Jun 17, 2015

நினைவுகள் அழிவதில்லை!



"போராளியை கொல்லலாம்.
போராளியின் லட்சியத்தை?”

******
 
ஆசிரியர் : நிரஞ்சனா

இந்தப் பூமிப்பந்தில் பல கோடி மாந்தர்கள் வாழ்ந்து மறைந்துள்ளனர். ஆனால் சிலரது வாழ்க்கை மட்டுமே வரலாற்றில் இடம் பெறுகிறது. அவர்கள் தமக்கென மட்டுமே சுயநலத்துடன் வாழாமல், சக மனிதர்களுக்காகவும், சமூகத்திற்காகவும் வாழ்ந்து சென்றதே அதற்கான காரணம் ஆகும். அவர்களது வாழ்க்கையானது வரலாற்று வானில் சுடர்வீசும் நட்சத்திரமாகத் திகழ்ந்து வாழும் மக்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிறது. அப்படிப்பட்டதொரு தியாக வாழ்க்கையில் ஒளிவீசிய நான்கு இளைஞர்களின் வாழ்க்கையை நமக்கு அறியத்தருகிறது இந்த நூல்.

அன்றைய பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் காலடியில் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவின் கிராமப் புறங்களில் நிலப்பிரபுக்கள் என்றழைக்கப்படும் பண்ணையார்கள் மற்றும் ஜமீன்தார்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. அவர்கள் வைத்ததே சட்டம் என்று குறுநில மன்னர்களைப் போல வாழ்ந்துவந்தனர். அவர்களது நிலங்களில் வேலைசெய்யும் ஏழைக் கூலித்தொழிலாளர்களுக்கு முறையான கூலி தரப்படுவதில்லை. பண்ணைகள் அவர்களைக் கொத்தடிமைகளாக நடத்தினர். வட்டிக்குப் பணம் கொடுத்து, ஏமாற்றி ஏழை விவசாயிகள் உழைத்துப் பிழைத்த சிறிய அளவு நிலங்களையும் பிடுங்கிக் கொண்டனர். இக்கொடியவர்கள் ஏழைவிவசாயிகளின் வீட்டுப் பெண்களையும் விட்டுவைப்பதில்லை. இப்படிப்பட்டதொரு நிலைதான் அன்றைய கேரளத்தின் மலபார் பகுதியிலிருந்த கையூர் கிராமத்திலும் இருந்தது.

ஏழை விவசாயக்குடும்பத்தில் பிறந்த அப்பு, சிறுகண்டன் ஆகிய இளைஞர்களுக்கு கையூர் நிலப்பிரபுவின் அக்கிரமங்கள் ஆத்திரமூட்டின. அவ்வூரிலிருந்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர் அவர்களுக்கு வழிகாட்டினார். மக்களை ஒன்றுதிரட்டிப் போராடமல் நிலப்பிரபுவின் கொடுமைகளை ஒழிக்க முடியாது என்கிற பொதுவுடைமைத் தத்துவத்தை அவர்களுக்கு விளக்கிக் கூறினார். தெளிவுபெற்ற இளைஞர்கள் ஏழை விவசாயிகளை அணிதிரட்டி அந்த ஊரில் விவசாய சங்கத்தை உருவாக்கினர். அதன்மூலமாக நிலப்பிரபுவின் கொடுமைகளை துணிச்சலாக எதிர்கொண்டு முறியடித்தனர். அவ்வூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வட்டார அளவிலான விவசாயிகளின் மாநாட்டிற்கான ஏற்பாடுகளின்போது நிகழ்ந்த சிறிய அசம்பாவிதத்தை முன்னிட்டு ஆளும் வர்க்கத்தின் ஏவல்நாயான அன்றைய மலபார் போலீசு கையூர் கிராம மக்களின் மீது கொடூரமான வன்முறைகளை அரங்கேற்றியது. நிலப்பிரபுவின் கொடுங்கோன்மைக்கெதிராக மக்களை அணிதிரட்டிப் போராடிய அப்பு, சிறுகண்டன், அபுபக்கர், குஞ்ஞம்பு ஆகிய நான்கு இளைஞர்களும் பொய்வழக்கில் கைதுசெய்யப்பட்டுத் தூக்கிலிடப்படுகின்றனர். மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் தியாகிகளான இந்த வீரப்புதல்வர்களின் வாழ்க்கையை எளிய நடையில், படிப்பவர்களின் இதயத்தில் ஆழமாகப் பதியவைத்துள்ளார் இந்நூலாசிரியர்.

பள்ளி,கல்லூரிகளில் நமக்குச் சொல்லப்படும் வரலாறானது திரிக்கப்பட்ட,பொய்யான,ஆளும் வர்க்கங்களின் நோக்கத்திற்கேற்ப புனையப்பட்டதாகும். ஆனால், உண்மையான வரலாறு என்பது உழைக்கும் மக்களால் படைக்கப்படுவது. அம்மக்களே வரலாற்றின் நாயகர்கள் ஆவர். மனிதகுல மேம்பாட்டிற்காகப் போராடியவர்களே உண்மையான வரலாற்று நாயகர்கள். இந்நூலை நீங்களும் படித்துப் பாருங்கள். ஏழை விவசாயிகளின் பிள்ளைகளாகப் பிறந்து, சமூக மாற்றத்திற்காகப் போராடி வரலாறாக வாழும் இந்த இளைஞர்களின் வீர உணர்வு நம்மையும் பற்றிக்கொள்ளும்.

- மருதமுத்து  

No comments: