உறவினர் ஒருவர்
சிங்கப்பூர் நிறுவனத்தில் முதன்மை கண்காணிப்பாளராக (Chief Supervisor) சில ஆண்டுகளாக
பணிபுரிகிறார். சென்னையை விட பல மடங்கு பரபரப்பான
ஊர் சிங்கப்பூர். அவருக்கான வேலை கூட பத்து
மணி நேரத்திற்கும் மேலே! அவருக்கு கீழே பல
பணியாளர்களை கண்காணிக்கிற வேலை! எல்லாமும்
சேர்ந்து ஒரு நாள் காலையில், வேலைக்கு கிளம்பும் பொழுது, மயங்கிவிழுகிறார். நினைவு திரும்பும் பொழுது, தன் துணைவியாரையே அடையாளம்
தெரியவில்லை. சிங்கப்பூரில் தங்க வைக்க அனுமதி,
படிக்க வைக்க, பராமரிக்க என எல்லா சிரமங்களும் சேர்ந்து, அவருடைய எட்டு வயது பையனை
தாத்தா பாட்டி தான் வளர்த்து வருகிறார்கள்.
சட்டென தனது பையன் நினைவுக்கு வந்து, ஊருக்கு போய் உடனே பார்க்கவேண்டும் என
பரபரக்கிறார். பிள்ளையை பிரிந்து இருக்கும்
ஏக்கம் நினைவு அடுக்குகளில் இருந்து மேலே வந்துவிட்டது!
மருத்துவமனையில்
சேர்த்து சில நாட்கள் இருந்தார். ஊரில் இருக்கும்
பரபரப்பு சிங்கப்பூர் மருத்துவத்தில் இல்லை. விமான பயணத்தில் ஏதும் பயமில்லை என மருத்துவரின்
ஆலோசனை பெற்று சென்னைக்கு கடந்த ஞாயிறு வந்து சேர்ந்தார். மருத்துவர் சத்யாவிடம் இந்த பிரச்சனை குறித்து ஆலோசனை
கேட்டதற்கு, சென்னை பொது மருத்துவமனை, வேலூரி சிஎம்சி, பாண்டிச்சேரி ஜிப்மர் என பரிந்துரைத்தார். உறவினரின் நண்பர்களோ அப்பல்லோவை பரிந்துரைத்து, சேர்த்து நேற்றுவரை அங்குதான்
இருந்தார்.
ஒருநாள் மருத்துவர்
நயந்தாரா புகைப்படத்தை காட்டி யாரென கேட்கும் பொழுது, “இவளை நல்லா தெரியுமே! ரெம்ப
பிடிக்குமே!” என சொல்கிறார். ஆனால் பெயர் நினைவுக்கு வரவில்லை. அடுத்தநாள், டி.ராஜேந்தர்
புகைப்படத்தை காண்பிக்கும் பொழுது, “டி.ராஜேந்தர்” என நொடி கூட தாமதிக்காமல் சொல்லிவிடுகிறார்.
என்ன ஒரு சோகம் இது! நயந்தரா பெயர் மறந்துவிடுகிறது! டி.ராஜேந்தர் பெயர் நினைவில் நிற்கிறது.
பல விசயங்களையும்,
செய்திகளையும் சொல்லி அவரிடம் நிறைய விவாதிக்கவேண்டும் என மருத்துவர் ஆலோசனை சொல்லியிருக்கிறார்.
அவரின் இயல்போ பேசுவதை விட, செயல்படுவதில் தான் ஆர்வமாய் உள்ளவர். முரண் தான்!
நினைவுகள் தான்
வாழ்க்கை. நினைவுகள் மூளையில் ஒரு மூளையில்
ஒளிந்து கொள்கிற பொழுதோ, தொலைந்து போகிற பொழுதோ, முதலில் இருந்து துவங்க வேண்டுமோ?!
-
- குருத்து
No comments:
Post a Comment