Apr 2, 2007

உனக்கும் எனக்கும் - கவிதை


அவசர அவசியமாய் தின்று
ஓடியாடி உழைத்து
உடல் களைத்துப் போகையில்
இரவு உனக்காய் படுக்கை விரித்துவிடும்.
பதினைந்து நாட்களிலேயே
பற்றாக்குறை கடன்களை பெற்றெடுக்கும்.

பொய்கள் சொல்லி பொருட்கள் விற்று
ஆசை ஆசையாய் வாங்கி ஏமாந்து
சக மனிதன் மீது நம்பிக்கை இழக்கையில்
உள்ளம் கனத்துப் போகும்.

காதலாய் பழகியவர்களிடம் நட்பை வலுப்படுத்தி
நட்பாய் பழகியவர்களிடம் காதலை வெளிப்படுத்தி
இறுதியில்
முகமறியா நபருடன் வாழ்க்கை பயணிக்கும்.

ஓடுகிற ஓட்டத்தில்
ஆபூர்வமாய் திரும்பி பார்க்கையில்
வெறுமை நிலவி கண்கள் பனிக்கும்.

உனக்கும் எனக்கும் வித்தியாசமில்லை.

நீ ஏழு வயதில்
கண்ணாடி அணிந்திருப்பாய்.
நான் இருபத்தேழு வயதில்.

உன் அப்பா ஆலையிலிருந்து
ஏழு நாட்களுக்கு முன்
வெளியேற்றப்பட்டிருப்பார்.
என் அப்பா
ஏழு ஆண்டுகளுக்குமுன்.

உனக்கும் எனக்கும் வித்தியாசம்
உருவத்தில் மட்டுமே!
உள்ளடக்கத்தில் ஒன்றாய்.

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
உன் கனவில் கவிபாரதி வந்திருப்பான்,
வேறு வார்த்தைகள் கொண்டு
என் கனவில் பாரதிதாசன்.

ஆளுக்கொரு சாதி சொல்லி
தனித்தனியாய் கனவுகள் கண்டு
இத்தனை காலம்
சிங்கங்களுக்கும் நரிகளுக்கும்
இரையாகிப்போனோம்.

கரங்களை ஒண்றிணைப்போம்.
கனவுகளுக்கு ஆக்கம் கொடுப்போம்.
பணிவதைவிட நிமிர்வது உயர்வானது.

- சாக்ரடீஸ்

4 comments:

லக்ஷ்மி said...

ரொம்பவே நல்லா இருக்கு மகா.

கதிரவன் said...

http://socratesjr2007.blogspot.com/லும் இந்தக்கவிதையைப் பார்த்தேனே.. இங்குள்ள மேலும் சில கவிதைகளும் அங்கேயுமிருக்குதே. அதுவும் உங்கள் வலைப்பூ தானா ?

அமிர்தா said...

//http://socratesjr2007.blogspot.com/லும்...அதுவும் உங்கள் வலைப்பூ தானா ? //

சாக்ரடீஸ் எனது நண்பர். தொடக்கத்தில் வலையில் இருவரும் புதியவர்கள் என்பதால் வலைப்பூவை இருவருமே இயக்கினோம். இப்பொழுது, நண்பர் தனிக்குடித்தனம்(பிளாக்) துவங்கிவிட்டார்.

வாசித்துப் போனதற்கு நன்றி. கதிரவன். லட்சுமி அவர்களுக்கும் நன்றி.

Unknown said...

மகா கனமான கவிதை எளிமையான் நடையில் அசத்துறீங்கப் போங்க...