Jan 28, 2009

மு.ப.எ.மாநாடு - தோழர் மருதையன் உரை - சில துளிகள்!

நன்றி : ஆழியூரான்

சொந்த ஊர் தஞ்சாவூர்தான் எனினும், தஞ்சாவூரில் நடைபெற்ற ம.க.இ.க. கலை இரவுகள் (கலை இரவுகள் இல்லை - தமிழ் மக்கள் இசை விழா - மகா) எதையும் நேரில் பார்த்ததில்லை. கல்லூரி முடிக்கும் வரைக்கும் அரசியல் அறிவு இல்லை என்பதாலும், அந்த அறிவு வந்தபோது ஊரை விட்டு புலம் பெயர்ந்துவிட்டதாலும் ம.க.இ.க. விழாக்களில் பங்கெடுக்க முடியவில்லை.

இந்நிலையில் ம.க.இ.க.வின் துணை அமைப்பான புரட்சிக்கர ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் சார்பாக கடந்த வாரம் அம்பத்தூரில் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. போயிருந்தேன்.

மருதையன் பேசினார்.

‘‘தகுதியில்லாத பலபேருக்கு நாட்டில் தகுதியற்ற பட்டங்கள் வழங்கப்படுகின்றன. புரட்சித் தலைவர், புரட்சிப் புயல், டாக்டர் சானியா மிர்சா... இப்படி. இந்த தவறு நடக்கக்கூடாது என்றுதான் நாட்டின் பெரு முதலாளிகளுக்கு நாங்கள் முதலாளித்துவ பயங்கரவாதிகள் என்று மிகப் பொருத்தமான பட்டத்தை வழங்கியிருக்கிறோம்.

அப்படியான பயங்கரவாதிகளில் ஒருவனான ராமலிங்க ராஜு, இப்போது ஆந்திர சிறையில் இருக்கிறார். உள்ளே சும்மாதானே இருக்கிறோம் என்று அவரும் ‘சத்திய சோதனை ரீ&மிக்ஸ்’ எழுதினாலும் எழுதக்கூடும்.’’ என்றவர், தொழிலாளர்கள் சங்கமாக ஒருங்கிணைய வேண்டியதன் அவசியம் குறித்துத் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்.‘‘சங்கம் கட்ட பல இடங்களுக்கும் போகும்போது, ‘வேலைப் போயிடும்’ என்று நம்ம ஆட்கள் நிறையபேருக்குப் பயம். சங்கம் அமைக்கலேன்னாலும் வேலையை விட்டுத் தூக்குறானே என்ன செய்யிறது? மொதலாளி சவுரியத்துக்கு வேலை போனா போகட்டும், நாம உரிமைக்காக போராடி வேலை போகக்கூடாதுன்னா என்ன நியாயம்?

எந்த மொதலாளியும் ‘தொழிலாளிக்கு வேலை கொடுக்கனும்’ என்ற நோக்கத்தில் தொழில் தொடங்குறதில்லை. அவனுக்குத் தேவை லாபம். போட்ட முதலை விட பல மடங்கு லாபம் வேணும். அவ்வளவுதான். அதனால் ‘எனக்கு வேலை கொடுத்த முதலாளியை எப்படி எதிர்க்க?’ன்னு நினைச்சா வேலைக்காகாது’’ என்ற மருதையன் சொன்ன செட்டியார் கதைதான் டாப்.

‘‘1950-60 களில் பர்மா தலைநகர் ரங்கூனில் ஏராளமான தமிழர்கள் இருந்தார்கள். அதில் வட்டிக்கு விட்டு துட்டுப் பார்த்த செட்டியாரும் ஒருவர். அப்போது ரங்கூன் நகரத்தின் துப்புரவு பணியை, மலம் அள்ளும் பணியை செய்தவர்கள், தமிழ்நாட்டிலிருந்து போன தலித்துகள்தான்.

திடீரென்று துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யத் தொடங்கினார்கள். இதனால் ரங்கூன் நகரமே நாறிப்போக ஆரம்பித்தது. அப்போது இருந்த ராணுவ ஆட்சியாளர்கள் வீட்டுக்கு வீடு சில பிளாஸ்டிக் பைகளை விநியோகித்து ‘நிலைமை சீராகும் வரைக்கும் இதில் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள். அரசாங்க வண்டிகள் வரும்போது அதில் பைகளைப் போட்டுவிடுங்கள்’ என்று உத்தரவிட்டனர்.

வேலை நிறுத்தம் தொடர்ந்துகொண்டே இருந்தது. தமிழர்கள் பலரும் நிலைமை சரியில்லை என்று தமிழ்நாட்டுக்கு மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு கிளம்ப தொடங்கினார்கள். அப்போதும் செட்டியாருக்கு தான் சேர்த்த வைத்திருக்கும் சொத்துக்களை விட்டுவிட்டு வர மனதில்லை.

ரங்கூன் ராணுவத்துக்கு செட்டியார் தெரியுமா..? தலித் தெரியுமா..? ‘தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் நம் ஊர் துப்புரவு பணியை செய்கிறார்கள்’ அவ்வளவுதான் அவன் கணக்கு. வேலை நிறுத்தம் செய்தவர்களை விட்டுவிட்டு, மற்ற தமிழர்களை வைத்து தொடர்ந்து துப்புரவுப் பணியைச் செய்யப்போகிறார்கள் என வதந்தி ஒன்று பரவ, பதறிப்போனார் செட்டியார்.

சொத்துபத்துக்கள் அனைத்தையும் அப்படியேப் போட்டுவிட்டு அடுத்தநாளே புறப்பட்டு தமிழ்நாட்டுக்கு ஓடிவந்தார்..... ...வேலை நிறுத்தம் என்று தொழிலாளர்கள் ஒன்றுபடும்போது முதலாளிகள் பணிந்துதான் ஆக வேண்டும். சென்னையின் முடி திருத்தும் தொழிலாளர்கள் அத்தனை பேரும் வேலை நிறுத்தம் செய்கிறார்கள் என வையுங்கள். என்ன செய்ய முடியும் அரசால்? எல்லா கடையிலும் ராணுவம் வந்து கட்டிங், சேவிங் செய்யுமா..?’’ என்றார். இரண்டு மணி நேரம் அவர் பேசி முடியும் வரைக்கும் கூட்டம் இம்மியும் அசையவில்லை.

from
http://nadaivandi.blogspot.com/2009/01/blog-post_28.html

1 comment:

Anonymous said...

நன்றி