Aug 17, 2013

ஏழு கடல் ஏழு மலை தாண்டி!

உள்ளே நுழைந்ததும் குடும்பமே முகமலர்ச்சியோடு வரவேற்றது. தம்பி தண்ணீர் தந்தார்."சாப்பிடும்மா" என்றார் அம்மா. "என் பெரிய பொண்ணு போல இருக்கம்மா! எப்ப வேணுமில்லாமலும் வா! போ! இது உன்வீடு போல! ஆனால் என் சின்னப் பொண்ணை மட்டும் அமைப்பு வேலைகளுக்கு அனுப்ப சொல்லாதே!' என்றார் கனிவோடு அப்பா!

கணவர் குடிகாரர். பொறுப்பாக எந்த வேலையையும் செயவதில்லை. சமைத்து இரண்டு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி பத்து கி.மீ. பாரிசுக்கு போய் கடுமையான வேலை பார்த்து இரவு திரும்பி, சமைத்து தூங்கும் பொழுது இரவு 11 மணியை தாண்டிவிடும்! துவைப்பதிலும், வீட்டை சுத்தப்படுத்துவதிலும் ஞாயிறுகள் கட்ந்துபோகும். கடுமையான உழைப்பாளி, தைரியமானவர், அமைப்பின் வேலை செய்ய ஆர்வம் இருந்தாலும், சூழல் இடம் தருவதில்லை.

திருமணம் முடிந்தவுடன் அணுகினால், ஓரிரு மாதங்களில் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று, கொஞ்சம் வளர்த்து, வேலை செய்ய துவங்க 4 வருடங்கள் ஓடிவிடும். 4 வருடம் தான் இரண்டாவது குழந்தைக்கும் சரியான இடைவெளி.  மீண்டும் சுழற்சி துவங்கிவிடும்!

பெரும்பாலான வீடுகளில் அமைப்பில் இயங்குவதற்கு ஆர்வம் உள்ள பெண்ணுக்கு, அம்மா/அப்பா/அண்ணன்/தம்பி/கணவன் தனியாகவோ அல்லது கூட்டாகவோ அனுப்ப தடைபோடுகிறார்கள். சில சமயங்களில் காதலன் கூட‌ உரிமையுடன் தடைபோடுகிறார்.

அமைப்புத் தோழர்கள் அமைப்பில் வேலை செய்ய வீட்டில் உள்ள பெண்களுக்கு உற்சாகம் ஊட்டுவார்கள். அவர்களில் சிலருக்கோ சுத்தமாக அரசியல், அமைப்பு ஆர்வம் இருக்காது.

வாக்குரசியல் நடத்தும் பல கட்சிகள் போராட்டங்களுக்கு வர பணம் தருகிறாரகள். பலர் சுய உதவி குழுக்களில் பணம் கொடுப்பதும், வட்டி வாங்குவதுமாய் மும்முரமாக ஈடுபடுகிறார்கள். அமைப்பு, அரசியல் பேசினால், "வருகிறேன். எவ்வளவு தருகிறீர்கள்? என கேள்வி எழுப்புகிறார்கள். "எந்த பலனும் இல்லாமலா இவ்வளவு சிரமப்படுகிறீர்கள்?" என நம் நேர்மையின் மீது சந்தேக்கிறார்கள்.

சமூக அவலம் அறிந்த நடுத்தர வர்க்க பெண்களோ, புரட்சிகர அரசியல், அமைப்பு பற்றி தெரிந்துகொண்டு, 'இழப்பதற்கு' தங்களுக்கு ஒரு வாழ்க்கை இருப்பதால், வேலை செய்ய தயக்கம் கொள்கிறார்கள். 

ஆணை அரசியல்படுத்த வீட்டைவிட்டு அழைத்துவந்தால் போதுமானதாக இருக்கிறது. பெண்ணை அரசியல்படுத்த குடும்பதோடு ஐக்கியமாகி குடும்பத்தையே  அரசியல்படுத்த வேண்டியிருக்கிறது.

குடும்பம், குழந்தை பராமரிப்பு, ஆணாதிக்கம், பாதுகாப்பான வாழ்க்கை என எத்தனையோ விசயங்கள் பெண்களை பின்னுக்கு இழுக்கிறது.

இருப்பினும், எல்லாவற்றையும் தாண்டி பிற்போக்கு அரசும், மறுகாலனியாதிக்க கொள்கைகளும் சமூக கொடுமைகளை பெருக்கி வைத்துள்ளன. நாம் அவற்றையெல்லாம் விளக்குவதற்கு முன்னால், அவர்கள் அந்த கொடுமைகளை நித்தமும் அனுவிப்பதால் அவர்களே பட்டியலிடுகிறார்கள். களத்தில் போராட நம்மோடு கைக்கோர்க்கிறார்கள்.

அதனால் தான், குடும்பங்களை சீரழிக்கிற, "டாஸ்மார்க் கடையை  இழுத்துமூடுவோம்"   என்ற பெண்கள் விடுதலை முன்னணியின் சமீபத்திய  போராட்டத்தில் கைக்குழந்தையோடும், சிறுவர், சிறுமிகளோடும் 80 பெண்களோடு அரசை எதிர்த்து எழுச்சியுடன் முழக்கமிட்டு கொண்டிருந்தோம்.