Dec 20, 2010

ஆத்தங்கரையோரம்! - நாவல் அறிமுகம்!


"அருமையான நாவல் படியுங்கள்" என நண்பர் தந்தார். படிக்க துவங்கி, இரண்டு நாள்களில் முடித்துவிட்டேன். நான் வெகுவிரைவாக படித்த நாவல்களில் இதுவும் ஒன்று.

ஒரு ஆறு. அதன் குறுக்கே அணைக்கட்ட அரசு தீர்மானிக்கிறது. எழும் அணையால் பல கிராமங்கள் நீரில் காணாமல் போகும் நிலை. அரசு அங்கு வாழும் பழங்குடி கிராம மக்களை அப்புறப்படுத்த முயல்கிறது. பாதிக்கப்படும் மக்கள் அரசை எதிர்த்துப் போராடுகிறார்கள் என நகர்கிறது நாவல்.

பழங்குடி மக்களின் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை, அரசின் பிரதிநிதிகள் மக்களுக்கு மாற்று வாழ்வாதாரம் உருவாக்கி தருகிறோம் என ஏமாற்றி அப்புறப்படுத்துவது, ஏற்கனவே அங்கிருந்து நகர்த்தப்பட்ட மக்கள் நகரங்களில் அகதிகளாய் அலைவது, நகர மறுக்கும் மக்களின் எதிர்ப்பை அரசு எப்படி கடுமையாக ஒடுக்குகிறது என நாவல் பல விசயங்களை அழுத்தமாக, உணர்வுபூர்வமாக பதிவு செய்திருக்கிறது.

என்.ஜி.ஓக்களுடன் இணைந்து மக்கள் போராடுகிறார்கள். ஓர் இடத்தில் ஒரு அரசு அதிகாரி சொல்வார் "இந்த போராட்டம் மட்டும் நக்சல்கள் கையில் போயிருந்தால்...போராட்டத்தின் திசை வேறு மாதிரி போயிருக்கும்". உண்மை தான். போலீசு, இராணுவம் என கொண்டிருக்கும் சர்வ அதிகாரம் கொண்ட மக்கள் விரோத அரசை எதிர்த்து போராடி, ஜெயிக்க வேண்டுமென்றால், சமரசம் செய்து கொள்ளாத, உழைக்கும் மக்களின் நலன் மீது அக்கறை கொண்ட, சமூக மாற்றத்தை நோக்கமாக கொண்டுள்ள ஒரு புரட்சிகர கட்சி இருந்தால் மட்டுமே சாத்தியம். நாவலை படித்து முடிக்கும் பொழுது, அந்த முடிவுக்கு நீங்கள் நிச்சயம் வந்தடைவீர்கள்.

படிக்கும் பொழுது, நர்மதா நதியின் குறுக்கே கட்டப்படும் அணைக்கு எதிராக பல ஆண்டுகளாக மக்கள் நடத்தும் போராட்டம் தான் நினைவுக்கு வந்தது.

சின்ன சின்ன வெளிச்சங்கள், கட்டுரை தொகுப்புகள் என இறையன்பு ஐ.ஏ.எஸ். எழுதிய புத்தகங்களை வாசித்திருக்கிறேன். இந்த நாவலை தயங்காமல் அவருடைய 'மாஸ்டர் பீஸ்' என்பேன். நாவல் வெளிவந்து ஆண்டுகள் பலவாகிவிட்டன. நியூ செஞ்சுரி புக ஹவுஸ் வெளியிட்டு இருக்கிறார்கள்.

பின்குறிப்பு : அணையோ, வளர்ச்சியோ வேண்டுமென்றால், சில ஆயிரம் மக்கள் பாதிக்கப்படத்தான் செய்வார்கள் என ஒற்றை வரியில் கடந்து போனீர்கள் என்றால்...சிரமம். நீங்கள் எழுப்புகிற பல கேள்விகளுக்கு நாவல் விடை தரும். நாவலை படித்துவிட்டு வாருங்கள். நாம் விவாதிக்கலாம்.

Dec 4, 2010

பாபா சாகேப் அம்பேத்கர் - திரைப்படம்!


பல போராட்டங்களுக்கு பிறகு படம் வெளிவந்திருக்கிறது. படம் பார்த்த உணர்வில், உடனடியாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் உங்களோடு சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

படம் அம்பேத்கர் வெளிநாட்டில் கல்வி கற்கும் காலத்திலிருந்து துவங்குகிறது. படிப்பில் மிகுந்த கவனம் செலுத்துகிறார்.

எல்லா மக்கள் தலைவர்களையும் போலவே தன் சொந்த குடும்பத்தை கவனிக்காமல் இருக்கிறார். தன்னுடைய நான்கு குழந்தைகளையும் இழந்தது மிகப்பெரிய சோகம்.

தாழ்த்தப்பட்டவர்களை திரட்டி, பொதுக்குளத்தில் தண்ணீர் அருந்துவது, கோவில் நுழைவு போராட்டம், தேர் இழுக்கும் போராட்டம், புத்த மதத்தை தழுவுவது என நமக்கு அம்பேத்கரைப் பற்ற அறிந்த விஷயங்களின் தொகுப்பாக இருந்தாலும் படமாக்கிய விதம் நன்றாகவே இருந்தது.

காந்திக்கும், அம்பேத்கருக்கும் இருந்த முரணை நன்றாக படம் பிடித்து காட்டியிருக்கிறது படம்.

அம்பேத்கார் 'மகர்' (தாழ்த்தப்பட்ட) சாதியா? எனக்கு தெரியாதே! என காந்தி கூறுகிற பொழுது.. திரையரங்கில் கைத்தட்டு.

சில முக்கிய விஷயங்களை, மேலோட்டமாக சொல்லியிருப்பது போல் தோன்றுகிறது.

மொழிமாற்றுப் படம் என்றாலும், நிறைய அந்நியமாக தெரியவில்லை. ( பிடித்த அரசியல் ஆளுமை என்பதாலும் இருக்கலாம்.) டாகுமென்டரி போல இருந்துவிடுமோ என பயந்தேன். ஒரு படத்திற்குரிய அனைத்து தகுதிகளுடன் எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழில் எடுத்திருந்த 'பெரியார்' படத்தை விட மொழிமாற்றுப் படமான 'அம்பேத்கர்" சிறப்பாகவே இருந்தது.

மத்திய அரசின் சமூக நீதித்துறையும், தேசிய திரைப்பட வளர்ச்சி கழகமும், மகாராஷ்டிர அரசும் சேர்ந்து எடுத்திருந்த படம் என்பதால், சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த கலை இயக்கம் என மூன்று தேசிய விருதுகளை தந்துவிட்டார்களோ என எண்ணினேன். படம் அந்த எண்ணத்தை மாற்றியது.மம்முட்டியின் நடிப்பு அருமை. கட்டபொம்மன் என்றால் சிவாஜி நினைவுக்கு வருவது போல, இனி அம்பேத்கர் என்றால் மம்முட்டி நினைவிற்கு வருவார்.

அம்பேத்கர் தன் கொண்டிருந்த கொள்கைக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடி இருக்கிறார் என்பதை படம் உணர்த்தியது. மொத்தத்தில் படம் எனக்கு பிடித்திருந்தது. கூடுதலாக அம்பேத்கர் பற்றி தேடிப்படிக்க வேண்டும் என்ற ஆவலையும் படம் தூண்டியது.