Sep 14, 2018

உலகம் இரண்டு: சிறையும் இரண்டு!


நேற்று புழல் சிறையில் தண்டனை கைதிகளுக்கு நிறைய வண்ண தொலைக்காட்சிகள், வசதியான சொகுசு படுக்கை, வாய்க்கு ருசியான வகை வகையான சாப்பாடு என நிறைய படங்கள் வெளியாகியிருக்கின்றன. அதிர்ச்சி அடைந்தது போல ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

2009ல் லஞ்ச ஒழிப்புத்துறை மதியம் சிறையை சோதனை செய்ய அனுமதி கேட்ட பொழுது வேண்டுமென்றே அரை மணி நேரத்திற்கும் மேலாக இழுத்தடித்து தான் உள்ளே அனுமதித்தார்கள். அதற்கு பிறகும், துணை ஜெயிலர் அறையிலேயே 21 ஆபாச சிடிக்கள் கிடைத்தன. நான்கு கைதிகளின் அறையில் கேபிள் டிவி இணைப்புடன் தொலைக்காட்சிகள் இருந்திருக்கின்றன. இதையெல்லாம் அந்த அரை மணி நேரத்தில் அவர்களால் ஒளித்து வைக்கமுடியவில்லை.

இந்த சோதனைக்கு முதல்வாரம் தான் துறை வாரியான சோதனையின் பொழுதே... 30க்கும் மேற்பட்ட செல்போன்கள், 2 பென்டிரைவர்கள், 12 கிலோ கஞ்சா சிக்கியிருந்தன

வருடங்கள் உருண்டோட எல்லாமும் வளர்கின்றன.

1950களில் கம்யூனிஸ்டு கட்சி தடை செய்யப்பட்டு அரசால் கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப்பட்ட காலம். சி.. பாலன் தனது சிறைவாழ்க்கையை#தூக்குமர நிழலில்என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
சிறைக்குள் ஐந்நூறு பீடிகளைக் கடத்திக்கொண்டு வந்துவிட்டால், அவற்றின் சொந்தக்காரனால், பல காரியங்களைச் சாதிக்கமுடியும். ஏனென்றால், சிறைச்சாலைக்குள் பண்டம் பரிவர்த்தனைக்காகப் பயன்படுத்தப்படும் நாணயம் பீடிதான். அன்று கோயமுத்தூர் ஜெயிலில் நிலவிய விலைவாசிப் புள்ளி விவரங்கள் கீழே தரப்படுகின்றன.

8 அவுன்ஸ் பால்                          - 4 பீடி
4 அவுன்ஸ் மாமிசம்                  - 5 பீடி
6 அவுன்ஸ் சோற்றுப்பட்டை - 6 பீடி
10 அவுன்ஸ்
நல்லெண்ணெய்                          - 4 பீடி
ஒரு மேல் சட்டையும்
ஒரு கால்சட்டையும்                – 25 பீடி

சிறையில் எளியவனுக்கு எந்த வசதியும் இல்லை. அவர்களின் குடும்பம் வாங்கிச் செல்கிற ஒரு ப்ரெட் பாக்கெட்டையோ, ஒரு பிரிட்டானியா பிஸ்கெட் பாக்கெட்டையோ போலீசுகாரர்கள் பிதுக்கி பிதுக்கி பார்த்து நொந்து போக வைப்பார்கள்.

உலகம் ஏற்றத்தாழ்வுகளால் நிரம்பி வழிந்து, இரண்டு உலகமாக இயங்கும் பொழுது, சிறை மட்டும் ஒன்றாகவா இயங்கும்!

- குருத்து


No comments: