Oct 30, 2009

பத்து வருடங்களாகப் போராடும் ஐரோம் சர்மிளா!



நன்றி : போராட்டம்

வரும் நவம்பர் 2, 2009 அன்று, மணிப்பூரைச் சேர்ந்த கவிஞரும், செயல் வீரருமான ஐரோம் சர்மிளாவின் உண்ணாவிரதப் போராட்டத்தின் பத்தாவது ஆண்டு துவங்குகிறது. இந்திய அரசின் ஆயுத படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் (AFSPA) திரும்பப் பெறக் கோரி, அவர் கடந்த பத்தாண்டுகளாக போராடி வருகிறார்.

1958-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இச்சட்டத்தின்படி, வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும், எவரையும் வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும், அவர்களது வீடுகளில் புகவும், சந்தேகத்தின் பேரிலேயே கூட சுட்டுக் கொலை செய்யவும் இந்திய இராணுவத்திற்கு அதிகாரம் உண்டு. இதற்கெதிராக சட்டப்பூர்வமாக கூட இராணுவத்தை தண்டிக்க முடியாது.

இந்திய இராணுவப் படைகள், இச் சட்டத்தின் அரவணைப்பில், சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள், கொலைகள், கட்டாய ஆட்கடத்தல்கள் என அட்டூழியம் செய்து வருகின்றன. இதன் மூலம் நாட்டிற்கே தலைகுனிவையும், மணிப்பூர் மக்களுக்கு சொல்லொணாத் துயரத்தையும் கொடுத்து வருகின்றன. “இச்சட்டம் ஒடுக்குமுறையின் சின்னமாக மாறி விட்டது. மக்களின் வெறுப்பிற்குரிய சட்டமாகவும், எதேச்சதிகாரம் மற்றும் பாகுபாட்டின் கருவியாகவும் விளங்குகிறது” என அரசாங்கம் நியமித்த ஜீவன் ரெட்டி கமிசனே கூறியுள்ளது. இனப் பாகுபாட்டிற்கான ஐ.நா கமிட்டி இச்சட்டத்தை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

நவம்பர் 2, 2000 அன்று, மணிப்பூரிலுள்ள மாலோம் எனும் இடத்தில் பத்து குடிமக்களை, இந்திய இராணுவம் படுகொலை செய்ததைக் கண்டித்து, கவிஞர் ஐரோம் சர்மிளா தனது உண்ணாவிரதத்தைத் துவங்கினார். இந்தியக் குற்றவியல் சட்டம் 307-ன் படி அவர் தற்கொலை செய்ய முயன்றார் என நான்கு நாட்களில் அவரை கைது செய்தது இந்திய அரசு. இதனைத் தொடர்ந்து அவரது உடல்நிலை படிப்படியாக மோசமடைந்தது. அவர் சொட்டுத் தண்ணீர் கூட குடிக்க மறுத்து விட்டார்.

நவம்பர் 21, 2000 அன்று, அவரது மூக்கில் பிளாஸ்டிக் குழாய் சொருகப்பட்டு, அவரது உடலில் திரவ உணவு வலுக்கட்டாயமாக செலுத்தப்பட்டது. கடந்தப் பத்தாண்டுகளாக இந்தத் திரவ உணவின் மூலமாகவும், உச்சகட்ட பாதுகாப்புடன் தனிமைச் சிறையில் வைத்து அவரது உயிரை இந்திய அரசு கையில் பிடித்து வைத்துள்ளது. ஒவ்வொரு வருடமும் அவர் விடுதலை செய்யப்படுவதும், உடனடியாக மீண்டும் கைது செய்யப்படுவதும் என தொடர் நிகழ்வாகியுள்ளது.

அவரது இடையறாத போராட்டத்திற்கு ஆதரவாக மணிப்பூர் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், கடந்த டிசம்பர் 10, 2008 முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவரது உறுதிமிக்க போராட்டத்தின் பத்தாண்டு துவக்கத்தை, “நம்பிக்கை, நீதி மற்றும் அமைதியின் திருவிழா” என மக்கள் மத்தியில் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளனர். எனவே, அமைதியிலும், நீதியிலும், ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டுள்ள அனைவரும் அவரது போராட்டத்திற்கு ஆதரவளிப்பது அவசியமானதாகும்.

(‘மணிப்பூர் சுதந்திரம்’ இணையத் தளத்தில் வெளியாகியுள்ள அறைகூவலின் அடிப்படையில்)

தொடர்புடைய பதிவுகள்

மணிப்பூர் : வீரத்தின் விளைநிலம்

இப்படித்தான் நடக்கின்றன என்கவுன்டர்கள் - நன்றி - தெகல்கா

Oct 12, 2009

தீபாவளி - தமிழர்களின் திருவிழா அல்ல! இந்துக்களின் திருவிழா!



முன்குறிப்பு : தீபாவளியை கொண்டாட தமிழ்நாடு தயாராகி வருகிறது. துணிக்கடைகளில் கூட்டம் பிதுங்கி வழிவதும், எந்த பக்கம் திரும்பினாலும், முதலாளிகள் தங்கள் பொருளை விற்று தீர்ப்பதற்கு விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ரயில்களிலும், பேருந்துகளிலும் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிரம்பிவிட்டன. இடம் கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிறார்கள். ஆங்காங்கே தீபாவளிக்காக வாங்கப்படும் வெடிகள் பல உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன. நிற்க.

தீபாவளி - தமிழர்களின் திருவிழா அல்ல! 'இந்துக்களின்' திருவிழா.

பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் மகாவீரர் இறந்ததை தான், நரகாசுரன் அழிந்ததாக கொண்டாடப்படுகிறது என வரலாற்று வழி ஆதாரங்கள் மற்றும் மரபு வழிப்பட்டும் விளக்குகிறார்

- பண்பாட்டு துறை ஆய்வாளர் தொ. பரமசிவன், இவர் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்தார், பிறகு, திருநெல்வேலியில் உள்ள மனோன்மனியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியராகவும், பதிவாளராகவும் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். (தற்பொழுது எதுவும் பணியில் இருக்கிறாரா என தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும்)

****

தீபாவளி

இன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாகக் கொண்டாடப்பெறும் திருவிழா தீபாவளி. நகர்ப்புறம் சார்ந்ததாகவும், துணி, என்ணெய், மாவு, பட்டாசு ஆகிய பெருந்தொழில்களின் பொருளாதாரம் சார்ந்ததாகவும் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. தகவல் தொடர்புச் சாதனங்கள் தரும் பகட்டான விளம்பரங்களால், இது தமிழர்களின் 'தேசிய திருவிழா' போலக் காட்டப்படுகிறது. ஆயினும் தைப்பொங்கல் திருவிழா போல மரபுவழிப் பொருளாதாரம் சார்ந்ததாகவும் ஒரு திருவிழாவிற்குரிய உள்ளார்ந்த மகிழ்ச்சியோடும் சடங்குகளோடும் கொண்டாடப் பெறுவதாகவும் தீபாவளி அமையவில்லை. தைப்பொங்கல் சமய எல்லையினைக் கடந்து நிற்கும் திருவிழா. இது பழந்தமிழரின் அறுவடைத் திருவிழா. எனவே தான் இன்று ரோமன் கத்தோலிக்கத் தேவாலயங்களில் கூடத் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஆனால் தீபாவளி தமிழரின் திருவிழாவாக அமையாமல் 'இந்து'க்களின் திருவிழாவாக அமைகிறது.

தமிழர் திருவிழா - இந்துக்களின் திருவிழா என்ற வேறுபாட்டினை எவ்வாறு பிரித்தறிவது? பழைய வழிபாட்டு முறைகளோடு கூடிய தொல் சமய வழிபாடுகள், இவற்றின் சாரத்தையும் உள்வாங்கிக் கொண்டு வளர்ந்த சைவம், வைணவம் ஆகியவையே தமிழர்கைன் பழைய மதங்களாகும். இவை காட்டும் திருவிழாக்களான கார்த்திகைத் திருவிழா, திருவாதிரைத் திருவிழா, தைப்பூசத் திருவிழா, மாசிக்களரி எனப்படும் சிவராத்திரித் திருவிழா, பங்குனி உத்திரம், சித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிப் பதினெட்டாம் பெருக்கு ஆகியன சைவமும் வைணவமும் பெருஞ்சமயங்களாக நிலைபெறுவதற்கு முன்னரே தமிழர்கள் கொண்டாடிய திருவிழாக்களாகும். பக்தி இயக்கத்தின் வளர்ச்சியில் இவை சைவ வைணவ மதங்களாலும் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தீபாவளி, தமிழ்நாட்டின் மரபுவழிப் பொருளாதாரத்தோடும் பருவ நிலைகளோடும் சடங்குகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழா. பார்ப்பனியத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் விலகி நிற்கிற சிற்றூர்களில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. தீபாவளியின் அடையாளமான வெடி, அதன் மூலப்பொருளான வெடிமருந்து ஆகியவை தமிழ்நாட்டிற்குப் பதினைந்தாம் நூற்றாண்டு வரை அறிமுகமாகவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும் தீபாவளி (தீப+ஆவளீ) என்னும் வட சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லும் புழக்கத்தில் இல்லை. தமிழர்களின் விளக்குத் திருவிழா என்பது திருகார்த்திகைத் திருவிழாவே.

நரகாசுரன் என்னும் அரக்கன் கிருஷ்ணனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் தீபாவளிக் கதை திராவிடப் பண்பாட்டோடு தொடர்புடையதன்று. மாறாக பிராமணிய மதத்தின் சார்பாக எழுந்த கதையாகும். இந்த நாளே பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் இருபத்து நாலாம்
தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறடைந்த (இறந்த) நாளாகும். தான் இறந்த நாளை வரிசையாகத் தீபங்களை ஏற்றிக் கொண்டாடுமாறு மகாவீரர் தம் மதத்தவரைக் கேட்டுகொண்டார். ஆகவே, பிராமணீய மதத்தின் பழைய எதிரிகளான சமணர்களும் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். எனவே நரகாசுரன் அழிந்ததாக பிராமணியத் தீபாவளிக் கதைகள் குறிப்பிடுவது மாகாவீரர் இறந்த நாளையே அக்கும். விசயநகரப் பேரரசான, 'இந்து சம்ராஜ்ஜியம்', தமிழ்நாட்டில் நுழைந்த கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு தொடங்கியே தீபாவளி இங்கு ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தக் காரணம் பற்றியே தமிழ்ப் பிராமணர்களைவிட, தமிழ்நாட்டில் உள்ள தெலுங்குப் பிராமணர்களே தீபாவளியைப் 'பக்தி சிரத்தை'யுடன் கொண்டாடுகின்றனர். வடநாட்டு இந்துக்களிடமும் சமணர்களிடமும் இல்லாதபடி தமிழ்நாட்டில் இத்திருவிழா நாளன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்றனர். எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது தமிழ்நாட்டில் நீத்தார் நினைவில் இறுதி நாளைக் குறிக்கும் சடங்காகும். தமிழ்நாட்டுப் பிராமணர்களும் இத்திருவிழாவை இறந்தார் இறுதிச் சடங்கு போல 'கங்கா ஸ்நானம்' செய்து கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது. ஆகவே உண்மையில் இத்திருவிழா பார்ப்பனிய மதத்தின் திருவிழாவேயன்றித் தமிழர் திருவிழா ஆகாது.

'நரகனைக் கொன்ற நாள் நல்ல நாள் விழாவா' என்று பாரதி தாசன் பாடுவதும் இங்கே நினைவுக்குரியது.

- தொ.பரமசிவன் எழுதிய பண்பாட்டு அசைவுகள்' லிருந்து. பக்.58, 59

****

மேலும் சில தகவல்கள்

தீபாவளி பற்றிய இன்னபிற கதைகள் - தமிழ்ச் சமணம்

தொ.பரமசிவன் எழுதிய நூல்கள் குறித்த தகவல்

தேவையில்லாத தாலியும், சில உருப்படியான தகவல்களும் - தொ.பரமசிவன் - நந்தவனம்

தமிழ் - தொ. பரமசிவன் எழுதிய நூல் அறிமுகம்

"தெய்வம் என்பதோர்" - தொ. ப. எழுதிய கட்டுரை தொகுதி குறித்த ஒரு பார்வை

நன்றி - குருத்து

Oct 1, 2009

கோவை பிரிக்கால் ஆலைத் தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்தை ஆதரித்து!



- புதிய ஜனநாயக முன்னணி வெளியிட்ட துண்டறிக்கையிலிருந்து...

கோவை பிரிக்கால் ஆலைத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்!

முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவோம்!

அன்பார்ந்த தொழிலாளர்களே!

கடந்த செப். 21ந் தேதியன்று கோவை பிரிக்கால் ஆலையின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி ராய் ஜே.ஜார்ஜ் என்பவன் தொழிலாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டான். இதைக் கண்டு முதலாளிகள் சங்கம் "வன்முறை - பேராபத்து" எனறு அலறுகிறது. ஊடகங்கள்: தொழிலாளர்களை பயங்கரவாதிகளாகவும், வன்முறையாளர்களாகவும் சித்தரிக்கின்றன.

அமைச்சர்களோ தொழிலாளர்களின் வன்முறைப் போக்கை நசுக்கப் போவதாக முதலாளிகளின் அடியாட்கள் போல பேசுகின்றனர். கோவை நகரமே கலவரபூமி போல போலீசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் பயங்கரவாதிகளா? முதலாளி வர்க்கம் தினந்தோறும் தொழிலாளர்கள் மீது ஏவி விடுகின்ற கொடூரங்களை அனுபவித்த எவரும் அப்படிச் சொல்ல மாட்டார்கள். கோவை பிரிக்கால் ஆலை நிர்வாகம் கடந்த மூன்று ஆண்டுகளாக தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்குமுறைகளை அறிந்த எவரும் தொழிலாளர்களை வ்னமுறையாளர்கள் என்று சொல்லமாட்டார்கள்.

பிரிக்கால் ஆலையில் ஏற்கனவே ஐந்து தொழிற்சங்கங்கள் இருந்தும் முதலாளி விஜய் மோகனின் அடக்குமுறைகளுக்கு அவை பணிந்து போயின. எனவே, 2007-ஆம் ஆண்டில் பெரும்பான்மை
தொழிலாள்ர்கள் ஒன்று சேர்ந்து புதிய தொழிற்சங்கத்தை துவங்கினர். அன்று முதல் அதிகரித்து வரும் கொடுமைகள் - அடக்குமுறைகள் - பழிவாங்கும் நடவடிக்கைகள் கொஞ்ச நஞ்சமல்ல. கொத்து கொத்தாய் வேலை நீக்கம், பணியிட மாற்றம் என்று விரட்டப்பட்டனர். தொழிலாளர் ஆணையர் துவங்கி உயர்நீதி மன்றம் - உச்சநீதி மன்றம் வரை போட்ட எல்லா உத்திரவுகளையும் பிரிக்கால் முதலாளி மயிருக்குச் சமமாக மதித்தான்.

ஜனநாயக அமைப்பில் தொழிலாளர்களின் வன்முறையை சகித்துக் கொள்ள முடியாது என்கிறார் துணை முதல்வர் ஸ்டாலின். இவரது அரசாங்கம் போட்ட அரசாணையைக் கூட கழிப்பறை காகிதமாக தூக்கி எறிந்தானே விஜய்மோகன்! அது சகித்துக் கொள்ளக்கூடிய ஜனநாயகமா? 300 தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் மாதக்கணக்கில் பட்டினி போட்டானே, அது சகித்துக் கொள்ளக்கூடிய ஜனநாயகப் போக்கா? பல மணி நேரம் நின்று கொண்டே வேலை செய்ய நிர்ப்பந்தம் செய்யப்பட்டதால் பல பெண் தொழிலாளர்களுக்கு கருப்பை நீக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டதே, அது போற்றத்தக்க ஜனநாயக மாண்பா?

தொழிலாளர்களையும், சங்க முன்னணியாளர்களையும் மிரட்டுவது, அடியாட்களை வைத்து தாக்குவது, கருங்காலிகளை உருவாக்கி ஒற்றுமையை சீர்குலைப்பது, வேலைநீக்கம் செய்தும், சம்பளத்தை மறுத்தும் பட்டின் போடுவது ஆகியவை செய்து வந்த பிரிக்கால் முதலாளியின் கொடூரங்களை தாங்காமல் தொழிலாளர்கள் திருப்பி தாக்கிவிட்டனர். இதில் முதலாளியின் அடியாளாக செயல்பட்ட அதிகாரி ராய். ஜே.ஜார்ஜ் பலியானான். இதில் வருத்தப்படவோ, அனுதாபப்படவோ, அச்சப்படவோ ஏதும் இல்லை.

வன்முறையில் ஈடுபடும் தொழிற்சங்கங்களை ஒடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலறுகிறது சென்னை "மெப்ஸ்" உற்பத்தியாளர்கள் (முதலாளிகள்) சங்கம். ஒரு அதிகாரி கொல்லப்பட்டதற்கே இப்படிப் பதறுகின்றனர். முதலாளித்துவ பயங்கரவாதம் தினந்தோறும் பலநூறு தொழிலாளர்களைக் கொல்கிறதே இவைகளை எத்தனை நாட்களுக்குத் தான் சகித்துகொள்வது?

தொழில அமைதி நிலவுகின்ற தமிழகத்தில் பிரிக்கால் தொழிலாளர்களின் வன்முறை ஒரு களங்கம் என்கின்றன, முதலாளி சங்கங்கள். எப்பேர்ப்பட்ட மோசடி! "அமைதி பூங்கா" தமிழகத்தில் எந்த ஆலையிலாவது சங்கம் அமைக்க முடிகிறதா? சட்டப்படியான ஊதியம் - வேலை ப் பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகளை கேட்கமுடிகிறதா?

தொழிற்சங்கம் துவங்கியதற்காக 188 தொழிலாளர்களின் வேலையைப் பறித்ததே ஹூண்டாய் கார் கம்பெனி, இதுதான் தொழில் அமைதியா? நெல்காஸ்ட் ஆலைக்குள் விபத்தில் செத்துப்போன ஒரிசா மாநிலத் தொழிலாளியை அனாதைப் பிணமாக தூக்கியெறிய அனுமதிக்க மாட்டொம் என்று போராடியது, நிரந்தர தொழிலாளர் சங்கம். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக 108 தற்காலிக தொழிலாளர்களை வேலையை விட்டு துரத்தியும், சங்க முன்னணியாளர்கள் 34 பேரை சஸ்பெண்ட் செய்தும் மிரட்டி வருகிறது நெல்காஸ்ட் நிர்வாகம். வேலை நீக்கத்தை தடை செய்து உயர்நீதி மன்றம் போட்ட உத்திரவைக் கூட நிர்வாகம் மதிக்கவில்லை. இதுதான் தொழில் அமைதியின் லட்சணம்.

தொழிலாளர்கள் போராடினால் களங்கமாம்! பெரியபாளையம் பகுதியில் உள்ள சுஜானா ஸ்டீல்ஸ் ஆலையில் சங்கம் துவக்கியதற்காக ஆந்திராவுக்கு மாற்றப்பட்டவர்களை எவ்வித பாதிப்பும் இன்றி உள்ளூரியிலேயே வேலை கொடுக்க உத்தரவிட்டது, உயர்நீதிமன்றம். இந்த உத்திரவையும் கழிப்பறைக் காகிதமாக்கிய முதலாளி வர்க்கம் தான், தொழிலாளர்கள் விழித்தெழுவதை களங்கம் என்கிறது.

பிரிக்கால் தொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முழங்குகின்ற மு.க.ஸ்டாலின், சில நாள்களுக்கு முன்பாக கடலூரில் "கெம்பிளாஸ்ட் சன்மார்" என்கிற ஆலையை பெருமையுடன் திறந்து வைத்தார். இந்த சன்மார் முதலாளி தன்னுடைய போன்னேரி ஆலையில் சங்கம் துவக்கியதற்காக 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வேலையைப் பறித்து பல மாதங்களாகப் பட்டினி போட்டு வருகிறான். இவனை சவுக்கால் அடித்து தண்டிப்பாரா, ஸ்டாலின்?

ஆளும் கும்பல் பேசுகின்ற ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி எல்லாம் தொழிலாளர்களை மிரட்டவே செய்கிறது! முதலாளிகளுக்கோ சலுகைகள் - மானியங்கள் - சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு தந்து பாதசேவை செய்கிறது. அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தொழிலாளர்களை பயங்கரவாதிகள் - வன்முறையாளர்கள் என்று முத்திரை குத்துகிறது. ஆனால், லட்சக்கணக்கான தொழிலாளர்களை வேலை பறிப்பு - பட்டினி, வறுமை என்கிற பேரழிவு ஆயுதங்கள் கொண்டு சித்திரவதை செய்து வரும் முதலாளிகளின் இழப்புக்கோ ஒப்பாரி வைக்கிறது.

பிரிக்கால் தொழிலாளர்கள் மட்டுமல்ல; வேறு எந்த ஆலைத் தொழிலாளர்களும் கலம் செய்வதற்குரிய சூழ்நிலைகளை முதலாளிகளே தோற்றுவிக்கின்றனர். எனவே, இந்தப் பிரச்சனை ஏதோ ஒரு ஆலையின் தொழிலாளர்களது பிரச்சினை என்று நாம் ஒதுக்கிக் கொள்ள முடியாது. பிரிக்கால் தொழிலாள்ர்களின் போராட்டம் இந்த தருணத்தில் ஒடுக்கப்பட்டால் அடுத்து வரும் நாட்களில் எந்த தொழிலாளர் போராட்டமும் நசுக்கப்படும். எனவே, பிரிக்கால் தொழிலாளர்களது போராட்டங்களை ஆதரிப்பது வரலாற்றுக் கடமை என்பதை உணர்வோம். முதலாளித்துவ பயங்கரவாததுக்கு முடிவு கட்ட பாட்டாளி வர்க்கமாய் அணிதிரள்வோம்!
கோவை பிரிக்கால் ஆலை அதிகாரி ராய்.ஜே.ஜார்ஜ் தொழிலாளர்களால் அடித்துக்கொலை!

* அன்றாடம் தொழிலாளர் மீது
பயங்கரவாத முதலாளிகள் செய்துவரும்
சித்திரவதை கொடுமைகளின்
எதிர்விளைவே இது!

*தொழிலாளி வர்க்கம் வருத்தப்படவோ,
அனுதாபப்படவோ, அஞ்சவோ
தேவையில்லை.

* நாள்தோறும் சட்டவிரோதமாக
ஆயிரக்கணக்கான கொடுமைகளை
செய்துவரும் பயங்கரவாத
முதலாளிகளை கைது செய்!

*பிரிக்கால் ஆலைத் தொழிலாளர்களின்
நியாயமான போராட்டம் வெல்லட்டும்!
முதலாளித்துவ பயங்கரவாதத்தை
முறியடிக்க அணிதிரள்வோம்!

தொடர்புக்கு :

அ. முகுந்தன்,
110, 2வது மாடி,
மாநகராட்சி வணிக வளாகம்,
63, ஆற்காடு சாலை,
கோடம்பாக்கம், சென்னை - 24
பேச : 94448 34519
- பு.ஜ.தொ.மு
(புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி)

தொடர்புடைய சுட்டிகள்

பிரிக்கால் ஆலை அதிகாரி கொலை
முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கான எதிர் விளைவு


பிரிக்கால் தொழிலாளர்களின் போராட்டம்