Aug 30, 2015

குடி கெடுக்கும் டாஸ்மாக்கை உடைத்தவர்களுக்கு முன்பணத்துடன் பிணை!

டாஸ்மாக் எதிர்ப்பு மக்கள் போராட்டங்களுக்கு நாம் நடத்திய சட்டப் போராட்டத்தில்….

முன்பணம் கட்டினால் பிணை!

குடி கெடுக்கும் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டும், அடித்து நொறுக்கிய விருத்தாச்சலம் பகுதி வாழ்மக்களுக்கும், மக்கள் அதிகாரம் அமைப்பை சார்ந்த மக்களுக்கும், கோவை பகுதியை சேர்ந்த மக்கள் அதிகாரம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களுக்கும் தலைக்கு ரூ. 5000 எனவும், ஒரு வழக்கில் அடித்து நொறுக்கிய சரக்கு மதிப்பில் 50% என முன்பணம் கட்ட சொல்லி, பிணை தந்திருக்கிறது சென்னை உயர்நீதி மன்றம்!

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரான தோழர் இராஜூ மீது பல பொய் கேசுகளை போட்டு, தடுப்பு காவல் சட்டமான குண்டாஸ் வழக்கில் போட முனைந்தனர். நாம் நீதிமன்றத்தில், மணல் மாபியாக்கள், கல்வி மாபியாக்களை எதிர்த்து போராடியதால், பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என வாதாடி, குண்டாஸ் வழக்கு போட விடாமல் தடுத்தோம். இப்பொழுது அவருக்கும் பிணை கிடைத்திருக்கிறது!

டாஸ்மாக் சரக்கு பொது சொத்தாம். அதை சேதப்படுத்தியற்கு அபராதம் விதித்திருக்கிறார்கள். டாஸ்மாக் போராட்டங்களை நசுக்க தான், அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளை நியாயப்படுத்துகிற விதத்தில் நீதிமன்றமும் தன் பங்குக்கு முன்பணம் கட்ட சொல்லி உத்தரவிடுகிறது அதிமுக ஆட்சியில் இருக்கும் பொழுதே, ஜெ. சொத்துக்குவிப்பில் சிறை தண்டனை என தீர்ப்பு வந்த பொழுது, அதிமுக காலிகள் எல்லாவிதமான காலித்தனங்களில் ஈடுபட்டார்கள். அவர்கள் மீதெல்லாம் ஒப்புக்காவது முதல் தகவல் அறிக்கை பதிந்தார்களா? பேருந்து மற்ற பொதுச்சொத்துக்களை கொளுத்தியதற்காக அபராதம் தான் விதித்தார்களா? அதிமுக காலிகள் கலவரம் செய்து கொண்டிருந்த பொழுது, சட்ட ஒழுங்கை உறுதிப்படுத்த நாம் வழக்கு தொடுத்த பொழுது, அரசாங்கம் ஒப்புக்கு இப்பொழுது எல்லாம் சரியாகிவிட்டது என சொன்னதை உயர்நீதி மன்றம் எத்தனை வழக்கு பதிந்தீர்கள் என கேட்டு அப்படியே அமுங்கிகொண்டுவிட்டது!

ஆட்சியாளருக்கு ஒத்தூதுகின்றன நீதிமன்றங்கள். இவர்களை ஜனநாயகத்தின் தூண்கள் என நம்புவோமாக! நாம் நடத்தி வரும் சட்ட போராட்டத்தில் நீதிமன்றம் தனது மக்கள் விரோத நடவடிக்கைகளின் மூலமாக நன்றாகவே அம்பலமாகி வருகிறது!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

No comments: