Dec 6, 2007

சாயம் பூசப்பட்ட குழந்தைகள் - விமர்சனம் - பாகம் 2



"படம் முடிந்துவிட்டது. இனி, இந்தியாவிற்கு வருவோம். இன்னும் பாதி விமர்சனம் இருக்கிறது. நாளை மீண்டும் தொடர்கிறேன்".
கடந்த பதிவின் தொடர்ச்சி இந்த பதிவு. இதைப் படித்தாலே விசயம் புரியும். ஆனால், அழுத்தம் உணரமுடியாது. ஆகவே, கொஞ்சம் சிரமம் பாராமல் கடந்த பதிவை படித்துவிட்டு, படித்தால் நலம்.

'அமெரிக்கத் தரம்' இல்லையென்றாலும், இந்திய கான்வென்டு பள்ளிகளில் மேற்கின் வார்ப்பில் நிறையவே அழகிப் போட்டிகள் நடக்கின்றன. இன்னும் இந்தி, தமிழ்ச் சினிமாக்களின் கொச்சை நடனங்கள் பள்ளி ஆண்டு விழாக்களை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றன. ஏறக்குறைய அவிழ்த்துப் போட்டு தொப்புள் டான்ஸ் ஆடும் தமது குழந்தைகளை, அனைத்துப் பெற்றோர்களும் மெச்சிக் கொள்கின்றனர். இவர்களுடைய உலகிலிருந்து தான் குழந்தைகள் பற்றிய கவலையும் விதவிதமாக வெளிப்படுகிறது.

பாராளுமன்றம், பத்திரிக்கை, தொலைக்காட்சி, திரையுலகம், கல்வி நிறுவனங்கள் கவலைப்படும் இந்தியக் குழந்தைகளின் பிரச்சனைகள் பல. போலியோ சொட்டு மருந்து, சிவகாசி, மத்தாப்புக் குழந்தைகள், பீடி, தீப்பெட்டி - கைத்தறிக் குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தை விபச்சாரம்...என்று நீளுகிறது. மேலும், பீகாரின் நக்சல்பாரிக் கட்சி, ஈழத்து விடுதலைப் புலிகள் முதல் உலக நாடுகளின் பல்வேறு போராளிக்குழுக்கள் வரை - சிறுவர்களை போரில் ஈடுபடுத்திக் கொலை வெறியை வளர்க்கின்றனர் என்பதும் ஒரு முக்கியக் கவலை.

முதலில் ஒன்றைப் புரிந்துகொள்வோம். தீக்குச்சியை அடுக்க்ப் பீடி சுற்றி, துப்பாக்கியை ஏந்துவதற்குக் காரணம், அக்குழந்தைகளின் பெற்றோரோ, குறிப்பிட்ட சமூகமோ அல்ல. பொருளியலிலும், அரசியலிலும் அச்சமூகப் பிரிவினரை ஆதிக்கம் செய்கின்ற சக்திகளே அந்த குழந்தைகளின் வாழ்க்கையைப் பறித்தவர்கள். உலகின் பெரும்பான்மை நாடுகளும் மக்களும் ஏழ்மையில் உழன்று கொண்டிருக்கும் பொழுது, அம்மக்களின் குழந்தைகள் மட்டும் வயிறார உண்டு, கல்வி கற்பது எப்படி முடியும்? அடிமைத்தனத்தில் உழலும் ஒரு சமுகத்தின் குழந்தைகள் மட்டும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியுமா? கட்டுண்டு கிடக்கும் மனிதர்களைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், குழந்தைகளுக்காக மட்டும் கண்ணீர்விடுவது அயோக்கியத்தனம்.

சிவகாசிக் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய குறும்படம் ஒன்றில் "பள்ளிக்குச் செல்லும் வயதில், பட்டாசுத் தொழிலுக்குச் செல்வது சரியா?" என்று ஒரு சிறுவனிடம் பேட்டியாளர் கேட்கிறார். "பட்டாசு செய்வதால் தான் ஒரு வேளையாவது பசியாற முடிகிறது" என்று பதிலளிக்கிறான் அச்சிறுவன். ஆசியாவைப் போன்ற சிறுமிகளோ, "நிறையப் பணம் வேணும்" என்பதற்காக அழகுப் போட்டிகளில் கலந்துகொள்கின்றனர்.

மேலும், "நிறையப் பணம் வேணும்" என்ற வெறிதான் பின்னாளில் கிரிமனல்களை உருவாக்குகிறது. பணம் குவிக்க எப்படியும் வாழலாம், என்ன வேலையும் செய்யலாம், எதையும் அவிழ்க்கலாம் என்பது அழகுப் போட்டிச் சிறுமிகள் கற்கும் அடிப்படைப் பாடம். ஆனால் துப்பாக்கி ஏந்தும் ஈழத்துச் சிறுவனுக்கு அமைதிப்படையின் ஆறாத வடுக்கள் காரணமாக இருக்கலாம். தன் மக்களைக் கொன்று குவிக்கும் ரன்வீர் சேனாவின் கொடுமை கண்டு ஒரு பீகார் சிறுவன் அரிவாளைக் தூக்கலாம். சிறுவயதானாலும், தன் மக்களின் அவலம் கண்டு ஆயுதம் தூக்கும் இவர்களிடம் கொலைவெறி வருவதில்லை. அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடும் விடுதலை உணர்வும் சமூகப் பற்றுமே ததும்பி நிற்கும். ஆனால் செலவழிக்கப் பணம் திருடும் மேட்டுக்குடிச் சிறுவர்கள் தான் கொடூரமாக கொலைகளைச் செய்கிறார்கள். இலட்சகணக்கிலும், கோடிக்கணக்கிலும் பரிசுத் தொகை கொண்டிருக்கும் பெரிய - சிறிய அழகுப் போட்டிகளில் வென்றவர் - தோற்றவர் மனநிலையும், குறுக்கு வழியில் முன்னேறத் துடிக்கும் ஒரு கிரிமினலின் மனநிலையும் ஒன்றுதான்.

தெருமுனையில் வித்தைக் காட்டும் கழைக்கூத்தாடி, தனது மகளுக்குப் பெண்கள் அணிவது போல மார்புக் கச்சையை அணிவித்து வேடிக்கை காட்டுகிறான். எவருக்கும் முதல் பார்வையிலேயே ஏனென்று விளக்காமலேயே இக்காட்சி கொடூரமாக இருக்கும். சிறுமியைக் கவர்ச்சிக் கன்னியாக உருவகப்படுத்தும் கழைக்கூத்தாடி, தனது வயிற்றுப்பாற்றுக்காக அப்படிச் செய்கிறான். அவளை வைத்துக் கோடம்பாக்கத்தையே ஒரு கலக்குக் கலக்கி கோடிசுவரனாக மாற வேண்டும் என்பதற்காக அல்ல. அந்தச் சிறுமிக்கும், ஆண்களை வீழ்த்தி, பிரபல நடிகையாக ஒரு சுற்று வரவேண்டும் என்ற கனவெல்லாம் கிடையாது. இரவு ஒரு வாய்க் கஞ்சி கிடைத்தால் பெரிய விசயம். ஆனால் தனது குழந்தைகள் மேடையில் ஆடை அவிழ்ப்பதையும், ஆபாச சினிமா நடனங்கள் ஆடுவதையும் கண்டு நடுத்தர வர்க்கம் பெருமிதம் கொள்கிறது. காரணம் அஸ்வர்யாராய்க் கனவுதான்.

பருவம் அடைந்த பெண்கள் ஒரு ஆணைக் கவருவதற்கான நடை, உடை, முகபாவனை, உடல் அளவு, காதல் குறித்த பொது அறிவு இவைதான் அனைத்து அழகுப் போட்டிகளுக்கும் அடிப்படை விதிகள். சிறுமிகளுக்கான போட்டியும் இதற்கு விதிவிலக்கு அல்ல - "ஆண்களைக் கவரும் கனவுக் கன்னி" என்ற ஒரு பாடலுக்கு ஆசியாவும், ப்ரூக்கியும் முகபாவனை செய்கிறார்கள்.

ஏற்கனவே இந்திய சமூகம் பெண் குழந்தைகளுக்கு நாணத்தையும், செப்பு வைத்துச் சமைப்பதையும், சிறுவயதிலேயே சேலை கட்டுவதிலிருந்து சமைப்பது வரை அனைத்து அடிமைத்தனங்களையும் நுணுக்கமாகக் கற்றுக் கொடுத்து வருகிறது. இப்போது மேற்கிலிருந்து வேறு வடிவில் அழகு, கவர்ச்சி, வியாபாரம், ஆதாயம் அனைத்தும் சுதந்திரமாய் வந்திருக்கிறது. தனது குழந்தையை சமூகத்திற்குப் பொறுப்புள்ள குடிமகனாய் வளர்க்க விரும்பும் பெற்றவர்கள் சிந்திக்கட்டும்.

- வேல்ராசன், புதியகலாச்சாரம்

4 comments:

Anonymous said...

சோதனை

Anonymous said...

நல்ல பதிவு.

Anonymous said...

"பெரிய சிறிய அழகுப் போட்டிகளில் வென்றவர் - தோற்றவர் மனநிலையும், குறுக்கு வழியில் முன்னேறத் துடிக்கும் ஒரு கிரிமினலின் மனநிலையும் ஒன்றுதான்."

மறுக்கமுடியாத உண்மை.

அசுரன் said...

//ஆனால் துப்பாக்கி ஏந்தும் ஈழத்துச் சிறுவனுக்கு அமைதிப்படையின் ஆறாத வடுக்கள் காரணமாக இருக்கலாம். தன் மக்களைக் கொன்று குவிக்கும் ரன்வீர் சேனாவின் கொடுமை கண்டு ஒரு பீகார் சிறுவன் அரிவாளைக் தூக்கலாம். சிறுவயதானாலும், தன் மக்களின் அவலம் கண்டு ஆயுதம் தூக்கும் இவர்களிடம் கொலைவெறி வருவதில்லை. அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடும் விடுதலை உணர்வும் சமூகப் பற்றுமே ததும்பி நிற்கும். //

//ஏற்கனவே இந்திய சமூகம் பெண் குழந்தைகளுக்கு நாணத்தையும், செப்பு வைத்துச் சமைப்பதையும், சிறுவயதிலேயே சேலை கட்டுவதிலிருந்து சமைப்பது வரை அனைத்து அடிமைத்தனங்களையும் நுணுக்கமாகக் கற்றுக் கொடுத்து வருகிறது. இப்போது மேற்கிலிருந்து வேறு வடிவில் அழகு, கவர்ச்சி, வியாபாரம், ஆதாயம் அனைத்தும் சுதந்திரமாய் வந்திருக்கிறது. //


உலகமயத்தில் பெண்களின் சுதந்திரம் என்பது இன்னொரு விதமான அடிமைத்தனமாகவே இருக்கிறது. எப்படி சாதி என்பது உலகமயத்தின் போக்கில் வேறு பரிமானங்களை அடைகிறதோ அப்படி. குழந்தை தொழிலாளர் முதல் வன்முறை வரை பல்வேறு விசயங்களை பொதுப் புத்தியிலிருந்து விமர்சனம் செய்யும் நடுத்தர வர்க்கத்திற்க்கு அவற்றை வர்க்க நிலைப்பாட்டிலிருந்து பார்க்க இந்த கட்டுரை கற்றுக் கொடுக்கிறது. கட்டுரையை மறுபிரசூரம் செய்தமைக்கு மிக்க நன்றி.

அசுரன்