Sep 12, 2015

டாஸ்மாக் எதிர்ப்பு போராளிகள் நீதிமன்றத்தையும் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்!

 டாஸ்மாக் எதிர்ப்பு போராளிகள் சிறையிலிருந்து வெளியே கம்பீரமாய் முழக்கமிட்டு வந்துகொண்டிருக்கிறார்கள்!

38 நாட்கள் சிறையில் உறுதியாக இருந்து நீதிமன்றத்தின் யோக்கியதையையும் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்!

காட்சி 1

ஆக. 3ந்தேதி ஆயிரக்கணக்கான பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் கடையை அடித்துநொறுக்கினார்கள். சிதறி ஓடாமல், அரசை அம்பலப்படுத்தி முழக்கமிட்ட RSYF மாணவ தோழர்களை போலீசு தாக்கியது. ஊடகங்கள் வழியாக உலகமே பார்த்து போலீசை காறித்துப்பியது. வெறியுடன் காவல் நிலையத்திலும் தாக்கினார்கள். காயத்துடன் நின்ற மாணவர்களை பார்த்து ரிமாண்ட்டில் கையெழுத்திட்ட நீதிபதிக்கு எந்த பதைபதைப்பும் வரவில்லை. போலீசை கண்டிக்கவுமில்லை. போலீசை போலவே, மாணவர்களை “வா! போ” என ஒருமையில் அழைத்தார் நீதிபதி! நாம் கண்டித்தோம்.

காட்சி 2

சிறையில் நுழைந்ததும் நிராயுதபாணியான மாணவர்கள் போலீசால் தாக்கப்பட்டார்கள். அடுத்த நாளும் தாக்கப்பட்டார்கள். நாம் பதறிப் போய், மாணவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டுவா! என “ஆட்கொணர்வு” மனு தாக்கல் செய்தோம். அம்பலப்பட்டுவிடுவோம் என பயந்து, மாவட்ட நீதிபதி விசாரணை என நாடகமாடியது. எவ்வளவோ தகிடுத்தத்தங்கள் செய்தாலும் நீதிபதியும் வேறு வழியேயில்லாமல் அடித்தது உண்மை என அறிக்கை தாக்கல் செய்தார். இப்பொழுது விசாரணைக்கு எடுத்தால், அசிங்கப்பட்டுபோவோம் என நீதிமன்றம் ஜவ்வாய் இழுத்தடிக்கிறது!

காட்சி 3

பெண் மாணவிகளை சிறையில் உளவியல் ரீதியாக மிரட்டியது உளவுத்துறை ஆண் போலீசு. இதற்காகவும் “ஆட்கொணர்வு மனு” தாக்கல் செய்தோம். உளவுத்துறை ஆண் போலீசு சிறைக்கு போனது உண்மை. மாணவிகளை சந்திக்கவில்லை என கதைவிட்டது. பெண்கள் சிறையில் ஆணுக்கு என்ன வேலை? என்ற கேள்வியை நீதிமன்றம் கவனமாக தவிர்த்தது. “வீடியோ காட்சிகளை ஒப்படை” என்ற உத்தரவிற்கு, “கேமராவே அங்கு கிடையாது” என பசப்புகிறது!

காட்சி 4

பச்சைப்பா கல்லூரி மாணவர்கள் 15 நாட்கள் சிறை முடிந்து, போலீசு கேட்காமலேயே எழும்பூர் பெண் நீதிபதி இன்னொரு பதினைந்து நாள் நீடித்தார். நமது வழக்குரைஞர் காரணம் கேட்டால் பதிலே இல்லை. பாதிக்கப்பட்ட மாணவ தோழர்களே கேள்வி கேட்டார்கள். பேசக்கூடாது என்றார். உயர்நீதிமன்றத்தில் மீண்டும் பரிசீலிக்க கேட்டால், “நீடித்தது சரி தான்” என பதில் சொன்னது.

காட்சி 5

35 நாட்களுக்கு பிறகு பிணை கேட்டால், டெபாசிட் பணம், தொடர்ந்து கையெழுத்திடுவது, இரண்டு பேர் ஜாமீன் என பட்டியலிட்டது நீதிமன்றம். மாணவர்கள் பொதுநோக்கத்திற்காக போராடினார்கள். காவல் நிலையத்தில் வைத்து அடித்ததை, நீதிபதி பதிவு செய்திருக்கிறார். சிறையில் அடித்ததை மாவட்ட நீதிபதி பதிவு செய்துள்ளார். ஆகையால், இப்பொழுது போலீசும், சிறை போலீசும் தான் குற்றவாளிகள். அதற்காக நாங்கள் நீதியும், இழப்பீடும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். எந்த நிபந்தனையும் விதிக்ககூடாது என்றோம். ஒரு முதல் தகவலறிக்கைக்கு ரூ 50 கட்டலாமே! என கேட்டது. நாம் அதற்கும் மறுத்தபிறகு, மாணவர்களுக்கு நிபந்தனையின்றிம், நிர்வாகிகள் 4 பேருக்கு இரு வாரங்கள் சேத்துப்பட்டு காவல்நிலையத்தில் கையெழுத்திடவேண்டும் என‌ பிணை தர பணிந்தது!

கவனியுங்கள். அரசின் அத்தனை ஒடுக்குமுறையையும் நீதிமன்றம் பச்சையாய் ஆதரித்து நிற்கிறது. இறுதியில் எந்தவித நிபந்தனையுமின்றி நீதிமன்றம் பணிந்து, பிணை தந்ததற்கு காரணங்கள்

தொடர்ச்சியான டாஸ்மாக் எதிர்ப்பு மக்கள் போராட்டங்கள்!

மாணவர்களை நிபந்தனையுமின்றி விடுதலை செய்யவேண்டும்  என தொடர்ந்து நடைபெற்ற அனைத்து தரப்பு மக்களின் போராட்டங்கள்!

 சென்னை வழக்குரைஞர்கள் சங்கம் எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை
செய்யவேண்டும் என தீர்மானம் இயற்றியது!

சென்னை வழக்குரைஞர்கள் சங்க பிரதிநிதிகள், மூத்த வழக்குரைஞர்கள், பல வழக்குரைஞர்கள் உயர்நீதி மன்றத்தில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்!

அரசின் ஒடுக்குமுறையையும், நீதிபதிகளின் யோக்கியதையும் நாம் விமர்சனம் செய்து வெளியிட்ட பல ஆயிரம் பிரசுரங்கள் வழக்குரைஞர்கள் மத்தியில் விநியோகம் செய்தது!

இப்படி தொடர் போராட்டங்கள் செய்ததின் மூலம் தான் மாணவர்கள் இப்பொழுது பிணையில் வெளியேவந்திருக்கிறார்கள்!

உறுதியோடு போராடிய RSYF பச்சையப்பா கல்லூரி மாணவ தோழர்களுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

அரசு, நீதிமன்றம் எல்லாம் பெயரளவிலான ஜனநாயகத்தை கூட அனுமதிப்பதில்லை. பச்சையாய் அம்பலப்பட்டு நிற்கிறது.

போராட்டமின்றி வாழ்க்கையில்லை! போராடும் மக்களுக்கு நாம் என்றும் உறுதுணையாய் நிற்போம்!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை
9094666320

No comments: