Jul 30, 2016

அலைஸ் & ஜேம்ஸ் (2016) - அன்பை வெளிப்படுத்து!


ஜேம்ஸ் ஒரு ஓவியன். விளம்பர படங்கள் எடுத்துவருகிறார். அலைஸை (Alice) காதலிக்கிறார். நிரந்தர வருமானம் இல்லை என பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க காதலர்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

எட்டு ஆண்டுகள். ஐந்து வயது பெண் குழந்தை ஒன்று. இப்பொழுது அலைஸ் வங்கியில் பணிபுரிகிறார். ஜேம்ஸ் சின்ன சின்ன விளம்பர படங்கள் எடுத்து எப்பொழுதும் நிதி பற்றாக்குறையுடன், நிம்மதியில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறார். தன்னையும், குழந்தையும் கண்டுகொள்ளாமல் வாழ்கிறார் என கணவர் மீது நிறைய வருத்தம். இருவருடைய பரபர வாழ்க்கையும் மனக்கசப்பை தருகிறது.

இடையில் இரண்டு மாரடைப்புக்கு பிறகு அலைஸின் அப்பா சமாதான தூதனுப்புகிறார். அலைஸையும், குழந்தையையும் போய் பொறுப்பாக விட்டுவிட்டு, வீட்டிற்குள் வர மறுத்து வேலை விசயமாக வெளிமாநிலம் செல்கிறார். இரண்டு நாள்கள் கழித்து திரும்பி வந்து பார்க்கும் பொழுது, அலைஸின் அப்பா இறந்துபோகிறார். அலைஸின் வருத்தம் இப்பொழுது கோபமாகிவிடுகிறது.

ஜேம்ஸோடு வாழ பிடிக்காமல் விவாகரத்து வழக்கு தொடர்கிறார். ஒரு கார்விபத்தில் ஜேம்ஸ் சிக்கில் கோமாவில் படுத்துவிடுகிறார். அவருடைய உயிரை எடுத்துசெல்ல வரும் தூதன், போகிற வழியில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாய் இல்லாமல், எப்பொழுதும் தொழில், தொழில் என பதற்றத்துடன் சுற்றுவது, அலைஸின் அப்பாவுடன் பேசி அவரை சந்தோசப்படுத்தியிருக்கலாம் ஜேம்ஸ் தவறுகளை சுட்டிக்காட்டுகிறார்.

இதற்கிடையில் ஜேம்ஸின் தோழி அலைஸிடம் அவன் பெற்றோர் இல்லாமல் தனியாக வாழ்ந்தவன். அவனுடைய உலகம் ரெம்ப சின்னது. அதில் நீயும், உன் மகளும் தான் இருக்கிறீர்கள். அவன் எழுந்து வரும் பொழுது அவனை மன்னித்துவிடு! என்கிறார். அவனுடைய ஓவியக்கூடத்தில் அலைஸின் அப்பாவை வரைந்து வைத்திருக்கிறான். அலைஸ் மெல்ல மெல்ல ஜேம்ஸை புரிந்துகொள்கிறார்.

மீண்டும் வாழ விரும்புகிறேன் என ஜேம்ஸ் தூதனிடம் வேண்டி நிற்க, இது உனக்கு இரண்டாவது இன்னிங்ஸ். இனியாவது வாழ்க்கையை வாழ்! என வாழ்த்திவிட்டு போய்விடுகிறார்.

அலைஸ், ஜேம்ஸ் மீண்டும் தங்களை பரஸ்பரம் புரிந்துகொண்டு வாழ்க்கையை தொடர்கின்றனர். சுபம். :)

*****

5 ஸ்டார் என்ற தமிழ்ப்படத்தில் அப்பாவாக வரும் விஜயன் பிள்ளையை மிகுந்த கண்டிப்புடன் வளர்ப்பார். தனது தங்கை பெண்ணை திருமணமும் செய்து, ஊருக்கு பேருந்து ஏற்றிவிடும் பொழுது, “காலேஜை முடிச்சுட்டு வா! நீ ஒரு புது அப்பனை பார்ப்ப!” என்பார். ஆனால் அந்த பையன் திரும்ப வரவேமாட்டான். சென்னையிலிருந்து தலைமறைவாகி, ஜெர்மனிக்கு போய் அங்கு ஒரு பெண்ணை திருமணம் முடித்துவிட்டு செட்டிலாயிடுவான். தங்கை பெண்ணின் வாழ்க்கையை சீரழித்துவிட்டோமே என எண்ணி அந்த அப்பா தற்கொலை செய்துகொள்வார்.

இரண்டு படத்திலும் சொல்லப்படும் நீதி “அன்பை வெளிப்படுத்து” என்பது தான்! ஜேம்ஸ்க்கும் தன் குடும்பத்தின் மீது அத்தனை அன்பு உண்டு. ஆனால், எப்பொழுதும் வெளிக்காட்டுவதேயில்லை. அதை படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், பர பர வாழ்க்கைக்கு என்ன காரணம்? என்பதை படம் எங்கும் அலசவேயில்லை. அதிலும் உள்ளே போய் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். நிறைய நுகர்வு, சொந்த வீடு, அடுத்தடுத்து சொத்து என்ற ஓடுகிற ஓட்டத்தில் கணவன், மனைவி இருவரும் தனியாக இருக்கும் பொழுது கூட இதைப்பற்றித்தான் பேசுகிறார்கள். பாதுகாப்பின்மை குறித்து கவலைப்படுகிறார்கள். பரஸ்பரம் கோபம் கொள்கிறார்கள்.

சமூகத்தில் சுற்றியிருப்பவர்களின் நலனைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், தன் குடும்பத்தின் நலனை மட்டும் பார்ப்பது என்பது சுருங்கிப்போய் நிற்கிறது. சில குடும்பங்களை கவனிக்கும் பொழுது குடும்பத்தில் கூட தனிநபர் நலன் என்று போய் தான் நிற்கிறது. அன்பை வெளிப்படுத்து என்பதை விட, இதை பேசுவது தான் மிகவும் அவசியம்.

***

பிருத்விராஜ், வேதிகா இருவரும் படத்தை தாங்கியிருக்கிறார்கள். படத்தின் நீளம் அதிகம் என படத்தை எடுத்த விதம் நமக்கு உணர்த்துகிறது. ஒளிப்பதிவாளரே இயக்கிமிருக்கிறார். நல்ல ஒளிப்பதிவு. அந்த தேவதூதனாக வருபவருடைய பங்களிப்பு சிறப்பு

****

நன்றி : Selvam Ramki

No comments: