Nov 18, 2015

நீதிமன்றத் தீர்ப்பை வழக்கறிஞர்களே விமர்சிக்கலாமா? - பதில்

வழக்கறிஞர் போராட்டத்தை அவதூறு செய்பவர்களுக்குப் பதில்! – 3

நீதிமன்றத் தீர்ப்பை வழக்கறிஞர்களே விமர்சிக்கலாமா?

நீதிமன்றத் தீர்ப்பை யாரும் விமர்சிக்கக் கூடாது என்பதே தவறான கருத்து. இப்படி ஒரு கருத்தை ஊடகங்களும் ஊழல் அரசியல்வாதிகளும் மக்களிடம் பரப்பி விட்டனர். ஊழல் குற்றச்சாட்டு பற்றி கேள்வி கேட்டால், “பிரச்சனை நீதிமன்றத்தில் இருக்கிறது. அதனால் நான் கருத்து சொல்லக்கூடாது” என்று சமாளிப்பார்கள். தண்டனை விதித்து தீர்ப்பு வந்துவிட்டால் “தீர்ப்பை பற்றி விமர்சிக்க கூடாது. நான் மேல்முறையீடு செய்யப்போகிறேன்” என்பார்கள்.
ஹெல்மெட் பிரச்சினையை விவாதிக்கும் ஊடக அறிவுக்கொழுந்துகளோ, “அதெப்படி வக்கீலாக இருந்துகொண்டு நீங்கள் தீர்ப்பை விமர்சிக்கலாம்” என்று சொல்லி கேட்கிறார்கள். “நாலும் மூணும் எட்டு” என்று குமாரசாமி போட்ட கூட்டல் கணக்கும், “பத்து சதவீதம் ஊழல் செய்யலாம்” என்று அவரது தீர்ப்பு வழங்கிய அனுமதியும் விமர்சனத்துக்கு உள்ளாகவில்லையா? தீர்ப்பை எல்லோரும் விமர்சிக்கலாம். சட்டம் தெரிந்த வழக்கறிஞர்கள்தான் தீர்ப்பைக் கூர்மையாக விமர்சிக்க முடியும். எனவே அவர்கள்தான் முதலில் விமர்சிக்க வேண்டும்.

தீர்ப்பு வழங்கப்பட்ட பின் அதன் அமலாக்கத்துக்கு நிர்வாக எந்திரம்தான் பொறுப்பு. ஒவ்வொரு தீர்ப்பும் அமலாகிறதா என்று நீதிமன்றம் கண்காணிப்பதில்லை. ஆனால் ஹெல்மட் தீர்ப்பின் அமலாக்கத்தை நீதிபதி கண்காணிக்கிறார். எத்தனை வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன என்று நீதிமன்றத்தில் புள்ளி விவரம் கொடுக்கிறது போலீசு. ஹெல்மெட் தீர்ப்பைக் கண்காணிக்கும் நீதிமன்றம், சட்ட விரோத டாஸ்மாக் கடைகளை அகற்றுமாறு தான் அளித்த தீர்ப்புகள் அமலாகியிருக்கிறதா என்பதைக் கண்காணித்து அகற்றியிருந்தால், சசிபெருமாள் இறந்திருக்க தேவையில்லையே! இது விமர்சனத்துக்குரியது இல்லையா?

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அருந்ததிராய்க்கு உச்சநீதிமன்றம் ஒரு நாள் சிறைத்தண்டனை விதித்த போது, “இந்த அரசமைப்பில் எஞ்சியிருக்கும் கடைசிப் புனிதப் பசுவான நீதித்துறையின் அச்சுறுத்தலை எதிர்த்து நாம் அனைவரும் பேச வேண்டும். நீதிமன்றத்தை இழிவுபடுத்திய குற்றத்துக்காக எல்லோரையும் சிறைக்கு அனுப்பட்டும்” என்று நீதிமன்றத்தை சாடினார் மறைந்த அவுட்லுக் பத்திரிக்கை ஆசிரியர் வினோத் மேத்தா.


தெல்லாம் இருக்கட்டும். இலக்கியமோ, திரைப்படங்களோ விமரிசனத்தை எதிர்கொண்டுதானே வளர்கின்றன். மக்கள் நம்பிக் கொண்டிருந்த சாதி ஆதிக்கம் முதல் புராணக் கதைகள் வரையிலான அனைத்தையும் அம்பேதக்ரும் பெரியாரும் விமரிசனத்துக்கு உள்ளாக்கவில்லையா? அவர்களைத் தாக்கினார்கள். எங்கள் மத உணர்வு புண்படுகிறது என்று வழக்கு தொடுத்தார்கள். இவற்றுக்கெல்லாம் அஞ்சாமல் அவர்கள் விமரிசித்த காரணத்தினால்தான், அடிமைத்தனத்துக்கு எதிரான விழிப்புணர்வு வந்தது.

ஒரு தீர்ப்பை விமர்சிப்பது என்பதன் பொருள் நீதிபதிகளின் கருத்தை மட்டுமல்ல, நீதிபதிகளையும் மக்களின் கண்காணிப்புக்கு உட்படுத்துவது என்பதாகும். அத்தகைய கண்காணிப்பும் கடுமையான விமரினமும் இல்லாத காரணத்தினால்தான், கிரானைட், தாதுமணல், ஆற்றுமணல் கொள்ளையர்களுக்கு ஆதரவான தீர்ப்புகளை துணிச்சலாக நீதிபதிகள் வழங்க முடிந்திருக்கிறது. விமர்சனத்தின் மூலம் நீதிபதிகளின் இந்தத் ”துணிச்சலை” நாம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

- ”அடிமைகள் அல்ல வழக்கறிஞர்கள்!” –  
 மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு வெளியிட்ட சிறு வெளியீட்டிலிருந்து....

No comments: