Oct 22, 2015

நீதித்துறை சர்வாதிகாரத்துக்கு உட்பட்டே நாம் வாழ்ந்து வருகிறோம். - அருந்ததிராய்






 ”ஒரு விஷயத்தை நிறுவ முதலில் அது விசாரிக்கப்படவேண்டும். ஆனால் ஒரு விஷயத்தை விசாரிக்க வேண்டுமென்று நீங்கள் கேட்கும்போது, அதற்கான வாதத்தை நீங்கள் முன்வைக்க நேரும்; உங்கள் வாதத்தை முன் வைக்கும் போது, நீங்கள் நீதிபதி ஒருவர் மீது இகழத்தக்க உள்நோக்கத்துடன் சுமத்துவதாக கருதப்படும். அதையே ஓர் அவமதிப்பாகக் கொண்டு உங்களைக் குற்றவாளி என்று தீர்ப்பளிக்க முடியும் அதாவது: எதையும் விசாரிக்காமல் நிரூபிக்க முடியாது; எதையும் நிரூபிக்காமல் விசாரிக்கவும் முடியாது!

நம்முன் வைக்கப்பட்டுள்ள ஒரேயொரு மாற்று நடைமுறை, தூய சிந்தனைகளில் ஈடுபடுவதே.

எடுத்துக்காட்டாக:

(அ) இந்திய நீதிபதிகள் தெய்வப்பிறவிகள்.

(ஆ) பண்பு, திட்பம், ஒழுக்கம், திறந்து மனது, நேர்மை என்பன
நமது நீதிபதிகளின் பிறவி மரபணுவிலேயே பொறிக்கப்பட்டுள்ளன.

(இ) நமது குடியரசின் வரலாற்றில் எந்த நீதிபதியும் எந்த விதத்திலும் குற்றச்சாட்டுக்கோ ஒழுங்கு நடவடிக்கைக்கோ உள்ளாக்கப்பட்டதில்லை.

(ஈ) நீதித்துறை வாழ்க! இந்தியா வாழ்க!

நீதித்துறையில் நிலவும் ஊழல் பற்றி நீதிபதி எஸ். பி. பருச்சா போன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் பகிரங்கமாகப் பேசுவது சிக்கலானதாக இருக்கிறது. அப்படிப்பட்ட வேளைகளில் நாம் காதை பொத்திக் கொள்ள வேண்டும் அல்லது ஒரு மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் போலும்.
நீதித்துறை நிகழ்த்தும் சர்வாதிகாரத்துக்கு உட்பட்டே நாம் வாழ்ந்து வருகிறோம். அதை ஒப்புக்கொள்வதால் நமது பெருமைக்கு இழுக்கு நேரலாம். நமது சுதந்திர உணர்வு கட்டுண்டு போகலாம்.”

- "Scandal in the Palace" அருந்ததிராய் அவுட்லுக் 2007 எழுதிய கட்டுரையிலிருந்து....

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை
90946 66320
 

Oct 19, 2015

அவமதிப்புச் சட்டமே நீதித்துறையின் ஆயுதங்களுள் மிகவும் வலுவானது! - அருந்ததிராய்


"நீதித்துறையின் முறைகேடு தொடர்பான விஷயங்களை ஆராய்வதற்குச் சுதந்திரமான ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட வேண்டுமென்று நீதித்துறை பொறுப்பேற்புக் கடப்பாட்டுக் குழு முன் வைத்த யோசனையையும் நீதித்துறை எதிர்த்துள்ளது. தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெறாது, பதவி வகிக்கும் எந்த நீதிபதிக்கும் எதிராக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய முடியாது என்றும் நீதித்துறை ஆணையிட்டுள்ளது. (அதற்கு தலைமை நீதிபதியின் ஒப்புதல் என்றுமே கிடைத்ததில்லை). தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு உட்படாதவாறு தன்னைப் பாதுகாப்பதிலும் இதுவரை அது வெற்றி பெற்றுள்ளது.

நீதிமன்ற அவமதிப்புச் சட்டமே நீதித்துறையின் ஆயுதங்களுள் மிகவும் வலுவானது. அதன்படி, நீதிமன்ற அதிகாரத்தின் மீது ‘அவதூறு தெரிவிக்கும்’ வண்ணம் அல்லது அதை ’இழிவுபடுத்தும்’ வண்ணம் எதையாவது செய்வது அல்லது சொல்வது குற்றம். இது இரகசிய மொழியில் இயற்றப்பட்ட சட்டம்; பெண்களுக்கு நாணத்தைப் போதிக்கும் பழங்கால கருத்துக்களுக்கு உகந்த சட்டம். எனினும் நீதித்துறையை விமர்சிப்பவர்களை அமைதிப்படுத்தவும் அசௌகரியமான கேள்விகளை எழுப்புவோரைச் சிறையில் தள்ளுவதற்கும் வகை செய்யும் கொடுங்கோன்மையான, வல்லமை மிக்க அதிகாரங்களை இச்சட்டம் நீதித்துறைக்கு அளிக்கிறது.

எனவே நீதித்துறையில் நிலவும் முறைகேடுகளை வெளியிடுவதிலும் அன்றாடம் நமது நீதிமன்றங்களை உலுக்கும் ஊழல்களை அம்பலப்படுத்துவதிலும் ஊடங்கங்கள் அடக்கி வாசிப்பது ஆச்சரியமல்ல. ஊடகர்கள் பெரும்பாலானோர் நீண்ட குற்ற வழக்கு விசாரணையைச் சந்திக்கவோ சிறைத் தண்டனையைப் பெறவோ விரும்புவதில்லை.

 - "Scandal in the Palace" அருந்ததிராய் (அவுட்லுக் 2007) எழுதிய கட்டுரையிலிருந்து....

Oct 18, 2015

ஊழல் நீதிபதிகளை பாராளுமன்றம் மூலம் தண்டிப்பது சாத்தியமா?

கடந்த 65 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான நீதிபதிகள் லஞ்சம், ஊழல், பாலியல், அதிகார மீறல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார்கள். இதில் மிகவும் கேவலமாக நடந்து, குற்றம் நிரூபணமாகிய கீழமை நீதிமன்ற நீதிபதிகள் சிலர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆனால், உயர், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நிலை என்ன? என்றாவது ஒரு நீதிபதி மீது லஞ்சம்-ஊழல் குற்றத்திற்கு வழக்கு, விசாரணை நடந்ததுண்டா? இல்லை நீதிபதிகள் அனைவரும் யோக்கியர்களா?

மக்களுக்கு எதிராக தயங்காமல் தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளுக்கு சட்ட பாதுகாப்பு எதற்கு? குற்றவாளி என்று தெரிந்தாலும் பாராளுமன்றம் மூலம் மட்டுமே நீதிபதிகளை நீக்க முடியும். ஊழல் பாராளுமன்றம் மூலம் இது சாத்தியமா?

அரசியல்வாதிகளாவது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களுக்கு கூழைகும்பிடு போட வேண்டும். நீதிபதிகள்-அதிகாரிகளுக்கு அதவும் இல்லை. நீதிபதிகள் மக்களுக்கு பொறுப்புடையவர்களாக ஆக்கப்பட வேண்டும். நீதிபதிகள் தங்களின் குற்றங்களுக்கு தண்டிக்கப்படும் நிலை உருவாக்கப்பட வேண்டும். அதற்குத்தான் வழக்கறிஞர் போராட்டம்.

 - அனைத்து வழக்கறிஞர் சங்கங்கள் – தமிழ்நாடு

Oct 16, 2015

ஸ்பார்ட்டகஸ் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள்!



ஸ்பார்ட்டகஸ் (2004) படத்தில் ஒரு காட்சி!

வயதான அம்மா : சண்டை போடும் கிளாடியேட்டர்களில் ஸ்பார்ட்டகஸ் வித்தியாசமானவன்.

வர்னியா : எதை வைத்து அப்படி சொல்கிறாய்?

வயதான் அம்மா : மற்ற க்ளாடியேட்டர் வீரர்கள் ஸ்பார்டகஸை விட வலுவுள்ளவர்களாக இருந்தாலும் தங்களை அடிமை என
ஏற்றுக்கொண்டுவிட்டனர். ஸ்பார்ட்டகஸ் தன்னை ஒரு அடிமை என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை.

- நமது "மைலார்ட்" நீதிபதிகளுக்கும், இந்திய, தமிழ்நாடு பார்கவுன்சிலுக்கும் கூட தங்களது எதேச்சதிகாரத்தை ஏற்றுக்கொள்ளாத ஜனநாயகத்துக்காக போராடக்கூடிய‌ வழக்குரைஞர்கள் தான் எப்பொழுதும் குடைச்சலை கொடுக்கிறார்கள். அவர்களை எப்படி ஒடுக்குவது என்பதை தான் மண்டையை பிய்த்துக்கொண்டு யோசிக்கிறார்கள்.

 எதேச்சதிகராம் நீடிக்கும் வரை ஸ்பார்ட்டகஸ்கள் வரலாற்றில் தோன்றிக்கொண்டே இருப்பார்கள்! :)

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

Oct 15, 2015

அதற்கெல்லாம் கம்பெனி பொறுப்பேற்காது! :)

இந்த படத்தை பார்க்கும் பொழுது...

 தாதுமணல் கொள்ளையர் வைகுண்டராஜன்-க்கு ஆதரவாக பல தீர்ப்பளித்த பல நீதிபதிகள் உங்கள் நினைவுக்கு வரலாம்.

பிறகு, கிரானைட் கொள்ளையர் பி.ஆர்.பி-க்கு ஆதரவாக பல தீர்ப்புகள் வாரி வழங்கிய பல வள்ளல் நீதிபதிகள் உங்கள் நினைவுக்கும் வரலாம்!

அப்புறம், 100 கோடி அபராதம், சில ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தவருக்கு, எந்தவித விளக்கமும் இல்லாமல் ஒத்தவரியில ஜாமீன், போனசாக குறிபிட்ட காலத்திற்கு வழக்கை முடிக்கவேண்டும் என்ற உத்தரவு, பிறகு கூட்டல் கழித்தல் பிரச்சனையில் விடுதலை என வரிசையாக உங்கள் நினைவுக்கு வரலாம்!

அதற்கெல்லாம் கம்பெனி பொறுப்பேற்காது!

Oct 14, 2015

நீதிபதிகளிடமிருந்து எங்களை காப்பாற்றுங்கள்!


திமன்றத்தில் பணிபுரிகிற ஊழியரான என்னை,
நீதிபதிகளிடமிருந்து காப்பாற்றுங்கள்!

 உயர்நீதிமன்ற விதிமுறைகளை மீறி, அலுவலக வேலைகளுக்கு பதிலாக வீட்டு வேலைகளுக்கும், சொந்த வேலைகளுக்கும் என்னை நீதிபதிகள் பயன்படுத்துகிறார்கள்.

எனக்கு நீதி வேண்டும். அதற்கு எங்கே போய் முறையிடவேண்டும்?



சாரசரி மனிதனான என்னை, நீதிபதிகளிடமிருந்து காப்பாற்றுங்கள்!

 லஞ்சம் வாங்கும் போலீசை அம்பலப்படுத்த “ஸ்டிங்க் ஆபரேஷன்” செய்தேன். என்னுடைய வழக்கு 12 வருடங்களாக நீதிமன்றத்தில் இழுத்தடிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அதிகார வர்க்கத்தின் தவறுகளை நீதிபதிகள் மூடி மறைக்க பார்க்கிறார்கள்.

நீதி கிடைக்க நான் எங்கே போகவேண்டும்?


நன்றி : Dark side of Indian Judiciary, Ludhiana, Punjab

Oct 13, 2015

மக்கள் செருப்பாலேயே அடிப்பார்கள்!



பெறுநர்

நிலைய அதிகாரி அவர்கள்,
விழுப்புரம் ரயில் நிலையம்,
விழுப்புரம்,

மதிப்பிற்குரிய நிலைய அதிகாரி அவர்களுக்கு,

பொருள் : ரயில்வே பிளாட்பாரத்தில் கெட்டு போன உணவை விற்றது தொடர்பாக
****
வணக்கம். கடந்த 30/09/2015 அன்று கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நான் என் குடும்பத்துடன் பயணம் செய்தேன்.  டிக்கெட் (PNR) எண்:  4524876184  - படுக்கை S7 35, 37, 38). 

இரவு உணவிற்காக ரயிலிலேயே உணவை விற்பவர்களை எதிர்பார்த்து காத்திருந்தோம். யாரும் வராத நிலையில், வேறு வழியில்லாமல் இரவு 8.30 மணியளவில் ரயில் விழுப்புரம் நிலையத்தில் நின்றது. அப்பொழுது ரயில்வே பிளாட்பாரத்தில் யூனிபார்ம் அணிந்தவர்கள் உணவு விற்றுக்கொண்டிருந்தனர்.  அதில் ஒருவரிடம் 4 இட்லிகளும் ரூ.30, ஒரு முட்டை பிரியாணியும்   ரூ. 50  மொத்தம் ரூ. 80க்கு வாங்கினேன்.  கடந்த காலங்களில் இப்படி பிளாட்பாரத்தில் வாங்கி மோசமான அனுபவத்தை பெற்றிருந்தேன்.  அதனால், விற்றவரிடம் “குழந்தைக்காக வாங்குகிறேன். நன்றாக இருக்கும்தானே!” என்றேன்.  அவரும் “நன்றாக இருக்கும்” என தெரிவித்தார்.

உடனே ரயில் கிளம்பியதால், ரயிலில் ஏறிவிட்டேன். உள்ளே போய் பிரித்து பார்த்தால், வாங்கிய முட்டை பிரியாணியிலிருந்து ஒரு மோசமான வாடை வந்தது.  வாயில் வைக்கவேமுடியாத அளவுக்கு கெட்டு போயிருந்தது. குழந்தைக்கு என கேட்டும் கூட எவ்வளவு கேவலமானவர்களாக இருந்தால் கெட்டு போன உணவை  விற்பார்கள் என எண்ணம் வந்தது. என் குழந்தைக்கு பசி வேறு. முட்டை  பிரியாணியை சாப்பிட்டே தீருவேன் என அடம்பிடித்த குழந்தையை சமாளிப்பதற்கு நாங்கள் திணறிப்போய்விட்டோம்.  இட்லி வேண்டாம் என அடம்பிடித்து, வெறும் வயிறுடன் தான் தூங்கியது.

பயணம் என்பது மிக முக்கியமானது ரயில்வேக்கு இது தெரியாததா? கெட்டு போன உணவை சாப்பிடுவதன் மூலம் மொத்த பயணத்தையே சீர்குலைத்துவிடும்.  அதுவும்  இரவு நேரத்தில் குழந்தைக்கு சாப்பிட்டு உடல்நலம் கெட்டுப்போனால் என்ன செய்வது?  எதைப்பற்றியும் சிந்திக்காமல், லாபத்தை மட்டுமே மனதில் வைத்து விற்பவர்கள் ஏன் இந்த பசியாற்றும் தொழிலுக்கு வரவேண்டும்?

பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும்  வேறு வேறு பயணிகள் தானே வருகிறார்கள். எவன் எக்கேடு கெட்டு போனால் என்ற சிந்தனை தானே! கெட்டு போன பொருளை விற்க தைரியம் வருகிறது.  இதே உள்ளூராக இருந்தால், இப்படி தைரியமாக விற்கமுடியுமா? மக்கள் செருப்பாலேயே அடிப்பார்கள்.

உடனே எங்கள் கோச்சில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடம், விசயத்தை விளக்கி யாரிடம் புகார் அளிப்பது? என கேட்டேன்.  கடைசியாக எங்கு இறங்குவீர்கள்? என கேட்டார்.  “கன்னியாகுமரி” என்றேன்.   அங்கு இறங்கியதும் நிலைய அதிகாரியிடம் எழுத்துப்பூர்வமாக புகார் கடிதம் எழுதி கொடுங்கள் என்றார்.

கன்னியாகுமரி சென்றதும் இந்தி மட்டுமே தெரிந்த நிலைய அதிகாரியிடம், விசயத்தை விளக்கி புகார் கொடுக்கவேண்டும் என பேசினால்,  யாரிடமோ போனில் பேசியவர் “விழுப்புரம் சம்பந்தப்பட்ட டிவிஷன் வேறு! இந்த டிவிஷன் திருவனந்தபுரம் டிவிஷன்! நாங்கள் இது தொடர்பாக புகாரை பெற்றும் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை. அதனால் நீங்கள் விழுப்புரத்தில் தான் புகார் கொடுக்கவேண்டும்” என்றார். ”டிக்கெட் பரிசோதகர் இங்கு புகார் கொடுக்கலாம் என வழிகாட்டினாரே!” என்றதற்கு,  அவர் ”உங்களை தவறுதலாக வழிகாட்டியிருக்கிறார்” என்றார்.

நேற்று தான் சொந்த ஊர் திரும்பினேன்.  என்னை போல யாரும் கெட்டுப்போன பொருளை வாங்கி ஏமாறக்கூடாது.  விற்பவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.  இனிமேல் இப்படி யாருக்கும் விற்ககூடாது என்ற எண்ணத்தில் இந்த புகார் கடிதத்தை எழுதுகிறேன்.

இந்த புகாருக்கு உரிய நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறேன். தமிழ் அறிந்தவர்கள் தமிழ்நாட்டில் குறைவு என்பதால், இதே புகார் கடிதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் உங்கள் தலைமை அலுவலகத்திற்கும் பதிவு தபாலில் அனுப்பியுள்ளேன்.

இப்படிக்கு,

அமிர்தா
 

நீதிபதிகளின் பொதுப்புரிதலும், நீதி படும் பாடும்!”


மாமா‍-நீதிபதிகள் ஸின்ட்ரோம்
நான்கு நீதிபதிகளின் மகன்கள் ஒரே நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டு வருகிறார்கள்.

“A” என்ற அப்பா நீதிபதியின் மன்றத்தில் மகன் வழக்கறிஞர் ஆஜராகமாட்டார். “B” என்ற அப்பா நீதிபதியின் மன்றத்தில் அவருடைய மகன் ஆஜராகமாட்டார். ஆனால் “A” நீதிபதியின் மகன் “B” நீதிபதியின் மன்றத்தில் வழக்காடுவார். அதே போல, “B” நீதிபதியின் மகன் “A” நீதிபதியின் மன்றத்தில் வழக்காடுவார்.
நீ என் மகனுக்கு உதவினால், நான் உன் மகனுக்கு உதவுவேன் என்பது நீதிபதிகளுக்கிடையே உள்ள பொதுப்புரிதல். இப்படி பல வழக்குகளிலும் நடந்து கொண்டிருக்கின்றன!

- முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் சாந்திபூஷண்

Oct 6, 2015

தலைவாரிப் பூச்சூடி உன்னை...



முதல் ஆசிரியன் - நாவல் அறிமுகம்

தலைவாரிப் பூச்சூடி உன்னை...
பாடசாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை...
மலைவாழை அல்லவோ கல்வி...
நீ... வாயார உண்ணுவாய் போ என் புதல்வி.

- கவிஞர் பாரதிதாசன்

மனிதகுலம் தனது வாழ்க்கைத் தேவைகளுக்காக இயற்கையுடன் நடத்திய போராட்டத்தினூடாக சேகரித்துள்ள அறிவுச் செல்வங்கள் ஏராளம்.
எண்ணும், எழுத்துமாகக் கொட்டிக்கிடக்கும் அந்த அறிவுச் சாகரத்தின் நுழைவாயில் கல்வி.

அகர முதல எழுத்தென்று அணுவைப் பிளந்து ஏழ்கடலைப் புகுத்திக் குறுகத் தரித்த குறள் தொட்டு, பேரண்டப் பிறப்பின் இரகசியம் தேடிக் கருந்துளையிருட்டில் வெளிச்சம் பாய்ச்சிக்கொண்டிருக்கும் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியென... ஆழ்ந்து, அகன்று, விரிந்து, பரந்து, பெருகிக்கொண்டேயிருக்கிறது கல்வியின் விளைபொருள்.
இயற்கையின் புதிர்கண்டஞ்சிக் கிடந்தவர்களை இன்று மருத்துவர்களாக, பொறியியல் வல்லுநர்களாக, ஆராய்ச்சியாளர்களாக, பல்துறை விற்பன்னர்களாகப் பரிணமிக்கச் செய்துள்ளது கல்வி.

அறியாமை இருளகற்றும் கல்விப் பணியின் வாயிலாக, நம் வாழ்க்கைக்கு வழிகாட்டி, வளமூட்டும் அறிவெனும் அகல்விளக்கேற்றியவர்களில் முதன்மையானவர்கள் நம் ஆசிரியப்பெருமக்கள்.

ஏற்றுக்கொண்ட ஆசிரியப்பணியின் கடமை நிமித்தம் என்றில்லாமல், கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சியை முன்னிட்டுத் தான் பிறந்து, வளர்ந்த நகர்ப்புறம் விட்டுநீங்கி, நாகரிகத்தின் 'வளர்ச்சி' தீண்டியிராத அன்றைய சிற்றூர்களில் சென்று தங்கி துள்ளி விளையாடும் பிள்ளைச் செல்வங்களின் மனதில் கல்வியின் விதைகளைப் பதியமிட்டு வளர்த்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் பணி மகத்தானது.

உயிர்தந்து, உணவூட்டி, உடல்வளர்க்குந் தாயினும் சாலப்பரிந்து கல்வி அமுதூட்டி நம் அறிவுப் பயிர் வளர்த்து, வாழ்க்கையில் ஒளியேற்றிய இத்தகைய ஆசிரியப் பெருந்தகைகள் குறித்த நீங்கா நினைவுகள் இன்றும் நம்மில் பலரின் மனதிலும் உண்டு.
இடம், பொருள், ஏவல் என்பதாக களத்தையும், காலத்தையும் பற்றி நிற்கின்றன மாமனிதர்களின் தோற்றங்களும், மனித சமூகத்தை மாற்றியமைத்த வரலாற்றுச் சம்பவங்களும்.

********

அது 1924-ஆம் ஆண்டு. சோவியத் மண்ணில் பொதுவுடமைச் சமூகம் கட்டியெழுப்பப்பட்டுக் கொண்டிருந்த காலம். தனது மக்களின் அனைத்துந் தழுவிய வளர்ச்சிக்கான திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்திக் கொண்டிருந்தது பாட்டாளிகளின் அரசு. ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியின்கீழ் கொடூரமாக வதைக்கப்பட்டு ஏழ்மையிலும், அறியாமையிலும் உழன்றுகொண்டிருந்த மக்களை விடுவித்த கையோடு அவர்களது கல்வி வளர்ச்சியிலும் மும்முரமாக ஈடுபட்டது.

அன்றைய சோவியத் நாட்டின் கிர்கீஸியப் பகுதியில் ஒரு மலையடிவாரத்திலிருந்தது குர்கூரெவு எனும் அந்தச் சிற்றூர். ஏழ்மையின் பிடியில் வாடிய பல நாடோடிக் குடும்பங்கள் அங்கே வசித்தனர்.

அங்கிருந்த சிறுவர்களுக்குக் கல்வி கற்றுக்கொடுப்பதற்காக சோவியத் அரசால் அனுப்பிவைக்கப்பட்டு அவ்வூருக்கு வந்து சேர்கிறான் துய்ஷேன் எனும் இளங் கம்யூனிஸ்டுக் கழக இளைஞன். அவனும் அவ்வூரைச் சேர்ந்தவன்தான். ஆனால், முன்பு பஞ்சம் நிலவிய காலத்தில் வேலைதேடி வெளியூர் சென்றவன்; இன்று, பள்ளியாசிரியனாகத் திரும்பி வந்துள்ளான்.
விவசாய வேலைகளைச் செய்வதற்குப் பள்ளிப்படிப்பெதற்கு? என்று அறியாமையில் கேட்கும் அப்பாவி ஏழை மக்களிடம் கல்வியின் அவசியத்தை வலியுறுத்துகிறான், துய்ஷேன்; ஏற்க மறுத்து எள்ளி நகையாடுகின்றனர் ஊர்மக்கள். சோர்ந்துவிடவில்லை அவ்விளைஞன்.

அந்தக் கிராமத்தினருகிலிருந்த குன்றின்மீது சிதிலமடைந்த நிலையிருந்த - முன்பொரு காலத்தில் ஒரு பணக்காரனுக்குச் சொந்தமாயிருந்த - குதிரைக் கொட்டடியைத் தனியொருவனாகச் செப்பனிட்டு பள்ளிக்கூடமாக மாற்றுகிறான். வீடு வீடாகச்சென்று பெற்றோர்களிடம் பேசி, வற்புறுத்தி, சோவியத் அரசின் உத்தரவைக் காண்பித்து பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்து வருகிறான். முன்பு பகல்வேளைகளில் வயலுக்குத் தேவையான சாணத்தைப் பொறுக்குவதற்காக ஸ்டெப்பிப் புல்வெளிகளில் அலைந்து திரிந்த அக்குழந்தைகள் துய்ஷேனின் வருகையால் புத்துலகைக் காணும் வாய்ப்பினைப் பெற்றனர்.

துய்ஷேன் ஆரம்பக் கல்வியினைக்கூட முறையாகக் கற்றிருக்கவில்லை. ஓரளவு எழுதவும், எழுத்துக்கூட்டிப் படிக்கவும் மட்டுமே தெரியும். ஆயினும், தனக்குத் தெரிந்தவற்றையேனும் அக்குழந்தைகளுக்குக் கற்றுத் தந்துவிட வேண்டுமென்ற ஆர்வமே உந்து சக்தியாக இருந்து அவனை இயக்கியது. முதல் தலைமுறையாகக் கல்வி கற்க வந்திருக்கும் அவ்விளம் பிஞ்சுகளுக்குக் கல்வி புகட்டுவதில் பொறுமையுடனும், விடாமுயற்சியுடனும் ஈடுபட்டான். தங்களிடம் அன்பு பாராட்டி, இனிமையாகப் பழகிய அந்த இளம் ஆசிரியரிடம் பிள்ளைகளும் மிகுந்த நேசத்துடன் பழகினர்; ஆர்வமுடன் கற்றுக்கொண்டனர்.

அல்தினாய் சுலைமானவ்னா - பெற்றோரை இழந்து உற்றாரின் 'பராமரிப்பில்' வளரும் அவ்வூரின் ஏழைச் சிறுமி. கற்றுக்கொள்வதில் ஆர்வமிக்க, துய்ஷேனின் அன்புக்குரிய மாணவி. அப்பள்ளியில் பயிலும் மாணவர்களில் வயதில் மூத்தவள்.

அனாதைக்குப் படிப்பெதற்கு? என்று அல்தினாயை ஒரு வயதானவருக்கு இரண்டாம் தாரமாக மணம்செய்துவைக்க முடிவெடுக்கிறாள் அவளது வளர்ப்புத் தாய். இதனால் அதிர்ச்சியுற்ற அல்தினாய்க்கு ஆறுதல் கூறி அவ்வூரிலிருந்த அவளது பாட்டியின் வீட்டில் தங்கவைத்துப் பாதுகாக்கிறார், துய்ஷேன். ஆனால், குண்டர்களுடன் பள்ளிக்கூடத்துக்கே வருகிறாள் அவளது சித்தி. அல்தினாயை அவர்களுடன் அனுப்ப மறுத்துப் போராடும் ஆசிரியரைக் கடுமையாக அடித்து உதைத்து, கைகளை முறித்து, குற்றுயிரும், குலையுயிருமாக்கிவிட்டு அல்தினாயைத் தூக்கிச் செல்கின்றனர் அம்முரடர்கள்.

சோவியத் செம்படை வீரர்களுடன் சென்று அல்தினாயை மீட்டு வருகிறார் அவளது அன்பிற்குரிய ஆசிரியர் துய்ஷேன். அவளது பாதுகாப்புக்கருதியும், மேல்படிப்புக்காகவும் நகரத்துக்கு அனுப்பிவைக்கிறார். பாட்டாளிகளின் அரசு அந்த ஏழைச்சிறுமிக்குக் கல்வியூட்டி வளர்த்தெடுக்கிறது. கற்பது மிகவும் சிரமமாக இருந்தபோதிலும் அல்தினாயின் விடாப்பிடியான போராட்டம் அவளை மிகவும் உயர்ந்த நிலைக்கு இட்டுச்செல்கிறது. தற்போது அல்தினாய் சுலைமானவ்னா ஒரு பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர்; தத்துவ விரிவுரையாளர்.

காலத்தின் கரங்கள் அவளது பிறந்த ஊரிலும் மாற்றத்தைக் கொண்டுசேர்த்தது. அவ்வூரின் மக்கள் இப்போது கூட்டுப்பண்ணையின் உறுப்பினர்கள். துய்சேன் ஊன்றிய கல்வியின் விதைகள் நல்ல விளைச்சலை உண்டுபண்ணியிருந்தன. பள்ளிப் படிப்பும், உயர்கல்வியும் கற்றவர்கள் பலர் தற்போது அவ்வூரிலிருந்தனர்.

தனது ஊரில் புதிதாகக் கட்டப்பட்டிருந்த பள்ளிக் கட்டிடத்தின் திறப்புவிழாவிற்கு விருந்தினராக வருகிறார் அல்தினாய். அப்போது தபால்காரர் துய்ஷேன் பற்றிய பேச்சும் எழுகிறது, அவ்விருந்தில்.

ஆம். அவ்வூரின் முதல் ஆசிரியரான அதே துய்ஷேன் தற்போது, தனது முதிய வயதிலும் கடமை தவறாத தபால்காரராகப் பணியாற்றி வருகிறார். இதை அறிந்துகொண்ட அல்தினாய் மிகவும் வேதனைப்படுகிறார். கல்வியின் விதைகளை அவ்வூரில் முதன்முதலாகத் தூவிய அந்த அற்புத மனிதனை இந்தப் புதிய கல்விக்கட்டிடத் திறப்பு விழாவிற்கு அழைத்து உரிய மரியாதை செய்யத் தவறியது குறித்து அவரது மனம் வேதனைப்படுகிறது.

சீரழிவுக்குத் தள்ளப்பட்ட தனது வாழ்வை மீட்டெடுத்துப் புத்துயிரூட்டிய தனது முதல் ஆசிரியன் குறித்த ஒரு பின்தங்கிய கிராமத்தின் ஏழைச் சிறுமியின் நினைவுகளாக விரிகிறது இக்குறுநாவல்.

புறக்கணிப்பால் சோர்ந்துவிடாத செயலார்வம்; இன்னல்களைக் கண்டு அஞ்சாமல் துணிவுடன் போராடும் வீரம்; குழந்தைகளின் மீதான நேசம்; அவர்களது கல்வி வளர்ச்சியின்பால் கொண்டிருந்த அக்கறை; தனது போதாமை, குறைபாடு குறித்த கழிவிரக்கம் ஏதுமின்றி மக்கள் நலன்பேணும் தனது அரசின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் காட்டிய இலட்சிய உறுதி; பிரதிபலன் பாராமல் பணியாற்றும் கடமையுணர்வு; அனைத்துக்கும் மேலாக தனது வாழ்க்கையில் ஒளியேற்றிய ஆசான்.. என்று மாமனிதராக உயர்ந்து நிற்கிறார் அல்தினாயின், குர்கூரெவு கிராமத்தின் முதல் ஆசிரியன்.

மனிதர்கள் தமது உயரிய சிந்தனைகளால் சிறப்படைகிறார்கள். உயரிய சிந்தனைகள் உயர்வான சமூகத்தில் இயல்பாகவே உதித்தெழுகின்றன. பொதுவுடமையே அந்த உயர்ந்த சமூகம். முதல் ஆசிரியன் எனும் இந்நூல் அதில் விளைந்துள்ள இலக்கிய முத்து.

*****

முதலாளித்துவத்தின் கோரப்பிடியில் மூச்சுத்திணறிக்கொண்டிருக்கிறது இன்றைய நம் வாழ்க்கை. சந்தையின் விதிகள் சகலத்தையும் மாற்றியமைக்கின்றன. சரஸ்வதியும்கூட ஒரு சரக்கு மட்டுமே.

முன்னாள் கள்ளச் சாராய ரவுடிகளும், திடீர் பணக்கார, அரசியல் ரவுடிகளுமே கல்விக்கோயிலின் இந்நாள் தெய்வங்கள். காசுள்ளவன் பக்கம் மட்டுமே திரும்புகின்றன கல்விக் கடவுளர்களின் கடைக்கண் பார்வைகள். உண்டியலில் கொட்டப்படும் காணிக்கையின் அளவைப்பொருத்தே அமைகிறது கல்விச் சேவையின் தரம். கல்வி வள்ளல்களின் கருணையில் பொங்கி வழிகிறது கல்வி வியாபாரம்.

மகத்தான ஆசிரியப்பணியின் மாண்புகள் கொடூரமாக வெட்டி வீசப்படுகின்றன தனியார்மயக் கல்விக்கொள்ளையர்களால். மாணவச் செல்வங்களின் அறிவுக்கண்களைத் திறப்பதல்ல; முதலாளித்துவச் சந்தையில் விலைபோகும் வண்ணம் பிராய்லர் குழந்தைகளை அடைகாப்பதே வேலை என்பதாக மாற்றப்பட்டுள்ளது ஆசிரியப்பணியின் வரையறைகள். மெத்தப் படித்திருந்தும் கல்வித்தந்தைகளின் பொறியில் -பொறியியல் கல்வி நிறுவனங்களில்- அகப்பட்ட கூலி அடிமைகளாக உழல்கின்றனர் இன்றைய பேராசிரியர்கள்.

கல்விச்சேவையில் கைகழுவிக் கொண்டிருக்கின்றன மத்திய, மாநில அரசுகள். ஆண்டுதோறும் வெட்டிக்குறுக்கப்படுகிறது கல்விக்கான மானியம். நாள்தோறும் இழுத்துமூடப்படுகின்றன அரசுப்பள்ளிகள். ஏழைகளின் எட்டாக்கனியாகத் தொலைவில் செல்கின்றன அருகமைப்பள்ளிகள். நல்லாசிரியர் விருதுகளை எள்ளி நகையாடுகின்றன சில அரசுப்பள்ளி ஆசிரியர்களின் சீரிய கந்துவட்டிப்பணி.

ஆதிக்கசாதி வெறியும், தனியார்மயக் கொள்ளையும் நிரம்பி வழியும் முதலாளித்துவக் குப்பைக்கிடங்கில் பற்றியெரியும் பார்ப்பனியத்தீ இன்றைய கல்விச்சூழலில் நச்சுக்காற்றைப் பரப்பிக்கொண்டிருக்கிறது. மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறது நம் குழந்தைகளின் கல்வி. பல அல்டினாய்கள் பிஞ்சு வயதில் கருகிகொண்டிருக்கின்றனர்.

முடைநாற்றமடிக்கும் இந்த விசக் காற்றைச் சுவாசித்துக்கொண்டு அப்துல் கலாமின் வல்லரசுக்கனவில் மயங்கிக் கிடப்பதா? அல்லது, அழுகி நாறும் இந்த சமூக அமைப்பைத் தூக்கியெறிந்து, நம் குழந்தைகளுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தை ஆசிரியர்கள், மாணவர்களுடன் இணைந்து முன்னெடுக்கப் போகிறோமா? என்பதே இன்று நம்முன் உள்ள கேள்வி.

ஆசிரியர்: சிங்கிஸ் ஐத்மாத்தவ்

நூல் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,
பதிப்பகம் மற்றும் விற்பனையகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை
சென்னை – 600 002
Ph : 044 – 28412367

மருதமுத்து,
பொதுக்குழு உறுப்பினர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை