியம்.

***

பிருத்விராஜ், வேதிகா இருவரும் படத்தை தாங்கியிருக்கிறார்கள். படத்தின் நீளம் அதிகம் என படத்தை எடுத்த விதம் நமக்கு உணர்த்துகிறது. ஒளிப்பதிவாளரே இயக்கிமிருக்கிறார். நல்ல ஒளிப்பதிவு. அந்த தேவதூதனாக வருபவருடைய பங்களிப்பு சிறப்பு

****

நன்றி : Selvam Ramki

Jul 15, 2016

வயநாடுவரை போயிருந்தோம்!


சென்னையில் அடிக்கிற அக்னி நட்சத்திர வெயிலிருந்து மூன்று நாட்கள் தப்பிக்கலாம் என மலையும் மலைசார்ந்த இடமான கேரளாவின் வடபகுதியான வயநாடு வரை போய்வந்தோம்! கோழிக்கோடு வரை ரயில் பயணம். அங்கிருந்து பேருந்தில் மலைப்பயணம். வயநாட்டின் ஒருபகுதியான சுல்தான் பத்தேரியில் உள்ள ஹோட்டலில் தங்கினோம்.

குருவா டிவீப்

காலை 9 மணியளவில் முதல் ஆளாய் போய்சேர்ந்தோம்.   இயற்கை சூழலோடு இந்த ஆற்றுப்படுகை தீவுத்திட்டு கபினி ஆற்றில் அமைந்துள்ளது. 13 யானைகள் அந்த பகுதியில் சுற்றிக்கொண்டிருந்ததால், யாரையும் அனுமதிக்கவில்லை. காத்திருந்த ஒருமணிநேர வேளையில் கல்லால் அடித்து தித்திக்கும் நாவல் பழங்களை சாப்பிட்டோம். மிதகுகள் மூலம் கபினியை கடக்க உதவுகிறார்கள். ஒரு கிலோமீட்டர்வரை காட்டுக்குள் அனுமதி. போன யானைகள் மீண்டும் வந்துவிடுமோ என்ற பயமிருந்ததுஉள்ளே குளுகுளு என ஓடும் கபினியாற்றில் நிறைய நேரம் குளித்தோம். மக்கள் கூட்டம் கூட்டமாக வந்துகொண்டேயிருந்தார்கள்.

பாணசுரசாகர் அணை

கபினியின் துணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய கரைத்தடுப்புஅணை. திரைப்படங்களில் யாரையாவது கடத்திக்கொண்டு போவார்களே, அப்படி ஒரு வேகமாக செல்லக்கூடிய இன்ஜின் போட்டில் சுற்றிலும் பசுமையான மலைகளுக்கு மத்தியில்அதோ அந்த பறவை போல வாழவேண்டும்! இதோ இந்தஅலைகள் போல ஆடவேண்டும்என்ற பாட்டை கோரசாகப் பாடி, சாகச பயணம் செய்தோம்.   என்ன கொஞ்சம் காசுதான் அதிகம்! 6 பேருக்கு ரூ. 750 வசூலிக்கிறார்கள்.

அடுத்து, அணையின் அருகேயே இருந்த கர்லேட் ஏரியின் மேலே கம்பிகளின் வழியே  இடுப்பில் பெல்ட் போட்டு அந்தரத்தில் பயணித்த பொழுது கொஞ்சம் பதட்டமாகவும், சந்தோசமாகவும்தான் இருந்தது!

முத்தங்கா வனவிலங்கு சரணாலயம்

சுல்தான் பத்தேரியிலிருந்து 14 கி.மீ தூரத்தில் இருக்கிறது. கேரளாவில் முத்தங்கா, கர்நாடகத்தில் பந்திப்பூர், தமிழகத்தில் முதுமலை சரணாலயம் என மூன்று மாநிலத்திலும் மூன்று பெயர்களில் கோடைகாலத்திலும் பசுமையாக பரந்து நிற்கிறது ஒரேகாடு. காலை 7மணி முதல் 10மணிவரை. மாலை 3லிருந்து 5 மணிவரை காட்டுக்குள் அழைத்துசெல்கிறார்கள். 40ஜீப்கள் தான் காலையில் அனுமதி. மாலையிலும் கோட்டா தான். ஆகையால், காலை 7மணிக்கே போனால், 20பேர் நமக்கு முன்னால் வரிசையில் நிற்கிறார்கள். 16 கிமீ காட்டிற்குள் ஜீப்பில் பயணித்தபொழுதுமூன்று வெவ்வேறு இடங்களில் மான்கள் கூட்டம், 200 மீட்டர் தள்ளி எதையோ தின்றுகொண்டிருந்த  ஒத்த யானை, தயங்கி, தயங்கி காட்டுப்பாதையை கடந்து சென்ற காட்டெருமையை பார்த்தோம். 23புலிகள், 810 யானைகள் என பெரும்பட்டியலை ஓட்டுநர் சொல்லிக்கொண்டே போகும்பொழுது, பகீரென்று இருந்தது.  

அருவிகள்

மேற்குமலை தொடர்ச்சியில் மீன் முட்டி விழும் மீனுமுட்டி அருவி, சூச்சிப்பாறை அருவி என இன்னும் சில அருவிகள் இருந்தாலும், ஜூன் ஒன்றாம் தேதியிலிருந்து மழை விழத்துவங்கும் பொழுதுதான் அருவிகள் உயிர்பெறுகின்றனமே மாதத்தில் போனதால் நாங்கள் அருவிகளை இழந்தோம்.

செம்பரா சிகரம்

வயநாடு மாவட்டத்திலேயே உயரமான சிகரமாக கருதப்படும் இந்த சிகரம் கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறதுஇதன் உச்சியை தொட்டுவர ஒருநாள் டிரெக்கிங் போவது அவசியம். மூன்றுநாள் திட்டத்தில் ஒரு முழுநாளை ஒதுக்கமுடியாததால் போகவில்லை.

உணவு

எங்கு போனாலும் அங்கு வாழும் மக்களிடம் கேட்டாலே நல்ல ஹோட்டல் எதுவென சரியாக கைகாட்டிவிடுகிறார்கள். சென்னையை விட குறைவான விலையில் சுவையான டிபன் கிடைத்தது. மூன்று நாளும் மதிய வேளையில் கேரளத்தின் சுவையான பிரியாணியை வெவ்வேறு இடங்களில் சாப்பிட்டோம்.

நான் ரெம்ப சாப்ட். ரெம்ப அன்பானவாஎன அறிமுகப்படுத்திக்கொண்டு நீச்சல்குளத்தில் உற்சாகமாய் முங்கு நீச்சலடித்து, தெருவில் பழக்கப்படுத்திய யானை போனாலும், “நாங்க யானைப் பார்த்திட்டோம்என ஊரே கேட்கும்படி கத்தி, ‘என்லக்கில் தான் எல்லோரும் மான்கள், யானைகள் எல்லாம் பார்த்தீங்கஎன பயணம் முழுவதும் கலகலக்க வைத்த ஆறுவயது பூவரசி தான் எங்கள் பயணத்தை உற்சாகமாய் வழிநடத்திய குட்டித்தேவதை.

ஊர்வந்து சேர்ந்த அடுத்தநாள் காய்கறி வாங்க சென்றபொழுது, , தென்காசிகாரரான பாய், ’குற்றாலத்தில் சீசன் இப்பவே தொடங்கிருச்சு. அருவிகளில் தண்ணீர் விழுகிறதுஎன்று சொன்னதும் குற்றாலசாரல் மனதில் அடிக்க ஆரம்பித்தது.  யாரெல்லாம் குற்றாலம் வருகிறீர்கள்? J