Sep 28, 2015

மதுவுக்கெதிராக போராடிய மாணவர்களின் சித்திரவதை நாட்கள்! வீடியோ!

மதுவுக்கு எதிராக பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் கல்லூரி அருகே இருந்த கடையை நொறுக்கினார்கள். கைது செய்யும் பொழுது காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக தாக்கினார்கள். ஊடகங்கள் வழியே உலகமே பார்த்து காவல்துறையை காறித்துப்பியது!

கைது செய்து, நிராயதபாணியாக இருந்த மாணவர்களிடம், காவல்துறை வெறி அடங்காமல், சேத்துப்பட்டு காவல்நிலையத்திலும், சிறையிலும் சித்திரவதை செய்தது!

இதோ சம்பந்தபட்ட RSYF மாணவர்களே விளக்குகிறார்கள்! பாருங்கள்!

https://www.youtube.com/watch?v=60DN-n-cgog

சட்டமன்றத்தில் சாராயக்கடைகளை மூடமுடியாது! என திமிராக அறிவித்துள்ளார் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். ’குடி’ மக்களை நேசிக்கும், ’திறமையான’ முதலமைச்சர், ரவுடிகளுடன் குலாவும், மக்கள் மீது மீது பாய்ந்து குதறும் காவல்துறை இருக்கும்வரை சாராயக்கடைகளை மூடமாட்டார்கள் தான்!

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் எங்கெல்லாம் மக்கள் ஒற்றுமையாகவும், உறுதியாகவும் எதிர்த்து நின்றார்களோ அங்கெல்லாம் இன்னும் அரசு சாராயக்கடையை திறக்கவில்லை. திறக்கமுடியவில்லை.

போராட்டங்கள் தான் தீர்வு! வேறு ஏதும் குறுக்குவழியில்லை!


Sep 27, 2015

நீதித்துறையில் ஊழல் இல்லவே இல்லை!

இன்று 27/09/2015 திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு ‍ புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கூட்ட நிகழ்வில்....

 "வழக்கறிஞர்கள் குற்றமே இழைக்காதவர்கள் என்று நாம் ஒரு போதும் சொல்லவில்லை. குற்றமிழைப்பவர்கள் யாராயிருந்தாலும் விசாரிக்கப்படவேண்டும், தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை. ஆனால் கடந்த 67 ஆண்டுகளில் எந்த உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதியும் ஊழல் குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டதில்லை. இவர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கினர் வாக்களிக்க வேண்டும் என்ற நிலை இருப்பதால், வெளிப்படையாக துணிச்சலாக ஊழல் குற்றம் முதல் பாலியல் குற்றம் வரை அனைத்தையும் செய்கிறார்கள். தட்டிக் கேட்டால், குற்றமிழைக்கும் நீதிபதிகளே, நீதிமன்ற அவமதிப்பு என்று நம்மை மிரட்டுகிறார்கள்."

 அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம்,
தமிழநாடு

Sep 24, 2015

எவரெஸ்ட்



1996. உலகின் பல பகுதிகளிலிருந்து மூன்று குழுக்கள் உலகின் மிக உயர்ந்த (29029 அடி) பனி படர்ந்த சிகரமான எவரெஸ்டை தொட நேபாளம் வந்து சேருகிறார்கள்.

ஒரு குழுவின் வழிகாட்டியான அமெரிக்கர் ராப்பின் துணைவியார் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாள். குழந்தை பிறப்பதற்குள் வந்து சேருவதாக விடைபெறுகிறார்.  ஏற்கனவே ஆறு சிகரங்களில் ஏறி, ஏழாவது சிகரத்தில் ஏறவந்திருக்கும் ஜப்பானிய பெண்மணி, தனக்கு கருமேகங்கள் அடங்கிய வானம் தொடர்ந்து கனவில் வருவதாகவும், எவரெஸ்டை தொடுவதின் மூலம் தனது ஆழ்மன ஆசை நிறைவேறும் என சொல்லும் அமெரிக்கர், தான் எவரெஸ்டை தொடுவதின் மூலம் தனது பிள்ளைகள் அடுத்தடுத்து சாதிப்பார்கள் என சொல்லும் ஒரு தபால்காரர் என பலரும் அந்த குழுவில் இருக்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட தூரம் ஹெலிகாப்டரில் போய் சேரும் குழுவினர், பிறகு கட்டம் கட்டமாக மெல்ல மெல்ல மேலே மன உறுதியுடன் முன்னேறுகிறார்கள்.  கடுமையான பனி, வயோதிகத்தாலும் பிற உடல் தொந்தரவுகள், ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு என பல்வேறு பிரச்சனையால் சிலர் பின்வாங்குகிறார்கள். உறுதியோடு தொடர்பவர்கள் திட்டமிட்டபடி மே 10 அன்று எவரெஸ்ட் உச்சியை சிலர் மட்டும் தொடர்கிறார்கள்.  நாமே தொட்ட மாதிரி ஒரு உற்சாகம் நம்மை தொற்றிக்கொள்கிறது.

கீழே இறங்கும் பொழுது காலநிலை தலைகீழாக மாற்றமடைகிறது.  கடுமையான புயல் காற்று, மழை என தாக்குகிறது. அதில் சிலர் இறந்து போகிறார்கள். சிலர் போராடி கீழே வந்தடைகிறார்கள்.  நமக்கு ஏற்படுவது மாதிரி நாம் பதட்டமடைகிறோம்.  படம் முடிவடைகிறது.

உண்மை கதை என்பதால், மற்ற மலை ஏறுகிற மற்ற கற்பனை கதைகள் போல விறுவிறுப்பு குறைவாக இருந்தாலும், இமயத்தின் பிரமாண்டம், குவிந்து கிடக்கிற பனி, மனிதர்களின் மனோதிடம் எல்லாம் நம்மையும் கதைக்குள் நம்மையும் ஒரு ஆளாய் உள்ளே இழுத்துகொள்கிறது.

20000 அடிக்கு மேலே சென்றால், மரணப்பாதை என்றே சொல்கிறார்கள்.  உண்மை தான். ஒருமுறை 6000 அடி உயரமுள்ள கொடைக்கானலுக்கு சென்ற பொழுது ஆக்சிஜன் குறைவால் நான் பட்ட கஷ்டம் சொல்லிமாளாது. ஒரு மருத்துவரை சந்தித்து ஒரு ஊசி போட்டபிறகு தான் நிதானத்துக்கு வந்து சேர்ந்தேன். அந்த பயத்தில் சில வருடங்கள் கொடைக்கானல் பக்கம் எட்டி பார்க்காமலிருந்தேன்.  அந்த உணர்விலிருந்து நான் பார்க்கும் பொழுது ஒவ்வொரு 2000 அடி உயரும் பொழுதும் நமக்கு இரத்த அழுத்தம் கூடுகிறது. திரையரங்கிலும் குளிர் அதிகமாய் இருந்ததால், பனியின் தன்மையை அப்படியே உணரமுடிந்தது.

2010 ஆண்டு வரையிலும் எவரெஸ்ட் உச்சியை தொட்டவர்கள் 3142 என தகவல் சொல்கிறார்கள்.    பெண்கள், வயதானவர்கள், ஆக்சிஜன் உதவியில்லாமலே தொட்டுவிட்டு வந்தவர்கள் என பல சாதனைகளும் இருக்கின்றன. எவரெஸ்ட் செல்லும் பல கட்டங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் என்கிறார்கள். நீண்ட பட்டியலைப் பார்த்தால் பகீரென்று இருக்கிறது.

எவரெஸ்ட் தொட்டவர்களில் நினைவில் நிற்பது உத்திரபிரதேசத்தை சார்ந்த அருணிமா. ரயிலில் சென்ற பொழுது தனது செயினை அறுத்துக்கொண்டு ஓடிய திருடனுடன் போராடிய பொழுது, ரயிலில் இருந்து தள்ளிவிட்டுவிட்டான். அதில் தனது காலை இழந்துவிட்டார். அத்தோடு துவண்டு விடாமல், இரண்டே ஆண்டுகளில் கடுமையாக பயிற்சி செய்து 2013ல் எவரெஸ்டை தொட்டிருக்கிறார். அசாத்தியமான மன வலிமை தான்!

படத்தில் ஒரு இடத்தில் ஒரு அமெரிக்க பயணி எவரெஸ்ட்டை தொட 65000 டாலர் கட்டியுள்ளேன் என்பார். இந்திய பணமதிப்பில் 40 லட்சம்.  இதில் சாமான்யனின் சாத்தியம் என்ன என்பதை யோசிக்கவேண்டியிருக்கிறது.

படம் பார்த்து உற்சாகம் வந்து நிறைய துட்டு இருந்தாலும், உடனே மலை ஏறிவிடமுடியாது.  முறையாக நேபாள அரசு அனுமதி பெறவேண்டும். காத்திருப்போர் பட்டியல் அதிகம். இதில் நிறுவனங்களின் போட்டி, பொறாமை எல்லாம் உண்டு. படத்திலும் ஆங்காங்கே வெளிப்படும்.

பார்க்கவேண்டிய படம் Everest. பாருங்கள்

குருத்து

Sep 15, 2015

ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்கும் நீதிமன்றப் பாசிசம்! - கண்டன ஆர்ப்பாட்டம்!



வழக்குரைஞர் சமூகத்தை மிரட்டுவதற்கு வருகிறது மத்திய போலிசு படை !
ஊழல் நீதிபதிகளை எதிர்க்கும்

நீதிமன்றங்கள் இனி போலீசு நிலையங்கள் !

ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்கும் நீதிமன்றப் பாசிசம்!

அன்பார்ந்த வழக்கறிஞர்களே,பொதுமக்களே!

நேற்று (15.09.2015) சென்னை உயர்நீதிமன்றத்தின்தலைமை நீதிபதி சஞ்சய் கிசன் கவுல், சிவஞானம் அமர்வு, தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி சில வழக்குரைஞர்கள் நடத்திய போராட்டத்தை சாக்காக வைத்து,
உயர்நீதிமன்ற வளாகத்தையே போலீசு முகாமாக மாற்றும் வகையிலான உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது. நீதிமன்றத்தின் மாண்பைப் பாதுகாப்பது என்ற பெயரில் வழக்குரைஞர் சமூகத்தையே குற்றவாளிகளாகச் சித்தரித்திருக்கிறது.

வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு (1) மதுபாட்டிலோடு வருகிறார்கள் (2) பெண் போலீசை கிண்டல் செய்கிறார்கள் (3) கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள் (4) கட்சிக்காரர்கள் பெரும் தொகை கொடுக்காவிட்டால்,பொய்ப் புகார் கொடுக்கிறார்கள் (5) தவறே செய்யாத போலீசு மீது குற்றம் சுமத்துகிறார்கள் (6) நீதிமன்றங்களில் ஊர்வலம், போராட்டம் நடத்துகிறார்கள் (7) யோகா வகுப்பு நடத்த விடாமல் தடுக்கிறார்கள் (8) மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள் - என்று போலீசார் எழுதிக் கொடுத்த குற்றப்பத்திரிகையை வாசித்து, விசாரணை நடத்தும் முன்னரே தண்டனையையும் அறிவித்து விட்டார்கள். இனிசென்னை, மதுரை உயர்நீதிமன்ற வளாகங்களை மத்திய தொழில் பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமாம். நீதித்துறையின் இறையாண்மையை மட்டுமின்றி, மாநில அரசின் அதிகாரத்தையும் பிடுங்கி மத்திய அரசிடம் ஒப்படைக்கச் சொல்லியிருக்கிறார்கள் மாண்புமிகு நீதிபதிகள்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவும் வழக்காடவும்வழக்குரைஞர்களாகிய நாம்தயார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறை செல்லவும் தயார். தங்கள் மீதான குற்றச்சாட்டுகளைப் பற்றி நீதியரசர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதே நாம் முன்வைக்கும் கேள்வி. சென்னை, மதுரை வழக்குரைஞர்களுக்கு எதிராக நீதிபதிகள் கூறியுள்ள குற்றச்சாட்டுகளைக் காட்டிலும் கடுமையான எண்ணற்ற குற்றச்சாட்டுகள் உயர்நீதி மன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது இருக்கின்றன.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் (1) சேம்பரில் மது அருந்துகிறார்கள் (2) நீதிமன்ற பெண் ஊழியர்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுகிறார்கள் (3) கிரானைட், தாதுமணல்,கார்ப்பரேட் வழக்குகளில் ஊழல் செய்து பல நூறு கோடி சம்பாதிக்கிறார்கள் (4) காசு வராத வழக்குகளில் தொடர்ந்து வாய்தா போடுகிறார்கள் (5) பெண் நீதிபதிகளை டான்ஸ் ஆடச் சொல்கிறார்கள் (6) கீழமை நீதிமன்ற நீதிபதிகளை மீன் குழம்பு வைத்து வரச் சொல்கிறார்கள் (7) சாதிவெறியோடு செயல்படுகிறார்கள் (8) நீதிமன்ற டெபாசிட் பணத்தை கையாடல் செய்கிறார்கள் (9) அரசு-போலீசுக்கு ஆதரவாக முறைகேடாகத் தீர்ப்புச் சொல்கிறார்கள் (10) நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் தேர்வில் ஊழல் செய்கிறார்கள் என ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகள் பல கிடப்பில் போடப்பட்டுள்ளன. இக்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு நீதிபதிகள் தயாரா? நீதிமன்ற அவமதிப்பு என்ற கவசத்தைப் பயன்படுத்திக் கொண்டு நீதிமன்றத்தின் மாண்பை அழிப்பவர்கள் நீதிபதிகள்தான் என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியுமா?

கட்டாய ஹெல்மெட் என்ற உத்தரவும், அணியாதவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது, மக்கள் நலனுக்கு எதிரானது என்பது மதுரை வழக்குரைஞர் சங்கத்தின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுடைய கருத்து. எனவேதான், மதுரை வழக்குரைஞர்களாகிய நாங்கள் அந்தத் தீர்ப்பை எதிர்த்தோம். விமரிசித்தோம். இது ஒரு கருத்துரிமை. கருத்தை வெளிப்படுத்தும் குடிமக்களின் உரிமையைப் பறிக்கின்ற அதிகாரம் நீதிமன்றத்துக்கு கிடையாது. நாங்கள் பேசியது நீதிமன்ற அவமதிப்பு என்றால் ஆயிரக்கணக்கான வழக்குரைஞர்களையும், இந்த தீர்ப்புக்கு எதிராக அன்றாடம் பேசி வரும் லட்சக்கணக்கான மக்களையும் உயர்நீதிமன்றம் தண்டிக்கட்டும்.

எங்களுக்கு எதிராக 16.9.2015 அன்று நடைபெறவிருக்கும் வழக்கு விசாரணை குறித்து நீதிபதிகள் சி.டி.செல்வம், தமிழ்வாணன் அமர்வு சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, மற்ற
வழக்கறிஞர்கள் உள்ளே வரக்கூடாதாம்;இன்– கேமரா விசாரணையாம்; வீடியோ பதிவாம்;சீருடை அணிந்த-அணியாத போலீசு பாதுகாப்பாம்! நூற்றுக்கணக்கான கொலைகளை அரங்கேற்றிய சாதி,மதவெறி கிரிமினல்களின் வழக்குகள் கூட திறந்த நீதிமன்றத்தில் நடத்தப்படுகின்றன. வெள்ளைக்காரன் ஆட்சியில் கூட நடந்திராத வகையில் வழக்குரைஞர்களை பயங்கரவாதிகளைப் போல சித்தரிக்கிறது இந்த உத்தரவு.

நீதிமன்றத்தின் மாண்பைக் காப்பாற்றும் பொருட்டுத்தான் உயர்நீதிமன்ற வளாகத்தை மத்திய போலீஸ் படையிடம் ஒப்படைப்பது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன் காமெரா விசாரணை – என்பன போன்ற உத்தரவுகளைப் பிறப்பிப்பதாக நீதிபதிகள் குறிப்பிடுகிறார்கள். உண்மை அதுவல்ல.
இந்தியாவிலேயே முதல் முறையாக கடந்த 10-ம் தேதியன்று தென்மாவட்ட வழக்கறிஞர்கள் சுமார் 1500 பேர் மதுரையில் கூடி நீதித்துறை ஊழலுக்கெதிராகப் பேரணி நடத்தினோம். ஊழல் நீதிபதிகள் பட்டியலை ஆதாரப்பூர்வமாக வெளியிட்டோம். நீதித்துறை ஊழலைப் பற்றி பகவதி முதல் கட்ஜு வரை பல உச்ச நீதிமன்ற நீதிபதிகளே பேசியிருக்கிறார்கள். வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஊழலை விசாரிக்கக் கோரி தாக்கல் செய்திருக்கும் மனு ஆண்டுக்கணக்கில் தூங்குகிறது. பல அரசியல் வாதிகளும் ஊடகங்களும் இதனைக் கூறியிருக்கிறார்கள். அதையெல்லாம் கண்டுகொள்ளாத நீதிபதிகள், 1500 வழக்குரைஞர்கள் வீதிக்கு வந்து குறிப்பான நீதிபதிகள் மீது குறிப்பான குற்றச்சாட்டுகளைக் கூறியவுடனே கொந்தளிக்கிறார்கள். தங்களுடைய உண்மை முகம் மக்கள் மத்தியில் அம்பலமாவதை அவர்களால் சகிக்க முடியவில்லை.

வழக்குரைஞர்கள் பொதுப்பிரச்சினைக்காகப் போராடுவது இது முதல் முறையல்ல. காவிரி, முல்லைப்பெரியார்,ஈழம்,உரிமையியல்-குற்றவியல் சட்டத்திருத்தங்கள், மூவர் தூக்கு என்று பல பிரச்சினைகளுக்காக தமிழக வழக்குரைஞர்கள் போராடியிருக்கின்றனர். நீதிபதி சுபாஷண் ரெட்டியின் பாசிசக் கட்டளைகளை எதிர்த்துப் போராடி முறியடித்திருக்கிறோம். இவற்றையெல்லாம் பொறுக்க முடியாமல்தான் பிப்ரவரி 19 ஆம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தினுள் போலீசு படை புகுந்து தாக்குதல் நடத்தியது. நீதிபதிகள், பெண் வழக்குரைஞர்கள், பொதுமக்கள் என்று பலரை போலீசார் தாக்கியதற்கும், வாகனங்களை நொறுக்கியதற்கும் வீடியோ ஆதாரங்கள் இருந்தும் அந்த வழக்குகள் தூங்குகின்றன.

 இப்போது நீதிமன்ற வளாகத்தையே போலீசு முகாமாக மாற்றுவதென்று முடிவு செய்து விட்டார்கள் நீதியரசர்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் நகைப்புக்குரியவை. ‘’வழக்குரைஞர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள், கார்களை நிறுத்துகிறார்கள்’’ என்று உப்பு சப்பில்லாத குற்றச்சாட்டுகளை தலைமை நீதிபதி அடுக்குகிறார். மாட்டுக்கறியும் அசைவமும் சாப்பிடுபவர்கள் கிரிமினல் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். யோகா என்ற பெயரில் உயர் நீதிமன்றத்துக்குள் இந்துத்துவ பிரச்சாரம் செய்வதை எதிர்ப்பவர்களும் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். இதையெல்லாம் தடுத்து, நீதித்துறையின் மாண்பைக் காப்பாற்ற வேண்டுமானால், மத்திய போலீசு படையிடம் உயர் நீதிமன்ற வளாகத்தை ஒப்படைக்க வேண்டுமாம் !

“ஊழல் நீதிபதிகளிடமிருந்து நீதியின் மாண்பைக் காப்பாற்றுவோம்” என்று குரல் எழுப்பினால், அப்படிக் குரல் எழுப்பும் “வழக்குரைஞர்களை மட்டுமல்ல, நீதிமன்ற வளாகத்தையே போலீசிடம் ஒப்படைப்போம்” என்கிறார்கள் நீதியரசர்கள். இதைவிடப் பெரிய நீதிமன்ற அவமதிப்பை யாரேனும் இழைக்க முடியுமா?

வழக்கறிஞர்கள் குற்றமே இழைக்காதவர்கள் என்று நாம் ஒரு போதும் சொல்லவில்லை. குற்றமிழைப்பவர்கள் யாராயிருந்தாலும் விசாரிக்கப்படவேண்டும், தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை. ஆனால் கடந்த 67 ஆண்டுகளில் எந்த உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதியும் ஊழல் குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டதில்லை. இவர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கினர் வாக்களிக்க வேண்டும் என்ற நிலை இருப்பதால், வெளிப்படையாக துணிச்சலாக ஊழல் குற்றம் முதல் பாலியல் குற்றம் வரை அனைத்தையும் செய்கிறார்கள். தட்டிக் கேட்டால், குற்றமிழைக்கும் நீதிபதிகளே, நீதிமன்ற அவமதிப்பு என்று நம்மை மிரட்டுகிறார்கள்.
நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்தப் பாதுகாப்பு அகற்றப்படாத வரை நீதித்துறை ஊழலை ஒழிக்கவே முடியாது. அரசியல்வாதிகள் சொத்துக் கணக்கை காட்டவேண்டும் என்று ஒப்புக்காவது ஒரு சட்டமிருக்கிறது. ’’நீதிபதிகளோ சொத்துக்கணக்கு காட்ட மாட்டோம். ஏனென்றால் நாங்கள் நீதிபதிகள்’’ என்று கூச்சமே இல்லாமல் அறிவிக்கிறார்கள். இந்த இலட்சணத்தில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையிடம் உயர் நீதிமன்றத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள் நீதியரசர்கள்.

“முல்லைப் பெரியார் அணையின் பாதுகாப்பை மத்தியப் படையிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று கேட்டால் அது கேரள அரசின் உரிமை என்று கூறும் நீதிமன்றம், தமிழகத்தின் உயர் நீதிமன்றத்தை மத்தியப் படையிடம் ஒப்படைக்கக் கோருகிறது. தமிழே தெரியாத தலைமை நீதிபதிகள், தமிழே தெரியாத போலீசு படைகளின் கட்டுப்பாட்டில் தமிழகத்தின் உயர் நீதிமன்றம்! நெய்வேலியில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை ஒரு அப்பாவித் தொழிலாளியைச் சுட்டுக் கொன்று விட்டு, அதனை எதிர்த்த பிற தொழிலாளர்களையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய காட்சியைத் தமிழகமே கண்டது. உயர் நீதிமன்றத்திலும் நாளை இது நடக்கும். “நீதிபதிகளின் ஊழலை எதிர்த்தால் என்கவுன்டர்” என்பதுதான் தற்போது பிறப்பிக்கப் பட்டிருக்கும் உத்தரவுக்குப் பொருள்.

இந்த சர்வாதிகாரத்துக்கு பணிய மாட்டோம் என்பதைத் தமிழகத்தின் வழக்குரைஞர்கள் நிரூபித்துக் காட்டுவோம்!
நீதித்துறை ஊழலுக்கு முடிவு கட்டுவோம்.

000
கண்டன ஆர்பாட்டம்!

நாள்:16.09.2015 புதன்

இடம்:ஆவின் முன்பு,

உயர்நீதிமன்றம்,சென்னை.
அனைத்துவழக்கறிஞர்சங்கங்கள் – தமிழ்நாடு

ஊழல்நீதிபதிகள்மீதானபுகார்களைத்தெரிவிக்க-
மதுரைவழக்கறிஞர்சங்கம்தொலைபேசி எண் : 0452- 2537120

Sep 12, 2015

டாஸ்மாக் எதிர்ப்பு போராளிகள் நீதிமன்றத்தையும் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்!

 டாஸ்மாக் எதிர்ப்பு போராளிகள் சிறையிலிருந்து வெளியே கம்பீரமாய் முழக்கமிட்டு வந்துகொண்டிருக்கிறார்கள்!

38 நாட்கள் சிறையில் உறுதியாக இருந்து நீதிமன்றத்தின் யோக்கியதையையும் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்!

காட்சி 1

ஆக. 3ந்தேதி ஆயிரக்கணக்கான பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் கடையை அடித்துநொறுக்கினார்கள். சிதறி ஓடாமல், அரசை அம்பலப்படுத்தி முழக்கமிட்ட RSYF மாணவ தோழர்களை போலீசு தாக்கியது. ஊடகங்கள் வழியாக உலகமே பார்த்து போலீசை காறித்துப்பியது. வெறியுடன் காவல் நிலையத்திலும் தாக்கினார்கள். காயத்துடன் நின்ற மாணவர்களை பார்த்து ரிமாண்ட்டில் கையெழுத்திட்ட நீதிபதிக்கு எந்த பதைபதைப்பும் வரவில்லை. போலீசை கண்டிக்கவுமில்லை. போலீசை போலவே, மாணவர்களை “வா! போ” என ஒருமையில் அழைத்தார் நீதிபதி! நாம் கண்டித்தோம்.

காட்சி 2

சிறையில் நுழைந்ததும் நிராயுதபாணியான மாணவர்கள் போலீசால் தாக்கப்பட்டார்கள். அடுத்த நாளும் தாக்கப்பட்டார்கள். நாம் பதறிப் போய், மாணவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டுவா! என “ஆட்கொணர்வு” மனு தாக்கல் செய்தோம். அம்பலப்பட்டுவிடுவோம் என பயந்து, மாவட்ட நீதிபதி விசாரணை என நாடகமாடியது. எவ்வளவோ தகிடுத்தத்தங்கள் செய்தாலும் நீதிபதியும் வேறு வழியேயில்லாமல் அடித்தது உண்மை என அறிக்கை தாக்கல் செய்தார். இப்பொழுது விசாரணைக்கு எடுத்தால், அசிங்கப்பட்டுபோவோம் என நீதிமன்றம் ஜவ்வாய் இழுத்தடிக்கிறது!

காட்சி 3

பெண் மாணவிகளை சிறையில் உளவியல் ரீதியாக மிரட்டியது உளவுத்துறை ஆண் போலீசு. இதற்காகவும் “ஆட்கொணர்வு மனு” தாக்கல் செய்தோம். உளவுத்துறை ஆண் போலீசு சிறைக்கு போனது உண்மை. மாணவிகளை சந்திக்கவில்லை என கதைவிட்டது. பெண்கள் சிறையில் ஆணுக்கு என்ன வேலை? என்ற கேள்வியை நீதிமன்றம் கவனமாக தவிர்த்தது. “வீடியோ காட்சிகளை ஒப்படை” என்ற உத்தரவிற்கு, “கேமராவே அங்கு கிடையாது” என பசப்புகிறது!

காட்சி 4

பச்சைப்பா கல்லூரி மாணவர்கள் 15 நாட்கள் சிறை முடிந்து, போலீசு கேட்காமலேயே எழும்பூர் பெண் நீதிபதி இன்னொரு பதினைந்து நாள் நீடித்தார். நமது வழக்குரைஞர் காரணம் கேட்டால் பதிலே இல்லை. பாதிக்கப்பட்ட மாணவ தோழர்களே கேள்வி கேட்டார்கள். பேசக்கூடாது என்றார். உயர்நீதிமன்றத்தில் மீண்டும் பரிசீலிக்க கேட்டால், “நீடித்தது சரி தான்” என பதில் சொன்னது.

காட்சி 5

35 நாட்களுக்கு பிறகு பிணை கேட்டால், டெபாசிட் பணம், தொடர்ந்து கையெழுத்திடுவது, இரண்டு பேர் ஜாமீன் என பட்டியலிட்டது நீதிமன்றம். மாணவர்கள் பொதுநோக்கத்திற்காக போராடினார்கள். காவல் நிலையத்தில் வைத்து அடித்ததை, நீதிபதி பதிவு செய்திருக்கிறார். சிறையில் அடித்ததை மாவட்ட நீதிபதி பதிவு செய்துள்ளார். ஆகையால், இப்பொழுது போலீசும், சிறை போலீசும் தான் குற்றவாளிகள். அதற்காக நாங்கள் நீதியும், இழப்பீடும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். எந்த நிபந்தனையும் விதிக்ககூடாது என்றோம். ஒரு முதல் தகவலறிக்கைக்கு ரூ 50 கட்டலாமே! என கேட்டது. நாம் அதற்கும் மறுத்தபிறகு, மாணவர்களுக்கு நிபந்தனையின்றிம், நிர்வாகிகள் 4 பேருக்கு இரு வாரங்கள் சேத்துப்பட்டு காவல்நிலையத்தில் கையெழுத்திடவேண்டும் என‌ பிணை தர பணிந்தது!

கவனியுங்கள். அரசின் அத்தனை ஒடுக்குமுறையையும் நீதிமன்றம் பச்சையாய் ஆதரித்து நிற்கிறது. இறுதியில் எந்தவித நிபந்தனையுமின்றி நீதிமன்றம் பணிந்து, பிணை தந்ததற்கு காரணங்கள்

தொடர்ச்சியான டாஸ்மாக் எதிர்ப்பு மக்கள் போராட்டங்கள்!

மாணவர்களை நிபந்தனையுமின்றி விடுதலை செய்யவேண்டும்  என தொடர்ந்து நடைபெற்ற அனைத்து தரப்பு மக்களின் போராட்டங்கள்!

 சென்னை வழக்குரைஞர்கள் சங்கம் எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை
செய்யவேண்டும் என தீர்மானம் இயற்றியது!

சென்னை வழக்குரைஞர்கள் சங்க பிரதிநிதிகள், மூத்த வழக்குரைஞர்கள், பல வழக்குரைஞர்கள் உயர்நீதி மன்றத்தில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்!

அரசின் ஒடுக்குமுறையையும், நீதிபதிகளின் யோக்கியதையும் நாம் விமர்சனம் செய்து வெளியிட்ட பல ஆயிரம் பிரசுரங்கள் வழக்குரைஞர்கள் மத்தியில் விநியோகம் செய்தது!

இப்படி தொடர் போராட்டங்கள் செய்ததின் மூலம் தான் மாணவர்கள் இப்பொழுது பிணையில் வெளியேவந்திருக்கிறார்கள்!

உறுதியோடு போராடிய RSYF பச்சையப்பா கல்லூரி மாணவ தோழர்களுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

அரசு, நீதிமன்றம் எல்லாம் பெயரளவிலான ஜனநாயகத்தை கூட அனுமதிப்பதில்லை. பச்சையாய் அம்பலப்பட்டு நிற்கிறது.

போராட்டமின்றி வாழ்க்கையில்லை! போராடும் மக்களுக்கு நாம் என்றும் உறுதுணையாய் நிற்போம்!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை
9094666320

Sep 9, 2015

முன்பணம் கட்டுவதை தகர்த்தோம்! மக்களும், தோழர்களும் பிணையில் விடுதலை!


டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட“மக்கள் அதிகாரம்” அமைப்பைச் சேர்ந்த தோழர்களுக்கும், மக்களுக்கும் பிணை வழங்குவதற்கு நீதிபதி வைத்தியநாதன் விதித்த நிபந்தனைகள் குற்றவியல் நீதி வழங்கு நெறிகளுக்கே (criminal jurisprudence) எதிரானவை. பிணை தருவதற்கு மேலப்பாளையூர் விவசாயிகள் 10,000 ரூபாய் முன்பணம் (Deposit) கட்ட வேண்டுமென்றும், விருத்தாசலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவன் 50,000 ரூபாய் முன்பணம் கட்ட வேண்டுமென்றும், இந்தத் தொகையை புகார்தாரரான டாஸ்மாக் நிர்வாகத்திடம் இப்போதே கொடுத்துவிட வேண்டுமென்றும் உத்தரவிட்டிருந்தார் உயர்நீதி மன்ற நீதிபதி வைத்தியநாதன்.

குற்றம் சாட்டப்பட்ட நபர் குற்றவாளிதானா என்பதும், இழப்பு என கூறப்படும் தொகை உண்மைதானா என்பதும் விசாரைணக்குப் பின்னர் தீர்ப்பில்தான் தெரியவரும். சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு நான்காண்டு சிறையும், 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு பத்து ரூபாய் கூட டெபாசிட் விதிக்காமல் பிணை தருகிறார் தலைமை நீதிபதி தத்து. 20,000 கோடி வரி ஏய்ப்பு செய்த நோக்கியா நிறுவனம் வெறும் 200 கோடியை டெபாசிட் செய்து விட்டு, ஆயிரக்கணக்கான தொழிலாளிகளை வேலைநீக்கம் செய்து ஆலையை மூடுவதற்குத் தோதாக தீர்ப்பளிக்கிறார் நீதிபதி ராஜேந்திரன்.

ஆனால் சாராய பாட்டிலை உடைத்த குற்றம் நிரூபிக்கப் படுவதற்கு முன்னரே, அட்வான்சாக 50,000 ரூபாய் அபராதம் விதித்து ஒரு மாணவனுக்கு நீதி வழங்கப்படுகிறது. இது மனுநீதி அல்லாமல் வேறென்ன?
மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு போலீசு சொன்ன யோசனையை தான் நீதிமன்றமும் அப்படியே ஏற்று முன்பணம் கட்ட உத்தரவிட்டிருக்கிறது. முன்பணம் கட்டி வெளியே வந்தால், ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடும், இனி வருங்காலங்களிலும் இதையே அரசும், நீதிமன்றமும் கடைப்பிடிக்கும் என கருதி, சிறையில் உள்ள மக்கள் அதிகாரம் தோழர்களிடமும், மக்களிடமும் விவாதித்தோம். சிறையில் இருப்பது எங்களுக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. தொடர்ந்து போராடுங்கள் என நமக்கு தெரிவித்தார்கள்.

உடனடியாக நமது வழக்குரைஞர்கள் முன்பணத்தை ரத்து செய்ய சொல்லி வழக்கு தாக்கல் செய்தார்கள். மூத்த வழக்குரைஞர்களும் நமது கருத்துக்கு உடன்பட்டார்கள். நாம் சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தில் முன்வைத்ததும், சங்கமும் ”டாஸ்மாக் போராட்டம் நியாயமானது. கைதாகி ஒரு மாதம் ஆகியும் சிறையில் உள்ளவர்களை எவ்வித நிபந்தனையின்றி விடுதலை செய்யவேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றியது. மேலும், உயர்நீதி மன்ற வளாகத்திலேயே நீதிமன்றத்தின் போக்கை கண்டிக்கும் விதமாக, திரளான வழக்குரைஞர்கள் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.

இப்படி தொடர் போராட்டத்தின் விளைவாக, நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது, மூத்த வழக்குரைஞர்கள் சங்கரசுப்பு, விஜயகுமார், செல்வராஜ் அவர்களும், நமது வழக்குரைஞர்களும், ஆதரவான வழக்குரைஞர்களும் ஒன்று சேர்ந்ததில், நீதிமன்றம் வேறுவழியின்றி பணிந்தது. கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை என்று காட்டுவதற்கு ஒரு முதல் தகவலறிக்கைக்கு (FIR) ரூ. 1000 பணம் கட்டவேண்டும் என கூறியிருக்கிறது! ஒரு மாதம் காலம் சிறையில் இருந்தாலும், உறுதியோடு இருந்த மக்களும், தோழர்களும், மற்றும் வழக்குரைஞர்களின் உழைப்பும், ஒத்துழைப்பும் தான் அரசின், நீதிமன்றன்றத்தின் ஒடுக்குமுறையை தகர்த்திருக்கிறது! இப்பொழுது மேலப்பாளையூர் மக்களோடு கைதான மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் இராஜூவும், விருத்தாச்சலம் மக்கள் அதிகாரம் தோழர்களும், கோவை மக்கள் அதிகாரம் தோழர்களும் பிணையில் விடுதலை ஆகிறார்கள்.

சிறையில் இருந்து மக்களையும், தோழர்களையும் வெளியில் கொண்டு வரும் முயற்சியில் பல மூத்த தோழர்களும், ஆதரவான வழக்குரைஞர்களும், உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கமும், நீதிமன்ற ஊழியர்களும் பல உதவிகளை செய்து, நம் தோள் கொடுத்து நின்றிருக்கிறார்கள். அனைவருக்கும் நமது நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம்.
வருகிற திங்கட்கிழமையன்று டாஸ்மாக் போராட்டத்தில் ஈடுபட்ட பச்சையப்பா கல்லூரி மாணவர்களின் பிணை வழக்கு வருகிறது! அதற்கான வேலைகளில் இப்பொழுது தயாராகி வருகிறோம்.


 மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை
9094666320

05/09/2015

Sep 8, 2015

ஒன்றிரண்டு துயர நினைவு கூட இல்லை! – ஒரு கடிதம்!




சமீபத்தில் ஒரு மின்னஞ்சல் வந்தது. வழக்கம் போல் வாசகர் எழுதியல்ல.  வாசகரின் தந்தை எழுதியது.  தன்னை அறிமுகம் செய்துகொண்டார் அவர்.  மத்திய அரசில் ஆரம்பநிலை அதிகாரியாக இருந்தவர்.  இரண்டாம்நிலை அதிகாரியாக ஓய்வு பெற்றார்.  இருபிள்ளைகள் இருவருமே நன்றாகப் படித்து அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலுமாக வேலை பார்க்கிறார்கள்.  இவர் திருச்சியில் மனைவியுடன் வாழ்கிறார். அவரது பிரச்சனை தனிமை தான்.  மனைவிக்கு கடுமையான கீல்வாதம்.  ஆகவே குளிர்நாடுகளில் சென்று வாழமுடியாது.  அவருக்கு ஆஸ்துமா பிரச்சனை உண்டு.

பிள்ளைகள் வெளிநாடுகளில் குடும்பத்துடன் வாழ்கிறார்கள்.  அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட ஊருக்கு வருவதில்லை என்பதே அவரது மனக்குறை.  வந்தால் அதிகபட்சம் ஐந்து நாட்கள். உடனே கிளம்பிவிடுகிறார்கள்.  அந்த ஐந்து நாட்களிலும் மொத்தமாக ஐந்து மணி நேரம் பெற்றோரிடம் செலவழித்தால் அதிகம்.  ‘உங்கள் நூல்களை இங்கே வரும் பொழுது  என் இரண்டாவது மகன் கட்டுக்கட்டாக வாங்கிச் செல்கிறான்  நீங்கள் ஏன் இதை அவனிடம் பேசக்கூடாது? நீங்கள் பேசினால் அவன் கேட்பான்’ என்றார்.  அவர் இம்மாதிரி குடும்ப விசயங்களில் தலையிடக் கூடாதென்பது என் கொள்கை. ஆனால் அவர் மீண்டும் ஒரு மின்னஞ்சல் அனுப்பிய பொழுது அதை அவரது மகனுக்கு அப்படியே திருப்பி விட்டேன்.  அவர் மகன் ஒருவாரம் கழித்து மிக நீளமான ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.  என்னை பல கோணங்களில் சிந்திக்க வைத்த கடிதம் அது.

‘நான் திருச்சியில் இருபத்திரண்டு வருடம் வாழ்ந்திருக்கிறேன். ஆனால் திருச்சியுடன் எனக்கு மானசீகமாக எந்த உறவும் இல்லை. இருபத்திரண்டு வருடம் அப்பா அம்மாவுடன் வாழ்ந்தேன்.  ஆனால் அவர்களைப் பற்றி ஒரு நல்ல நினைவு கூட இல்லை’ என்றார் அவரது மகன்.  அவரது தந்தை அவரை ஒரு பொறியியலாளராக ஆக்க வேண்டும் என்பதைப் பற்றி மட்டும் தான் சிந்தனை செய்தார்.  அதுவும் அவர் எல்.கே.ஜியில் சேர்வதற்கு முன்னதாகவே, ஒவ்வொருநாளும் அவரே காலையிலும் மாலையிலும் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தார்.  அதைத்தவிர அவர்களின் அன்னையும் பாடம் சொல்லிக்கொடுப்பதுண்டு.  பள்ளிக்கூட படிப்பு, வீட்டில் படிப்பு தவிர இளமை நினைவுகள் என்று எதுவுமே இல்லை. 

ஞாயிற்றுக்கிழமைகள், விடுமுறை நாட்களில் முழுக்க முழுக்க பாடங்கள் தான்.  கோடைவிடுமுறை முழுக்க ஆங்கில மொழியறிவுக்கும், கணிதத் திறமைக்கும் வகுப்புகள்.  தீபாவளி, பொங்கள் தினங்களில் கூட கொண்டாட்டம் இல்லை. படிப்பு தான்.

’சில சமயங்களில் இரவில் படுத்து சிந்திப்பேன்.  இளமைக் காலத்தைப் பற்றிய ஒரே ஒரு மகிழ்ச்சியான நினைவாவது மனதில் எஞ்சியிருக்கிறதா என்று, எவ்வளவு நினைத்தாலும் ஒரு சிறிய நிகழ்ச்சி கூட நினைவுக்கு வரவில்லை.  பின்பு ஒருமுறை எண்ணிக்கொண்டேன். சரி, ஒன்றிரண்டு துயரமான நினைவாவது இருந்தால் நன்றாக இருக்குமே என்று. அந்த நினைவுகள் வழியாகக் கூட என் வீட்டுடனும் ஊருடனும் மானசீகமாக தொடர்புப்படுத்திக்கொ கொள்ளாலாமே என்று. அப்படியும் ஒரு நினைவு கிடையாது.  படிப்பு படிப்பு படிப்புதான்.

‘வீட்டை விட மோசம் என் பள்ளி’ என அவரது மகன் எழுதியிருந்தார். ’தனியார் பள்ளி அது. மிக உயர் மதிப்பெண்கள் பெற்றுத்தரும் செலவேறிய பள்ளி. அங்கே பிள்ளைகளை சேர்க்க வரிசையில் நிற்பார்கள். பள்ளிக்கு உள்ளே நுழைந்த கணம் முதல் வெளியே செல்லும் கணம் வரை கூடவே ஆசிரியர்கள் இருப்பார்கள்.  பேசவோ சிரிக்கவோ விளையாடவோ அனுமதி இல்லை.  படிப்பு மட்டும்தான்’ அந்தப் படிப்பிலும் எந்த சுவாரசியமும் இல்லை. ‘பள்ளிப்படிப்புக்கு வெளியே நான் எதையுமே வாசித்ததில்லை.  யாருமே இலக்கியத்தையோ கலைகளையோ அறிமுகம் செய்ததில்லை.  நானறிந்த படிப்பு என்பது புத்தகத்தில் உள்ளதை அச்சு அசலாக திருப்பி எழுவதற்கான பயிற்சி மட்டும் தான்’ என்று எழுதியிருந்தார்.

அப்படியே பொறியியல் படித்து வேலைக்காக அமெரிக்கா சென்ற போதுதான் அவருக்கு தெரிந்தது மனித வாழ்க்கை என்பது எவ்வளவு மகிழ்ச்சிகள் கொண்டது என்று. பயணங்கள், நண்பர்களுடனான சந்திப்புகள், இலக்கிய வாசிப்பு, இசை என நீண்டது.

அவர் எழுதினார் ‘எந்த இடத்தில் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமோ அந்த இடத்தில் நம் மனம் படிந்துவிடுகிறது.  அதுதான் நமது ஊர் என்று நினைக்கிறோம்.  எனக்கு அமெரிக்காவின் நகரங்கள் தான் பிடித்திருக்கின்றன.  திருச்சி என்பது அன்னிய ஊராக தெரிகிறது. ஒருநாளுக்குள் சலித்துவிடுகிறது’ ‘என் பெற்றோர் மீது எனக்கு மரியாதையும் நன்றியும் உண்டு.  அவர்களை நான் புரிந்து கொள்கிறேன்.  அவர்களுடன் அரைமணி நேரம்  என்னால் பேசிக்கொண்டிருக்கமுடியாது.  இருபத்திரண்டு வருடம் படி படி என்று மட்டுமே சொன்ன இரண்டு வயோதிகர்கள் அவர்கள். அவ்வளவு தான்.

அவர்களை நான் நேசிக்க வேண்டும் என்றால் அவர்களை எனக்கு தெரிந்திருக்கவேண்டும். அவர்களின் மனம் எனக்குப் புரிந்திருக்கவேண்டும். எனக்கு அவர்கள் அன்னியர்கள் போல தெரிகிறார்கள்’ ‘இருபத்திரெண்டுவருடம் அவர்கள் எங்களிடம் பொதுவாக எதையும் உரையாடியதே இல்லை.  படிப்பையும் எதிர்காலத்தையும் பற்றிய கவலைகளை கொட்டிக்கொண்டே இருப்பார்கள். இப்போது அவர்கள் பேச நினைத்தாலும் பேசுவதற்கான தொடர்பு இல்லை.  இப்போது கூட நீ என்ன சம்பளம் வாங்குகிறாய். என்ன மிச்சம் பிடித்தாய் என்று பயம் காட்டமட்டுமே அவர்களால் முடிகிறது.  புத்தகம் வாங்காதே, பயணம் செய்யாதே என்று அவர்கள் வாழ்ந்தது போல என்னை வாழச் சொல்கிறார்கள்’ ‘நீங்களே சொல்லுங்கள், அரைமணி நேரம் கூட பேசிக்கொள்ள பொதுவாக ஏதும் இல்லாதவர்களிடம் நாம் எவ்வளவுதான் செயற்கையாக முயன்றாலும் பேசிக்கொண்டிருக்கமுடியுமா?   முற்றிலும் அன்னியமாக தெரியும் ஓர் ஊரில் எவ்வளவுநாள் வாழமுடியும்?  மரியாதைக்காகவோ நன்றிக்காகவோ ஐந்துநாள் இருக்கலாம்.  அதற்கு மேல் என்ன செய்வது?  என்று மகன் கேட்டார்.  ‘என் இளமைப் பருவம் முழுக்க வீணாகிவிட்டது என்றுதான் நினைக்கிறேன்’ 

அந்தக் கடிதத்தை அப்படியே அவரது தந்தைக்கு அனுப்பினேன்.  ‘இதைவிட தெளிவாக எதையும் நான் சொல்லிவிட முடியாது’ என்றேன்.  அவர் புரிந்து கொள்ளாமல் ‘நன்றி கெட்டத்தனம். பொறுப்பற்றத்தனம்’ என்று மகனை வசைபாடி ஒரு கடிதம் அனுப்பி எனக்கும் பிரதி அனுப்பியிருந்தார்.   மேலும் ஒரு மாதம் கழித்து ‘இந்த தீபாவளிக்கு அவனை வரச் சொல்லமுடியுமா?’ என கேட்டு ஒரு மின்னஞ்சல் எனக்கு அனுப்பினார்.

தீபாவளி என்பது இளைமையில் கொண்டாடபடவேண்டிய ஒரு பண்டிகை.  அன்று தான் அந்த உற்சாகம் இருக்கும்.  வளர்ந்தபின் அந்த நினைவுகளைதான் கொண்டாடிக்கொண்டிருப்போம்.  உங்கள் மகனுக்கு நினைவுகளே இல்லை என்கிறார். நீங்கள் அவருக்கு உரிமைப்பட்ட பண்டிகைக் கொண்டாட்டங்கள் அனைத்தையும் பறித்துக்கொண்டுவிட்டீர்கள் என்கிறார்’ என நான் பதில் எழுதினேன். அவர் மீண்டும் பதில் போடவில்லை.

வாழ்க்கை என்பது எதிர்காலத்திற்கான போராட்டம் அல்ல. வாழும் தருணங்களை உயிர்ப்புடன் வைத்துக்கொள்வது தான்.  அதற்காகவே பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் திருவிழாக்களும் நம் முன்னோரால் உருவாக்கப்பட்டுள்ளன.

நாளை முக்கியம் தான். இன்று அதைவிட முக்கியம்!

-    நண்பர் அனுப்பிய வாட்ஸ் அப் செய்தியிலிருந்து….

Sep 7, 2015

23ம் புலிகேசி போல கூச்சமில்லாமல் வலம் வருகிறார்கள் இந்த நீதியரசர்கள்!

சசி பெருமாள் ஏறியிருக்க வேண்டியது செல்போன் கோபுரமல்ல, உயர்நீதிமன்றக் கோபுரம் !

ன்பார்ந்த நண்பர்களே,


சசி பெருமாளை மரணத்துக்குத் தள்ளியது தமிழக அரசுதான் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஆனால் உயர் நீதிமன்றமும் சேர்ந்துதான் அவரை மரணத்துக்குத் தள்ளியது என்ற உண்மையை யாரேனும் மறுக்க முடியுமா? சட்டத்தின் மீதும், நீதிமன்றத்தின் மீதும் நம்பிக்கை வைத்து மூன்றாண்டு காலம் அவர் போராடினார். “உண்ணாமலைக் கடை டாஸ்மாக்கை அகற்ற வேண்டும்” என்று ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே உயர்நீதிமன்றம் உத்தரவும் பிறப்பித்து விட்டது. “நீதிமன்ற உத்தரவை அமல்படுத்து” என்றுதான் சசி பெருமாளும் அந்த ஊர் மக்களும் போராடினார்கள்.

தனது உத்தரவு அமலாகவில்லை என்பது நீதிமன்றத்துக்குத் தெரியாதா? தெரியும். விதியை மீறி நெடுஞ்சாலைகள், பள்ளிகள் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் கடைகளை அகற்றுமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு எதையும் தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்பது எல்லா நீதிபதிகளுக்கும் தெரியும். தனக்குத் தேவையென்றால், தானாக முன்வந்து (suo motu) நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கும் நீதிபதிகள், டாஸ்மாக் விவகாரத்தில் ஒரு இடத்தில் கூட அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவில்லை. இது நீதிமன்றம் தெரிந்தே செய்திருக்கும் குற்றம்.

சசி பெருமாள் செய்த தவறுசசி பெருமாள் உயிர் துறந்த பிறகாவது, தன்னுடைய குற்றத்தை உயர்நீதிமன்றம் ஒப்புக் கொண்டிருக்கிறதா? சசி பெருமாளை மரணத்துக்குத் தள்ளிய அரசைக் கண்டித்து உயர்நீதிமன்றம் ஒரு வார்த்தையாவது பேசியதா? சசி பெருமாளின் மரணத்துக்குப் பின்னராவது, சட்டவிரோதமான கடைகள் அனைத்தையும் மூடுமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியதா? எதுவும் இல்லை. அதனால்தான் சொல்கிறோம். நீதிமன்றத்தை நம்பிக் கெட்ட சசி பெருமாள், உயர்நீதிமன்றக் கோபுரத்தின் மீது ஏறியிருந்தால், அவரைச் சாவுக்குத் தள்ளிய குற்றத்தில் உயர் நீதிமன்றம் தமிழக அரசின் கூட்டாளி என்பது அம்பலமாகியிருக்கும்.

♦ ♦ ♦ ♦

ற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களை கவனித்துப் பாருங்கள். பெண்கள் திரண்டு வந்து கடைகளை மறிக்கிறார்கள், பூட்டுகிறார்கள், சாணி அடிக்கிறார்கள். மாணவர்களும் இளைஞர்களும் மதுப்புட்டிகளை நொறுக்குகிறார்கள். அதிகாரிகளிடம் மனுக்கொடுத்தோ, நீதிமன்றத்தில் வழக்குப் போட்டோ ஒருக்காலும் நியாயம் கிடைக்காது என்பதுதான் இப்போராட்டங்களின் வாயிலாக மக்கள் கூறும் செய்தி.

இதனைக் கண்ட பிறகாவது நீதிமன்றம் சட்டத்தை அமல் படுத்த முயற்சிக்கிறதா? இல்லை. போராடும் மக்களுக்கு எதிராக, பொதுச்சொத்துக்கு சேதம், கொலை முயற்சி என்று போலீசு போடும் பொய் வழக்குகளை எந்த விதத்திலும் கேள்விக்குள்ளாக்காமல், அநீதி என்று தெரிந்தே அனைவரையும் சிறைக்கு அனுப்புகிறது. எந்தக் கடைகளையெல்லாம் அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் கூறியதோ அந்தக் கடைகள் போலீசு பாதுகாப்புடன் நடத்தப்படுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த அரசாங்கம் நீதிமன்ற உத்தரவை மதிப்பது இருக்கட்டும்; உயர் நீதிமன்றம் தான் போட்ட ஆணையை தானே மதிப்பதில்லை. உயர் நீதிமன்றத்துக்கு சுயமரியாதையும் இல்லை, சட்டத்தின் ஆட்சி என்ற கருத்தாக்கத்தின் மீதும் அதற்கு மரியாதை இல்லை.

“சட்டத்தை மீறும் உரிமை” என்பது சட்டம் ஒழுங்கின் காவலர்கள் என்று கூறப்படும் போலீசுக்கும், சட்டத்தை இயற்றும் அரசுக்கும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டப் பொறுப்பேற்றிருக்கும் தங்களுக்கும் மட்டும்தான் உண்டு. “குடி மக்களுக்கு மட்டும் சட்டத்தை மீறும் உரிமை கிடையாது” என்பதுதான் ‘சட்டத்தின் ஆட்சி’ குறித்து மாட்சிமை தங்கிய நீதி அரசர்கள் கொண்டிருக்கும் கருத்து. இதற்கும் மக்களை மிரட்டி லஞ்சம் வசூலிக்கும் ஒரு கான்ஸ்டபிளின் கருத்துக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

பச்சையப்பன் கல்லூரியின் வாசலிலேயே டாஸ்மாக் கடை இருக்கிறது. இந்த சட்ட மீறல் தலைமை நீதிபதிக்கு அதிர்ச்சியூட்டவில்லை. அந்தக் கடை மீது மாணவர்கள் கல்லெறிந்தால் உடனே அவர் அதிர்ச்சியடைகிறார். போராட்டக் களத்தில் கீழே விழுந்து கிடந்த ஒரு மாணவியின் வயிற்றில் ஒரு போலீசு அதிகாரி எட்டி உதைப்பதை தொலைக்காட்சியில் கண்ட அனைவரும் கண்டிக்கின்றனர். “மாணவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது” என்று எச்சரித்த தலைமை நீதிபதிக்கு, ‘சட்டத்தைத் தனது காலில் எடுத்துக் கொண்டு’ அந்த போலீசு அதிகாரி நடத்திய தாக்குதல் தவறாகவே தெரியவில்லை.

உயர்நீதிமன்றத்தின் நிலையே இதுவென்றால் மாஜிஸ்டிரேட்டுகளைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? இப்போதெல்லாம் போலீசு காவலுக்கும் நீதிமன்றக் காவலுக்கும் இடையில் எந்த வேறுபாடும் தெரிவதில்லை. கைதியை ரத்தம் சொட்டச் சொட்ட கொண்டு வந்து நிறுத்தினாலும், “இபிகோ 12345” என்று இல்லாத சட்டப்பிரிவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தாலும் நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டு கைதிகளை ரிமாண்டுக்கு அனுப்புகிறார்கள் மாஜிஸ்டிரேட்டுகள்.

மாணவர்களுடைய காவல் 15 நாட்களுக்கு மேல் நீட்டிக்கப்படுவதை ஆட்சேபித்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பை எடுத்துக்கூறி, கேஸ் டயரியைப் பரிசீலிக்குமாறு வழக்குரைஞர் கேட்டதற்கு, “போலீசை எதற்கு கேட்கவேண்டும், நானே ரிமாண்டை நீட்டிக்கிறேன்” என்று ஆணவமாகப் பேசுகிறார் கயல்விழி என்ற எழும்பூர் மாஜிஸ்டிரேட். அபத்தமும் உளறலுமாக எழுதப்பட்டிருக்கும் அந்த அம்மையாரின் ரிமாண்டு உத்தரவைப் பார்த்த மாத்திரத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றம் சிபாரிசு செய்திருக்க வேண்டும். மாறாக, அந்த கேலிக்கூத்தான உத்தரவு “செல்லத்தக்கதே” என்று தீர்ப்பளிக்கிறார் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரன்.

♦ ♦ ♦ ♦

ச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வீதியிலும், போலீசு காவலிலும், சிறையிலும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். உளவுத்துறை அதிகாரி ஒருவர் பெண்கள் சிறைக்குள் அத்துமீறி நுழைந்து மாணவிகளை மிரட்டியிருக்கிறார். நீதிமன்றக் காவலில் இக்குற்றங்கள் நடந்திருப்பதால், அந்த மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று “ஆட்கொணர்வு மனு” போட்டோம். காதல்-கள்ளக்காதல் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்களில் சம்மந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து மிகுந்த ஈடுபாட்டுடன் விசாரிக்கும் உயர்நீதிமன்றம், போலீசால் துன்புறுத்தப்பட்ட மாணவ மாணவிகளை மட்டும் அழைத்து விசாரிக்க மறுத்துவிட்டது.

ஆனால் நீதிபதிகள் தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோரைக் கொண்ட அமர்வுதான், மதுரை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளை வரச்சொல்லி குற்றவாளிகளைப் போல அவமானப்படுத்தியது. இதை எதிர்த்த மதுரை வழக்குரைஞர்கள் “நீதிபதி சி.டி.செல்வம் கிரானைட் மாபியாவிடம் சோரம்போனதையும், சர்வதேச உப்புமா பல்கலைக் கழகத்தில் நீதிபதி தமிழ்வாணன் டாக்டர் பட்டம் பெற்றதையும் அம்பலப்படுத்தி நீதிமன்ற வாசலிலேயே முழக்கமிட்டனர். நீதித்துறை ஊழலுக்கு எதிரான இயக்கத்தைத் தொடங்கி, ஊழல் நீதிபதிகளின் பட்டியலை வெளியிடவிருப்பதாகவும் அறிவித்தனர்.

ரசமைப்புச் சட்டத்தின் விதி 47, “மதுவிலக்கை அமல்படுத்துவது அரசின் கடமை” என்கிறது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 324, “தெரிந்தே மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் இத்தகைய குற்றங்களுக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை” என்று கூறுகிறது. இவையெல்லாம் நீதிபதிகளுக்குத் தெரியாதவையல்ல. அரசமைப்புச் சட்டத்தின் மீதான நம்பிக்கையை விட, அரசு அதிகாரத்துடனும் ஆளும் கட்சியுடனும் அனுசரித்துப் போவதால் கிடைக்கக்கூடிய ஆதாயங்களின் மீதுதான் நீதிபதிகளுக்கு நம்பிக்கை இருக்கிறது.

அதனால்தான், “டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுவுக்கு தரக்கட்டுப்பாடு இல்லை” என்று ஆதாரங்களுடன் ஒருவர் பொதுநல வழக்கு போட்டால் அதனை அலட்சியப்படுத்துகிறது உயர் நீதிமன்றம். “கடைகளின் விற்பனை நேரத்தைக் குறைக்க வேண்டும்” என்று மனுப்போட்டால் அப்படியெல்லாம் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை” என்கிறார் தலைமை நீதிபதி.
ஆனால், 7 கோடி மக்களுடைய மண்டையின் மீது தலையிடுவதற்கு மட்டும் அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறதாம். தலைக் கவசத்தைத் திணிப்பதற்கும், அணியத் தவறுகிறவர்களுடைய வாகனங்களைப் பிடுங்குவதற்கும், இந்தத் தீர்ப்பை விமரிசித்த மதுரை வழக்குரைஞர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பதற்கும் நீதிபதிகள் தயங்குவதில்லை.

தங்களுடைய நேர்மையின்மையையும் கோழைத்தனத்தையும் கண்டு வழக்குரைஞர்களும் வழக்காடிகளும் கைகொட்டிச் சிரிக்கிறார்கள் என்று தெரிந்தும், ஆளும் கட்சியின் நிழலில் ஒண்டிக்கொண்டு, 23 ஆம் புலிகேசியைப் போல கூச்சமே இல்லாமல் கம்பீரமாக வலம் வருகிறார்கள் இந்த நீதியரசர்கள்.

♦ ♦ ♦ ♦

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட “மக்கள் அதிகாரம்” அமைப்பைச் சேர்ந்தவர்களுக்குப் பிணை வழங்குவதற்கு நீதிபதி வைத்தியநாதன் விதித்திருக்கும் நிபந்தனைகள் குற்றவியல் நீதி வழங்கு நெறிகளுக்கே (criminal jurisprudence) எதிரானவை. பிணை பெறுவதற்கு மேலப்பாளையூர் விவசாயிகள் 10,000 ரூபாய் டெபாசிட் கட்ட வேண்டுமென்றும், விருத்தாசலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவன் 50,000 ரூபாய் டெபாசிட் கட்ட வேண்டுமென்றும், இந்தத் தொகையை புகார்தாரரான டாஸ்மாக் நிர்வாகத்திடம் இப்போதே கொடுத்துவிட வேண்டுமென்றும் உத்தரவிட்டிருக்கிறார் நீதிபதி வைத்தியநாதன்.

குற்றம் சாட்டப்பட்ட நபர் குற்றவாளிதானா என்பதும், இழப்பு என கூறப்படும் தொகை உண்மைதானா என்பதும் விசாரைணக்குப் பின்னர் தீர்ப்பில்தான் தெரியவரும். சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு நான்காண்டு சிறையும், 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு பத்து ரூபாய் கூட டெபாசிட் விதிக்காமல் பிணை தருகிறார் தலைமை நீதிபதி தத்து. 20,000 கோடி வரி ஏய்ப்பு செய்த நோக்கியா நிறுவனம் வெறும் 200 கோடியை டெபாசிட் செய்து விட்டு, ஆயிரக்கணக்கான தொழிலாளிகளை வேலைநீக்கம் செய்து ஆலையை மூடுவதற்குத் தோதாக தீர்ப்பளிக்கிறார் நீதிபதி ராஜேந்திரன்.

ஆனால் சாராய பாட்டிலை உடைத்த குற்றம் நிரூபிக்கப் படுவதற்கு முன்னரே, அட்வான்சாக 50,000 ரூபாய் அபராதம் விதித்து ஒரு மாணவனுக்கு நீதி வழங்கப்படுகிறது. இது மனுநீதி அல்லாமல் வேறென்ன?

♦ ♦ ♦ ♦

judicial corruption (4)ச்சையப்பன் கல்லூரி மாணவ மாணவிகள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய போலீசார், சத்தியமூர்த்தி பவன் மீது அதிமுக குண்டர்கள் கல்வீச்சு நடத்தும்போது காவல் நிற்கிறார்கள். ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிராக நடக்கும் காலித்தனங்களை முன்னாள் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் தலைமையேற்று நடத்துகிறார். அண்ணா சாலையும் பூந்தமல்லி நெடுஞ்சாலையும் மணிக்கணக்கில் மறிக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் காங்கிரசு அலுவலகங்கள் தாக்கப்படுகின்றன.

இவற்றையெல்லாம் “அறப்போராட்டம்” என்று வருணிக்கிறார் முதலமைச்சர். அது தலைமை நீதிபதியின் காதில் விழவில்லை. “சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது” என்று மாணவர்களை எச்சரித்த தலைமை நீதிபதியின் காதுகளில், ‘சட்டத்தை வாயில் எடுத்துக் கொண்டு’ அதிமுக காலிகள் பொழியும் வசைமாரியும் விழவில்லை.
காங்கிரசு தலைவர் இளங்கோவனுக்கு எதிராக வேண்டுமென்றே தொடுக்கப்பட்ட ஒரு பொய்வழக்கில், அவரை மதுரையில் தங்கி கையெழுத்துப் போடச்சொல்கிறார் நீதிபதி வைத்தியநாதன். அங்கே போலீசு பாதுகாப்புடன் அவர் மீது தாக்குதல் நடக்கிறது. அதனைக் கண்டிக்காத நீதிபதி வைத்தியநாதன், “அடக்கமாக நடந்துகொள்ளுமாறு” இளங்கோவனுக்கு அறிவுரை கூறுகிறார்.

முதல்வரைப் பற்றி இளங்கோவன் பேசிய வார்த்தைகள் அதிமுகவினரிடம் அறச்சீற்றத்தை தோற்றுவித்திருக்கும் என்ற காரணத்தினால் உயர் நீதிமன்றம் அடக்கி வாசிப்பதாக யாரும் எண்ணிவிட வேண்டாம். குன்ஹாவின் தீர்ப்பைத் தொடர்ந்து அதிமுக குண்டர்கள் அரங்கேற்றிய ரவுடித்தனத்துக்கும், நீதிபதி குன்ஹாவுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்புக்கும் எதிராக சென்னை உயர்நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை என்ன? ஹெல்மெட் விவகாரத்தில் நீதிமன்றம் அவமதிக்கப்பட்டுவிட்டதாகத் துடிக்கும் நீதிபதிகள், ‘மதிப்பு’ என்ற சொல்லின் பொருளை ஆங்கில அகராதியைப் படித்தாவது புரிந்து கொள்வது நல்லது.

♦ ♦ ♦ ♦

திமுகவினர் அண்ணாசாலையை மறித்து வெறியாட்டம் போடுவதை கண்டுகொள்ளாத உயர்நீதிமன்றம், தே.மு.தி.க சாலையோரமாக நின்று மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினால் மக்களுக்கு ஏற்படக்கூடிய சிரமம் குறித்து ஆராய்ச்சி நடத்துகிறது. விசாரணையை கடைசி நேரம் வரை இழுத்தடித்து போராட்டத்துக்கு அனுமதி மறுத்த போலீசின் நோக்கத்தை நிறைவேற்றித் தருகிறது.

சட்டவிரோதமான டாஸ்மாக் கடைகளை மூடத் துப்பில்லாத உயர்நீதிமன்றம், நெய்வேலி தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் போராட்டத்தை ‘சட்டவிரோதம்’ என்று தீர்ப்பளிக்கிறது. ஸ்ரீரங்கம், ஆர்.கே நகர் இடைத்தேர்தல்கள் முதல் பச்சையப்பன் கல்லூரி வாயில் வரையில் எல்லா இடங்களிலும் அதிமுக வினரின் கிரிமினல் குற்றங்களும் போலீசின் அத்துமீறல்களும் தொலைக்காட்சி காமெராக்களின் முன் துணிச்சலாக அரங்கேற்றப்படுகின்றன. அனைத்தையும் மவுனமாக அங்கீகரிக்கிறது உயர்நீதிமன்றம்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னால், உயர்நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே அதிமுக மகளிர் அணி அரை நிர்வாண நடனம் நடத்தியது. இன்று உயர்நீதிமன்றமே அப்படி நடனமாடுவதைக் காண்கிறோம்.
ற்று மணல், கிரானைட், தாது மணல் கொள்ளை வழக்குகளைக் கையாண்ட நீதிபதிகள் பலர் கனிமவளக் கொள்ளைக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கிறார்கள். “இந்த தீர்ப்புகள் பற்றி சகாயம் குழு பரிசீலிக்க வேண்டும்” என்று முன்னாள் நீதிபதி சந்துரு நாளேடு ஒன்றில் கட்டுரை எழுதிய பின்னரும் நீதிபதிகள் யாருக்கும் கோபம் வந்ததாகத் தெரியவில்லை. மாறாக, “முழுதும் நனைந்தவனுக்கு முக்காடு எதற்கு” என்று வெளிப்படையாகவே இறங்கிவிட்டார்கள்.

மதுரையில் கடந்த மார்ச் மாதம் கிரானைட் கொள்ளைக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த நீதிபதி ராஜா சென்னையில் ஜூலை மாதம் வைகுண்டராஜனுக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கிறார். ஆகஸ்டு மாதம் மதுரைக்கு வந்த இந்த நீதிபதிக்கு மீண்டும் கனிமவளத்துறையே ஒதுக்கப்படுகிறது. வைகுந்தராசனின் கனிம வளக்கொள்ளை தொடர்பாக பேடி குழு அளித்த பரிந்துரையை அப்படியே நிராகரித்து, வினோத் குமார் சர்மா என்ற தமிழே தெரியாத பஞ்சாப் மாநில ஒய்வு பெற்ற நீதிபதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப் படுகிறார். 9 மாதங்களாக கனிமவளத்துறை என்ற ஒரு துறையை ஒரு குறிப்பிட்ட நீதிபதிக்கு மட்டுமே ஒதுக்கித் தந்திருப்பவர், சட்டத்தின் ஆட்சி பற்றி பெரிதும் கவலைப்படும் தலைமை நீதிபதிதான் என்பதை சொல்லத்தேவையில்லை.

கடந்த 20 ஆண்டுகளாக வைகுண்டராஜனுக்கு வழக்கறிஞராக இருந்த சோமையாஜி, இன்று அரசின் தலைமை வழக்கறிஞராகி விட்டார். ஜெயலலிதாவின் வருமானவரி வழக்கில் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்த நீதிபதி தட்சிணாமூர்த்திக்கும், விசுவாச உளவுத்துறை அதிகாரி ராமானுஜத்துக்கும் விதிகளை மீறி தகவல் ஆணையர் பதவி வழங்கப்படுகிறது. பாட்டில்கள் நொறுங்கும் சத்தம் கேட்டவுடன், சட்டத்தின் ஆட்சியே நொறுங்கி விட்டதாகத் துடித்துப்போகும் உயர்நீதிமன்றம், இவற்றுக்கெல்லாம் மவுனம் காக்கிறது.

♦ ♦ ♦ ♦

யர்நீதிமன்றத்தின் ‘ஊழல் நீதிபதிகள்’ என்று அறியப்படுவோர், கனிமவளக் கொள்ளையர்கள், ரியல் எஸ்டேட் முதலைகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் தங்களது தீர்ப்பை விலை பேசி விற்கிறார்கள். ‘நேர்மையான நீதிபதிகள்’ என்று கூறிக் கொள்பவர்களோ, சதாசிவத்தையும், சம்பத்தையும் போல தங்களையே நல்ல விலைக்கு விற்றுக்கொள்ள போயஸ் தோட்டத்திடம் தவமிருக்கிறார்கள்.

ஒரு கீழ்நிலை அதிகாரி லஞ்சம் வாங்கும்போது அது அந்தத் தனிநபரின் குற்றமாக முடிந்து விடுகிறது. ஆனால் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி லஞ்சம் வாங்கிக் கொண்டு கனிமவளக் கொள்ளையை நியாயப்படுத்தி தீர்ப்பெழுதும்போது, குற்றத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டு விடுகிறது. அந்தத் தீர்ப்பைக் காட்டி சட்டபூர்வமாகவே கொள்ளையிடும் வாய்ப்பு எல்லோருக்கும் திறந்து விடப்படுகிறது.

ஏற்கெனவே, போராடும் மக்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பொய் வழக்குகளைப் போட்டு சிறைக்கு அனுப்புகிறது போலீசு. குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யாமல், விசாரணைக் கைதியாக சிறை வைத்தே தண்டனை வழங்கும் போலீசின் இந்த சதிக்கு உடந்தையாக இருந்து வரும் நீதிமன்றம், இப்போது மக்களை ஒடுக்குவதற்கு போலீசுக்கு வழி சொல்லிக் கொடுக்கிறது. நீதிபதி வைத்தியநாதனின் தீர்ப்பு விசாரணையே இல்லாமல் தண்டனை விதிக்கும் “அட்வான்ஸ் அபராதம்” என்ற கொலைக்கருவியை போலீசின் கையில் கொடுத்திருக்கிறது.

மொத்தத்தில் ஜெ அரசுக்கு எதிராகப் பேசுபவர்களை ஒடுக்குகின்ற போலீசு அவுட் போஸ்ட்டாகவே மாறிக் கொண்டிருக்கிறது உயர்நீதிமன்றம். நாம் பெரிதும் கவலை கொள்ள வேண்டிய அசாதாரணமான சூழல் இது.
குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் காவலன் என்று கூறிக்கொள்ளும் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள், தங்கள் சொந்த ஆதாயத்துக்காக தமிழ் மண்ணையும் தமிழ் மக்களின் உரிமைகளையும் சூறையாடுவதுடன், வழக்குரைஞர் தொழிலுக்குரிய மாண்பையும் சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

நீதிபதிகள் நம் மீது திணிக்கும் இந்த அவமதிப்பை நாம் சகித்துக் கொள்ளப் போகிறோமா?

– மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.
150-E ஏரிக்கரை சாலை, கே.கே.நகர், மதுரை -20
கை பேசி : 94434 71003

வாழ்வை நேசிப்பவர்கள் இந்த வானவில்லை வாசியுங்கள்!



தியாகம்...
தன்னலம் கருதாது பிறர் நலம் பேணும் தகைமை..

தமது மண்ணுக்காக, மக்களுக்காக உயிரையும் துச்சமென மதித்துப் போராடும் வீரம்..

இலட்சியப் போராட்டத்தில் எதிர்ப்படும் இன்னல்களை துணிவுடன் எதிர்கொண்டு, துன்ப, துயரங்களால் வாடிவிடாத மனப்பாங்கு..

வார்த்தைகளில் வடித்தெடுக்கப்படவியலாத உணர்வு..
பேரன்பும், பெருங்கோபமும் உந்தித்தள்ளும் செயல்பாடு.
பாசத்தில், நேசத்தில் பெருக்கெடுக்கும் அன்பின் ஊற்று..
ஒன்று மற்றொன்றாய் மாறும் இரசவாதவித்தை..

அனைத்திற்கும் மேலாக.. அது துரோக இருள் கிழிக்கும் மின்னல் கீற்று;
வசந்தத்திற்குக் கட்டியம் கூறும் வானவில்....

நமது அனுபவத்தின் வீச்சு, அறிதலின் ஆழத்தைப் பொறுத்து விரிந்துகொண்டே செல்கின்றன தியாகத்தின் பரிமாணங்களும், பரிணாமங்களும்.

காற்றிலாடிய முல்லைக்குத் தேர்கொடுத்ததும், குளிரில் வாடிய மயிலுக்குப் போர்வை தந்ததும், மூப்புப் பிணியறுக்கும் அருநெல்லியை அருந்தமிழை வாழவைக்கும் ஒளவைக்கு அதியமான் ஈந்ததும்... சங்கப்பாடல்கள் தீட்டும் ஈகையின் சித்திரங்கள்.

வீரமங்கை வேலு நாச்சியார், தன்னுடலையே ஆயுதமாக்கி வெள்ளையனின் வெடிமருந்துக்கிடங்கைத் தகர்த்த போராளி குயிலி, ஜான்சிராணி இலட்சுமிபாய், வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை சகோதரர்கள், தீரன் சின்னமலை, மருது சகோதரர்கள், மாவீரன் திப்புசுல்தான் .. ... வரலாறாய் நீள்கிறது வெள்ளையனின் ஆக்கிரமிப்புகளுக்கெதிராக, நம் மண்ணைக் காக்கப் போராடியவர்களின் படைவரிசை.

பிர்லா மாளிகையில் குடித்த ஆட்டுப்பாலும், கொறித்த வேர்க்கடலையும் செரிக்க உண்ணாவிரதமிருந்து நடைப்பயணம் செய்த, சுதந்திர வேட்கையில் பொங்கியெழுந்த மக்களை தனது தள்ளாத வயதுவரை கைத்தடியாலடித்து வதைத்த மகாத்மாக்களின் துரோகத் திரை கிழித்து நம் நாட்டின் விடுதலைப் போராட்ட வானில் சுடர் வீசும் நட்சத்திரங்களாகத் திகழும் பகத்சிங் மற்றும் தோழர்களின் தியாகம்.

அடிமைத் தளையுடைக்கும் சுதந்திரப் போரில் சிறைபட்டு, சித்திரவதைக்கு ஆளாகி, இன்னுயிர் நீத்த பல்லாயிரம் தியாகிகள்.

இப்படிப்பட்ட நம் முன்னோர்களின் மூச்சுக்காற்றில் பிறந்ததுதான் இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திரக் காற்று.

இங்கு மட்டுமல்ல.. உலகெங்கிலும் தனது மண்ணையும், மக்களையும் நேசித்த தியாகச்சுடர்களின் ஈகங்கள்தான் மக்களின் அடிமை விலங்கொடித்து, மனித சமூகம் புதுவாழ்வு காண வித்திட்டது.
******

பண்ணைகளின் கொடுங்கோன்மையையும், முதலாளித்துவச் சுரண்டலையும் போரிட்டு வீழ்த்தி, புதியதோர் உலகம் படைக்க, பொதுவுடைச் சமுதாயம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சோசலிச இரசியாவின் மீது வன்மத்துடன் போர்தொடுத்தான் பாசிச ஹிட்லர். அவனது ஆக்கிரமிப்புப் படையினரிடம் அகப்பட்டு மூச்சுத்திணறிக்கொண்டிருந்தது அந்தச் சிறு கிராமம்.

நாடெங்கிலும் ஹிட்லரின் பாசிச இராணுவத்தை முறியடித்து முன்னேறிக்கொண்டிருந்தது செம்படை. தனது ஊரை ஆக்கிரமித்திருந்த ஜெர்மானியப் படையினரை விரட்டியடிக்க அந்த செம்படை வீரர்களின் வருகையை எதிர்நோக்கி விடியலுக்காகக் காத்துக்கொண்டிருந்தனர் அந்தக் கிராம மக்கள்.

அவ்வூரை ஆக்கிரமித்திருந்த கொடூர மனம் படைத்த ஜெர்மானியப் படையதிகாரி நிகழ்த்திய அட்டூழியங்களால் சொல்லொணாத் துயருக்கு ஆளாயினர் மலைக்குன்றின் மேலிருந்த அந்தச் சிற்றூரின் மக்கள். பெண்களும், சிறுவர்களும், முதியோர்களும் மட்டுமே அவ்வூரில் இருந்தனர். ஆண்கள் எல்லோரும் செம்படையில் இணைந்து ஜெர்மானியர்களை விரட்டும் போர்முனைக்குச் சென்றிருந்தனர்.

அந்தப் போர்ச்சூழலில், அந்தச் சிற்றூரின் எளிய கிராம மக்கள் மேற்கொண்ட போராட்டத்தையும், பட்ட துன்பங்களையும், செய்த தியாகங்களையும், அவர்களது நாட்டுப்பற்று, மனிதநேயம், தாய்மையுணர்வு உள்ளிட்ட நற்பண்புகளையும் விவரமாக எடுத்துரைக்கிறது இந்த நாவல்.
தாய்மையை, அனைத்தையும் நேசிக்கும் அதன் பேருருவை, அதன் அளப்பரிய தியாக உணர்வை வெளிப்படுத்திய அற்புத முத்துக்களை, சோவியத்தின் பொதுவுடைமைப் பூமியில் பிரகாசித்த இரத்தினங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது "வானவில்" எனும் இந்த இரசிய நாவல்.
போரிலே மகன் மாண்டான் எனும் செய்தி கேட்டு போர்க்களத்திற்கு விரைந்துசென்றவள் குப்புறக்கிடக்கும் தனது மகனின் உடலைப் புரட்டிப்போடுகிறாள். மார்பில் விழுப்புண் பட்டு மல்லாந்துகிடக்கும் அவ்வுடலின்மீது வீழ்கின்றன அவளது கண்ணீர்த்துளிகள்; இழப்பின், மரணத்துயரின் வெளிப்பாடாக மட்டுமல்ல. தன் உயிரைக் கருவாக்கி, உதிரத்தை அமுதாக்கித் தான் வளர்த்த அருமை மகன் போரில் புறம் காட்டிய கோழையல்ல; மாறாக, மார்பில் வேல் தாங்கிய மறவன் என்கிற பெருமிதத்திலும் ஊற்றெடுத்த பன்னீர்த்துளிகள் அவை. இது புறநானூறு காட்டும் ஒரு வீரத்தாயின் சித்திரம்.

ஊருக்கு வெளியே, அருவிக்கரைப் புதரருகே உறைபனியில் விரைத்துக்கிடக்கிறது விடுதலைப் போரில் வீரமரணமடைந்த அன்பு மகனின் சடலம். ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடிக்க அவ்வூரைக் கடந்து செல்கையில் ஜெர்மானியர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட செம்படை வீரர்களில் அவனும் ஒருவன். நாள்தோறும் அருவிக்கரைக்குத் தண்ணீர் எடுத்துவரச்செல்லும் தாயால் மகனின் முகத்தை வாஞ்சையுடன் பார்த்துவிட்டு வரமட்டுமே இயலுகிறது. வாரியெடுத்து, மார்போடணைத்து, வாய்விட்டுக்கதறியழ, நல்லடக்கம்செய்ய வாய்க்கவில்லை அந்தத் தாய்க்கு. இறந்து கிடப்பவன் அவ்வூரைச் சேர்ந்தவன் எனத் தெரிந்துவிட்டால் ஜெர்மானிய ஏவல் நாய்கள் எக்காளமிடும்; சடலத்தை ஊர்நடுவே மரத்தில் தொங்கவிட்டுச் சிதைக்கும்; குதூகலித்துக் கும்மாளமிடும். இந்தக் கோரக்காட்சியைக் காண விரும்பவில்லை அவள். எனவேதான் தாங்கமுடியாத அந்த வேதனையை மனதில் இருத்திக்கொண்டு விடுதலையை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கிறாள் அத்தாய்.

வயிற்றில் கருவைச் சுமந்துகொண்டே விடுதலைக்காகப் போரிட்ட வீரமங்கை, அவள் ஒரு கொரில்லாப்போராளி. பிரசவ நாள் நெருங்கியதால் வீடுதிரும்பியவளை மோப்பம் பிடித்துவிட்டது ஜெர்மானிய மிருகம். கொரில்லா வீரர்களின் நடமாட்டம் குறித்துத் தகவல்களைப் பெறுவதற்காக நிறைமாதக் கர்ப்பிணியென்றும் பாராமல் கொடூரமாகச் சித்திரவதை செய்கிறான். நல்வாழ்வு தருவதாக நயவஞ்சக நாடகமாடினான். அச்சுறுத்திப் பார்த்தான். அசையவில்லை அவள். கல்மனதையும் கரையச் செய்யும் கொடூரங்களைக் கட்டவிழ்த்து விட்டது அந்த ஜெர்மானிய மிருகம். நடுக்கும் குளிரை விரட்டியடிக்கவியலாத கந்தல் ஆடைகளுடன் வயிற்றுப் பாரம் தாளாமல் தள்ளாடியவளை நாள்முழுதும் சொட்டுத்தண்ணீர் கூடத் தராமல் நிற்கவைத்து வதைத்தது; மசியவில்லை அவள். உடைகிழித்து நிர்வாணமாக்கி ஊர்வலமாய் இழுத்துச்செல்லப்பட்டாள்; கத்தியாகக் குத்தும் பனிச்சிதிலங்களின் மீது தடுமாறி விழுந்தவளை துப்பாக்கிக் கட்டையாலும், கத்தியாலும் குத்துகின்றன அம்மிருகங்கள். எலும்பையே உறையவைக்கும் பனிக்காலம் அது. வெற்றுடம்பாய் வீசியெறியப்பட்டாள் கட்டாந்தரைமீது சிறைக்குள். நாவறண்டு, குளிரில் விறைத்து, நாடியொடுங்கிக் கிடந்தவள் உதவிக்கு யாருமற்ற நிலையில் ஆண் மகவைப் பெற்றெடுத்தாள்.

இரத்தவாடை பிடித்துவிட்ட ஓநாய் விழித்துக்கொண்டது. தாய்ப்பாசத்தைப் பகடையாக்கிப் பேரம் பேசினான். குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டாவது உண்மையைக் கூறும்படி கெஞ்சிப்பார்த்தான். ஆனால் தனது நாட்டு மக்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக விடுதலைப்போரில் தன்னையே கரைத்துக்கொண்டவள் அவள். ஈன்றெடுத்த மகவின் மீது மாளாத பாசம் கொண்ட அன்னைதான் அவள். அத்துடன் இளம்பருவத்திலேயே தாய்நாட்டு விடுதலைக்காகப் போரிடும் கொரில்லாப் படையின் வீரப் புதல்வர்களையும் தான் பெற்றெடுக்காத மக்களாகவே நேசித்தவள் அவள். எனவே, காட்டிக்கொடுக்க மறுத்துவிட்டாள். அடுத்த கணமே பிஞ்சுக்குழந்தையின் நெஞ்சிலே பாய்ந்தது வஞ்சகனின் துப்பாக்கிக் குண்டு. அழவில்லை அவள். சிலையாக நின்றவளை குழந்தையுடன் இழுத்துச் சென்று அருவியில் தள்ளிக் கொன்றனர் பாசிஸ்டுகள். அன்று பிறந்த மழலையைக் கொன்று வீசியது கண்டும் சித்தம் கலங்காமல் எஃகுறுதியுடன் எதிர்த்து நின்று தன் தாய்நாட்டு வீரர்களின் உயிர் காத்தாள் அந்தத் தாய்.

கடுமையான அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தது அவ்வூரில். இரவில் யாரும் வெளியில் நடமாடக்கூடாது. மீறுபவர்கள்
சுட்டுத்தள்ளப்படுவார்கள். துணிந்து மீறினாள் ஒரு தாய். சிறைப்பட்டிருந்த கர்ப்பிணியின் கதறல் அவளை உந்தித்தள்ளியது. உணவும், தண்ணீரும் தரப்படாமல் நாள்முழுதும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டவளின் பசி தணிக்க ஒரு சிறிய ரொட்டித் துண்டினை தனது மகனிடம் கொடுத்தனுப்புகிறாள் சிறைக்கூடத்துக்கு, நள்ளிரவில். விதி மீறிய அச்சிறுவனை சுட்டுக்கொன்று சாக்கடையில் எறிந்தன பாசிச மிருகங்கள். யாருமறியாவண்ணம் ஊர்ந்து சென்று சாக்கடையில் கிடக்கும் தனது குழந்தையின் உடலை எடுத்து வந்து வீட்டுக்குள்ளேயே அடக்கம் செய்கிறாள் அத்தாய், தனது மற்ற குழந்தைகளின் கண்முன்பாகவே. இறந்தவன், விதி மீறத் துணிந்தவன் தனது மகன் என்பது விடியலில் அடையாளம் காணப்பட்டுவிட்டால் ஒட்டுமொத்தக் குடும்பமும் சுட்டுப்பொசுக்கப்படும். மகனை மண்ணிலும், துக்கத்தை நெஞ்சிலும் புதைத்துக்கொண்டாள் அந்தத் தாய்.

அந்தச்சிற்றூரிலிருந்த ஆடு,மாடு,கோழி அனைத்தையும் தின்றுதீர்த்துவிட்ட ஜெர்மானியர்களின் முன்னே வந்துநின்றது உணவுப் பஞ்சம். கிராம மக்களின் மீது வரி விதித்தனர். வரியாக ஒவ்வொரு குடும்பமும் தானியங்கள் தரவேண்டுமென நிர்ப்பந்திக்கப்பட்டது. தம்பிடி தானியமும் தங்களிடமில்லையெனக் கைவிரித்துவிட்டனர் மக்கள் எல்லோரும். ஊர் மக்களில் ஐந்துபேரைப் பணயக்கைதிகளாகப் பிடித்துக்கொண்டு மூன்று தினங்களுக்குள் தானியங்களைக் கொண்டுவராவிடில் அவர்களைக் கொன்றுவிடப்போவதாக மிரட்டினான் அதிகாரி. அடிபணிய மறுத்து உறுதியுடன் எதிர்த்து நின்றனர் மக்களனைவரும் ஒற்றுமையுடன். ஆனால், அவர்களிடம் நிறையவே தானியங்கள் இருந்தன. அவை, மண்ணைக்காக்கும் போரில் ஈடுபட்டுள்ள தனது மைந்தர்களுக்காக, செம்படை வீரர்களுக்கென அம்மக்களால் சேகரித்து வைக்கப்பட்டுள்ளவை; தனது மண்ணை ஆக்கிரத்துள்ள பாசிசப் பேய்களின் பசிபோக்க அல்ல.
இப்படிப் பலவாறாக, தியாகத்தின் சுவடுகள் இந்நாவல் முழுவதும் தடம் பதித்துச் செல்கின்றன.
************************************

கடும் இன்னல்களையும், கொடுந்துன்பங்களையும் எதிர்கொண்டபோதிலும் கொண்ட இலட்சியத்தில் பற்றுறுதியுடன் இருப்பதற்கு அதீத மனவலிமையும், அளப்பரிய தியாக உணர்வும் தேவைப்படுகிறது. இந்த உயரிய நற்பண்புகள் ஒருங்கே அமையப்பெற்ற கோடிக்கணக்கான மைந்தர்களைக் கொண்டிருந்தது அன்றைய சோவியத் இரசிய சமூகம். ஆண்களும், பெண்களும், சிறியோர் முதல் வயதானவர்கள் வரை, விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைவரும் திரண்டெழுந்து போராடினர். ஹிட்லரின் நாஜிப் படைகளை விரட்டியடித்துத் தாய் மண்ணை மீட்டனர். சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட இம்மாவீரர்களின் தியாகம்தான் உலக மக்களைப் பாசிசத்தின் கோரப் பிடியிலிருந்து விடுவித்துக் காத்தது.

மனிதன் இயற்கையின் அங்கம். மனித உணர்வுகள் சமூகக் கூறுகளின் பிரதிபலிப்புகள். வளமான மண்ணில்தான் நலம்காக்கும் பயிர், பச்சைகள் செழித்தோங்கி வளர்கின்றன. அன்றைய சோவியத் சமூகம் பண்பட்டிருந்தது. பொதுவுடைமைப் பண்பாடுகொண்ட அப்பூமிதான் உயரிய, நற்பண்புகளைக்கொண்ட மக்களை வளர்த்தெடுத்தது; உலகின் தலைசிறந்த இலக்கியங்களைப் பிறப்பித்தது. உழைக்கும் மக்களின் உயர்வுக்கு வழிகாட்டியது. அந்த வரிசையில் உதித்ததுதான் வானவில் எனும் இந்நாவல்.
நல்வாழ்வுக்கான தேடல்கள் நடப்பு நிலையை உற்று நோக்கவைக்கின்றன.

நீரின்றி வறள்கிறது நமது பூமி; நிலத்தைப் பறிக்கிறது அரசு; பயிர்வளர்த்தும் உயிர்வளர்க்க முடியாமல் மடிகிறான் விவசாயி. நவீன அடிமைப் பண்ணைகளாக வளர்கின்றன சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். தொழிலாளிகளின் உயிர் குடிக்கும் கொலைக்கூடங்களாகத் தொழிற்சாலைகள். வாழ்விடங்களிலிருந்து விரட்டப்படுகின்றனர் பூர்வகுடிகள். பட்டப்பகலில், பகிரங்கமாக, துப்பாக்கிமுனையில் கொள்ளையடிக்கப்படுகின்றன இயற்கை வளங்கள் யாவும். உலகமயத்தால் ஒட்டச்சுரண்டப்படுகிறது தேசம். வளர்ச்சியின் பலிபீடத்திற்கு இட்டுச்செல்லப்படுகிறது கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்க்கை. ஜனநாயகப் பூங்காவில் கோலோச்சுகின்றனர் நவீன ஜார் மன்னர்கள். ஆட்சி பீடத்திலிருந்து பொங்கி வழிகின்றன அருளுபதேசங்கள் நாராசமாய். வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட மக்கள் தள்ளப்படுகின்றனர் போராட்டக் களங்களை நோக்கி.

நாடு காக்க, நல்வாழ்வு காண, அநீதிகளை, அவலங்களை ஒழித்துப் புதுயுகம் படைக்க, புதிய விடியலைக் காண விழைபவர்களுக்கு உணர்வூட்டும் ஆற்றலாக, போராட்டப்பாதையின் கைவிளக்காக இந்நூல்.

உண்மை.. உணர்வூட்டும்;
போராட்டம்... துரோக இருள் கிழிக்கும்;
தியாகம்... புதியதோர் உலகு செய்யும்;
வானவில்... வசந்த காலத்திற்குக் கட்டியம் கூறும்.
மண்ணை, மக்களை, வாழ்வை நேசிப்பவர்கள் இந்த வானவில்லை வாசியுங்கள். தொடுவானம் தொட்டுவிடும் தூரம்தான்.

- மருதமுத்து,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

ஆசிரியர் - வாண்டா வாஸிலெவ்ஸ்கா
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை ரூ. 125/-