May 31, 2007

சிவாஜி - The Boss! - பராக்! பராக்!



சிவாஜி - The Boss!

சொல்லும்பொழுதே அதிருதுல்ல!


'யோக்கியன் வர்றான்
செம்பெடுத்து உள்ளே வையுங்க!'

ரூ 200, 300 என அசந்தால்
உங்கள் பையிலிருந்து
அபகரித்துக்கொள்வான்.

அன்பானவன்
ஏழை ரசிக கண்மணிகளிடம் கூட
ரூ 500, 600 - அன்பாய்
சுட்டுவிடுவான்

வித்தியாசமானவன்
தாத்தா ஆனபிறகும்
இளம் நாயகிகளோடு
கொஞ்சி திரிபவன்

ரஜினி ஒரு செமி
ஷங்கர் ஒரு செமி - நிச்சயமாய்
படம் வரும் முழுசாய்

மூளையை கழட்டி வைத்து
காத்திருங்கள்
விரைவில் வருகிறான்
திரையரங்குகளில்

- நன்றி - குருத்து பிளாக்கிலிருந்து

கட்டாய ஹெல்மெட் - சில கேள்விகள்



மகன், மகள்
பேரன், பேத்திகளுக்கு அப்பால்
'மக்கள்' உயிரின் மீதும் கரிசனம்
நம் மாண்புமிகு முதல்வருக்கு.

ஹெல்மெட் முதலாளிகள்
முடியில்லாத தலைக்கு
வைரம் பதித்த
தங்க ஹெல்மெட் தந்திருப்பார்களோ!

விசுவாசமான காவல்துறைக்கு
'புதிய போனசு'
அறிவிப்போ?

'வாக்கு வங்கி'
வாழ்ந்தால்தான்
நாமும், நம் சந்ததியினரும்
வாழமுடியும் என்ற
தொலைதூர சிந்தனையோ?


- நன்றி - குருத்து பிளாக்கிலிருந்து

May 27, 2007

பால் வெள்ளைக் காகிதம் - குட்டிக்கதை

காலைப் பனிப்போல் தூய்மையாக இருந்த ஒரு வெள்ளைக் காகிதம் 'நான் ரொம்ப சுத்தமானவனாக்கும்' என்று அலட்டிக்கொண்டது.

'நான் பிறக்கும்பொழுதே தூய்மையாகப் பிறந்தேன். காலம் முழுவதும், நான் நான் இவ்வாறே தூய்மையாக இருப்பேன்; என்னை எரித்துச் சாம்பலாக்கினாலும் பரவாயில்லை, பொறுத்துக் கொள்வேன். ஆனால் கறுமையின் இருள் கைகள் என்னைத் தொட அனுமதிக்கமாட்டேன், தூய்மையற்றவர்கள் யாரும் என் பக்கத்தில்கூட வரமுடியாது'.

இந்தப் பேச்சைக் கேட்ட மைப்புட்டி, குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது. அந்தக் காகிதத்தின் பக்கத்திலேயே செல்வதில்லை என்று முடிவுகட்டிக் கொண்டது.

பல வண்ண பென்சில்களும் இதைக் கேட்டன. அவையும், அந்தக் காகிதத்தை நெருங்கவில்லை.

ஆகவே, அந்த பால் வெள்ளைக் காகிதம், அதன் ஆசைப்படி, என்றென்றும் தூய்மையோடும், கற்போடும் வாழ்ந்தது.

வெறுமையாகவும்.

- கலீல் ஜிப்ரான் - மிட்டாய் கதைகளிலிருந்து

May 24, 2007

வாழ்க்கை - கவிதை


பரமபதமாகி விட்டது
வாழ்க்கை

கவனமாய்
மெல்ல மெல்ல
நகர்கிறேன்

கிடைத்த சிறு ஏணியில்
உற்சாகமாய்
மேலே ஏறுகிறேன்

நகரும் பாதையில்
ஏணியை விட
பெரிய பாம்பு கொத்தி
துவங்கிய புள்ளியிலேயே
துவண்டு விழுகிறேன்

வயதுகள் கடக்கின்றன
பொறுப்புகள் பெருகுகின்றன
சுமைகள் அழுத்துகின்றன

மீண்டும் நகர்கிறேன்
நம்பிக்கையுடன்

தூரத்தில் சில
ஏணிகள் தென்படுகின்றன

தெரிந்தும் வசதியாய்
மறந்துவிடுகிறேன்
தூரத்தில் தெரியும்
ஏணியைவிட பெரிதான
சில பாம்புகளை

May 23, 2007

கருணாநிதி சொந்த பந்தங்கள் பட்டியல் - வரைபடம்


மதுரை தினகரன் அலுவலகம் சமீபத்தில் அழகிரியால் தாக்கப்பட்ட பொழுது, என்னிடம் என் அம்மா 'கருணாநிதி குடும்பத்தில், யார்? யார்?' எனக் கேட்ட பொழுது, வரிசைக்கிரமமாக சொல்வதில் நிறைய குழப்பம்.

அந்த பெரிய குடும்பத்தின் சொந்த பந்தங்களை எளிய முறையில் புரியும்படி வரைபடம் போட்டு, இன்றைக்கு என் நண்பர் மெயிலில் அனுப்பி இருந்தார்.

தமிழகத்தையே, இப்பொழுது இந்தியாவையும் ஆட்டி படைக்கும் ஒரு குடும்பம் பற்றி அனைவரும் அறிய வேண்டும் அல்லவா! அதனால் உங்கள் பார்வைக்கும்.

பின்குறிப்பு : இதுபோக இன்னும் இந்த குடும்பத்தில் சில குடும்பங்கள் இருக்கலாம். அதுபற்றி எதும் தகவல்கள் தெரிந்தாலும், தயவு செய்து உலகத்திற்கு சொல்ல வேண்டாம். இருக்கிற வாரிசுகளின் தொல்லையே தாங்க முடியவில்லை.

வரைபடம் தெளிவாக பார்க்க - படத்தின் மீது, ஒரு 'க்ளிக்' செய்யுங்கள்.

நன்றி - குருத்து - socratesjr2007@blogspot.com

May 21, 2007

நீ வருவாய் என - கவிதை

சத்தங்களை வடிகட்டி
நுட்பமாய்
உன் கொலுசு இசையை
பதிவு செய்திருக்கின்றன
என் காதுகள்.

சலனங்களைத் தவிர்த்து
கவனமாய்
உன் ஒவ்வொரு அசைவையும்
படம் பிடித்திருக்கின்றன
என் கண்கள்.

உன் மெளனத்தைக்கூட
மொழி பெயர்க்க
கற்றிருக்கிறது
என் மனசு.

நீயில்லாத நாள்களால்
வெற்றுத்தாள்களாய்
நகருகிறது
என் நாட்குறிப்பு.

கனவுகளில் மட்டும்
தாலாட்டிப் போகிறாய்.

முளரி மொட்டு
என் கவிதைகள்
பால் நிலா
நாட்குறிப்பு - எல்லாம்
என்னோடு
உன் வருகைக்காக
காத்திருக்கின்றன.

எப்பொழுது வருகிறாய்
இங்கு
நிஜத்தில் நீ

- சாக்ரடீஸ்.

May 16, 2007

தேவையில்லாத தாலியும், உருப்படியான தகவல்களும் - கட்டுரை



தாலி - என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை.

நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளிலிருந்து (சங்க இலக்கியம், சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.

தமிழர் திருமணத்தில் தாலி உண்டா இல்லையா என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954-ல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இதைத் தொடங்கி வைத்தவர் கண்ணதாசன். தாலி தமிழர்களின் தொல் அடையாளம்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் ம.பொ.சி மட்டுமே!

'கி.பி. 10-ம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலிப் பேச்சே கிடையாது' - வரலாற்று ஆய்வறிஞர் அப்பாத்துரையார்.

'பழந்தமிழர்களிடத்தில் தாலி வழக்கு இல்லவே இல்லை' - பெரும்புலவர் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனார்.

கி.பி. 7-ம் நூற்றாண்டில் திருமண சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பேச்சே கிடையாது.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதைபொருள்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை.

கி.பி. 10ம் நூற்றாண்டிற்கு பிறகே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாக கொள்ளலாம்.

இந்திய சிந்தனையாளர்களில் தந்தை பெரியார்தான் முதன்முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும், எழுதவும் துவங்கினார். அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின.

பின்னர், 1968-ல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லா திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது.

- தொ. பரமசிவன், தமிழ்துறைத் தலைவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம்,
எழுதிய பண்பாட்டு அசைவுகள் புத்தகத்திலிருந்து.

கனா - கவிதை

தேவைகளின் சுழிப்பில்
சிக்கி சுழல்கிறேன்

நல்லெண்ணங்களின் வனப்பில்
சொக்கி கிடக்கிறேன்

கனவுகளின் பள்ளதாக்குகளில்
வீழ்ந்து
வானம் வெறிக்கிறேன்

முடிவுகளின் தயக்கத்தில்
கலங்கிய குட்டையாகிறேன்

குடித்து குடித்து
வயிறு புடைத்து
விரும்பி நகர்கிறேன்
சவக்குழி நோக்கி

திடுக்கிட்டு
விழித்துப் பார்க்கிறேன்
'நிஜத்திலும் அப்படியே!'

- சாக்ரடீஸ்

May 10, 2007

திருமணம் - சிறுகதை/கவிதை

திருமணம்

இளம் மாலைப்பொழுது
குழந்தைக்ளோடு குழந்தையாய் மாறி
விளையாடிக் கொண்டிருந்தாள்
அவள்.
நண்பன் அறிமுகப்படுத்தினான்.

மூன்று வருடங்களில்...
ஆரோக்கியமாய் இடைவெளி நிர்வகித்து
மனதில் நெருங்கினோம்.
நிறையவற்றில் ஒன்றுபட்டோம்
கருத்து வேறுபாடுகள் எழுந்த பொழுது
களைந்து கொண்டோம்.

எனக்கு பெண்ணும்
அவளுக்கு மாப்பிள்ளையுமாய்
அவரவர் வீட்டில்
வலைவீசிக் கொண்டிருந்தார்கள்
இருவரில் யார் கேட்டிருந்தாலும்
மற்றவர் மறுத்திருக்க மாட்டோம்
ஆனால் மெளனம் காத்தோம்.

'இந்த பெண் எப்படி?'
அம்மாதான் ஆரம்பித்தாள்
படம் பார்க்காமலேயே...
'முகம், மனம்
அறியா பெண்ணுடன் எப்படியம்மா?' என்றேன்.
அதெல்லாம் சொல்லாதே! ஊர் வாழலை?
இந்த நொண்டி சாக்கெல்லாம் வேண்டாம்.

அவளை அறிந்திருந்ததால்
'வேறு சாதிப்பெண்ணை
திருமணம் செய்யலாம் என
கனவில்கூட நினையாதே
சாதி சனம் எல்லாம் எச்சில் துப்பிவிடும்
என் உயிர் போய்விடும் - என்றாள்.
தொடர்ந்து புலம்பினாள்.

சுற்றம் மொத்தமாய்
என்மேல் விழுந்து
மூட்டை மூட்டையாய்
அறிவுரைகளை வைத்தார்கள்
மீண்டும் மெளனமானேன்
திருமணம் நடந்தேறியது.

முதல்நாள் இரவில்
இருவரும் அறிமுகமாகி
ஏதோ மனதில் நெருட
சுற்றிலும் இருள் படர்ந்தது.

வந்த நாட்களில்
அம்மாவின் பழமையும்
அவளின் நடைமுறையும்
கடுமையாய் மோதிக்கொள்ள
நடுவில் நான்.
நான்கே மாதங்களில்
தனிக்குடித்தனம்.

கனவுகளைத் தவிர்த்து
மண்ணில் அழுந்த நடப்பவன்
நான்
கனவுகளில் வாழ்ந்து
அபூர்வமாய்
தரைக்கு இறங்கி வருகிறவள்
அவள்.

ரசனை, நுகர்வு
அனைத்திலும்
எதிரும், புதிருமாய்.

இரண்டு மனதும்
இரண்டு உடலும்
இணைந்தால் தான்
'மழலை' என்றில்லையே!
பனிப்போர் தொடரும் வேளையில்
மண்ணில் வந்திருங்கினான்.

துடுப்பும், படகுமாய்
ஒரு திசை வழி செல்ல வேண்டியவர்கள்
வெவ்வேறு இலக்கு பயணப்படும்
இரூ படகுகளாய் நாங்கள்

சரியாய் இரண்டு வருடங்கள்
இருவரும் முடிவெடுத்தோம்
இனி இணைந்து வாழ்வது அபத்தம்
பிரிந்துவிடுவோம்.

உன் கனவுகளின் வாழ்க்கைக்கு
மழலை தடையாய் இருப்பான் - என்றேன்
சிறிது யோசித்து புன்னகையுடன்
வைத்துக்கொள் - என்றாள்

இடைக்காலங்களில்
'என் வாழ்க்கை
நோயின் தீவிரம்' இரண்டும்
அம்மாவின் உயிரை
சரிபாதியாய் எடுத்துக்கொண்டன.

இப்பொழுது அனாதையாய்
நானும், எனது மகனும்
ஒரு துருவத்தில்.
அவள் ஒரு துருவத்தில்
சுற்றம் அனைத்தும்
'ச்சூ! ச்சூ!' என
நாயை அழைத்தார்கள்

அவள்மீது எனக்கு துளியும்
வருத்தமில்லை
என் கோபம் அனைத்தும்
என் மெளனங்களின் மீதும்,
என் தாயின் சாதியப்பிடிப்பின் மீதும்.

இன்று
வாழ்க்கை மரத்தின்கீழ்
ஞானோதயம் பிறக்கிறது
அன்று
நல்ல மகனாய் இருந்திருப்பதைவிட
சுய சிந்தனை கொண்ட
நல்ல மனிதனாய் இருந்திருக்கலாம்

- சாக்ரடீஸ்

May 9, 2007

நானும் நீயும் - கவிதை

நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்
நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்.
அடக்கமாக எனக்குப் பின்னால்
நின்று கொண்டிருப்பாய் நீ.

உன் இனத்துக் கற்புக்கரசிகளைச் சொல்லி
உன்னை மிரட்டுவேன் நான்
என் இனத்து அயோக்கியர்களின் பட்டியல்
தெரிந்தும்
அமைதியாக இருப்பாய் நீ.

நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலொழிய
சொல்லிக் கொள்வதில்லை நான்
நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து
பறைசாற்றியாக வேண்டும் நீ.

எனக்குப் பிறகு என் நினைவுகளோடு
வாழ வைக்கிறார்கள் உன்னை
உனக்குப் பிறகு உன் தங்கையோடு
வாழவைக்கிறார்கள் என்னை.

- செயபாசுகரன்

May 8, 2007

சுதந்திரம் இன்னும் தொலைவில் இல்லை - கவிதை

பொய்களின் கைப்பிடித்து
நெடுந்தொலைவு
வந்துவிட்டோம்.

ஒவ்வொரு மைல்கல்லிலும்
சுமைகளென
நம் செல்வங்கள்
அனைத்தையும்
இறக்கி வைத்துவிட்டோம்.

இலவசமாய் கிடைத்ததென
ப்ல வண்ணப் பந்தல்களில்
நிறைய மூடநம்பிக்கைகளை வாங்கி
வயிறு முட்ட குடித்துவிட்டோம்.

பொய்கள்
கொழுத்துப்போய்விட்டன.
நாம் நிறைய
இளைத்து போய்விட்டோம்.

பொய்கள் அழைத்து செல்வது
மகிழ்ச்சியின் தேசத்திற்கு அல்ல!
மரணக்குழிக்குத்தான்!
உண்மை எச்சரித்துக்கொண்டே
உடன் வருகிறது.

பொய்கள் இதுவரை
உண்மையின் ஆடைகளை
உடுத்தியிருந்தன.

இப்பொழுது
தன் மூகமூடிகள்
உண்மையின் ஆடைகள்
எல்லாவற்றையும் களைந்தெறிந்து
தன்னை எவர் ஜெயிக்கமுடியும்
கோரப்பற்களைக் காட்டி
எக்காளச் சிரிப்புடன்
உண்மையைப் பார்த்து
கேலி செய்கிறது.

சாவின் விளிம்பிற்கு
வந்துவிட்டோம்.
இப்பொழுதாவது
உண்மையின் கைப்பிடிப்போம்.
கரங்களை ஒன்றிணைப்போம்.

உற்றுப்பாருங்கள்
சாவின் முகத்தில்
சவக்களை.

சுதந்திரம்... இன்னும்
தொலைவில் இல்லை

பெருநகர பயணம் - கவிதை


விரைவாய் அதிவிரைவாய்
எல்லா வாகனங்களும்
முகத்தில் புகையைத் துப்பி
முன்னேறி செல்கின்றன.

பச்சைசிக்னல் விழுவதற்கு முன்
விர்ரெனப் பறக்கின்றன.
சிவப்புசிக்னல் விழுந்தபின்பு - இன்னும்
விரைவாய் பறக்கின்றன.

ஓட்டுகிற முகங்களில்
இறுக்கம் நிலவுகின்றன.

எல்லா வாகனங்களிலும்
கோரமான கீறல்கள்
கண்ணை உறுத்துகின்றன.

பயணிக்கையில்தான்
எல்லா கவலைகளும்
மேலெழும்புகின்றன.

பயணச் சாவுகளை
தினமும்
செய்திகள் தெரிவிக்கின்றன.

உயில் எழுதவேண்டும்
விரைவில்.
யாருக்கு எவ்வளவு தரவேண்டும்?
பட்டியல் தயாரிக்க வேண்டும்
தர யாருமில்லை! - இருப்பினும்
நாணயஸ்தனாய் சாகவேண்டும்.


காலை 11.45 மணி - 29.03.2007.