Jan 28, 2016

காந்தி தப்பித்துவிட்டார்!

இன்றைய தமிழ் இந்து நாளிதழில் கட்டுரையாளர் சமஸ் சாதிய விசயத்தில் காநதியின் நடத்தை குறித்து நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறார்.  இதற்கு சரியான எதிர்வினைகளை இடதுசாரி தரப்பிலிருந்து யாராவது அழுத்தமாக எழுதுவார்கள் என எதிர்பார்க்கிறேன்!

இந்த கட்டுரையைப் படித்து தோழர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது ”காந்தி” சம்பந்தமாக சமீபத்திய ஒரு காவல் நிலையம்  தொடர்பான சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார்!

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்கள் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன. இடையில்  காந்தியவாதி சசிபெருமாள் மரணத்திற்கு பிறகு, பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் கடையை நொறுக்கியதும், தமிழ்நாடு தழுவிய அளவில் கடைகளை தன்னெழுச்சியாகவும், அமைப்பு ரீதியாகவும் பலரும் கடையை அடித்து நொறுக்கினார்கள்.  அதில் மக்கள் அதிகாரம் தோழர்கள் முன்னணியில் நின்றார்கள் என்பது அனைவரும் அறிந்த விசயம். வருகிற பிப்ரவரியில் கூட டாஸ்மாக்கை எதிர்த்து திருச்சியில் சிறப்பு மாநாடு வேலைகளில் பரபரவென இருக்கிறார்கள்.

இதன் தொடர்ச்சியில், தென் தமிழகத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஒரு பகுதியில் மக்கள் மத்தியில் தொடர்ந்து டாஸ்மாக் எதிர்ப்பு பிரச்சாரம், கடையில் சாணியடிப்பது, கடையை நொறுக்குவது என போய்க்கொண்டிருந்த பொழுது, போலீசு இரண்டு தோழர்களை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளது.  தொடர்ந்து குடைச்சல் தருகிறார்களே என்ற கடுப்பில், ”நம்ம நீதியரசர்கள்” பாணியில் காந்தியின் அகிம்சை குறித்து தங்களுக்கு தெரிந்த அரைகுறை விசயங்களுடன் தோழருக்கு ”போதித்திருக்கிறார்கள்”. அதிகபட்சமாக போய், காந்தி குறித்து இரண்டு பக்க அளவில் எழுதி தர கேட்டிருக்கிறார்கள். (மனசில ஆழப்பதியனுமாம்!)   ”காந்தி பற்றி எழுதி கேட்பதற்கெல்லாம் உங்களுக்கு உரிமையில்லை. இருப்பினும் நீங்கள் ”மிகவும் விருப்பப்பட்டு” கேட்பதால் எழுதி தருகிறோம்.  அதற்கு பிறகு மனம் புண்பட்டுவிட்டது என சொல்லக்கூடாது!” என பதிலளித்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் வழக்குரைஞர் வந்துவிட, பேச்சு வேறு திசையில் திரும்பிவிட்டது. தோழர்களிடமிருந்து ”காந்தி தப்பிவிட்டார்”. :)

No comments: